Thursday, April 14, 2016

பெட்டி…

பின் மதிய நேரம்.  மாடியில் போர்டிகோ அருகே, ஈஸிச்சேரைப் போட்டுக்கொண்டு, இடைவிடாது வீசும் கடற்காற்றை அனுபவித்தபடி சாய்ந்திருந்தார், அரவிந்தன்.

அப்பொழுது, தெருநாய்கள் சில குரைத்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டு ஓடி வருவதைப் பார்த்தார்.
பிராணிகளையும், பறவைகளையும் அதன் போக்கில் வேடிக்கை பார்ப்பது அவருக்கு பிடித்தமான விஷயம். இந்த நாய்களுக்கு அப்படி என்ன பஞ்சாயத்து, இந்த வெயில் நேரத்தில்?

ஒரு குட்டி நாய், எங்கேயோ கிடைத்த ஒரு எலும்புத் துண்டை கவ்விக் கொண்டு பதறி ஓடி வர, அதைத் துரத்திக் கொண்டு மூன்று  வாட்ட சாட்டமான நாய்கள், ஓடி  வந்து கொண்டி ருந்தன. இவ்வளவு பெரிய எலும்புத் துண்டு,  அந்தக் குட்டி நாய்க்கு எப்படிக் கிடைத்ததோ?  சுற்றிச்சுற்றி, போக்குக் காட்டி ஓடியும், பெரிய நாய்களின் வேகத்துக்கும் மூர்க்கத் திற்கும் குட்டி நாயால் ஈடு கொடுக்க முடியவில்லை.  கீழே விழுந்து விட்ட குட்டி நாயின் வாயிலிருந்த எலும்புத் துண்டை, பெரிய  நாயொன்றும் கவ்விக் கொள்ள, மற்ற இரு நாய்களும் தங்கள் பங்குக்கு குட்டி நாயை புரட்டிப் போட்டன.  புழுதி பறக்க, தெருவில் நாய்களின் போர்க்களப் போராட்டம். இரைச்சல்.   ஆச்சர்யம் என்னவென்றால், பெரிய நாய்கள் எவ்வளவுதான் குட்டிநாயை  குதறிக் கொண்டிருந்தாலும், அது தன் வாயில் கவ்விக் கொண்டிருந்த எலும்பை விடாமல் பற்றிக் கொண்டிருந்தது.

கடிபட்டு, காதில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தாலும், போராட்டத்தின் நடுவே கிடைத்த  கண நேர ‘கேப்’பில், விருட்டென பாய்ந்தெழுந்து ஓடிய குட்டி நாய், வாசலில் நிறுத்தியிருந்த ‘இண்டிகா’ வின் அடியில் புகுந்து கொண்டது.

பெரிய நாய்கள் மூன்றும் காரின் அடியில் செல்லத் தயங்கியோ அல்லது உள்ளே புக இயலாமலேயோ, அந்தக் காரை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன.  அவைகளுக்கு நிலை கொள்ள வில்லை. கண்ணெதிரே பெரிய எலும்புத் துண்டு. வலுவில் லாத எதிரி. எனினும் உள்ளே புக முடியவில்லையே? முட்டாள்கள் போல இப்படியும் அப்படியும் பாய்ந்து கொண்டிருந்தனவே தவிர, உட்புகும் யுக்தியொன்றும் புலப்படவில்லை.

கண்களில் பீதியுடன், அடங்கா ஆசையுடனும் அந்தக் குட்டி நாய், வாயில் எலும்பைக் கவ்விக் கொண்டிருந்தது.  “அட.... மூட குட்டி நாயே அந்த பெரிய நாய்கள் உள்ளே வரமுடியாது.. நீ தைரியமாக எலும்பைக் கடித்துக் கொள்ளேன்” எனச் சொல்ல வெண்டும் போல் இருந்தது  அரவிந்தனுக்கு. எச்சில் ஒழுக ஒழுக எலும்பைக் கவ்விக் கொண்டிருந்த்தே தவிர, கடித்து உண்ணலாம் எனத் தோன்றவே இல்லை அந்த குட்டிக்கு.

மனிதர்கள் பலரும் அப்படித்தானே இருக்கிறோம்? 
குட்டி நாயைப்போல, ‘பெட்டியைப்’ பாதுகாப்பதில் உள்ள கவனம், சுவைப்பதில், அனு பவிப்பதில் காட்டுவதேயில்லை. 

அடுத்த  நாயின் வாயில் இருக்கும் எலும்புக்கு அசைப்படும் ஜந்துக்கள் போல, பிறரைப் பார்த்துக் கொண்டே, சுற்றிச் சுற்றி வந்து ஆசைப்படுவார்களே தவிர,  தானாகத் தேடும் முயற்சியும் இல்லை.

அரைமணி நேரமாகியும் பெரிய நாய்களும் விலகுவாதா யில்லை. குட்டி நாயும் தின்னுவதாயில்லை. 

அப்பொழுது, வீட்டினுள்ளேயிருந்து வந்த டிரைவர், பெரிய நாய்களை கல்லெடுத்து அடித்து விரட்டினார். குனிந்து பார்த்தார். ‘சனியனுங்க, கண்டதையும் கொண்டுவந்து வீட்டின் முன் போடுதுங்க..’ என சலித்துக் கொண்டு, குட்டி நாய் சக்கரத்தில்  நசுங்கிவிடக்கூடாதென அதையும் விரட்டிவிட்டு, கைபடாமல் ஒரு குச்சிகொண்டு எலும்பைப்  ஒரு பேப்பரினுள் தள்ளிச் சுருட்டி, டிக்கிக்குள் போட்டார். 
‘இதை மறக்காம தெருவைத் தாண்டி வீசியெறியனும்’.

உலகு, நமக்கு இடைவிடாமல், பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. என்ன,  நாம் கண்களைதக் கொஞ்சம் திறந்து  வைத்துக் கொள்ள வேண்டும்.


Monday, April 11, 2016

வெடி

சில வருடங்களுக்கு முன், திருவனந்தபுரத்தில் உள்ள,  என் உறவினர் வீட்டிற்கு முதன் முறையாகச் சென்றேன்.  அவர், இந்த ஊரில் உள்ள, ஆட்டுக்கால் பகவதியம்மன் கோயில் வெகு விசேடமானது, வா போய்வரலாம் என அழைத்தார். இந்த அழைப்பை மறுத்துப் பேச காரணம் ஒன்றுமில்லை என்பதால், ஏற்றுக் கொண்டேன். ஆற்றுக்கால் அம்மன், ஆட்டுக்கால் அம்மன் என பலவிதங்களில் அழைக்கப்படும்,  அந்த ‘பகவதியம்மன் கோயில்’ ஊரின் நடுவிலேயே இருக்கும். மின்னும் கோயில்.

கோவிலில், செருப்புகளை பாதுகாக்கும் இடம்  நாடி, கண்கள் அலைந்து கொண்டிருக்கும் பொழுது, ஆளைத் தூக்கிவாரிப் போடவைக்கும் ‘படீர்’ சப்தம் ஒன்று கேட்டது. உண்மையிலேயே சற்றும் எதிர்பாராத, காதைச் செவிடாக்கும் அந்த பெரும் சப்தம், ஒரு கணம் என் இதயத்தை நிறுத்தி இயங்கச் செய்துவிட்டது.  ஏதேனும் வெடிவிபத்தா, வாகனங்கள் மோதிக்கொண்டுவிட்டனவா? இது என்ன அதிபயங்கர சப்தம்?  என பீதியடைந்து திக் பிரமையுடன் சுற்றும் முற்றும்  நோக்க, கூட வந்த என் உறவினர், ‘பயப்படாதே.. இது வெடி வழிபாடு... வெடிவெடிக்கிறார்கள்’ என்றார்.

அப்பொழுதுதான் கவனித்தேன். ஒரு இடத்தில், ‘வெடிவழி பாடு’ என்று எழுதி, கட்டன விபரங்களும் எழுதியிருந்தனர்.  பத்து ரூபாய் முதல் இருநூறு ரூபாய் வரை  வழிபாட்டுக் கட்டனம் இருந்தது.  பணத்தைக் கட்டிவிட்டால், நாம் கட்டும் பணத்திற்கு ஏற்ப ‘வெடி’ வெடிக்கப்படும். பணம் கூடக்கூட சப்தத்தின் அளவும், வெடிகளின் எண்ணிக்கையும் கூடும். இங்கு நாம் கோவில்களில் அர்ச்சனை செய்வது போல, அங்கு வெடியும் ஒரு சடங்கு.

ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பொழுது, மலையில் ‘வெடி வழிபாடு’ என்று எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவ்வப் பொழுது ‘படார்-படார்’ சப்தங்களையும் கேட்டதுண்டு. கேரளம் பெரும்பாலும் மலை சூழ்ந்த பகுதி என்பதால், வன விலங்குகளை விரட்டியடிக்க, மனிதர்கள் பாதுகாப்பாகச் செல்ல, ‘வெடி’க்கப் படுவது அக்காலத்திய வழக்கமாக ஆரம்பித்து, இன்று அது சடங்காக மாறி தொடர்ந்து வருகிறது போலும் என நினைத்துக் கொள்வேன்.

ஆனால் வெடிப்பதை ஒர் வழிபாட்டு முறையாகவே மாற்றிக் கொண்டதால், கொல்லத்தில் ஒரு நாசம் நிகழ்ந்துவிட்டது.

உச்ச நீதிமன்றம்,   ‘சப்தத்தின் அளவுகுறித்தும் எப்பொழு தெல்லாம் வெடிக்கக் கூடாது’ என்பது குறித்தும் 2005 லேயே தெளிவாக வழிகாட்டுமுறைகளை வகுத்துள்ளது.  நாம் எந்த வழிகாட்டுதலை மதித்தோம், இதை ஏற்றுக் கொள்ள? இரவு பத்து மணிக்குப் பின் காலை ஆறு மணிக்குள், வெடிக்கக் கூடாது எனச் சொல்கிறது சட்டம். கொல்லத்தில் வெடிக்கப் பட்டது அதிகாலை மூன்று மணிக்கு.

‘ஒழுங்கு மீறலையே’, ஒரு சமுதாய ஒழுங்காகவே மாற்றிவிடும்  நம்மவர்களுக்கு சட்ட மெல்லாம் துச்சம். தொலைக் காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் கரடியாகக் கத்தினாலும் ‘தீபாவளி’ விபத்துக்களை தவிர்க்கிறோமா என்ன? ‘வான வேடிக்கை – பட்டாசு’ களில் இறப்பது ‘தற்கொலை’ செய்து கொள்வதைப் போலத்தானே?

கோவில்களிலும் உள்ளூர் திருவிழாக்களிலும் வெடிக்கப்படும் ‘வெடிகள்’  யாவும் பெரும் பாலும் எந்த நெறிமுறைகளுக்கும் உட்படாத,  எந்த தரச் சோதனைகளுக்கும் உட்படாத ‘உள்ளூர்’ தயாரிப்பாகவே இருக்கும்.  மேலுறையில் எந்தவகையான கெமிக்கல்கள் கலக்கப்பட்டுள்ளன என்பது இருக்கவே இருக்காது. இந்தியாவில் ‘வானவேடிக்கை களுக்கான வெடிகள்’ பற்றிய சட்டங்கள் தெளிவாக இருக்கிறதா என்பது சந்தேகமே!

அவ்வெடிகளில் கலக்கப்படும் ரசாயணங்கள், எந்த அளவிற்கு காற்றை மாசுபடுத்துகின்றன, விஷமாக்குகின்றன,  அனுமதிக்கப்பட்ட மாசின் அளவு என்ன என்பெதெல்லாம் தெரியவில்லை.  

சற்றும் பாதுகாப்பின்றியே, கடும் ஆபத்துகளுக்கிடையே தான் கோவில்கள், சர்ச்சுகள், உள்ளூர் திருவிழாக்கள் போன்ற வற்றில் வெடிபொருட்களை வைத்திருக்கின்றனர்.  கொல்லம் சம்பவம் இதைத்தான் அழுத்திச் சொல்கிறது.

அரசாங்கம், தலையொன்றிற்கு பத்து லட்சமோ என்னவோ அறிவித்துவிட்டது.  அதன் கடமை முடிந்தது.   ஒரு விசாரணைக்கும் ஆணை பிறப்பித்தாகிவிட்டது. அவ்வளவே!  நாமும் வழக்கம் போல, அடுத்த விபத்து நடக்கும் வரை எல்லாவற்றையும் மறந்து, அன்றாட வேலைகளில் மூழ்கிவிடுவோம்.

சிறிதும் பெரிதுமாக, நாட்டில்  இந்தவகை வெடிவிபத்துக்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.  கொல்லம் கொஞ்சம் பெரிது என்பதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது.

நாம் யோசிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.  ரிலிஜியஸ் சென்டிமென்டைக் கலக்காமல், கோயில்கள் மற்றும் அனைத்துவிதமான திருவிழாக்களிலும் (திருமண ஊர்வலங்கள் உட்பட), மக்களின் பாதுகாப்பைக் கருதி, ‘வானவேடிக்கை மற்றும் வெடிவழிபாட்டை’ தடை செய்தாக வேண்டும். 


அரசாங்கம், ‘வாக்கு அரசியலை’ கணக்கில் கொண்டு தடைவிதிக்காமல் இருக்கக் கூடும். ஆனால் மதத் தலைவர்கள், கூடுமானால் சர்ச் உட்பட அனைத்து மதத் தலைவர்களும் ஒன்று கூடி, திருவிழாக்களில் கூடி வெடிவழிபாடு-வானவேடிக்கை வேண்டாம் எனத் தடைவிதிக்க வேண்டும்.  

செய்வார்களா?

Sunday, April 10, 2016

வீரபாண்டிய ‘அரவிந்தன்..’

இன்னிக்கு என்ன கிழமை?  சனியா .. ஞாயிறா....

எதுவானா என்னதினங்களும், மாதங்களும் அர்த்தமற்றுப் போய் வெகு நாட்களாகிவிட்டன.  எல்லா தினங்களும் இங்கே, ஒரே தினமே!  கிழமை பேதமற்று, காலை ஐந்து மணிக்கு ப்ரேயர்,  ஆறு மணிக்கு காஃபி, எட்டு மணிக்கு ப்ரேக்ஃபாஸ்ட்.. ஒரு மணிக்கு  சாப்பாடு...இப்படிச்  செல்கிறது என் வாழ்க்கை.

இங்கே எனக்கு அடங்காப் பிடாரி அரவிந்தன்என்று பெயர்.
உங்களுக்கு வயசு எழுபதாகப் போவுது. நீங்க முன்மாதிரியா இருக்க வேண்டாமா? சகலத்துக்கும் முரண்டு பிடிக்கிறீர்களே,  ஏன்?“ என்பார்  நரசிம்மன்என்ற மேனேஜர் அல்லது பொறுப்பாளர்.

முன்மாதிரின்னா என்ன? உங்க அபத்த உத்தரவுகளுக் கெல்லாம், மறு பேச்சில்லாமல்,  கீழ்ப்படிந்து நடப்பதா? மரவட்டை போல, நீங்க காட்டிய இடத்தில் சுருண்டு படுத்துகிட்டு இருக்கனுங்கறீங்க.. அது என்னால் முடியாது. என்னோட நடவடிக்கை உங்களுக்கு ஏற்றதாக இல்லைன்னா, தாரளமா, என்னைத் துரத்தி விட்டுவிடலாம்..!”  

முறைத்துப் பார்த்துவிட்டு, லெட்ஜருக்குள் தலையைவிட்டுக் கொள்வார் நரசிம்மன்.    

இது என்ன இடம் என்று, உங்களுக்கு நான்  சொல்லவேல்லை பார்த்தீர்களாஇப்படி திடீரென ஆரம்பித்தால் என்னப் பற்றி என்ன நினைப்பீர்கள்?  சொல்கிறேன்.  

இது ஒரு முதியோர் இல்லம். நான் இந்த இல்லத்திற்கு வந்து, ரெண்டு வருஷத்திற்கு மேலே இருக்கும். இந்த ஹோமை நடத்துபவர்கள், தென் சென்னையில் ஒரு பெரிய வீட்டை, வாடகைக்கு எடுத்து, முதியோர் இல்லமாகமாற்றியிருக் கின்றனர். பொதுவாக கட்டணம் வாங்கிக் கொண்டு உணவளித்தாலும், யாருமற்றவர்களுக்கு இலவசமாகவும் உணவு உறைவிடம் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது இங்கே, முப்பது பேர்கள் இருக்கிறோம்.  செலவுகள் அனைத் தும் டொனேஷன் மூலமாகத்தான் சமாளிக்கப் படுகிறது. ஒரு காலத்தில் நானே இந்த இல்லத்திற்கு ரெகுலராக நன்கொடையளித்திருக்கிறேன். நானும் இங்கே வரவேண்டிய சூழல் வரும் என எதிர் நோக்கியதில்லை. அடுத்த கனத்திற்காக வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்கள் ஏராளம் அல்லவா?  அப்படி ஒரு திடீர் திருப்பத்தில் இங்கே வந்து வசிக்கும்   நிலை எனக்கு ஏற்பட்டது. அந்தக் கதை இப்போது வேண்டாம். நிறைய டி.வி சீரியல்களில் பார்த்திருப்பீர்கள் தானே? அதில் மிகவும் சோகமான, திடீர் திருப்பங்கள் உள்ள  ஒரு கதையை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதுவே போதும்.

இந்த இல்லத்தில் தங்குபவர்களுக்கு,  நிர்வாகத்தில்,  சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள். காலை ஐந்துமணிக்கு ப்ரேயர், குறித்த நேரத்தில் தான் உணவு, குறித்த நேரத்தில் தூங்கனும்.. இப்படி பல!

அதில் கனிசமானவற்றிற்கு நான் கட்டுப்பட மாட்டேன்.  அவையெல்லாம் அர்த்தமற்ற, சுதந்திரத்தைப் பறிக்கும் திமிர் மிகுந்த கட்டுப்பாடுகள் என்பது என் கருத்து.

சுபாவத்திலேயே, நான் கொஞ்சம் சுய அடையாளம் இழக்க விரும்பாதவன். கலகக்காரன். சுதந்திர விரும்பி. எவரும் என் கையை கட்டிப்போட அனுமதித்ததில்லை. இந்த சுய அறிமுகம் உங்களுக்குப் போதும் என நினைக்கிறேன்.

முதியோர் இல்லம், அனாதை ஆசிரமங்கள்  என்றால், அடிமைகள் முகாமா என்ன?  இங்கே வந்து தங்குபவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள் தான்; அதற்காக அவர்கள் மேல் கட்டுப்பாடற்ற அதிகாரம் செலுத்த உரிமை உண்டா என்ன? 

எனக்கு  கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் தினமும் காலை ஐந்து எழுந்துதான், கடவுள் பக்தியை காண்பிக்கனும் என்பதில் உடன்பாடில்லை.  நாலுக்கும் எழுவேன், ஆறுக்கும் எழுவேன். என் விருப்பம். என் ப்ரேயர் என்பது தியானம் தான். அது உள்ளுக்குள் நிகழ்த்திக் கொள்வேன்.

எட்டு மணிக்கு ப்ரேக் ஃபாஸ்ட் டைம் என்பது சரி. ஆளாளுக்கு விரும்பும் நேரத்தில் சாப்பாடு போடமுடியாதுதான். டிபனை வாங்கி என் ரூமிற்குள் வைத்துக் கொள்வேன். பசிக்கும்தான் போது உண்பேன்.  இதில் நரசிம்மனுக்கு உடன்படில்லை. டைனிங் ரூமில்தான் சாப்பிடனும். ரூமிற்கு எடுத்துப் போகக் கூடாது என்பார். அப்படியானால், எனக்கு சாப்பாடே வேண்டாம், போ.. என்பேன் நான். உலவ மொட்டை மாடிக்குச் செல்வேன். மேலே செல்லக் கூடா தென்பார். இது போன்று பல சில்லறை உபத்திரவங்கள் பல.

மணியடித்து சாப்பாட்டு டைம் என்று அறிவிக்கலாம். தப்பில்லை.  மணியடித்து பசிக்குமா? மணியடித்து தூக்கம் வருமா? அதுவும் வயதான காலத்தில்? இரவு ஒன்பதரைக்கு விளக்கை அணை. புத்தகம் படிக்காதே. பேசாதே. மொபைல் பார்க்காதே. ஒரு குறிப்பிட்ட சாமியாரை கும்பிடு. பொம்மை அடுக்கினாற்போல அனைவரும் மதியம் தூங்கு.. இப்படி பல இம்சைகள். இவை யாவற்றையும் நான் ஏற்றுக்கொள்ள மறுத்து, சண்டித்தனம் செய்ததால், இங்கே நான் அடங்காப் பிடாரி அரவிந்தன்’. 

அந்தமாதிரி பெயர் எடுத்ததில்  எனக்கு வருத்தமெல்லாம் இல்லை.  எப்பொழுதும் நான் நானே”!

சக கிழவர்கள்/கிழவிகள் பார்வையிலும் நான் அடங்காப் பிடாரிதான். அவர்கள் யாவருக்கும் "வாழ்க்கை செக்யூரிட்டி பயம்" சாசுவதமாக இருக்கும்.  ஏதோ இப்படி ஒரு இடம் இருக்கறதனால தான், எங்க  பொழப்பு ஓடுது... இதுவும் இல்லேன்னா, பிச்சைதான் எடுக்கனும். பொது இடம்னா, கொஞ்சம் கட்டுப்பாடு இருக்கும்தான்.  நாமதான் அனுசரிக்கனும். இப்படி திமிர்த்தனம் செய்யறதெல்லாம் கௌரவமாவா இருக்கு? இந்த மனுஷன் (என்னைப் பற்றித்தான்) பண்ணுற அழிச்சாட்டியத்துல,  இந்த ஹோமையே ஒரு நாள், மூடிடப் போறாங்க பாருங்க...என்பர்.  
பிச்சை போட்டாலும் அது கௌரவமாக இருக்கணும்என்ற கோஷ்டி நான். மண்டியிட்டுத்தான் பெறனும் என்றால், எதுவும் எனக்கு தேவையில்லை.  “உங்களுக்கு சுயகௌரவமே இல்லையா? வெறுமே சோறுதான் உலகா? உணர்வு-சுதந்திரம்-தன்மானம் எதுவும் வேண்டாமா” என்ற வினாக்கள் எல்லாம் அவர்களுக்கு புதிராக இருக்கும்.

கனிசமாக டொனேஷன் கொடுத்து இங்கே சேர்ததால், அரவிந்தன் இப்படி தெனாவட்டா பேசறார்..என்ற புகாருக்கு என்னிடம் பதில் இல்லை. டொனேஷன் கொடுக்கவில்லை என்றாலும் இப்படித்தான் இருப்பேன், என்பதை அவர்களுக்கு புரியவைப்பது இயலாத காரியம்.

ஒரு முறை, நிர்வாகத்தில் என்னைக் கூப்பிட்டு, அடுத்த மாசம் முதல் நீங்கள் மேனேஜர் பொறுப்பு எடுத்துக்கறீங்களா?”  நரசிம்மனை விட்டு விடலாம்..! என்றனர்.  அது எனக்கு விரிக்கப்பட்ட ட்ராப்.

ஓ..யெஸ்... தாராளமா எடுத்துக்கறேனே!  ஆனால்  இப்ப இருக்கும் ரூல்ஸையெல்லாம் நான் மாற்றிவிடுவேன்.  அடங்குவது மட்டுமல்ல, அடக்குவதும் பிடிக்காது. ப்ரேயர் ஹால் எப்பொழுதும் திறந்திருக்கும்... விருப்பப் பட்டவர்கள், விருப்பப்பட்ட  நேரத்தில் வணங்கலாம்; அல்லது வராமலேயே இருக்கலாம். மாலையில் உலவ அனுமதிப்பேன். இரவு ஒன்பது மணிக்கே விளக்கை அனைக்க வேண்டும் என்பதை மாற்றுவேன். அப்புறம் தினசரி சாப்பாட்டு மெனுவில், இங்கே இருப்பவர்களின் விருப்பத்தையும் கேட்டு  ......”

வேண்டாம்..வேண்டாம்.. நரசிம்மனே இருக்கட்டும்” .  நிர்வாகத்தின் திட்டம் பேக்ஃப்யர் ஆகிவிட்டது.

இறுதியில் ஒருவழியாக என்னை தண்ணீர் தெளித்துவிட்டுவிட்டனர். பாலைக்குள் ஒரு ஓயஸிஸ் போல இங்கே நான். 

அது கிடக்கட்டும், நாம், இப்ப  இந்த ஹோமின் முதல் மாடி ஏறி, பின் மொட்டை மாடிக்கு படியேறிச் செல்வோம், வாருங்கள். 

இங்கே படி முடியும் இடத்தில் கொஞ்சம் நிழலும், நல்ல காற்றும் கிடைக்கும். காற்று  விடாது வீசிக்கொண்டே இருக்கும். எனக்கு அந்தக் கட்டிடத்திலேயே மிகவும் பிடித்த இடம் இது!  மதியம் சாப்பிட்டுவிட்டு, சற்று கண் அயர தோதான இடம். மேமாதம் இன்னமும் துவங்கவில்லை. ஏப்ரலிலேயே வெயில் இந்தபோடு போடுகிறது. கீழே, ஃபேனிலிருந்து வரும் அனற்காற்று சகியாமல், மதியம் ரெகுலராக இங்கே வந்துவிடுவேன். இங்கே மட்டும் எப்படி இப்படி காற்று வீசுகிறது..?

காற்று குறுகலான பாதை  நுழைந்து, அகலமான பாதை வழியே வெளியேறும் தன்மை கொண்டது என, மாணவர் களுக்குச் சொல்லிக் கொடுத்த்து நினைவிற்கு வந்தது.  
சேகரித்த அறிவும் கூட, அர்த்தமற்றுப் போய்விட்டதோ? எல்லாவற்றையும் சேர்த்தே எரித்தோ-புதைத்தோ விடப் போகிறார்கள்!  சரி... இருக்கும்வரை சிலருக்காவது பயன் பட்டதல்லவா? அது போதும்!

வானத்தைப் பார்த்தேன்.  கழுகு ஒன்று  இரண்டாயிரம் மூவாயிரம் அடி உயரத்தில், அபாரமான வேகத்தில், இறகுகளை அடித்துக்கொள்ளாமல், வட்டம் வட்டமாக சுற்றிக் கொண்டிருந்தது.  அவைகளுக்கு வெயில் இல்லையாஅந்தக் கழுகும் கூட வானில் தனியாகத்தான் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.  தனியாய் சுற்ற பயமாய் இருக்காதா? கூர்ந்து பார்த்தால் வெகுதூரத்தில் மற்றொரு கழுகும் வட்டமடித்துக் கொண்டிருந்தது. கழுகு இணையுடன் வாழும் வகையைச் சார்ந்தது.  இணை இறந்துவிட்டால், அந்தக் கழுகு என்ன செய்யும்?  அவைகளுக்கு ஏதேனும் ஹோம்இருக்கிறதா என்ன?

இந்த உயரத்தில், இந்த வேகத்தில், தரையில் மேயும் ஒற்றைக் கோழிக்குஞ்சைக் கண்டுபிடித்துவிடுகிறது. ஸ்ருஷ்டியும் பரிணாமமும் வியப்புதான்.  சிலவகைக் கழுகுகள் 15ஆயிரம் அடி உயரத்தில் நூறு கி.மீ வேகத்தைக் கடந்து பறக்கக் கூடியவை. Bald Eagle பற்றிப் படித்தது எல்லாம், நினைவுக்கு வந்தது.

கழுகுகளுக்கு 45 வயதில் ஒரு கண்டம் வருமாம். அந்த வயதில், அதன் அலகு முதிர்ந்து வளைந்து-இறை தேட முடியாமற் போய்விடுமாம், சிறகுகள் கூட கடினமாகி பறக்க இயலாமல் ஆகிவிடுமாம். பறக்காத கழுகை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லையல்லவா?.  

பின் அந்த கழுகு ஒரு தனியிடத்திற்கு, பெறும்பாலும் மலையின் பொந்துகளுக்குச் சென்று, பாறையில் அலகை மோதி-மோதி இடித்து கீழே விழச் செய்யுமாம். பின் புதுசாய் முளைக்கும் புது அலகால், தன் வயதான இறகுகளை ஒவ்வொன்றாய் பிடிங்கி எறியுமாம். பின் புதிதாக இறக்கை முளைக்குமாம். இந்த சித்தரவதைப் பணிகள் முடிய ஐந்துமாதம் ஆகும். இந்த ஐந்து மாதமும் அக்கழுகு உணவின்றி, தாக்குப் பிடித்தால், மீண்டும் ஒரு முப்பது வருடம் உயிர் வாழுமாம். இப்போராட்டத்தைக் கைவிட்டால் இறக்க வேண்டியது தான்.

இதை ஒரு முறை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தபொழுது, ஒருவன் சொன்னான்... “அதைவிட செத்தே போய்விடலாம் சார்..” அவனை நினைத்து சிரிப்பு வந்தது.  வாழ்க்கையை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் அணுகுகிறார்கள். ஓய்வு பெற்ற ஆசிரியர் என்பதால், ஆசிரிய இனத்தின் பால் கொஞ்சம் பச்சாதாபமும் ஏற்பட்டது.  ‘வலைவந்தபின் ஆசிரியர் களுக்கு மரியாதை கொஞ்சம் குறைந்துவிட்டது.



கழுகு என்றதும், கந்தசாமியின் நினைவு வந்தது.   இங்கே நான் வந்த புதிதில், கந்தசாமி வாரம் ஒருமுறை வந்தான். பின் மாதம் ஒருமுறை. அப்புறம் வரவே இல்லை. கடைசியாக அவனைப் பர்த்து ஆறுமாதமாவது இருக்கும்.  ‘கழுகு கந்தசாமிபால்ய சினேகிதன். ஒன்றாகப் படித்து, இருவரும் ஆசிரியர் வேலைக்கு வந்து, ஒரே ஊரில் வேலைபார்த்து.... ம்ம்ம்... இருவருமே ஓய்வுபெற்றுவிட்டோம்.  ரிடயர் ஆனபின்னும் கொஞ்ச நாள் பிஸிக்ஸ்ட்யூஷன் சொல்லிக் கொடுத்தான். வேறுசில பணி சார்ந்த சிக்கல்கள் காரணமாக, பணியில் இருக்கும் ஆசிரியர் களுடன் போட்டி போட முடியாமல் ட்யூஷனை விட்டுவிட்டான்.  பணியில் இருக்கும்போது, அவனுக்குத் தெரியாமல் யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது, ஒரு டீ கூட குடிக்க முடியாது உடனே மூக்கில் வியர்த்துவிடும்.  எனவே அவனுக்கு நாங்கள் வைத்த பெயர் கழுகு’.

ஏதேதோ கட்டுப்பாடற்ற சிந்தனைகள், சம்பந்தா சம்பந்த மில்லாமல்.  சை, இந்த மனக் குரங்கை அடக்குவது சுலபமாயில்லை.

சுந்தரிப் பாட்டியின் குரல்,  கனவிலிருந்து என்னை கீழிறக்கிக் கொண்டு வந்த்து.  கொஞ்சம் ஓரமாய் ஈசி சேரைப் போட்டுக்கக் கூடாதோ? இடிச்சுக்கறேன் பாருங்க..” புகாருடன் மேலே ஏறிவந்தாள் சுந்தரிப் பாட்டி. அவளுக்கும் வயது எழுபது இருக்கும். இந்த ஹோமில் சீனியர். இருபது வருடமாய் இருக்கிறாளாம்.  அதன் காரணமாகவே, ஹோமின் அதிகாரமையமாக தன்னை  நினைத்துக் கொள்வாள். இப்பொழுது, மாடியில் காயவைத்திருக்கும் புடவையை எடுத்துப் போக வந்திருக்கிறாள்.

நாந்தான் இந்தப் பக்கம் பாத்து, சாய்ந்து படுத்திருக்கேன். உங்களுக்கு கண்கள்  முன்னாலே தானே இருக்கு, பாத்து வர்ரது.. இல்லேன்னா, கொஞ்சம்  நவுருங்கன்னு சொல்றது.. நகர்ந்துட்டுப் போகிறேன்.  அதவுட்டு, ஏன் இங்க படுத்திருக்கன்னு கேக்கக் கூடாது.. புரியுதா சுந்தரிப் பாட்டி..?”

அவளுக்கு  பாட்டிஎன்ற வார்த்தை கோபமூட்டிவிட்டது. ‘ 

நீங்க ரொம்ப குமரனாக்கும்? என்னைப் பாட்டி என்கிறீங்க?” 

நான் தாத்தா என ஏற்றுக் கொள்வதில் எனக்கு ஆட்சே பனையே இல்லை. உங்களுக்கு பாட்டியில்என்ன ஆட்சேபனை? மனதில் என்ன குமரி என்ற நினைப்போ?”

இந்த மனுஷன் கிட்ட பேசினதே தப்பு...முனறியவண்ணம் புடவையை எடுத்துக் கொண்டு இறங்கினாள்.

அடுத்த நாள் காலை ரூமில் இருக்கும் பொழுது, அந்த  சுந்தரிப் பாட்டி அழைத்தாள். ஹோமின் டிரஸ்டி வந்தருக்கார். உங் களாண்ட பேசனுமாம். வரச்சொல்றார். போய்ப் பாருங்க.. 

டிரஸ்டி வருகிறார் என்றால், அது கோயில் உற்சவம் போல. சகலரும்  நர்த்தனம் ஆடுவர். இந்த ‘சேவை’ செய்யும் பாசாங்கு எனக்கு ஆகவே ஆகாது. வேண்டுமென்றே ‘அட்டானிக்கால்’ இட்டு அமரத் தோன்றும்.

எதுக்காக என்னைப் பார்க்கனுமாம்.. ஏதாவது யூஷுவல் கம்ப்ளயின்டா..?

யோசித்த வண்ணம்நிதானமாகச் சென்றேன்.

வாங்க அரவிந்தன்... உங்களைக் கூப்பிட்டனுப்பி ஐந்து நிமிஷம் ஆகுது..  நிதானமா வர்ரீங்க?”

அடாடா.. ஓட்டப் பந்தயத்திற்கு கூப்பிடறீங்கன்னு சொல்லியனுப்பியிருந்தீங்கன்னா, ஓடியே வந்திருப்பேனே? “

இந்த பேச்சுதான், உங்களிடம் ஆகாதது.... ஒரு சாரி சொல்லிவிட்டால் வேலை முடிந்த தல்லவா?”

எதுக்கு சாரி சொல்லனும்?  அஞ்சு நிமிஷம்தானே ஆச்சு..? அஞ்சு மணி நேரம் ஆனாப்போல பேசறீங்கஅப்படி உங்களுக்கு ரொம்ப அவசரமாயிருந்தால், நீங்களே வந்து பார்த்திருக் கலாமே?”

“......”

அவர் அனுமதியின்றி ஒரு சேரை இழுத்துப் போட்டு, உட்கார்ந்து கொண்டேன்.

நான் உங்களை உட்காரச் சொல்ல்லை..

இதென்ன ஆண்டான் அடிமை வியாபாரமா என்ன?  நீங்க, வயதில் என்னைவிட முப்பது வருஷம் இளையவர்.  மரியாதைப்படியும் முறைப்படியும்,  நான் வந்ததும்  நீங்கதான் என்னை உட்காரச் சொல்லியிருக்கனும். அதைவிட்டு ஏன் உட்கார்ந்தேன்னு கேக்கறீங்க? நீங்க கடவுளா என்ன?”

உங்க பேர்ல, நிறைய கம்ப்ளெயின்ட் வருது, அரவிந்தன்..

யாரு நரசிம்மனும்.. சுந்தரியும் சொன்னாங்களா..?”

யார் சொன்னால் என்ன.. நீங்க இந்த ஹோமின் கட்டுதிட்டங்களுக்கு கட்டுப்பட மாட்டேங் கறீங்க..

கட்டுப்பாடுகள் நியாயமாய் இருந்தால், யாரும் எனக்கு ஆலோசனை சொல்லவேண்டிய அவசியம் இல்லை.  நானாகவே கட்டுப்படுவேன். எனக்கு டிஸிப்ளின் என்றால் என்னவென்று தெரியும்.  பொறுப்பான பதவியில் இருந்து ரிடயர்ட் ஆன ஆள்தான். எனக்கும்  நிர்வாகம் தெரியும்.. புரியும். ஆனா, அர்த்தமற்ற கட்டுப்பாடுகள் பிடிக்காது..

ப்ரேயரில் உங்களுக்கு பிரச்சினை...?”

மறுபடியும் நீங்கள், தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.. ப்ரேயரில் ஒரு பிரச்சினையும் இல்லை.. ஆனால் கட்டாய ப்ரேயரில் உடன்பாடில்லை. அதென்ன, நிதமும் காலை ஐந்து மணி? சாமி அப்படிக் கேட்டாரா?  இங்கே இருப்பவர்கள் வயசானவர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா என்ன? எதற்கு இந்த வெட்டி கட்டுபாடு?  நான் நாத்திகனாய் இருந்தால் என்ன செய்வீர்கள்? அப்பொழுதும் ப்ரேயர் கட்டாயமா? தனிமனித விருப்பம் என்று ஒன்று உள்ளது, தெரியுமா?

நாத்திகருக்கு இந்த ஹோமில் இடமில்லை...

அப்படியா? உங்க பை-லாவ, அதற்கு ஏற்றாற்போல, ஆத்திகர்களை மட்டும்தான் சேர்ப்பேன் எனத் திருத்திட்டு அப்புறமா பேசுங்க....

இது, இலவச முதியோர் இல்லம்.. புரிஞ்சுக்க முதலில்.

மரியாதை குறைந்து, ஒருமையில் பேசுவதைக் கவனித்தேன்.

வந்தனம் டா... உன்னை மதிக்கிறேன். உன் உயர்வான சிந்தனைக்கு தலை வணங்குகிறேன் டா. ஆனா, நீ தர்மம் செய்ததினால்,  தர்மம் வாங்கியவர்கள் எல்லாம் உனக்கு கால் கழுவி விடனும்னு எதிர்பாக்குற பாரு, அதுதாண்டா பிரச்சினை..

இந்த ஹோமில் உங்களைச் சேர்த்ததே என் தப்பு...

அது உங்கள் உரிமை.. யாரைச் சேர்க்கனும் அல்லது நிராகரிக்கனுங்கறது  நீங்க முடிவு செய்யவேண்டியது.. எவரும் தலையிட முடியாது..

“ நேற்று சுந்தரியிடம் தகறாறு செய்திருக்கீர்..”

“ஆமாம் அவள் கையைப் பிடித்து இழுத்துவிட்டேன்.. நீர் வந்துட்டீர் வக்காலத்துக்கு..  என்ன நடந்ததுன்னு கூட தெரியாம, பொட்டை மாதிரி இப்ப வம்புக்கு வர்ரீகளாக்கும்?”

‘மாடிக்கு போக அனுமதியில்லை என்று தெரியாது..?”

“மாடியில என்ன பொக்கிஷமா கொட்டிவச்சுருக்கீர்..? அங்கே போனா என்ன குடி முழுகிப்போய்விடும். நல்ல காத்து வருது.. போனா என்ன?”

தேவையில்லாத பேச்சு. எங்க கட்டுப்பாடுகளுக்கு நீர் கட்டுப் பட்டு நடக்கனும்..”

“முடியாது..”

முடிவா சொல்லுங்க... எங்க கண்டிஷங்களுக்கு ஒத்து வரு வீங்களா.. இல்லையா?”

எது உங்க கண்டிஷன்இத்தனை மணிக்கு எழுந்து, இந்த சாமியாரை பூஜை செய்துஇப்படி-இத்தனை மணிக்கு சாப்பிட்டு, இப்படித்தான் தூங்கனுங்கறதா? மாடிக்குப் போகதே.. தலை சீவாதே... இதெல்லாம் ஒரு கண்டிஷன்களா? புரிஞ்சுக்கோங்க... இங்கே இருப்பவர்கள் மனிதர்கள். அனாதை ரொபோக்கள் அல்ல.  அவர்களுக்கும் சுதந்திரம் வேண்டும். ஒரு வரை யறுக்கப்பட்ட சுதந்திரம். ஆனா நீங்க எதிர்பார்க்கிறது, அடிமைத்தனம். நான் உனக்கு சோறு போடுகிறேன்... எனவே,  நான் சொன்னபடியெல்லாம் கேட்டாக வேண்டிய கட்டாயம் இருக்கு. நான் உனக்கு கடவுள்"  என்கிறீர்கள்.  அதற்கு உடன்பட முடியாது.

எங்க ரூல்ஸூக்கு கட்டுப்படவில்லையெனில், ஆக்ஷன் எடுப்போம்..

தாராளமா... எடுத்துக்கோங்க...

நீங்க ஹோமை விட்டுவெளியாறலாம்..

முடியாது..   நானாக வெளியேற மாட்டேன். வேண்டு மானால், உங்களது சட்ட திட்டங்கள் என்னென்ன, அவற்றை நான் எப்படியெல்லாம், எப்போது  மீறினேன்என ஒரு கடிதம் கொடுத்து, பின் வெளி -யேற்றுங்கள். போகிறேன்.”

கடிதம் கொடுத்தால் என்னய்யா செய்வே? மயிரைப் புடுங்குவியா..?

கொடுடா..  நாயே,   கொடுத்துப் பாரேன். நான் ரோடில் உட்கார்ந்து போராடுவேன். உன்னை எதிர்த்து அல்லது என்னை மீண்டும் ஹோமில் சேர்த்துக்கோ என்று அல்ல... உன் சட்ட திட்டங்களை எதிர்த்து போராடுவேன்..

இனி இந்த ஹோமில் உனக்கு இடமில்லை.

இதுதான்யா இந்த நாட்டின் கோளாறு... துதிபாடி-துதிபாடி உன்னை மாதிரி ஆட்களை கடவுளாக்கி விட்டார்கள்.  இடதுகை கொடுப்பதை வலதுகை அறியக்கூடாது; அதுதான் தர்மம், தெரியுமா?   உனக்கு தர்ம போதைஏறிவிட்டது... தர்மத்தையும் ‘தர்மத்தோடுதான்’ செய்யனும். உன்னை மாதிரி மண்டை கொழுத்தல்ல, புரிஞ்சுக்க.   இது உன்னை மாதிரி ஹோம் நடத்துபவர்களுக்கு மட்டுமல்ல.. பலருக்கும் இந்த போதை இருக்கிறது.  ஒருவன் அடுத்தவனுக்கு ஏதாவது செய்துவிட்டால், அவன் காலத்திற்கும் அவர்களுக்கு சேவகம் செய்து, சுய அடையாளம் அழிந்து இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.. நம்புகிறீர்கள்.  என்போன்ற கவரிமான்களுக்குஇவை சரிப்பட்டு வராது.. நான் கேட்டபடி லெட்டர் கொடு. நான் போய் என் மூட்டை முடிச்சுக்களை தயார் படுத்திக் கொள்கிறேன்..  இன்னொரு சமாசாரம். நான் டெபாசிட் செய்த தொகையை எனக்கு  திருப்பிக் கொடு, செக்காக...

பதிலை எதிர் நோக்காமல் என் ரூமிற்கு வந்து என் லக்கேஜ்களை பேக் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.


உங்களுக்குத் தெரிந்து,  நான் விரும்புவது போல ஏதாவது ஹோம்  நம் ஊரில் இருக்கா.... நில்லுங்க..நில்லுங்க.. ஏன் என்னைப் பார்த்து ஓடறீங்க..?

Wednesday, April 6, 2016

“ங்கொப்பன் மவனே... சிங்கம் டா...” ( குறுங்கதை)


மதியம் ஒரு மணி இருக்கும். மதிய உணவிற்குப்பின் ஒரு குட்டித்தூக்கம் போடுவது, அரவிந்தனின் வழக்கம். குட்டித் தூக்கம் என்றால் ஒரு 10 நிமிஷம் தான். உண்டது, சாப்பாடோ அல்லது கஞ்சியோ, அது பிரச்சினையில்லை! உணவு, வயிற்றிற்குள் இறங்கியதும் லேசாக கண்ணைச் செருகும். அந்தக் கணம் அரவிந்தனுக்கு கோடிபெரும். மாத்திரை போட்டே தூக்கம் வரவழைத்துக் கொண்டிருப்பவருக்கு, தானே வரும் தூக்கம் அல்ப நேரமேயானாலும், அது தரும் சுகமே தனியல்லவா? தூங்கி எழுந்ததும் கிடைக்கும் சுறுசுறுப்பு அற்புதம்.  அதனால், அக்கணத்தை நழுவவிடாமல், தூங்கிவிடுவார்.

அன்றும் அப்படித்தான். கண்கள் தூக்கத்திற்கு நழுவும் தருணம்.  அப்போது, சடாரென, நேராக மண்டைக்கு மேலிருந்து, கடைவாய்க்கு ஒரு கூரான ஈட்டி கொண்டு செருகினாற்போல ஒரு சுரீர் வலி. அலறி அடித்து எழுந்து உட்கார்ந்தார், அரவிந்தன். அந்த வினாடி நேர வலியே, கண்ணீரை  வரவழைத்துவிடப் போதுமானதாக இருந்தது.  
என்ன ஆச்சு? கீழ்த் தாடை முழுவதும், வலி வந்துவிட்டுப்போன தடயம் தெரிந்தது.

மூன்று தினங்களுக்கு முன் தான், மேல் கடைவாய்ப்பற்களுக்கு ஏதோ, ‘பொட்டானிகல்’ பேர் போலத் தெரியும் “வேர் சிகிச்சை” என்று அறியப்படும் ரூட்கேனால் பற்சிகிச்சை செய்து கொண்டு வந்தார்.   இச்சிகிச்சைக்கு முன்னும் பின்னும் அனுபவித்த இம்சைகளினால் அவதியுற்று மீண்டிருக்கும் அரவிந்தன், இன்னும் ஒரு பல் வலியா என பீதியுற்றுப் போனார்.

ஒருவேளை மனப் பிரமையோ? மீண்டும் சாய்ந்து படுத்துக் கொள்ள பயம். இனி அந்த தூக்கக் கணம் வராது. பரவாயில்லை அந்த வலி வராமலிருந்தால் போதும் என கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் கணத்தில், அந்த விருந்தாளி வந்தே விட்டார்.

அந்தக் கால ஓனிடா டி.வி விளம்பரம்போல தலையில் கொம்பு முளைத்த ராட்சதன் வந்தே விட்டான். மின்சார ஷாக் போல சுண்டி இழுத்தது வலி. இம்முறை ‘டீசர்’ காட்டிவிட்டு போக வில்லை. பிரசவத்திற்கு தாய்வீட்டிற்கு வந்த பெண்போல நன்கு ஆற அமர சௌகரியமாய் கால் நீட்டி உட்கார்ந்து விட்டது பல்வலி. ஒவ்வொரு நொடிக்கும் ஒரு சுரீர். 

வ்வாஆஆஆஆஆ..  தானே கைகளால் வாயை மூடிக் கொண்டார்.

கத்தாதே! நிதானம்... நிதானம்.. பதறாதே!

மருந்துப் பெட்டியை குடைந்தார். ஒரு கையால் வாயைப் பிடித்துக் கொண்டே!

ப்ரூஃபன்? பாராசிட்டாமல்? அட.... ஒரு சாரிடான்? ஒன்றுமே இல்லை. கிராம்புத்தைலம் வைத்தால் நிவாரணம் கிடைக்குமாமே? அதெல்லாம் வீட்டில் இருக்குமா என்ன?

அவசரமவசமாக, பழைய பிரிஸ்கிரிப்ஷனைத் தேடினார். ‘டென்டிஸ்டின்’ கன்சல்டிங் நேரம் மாலை நான்கு முதல் இரவு எட்டு மணி வரை என்றிருந்தது.  வேர் சிகிச்சை செய்து கொண்ட ஆஸ்பத்திரிதான் அது.

மணியைப் பார்த்தார். இப்பதான் மணி இரண்டு. கதவைப் பூட்டக் கூட இல்லாமல், தெரு முனையிலிருந்த ஒரு மெடிக்கலை நோக்கி ஓடினார். ஏதாவது ஒரு பெயின் கில்லர் கொடுங்க... பல்வலி.. தாங்கல.. சீக்கிரம்.

கடைக்காரர் இரு மாத்திரைகளைத் தந்தார்.  மாத்திரை செயல்பட ஒருமணி நேரமாவது ஆகும்... தெரிந்தும் கேட்டார். பல்வலிக்கு, இந்த மாத்திரை எவ்வளவு  நேரத்தில் கேட்கும்?
கூடவே, வென்னீர்.. உப்புத்தண்ணீரில் கொப்பளித்தல் என கைவைத்தியமும்.

வேலையில்லாதவன் பொழுதும், வலி வந்தவன் பொழுதும் செலவழியாது. மணி மூன்றரை ஆயிற்று.. இனியும் பொருக்க இயலாது.. கதவைப் பூட்டிக் கொண்டு கிளினிக்கு விரைந்தார், ஆட்டோவில்.  மாத்திரை எந்த வலியையும் சரியாக்க வில்லை.

கிளினிக்கில்  நோயாளிகள் யாரையும் கணோம்!  

வரவேற்பரையில் இருந்த டி.விக்கு கண்களை அடகு வைத்த ஒரு ரிசப்ஷனிஸ்ட், தமிழ் ஹிந்து பேப்பரில் மடித்து வைத்த வடையை மென்று கொண்டிருந்தார்.

“டாக்டர் எப்ப வருவார்...?”

“வந்திடுவார்..”

“அது எனக்குத் தெரியும்.. எப்ப என்று கேட்டேன்... ஆ.. ஐயோ..”

“.........”

“இங்கே ஒருத்தன் கத்தறது உன் காதில் விழல..., எப்ப வருவார்..?”

“வருவாருங்க...”

“அதான்யா.. எப்ப? கன்சல்டிங்க ஹவர் மாலை நாலுன்னு போட்டிருக்கு... இப்ப மணி நாலு..”

“வரும் நேரம்தான்..” மீதி வடையை மெல்ல ஆரம்பித்தான்.

“ஆ...அம்மா.. ஐயோ...”

இந்த கிளினிக்கில், வலிக்கு ஒரு மரியாதையும் கிடையாது போலிருக்கிறது. அவர்கள் இம்மாதிரியான அலறல்களுக்கு பழகிவிட்டிருந்தனர். டி.வியில் சந்தோஷ் சுப்ரமணியம், ஜெனிலியாவுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“டி.வி வால்யூமைக் குறை... தலைவலி”

‘........’

“சொல்றேன்ல... டி.வி வால்யூமைக் குறை.. இங்கே என்ன சினிமாவா போடறீங்க.. டீக்கடை மாதிரி அலறவிட்டுக் கொண்டு?”

“உங்களுக்கு பல் வலியா.. தலைவலியா சார்..”

“மயிறுவலி... அந்த டி.வியை அனைத்துத் தொலை..”, 

 “வ்வ்வ்வ்வ்...அம்மா.....”

பத்து  நிமிஷம் ஆகியிருக்கும்..

“எப்பாய்யா  வருவாரு உங்க டாக்டர்...  “

‘இப்ப எதுக்கு கத்தறீங்க.. அவர் வர்ரப்பதான்.. அவுங்க எங்கிட்ட சொல்லிகிட்டு போவறதில்லை.. சொல்லிப்புட்டு வர்ரதில்லை.. வரும்போது பாக்கலாம். நீங்கதான் ஒன்னாம் நெம்பர் டோக்கன்..”

“அந்த டாக்டர்கிட்ட மொபைல்ல பேசு.. இங்க நான் வலியால் துடிக்கிறேன்னு சொல்லு..”

“அதெல்லாம் பேச முடியாது..”

“அப்ப என்னாத்துகுய்யா, விசிட்டிங் நேரம், மாலை நாலு முதல்ன்னு போர்டு போட்டிருக்கீங்க..? “

எரிச்சலாகிப் போன அவன், ரிமோட்டை எறிந்துவிட்டு வெள்யேறினான்.

ஒவ்வொரு நொடியும் கழிவதற்கு யுகம் போல இருந்த்து.
அந்தப் பக்கமாக, ஒரு புடவைகட்டிய நர்ஸ் வந்தாள். பாய்ந்து சென்று, சிஸ்டர்.. வலி உயிர் போகுது.. ஏதாவது பவுர்ஃபுல் பெயின் கில்லர் கொடுங்க... டாக்டர் வர்ரமாதிரி தெரியல..
சீற்றமுற்றஅந்தப் பெண்மணி திட்டுவதற்கு எத்தனித்த பொழுது, அரவிந்தனின் வயதையும் நிலைமையும் பார்த்து, “கொஞ்சம் உக்காருங்க.. இப்ப வந்துடுவார் டாக்டர்..”

"அப்படித்தான் ஒருமணி நேரமா சொல்லிக்கிட்டிருக்கீங்க... டாக்டர் வந்த பாடில்லை..   நாலு மணிக்கே வந்துடுவார்னு, வக்கனமா போர்டு மாத்திரம் வச்சுக்குவீங்க... கூட்டம் சேர்க்க. ஆனால் வரமாட்டீங்க... டாக்டர்னா என்னா, மேலே வானத்திலிருந்து குதிச்சுட்டீங்களா? உங்க தயவு வேணுங்கறதனால நீங்க எப்படி வேணா நடந்துக்குவீங்களா? எதிக்ஸ் வேணாம்?”

‘இப்ப உங்களுக்கு என்ன வேணும்...? அவர் சாயங்காலம் ஆறரை மணிக்குத்தான் வருவார். வெயிட் பண்ணிப் பாக்கறதுன்னா பாருங்க.. இல்லாட்டி வேற கிளினிக்குக்கு போங்க... வீணா சத்தம் போடாதீங்க...”

“அப்ப, போர்டுல விசிட்டிங் அவர் மாலை ஆறரைன்னு மாத்துங்க.. எதுக்காக நாலுன்னு எழுதிவைச்சுருக்கீங்க... “

“போர்டுல எப்படி இருந்தா என்ன... சாயங்காலம்தான்.. நான்தான் வேற டாக்டரிடம் போங்கன்னு சொல்லிட்டேனுல்ல..?”

“இது நீங்க ட்ரீட்மெண்ட் கொடுத்ததுக்கு அப்புறம் வந்த  வலி.. வேற டாக்டரிடம் போகனுமா வேண்டாமான்னு நான் தீர்மாணித்துக் கொள்வேன்.. உங்க அறிவுரை தேவையில்லை..”

“அப்ப பேசாம இருங்க... கத்தக் கூடாது..”

வலிவந்தால், வெட்கம்கூட கொஞ்சம் விலகிவிடும் போல.. மீண்டும் முனக ஆரம்பித்தார். உள்ளேயிருந்து ஒரு ஃபார்மஸிஸ்ட் ஒருத்தர் வந்தார்.

“என்ன பிரச்சினை?”

‘இவருக்கு பல் வலி... இப்பவே டாக்டரை வரச்சொல்லுது...”

“அவர் சாயங்காலம்தான் வருவாரு..”

இனி சீன் போட்டு பலன் இல்லை என உணர்ந்த அரவிந்தன், 
“மதியத்திலிருந்து வலி உயிர் போவுது.. தாங்கல... ஏதாவது பெயின் கில்லர் கொடுங்க.”

“ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாம கொடுக்கக் கூடாதுங்க...”

“வலி என்ன, ப்ரிஸ்கிரிப்ஷனோட வருமா? முடியல.. ப்ளீஸ்...சீக்கிரம் ஒரு பெயின் கில்லர் கொடுங்க...”

இடைமறித்த அந்த நர்ஸ்,  இவுருக்கு வலி முடியல..அதான் கத்தராரு.. ஒரு  ‘............. 500 mg’ கொடுத்துடுங்க.

அந்த நர்ஸ் ஒரு மாத்திரையையும், தண்ணீர் குவளையையும் சேர்த்தே கொண்டுவந்து கொடுத்தார்.

‘தேங்க்ஸ் சிஸ்டர்..”

மணி ஐந்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. அனத்தலும் புலம்பலுமாய் கிடந்தார் அரவிந்தன்.

வெளியே சென்ற அந்த ரிசப்ஷனிஸ்ட் உள்ளே வந்தான். முதல் காரியமாய் டி.வியை அலறவிட்டான்.

“இப்ப நீ டி.விய நிறுத்தப் போறியா இல்லியா... இங்க என்ன பொழுது போக்கவா வந்தோம்? நிறுத்து... இல்லாட்டி ம்யூட்ல போடு”

‘யோவ்..அப்பத்திலிருந்து பாத்துக்கிட்டிருக்கேன்.. இன்னாத்துக்கு வம்படிச்சுகிட்டிருக்க? நீதான் அதிசயமா ஆஸ்பத்திருக்கு வந்துட்டியா? இங்க வர்ரவுங்க எல்லாத்துக்கும்தான் வலி.. அதுக்கென்ன செய்யமுடியும்.. பேசாம இரு...”

வெகுண்டெழுந்தார் அரவிந்தன்.
அடுத்த அரைமணி நேரம்.. ரணகள சந்தைக்கடை. “மீண்டும் விசிட்டிங் ஹவர் “ சண்டை.

“நீங்களே எக்ஸ்ரே, நீங்களே பார்மஸி,  நீங்களே க்ளினிக்.. கொள்ளையடிக்கறதுமில்லாம, பேஷண்டை இல்ட்ரீட் வேறு செய்வீங்களா?”

இதற்குள், க்ளினிக்கில் கூட்டம் சேர்ந்துவிட்டது.  “ஆமா சார்... நாமெல்லாம் இவுங்க தயவுல தான் உயிர் பொழைக் கோணுமில்ல... அந்த திமிர் இவுங்களுக்கு... காசு கொடுத்து சீட்டுவாங்கி நம்ம கிட்ட பணம் கறக்குறாங்க.. தொழில்லேயும் ஒரு தெறமை கெடயாது...”

“ஆஸ்பத்திரியில வேல செஞ்சுட்டா.. இவுங்களுக்கு டாக்டரைவிட உசத்தின்னு நினைப்பு:

விதவிதமான கமெண்ட்கள்.

மணி ஆறரையை நெருங்க, டாக்டர் வரும் நேரம் உணர்ந்த ஒரு நர்ஸ், டிவியை ம்யூட்டில் போட்டார்.

டாக்டரின் கார் உள் நுழைந்தது.

முதல் ஆளாக உள் நுழைந்தேன்.

அந்த ரிசப்ஷனிஸ்ட், நர்ஸ் எல்லோரும் உடன் வந்தனர்.

‘டாக்டர் சார்... இந்த பேஷன்ட் உங்ககிட்ட பேசனுமாம். ரொம்ப நேரமா சண்டை போட்டிகிட்டிருக்கார்.”

‘யெஸ்... சொல்லுங்க, என்ன ஃப்ராளம்’ என்றார் டாக்டர்

‘ஒண்ணுமில்லியே... மத்யானத்திலிருந்து கடுமையான வலி.. அதான்..’

‘நோ ஃப்ராளம்.. யூ வில் பி ஆல்ரைட் நௌ... அந்த சேரில் படுங்க..’

அரவிந்தனை விந்தையாகப் பார்த்துவிட்டு விலகினார் ரிசப்ஷனிஸ்ட்.