Friday, December 30, 2016

ஹெர்ணியா

சில காலம் முன்பு, இடது அடி வயிற்றின் கோடியில் ஒரு ப்ரீதி இட்லி சைசில் ஒரு வீக்கம்.  பரம சாதுவான வீக்கம்.  வலிக்காது. எழுந்து நின்றால் வரும். படுத்துக் கொண்டால் காணாமற் போய்விடும். கொஞ்ச நாளிலேயே அத்யந்த நன்பனாகி விட்டது  அவ்வீக்கம். அதனுடன் பேசலாம். எதிர்த்தெல்லாம் பேசாது. அதை செல்லமாய், மெதுவாய், லேசாக அழுத்திவிட்டால், சமர்த்தாக உள்ளே போய்விடும். கொஞ்ச நேரம் பொறுத்து மீண்டும் தலைகாட்டும். சரி போ... அது பாட்டுக்கு ஓரமா இருந்துக்கட்டும். அதென்ன வாடகையா தரப்போகிறது? தொந்தரவில்லாமல் இருந்து விட்டுப் போகட்டும் என விட்டுவிட்டேன்.

சில நாட்களில், ப்ரீதி இட்லி சைசில் இருந்த வீக்கம், கும்பகோணம் துணி இட்லி சைசுக்கு பெரிசானது. வலி இல்லாவிடினும், ‘நான் ஒருத்தன் இருக்கேன் பார்’ என நினைவுறுத்தும் படியாக அசௌகரியம்.

இரண்யனை வதம் செய்ய, நரசிம்மன் கைவிரல்களால் அவனது குடலைக் கிழித்து வெளியே போட்டானாம். எனக்கு, ஹிரண்யன் என்னும் குடல், நரசிம்மன் தயவில்லாமலேயே வெளியே வந்து கொண்டிருந்த்து.  

தன்னை பத்திரமாக மூடிப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் மூன்று லேயர்களில் பலவீன ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதன் வழியே, சற்று காற்றாட வெளியே வந்துவிடும் எனது குடல் பகுதி.  இதனால்தான் இந்த குடலிறக்கத்திற்கு ஹிரண்யா என்று பெயர் வைத்தார்களோ என்னவோ! இப்படி தனது இருப்பிடத்தைத் விட்டு, எல்லை தாண்டிய பயங்கரவாதியாக மாறி, அவ்வப்போது வெளியே வந்து இம்சைகொடுக்க ஆரம்பித்தான் ஹிரண்ய கசிபு.

வந்து விட்டால், ஹெரண்யா தானாக குணமாகாது; சர்ஜரி ரிப்பேர் மட்டுமே சரியாக்கும் என கூகுளாண்டவர் அருள் பாலித்தாலும், எனது இஷ்ட தெய்வமான ‘யோகாவை’ வேண்டினேன்.  அவர் ஏகபாத – சர்வாங்க ஆசனங்களைப் பரிந்துரைத்தார். மோடிக்கு கருப்புப் பண முதலைகள் காட்டியது போல சற்றே ‘பாவலா’ காட்டிவிட்டு ஹிரண்யா தனது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை காட்டிக் கொண்டிருந்தது. எனவே இவ்விஷயத்தில் அனுபவம் பெற்ற ஒருவரைத் தொடர்புகொண்டேன்.  அவர் இடது, வலது, நடு (கட்சியெல்லாம் இல்லை – சும்மா திசைகள் தான்) என மூன்று ஹெர்ணியா அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்.  அவர் ‘ஆபரேஷனெல்லாம் செய்து கொள்ளாதே, எனக்கு நிறைய இம்சை கொடுத்துக் கொண்டிருக்கிறது; நீ இதற்காக விற்கும் ‘ஹெர்ணியா பெல்டை’ பயன்படுத்து... சரியாகிவிடும் என நல்வாக்கு சொல்ல, அமேசானுக்கு அடித்தது யோகம்.  ஒரு சுபயோக சுப தினத்தில் ஹெர்ணியா பெல்ட் வந்து சேர்ந்தது.  அந்த பெல்ட், ‘சூப்பர் மேன்’ பேண்டுக்கு மேல் போடும் ஜட்டி போல ஒருவிதமாக இருந்தது.  அதனால் என்ன? கத்தியின்றி ரத்தமின்றி ஹிரண்யனை விரட்டியடிக்கும் மந்திர பெல்ட்டை எதற்காக உதாசீனப் படுத்தனும் என மூன்று மாதம் அணிந்து திரிந்தேன்.

அப்பாவிடம் அடங்கி ஒடுங்கித் திரிந்து, அம்மாவைக் கணட்தும் அழுது ஆர்பாட்டம் செய்யும் சிறுவன் போல, பெல்ட்டை எடுத்ததும் ஹிரண்யணின் அட்டூழியம் அதிகமாகிவிடும். இந்த பெல்ட், தசைகளை பலவீனமாக்குவதையும் உணர முடிந்தது.

சரி... வேறு வழியில்லை. ‘சஸ்திர சிகிச்சையே பலனளிக்கும் போல’ எனத் தீர்மாணித்து நான் மிகவும் விரும்பும், சர்ஜன் டாக்டர் சசிதர் அவர்களை நாடினேன்.  நம்பற்கரிய நேர்மையாளர். தொழிலில் நேர்த்தி. திறமை சாலி. அவர் பார்த்த உடனேயே, ‘ இது சர்ஜரி’ தான் எனத் தீர்மாணித்து, சில பல டெஸ்ட்களைப் பரிந்துரைத்தார்.

ஆபரேஷன் செய்து கொள்வதில் பயமொன்றுமில்லை என்றாலும், தனியனாக வாழ்வதால், சமாளிக்க முடியுமா, சமையல் செய்துகொள்ள இயலுமா,  மாடியில் குடியிருப்பதால், படியேற முடியுமா, எனது அடிப்படையான தேவைகளை பிறர் உதவியின்றி செய்து கொள்ள இயலுமா, எனது நெடு நாளைய நண்பன் ‘மயக்கம்’ வந்து விட்டால் என்ன செய்வது, ஒரு வாரத்திற் காவது பிறரின் உதவி தேவைப்படுமே என்ற சந்தேகம், பயம் இருந்தது. பிறவி சங்கோஜியான எனக்கு இது பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனது ஆகட்டும். 64 வயதிலேயே இவ்வளவு தயங்கினால், இன்னும் வயதாகும் போது மேலும் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். இப்போது இரத்தக் கொதிப்பு, சர்க்கரை இல்லை. இனி வரும் காலங்களில் எப்படியோ தெரியாது. எனவே துணிந்திடு மனமே என உறுதி கொண்டு, டெஸ்ட்களை எடுக்கச் சென்றேன்.

கதைகளில் ‘அஷ்ட திக்கு பாலகர்கள்’ என்று சொல்வார்கள். ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு தெய்வங்கள். எனது சர்ஜன் எடுக்க்ச் சொன்ன  டெஸ்ட் லேபரட்டரிகள் யாவும், அஷ்ட திக்கு பாலகர்களுக்கு சொந்தம் போல. திசைக்கு ஒன்றாக இருந்தது. தெற்கே ஸ்கேன். வடக்கே கார்டியாலஜிஸ்ட் ஒபினியன். கிழக்கே இரத்த சோதனை. மேற்கே ஈஸிஜி.
அனைத்து டெஸ்களையும் அஸ்வமேதயாகம் போல முடித்துக் கொண்டேன். 

இந்த டெஸ்ட்களில்,  மோடி உபத்திரவம் தருவார் எனக் கருதவேயில்லை. ஒவ்வொரு டெஸ்ட்டும்     ரூ 900, ரூ 700 பிடித்தது. அவர்கள் எவரிடத்திலும் ஸ்வைபிங் மெஷின் இல்லை.  ஒவ்வொரு லேபிற்கும் அவ்வளவு நூறு ரூபாய் நோட்டுகளை எங்கிருந்து சேகரிப்பது?  நூறு ரூபாய் நோட்டிக்களைச் சேகரிப்பதற்குள் விழி பிதுங்கிற்று.  பல மருந்துக் கடைகளிலும் பி.ஓ.எஸ் இல்லை. அப்படியானால், இவர்கள் யாவரும் வியாபாரத்தை எந்தக் கணக்கிலும் காட்டுவதில்லை போலும்.

மருத்துவ செலவிற்காக சிட்டியூனியன் பேங்கில் போய், அவசரத்தை விளக்கி, எனது அக்கவுண்டிலிருந்து முப்பதாயிரம் பணம் கேட்டால் மறுத்தார்கள்.  அதிகபட்சமே 24000 தான் தரமுடியும் என்றார்கள்.  நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கம்பெளயின்ட் செய்து கொள்ளுங்கள். எங்களுக்கு அவ்வளவுதான் அதிகாரம் என்கிறார்கள்.  காரணத்தை விளக்கியும், ஆதாரத்தைக் காண்பித்தும் பணம் கொடுக்க மறுக்கும் இந்த வங்கிக்காரர்கள் ரெட்டிகளுக்கு மாத்திரம் எப்படி கோடிக்கணக்கில் பணம் வழங்கினார்களோ தெரியவில்லை.

ஈஸிஜியில் பிரச்சினை என்றாலும் (ஆட்ரியல் ஃப்ளட்டர்) சர்ஜரி செய்ய ஒப்புதல்  வழங்கினார்கள். இந்த சடங்குகளைப் பூர்த்தி செய்வதற்குள்ளாகவே சர்ஜரி முடிந்த்து போல ஆயாசமாகிவிட்டது.

சற்றே நீண்ட தையல் போடுமளவு சர்ஜரி இருந்தது. ஒருவழியாக மூண்றாம் நாள் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பிவிட்டார்கள்.

எனது நண்பர்களுக்கு நான் பகிரங்கமாக நன்றி சொல்ல வேண்டிய தருணம் இது. குறிப்பாக திருவாளர்கள் சக்திவேல், பி.டி அரசு, விஜயராகவன், செந்தில், தியாகு ஆகியோருக்கு எனது  நெஞ்சார்ந்த நன்றிகள்.

சர்ஜரிக்குப் பின் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பல. முதல் விரோதி இருமல் – தும்மல். ஒவ்வொரு தும்மலுக்கும்  பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளையோ அல்லது கைலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானையோ எளிதாக தரிசிக்கலாம். தும்மி முடித்ததும் கண்கள் இருள.. தலை சுற்ற.. தையல் போட்ட இடத்தில் 22000 V ஷாக் அடிக்க.. என்னே இன்பம்....

மட்டையடியாக பளு தூக்காதே, ஸ்ட்ரெயின் செய்யாதே என உபதேசிப்பது வேஸ்ட்.  தனியர்களுக்கு இவையெல்லாம் செய்யாமலிருக்க இயலாது.


ஆனால், சில யுக்திகளைக் கைக் கொண்டால் சமாளிக்கலாம்.  உதாரணமாக தும்மல் வரும்போல இருந்தால், அழுத்தமாக, வலிக்கும்படி மூக்கைக் கிள்ளிக் கொள்ள வேண்டும்.  தும்மல் அடங்குகிறது. சமையலின் போது தாளிப்பதை அறவே தவிர்க்க.  படி ஏறும்போது, ஒவ்வொருபடியாக... எந்தப் பக்கம் சர்ஜரி நடக்கவில்லையோ அந்தப் பக்க காலை எடுத்து வைத்து... இப்படி பல யுக்திகளைப் பழகிக் கொண்டுள்ளேன்.

ரெகவரி பீரியடைக் கடந்துவிட முடியும் என்றே கருதுகிறேன். நன்பர்களுக்கு மீண்டும் நன்றிகள்.

முடிசூட்டு விழா

அரசியலில், தலைமைக்கு வருவது என்பது, இந்தியாவைப் போல உலகில் வேறெங்காவது இப்படி விசித்திரமான முறையில் நடந்தேறுமா என்பது சந்தேகம். 

அடிமட்டத்திலிருந்து உயர்ந்து வருதல், எக்ஸ்ம்பளரியான ஆளுமை, திறமை, ஞானம், பொது நலத்தில் நாட்டம், மேடைப் பேச்சுத் திறன் என, எதுவும் நமக்கு வேண்டாம். சாதாரண   நிலையில் உள்ள எவரும், சமுதாய நிகழ்வுகளை-போக்குகளை ஊன்றிக் கவனித்தல், கற்றுக்கொடுத்தல், கற்றுக்கொள்ளுதல், பயிற்சி, பர்செப்ஷன், கள அனுபவம், விவேகம், சாணக்கியத்தனம்  ஆகியவற்றின் மூலமே தலைவராகலாம் என்ற விதிகள் எல்லாம் இங்கே செல்லுபடியாகாது.

தலைமைக்கு வருவதற்குத்  தேவையான காரணிகளாக, நமக்கு இங்கே, இரண்டு இருந்தால் போதும். ஒன்று தலைமையில் இருப்பவர் காலமாக வேண்டும். இரண்டாவது காலமானவருக்கு  மணைவியாகவோ, கணவனாகவோ, மகனாகவோ, மகளாகவோ ஏன் மருமகனாகவோ இருந்தால் கூட போதுமானது. உடனடியாக கிரீடம் சூட்டப்பட்டு விடும். தற்போதைய நிலையில், மறைந்தவருக்கு மாத்திரை, மருந்து எடுத்துக் கொடுத்தவராக இருந்தால் கூடப் போதுமானது. முடிசூட்டுதல் இங்கே ஆட்டோமெடிக்.

வியாபார குடும்பங்களைப் பற்றியும், விவசாயக் குடும்பங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம்; ஆனால் “அரசியல் குடும்பங்கள்” என்பது விசித்திரம்தானே? நேரு குடும்பம் தொட்டு இன்றைய கலைஞர் குடும்பம் வரை “வாரிசு அரசியல்” , வாரிசுகள் தலைமையேற்றுக் கொள்ளுதல் என்ற விஷயம்,  நமக்கு எந்தவித உறுத்தலையும் தரவில்லை.  

அதெப்படி ‘குடியரசு தேசத்தில்’, ‘முடியரசு கலாச்சாரம்’ இவ்வளவு எளிதாயிற்று என்பது இந்தியாவின் பல்வேறு அவிழ்க்கவியலா ‘முடிச்சுகளில்’ ஒன்று. இந்திய அரசியல் ‘குடும்ப அரசியல்வாதிகளால்’ நிரம்பிக் கிடக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

விடுதலைக்கு முன் இருந்த ‘ராஜாக்களின் வாரிசே ராஜா’ என்ற சிண்ட்ரோமிலிருந்து  இந்தியா விடுதலையாகவே இல்லை. அதனால்தான், ‘ராஜீவுக்குப்பின் சோனியா’ என்ற விசித்திரத்தை எந்தத் தயக்கமும் நெருடலும் இன்றி ஏற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது.

ஓராயிரம் சந்தேகங்கள், மர்மங்கள், குழப்பங்கள் நிரம்பிய ஒரு மரணத்தின் மைய முடிச்சாக இருந்தவரிடமே, தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப் படுவதை, எவ்விதம் சர்வ சாதாரணமாக ஏற்றுக் கொள்கிறோம்?  இன்னும் சில தினங்களிலேயே அவரிடம்அரசியல் அதிகாரமும் ஒப்படைக்கப் பட்டுவிடும்!  எந்தவித முணுமுணுப்பும் இன்றி அதுவும் ஏற்றுக் கொள்ளப்படும்.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தாங்கள் குவித்து வைத்துள்ள சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே! அதற்காக அவர்கள் எவர் காலையும் நாவால் துடைக்கத் தயங்க மாட்டார்கள்!  மக்களுக்குத்தான் ‘நாலரை நாட்டுச் சனி’

கவலை கொள்ளத்தக்க விஷயங்களாக கருதுபவை இரண்டு. ஒன்று மக்களின் மனோ நிலை. எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல், “ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன “  என உதறிவிட்டுப் போகும் மனோ நிலைமை.  

இரண்டாவதாக, இந்த அஜனனாயக போக்கை கண்டித்துக் கேட்கும் தார்மீக உரிமையற்ற எதிர்க்கட்சிகள். அவர்களிடத்திலும் ‘வாரிசுகள் போக்கே’ நீடித்திருப்பதால் வாய்மூடிக் காத்திருக்கிறார்கள்.

தகுதியான, திறமையான, நேர்மையான, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட தலைவர்கள் ஏன் இந்தியாவில் உருவாகவில்லை? அல்லது உருவாக்க முடியவில்லை? அவ்வித நேர்மையாளர்களை ஏன் தலைவர்களாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்?

புத்தியற்றவர்களும், ஊழல் புரிபவர்களும், நேர்மையற்றவர்களும், நாட்டைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறையற்றவர்களும், தனக்கும் தன் குடும்பத்திற்கும் சொத்துக்களை வாங்கிக் குவிப்பவர்களும், தேசத்தைப் பற்றி ஒரு திட்டமும்-விஷனும் இல்லாதவர்களும் எப்படி சிரமம் இன்றி தலைவர்களாய் நெஞ்சு நிமிர்த்தி உலவ முடிகிறது?  தலை சுற்றுகிறது.

எனக்குத் தோன்றும் காரணம் ‘இந்த அவலத்திற்கு மக்களே காரணம்’ என்பது தான். சிலரைத் தவிர பெரும்பான்மையான மக்களுக்கு,  நாட்டைப் பற்றிச் சிந்திக்க முடிவதில்லை. மக்களாட்சி என்றால் என்னவெனப் புரியவில்லை. அதன் மகத்துவமும் விளங்கவில்லை. மக்களது வாழ்விற்கும், தாழ்விற்கும் அரசியலே காரணம் என்பது எடுபடவில்லை. மக்கள், அரசியலில் ஈடுபடாவிடில், அரசியல் மக்களின் உணவைக் கொண்டுபோய்விடும் என்பது எட்டவில்லை.
அவர்களுக்குத் தெரிந்த்தெல்லாம், தேர்தல் என்றால் “சாராயம், பிரியாணி, இலவசம், பணம்”.. இவை மட்டுமே. தேர்தல் என்பது மக்களின் எதிர்காலம்-நாட்டின் எதிர்காலம் என்பது புரியவே இல்லை. 

போராட்டம் என்றால் அது சாதி சார்ந்ததாகவோ அல்லது வேறு சில உதிரிக் காரணங்களுக்காகவோ தெருவில்  நிற்பதுதான்.

‘அன்னிய துணிகளை வாங்கக் கூடாது’ என்று அறைகூவல் விட்ட காந்தியின் வேண்டுகோளை ஏற்று, வெளிநாட்டுத் துணிகளை ஏற்றிவந்த டிரக்கின் முன்னால் நின்றுகொண்டு நகர மறுத்து, டிரக்கினால் நசுக்கிக் கொல்லப்பட்டவரின் வரலாறெல்லாம் மக்களுக்குப் புரியவில்லை. பகத்சிங்கின் உக்கிரம் நமக்கு ஒரு சுவாரஸ்யமான கதை. விடுதலைக்காக உயிரைவிட்ட லட்சக்கணக்கான தியாகிகளின் சரிதங்களை ஒரு கதையாகப் பார்க்கத் துவங்கிவிட்டோம். 

இன்னமும் சுதந்திரம் காந்தியால் ‘வாங்கிக் கொடுக்கப்பட்டது’ என்றுதானே  நம்புகிறோம்? போராடிப்பெற்றோம் – அந்தப் போராட்டதின் தலைவராக காந்தி போன்றோர் இருந்தனர் என்பது சொல்லப் படவில்லையே?


தன் வயிற்றைத் தாண்டி, தன் மதத்தைத் தாண்டி, தங்கள் சாதியைத் தாண்டி யோசிக்கத் தெரியாமல் ‘மழுங்கடிக்கப்பட்ட’ மக்களால் ஒரு போதும் தகுதியான தலைவர்களை உருவாக்க முடியாது.  

என்றாவது ஒரு நாள் மக்கள் விழித்துக் கொள்வார்கள். அதுவரை Sinனம்மாக்கள் குதூகலித்துக் கொள்ளட்டும்.

Saturday, December 17, 2016

நேற்று நீ....நாளை நான்!

மீதமிருக்கும் ஆயுள் முழுக்க, நினைத்து ரசிக்கவும், சந்தோஷப்படவும், அழவும் போதுமான அனுபவங்களைத் தந்துவிட்டே போயிருக்கிறாள்.

கூடவே, மனிதர்களைப் புரிந்துகொள்ளும் மகத்தான வாய்ப்பையும் அருளி விட்டே சென்றருக்கிறார்.

பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை!

பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொண்டுபோவதில்லை

இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா
திறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே

பட்டிணத்தார்!

#டிசம்பர் 18



Wednesday, December 7, 2016





நாடகாசிரியர்,
நடிகர்,
எழுத்தாளர்,
பத்திரிகை ஆசிரியர்
வழக்கறிஞர்,
அரசியல் விமரிசகர்,
பேச்சாளர்,
புத்தி சாதூர்யம்,
பன் மொழிகள் அறிந்தவர்....

எல்லாவற்றிற்கும் மேலாக மகா தைரியசாலி.
தனக்கு சரியென்று தோன்றுவதை, எழுத சொல்ல தயங்காதவர்.

அவருடைய பதில்களில் இருக்கும் புத்திசாலித்தனமும், ப்ரஸன்ஸ் ஆஃப் மைண்டும் ரசிக்கக் கூடியவை.

அகில இந்திய அளவில் மிகப்பெரும் நபர்களுடன்  தொடர்பில் இருந்தவர். அவர்கள் யாவரும் இவர் மேல் மிகப்பெரிய அளவில் மரியாதை கொண்டிருந்தனர்.

அரசியல் நிகழ்வுகளில் சோ என்ன சொல்கிறார் என்பதை அனைவரும் அறிய ஆவல் கொண்டிருந்தனர்.

அவரது ஆலோசனைகள் யாவும் பின்பற்றப்பட்டதோ இல்லையோ, உன்னிப்பாக கவனிக்கப்பட்டன.

அலாதியான நகைச்சுவை உணர்வு கொண்டவர்.

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பலருள்  சோ முக்கியமானவவர்.

அவரது தொலைக்காட்சிக் காட்சி நாடகங்கள் யாவும் இன்றும் ரசிக்கக்கூடியவை.

இந்து மகா சமுத்திரம் போன்ற உன்னத புத்தகங்களை எழுதியவர்.

தமிழ்நாட்டில் அருகிப்  போயிருந்த Satire கலையை முழுமையாக தனதாக்கிக் கொண்டவர்.

அனைத்து நிகழ்ச்சிகள் பற்றியும் துக்ளக் என்ன சொல்கிறது என்பதை அறிய அனைவரும் ஆவல் கொள்வர்.

அரசியல் சாணக்கியன்.

நாட்டில் ஏற்பட்ட பல்வேறு கூட்டணிகள்/மாற்றங்களுக்குப் பின்னால் அவரது மூளை, உழைப்பு இருந்திருக்கிறது.

அவருக்கு இருந்த ஆகப்பெரிய மனிதர்களின் தொடர்பை தனக்காக  ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ளாதவர்.

நேர்மையாளர்.

இந்தியக் கலச்சாரத்தின் உயரிய மாண்புகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதவர்.  அவை போன்ற மனிதர்களை இனி காண்பதரிது.

தமிழகத்தைவிட்டு மற்றுமொரு மலர் உதிரந்துவிட்டது.

சிரம் தாழ்ந்த அஞ்சலி.

சில சந்தேகங்கள்...

இன்று தொலைக் காட்சியில் அம்மாவின் இறுதி நாளைப்  பார்த்த போது எழுந்த சில சந்தேகங்கள்.

தில்லையம்பதி எப்படி திடீரென பிரசன்னமானார்? அவரை  VVIP களுக்கு introduce செய்ய வேண்டிய தேவை என்ன?

அது எந்த வகையிலான இறுதிச் சடங்கு? பார்த்தும் கேட்டுமிராத வகையில்? இதை முடிவெடுத்தது யார்?

மன்னையினர்  எந்த உரிமையில் இவற்றைச் செய்தனர்? உறவு செய்தால் ஓகே... இல்லையானால் கட்சிப் பிரமுகர் செய்யலாம்? இதெப்படி?

OPS எதற்காக பிரதமரிடம் அழணும்? அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதா?

கட்சி இப்போது யாருடைய கட்டுப்பாட்டில்?

பொதுச் செயலர் தேர்வில் மன்னையின்  பிடி எந்த அளவு இருக்கும்?

தமிழக அரசியலை ஒட்டி, அடுத்த தலைமையைத் தேர்தெடுப்பதில் வெளி ஆள்/வெளி கட்சி குறுக்கீடு இல்லாமல் செய்வாரகளா? அதறகான திட்டம் இருக்கா? மன்னையிடமிருந்து  விலகப்போகப் போகிறார்களா இல்லை சரணா?

கோந்து  போட்டு ஒட்டியதுபோல, ஏன் சிலர் அருகிலேயே நின்றிருந்தனர்?

1215 க்கு அறிவிக்கப்பட்டு,  ஒரு மணிக்கு புது கேபினட் பதவியேற்பு எப்படி சாத்தியமாயிற்று?

அந்த 75. நாட்களிலும், யார்தான்  அம்மாவைப் பார்த்தார்கள்? அச்சமயம் கட்சியையும் அரசையும் இயக்கியது யார்?
அவருக்கு என்னதான் உடம்பு? எப்படி சடாரென உடல்நிலை மோசமாகியது?
அப்போலோ, இப்போதாவது  கேஸ் ஷீட்டை  வெளியிடுமா?  இவ்வளவு ரகசியம் காக்கத் திட்டமிட்டது யார்? ஏன்?

மாலையில் அவர் காலமானதாக, பாண்டேக்கு சேதி சொல்லியது  யார்? அதன் பின்னணி-ரகசியம்  என்ன?

அம்மா உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறார்களா?

கொசுறாக,
நேரலை முழுவதும் சதா, தொன தொன வென, சம்பந்தா சம்பந்தமில்லாமல் குளறல்  நடையில், அபத்தமான உச்சரிப்புடன் உளறிக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன? முழுவதும் mute லதான்  பார்த்தேன்.

தேவைப்படும்போது சிறு சிறு வாக்கியங்களோடு நிறுத்திக் கொள்ளக்கூடாதா?

எந்த நேர்முக வரணணையாக இருந்தாலும் தமிழ்ச் சேனல்களில்  ஏன் இப்படி?

எப்படியாயினும், இன்று கட்டுப்பாட்டுடன் எந்த வன்முறையும் இன்றி அமைதியாக கழிந்த நாளுக்காக, அதிமுக தொண்டரகளுக்கும் ,  காவல் துறையினருக்கும் மனமார்ந்தபாராட்டுகள்!!

Monday, November 28, 2016

PUNJAB JAIL BREAK

பஞ்சாப்-பாடியாலாவிலிருந்து ஆறு தீவீரவாதிகள் தப்பித்துள்ளனர். சர்ஜிகல் ஸ்ட்ரைக் போல மிக மிகத் துல்லியமாக திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, கைதிகளை எடுத்துச் சென்றுள்ளனர்
.
தாக்குதல் நடத்தியவர்களின் திட்டம், அவர்களது மோடஸ் ஆபரண்டி அவ்வளவு துல்லியம்.
இவ்வளவு கடுமையான தீவீரவாதிகள் அடைக்கப் பட்டிருக்கும் ஒரு சிறையில், எவ்வளவு மெத்தனமாக, அதிகாரிகளும், காவலர்களும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பது கவலைக்குரியது. இம்மாதிரியான சிறைகள் எவ்வளவு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்திருக்க வேண்டும்? எப்படி விதிமுறைகளில் இவ்வளவு தொய்வாக இருந்திருக்கிறார்கள்? சிறைக் காவலர்கள் கேஷூவலாக இருந்திருக்க வேண்டும் அல்லது கூட்டுச் சதியாக இருந்திருக்க வேண்டும்.
எங்கே ஓட்டை, எங்கே கருப்பு ஆடுகள், ஏன் சுணக்கமாகச் செயல்பட்டார்கள் என்பது விரிவாக ஆராயப்பட வேண்டும்; ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள்.
எல்லை மானிலமான பஞ்சாபில் கூட, இப்படி ஒரு Drama நடத்த முடியும் என்பது உள்துறை அமைச்சகத்திற்கு விடப்பட்ட ஒரு சவால்.
பஞ்சாப் தீவிரவாதத்தின் பிடியிலிருந்து விலகி இயல்பாக இருந்து கொண்டிருக்கும் ஒரு மானிலம். இத்தகைய தீவீரவாதிகள் தப்பித்திருப்பது, அம்மானிலம் மீண்டும் தீவீரவாத்த்தின் பிடியில் அகப்பட்டுக் கொள்ளுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மானிலத்தில் தேர்தல் நடக்க வெகுகாலம் இல்லாத சூழலில், இவர்கள் தப்பித்து இருப்பது, ஜனநாயக சக்திகளுக்கு கவலை தரும் அம்சம்.
இந்த தப்பித்தலுக்குப் பின்னால், பாகிஸ்தான் இருக்கிறது என திருவாய் மலர்ந்திருக்கிறார் துணை முதல்வர் சுக்பிர்சிங் பாதல். பாகிஸ்தான் கை இருக்கிறதோ இல்லையோ, கைதிகள் இந்தியச் சிறையில்தானே இருந்திருக்கிறார்கள்? அந்தச் சிறையிலிருந்துதானே தப்பித்திருக்கிறார்கள்? எதிரிகள்(பாக்) என்றால் அப்படித்தான் இயங்குவார்கள்.
ஏற்கனவே PoK ல் ஒரு போர்முனை ஏற்படுத்தியிருக்கிறது பாக். இன்னொரு முனையாக பஞ்சாபையும் தேர்ந்தெடுப்பதை எதிர்பார்த்திருக்க வேண்டும். காஷ்மீரைத் தவிர்த்து, பஞ்சாபையும் பதட்டமான மானைலமாக மாற்ற பாகிஸ்தான் முயலும்தான். மானில அரசும், மத்திய அரசும்தான் நெருப்பாக இருக்க வேண்டும். தப்பித்த தீவீரவாதிகள் வெளியேற நேபாளம் ஒரு நல்ல வழி. அதை சீல் வைத்திருப்பார்கள் என நம்புவோம்.
நடந்தவற்றை பாடமாகக் கொண்டு, இனியாவது விதிமுறைகளையும், கண்காணிப்பையும் சுணக்கமின்றை மேற்கொள்ள வேண்டும்.
தப்பித்த ஹர்மீந்தர் மின்டூ என்ற தீவீர வாதியை தில்லியருகே கைது செய்திருப்பதாக சமீப தகவல்கள் கூறுகின்றன.
பயங்கரவாதிகளை, விரைவாக விசாரணைக்குட்படுத்தி, தண்டனை தாருங்கள். போட்டுத் தள்ளுங்கள். நிரூபிக்கவில்லையனில் விடுதலை செய்யுங்கள். எத்தனை நாட்கள் அன்டர் டிரையலில் வைத்திருப்பது?

Friday, November 25, 2016

இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தான் சதி முறியடிப்பு



1. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்பார்த்தீர்களா?

....இது போன்ற ஏதாவது ஒரு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்தேன். மோடி தொடுத்திருக்கும் துல்லிய தாக்குதல் இது. இது போன்ற துணிச்சலான முடிவை வேறு எந்தப் பிரதமரும் எடுத்திருக்க முடியாது....

2. ஆனால் வங்கிகள், ஏடிஎம்களில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதே?

அறிவிப்பு வந்த கணம் முதற்கொண்டு பணத்தை மாற்றவும், வங்கியிலிருந்து எடுக்கவும் வழிவகைகள் செய்யப்பட்டன. ஆனாலும் மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுளது உண்மையே. 125 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இத்தகைய சிரமங்கள் தவிர்க்க இயலாது. ஆனால் இது தாற்காலிகமானதே!

3. போதிய முன்னேற்பாடுகள் செய்திருந்தால், சிரமங்களை தவிர்த்திருக்கலாம்தானே?

முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு, இது போன்ற அதிரடி நடவடிக்கை எடுக்கவே முடியாது. முன் கூட்டியே 500 நோட்டுக்களை அச்சடித்திருந்தாலோ, ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றம் செய்திருந்தாலோ, விஷயம் வெளியே கசிந்திருக்கும். எந்த ஊழல் வாதிகளை நோக்கி குறிவைக்கப்பட்டதோ அவர்களுக்கே செய்தி போயிருக்கும். அதன்பிறகு திட்டத்தைச் செயல்படுத்தினால் பலன் கிடைத்திருக்காது.

4. 16 நாட்களாகியும், நிலைமி சீராகவில்லை..இது மோடி அரசின் நிர்வாகத்தோல்வி என எதிர்க்கட்ச்கள் சொல்கின்றனவே?

நிலைமை சீராகிக் கொண்டே வருகிறது. நக்ஸைலட்கள் நிறைந்த பகுதிகள், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளுக்கெல்லாம், பணம் பாதுகாப்பாக அனுப்பப்பட்டுளது. எனவே நிர்வாகத்தோல்வி என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. மக்களின் சிரமங்களைக் குறைக்க, அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது. பணத்தட்டுப்பாடு படிப்படியாகக் குறையும். அதுவரை ஏதாவது ஒருவழியில் சிரமம் இருந்து கொண்டுதான் இருக்கும்.

5. இத்திட்டம்பற்றி, தொழிலதிபர்களுக்கு முன்கூட்டியே தெரியும் என கேஜ்ரிவால், மம்தா குற்றம் சாட்டுகிறார்களே?

இது வெறும் அரசியல் குற்றச் சாட்டு. எல்லாவற்றையும் சந்தேகிக்கும் ஊடகங்கள்கூட, திட்டத்தின் ரகசியம் பற்றி பாராட்டியுள்ளனவே? ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் இன்னாளில், ஒருவருக்கு தெரிந்தால் கூட, நாட்டிற்கே தெரிந்துவிடும்.

6. இதன் மூலம் கருப்புப்பணம் ஒழியாது என பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்களே?

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டிக்களில், 14 லட்சம் கோடி 500,1000 நோட்டுக்களே. இதில் 4 லட்சம் கோடி கருப்புப் பணமாக பதுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் நாலு லட்சம் கோடி அரசின் கணக்கில் வரவு வைக்கப்படும். பினாமி பெயரில் இருந்தால்கூட அரசால் கண்டுபிடிக்க இயலும். வங்கியில் வந்துவிட்டால், அது வெள்ளைதானே? மக்கள் தங்கள் பணத்தை டிபாஸிட் செய்வதால், பண இருப்பு அதிகரிக்கும். இதனால் சிறு, நடுத்தர தொழில்கலீல் வங்கிகள் செய்யும் முதலீடுகள் அதிகரிக்கும். கடன் தாராளமாகக் கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும். வேலைவாய்ப்புகள் கூடும். இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்பது தவறானது. ரியல் எஸ்டேட்டிலும், தங்கத்திலும் கருப்புப் பணம் முடங்குவது குறையும். லஞ்சம்-ஊழல் குறையும். ஆனால் அடுத்த அடுத்த ஆறு மாதத்தில் பொருளாதாரத்தில் சிறு வீழ்ச்சி ஏற்படத்தான் செய்யும்.

7. அரசின் முடிவை திரும்பப் பெறவேண்டும் என எதிர்க்கட்சியினர் போராடுகின்றனரே? பாராளுமன்றம் முடக்கப்பட்டுள்ளதே?

கருப்புப் பணத்தை ஒழிக்க மோடி எடுத்துள்ள நடவடிக்கையால், அரசியல் வாதிகளும், லஞ்சத்தில் ஊறிய அதிகாரிகளும் நிலை குலைந்துள்ளனர். இதனால், இத்திட்டத்தை வாபஸ் வாபஸ் பெறவேண்டும் என அரசியல் வாதிகள் போராடுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? இத்திட்டம் நாட்டிற்கு நல்லது. சிரமங்கள் யாவும் தாற்காலிகமானவையே.

8. இந்த நடவடிக்கையை, தேசபக்தியோடும், தேசப் பாதுகாப்போடும் ஏன் பாஜக தொடர்புபடுத்துகிறது?

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அச்சடித்த கள்ளப்பணம், நம் நாட்டில் பயங்கரவாத்த்தை வளர்க்கிறது என்பதற்கு எல்லா ஆதாரங்களும் வெளிவந்திருக்கின்றன. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிவரை அதன் தாக்கம் இருக்கிறது. தீவீரவாதிகள் மூலமாகக் கொண்டுவரப்பட்ட கள்ளப்பணம் ஐந்து முதல் ஆறு ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மும்பையில் நடந்த பயங்கர தாக்குதலுக்கு, பயங்கரவாதிகள் 2.5 கோடிதான் செலவு செய்துள்ளனர். ஆனால் 164 பேர் செத்தனர். 300 பேர் காயமுற்றனர். இம்மாதிரியான பயங்கரவாதிகளின் செயல்களினால் நாட்டிற்கு 6.60 லட்சம் கோடி இழப்பு என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியப் பொருளாதாரத்தை சிதைக்கும் நோக்கத்தோடு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு புழக்கத்தில் விட்டுள்ள நமது 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாத்தாள்களாகிவிட்டன. இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தானின் சதி முறியடிக்கப் பட்டுள்ளது. இந்த ஒரு காரணத்திற்காகவே, அரசின் முயற்சியைப் பாராட்ட வேண்டும்.

9. அரசின் நடவைக்கை தவறான முடிவு. நிலைமை சீராக ஏழு மாதங்காள் ஆகும் என சிதம்பரம் சொல்கிறாரே?

படிப்படியாக நிலைமை சீராகும் என்பதே உண்மை. அவர் கூறும் ஏழு மாதங்களுக்குப் பின்னர், பொருளாதாரம் வேகமாக வளரும் என்பதையும் சேர்த்து அவர் கூற வேண்டும்.

10. சாதாரண மக்களின் பணத்தை, பெருமுதலாளிகளுக்கு கொடுக்கத்தான் இத்திட்டம் என்று சொல்கிறார்களே?

இது போன்ற அப்பட்டமான பொய்களை, அரசியல் வாதிகள் மட்டுமே கூறமுடியும்.

11. இந்த நடவடிக்கை மூலம், ராகுல் காந்தி பிரதமராவதற்கு மோடி வழிவகை செய்துவிட்டார் என பேசத் தொடங்கியுள்ளனரே?

இது அசட்டுத்தனமான பேச்சு. மக்கள், அரசின் நடவைக்கையை ஆதரிக்கிறார்கள். மக்களுக்குப் பிடிக்கவில்லையெனில், எதிர்த்திருந்தால், இம்மாதிரி மணிக்கணக்கில் வரிசையில் நின்றிருக்க மாட்டார்கள்.


12. ரொக்கம் இல்லாத இந்தியாதான் பிரதமர் மோடியின் நோக்கமா?

ரொக்காம் குறைவாகவும், வங்கிப் பரிவர்த்த்னை அதிகமாகவும் இருக்கும் நாடு உருவாக இத்திட்டம் வழிவகுக்கும். ஒரே காலகட்டத்தில், இந்த முயற்சியை செய்வது ரொக்கம் இல்ல்லாத நாட்டை உருவாக்க அல்ல. கருப்புப் பணத்தை – கள்ளப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை.

------------------------------------------------------------------------------------

மேற்கண்ட பேட்டி, புகழ்பெற்ற ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி அவர்களால் அளிக்கப்பட்டு,
தி இந்து (தமிழ்) இதழில் 25/11/16 அன்று, பக்கம் 16ல் வெளிவந்துள்ளது.(Brief)

இத்திட்டத்தை, ஊழல் பேர்வழிகளும், கருப்புப் பண முதலைகளும், பயங்கரவாதிகளும், பயங்கரவாதத்தை நேரடியாகவோ-மறைமுகமாகவோ ஆதரிப்பவர்களும் எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் அவர்களது தீய நோக்கம் பாதிக்கப் படுகிறது.

ஆனால் இந்தியாவின் நலம் விரும்பிகளும், நல்ல மனிதர்களும், கருப்புப் பண-கள்ள நோட்டுகளை எதிர்ப்பவர்களும், Left Parties ம், மேற் சொன்னவர்களுடன் சேர்ந்து கொண்டு எதிர்ப்பது துரதிர்ஷடம்.

தயவு செய்து, அரசின் இத்திட்டதை ‘உள் நோக்கத்தோடு’ எதிர்ப்பவர்களைப் புரிந்து கொள்ளுங்கள். இப்போது நிலவும் சிரமம் தாற்காலிகமானதுதான்.
சாதாரண, நடுத்தர மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைப் பயன்படுத்திக் கொண்டு பிரச்சினை ஏற்படுத்த முயல்கிறார்கள் அவர்கள். கருப்புப்பண, ஊழல், பயங்கரவாதிகள், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்போர், சாதாரண சிரமங்களை தங்களுக்கு அரண் போலப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். நீலிக்கண்ணீர்

வடிக்கும் இந்த உத்தம(!) மனிதர்கள் எல்லாம், மக்கள் வேறு பல துயரத்தில் இருந்த போது எங்கே சென்றிருந்தார்கள்? மும்பையிலும், மற்ற இடங்களிலும், மக்கள் கொத்து கொத்தாக சாகும் போது மௌனம் காத்தவர்கள் அல்லது ஒப்புக்கு கண்டித்தவர்களின் மன ஓட்டத்தைப் புரிந்து கொள்வோம். பொறுமை காப்போம்.




Wednesday, November 23, 2016

லைஃப் சர்டிபிகேட்

இது நவம்பர். ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள், தாங்கள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை அரசாங்கத்திற்கு நிரூபிக்க வேண்டிய மாதம். இதுவரை இருந்த நடைமுறை, பென்ஷன்தாரர்கள், தாங்கள் ‘உயிரோடுதான் இருக்கிறோம்’ என்ற ஒரு சுய டிக்ளரேஷன் கொடுத்தால் போதுமானது.  அப்படிக்கொடுக்க வில்லை யெனில், பென்ஷன் நிறுத்தப்படும்.

இயல்பிலேயே காத்துக் கிடப்பதற்கும், முடிவில்லா வரிசையில் நிற்பதற்கும் தயங்கும் சோம்பல் பேர்வழி நான்.  இந்த ஒரு காரணத்தாலேயே, ‘அல்லோபதி டாக்டர்கள் பக்கம்’ செல்வதைத் தவிர்ப்பேன். ஆனால் பென்ஷன் விஷயத்தில், ஓய்வூதியதாரர்களுக்கு என்ன ஆப்ஷன் இருக்கு? எனவே, நான் பென்ஷன் வாங்கும் தபால் நிலையத்திற்கு டிக்ளரேஷன் கொடுக்கச்  சென்ற பொழுது, அங்கே கண்ட இமாலய மக்கள் வரிசையைக் கண்டு, மிரண்டு திரும்பிவிட்டேன். கூட்டம் லைஃப் சர்டிபிகேட் கொடுக்கும் கூட்டம் மட்டுமல்ல; தபால் நிலையத்தில் 500/1000 நோட்டுக்களை டிபாசிட் செய்யும் கூட்டமும் கூட.

கூட்டம் சற்றே குறையட்டும், பிறகு செல்லலாம் என ஒத்திப் போட்டுக் கொண்டே இருந்தேன். குளத்தின்மேல் சினம் கொண்டு கால்கழுவாமற் போனால், குளத்திற்கு என்ன நட்டம்?  எனவே  நேற்று, எனக்கு  பென்ஷன் வழங்கும் தபால் நிலையத்திற்கு, டிக்ளரேஷன் கொடுக்கச்  சென்றேன்.

சம்பந்தப்பட்ட தபால் நிலைய அலுவலரை அணுகியபோது, ‘இனி நீங்கள் இம்மாதிரியான சர்டிபிகேட்டெல்லாம் கொடுக்க வேண்டியதில்லை’ என்றார். ‘ஆஹா.. என்னே என் பாக்கியம். மனிதர்களை அரசாங்கம் நம்ப ஆரம்பித்துவிட்டதே’ என குதூகலிக்க ஆரம்பிக்கமுன், அவர் வேறொரு தகவலைச் சொன்னார். அதற்குப் பதிலாக,  உங்களது ‘ஆதார் எண்ணையும்’ ,  ‘கைவிரல் ரேகையையும்’ பதிவு செய்யணும் என்றார். அதுதான் புதிய ஆணையாம் .

‘ஹாங்.. ஒவ்வொருவருடமுமா?’

‘ஆமாம் ஒவ்வொரு வருடமும்.’

‘அட கடவுளே! சரி அதற்கு யாரைப் பார்க்கணும்?’

பென்ஷன் ஆபீஸில் செய்யணும். ஆனால் உங்களது கைரேகையை பதிவு செய்யும் கருவி இங்கேயே இருக்கு. உங்களது ஆதார் கார்டின் நகலை எடுத்துக் கொண்டு, அதில் உங்களது பிபிஓ எண், சேவிங்க்ஸ் அக்கவுண்ட் நெம்பர், காண்டாக்ட் தொலைபேசி எண் ஆகியவற்றை எழுதி சமர்ப்பியுங்கள்.

நல்ல வேளையாக, யதேச்சையாக ஆதார் அட்டையை கையோடு எடுத்துச் சென்றதால்,  அதை நகலெடுத்து, அவர்கள் கேட்ட ஜாதகக் குறிப்புகளைக்  நிரப்பி எடுத்துக் கொண்டு சென்றேன். எனக்கு முன்னே, சில வயதானவர்கள் ‘கைவிரல்களை’ கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். என் முறை வந்ததும்,  ஜாதகக்  குறிப்புகளைக் கொடுத்துவிட்டு, காத்திருந்தேன். பின் அந்த அலுவலர் ‘பயோமெட்ரிக் அட்டென்டன்ஸில்’ பயன்படுத்தும் ஃப்ங்கர் பிரிண்ட் ஸ்கேனரை, டிராயரிலிருந்து எடுத்தார்.

‘போன வருஷம், எந்த விரல் ரேகையை வைத்தீர்கள்?’

இது என்ன இம்சை!

 ‘தெரியலை மேடம். மறந்திடுச்சே..’

ஒரு பார்வை பார்த்தார். பிறகு, வலதுகை கட்டைவிரலில் ஆரம்பித்து, ஒவ்வொருவிரலாக, ஸ்கேனரில் வைத்து பொறுத்திப் பார்த்தார். 

காய்கறி நறுக்கியே, கைவிரல் ரேகைகள் எல்லாம் கருத்துப் போயிருந்த்து.  காய்களை நறுக்குவதற்குப் பதிலாக, விரல்களை நறுக்கி, நானாகப் போட்டுக் கொண்ட ‘ரேகைகள்’ ஏராளம். அதானால் அந்த மிஷின் குழப்பிப் போய்விட்டதோ என கிலி பிடித்துக் கொண்டது. அதிலும், இன்று ‘வாழைப்பூ’ நறுக்கியிருந்தேன். இதனால், விரல்கள் எல்லாம் மேலும் கருப்பாகியிருந்தன. கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. கையை இவ்வளவு கருப்பாகவா வைத்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டால் என்ன செய்வது?

வலதுகையின் எந்த விரலும் மேட்ச் ஆகாததால், அதை விட்டுவிட்டு, இடதுகை விரல்களை மேட்ச் செய்ய ஆரம்பித்தார் அலுவலர். ஒருவேளை இந்தக்கையின் ரேகையும் ஒத்துப் போகவில்லையெனில், மாற்றாக என்ன செய்வது எனக் கவலை வந்துவிட்டது. மீண்டும் ஆதார் நிலையத்திற்கே போகச்  சொல்வார்களோ என்ற பீதி தலைசுற்ற வைத்தது.  ஏனெனில் ஆதார் அட்டை வாங்குவதற்குள் உயிர் போய்விடும்.

சினிமா க்ளைமேக்ஸ் போல பதட்டம். 

இடதுகை ஆட்காட்டி விரலை வைக்கும் பொழுது, திடீரென கர்ஸர் வேறுஒரு விதமாக சுழன்று, ‘ஆதார் டாடாபேஸில்’ ரேகையை அடையாளம் கண்டுகொண்டது  சாஃப்ட்வேர்.  
விரல் ரேகை மறைந்து, ஆதார் டேட்டா பேஸில் பதிந்திருந்த, அடியேனின் திருவுருவம் திரையில் தோன்றியது. அந்த உருவம் ‘பேய்’ போல பயமுறுத்த, அந்தப் படம் நீங்கள் தானா என அந்த அலுவலர் கேட்டுவிடுவாரோ என அஞ்சிக் கொண்டிருந்தேன். நல்லவேளை, அப்படி ஏதும் நிகழவில்லை.  ஆதார் புகைப்படங்களைப் பார்த்துப்பார்த்து பழகிவிட்டார் போல.

விஷயம் அத்தோடு முடியவில்லை. ‘உங்களது மொபைலுக்கு ஒரு ‘OTP’ வந்திருக்கும் பாருங்க.. அதைச் சொல்லுங்க..’

இது அடுத்தகட்ட சோதனை போலும். சாதாரணமாக வெளியே செல்லும்போது ஸ்மார்ட்ஃபோனை எடுத்துச் செல்லமாட்டேன். ஒரு பேஸிக் மாடல் சின்ன ஃபோனைத்தான் எடுத்துச் செல்வேன். தொலைந்தாலும் சின்னதோடு போகும். இன்று என்னவோ ஸ்மார்ட் ஃபோனையும் எடுத்துச் சென்றிருந்தேன். அதனால் OTP யை சொல்ல முடிந்தது. இன்றைய தினம் அதிர்ஷ்ட தினம்தான்.

‘சார்...அடுத்த வருஷம் வரும்போது, மறக்காமல் இடதுகை ஆட்காட்டிவிரலையே நீட்டுங்க..’

‘சரிங்க..’

ஒருவழியாக நான் உயிரோடுதான் இருக்கிறேன் என அரசாங்கத்திற்கு நிரூபித்துவிட்டு, பென்ஷனையும் வாங்கிக் கொண்டு ஒருவழியாக வீடு திரும்பினேன். இந்த சமாச்சாரம் முடியஅரை நாள் செலவாயிற்று.

எனது சந்தேகம் இதுதான். ‘ஆதார் அட்டை’ ஆப்ஷனல்தான் என்பதில் ஆரம்பித்து, கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது ஏன்? கம்ப்யூட்டர்மயமாகியபின் வேலை சுலபமாவத்ற்குப் பதிலாக, இன்னும்-இன்னும் காம்ப்ளிகேட் ஆவது ஏன்?

ஒரு ‘ஆப்’ வெளியிட்டு, அதன் மூலம், மூத்த குடிமகன்களை அலையவிடாமல், வருடம் ஒருமுறை மொபைல் ஃபோன் மூலம் வீட்டிலிருந்தபடியே கைரேகையை பெற்றுக் கொண்டு உயிருடன் இருப்பதை உறுதி செய்து கொண்டால் என்ன?
போஸ்டாபீஸில் பென்ஷன் பெறும்  நபர்களாவது அங்கே வைக்கப்படிருக்கும் ஸ்கேனர் மூலம் பதிவேற்றலாம். தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவோர் எல்லோரும் ‘பென்ஷன் ஆபீஸுக்கு’ செல்வது சாத்தியமா? அந்த அளவு கட்டமைப்பு இருக்கிறதா? (பென்ஷன் ஆபீஸில் வேலை முடிப்பது என்பது வேதாளம்-விக்ரமாதித்தன் கதைபோல, கொடுமையான அனுபவம்)

வங்கிகளில் பென்ஷன் பெறுவோர் என்ன ஆவார்கள்? அங்கு இந்த ஸ்கேனரைப் பார்த்ததில்லையே?

ஏதோ, உடம்பில் கொஞ்சம் தெம்பிருப்பதால் அவர்கள் இழுத்த இழுப்பிற்குச் செல்லமுடிகிறது. நடக்கமுடியாமல் இருப்போர்,  நோயுற்றிருப்போர், விபரமறியாத மக்கள், விதவைகள்... இவர்களெல்லாமும் கூட இப்படி அலையத்தான் வேண்டுமா? 

மூச்சு வாங்காமல், இருபதடி தூரம்கூட நடக்க முடியாத கிழங்களை இந்த பாடுபடுத்த வேண்டுமா? உலகில் எங்காவது மூத்தகுடிமகன்களை இப்படி இழுத்தடித்து, இம்சைப்படுத்தும் சிஸ்டம் இருக்கிறதா என்ன?

வங்கிகளிலோ அல்லது தபால் அலுவலகங்களிலோ ஸ்கேனர் இல்லையெனில், பென்ஷன் அலுவலகத்திற்குச் சென்று, டிஜிடல் லைஃப்சர்டிபிகேட் பதிவு செய்து, பின் அவர்கள் தரும் (VM-NICSMS) ப்ரணாம் எண்ணை கொண்டுபோய், பென்ஷன் தரும் அலுவலகத்தில் சேர்ப்பிக்க வேண்டும். இதெல்லாம் அவ்வளவு எளிதான காரியமா இந்தியாவில்?


இறந்துபோன ஆட்களுக்கு பென்ஷன் பணம் போய்ச் சேரவேண்டியதில்லைதான். அதற்கான வழிமுறைகளை எளிதாகச் செய்யாமல், எதற்காக இப்படி படுத்துகிறார்களோ?