Sunday, September 6, 2020

விடாக் கண்டன்! கொடாக் கொரோணா!

கொரோணா வைரஸ்,  சீனாவால், சீனாவில் ஊருவாக்கப்பட்டதால் வெகு நாட்களுக்கு நாட்களுக்கு வராது; சீக்கிரமே ரிப்பேர் ஆகிவிடும் என்ற கனவில் மண் விழுந்துவிட்டது.

உருவாக்கிய புண்ணியவான் ஜம்மென கால்மேல் கால் போட்டுக்கொண்டு,  வ்ளாடிவாஸ்டாக் என்னுடையது; லடாக், ஜப்பான், பசிஃபிக் எல்லாம் என்னிது என அழிச்சாட்டியம் செய்து கொண்டு, கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கன்றுக்குட்டி போல, துள்ளிவிளையாடுகிறான். உலகமே, குறிப்பாக இந்தியா விழிபிதுங்குகிறது. சீன 'ஹிரண்யனை' வதம் செய்ய ஏதாவது ஒரு கடவுள் அருள் புரியட்டும்.

விஞ்ஞாணிகள் எப்போதாவது வாக்ஸின் கண்டுபிடிக்கட்டும்; இல்லை... கண்டுபிடிக்காமலே போகட்டும்;  வாழும் வரை லாபமே; அழப்படாது; எப்படியாயினும் எல்லோருக்கும் முடிவு உறுதி; அது இன்றா நாளையா என்பதுதான் வினா- என்ற கீதாச்சார்யன் மனோபாவத்திற்கு வந்துவிட்டதால் பயம் அற்றுவிட்டது.

இந்த 'பக்குவத்தால்' கோவிட் குறித்த பல்வேறு நபர்களின் எதிர்விணைகளை ரசிக்க முடிகிறது.

 அரசியல்வாதிகள் பாடு நிம்மதி; கோவிட் 19 அல்லது கோவிட்20 ,  எதுவாக இருந்தாலும் , 'ஆக..  பழனிச்சாமி ஊடனே பதவி விலகணும்'  என்று ஒரேமாதிரி ஒப்புவிப்பார் ஒருவர். '

மதச்சார்பு பிஜேபி ஒழிக ' என்பார் பப்பு'. 

கம்மிகளுக்கு பிரச்சினை இல்லை; யாராவது வாய்க்கு வந்த நபரைக் குறித்து 'முர்தாபாத்'  கோஷமிட்டுவிட்டு கலையலாம்.  

பிஜேபிக்கு கைவசம் தயாராக இருக்கு, 'தேச விரோதி' பட்டம். அதை சகட்டுமேனிக்கு வினியோகம் செய்வர். 

எனக்குத் தெரிந்த பலர் பதட்டத்தின் உச்சியில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் 'பழனிச்சாமி வேஸ்ட்' என்றார்; சரிசார் என்றேன். அப்புறம் 'மோடி , ஒழிக'  என்றார்; சரி சார்.. ஒழிச்சுடலாம். என்ன நினைத்தாரோ 'இந்த விஞ்ஞாணிகள் எல்லாம் தெண்டம்' என சான்றுரைப்பார்.

அப்புறம் இந்த முருகன் எல்லாம் சக்தியில்லாதவர்; இத்தனை நாட்களுக்குள் மருந்து கண்டு பிடிக்கலியே என்றார்.

இவரது ஒவ்வொரு ஐயத்திற்கும் பதில் சொல்லி மாளலை. எனவே, எனது நிம்மதி கருதி, அவர் என்ன சொன்னாலும் 'சரி..சரி ' எனபதோடு சரி.

'இன்னிக்கு ராத்திரிக்குள் வாக்ஸின் ரெடியாயிடுமா... ' என நிஜமாகவே பீதியடைந்து கேட்பார். 'தெர்ல சார்' என மையமாகச் சொல்லி வைப்பேன்.

'அந்த பழனி முருகனின் நவபாஷாணத்தில் கொஞ்சம் சுரண்டி சாப்பிட்டால் சரியாகாது?' 

அதுக்கென்ன அவரது ஒரு விரலை ஒடித்து எடுத்து வந்திடலாம்.

'அப்புறம், அந்த நடராஜர், சிவபெருமான், அம்மன்கள் எல்லாம் என்னதான் பன்றாங்க?'

'அவுங்கெல்லாம் த.நா நியூஸோ அல்லது சீரியலோ பாத்துக்கிட்டிருப்பாங்க போல.. போய் எழுப்பிகிட்டு வரேன்..'

'சார்.. நீங்க தமாஷ் பண்றீங்க; நான் எவ்வளவு சீரியஸா பேசிகிட்டிருக்கேன்..'

'சேச்சே..அப்படியெல்லாம் இல்லை; வாக்ஸின் கண்டுபிடிக்காத சாமி இருந்தால் என்ன .. இல்லாவிட்டால் என்ன?'

'அப்பறம் அந்த வேளாங்கன்னி, நாகூர் சாமி கூட , மருந்தைக் கணாடுபிடிக்கலை பாருங்க..'

ஐயய்யோ.. இப்ப இவரிடமிருந்து தப்பிக்க என்னதான் செய்யறது..?

'எல்லா சாமியும் தெண்டம் எனத் தீர்மாணம் போட்டுடலாம் சார்.. இப்ப குட் நைட் சார்'

வேறோருவர்  உள்ளார்.. எல்லாருமே இறந்துடனும். புதுசா ஒரு நல்ல உலகம் வரட்டும் என்பார். அவருக்கும் 'சரி சார் ' தான் பதில்.

மற்றும் ஒருவர் இருக்கிறார். தன்னைத்தவிர மற்றெல்லோரும் மூடர்கள்; ஊழல்பேர்வழிகள்' என்பார். ஆனால் மறைவாக வேண்டிய எச்சரிக்கைகளைச் செய்து கொள்வார்.

இன்னொருவர், 'கொரோணா என்ற வியாதியே இல்லை; மோடி சதி' எனபார். 'ஆமாம்..ஆமாம் உலகமே பொய் சொல்கிறது' என பதிலுரைக்க வேண்டியதுதான்.

ஒர் உறவு, தொடர்ந்து , 'நீங்க ஏன் வயசான காலத்தில் கஷ்டப்படுறீங்க.. எங்க கூட வந்துடுங்க'  என சொல்லிக் கொண்டே இருந்தார். பொறுத்துப் பொறுத்து சலித்துப்போய், நாளை மறுநாள் அங்கு வந்துவிடட்டுமா?"  என்றேன். திடுக்கிட்ட அவர், 'வீட்டில்  இப்ப அரளிப்பூ நன்றாக பூக்கிறதா?' என டிராக் மாறினார். இனி அவர் 'என் வீட்டிற்கு வரலாமே..' என மறந்தும் சொல்ல மாட்டார்.

பலருக்கும் கோவிட்19 பிரச்சினையில் லோக்கல் கட்சி அரசியலைச் சம்பந்தப் படுத்தாமல் சிந்நிக்கவே இயலவில்லை. 'இது இயற்கைக்கும் மனித இனத்திற்குமிடையேயான போராட்டம்; இப்படித்தான் நிகழும். சரித்திரத்தில் பல சான்றுகள் உள்ளன. அவற்றைச் சமாளித்துதான் வாழணும்; உள்ளூர் அரசியலை இணைப்பது வெட்டி வேலை '  என்றால் அடித்துவிடுவார்கள் போல.

பல இடங்களை; கோயில்களைத் தரிசிக்கணும் என்பது  என் அவா. கோவிட் முடிந்து, அதுவரை நாமும் உயிரோடிருந்து, அதற்குப்பின் விரும்பிய இடங்களுக்குப் போக 'டைம்' இருக்குமா? தெம்பும் ஆரோகயமும் இருக்குமா என ஒரு நப்பாசை.  இதற்கும் வேறொரு நன்பர் பதில் வைத்திருந்தார். 'உங்க வீட்டில் நீங்கள் விரும்பும் சிவன், அமர்ந்திருப்பதாகப் பாவித்துக் கொள்ளுங்கள்' என்றார். . 'சாயங்காலம் கடைக்குப் போகாமல், வீட்டில் சாப்பிடும் பிஸ்கோத்தையே அடை-அவியலாகப் பாவித்துக் கொள்வதுதானே' என சொல்ல விரும்பி மென்று விடுவேன்.

நித்தியப்படியாக  வாங்குவது மறந்து மாஸ்க்குகளையும், சானிடைசர்களையும் வாங்கிக் குவிக்கின்றனர் பலர். கபசுரக் குடிநீர் ஒரு மூட்டை..   மார்க்கெட்டில் இஞ்சியை இல்லாமல்ஸசெய்துவிட்டார்கள். கைகழுவியே கையைக் கரைத்துவிட்ட பலர்.

தெருவிற்கே சானிடைஸர் அடிக்கும் பலர். ஆறுமாதகாலமாக கதவை அடைத்துக் கொண்டு, பதுங்கிக்கிடந்து, கண்களை மட்டும் வெளியே நீட்டும் பலர்.

எனக்கொன்றும் வராது என எகத்தாளமாகச் சொல்லிக்கொண்டே அட்மிட்டாகி  மேலுலக ப்ராப்தி அடைந்தோரும் உண்டு. இத்தகைய மனிதர்களின் செய்கைகளின் கண்டுகொண்டது என்னவென்றால், வெளிப்புற ரியாகக்ஷன்  எப்படியிருந்தாலும், உண்மையில் அவர்களை ஆட்டிப்படைப்பது பீதி. உயிர்ப்பயம்.எந்தவிதமான தைரியமூட்டல்களும் பயன் தருவதில்லை. 

ரிப்வான் விங்கிள் மாதிர், கொஞ்ச வருடம் தூங்கி,  எல்லாம் சரியானபின் எழுந்து வர வாய்ப்புள்ளதா....? 

ஹலோ..ஹலோ நில்லுங்க! ஓடாதீங்க@









Monday, August 31, 2020

வியாபார ஆரோக்கியம்.

வீட்டில் களேபரம். ஆளாளுக்கு யோசனை! பரபரப்பு! இங்கும் அங்குமாகப் பாய்கின்றனர். என்ன ஆச்சு? யாராவது காசுள்ள பசையான  விருந்தினர் வந்துவிட்டாரா? 

ஒன்றுமில்லை; வீட்டிற்கு காய்கறிகளும் மளிகை சாமான்களும் வாங்கி வந்தாயிற்று. இவைகளை வீட்டினுள்ளே அழைத்து வருவதற்கான முஸ்தீபுகளுக்குத்தான் இப்படியான ரணகளம். உப்பு, மஞ்சள், வினிகர்,வெண்ணீர் என அனைத்துவகையான அபிஷேகங்களுக்குப்பின்னும்  இரண்டு மணிநேர சன்பாத் (வெயிலில் வை)ஆனால்தான் ஃபிரிட்ஜ்க்குள் காய்கனிகள் குடிபுகும்.

கொரோணா காலம். வாயைத் திறக்கப்படாது. என்னவோ செய்து கொள்ளட்டும்.  நமக்கு விபரம் போதாது.

ஏதாவது சொன்னால், 'உனக்கு வயசாயிடிச்சு; யூ டோன்ட் நோ எனிதிங். யூ மஸ்ட் அவேர்  ஹவ் த வைரஸ் ஸ்பரெட்ஸ் அண்ட் ஹவ் அக்ரஸிவ் இட் ஈஸ். வி டோன்ட் டேக் எனி சான்ஸஸ்.. ஓ.கே?' என மருமகள் வாயை அடைத்து விடுவாள்.  

நமக்குப் புகட்டப் படும் செய்திகள் யாவும் பீதியூட்டுவதாகத்தானே இருக்கு? அல்லது பீதியடைய வைக்கும் செய்திகளை மட்டுமே சொல்கிறார்கள். 

மாதம் ஒருகிலோ உப்பு வாங்கியது மாறி, பத்துகிலோ உப்பும், ஒருகிலோ மஞ்சள் போடி வாங்குகிறோம். 50 கிராமைத் தாண்டாத மிளகு, ஜீரகம், மஞ்சள் பொடியெல்லாம் இப்ப  கிலோக் கணக்கில் வாங்கப்படுகிறது.. 

உபரியாக,  இஞ்சியும் எலுமிச்சையும் சாக்கில் கிடக்கிறது.

ஷோகேஸில் சரித்து வைக்கப்பட்டிருந்த, ஒட்டடை அண்டிய போட்டோக்கள் எல்லாம் பரணில் ஏற, அந்த இடத்தை இம்யூனிட்டி பூஸ்டர்கள் பிடித்துக் கொண்டன. தினுசு தினுசான வண்ணங்களில் வைட்டமின் மாத்திரைகளையும் ஜிங்க்  டப்பாக்ஙளும் வாங்கிக் குவித்து விட்டனர். எலுமிச்சையையும் இஞ்சியையும் கண்டால் தலைதெரிக்க ஓடியவர்கள், லிட்டர் லிட்டராக குடிக்கின்றனர்.  ரவாதோசையில் கவனமாக மிளகைப் பொறுக்கி எறிந்தகாலம் காணாமற் போச்சு.

இச்சந்ததியினர் கவனமாக, எச்சரிக்கையாக இருக்கின்றனர். அதெல்லாம் சரி. அதென்ன இம்யூனிட்டி பூஸ்டர்? ஆக்ஸிலரேட்டர் மாதிரி அழுத்தினால் வேகம் பிடிக்குமா இம்யூனிட்டி?   எந்த வெப் பக்கத்தைத் திறந்தாலும் இந்த பூஸ்டர் விளம்பரம்தான்.

முன்பு, காலையில் கம்பு அல்து கேழ்வரகு  களி உருண்டைகளைத் தண்ணீரில் கரைத்துக் குடித்தோம். சிலர் பழைய சோற்றினைப் பச்சைமிளகாய் துணைகொண்டு சாப்பிடுவர். 'பொறுக்குமா ஹெல்த் பிஸினஸ் வியாபாரிகட்கு?'

காலையில் கார்ன் ஃபளேக்ஸ் சாப்பிடு என்றனர். சிரமேற்கொண்டு கார்ன் அவலை வெட்டித் தள்ளினோம். அப்புறம் ஓட்ஸ் என்றனர்.  குதிரைகள் கோபித்தனவா தெரியவில்லை. அதையும் வெளுத்துக் கட்டினோம். நமக்கு 'ஹெல்த் கான்ஷியஸ்' முக்கியமல்லவா? பின் படிப்பிற்கு பொருள் இல்லாமற் போய்விடுமே!

அப்பறப் க்ரீன் டீ குடி என்றனர். கான்ஸர்-எய்ட்ஸ்-TB ஏதும் அண்டாது; உடம்பு  இளைக்கும் என்றார்கள். Really? கேன்ஸரை அண்டவிடாதா?  இதைக்குடித்தால் இனி சூப்பர் மேன்தான்  என்றனர். மாய்ந்து மாய்ந்து குடித்தோம். வியாபாரம் பில்லியன் கணக்கில்.

அப்பறம் ஒல்லிதான் ஆரோக்கியம், அழகு என்றனர். ஜுரோ சைஸ் இடுப்பு என்றனர். அப்படியே ஆகட்டும் என்றோம். 

உடம்பு இளைக்க,  'தின்பதைக்குறை' என்பதற்குப் பதிலாக ஜிம்மிற்குப் போ' என்றனர். ஓட்டமாய் ஓடி வருடாந்திர சப்ஸ்கிருப்ஷன் கட்டினோம். அவர்களுக்குத் தெரியும், ஜிம்மெல்லாம் பிரசவ வைராக்கியம் போலத்தான் என. 

பின்,   'க்ளூடன் ஃப்ரீ உணவு'  என ஆரம்பித்து வைத்தனர். இரண்டு சதமான மக்களுக்கு க்ளூட்டன்  அலர்ஜி இருக்கக் கூடும்.  ஆனால் MNC க்களின் வெற்றி 20% மக்களை க்ளூட்டன் ஃப்ரீ உணவுகளைத் தேர்ந்தெடுக்க வைத்ததுதான். இவ்வகை ஊணவுகள் சாதாரண கோதுமை ரொட்டிகளை விட பன்மடங்கு விலை அதிகம். 42 பில்லியன் டாலர் பிஸினஸ், இந்த க்ளூடன் ஃப்ரீ ஊணவு.

நம் ஊர் நெய், வெண்ணை, தேங்காய்  உணவுகளின் மீது கொழுப்பு என்று பழி சுமற்றி சனோலா சஃபோலாக்களைச் சாப்பிடு என்றனர். மறுபேச்சின்றி நெய்யை ஓரம்கட்டினோம். 

ஓய்ந்த களைப்பான நேரத்தில் கோலாக்களைக் குடி என்றனர். 'அப்படியே ஆகட்டும் எஜபமானரே' என பாட்டில் பாட்டிலாக விழுங்கினோம்; ஒவ்வொரு கோலாவிலும் 40 கிராம் சர்க்கரை உள்ளது என்பதை மறந்து.

பசும்பாலை கொழுப்பு எனச்சாடி, பதாம்பாலையும் சோய் மில்க்கையும் முன்னிறுத்துகின்றனர். நாமும் கொழுப்பற்ற பாலைஸநோக்கிப் படையெடுத்தோம்.

ப்ரோட்டீன் பௌடர் என ஆரம்பித்தனர். ஆம்வேயில்  டின்டின்னாக வாங்கிக் குவித்தோம். 46 கிராம் புரொட்டீன் சாப்பிடவில்லை யெனின் யாரும் நம்மைச் சிறையில் தள்ளமாட்டார்கள். உடம்பு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். ஆனாலும் பதறினோம். 5.2 பில்லியன் டாலர்  பிஸினஸ் ஆயிற்றே!

வெள்ளை அரிசி, சிவப்பரசியை விட மாற்று குறைந்ததுதான்.ஆனால் விலையைக் கவனித்தீர்களா? 40 ரூபாய் மற்றும் 80 ரூபாய்.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க அவர்கள் பசும்பாலிருந்து நீக்கிய கொழுப்பை என்ன செய்கிறார்கள?  கடல் உப்பிலிருந்து நீக்கிய பல மினரல்களை என்ன செய்கிறார்கள்? வெண்மையாக் கப்பட்ட சோடியம் குளோரைடை மட்டும்தானே நாம் வாங்குகிறோம். நீக்கப் பட்டவையும் அவர்களுக்குத்  துட்டு! 

அப்பறம் 'வைட்டமின் வாட்டர்' தனிக்கதை. 

வூஹான் வைரஸ் வந்தது. இதோ..உலகு அல்லோல கல்லோலப் படுகிறது. மரண பீதியை மிகைப் படுத்தி விதவிதமான இம்யூனிட்டி பூஸ்டர்கள், சானிடைசர்கள், மாத்திரைகள், மாஸ்க்குகள் என சந்தையில் இறக்கி கல்லா கட்டுகின்றனர்.

சர்வதேச வியாபாரிகளின் வெற்றி ரகசியம் என்னவென்றால், ஆரோக்கிய விழிப்புணர்வு என்ற பெயரில் அனைத்து மக்களையும் பாதுகாப்பற்றவர்களாக (Insecure) உணர வைப்பதுதான்.  இந்தப் பதட்டத்தை, பாதுகாப்பின்மை போன்ற சூழலை, பீதியை உருவாக்கிவிட்டால் வியாபாரம் பிய்த்துக் போகாதா? 

பாரம்பர்யமோ அல்லது நவீன ஜங்க் ஃபுட்டோ அனைத்திற்கும் பின்னால் உலக வணிகர்கள் இருக்கிறார்கள்.

இப்போது நிலவும் கொரோணா காலத்தைப் பயன்படுத்தி துட்டு பார்க்கிறார்களா அல்லது துட்டு பார்க்க கொரோணா  ஏற்படுத்தப்பட்டதா?  ஏனெனில் உணவு, உடை, ரசனை, பழக்கம், கலாச்சாரம் என எல்லாவற்றையும் மாற்றும் திறனும் வல்லமையும் பணமும்  கொண்டவர்கள் சர்வதேச வியாபாரிகள்.

சரித்திரத்தில் பல கேள்விகளுக்கு விடையில்லை. இந்த பெண்டமிக்கும் அதில் ஒன்றாகி விடுமா?