Saturday, December 24, 2011

தவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)


திரு கேசவன் சக்ரவர்த்தி என, ஒரு ஃபேஸ்புக் நன்பர். அவர் சிபாரிசு செய்த ஒரு கட்டுரை எனக்கு பிடித்திருந்ததால், அதன் தமிழாக்கத்தினை பகுதி பகுதியாக, வழங்க உத்தேசம்!

 

தவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள்    

1.       உங்களது நேரத்தை விழுங்குவதற்காகவே சிலர் காத்திருப்பர். நேரத்துடனே, உங்களது சந்தோஷத்தினையும், சேர்த்து விழுங்குவர். அது மாத்திரமல்ல, வேண்டாத சில வட்டங்களுடன் உங்களை கோர்த்தும் விடுவார்கள். சில சமயம் “கூடா நட்பு கேடாய் முடியும்!”  எனவே தவறான மனிதர்களுடன் உங்களது நேரத்தை செலவிடுவதை தவிருங்கள். முடியாவிட்டால் குறைவாக செலவிடுங்கள்.

 

2.      அலுவலகத்திலோ, வீட்டிலோ பிரச்சினை வராமலா இருக்கும்? பிரச்சினையைக் கண்டு கலங்குவது, காயப்படுவது, தடுமாறுவது, துன்பப்படுவது போன்ற உபாதைகளுக்கு ஆளாதவர்கள் யார்?  ‘பிரச்சினைகளைக்கண்டு மறைந்து கொள்வது அல்லது தீர்வினைத் தள்ளிப் போடுவது’ - பெரும்பாலோர் கடைப்பிடிக்கும் உபாயம்! இதற்கு மிகச் சுலபமான மருந்து ஒன்று உள்ளது! அது பிரச்சினையை நேருக்கு நேர் சந்திப்பது! கடினமானது போலத் தோன்றும். அது உண்மையல்ல! தீர்வுகளில்லாத பிரச்சினை என்று ஒன்று உலகில் இல்லை!  எனவே பிரச்சினைகளைக் கண்டு ஓடாதீர்கள். அது உங்களுக்கு மதிப்பிடமுடியாத அனுபவத்தைத் தரும்! அறிவைத் தரும்! உங்களைப் பண்படுத்தும்!

 

3.      சே..சே... நான் அப்படியெல்லாம் செய்வேனா?  என்னால் முடியாதது ஒன்றுமே இல்லை!  என்னை மாதிரி ‘ நேர்மையாளரை பார்க்கவே முடியாது! -- இந்த மாதிரி ‘பஞ்ச் டயலாக்குள் அடிக்காதவர்களை பார்க்காமலிருக்க முடியுமா? எவரோ சப்தமில்லாமல் சாதித்துக் காட்டிய ஒன்றை தான் செய்ததாக டமாரமடித்துக் கொள்ளும் இது போன்ற ஆசாமிகளை அலுவலகங்களில் காணாமல் இருக்க முடியுமா?  புரிந்து கொள்ளுங்கள் ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க! எனவே உங்களுக்கு  நீங்களே பொய் சொல்வதை நிறுத்துங்கள்!


4.       எனக்கு எதுவும் வேண்டாம். எல்லாம் மற்றவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் என சொல்லும் நபர்களையும், சிறந்தவை அனைத்தையும் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, ‘சக்கையை எடுத்துக் கொள்ளும் பெண்களையும் அறிவேன். இது மகா தவறு! மற்றவர்களுக்கு உதவுவதில் தவறே இல்லை! அதற்கு விலையாக உங்களது சந்தோஷத்தினையும், தேவையையும் கொடுப்பது தேவையில்லை! எனவே உங்களுக்காகவும் வாழுங்கள்!

5.       சிலர் விந்தை மனிதர்கள் இருக்கிறார்கள்! "சகல கலா வல்லவர்களாக" தங்களை பாவித்துக் கொள்கிறார்கள்! அப்போதுதான் மற்றவர்களின் மதிப்பினைப் பெற முடியுமாம்! “அவருக்கு எல்லாம் அத்துபடியப்பா என பிறர் சொல்லக் கேட்பதில் ஆனந்தம். உண்மை என்னவெனில், அப்படி ஒரு மனிதர் உலகில் இருக்க வாய்ப்பே இல்லை! உங்களுக்கு என்ன வருகிறதோ, நீங்கள் என்னவாக உண்மையில் இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். அதற்குண்டான மதிப்பும் மரியாதையும் தானே வரும்! எனவே உங்களிடம் இல்லாததையெல்ல்லாம் இருப்பதாக காட்டிக் கொள்ள வேண்டாம்..

 

     இத்தொடர் மூன்று பகுதிகளைக் கொண்டது

      இரண்டாம் பகுதிக்கு இங்கே கிளிக் செய்யவும்
     மூன்றாம் பகுதிக்கு இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment