Friday, April 18, 2014

கு.பா அண்ணாச்சி!! நாம எப்பவுமே இப்படித்தாங்க!

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர். கு. பாலசுப்ரமணியன் நிற்கிறார்.

கு.பா என அன்புடன் அழைக்கப்படும் இவர், ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர். அரசு ஊழியர் சங்கப் பணிகளில், மாநில அளவில், பல்வேறு
பொறுப்புக்களை திறம்பட வகித்தவர். எளிமையானவர். எளிதில் அணுகக் கூடியவர். ஒரு உண்மையன தொழிற்சங்க வாதி. பண்பாகப் பழகக் கூடியவர். இவரை எனக்கு 25 வருடங்களுக்கு மேலாகத் தெரியும்.
இவரை ஆதரித்து இடது சாரி தொழிற்சங்க சிந்தனையாளர்கள் பலர் - அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் ஒருவருடன் நேற்று பேசும் சந்தர்ப்பம் வாய்த்தது. என்ன தோழர், கு.பா தேர்தலில் எப்படியிருக்கிறார், கனிசமான வாக்கு கிடைக்குமல்லவா என வினவினேன்! கு.பா விற்கு வாக்கு கிடைக்கிறது அல்லது கிடைக்காமல் போகிறது, அதுவல்ல கவலை! நமது மக்களின் அரசியல் விழிப்புணர்வு கவலைதரக் கூடியதாகவே இருக்கிறது என்றார்.

கிராம வங்கி ஊழியர்களிடையே வாக்கு கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களுக்கு கு.பா என்றால்  யார் என்றே தெரியவில்லை என்றார்! இவ்வளவிற்கும், கடலூர்பகுதியில் கு.பா கலந்து கொள்ளாத தொழிற் சங்க இயக்கமே இல்லை!

அப்படியா? கம்யூனிஸ்ட் கூட நிற்கின்றனரா என நம்மிடமே கேட்கின்றனர் என்றார்.

இத்தனைக்கும் வங்கித்துறை, AIBEA – BEFI  போன்ற நெடிய வரலாறும், இடது சாரி பாரம்பரியமும் கொண்ட சங்கங்கள் கோலோச்சும் இடம். நிஜமான அரசியலைப் புரிந்து கொண்டிருக்க கூடும் என நம்பிக் கொண்டிருக்கும், இம் மாதிரியான  என்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களே இப்படியென்றால், மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் எனப் யூகித்துக் கொள்ள வேண்டியது தான்.

யோசித்துப் பார்த்தால், நாம் மீடியாக்களால் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை..  இந்த மகானுபாவர்கள் நிழல்களைக் காட்டியே நிஜமென நம்பவைத்துக் கொண்டிருக்கின்றனர். திரைக்கு முன்னால் நடப்பதற்கும்-பின்னால் நடப்பதற்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது!

கட்சி களேபரங்களைத் தாண்டி ‘அரசியல் என்றால் என்ன?, அரசியலில் நிஜமான அதிகாரம் யாரிடம் இருக்கிறது? இந்திய அரசியல் அதிகாரம் யாரால் தீர்மாணிக்கப் படுகிறது? திரைக்குப் பின்னால் நடக்கும் சூத்திரங்கள், அதன் மூளையாக விளங்கும்  சூத்திரதாரிகள் யார்-யார் என்பது போன்ற தகவல்கள் உலகெங்கும் திறமையாக மறைக்கப் படுகின்றன! 

இந்த நிமிடத்திலேயே கூட பிரதமர் பதவி யாருக்கு போகவேன்டும், பாராளுமன்றத்தில் அவர்களால் தீர்மாணிக்கப்பட்டிருக்கும் பிரதமர் மெஜாரிட்டி பெருவதற்கு என்ன செய்ய வேண்டும்” *போன்றவை யாவும் தீர்மாணிக்கப்பட்டிருக்கும்.

நாம் மெல்ல மெல்ல சுரணையற்றுப் போய்க்கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகம் வலுத்துக் கொண்டேயிருக்கிறது!

‘அரசியல்’ என்பது நமக்குப் போதிக்கப்படவே இல்லை. அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் நமக்கில்லை. பல்வேறு எழுத்துக்களில் உலவும் கழகங்கள், காங்கிரஸ், பி.ஜே.பி, நடிக, நடிகையர் கூட்டம் நடத்தும் கோமாளிக் கூத்துக்கள் போன்றவகைளைத்தான் அரசியல் என நம்பிக் கொண்டிருக்கிறோம். நம்பவைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் உண்ணும் ஒவ்வொரு வேளைச் சோற்றுக்குப் பின்னாலும்,

சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்குப் பின்னாலும்,

செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவுக்குப் பின்னாலும்,

நமது மகன்களின்/மகள்களின் படிப்பு &– வேலைகளுக்குப் பின்னாலும்,

நமது ஆரோக்கியம் மற்றும் மருத்துவ மணைகளுக்குப் பின்னாலும்,

நாம் விடாமல் விழுங்கிக் கொண்டே இருக்கும் ஒவ்வொரு மாத்திரைக்குப் பின்னாலும்,

எவ்வளவு சாப்பிட்டும் குணமாகாத வியாதிகளுக்குப் பின்னாலும்,

நாம் வாங்கிக் குவிக்கும் ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும்,

கார், மொபைல், டி.வி, மற்றும் எல்லாவித FMCG க்குப் பின்னாலும்
‘அரசியல்’ மறைந்திருக்கிறது என்பது நமக்கு எப்போது புரியும்?

நாம் கண்ணால் கண்டுகொண்டிருக்கும் ‘அரசியல் தலைவர்களை’ ஆட்டுவிக்கும் மந்திரக்கயிறு யாருடைய பிடியில் இருக்கிறது என்பதை எப்பொழுது தெரிந்து கொள்ளப் போகிறோம்?

நாம் கெட்டது  போதாதென்று, நமது வாரிசுகளையும் வெகு சுத்தமாக ‘துடைத்துப் போட்டுவிட்டிருகிறோம்’!

‘படி-படி-படி-படித்து கொண்டேயிரு’ என்ற வேப்பிலை மந்திரத்தை, நமது வாரிசுகள் எட்டாவது படிக்கும் பொழுதே  துவக்கிவிடுகிறோம்; 

பத்தாவதை நெருங்கியதும், வேப்பிலைக் குச்சி, சவுக்காக மாறும். பிளஸ் டூ வில் ‘நல்ல’ மார்க்  எடுத்தாக வேண்டும். பி.ஈ சேர்ந்தபின் ‘கேம்பஸ்’ வந்தே ஆகவேண்டும். ஏதோ ஒரு சனியன் பிடித்த எம்.என்.ஸி யில் 20,000/- க்கு வேலைக்கு சேர வேண்டும். கார் வாங்க வேண்டும்! ஃப்ளாட் வாங்கி, கல்யாணம் முடித்து ‘செட்டிலாக வேண்டும்’ நமது   நோக்கமே அவ்வளவுதான்.

இப்படி வளர்க்கப்பட்ட இன்றய இளைஞர்களின் ‘சமூக பிரக்ஞை’ எப்படி இருக்கும்? கண்டதே காட்சி-கொண்டதே கோலம் என்று தான் இருப்பார்கள். விதையொன்று போட்டுவிட்டு – சுரையொன்றை எதிர்பார்த்தால் எப்படி?

‘பகத்சிங்’ போன்ற எண்ணற்ற தியாகிகளை இவர்களால் எவ்விதம் புரிந்து கொள்ள முடியும்?  ‘நாட்டு விடுதலை’ என்ற ஒன்றிற்காக மட்டும் லட்சக்கணக்கில் நிஜமாகவே செத்தார்கள் என்பதை உணர்வுபூர்வமாக தெரிந்து / புரிந்து  வைத்திருக்க முடியுமா?

ஒருவேளை, எத்தனை போராட்டங்கள் எங்கெங்கு நடந்தன, எப்பொழுது விடுதலைபெற்றோம், ‘எவ்வளவு பேர் விடுதலைப் போராட்டத்தில் செத்தார்கள் என்பவற்றை ‘ஸ்டாட்டிஸ்க்காக’ தெரிந்து வைத்திருக்கக் கூடும் – ‘குவிஸ் காம்படிஷனில்’ கலந்து கொள்ள, அதிலும் முதலிடத்தில் வருவதற்காக!

இந்த இலட்சணத்தில் நாம் இளைஞர்களை வளர்த்து வைத்துவிட்டு, நாமும் டி.வி மற்றும் ‘நெட்டில்’ மூழ்கிக் கிடக்கிறோம்.

மத்தியதர வர்க்கம், சமுதாயத்தில் இப்படி இருக்கிறது என்றால், மற்றொரு உழைக்கும் பிரிவினரை, ‘சாராயத்திலேயே’ திளைக்க வைத்துவிட்டிருக்கின்றனர். அன்றைய ‘குவார்டருக்கு’ சம்பாதித்தால் போதும் என்ற மன நிலையில்தான் பலர் இருக்கின்றனர்.

நமக்கெலாம்,

மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு  நல்ல சோறு இல்லையே – கவலையில்லை! 

இவ்வளவு இளைஞர் - இளஞிகள் வேலையின்றி தவிக்கின்றனரே – கவலையில்லை!

காக்காயைச் சுடுவது போல மீனவர்களை சுட்டுக் கொல்கின்றனரே – கவலையில்லை!

ஏழ்மையைப் பற்றி கவலையில்லை! ஏழையைப் பற்றி கவலையில்லை!

வடகிழக்கு மானிலங்கள் யாவும்  நமது ‘அரசாங்கங்களின்’ புண்ணியத்தில் தேங்கி நிற்கின்றனவே – கவலையில்லை!


விலைவாசி ஏறிக் கொண்டே போகிறதே – கவலையில்லை!

ஏன் விலைவாசி ஏறுகிறது? தெரியாது.

பன்னாட்டு கம்பெனிகள் ஏன் இந்தியாவை சுற்றி வருகின்றன – தெரியாது!

பங்கு மார்க்கட்டில் ஏன் புள்ளிகள் திடீரென ஏறுகின்றன – இறங்குகின்றன- தெரியாது!

லாபம் யாவும் எங்கு செல்கின்றன? தெரியாது!

உலக பொருளாதாரம், ஐ.நா, உலக வங்கி போன்ற சக்தி வாய்ந்த அமைப்புகள் யாவும் ஒருசில கம்பெனிகளின் கைப்பிடியில் இருக்கின்றன என்பதாவது தெரியுமா? தெரியாது!

உலகில் நடக்கும் போர்கள் யாவும், ஒரு சிலரால், திட்டமிட்டே நடத்தப் படுகின்றன என்பது தெரியுமா? தெரியாது!

சாதாரண மக்கள் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கப்படுகிறோம்? தெரியாது!

‘அரசியல் டிராமாக்கள்’ யாரால் வடிவமைக்கப்பட்டு – நிறைவேறப் படுகிறது? தெரியாது!


மீடியாக்கள்,  மக்கள் யாவரும்   ‘அரசியல் இருட்டை’ விட்டு வெளியே வராதபடி பார்த்துக் கொள்வதில் கெட்டிக்காரர்கள். கில்லாடிகள். எப்படியெனில் அனைத்து மாஸ் மீடியாக்களும் எம்.என்.சி க்களின் பிடியில். இவர்களுக்கு, மக்களை திசைதிருப்புவதில், மயங்கவைப்பதில்  உலகளாவிய அனுபவம் இருக்கிறது!

அப்படியே நாம் எப்பொழுதாவது  ‘வலி’ பொறுக்காமல்’ அலறினால் ஒரு ‘வடிகாலாக’ கேஜ்ரிவால்களை உருவாக்குவார்கள்! பின் அவர்களே ஏதாவது ஒன்றைக் கிளப்பிவிட்டு அவர்கள் உருவாக்கிய ‘கேஜ்ரிவால்களை’ அமுக்குவார்கள்.

அப்படியும் ஒரு சிலர், அரசியல் சூத்திரதாரிகளின் தந்திரங்களைப் புரிந்து கொண்டு, போராட தெருவில் இறங்கினால்,  மக்களை திசை திருப்ப, அரசியல் அதிகார மையங்கள் சில ஃபார்முலாக்களை கைவசம் தயாராக வைத்திருக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த ஃபார்முலா தோற்றதேயில்லை!

அது என்ன ஃபார்முலா என்கிறீர்களா? அதுதான் ‘மத’, ஜாதி’, இன கலவரங்கள்.

எளிதில், சட்டென உணர்ச்சி வயப்படும் நமது ‘கலாச்சாரத்தை’ மிகச் சரியாகவே கணித்து வைத்திருக்கின்றனர், இந்த சூத்திரதாரிகள்.

இந்த தேர்தல் ‘டிராமாவும்’ அடுத்த மாதம் முடியும்.

நாட்டில் செல்வம் பெருகும் தான். பெருகும்  நாட்டின் செல்வமனைத்தும் ஒரு சிலர் கையில் குவிந்து கொண்டேயிருக்கும். ஏழைகள் மேலும் ஏழைகளாகிக் கொண்டே இருப்பார்கள்.

நாமும் டீக்கடை பெஞ்சுகளில், ஆபீஸ் வராண்டாக்களில் ‘அரசியல்’ பேசி பொழுதைக் கழித்துவிட்டு, வீட்டிற்குப்போய் டி.வி யில் மூழ்கி, அஜித்தின் அடுத்தபடம் என்ன என்பதிலோ, ‘கோச்சடையான்’ என்னவானான் என்பதிலோ மூழ்கிப் போய்விடுவோம்.


இன்று வசதியாக இருப்பதாக பாவித்துக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினரே – உணர்ந்து கொள்ளுங்கள் -  பொருளாதார நெருக்கடியிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது! ஏனெனில் நாம் தேர்ந்தெடுத்துள்ள அரசியல் பாதையின் தன்மை அத்தகையது!

இவற்றை யார் உணராவிட்டாலும் பரவாயில்லை!

புரிந்து கொண்டிருக்கும் இடது சாரிகள் இனியாவது தங்களது யுக்தியை சீரமைத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது! ஆனால், இந்தியாவில் இடது சாரிகள் பிளவுண்டது போல வேறு எந்த இயக்கமாவாது பிளவுபட்டிருக்கிறதா என்ன?

அப்பப்பா...!   எத்தனை குழுக்கள்? எத்தனை கட்சிகள்? ஒரே கட்சியில் (இடது சாரிகளைத்தான் சொல்கிறேன்) எத்தனை கோஷ்டிகள்?

குறைந்த பட்சம், சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்) இணைந்து ஒரே கட்சியானால் என்ன குடி முழுகிப் போய்விடும்? அரசியலில் 1+1 என்பது எப்பொழுதும் இரண்டு அல்ல! விடை 10 எனவும் வரும்! ‘0’ எனவும் வரும்!

கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவே தெரியாத ‘மக்கள் ஜன நாயகம் / தேசிய ஜன நாயகம்’ நிகழ்ச்சி நிரலை ஒத்திவைத்து, ஒரே கட்சியாக மாறினால், விடை தானாகத் தெரிய ஆரம்பிக்கும்!

அப்ப நமக்கு விடிவு காலமே இல்லையா என்கிறீகளா?

இல்லை! அது தான் உண்மை! அரசியல்-சமுதாய மாற்றம் வேண்டும் என்ற உணர்வு-வேட்கை-வெறி மக்களுக்கு வந்தால்தான் விடிவு!

அதுவரை? 

நமது துயரங்களை / போராட்டங்களை மறக்க வைக்கும் / மழுங்க வைக்கும் ‘ஜாதி’, ‘மதம்’, ‘மீடியா (சினிமாவும் -கூடத்தான்)’, ‘செக்ஸ்’ போன்ற ‘அபின்களுக்கு’ த்தான் நாட்டில் பஞ்சமேயில்லையே! இவற்றில் நாம், குட்டையில் ஊறும் ஒரு ஜந்து போல  மூழ்கிக் கிடக்கலாம்!

நம்மில் கணிசமானோர் மேற்சொன்ன வகையில் (எல்லோரும் அல்ல) இருக்கும்வரை திருடர்களுக்கு கவலையில்லை!  ‘கு.பா’ கிடக்கிறார்! விட்டுத்தள்ளுங்கள்! அவர் ஜெயித்தால் என்ன? தோற்றால்தான் என்ன? யார் எப்படிப் போனால் நமக்கென்ன? 


Sunday, April 6, 2014

குக்கர்

அது ஒரு, ஒரு இரண்டு லிட்டர் குக்கர். சமையல் அறையின் மேல் தட்டில் இருந்தது.  அது, ஒரு மாத காலமாக கடுமையான கோபத்தில் இருக்கிறது. 

இருக்காதா பின்னே? ஒவ்வொருமுறை குக்கரை எடுக்கும் பொழுதும்,
ஷைலஜா, வருக்-வருக் கென சுரண்டுகிறாள். டொம்..டொம். என வைக்கிறாள். நாசூக்காக கையாள வேண்டாம்?  தண்ணீர் குறைவாக வைத்து சாதத்தைத்  தீய விடுகிறாள். இல்லாவிடில் அதிகமாக தண்ணீர் வைத்து, வெயிட் வழியே, கஞ்சியை வழிய விடுகிறாள். குக்கருக்கு வலிக்கிறது போலும்! அதைவிட ஷலஜா பண்ணும் சேட்டை, குக்கருக்கு, தலவலியை உண்டு பண்ணுகிறது.

அன்றும் அதேபோல குக்கரை எடுத்து வரும்பொழுது ‘பொதேர்’ என கீழே போட்டாள்.

குக்கருக்கு பொறுக்கவில்லை?

‘ஏய் பெண்ணே! உனக்கு நிதானமாக வேலை செய்யத் தெரியாது?

‘அட, குக்கர்....  நீ பேசுவியா?’

‘பேசுவேன்.’

‘ஆச்சர்யமாய் இருக்கிறது!’

‘என் கேள்விக்கெங்கே பதில்...’

‘என்ன கேள்வி..?’

‘என்னை ஏன் நிதானமாக கையாளாமல், போட்டு உடைக்கிறாய்...?’

‘அப்படியா..?  எனக்கு சமைக்கத் தெரியாது! இப்பொழுதுதான் கற்றுக் கொண்டிருக்கிறேன்..’

‘தெரியாதா..? இது நாள்வரை வேறு ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்தாளே..? அது யார்..?’

‘அது என் அம்மா?’

‘ஓ... அவர் எங்கே?’

‘அவர் இனி வரமாட்டார்’

‘ஏன்..?’

‘அவர் இறந்து போய்விட்டார்’.

‘இறந்து போதல் என்றால் என்ன?’

‘அப்படி ஒரு ஆள் இல்லாமலேயே போய்விடுவது..’

‘இனிமேல் அவர்களை பார்க்க முடியாதா?’

‘ஆம்.. முடியவே முடியாது.! ஆனால், அப்பாவும், என் தம்பியும் சாப்பிட்டாக வேண்டுமல்லவா? உயிருடன் இருக்கும் வரை எதை நிறுத்த முடிகிறது? அதனால்தான் நானே சமைக்கிறேன்!ஆனால் எனக்கு சமைக்கவே பிடிக்கவில்லை!’ எரிச்சலாக இருக்கிறது.'

'சமைக்கும்பொழுது ஆத்திரப்படாதே! அது சரி...
இறந்து போதல், உன் அம்மாவுக்கு மட்டும் தான் வருமா  இல்லை எல்லோருக்குமா?’

‘எல்லோரும் ஒரு நாள் சாக வேண்டியது தான். நான், என் அப்பா, என் தம்பி... எல்லோருமே!’

“ஓ....நான் கூட சாவேனா?’

‘குக்கரா? அது எனக்குத் தெரியாது...ஆனால் நீயும் ஒரு நாள் கெட்டுப் போவாய்.’

‘அப்பொழுது, என்னை, என்ன செய்வீர்கள்?’

‘உன்னை பழைய பாத்திரக் கடையில், போட்டுவிடுவோம்.. ’

‘அப்புறம்?’

‘அவர்கள், உன்னை நசுக்கி சப்பையாக்குவார்கள். பின்பு உன்னை உருக்கி, 
வேறு ஒரு பொருளாக மாற்றிவிடுவார்கள்..’

‘வேறு ஒரு பொருள் என்றால்?’

‘கரண்டி, குண்டான் இது போல.. சில சமயம் ஆபீஸ் பொருளாகக் கூட மாறக்கூடும்..’

‘அப்படி மாறிய;பின், நான் பழைய குக்கர் என்பது எனக்குத் தெரியுமா?’

‘தெரியாது.. அப்பொழுது என்ன பொருளோ அதுவாகத்தான் நினைத்துக் கொள்வாய்.’

‘உன் அம்மாவும் இப்பொ வேற ஒரு ஆளா மாறியிருப்பாங்களா?’

‘தெரியாது.. ‘

‘தெரியாதா?  நான் என்ன அவேன் என்று தெளிவாகச் சொல்கிறாயே? ஏன் உன் அம்மாவைப் பற்றி சொல்ல முடியாது..?’

‘நானே செத்துப் பார்த்தால்தான் எனக்குத் தெரியும்.. ஆனா செத்துப் போனபின், நான் ஷலஜா என்பவள் இல்லை என்பது மட்டும் தெரியும்.. ஏனெனில், அது இந்த உடலின் பெயர். உனக்கு குக்கர் என்று  பெயர் இருப்பது போல..’

‘அப்ப நான் குக்கர் இல்லையா?’

‘இல்லை!’

‘பின் நான் யார்?’

‘அலுமினியம் தான்.  இன்னும் உள்ளே..உள்ளே.. போய்ப் பார்த்தால், நீ வெறும் அணுத் துகள்..’

‘அப்ப உன் அம்மா என்பது உன் அம்மாவின் உடலோட பெயரா?’

‘நீ அதிகம் பேசுகிறாய்..’

‘பரவாயில்லை.. தெரிஞ்சுக்கறேன், சொல்லு’

‘அப்படித்தான் தெரிகிறது.’

‘நான் குக்கர் அல்ல, அலுமினியம் அல்லது வேறு ஏதோ உலோகம் என்பது போல உன் அம்மா உண்மையில் யார்..?’

‘தெரியாது... ஆன்மா என்று சொல்கிறார்கள்.’

‘நீ ஆன்மா என்பது உனக்குத் தெரியாதா? ஆச்சரியமாய் இருக்கிறது!’

‘ஷலஜாவாக இருக்கும் வரை, ஆன்மாவாக இருக்க முடியாது?’

‘அது எப்படி? நான் அலுமினியம்தான் , குக்கர் இல்லை என்பது எனக்கு தெரிகிறதே?’

‘நீ நசுக்கப்படும் வரை, நீ குக்கர் தானே?’

‘ஆமாம்..’

‘அது போலத்தான். ஷலஜாவாக இருக்கும் வரை ஷலஜாதான்.’

‘குழப்புகிறாய்.. நீ அன்மா என்பது எப்பொழு உனக்குப் புரியும்?’

‘உனக்கு நான் சொன்ன மாதிரி, எனக்கு யாராவது, நீ ஷலஜா அல்ல என்று  சொல்ல வேண்டும். ஞானம் அடைய வைக்க வேண்டும்..’

‘யார் சொல்ல வேண்டும்?’

‘தெரியாது! ஆனால் அவரை ‘குரு’ என்று அழைப்பார்கள்.

‘உனக்கு இதுவரை யாரும் குரு கிடையாதா?’

‘இல்லை என்றுதான் நினைக்கிறேன். உண்மையாக, நேர்மையாக நான் குருவை விரும்பி இருந்தால், இன்னேரம் குருவும் என்னைத் தேடி வந்திருப்பார், அல்லது நான் குருவைக் கண்டிபிடித்திருப்பேன்..’

‘வேண்டாம்.. நீ பேசுவது ஒன்றும் விளங்கவில்லை..’

‘எனக்கெ சரியாகத் தெரியவில்லை..!’

‘அது இருக்கட்டும்.. நீதான் எல்லோருக்கும் சமைக்கிறாயா?’

‘ஆமாம் சமைத்துவிட்டு, காலேஜ் போகனும். அப்பாவுக்கும், தம்பிக்கும் சேர்த்து செய்யணும். எனக்கு, சமைப்பதற்கு வரவேயில்லை. தெரியவில்லை!  நன்றாகவே இல்லை. போரகிறது. ஆனாலும் அப்பாவும், தம்பியும் ஒன்றும் சொல்லாமல் “நல்லா இருக்கேன்னு’ சொல்லி சாப்பிடறாங்க..பாவம்! '

‘உன்னைப் பார்க்க எனக்கு கஷ்டமாக இருக்கிறது. உன்மேல் எனக்கு அன்பாகவும், பாசமாகவும் இருக்கிறது..!’

‘குக்கருக்கு கூட அன்பு, பாசம் உண்டா?’

ம்ம்ம்ம்ம்’

‘ஷைலு கண்ணு... என்னடா செல்லம், இன்னிக்கு சாப்பாடு நல்ல டேஸ்டியா இருக்கு. வெரிகுட்ரா ..  என்றார் அப்பா

‘தேங்க்ஸ் அக்கா.. இன்னிக்கு அம்மா சமைச்ச மாதிரியே இருக்கு’ என்றான் தம்பி.

குக்கர் மௌனமாகச் சிரித்துக் கொண்டது.

  
(இது குறுங்கதை மாதிரி.. பொருள் சற்றே மறைந்திருக்கும்.)

Wednesday, April 2, 2014

பெண்குழந்தைள் பேரழகு!

மகன் என்னும் உறவு மகனுக்கு திருமணம் ஆகும் வரை!
மகள் என்னும் உறவு வாழ்வின் இறுதிவரை!
                               -நெட்டில் படித்த்து!

புது தில்லியில் என்னுடைய ஃபேஸ்புக்  நண்பி ஒருவர்.
எடித்த எடுப்பில் ‘அப்பா’ என வாஞ்சையோடு அழைத்தவர். எனது பிளாக்கில் (orbekv.blogspot.in)  நான் எழுதும் சில புலம்பல்களைப் படித்துவிட்டு, ஆறுதல் கூறியவர். நல்ல கவிஞர். தமிழில் ஆர்வம் மிகுந்தவர். புத்திசாலி. நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து பகிர்ந்து கொள்பவர்.

தமிழில் ஆர்வம்,
மனித நேயம்,
பெரியவர்களின் மதித்தல்,
மரபுகளைக் காத்தல்,
தமிழ்க் கலாச்சாரத்தை வளர்த்தல்,
வார்த்தைகளில் கண்ணியம்

-என பல பரிமாணங்களை உள்ளடக்கியவர்.

இவ்வளவுக்கும் அவரை  நேரில் சந்தித்ததில்லை. எனது மகளைவிடச் சிறியவர். மனதால் பெண்குழந்தைகள் பேரழகுதான்.

அவர் எனது மனைவியின் மறைவு குறித்து, எனது நோக்கில் ஒரு கவிதை எழுதி அனுப்பியிருந்தார். அவரது அனுமதியின்றி பெயரைக் குறிப்பிடுவதும், முகநூல் விலாசத்தைச் சொல்வதும் முறையாகாது என்பதால், அவரது கவிதையினை மட்டும் வெளியிடுகின்றேன். அந்த தமிழ்ப்புதல்வி நீண்ட ஆயுளோடும், அரோக்கியத்தோடும், நலமாக வாழ்ந்திட பிரார்த்திக்கிறேன், ஆசீர்வதிக்கிறேன்.

கவிதை வரிகள் உன்னதமாயிருக்கின்றன. தமிழில் அவருக்கு இருக்கும் புலமையை கோடிட்டிக் காட்டுமின்றன. முதல் கவிதை கிளாசிக். 
உ-ம்: முதல் கவிதையில் மனகுதிரை மேய்ச்சல், பந்தயக் குதிரை, புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் குரல்  போன்றவை.

இரண்டாவது உணர்ச்சிக் குவியல். 
திலும் இரண்டாவது கவிதையின் ஐந்து முதல் எட்டாவது வரிவரை என் மனதை அப்படியே பிரதிபலிக்கின்றன. அற்புதம்!.





இனி அவரது கவிதை!
---------------------------------------

1.       காற்றோடு பேசிய உன் நினைவுகள்.
கொஞ்சம் கொஞ்சமாய் பகல் தனது
வலிமையை இழந்து கொண்டிருக்க,
நெடிய இரவு நீர் கப்பிய மேகங்களின்
ஊடாக  மரங்களில் இறங்கிக் கொண்டிருந்தது தொலைவில்.

மன குதிரைகள் மெல்ல நகர்ந்தபடி
மேய்ச்சலில் இருந்தன.
சாளரங்களின் வழியாக சலனமின்றி
என்னையே நோட்டமிடும்போது இடையில்
குறுக்கும் நெடுக்குமாய் உன் நினைவுகள்,
பந்தய குதிரைபோல் பாய்ந்து ஓடின .

என் மனமானது அவசரம் இன்றி
ஒரு புதிய பாணியில் இயங்கிக் கொண்டிருந்தது,
கண்களில் கனவு, விழி திடலில் நீ
..... அரேபியக் குதிரையின் சுக்கானைப் பிடித்தபடி

தொடுவானத்தில் நின்று ஒரு முறை
தகிப்பாய் இரவின் சுவடுகளை நோட்டமிட்ட
கதிரவன் மெல்ல மெல்ல மறையத் துவங்கியிருந்தான்.
உன்னில் என் நினைவுகளை போல .........
விழி நீர் வழிந்திரங்க,
உப்பு நீர் உள்ளிரங்க,
துடைக்க உன் விரலன்றி காய்ந்தது கண்ணீர்.
 சலனமற்ற என்னில் விவரிக்க முடியாத நேசமும்,
ஏமாற்றமும் தொக்கிக் கிடந்தது.

மனம் மெளனித்து இருக்க,
உதடுகள் உன் பெயரை சொல்லி புலம்பி அழுகின்றன
புறக்கணிக்கப்பட்ட மனிதர்களின் குரல்
இப்படித்தான் காற்றில் எங்காவது கேட்பாரற்றுச் சுற்றி அலைகிறது.

உன் நினைவுகள் திரும்பிய பக்கமெல்லாம்
காற்றைப் போல நிரம்பிக் கிடக்கிறது,
துயரமும், வலியும் நிரம்பிய என்னை
ஒரு புரியாத புதிர் வட்டத்துக்குள் தள்ளியது ஏன் ?
நன் சுமந்த உன் நினைவுகள்
 கேட்பாரற்றுக் கரைந்து கொண்டிருக்க
இயலாமை நிரம்பிய சொற்களை
காற்றோடு பேசியபடி என் மனக்குதிரை கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுக்கத் துவங்கியது.

கிணற்றுக்குள் நீண்டு தொங்கிக் கிடக்கிற
வாளிக் கயிற்றை எடுப்பது போல்
உன்னைச் சுற்றித் திரிகிற மனம் என்கிற
எனது நீட்சியை லாவகமாக எடுத்துச்
சுற்றிவிட்டு உறங்க துவங்கினேன்.
என் உறங்காத விழிகளோடு.

2.தாளாத துயரம்

கூப்பிட்ட குரலுக்கு என் முன்னே நின்றவளே!
கூப்பாடு போட்டு குழந்தை போல் பிதற்றுகிறேன்!
தள்ளாடி தரைமீது விழுந்து புரளுகிரேன்!
எங்கு போனாயோ,எப்போ நீ வருவாயோ
என் கண்ணீரும் வேதனையும்
என் பலவீனதின் சுவடு அல்ல
உன் பேரிழப்பு தந்த பெரும் பரிசு
நான் சுமக்க முடியாமற் சுமந்து நிற்கும் வேதனை பரிசு

என் இளமைக்கும் முதுமைக்கும்
இடையில் வந்த ஓர் அற்புதமான பினைப்பு நீ
என் வாழ்வின் ஒவ்வொரு பக்கத்திற்கும் அர்த்தம்
தேடித்தந்த அகராதி நீ!

புழக்கடை முற்றம் புறக்கணித்து கிடக்க
கோலமிட குனிவாய்யென தெருவாசல் காத்திருக்கு !

கிழிக்காத தேதியும் கிழியாத சேலையும்
ஏற்றாத தீபமும்,தூற்றாத அறைகளும்
உனக்காக காத்திருந்து

என்னில் உன் நினைவை தூர்வாரி
சுறக்கச் செய்கிறது.

கண்களில் வழியும் நீரை துடைத்தெறிந்தே
கைகள் சோர்வில் துவண்டன.
பால்கணக்கு கோடுகளை

அடுப்படிச் சுவர் தாங்கி நிற்க............
உன் சிருவாட்டு சில்லரையோ
என் நெஞ்சத்தை பொல் சிதறுதடி.
உன் தோலிருந்த கைபையில்
மடித்திருந்த குங்குமமும்
 குட்டி நிலா வெட்டி போட்ட
நகவெட்டி சாவிக்கொத்தும்
உனக்காக காத்திருந்து.............. உன்னறையில் ஏங்குதடி
என்னுடன் நீ இருந்த
பொழுதுகளெல்லாம் பூமகள்
உனை போன்றே பூத்துகுலுங்கின
இன்றோ வண்ணம் தொலைத்த பாலை
நிலத்து  பாதைதனில் என்னை விடுத்து
எங்கோ மறைந்தாய்

நீ பேசிய பொழுதெல்லாம் உன் வார்த்தையை
மறுத்த நானே............... என் தவறு திருத்தி
இப்பொழுதெல்லாம் நிறைய பேசுகிறேன்
உன்னுடன்,கேட்க நீ இல்லை.....மீண்டும் பேசுகிறேன்

விதியத்து போணவன் நான்
வீதியில் நடந்து வர உதிர்த்தன
சருகுகளை தெருவோர மரங்களெல்லாம்
எதிர் காற்றில் தல்லாடி விழுந்தவன் என் முன்னால் நீ இருந்தாய்.............வெரும் பிம்பமாய்
உன் மரணத்திற்கு முன்னுரை எழுத
உனக்குமுதுமையும், நோயும் வந்தனவோ வரிசை கட்டி?

என் வாழ்வின் இறுதிக்கட்டம் சோகத்தில் மூழ்கடிக்க.
உயிரே வருவேன் காத்திரு,
காற்றோடு கலந்த உன்னை என் மூச்சுக்காற்று

தொலைத்தேனும் உன்னில் எனை கரைக்க வருவேன் காத்திரு..........................