Tuesday, November 21, 2017

ஜெயில்.

அது ஒரு விளையாட்டுப் புல்லாங்குழல் போலத் தெரிந்தது. நிஜமான குழலாக இருக்க வாய்ப்பில்லை. அல்லது ஒரு குச்சியோ என்னவோ? அந்தச் சிறுமி அதைக் கையில் வைத்துக் கொண்டு,சுழற்றிக் கொண்டே இருந்தாள். நாலு அல்லது ஐந்து வயதுக்குள்தான் இருக்கணும்.  அந்த வயதில் குழந்தைகளுக்கு தனி ஜொலிப்பும் ஈர்ப்பும் இருக்கிறது.  ரயில் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. மதிய நேரமாதலால் பலரது கண்களில் உறக்கம்.  சிறுமியும் அவள் தாயும் சைட் லோயர் பர்த்தில் அமர்ந்து கொண்டிருந்தனர். நான் மேலே.

சிறுமிக்கு போரடித்தது போல.  “மம்மி... டாக் டு மி...” என்றது.

அவளது அம்மா ரயில் கிளம்பியது முதல்,  மொபைலை விட்டு கண்களை விலக்க வில்லை.

‘மம்மீ..... ப்ளீஸ் ...’

‘சுஜீ... கீப் கொயட்..’

‘இட்ஸ் போரிங் மம்மீ...’

இக்கால அம்மாக்களுக்கும் குழந்தைகளுக்கும் தாய்மொழி வராது போல..!

‘யூ ஃபீல் ஹங்ரி..?’

மொபைலைவிட்டு கண்ணை எடுக்காமல், பையைத் துழாவி ஒரு பிஸ்கட் பாக்கட்டை எடுத்து நீட்டினார், அந்த மாது.

“நோ.. ஐ டோன்ட் நீட்..”

கொடுத்த பிஸ்கட் பாக்கட்டை அம்மாவின் மடியிலேயே வீசியெறிந்தாள்.

அச்சிறுமி என்ன நினைத்தாளோ, திடீரென கையில் வைத்திருக்கும் புல்லாங்குழலால், பக்கத்திலிருக்கும் பயணிக்கு ஒரு அடி கொடுத்தாள். இதைச் சற்றும் எதிர்பாராதா அந்த ஆசாமி, அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தார். உற்சாகம் பெற்ற அக்குழந்தை எதிர் சீட்டிலிருப்பவருக்கும், அந்த குச்சியால்  ஒரு அடி கொடுத்தாள்.  இதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த அந்த மாது, ‘நோ.. சுஜீ... ‘ என முணகினார்.  

இந்த விளையாட்டு சிறுமிக்கு சுவாரஸ்யமாய் இருக்கவே, மற்ற பயணிகள் எல்லோருக்கும், புல்லாங்குழல் அடி கொடுக்க ஆரம்பித்தாள்.

அடிப்பது குழந்தையாயிற்றே... என்ன செய்ய முடியும்? திட்டவா இயலும்? சிலர் சிரித்து வைக்க, சிலர் ‘அப்படியெல்லாம் செய்யக் கூடாது.. போய் அம்மாவிடம் உட்கார்..’ என உபதேசம் செய்ய,  சிலர் தானாகவே, அடி விழும் சமயம் கையில் பெற்றுக்கொள்ள, சிலர் நகர்ந்து அமர்ந்து கொள்ள.. சிறுமிக்கு இவை தமாஷாக அமைந்து விட்டது போல.

அடுத்த பகுதியில் இருப்பவர்களுக்கும் அடி கொடுக்க ஆரம்பித்தாள் சிறுமி.  

“குழந்தையைப் பாருங்கள்... கண்ட்ரோல் செய்யுங்க...” என்ற  விண்ணப்பங்களுக்கு, ‘சுஜீ....கீப் கொயட்..” என்ற முணகல் மட்டுமே அந்த மாதுவிடமிருந்து பதிலாய் வந்தது. அடி கொடுப்பதும் சிரிப்பதுமாய் இருந்தாள் சிறுமி.

அடுத்த பகுதியில் ஒரு பெரியவர். பார்ப்பதற்கு, எழுதுவைதை நிறுத்திவிட்ட எழுத்தாளர் போலவோ, ரிடயர்டு தாசில்தார் போலவோ இருந்தார்.  ஆரம்பத்திலிருந்தே, குழந்தையின் அடத்தை ரசிக்கும் மூடில் அவர் இல்லை.

அவரை அடிப்பதற்கு குச்சியை ஓங்கும் சமயம்,  கண்களை உருட்டி, விரலை உதடுகள் மீது வைத்து, ‘டோண்ட் டு இட்..’ என்று முறைத்தார். மற்றவர்கள் எல்லாம்,  எதிர்ப்பின்றி அடி வாங்கிக்கொள்ள, இந்தப் பெரிசு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என அவளுக்குப் புரியவில்லை. அவரை விட்டு தயக்கத்துடன் விலகி, அடுத்த பயணிக்கு அடி கொடுக்க   நகர்ந்தாள். நிம்மதியுடன் திரும்பிய பெரியவருக்கு, அடுத்த நொடி அதிர்ச்சி காத்திருந்தது. அவர் எதிர்பாரா சமயம், அவரது சொட்டைத் தலைமீது ஓங்கி ஒரு அடி கொடுத்தாள் அவள். அடி வலுவாகப் பட்டுவிட்டது போல.  கண்கள் சிவக்க, சடாரென எழுந்து, அந்தச் சிறுமியின் கையிலிருந்த புல்லாங்குழலைப் பிடுங்கி, கரும்பு ஒடிப்பது போல, படாரனெ உடைத்து, அந்த மாது இருக்கும் பக்கம் வீசி எறிந்தார்.

தனது குச்சி உடைக்கப்பட்டதைக் கண்ட சிறுமி, பெருங்குரலெடுத்து ஓலமிட ஆரம்பித்தாள். அதுவரை மொபைலையே நோண்டிக்கொண்டிருந்த அந்த மாது,  நடந்ததைப்  பார்த்ததும் வெகுண்டெழுந்து, அச்சிறுமியின் அழுகுரலையும் மீறி பெருங்குகுரலெழுப்பி அவரிடம் சண்டைக்குப்போனார்.

அடுத்த பதினைந்து நிமிஷம் ஆங்கில வசவுகளும், காட்டுக் கூச்சலும், குழாயடி சண்டியாய் கம்பார்ட்மெண்டை நிரப்பின. 

“குழந்தையிடம் எப்படி நடந்துகொள்ளணும் தெரியாதா முட்டாளா நீ? வயசாயிடிச்சே.. புத்தியில்லையா” என்பதும்; “குழந்தையை வளர்க்கத் தெரியாத நீ ஒரு அம்மாவா...” என்பதும் வசவுகளின் சாரம்.

அக்கம் பக்கத்திலிருப்போர் சமாதாணப்படுத்த, சரட்டென திரைச்சீலையை இழுத்து மறைத்துக் கொண்டு படுத்துவிட்டார் பெரியவர். பருத்த சரீரம் மேல்மூச்சு வாங்க, காச் மூச் சென கத்திக் கொண்டிருந்தார்  அந்த மாது.

உடைந்து போன புல்லாங்குழலை கையில் வைத்துக்கொண்டு, இந்தக் கணமே புதுசு வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தது அக்குழந்தை.

சீட்டிற்கடியில்  பிணைக்கப்பட்டிருந்த ஷூட்கேசைத் திறந்து, அதிலிருந்து, வேறு ஒரு மொபைலை வெளியே எடுத்து,  ஏதோ ஒரு விளையாட்டை ஓபன் செய்து, அச்சிறுமியிடம் நீட்டினார் அம்மாது.

விசும்பிக்கொண்டே, விளையாட்டில் மூழ்கிப்போனாள் சிறுமி. 

அம்மாதுவும் இடைஞ்சல் இன்றி, தனது மொபைலில் ஆழ்ந்து போனார்.


இப்பொழுது கம்பார்ட்மெண்ட் அமைதிபெற, ரயில் அது தன் வேகத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது.



Thursday, November 16, 2017

கோகர்ணா, முருடேஷ்வர், மங்களூர் – கொள்ளை அழகு

சுவர்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டு, எவ்வளவு நேரம்தான், யாருமற்ற மனிதனாய், தன்ந்ததனியனாய் அமர்ந்து கொண்டிருப்பது? அரசியல் விவாதங்கள் எல்லாம் பொருளற்றதாக, நேர விரயமாகத் தோன்றவே முகனூலிலிருந்து பெரும்பாலும் வெளியேறிவிட்டேன்.  அவரவர்கள் தங்களது மனோ நிலைகேற்றபடி நிலைபாட்டினை மேற்கொண்டபின்னால், விவாதங்களினால்  என்ன பயன்?  

எனவே, சில மாதங்களாக சுற்றுலா மேற்கொண்டிருப்பதையும் அதன் தொடர்பான அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துகொண்டிருப்பதையும்,  இந்த வலைப்பூவைப் படித்துக் கொண்டிருப்பவர்கள் அறிவீர்கள்.  உலகத்தோடு ஒட்டி ஒழுகவியலாத, தெரியாத சில விசித்திரப் பிறவிகள் உலகில் ஜனித்து விடுகின்றன. அவர்கள் கதவை அடைத்துக் கொண்டு பேசாமலிருந்தால்கூட, பிரச்சினைகள் தேடி வரும். பகைமை நாடி வரும். நான் அந்த வகையில் பிறந்துவிட்ட ஆசாமி. யாரிடம் பேச?  என்ன பேச?  

எனவே புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய கலாச்சாரங்களை நோக்குதல் போன்றவை ‘வம்பு தும்பில்லாததாகத்’  தோன்றவே, பிற இடங்களை நாடிப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இந்த சுவாரஸ்யம் எத்தனை நாட்களுக்கு நீடிக்குமோ... யாரறிவர்? என் பயணங்கள் கூட, பெரும்பாலும் ‘சோலோ

எனது அடுத்த பயணம் பற்றி யோசிக்கும் பொழுது, கர்நாடகத்தின் கோகர்ணாவிற்கு 1973ல் சென்றது நினைவிற்கு வந்தது.  எதோ ஒரு கோயிலும், கோயிலை ஒட்டிய ஒரு கடற்கரையும் பார்த்தது  மங்கலாக நினைவிற்கு வந்தது. இப்பொழுது அந்த இடம் எப்படி இருக்கும்? அதே இடத்தை  வயதும் அனுபவமும் ஏறியபின் பார்க்கும் பொழுது  சிந்தனையில் ஏற்படும் தாக்கம் எப்படி இருக்கும்?
கூகுளாரை தோண்டிய பொழுது, கோகர்ணாவின் கடற்கரைகளும், கோயில்களும் விரிந்தது.  திரையில் விரிந்ததை நேரில் காண விழைந்து, புதுவையிலிருந்து மங்களூருக்கு ரயிலில் பயணித்தேன். புதுவையிலிருந்து பெங்களூர் சென்று அங்கிருந்து அங்கிருந்து கர்னாடக அரசின் ‘ஐராவதம்’ போன்ற சொகுசுப் பேருந்துகள் ஒன்றில் சென்றிருக்கலாம்தான். பேருந்துப் பயணம் சலிப்பூட்டுவதும், உடல்வலி தரக்கூடியதுமாய் அமைவதால், சுற்றுவழியாயிருந் தாலும் மங்களூர் சென்று, அங்கிருந்து கோகர்ணா செல்லத் திட்டமிட்டேன்.

காலை பத்து மணிக்கு மங்களூர் சென்றடைந்தபொழுது, தோதான நேரத்தில் கோகர்ணாவிற்கு தொடர்வண்டி அமையவில்லை. விடாது கருப்பு போல, வேறு வழியின்றி, மங்களூரிலிருந்து கோகர்ணாவிற்கு விரைவுப்(!) பேருந்துப் பயணம் மேற்கொள்ளலாயிற்று. பேருந்து சென்றது.. சென்றது..சென்றுகொண்டே இருந்தது. ஊர்தான் வரும் வழியாய் இல்லை. எப்பதான் ஊர் போகும் என வினவ, இரவு ஏழு மணிக்கு மேல் ஆகும் என்றார் நடத்துனர்.  இருநூறு கிலோமீட்டருக்கு ஏழு மணி நேரமா? கடவுளே!
அவ்வப்பொழுது, ஏதோ ஒரு ஊரில் வண்டி நிற்கும். ஓட்டுனரும், நடத்துனரும் மின்னல்போல இறங்கி மறைந்துவிடுவர்.  இரண்டே  நிமிடத்தில் திரும்ப ஆஜராகி பஸ்ஸை எடுத்துவிடுவர்.  டைம் கீப்பரிடம் ரிப்போர்ட் செய்துவிட்டு வந்துவிடுவார்கள் போல.  எனக்கோ இயற்கை உபாதை அவசரம்.  நம் ஊர் போல, ‘வண்டி பத்து நிமிஷம் நிற்கும்.. டீ சாப்டரவங்க சாப்டலாம்..’ என்ற அறிவிப்பைக் காணோம். எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க இயலும்? முருடேஷ்வர் என்ற ஊரில், பஸ் நின்றதும்  அதே போல கண்டக்டர் மின்னலென மறைந்தார். விரட்டிக்கொண்டுபோய் அவரைப்பிடித்து, ஒருவிரலைக் காண்பித்து அனுமதி பெற்று  வேலையை சடுதியில் முடித்துக் கொண்டு, திரும்ப வந்து பார்த்தால் பஸ்ஸைக் காணோம். மிரண்டுபோய் எனது உடைந்த கன்னடத்தில், ‘எங்கய்ய இங்கே நின்று கொண்டிருந்த கோகர்ணா பஸ்ஸைக் காணோம்..? ‘ என வினவ, அதோ போய்க்கொண்டிருக்கிறது பாருங்க.. அதான் உங்க பஸ் என பதில் வந்தது.  பிடரியில் இடிபட ஓடிப் பார்த்தேன்.  ம்ஹூம். 

டைம்கீப்பரிடம் ஓடிவந்து பஸ்ஸைத் தவறவிட்டதையும், லக்கேஜ் அந்த பஸ்ஸில் போய்விட்டதையும்  ஆங்கிலத்தில் விவரிக்க,  அவர் மொழி புரியாமல் விழிக்க,  நான் உடைந்த கன்னடத்தில் விவரித்து ஒருவழியாக அவர் புரிந்துகொண்டு, அடுத்த டெப்போவிற்கு போன் செய்து விடுகிறேன், லக்கேஜ் இருந்தால் எடுத்து வைப்பார்கள், இப்ப நீங்க அடுத்த பஸ்ஸைப் பிடித்து கோகர்ணாவிற்குப் போங்கள் என்றார்.

அடுத்த டெப்போ எங்கே இருக்கு?
அது ‘குண்டா’வில். 
எவ்வளவு நேரம் ஆகும்?
ஒன்றரைமணி நேரம் ஆகும்.
அதற்குள் நிறைய ஸ்டாப்பிங் இருக்கே... அதற்குள் எனது லக்கேஜை எவரேனும் எடுத்துச் சென்றுவிட்டால்?
அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.  அடுத்த டெப்போவிற்கு தகவல் கொடுக்க இயலும்.. அவ்வளவே!
சரி... கண்டக்டரின் மொபைல் நெம்பர் உங்களிடம் இருக்கா?
இல்லையே...!!!

இவர்களை நம்பிப் பயனில்லை என முடிவுசெய்து, எதிரே இருந்த டாக்ஸி ஸ்டேன்டிற்குப் போய, ஒரு டாக்ஸியைப் பிடித்தேன். அதற்குள் இருபது நிமிடம் கடந்துவிட்டது. முப்பத்தைந்து கிலோமீட்டர் விரட்டிச் சென்றபின் விட்டபஸ்ஸைப் பிடிக்க முடிந்தது.  நல்லவேளையாக லக்கேஜ் அங்கேயே இருந்தது.

அடுத்த மூன்று நாட்களும் கோகர்ணா கேம்ப். 
கோகர்ணாவிற்கு ஏகப்பட்ட புராணங்கள். ராவணன், சிவனை நோக்கி தவமிருந்து ஆத்மலிங்கம் ஒன்றை பெற்றானாம். ஓர் அசுரனின் கையில் ஆத்மலிங்கம் கிடைத்துவிட்டால், உலகு என்னாவது என கவலைப்பட்ட தேவர்கள் ஒன்றுகூடி யோசனை செய்து, பிள்ளையாரிடம் வேண்ட, அவர் அவர்கட்கு உதவுவதாக வாக்களித்து, ராவணனை வேறு ஒரு வேடத்தில் அடைந்தாராம். மாலைச் சடங்குகளைத் தவறாமல் செய்யும் பழக்கம் உடைய இராவணன், பிள்ளையாரிடம், சந்தியா வந்தனம் செய்துவிட்டு வரும்வரை இந்த லிங்கத்தை கையில் வைத்திருக்கவேண்டும் எனக் கேட்க, ‘சரி... வைத்துக் கொள்கிறேன். ஆனால் நான் மூன்றுமுறை கூப்பிடுவேன், அதற்குள் நீ திரும்ப வந்து லிங்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்; இல்லாவிடில் லிங்கத்தை கீழே வைத்துவிடுவேன்’ என பதிலுரைத்தாராம்.  சந்தியா வந்தனம் செய்துவிட்டு வருவதற்குள், பிள்ளையார், மூன்றுமுறை ராவணா..ராவணா என அழைக்க, வர இயலாத நிலையில் ராவணன். லிங்கத்தை அங்கேயே வைத்துவிட்டு மறைந்துவிட்டாராம் பிள்ளையார்.  ராவணன் பெற்ற வரத்தின்படி லிங்கம் எங்கே வைக்கப்பட்டதோ, அந்த இடத்திலேயே சிவன் ப்ரதிஷ்டை ஆகிவிடுவாராம். அதன்பின் அகற்ற இயலாதாம்.  கோபம் கொண்ட ராவணன் தன் முழு பலத்தையும் பிரயோகித்து, லிங்கத்தை பிடுங்க முயல,  சில பகுதிகள் மட்டும்  சிதறி அருகில் இருந்த சில ஊர்களில் (நான்கு இடங்கள்) விழுந்தனவாம். அப்படி விழுந்த இடங்களில் ஒன்றுதான், இப்பொழுது பிரபலமாக இருக்கும் ‘முருடீஷ்வரர் கோயில்’.

(Ravana, the  king of Lanka, received the Aatmalinga from Shiva after he had performed a penance at Mount Kailash reciting self-written Shivatandavastotram. Shiva instructed Ravana that the sacred Aatmalinga should not be placed on the ground as it would establish itself where placed on earth. On his way back to Lanka, Ravana stops for his evening prayers at Gokarna.

As Ravana was coming near Gokarna. Maha Vishnu who had 
known well that Ravana was punctual in performing his periodical 
rites (Sandyavandhana), hides sun with his Sudarshana Chakra 
(Wheel). Thinking that it was time to perform the evening rites, 
Ravana finds a  boy (Lord Ganesha in disguise) and asked him to 

hold the Atma linga in his hand till he came back after finishing the rites. Lord Ganesha agreed to hold the linga on one condition that he would do so till he would be able to bear the weight of Linga and that thereafter he would call Ravana three times and if failed to come to him by then he would place the linga on the earth. Lord Ganapathi calls Ravana three times when he was performing his rites and places the linga on the earth and he vanished. The Atma linga at once got firmly entrenched in the earth.
Ravana learned that he had been tricked by the Gods. To prevent Ravana from getting a weapon as powerful as the atmalinga, Ganesha, in the disguise of a   boy, tells Ravana that he will hold the atmalinga until Ravana finishes his prayers. As soon as he receives the atmalinga, Ganesh promptly puts it down. Ravana tries to extricate it, resulting in throwing the coverings of the Linga to Surathkal, Dhareshwar, Gunavanteshwar, Murudeshwar and Shejjeshwar temples.)

இதில் தாரேஷ்வர், குணவந்தேஷ்வர், முருடேஷ்வர், 
ஷெஜ்ஜெஷ்வர் ஆகிய கோயில்களைத் தரிசிக்க முடிந்தது.  
இதுவல்லாமல் இந்த இடம் முன்னோர்களுக்கு அபர 
காரியங்கள் செய்யுமிடவாகவும் திகழ்கிறது. அருகில் இருக்கும் மஹா கணபதிகோயில், பத்ரகாளிகோயில் ஆகியவும் புகழ்பெற்றவை. இங்கே இருக்கும் வினாயகர் போலவே, இடுகுஞ்சி  என்ற இடத்திலும் இரு கைகளை மட்டும் கொண்டு, நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார் வினாயகர்.  நம் ஊர் பிள்ளையார்பட்டி போல இடுகுஞ்சி வினயகர் பிரபலம்

முருடேஷ்வர்கோயில், கோயில் என்ற நிலையில் மட்டுமன்றி பெரிய சுற்றுலாத்தலமாகவும் இருக்கிறது. மிகப்பெரிய சிவன் சிலை; மிகப்பெரிய கோபுரம்; அருகேயே அழகான கடற்கரை... வேறேன்ன வேண்டும் ஒரு சுற்றுலாத் தலத்திற்கு? கோபுரத்திற்கு  பதினெட்டு நிலைகள்.. கோபுரத்தின் உச்சிக்குச் செல்ல லிஃப்ட் அமைத்திருக்கிறார்கள். அங்கிருந்து விரியும் காட்சிகள் அழகோ அழகு.

கோகர்ணாவிற்கு வருவோரில் கோயில்களை நாடி வருவோரைப் போல, ‘கோவா’ போல அனுபவிக்க வருபவர்களும் அதிகம். அங்கே இருக்கும் ‘ஓம் பீச்’, ‘குண்ட்லே பீச்’ புகழ்பெற்றவை.  ஓம் பீச்சின்ன் கடற்கரை ஓம் என்ற எழுத்துபோல இருக்கிறது.

குண்ட்லே பீச்சின் அமைப்பு மிக அழகு. இரு குன்றுகளுக்கிடையே புகுந்து, பின் காளான் தலைபோல  விரியும், ஆழமற்ற-அலைகளற்ற கடல். என்னே அழகு! மெல்ல மெல்ல மயிலிறகுபோல, நுரை போலத் தழுவிச்செல்லும் சிற்றலைகள், இடுப்புவரை மட்டுமே ஆழம் உள்ள கடல், தெள்ளத் தெளிவான நீர். சதா வீசும் தென்றல்.  ஆஹா.. மாலை மூன்றுமணிக்கு கடலில் இறங்கினால், அந்தி சாயும்வரை ஆனந்தக் குளியல். மெரினா போல வழியெங்கும் பரவியிருக்கும் பிச்சைக்காரர்கள், பஜ்ஜி,பலூன் கடைகள் என எதுவில்லை. பெரிய கடற்கரையில் ஆங்காங்கே பீச் வாலிபால் விளையாடும் இளைஞ,இளைஞிகள்.  வெளி நாட்டினர் ஏராளம். தள்ளி நிற்கும் தாக சாந்திக் கடைகள்.  கோகர்ணாவின் கடற்கரைகள் கோவாவின் கடற்கரைகள் போலவே நல்ல அழகு.. ஆனால் குறைந்த கூட்டம்.  நீர் விளையாட்டுகள், பாரா க்ளைடிங் என பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளம்.  மீர்ஜான் கோட்டை என ஒரு அழகான கோட்டை கோகர்ணாவிற்கு அருகில் உள்ளது.  12ம் நூற்றாண்டைச் சார்ந்தது.  மிகவும் அறியப்படாத அழகான கோட்டை.    மூன்று நாட்கள் செலவழித்துவிட்டு, பின் மங்களூர் சென்று, அங்கேயுள்ள பிரபலமான கோயில்களைக் கண்டு ஊர் திரும்பினேன்.

1973ல் இந்த இடத்தைப் பார்த்ததற்கும் இப்போதைக்கும் என்ன வித்தியாசம்? கோயில்களில் ஒன்றிப்போய் விடமுடிகிறது. இயற்கையை இன்னும் ஆழமாய் உணர,அனுபவிக்க முடிந்தது.

இறுதியாக:  இந்தியாவின் மேற்குதொடர்ச்சிமலைகளும், அதயொட்டி அமைந்திருக்கும் அரபிக்கடலும் இயற்கை நமக்குக் கொடுத்த வரம். மலைகளும் சமுத்திரமும் எங்கே ஒருங்கே இவ்வளவு தூரம் பார்க்கக் கிடைக்கிறது? மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பசுமையும், அதன் வளமும் காணச் சலிக்காதவை. (கொங்கன் ரயில்வேயில் பயணிக்க வேண்டும்)
அரபிக்கடல்போல, வங்காளவிரிகுடா ஏன் அவ்வளவு கவர்ச்சிகரமாக அமையவில்லை? யோசித்தால், இயற்கைச் சீற்றங்கள் குறைவாக இருப்பதும், அதன் பின்னனியில் அமைந்துள்ள மலைத் தொடர்களும் தான் காரணமோ என்னவோ?


 
OM BEACH

Kuntle Beach



Above three are Murudeshwar

A small falls near Gokarna

Above two are Apasarakonda water falls near Gokarna

Add caption


Above two are Mirjan Fort

Koti Theertha - Gokarna



Above are some of the temples of Managalore

Thursday, October 26, 2017

பாலித் தீவுக்கு ஒரு பயணம்.

என்னவோ, பார்க்க நினைத்திருந்த இடங்களனைத்தையும்,  உடலில் சற்றே தெம்பிருக்கும் பொழுதே, பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றுவிட்டதால்,  பார்க்க விழையும் இடங்களின் “கால நிலையும், என் பர்ஸும்”, ஒத்துவரும் பட்சத்தில் கிளம்பிவிடுகிறேன். வாழ்வது ஒருமுறை; வாழ்ந்துதான் பார்த்துவிடுவது ! இனி மீதி இருப்பது நாட்களோ மாதங்களோ... இறைவனே அறிவான். எனவே இலங்கை, துபை வரிசையில் அடுத்து பார்க்க விழைந்த இடம் ‘பாலி தீவுகள்’.

காலை, சென்னையிலிருந்து புறப்பட்டு, கோலாலம்பூர் சென்று, அங்கிருந்து பாலி. இடையில் ஒரு மணி நேரம் ப்ரேக். பாலியை அடைந்த பொழுது இரவு ஆகிவிட்டது. பாலி நேரம் இந்திய நேரத்திற்கு இரண்டரை  மணி முன்னால்.

இந்தோனேஷியாவின் 33 மாகாணங்களில் ஒன்று பாலி.  இஸ்லாமிய தேசமானாலும் இந்தத்தீவில் மட்டும்  இந்துக்களே அதிகம். பாலித்தீவுகள் முழுவதும் ஏதோ ஒரு வகையில் ராமாயணத்துடனோ, மகாபாரதத்துடனோ சம்பந்தப் பட்டுள்ளது போலத் தோன்றும். வாயு (பாயு), அக்னி, சீதா, பீமா, ராவணா,வாலி, ஹனுமன் போன்ற பெயர்கள் சர்வ சாதாரணம்.  ராமாயணா மால், கிருஷ்ணா மால், க்ரஹா அபார்ட்மென்ட்ஸ், சீதா தேவி ஷாப் போன்ற பெயர்களைப் பல இடங்களில் பார்க்கலாம்.  பல உள்ளூர் சொற்களின் மூலம் சமஸ்க்ருதமாக இருக்கிறது. கருடாஅவர்களின் ஏர்லைன்ஸ் பெயர். சுற்றுலா பேருந்துகள் பெயர் ‘பரிவசிஷ்டா’. பீமனுக்கும் அவரது புதல்வன் கடோத்கஜனுக்கும் கூட, பெரிய அளவில் சிலைகள் இருக்கின்றன.  பாலியின் தலை நகர் ‘தென்பஸார்’. பாலித்தீவு என்பது ‘வாலித் தீவு என்பதன்’ மரூ என்றார் ஒருவர். அவர்களுக்கு ‘வா’ வராது; ‘பா’ தான். வாலி-பாலி, வாயு-பாயு. நகரின் நடுவே ராமருக்கு ஒரு பிரமாண்டமான சிலை வைத்திருக்கிறார்கள்; கொள்ளை அழகு.

ஊர் முழுவதும் கோயில்கள். சிவா-விஷ்ணு-ப்ரம்மா கோயில்கள் பிரசித்தம்.  ஆனால் சுற்றுலாப் பயணிகளை ஒரு எல்லை வரைக்கும்தான் அனுமதிக்கிறார்கள்.  சன்னிதானத்திற்குள் வழிபாடு செய்பவர்கள்தான் செல்ல முடிகிறது. உள்ளூர் மக்கள் பாரம்பரிய வெள்ளுடை அணிந்து, மலர்களைக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள்.  அவர்கள் தங்களது கலாச்சாரத்திற்கு அவ்வளவு மதிப்பளிக்கிறார்கள். வீடோ, கடையோ, அபார்ட்மெண்ட்களோ எதுவாயினும் முன்னால் ஒரு மூன்றடுக்கு துளசி மாடம் போல ஒன்று அமைத்திருக்கிறார்கள்.  மேலே நாற்காலி போல ஒரு அமைப்பு. கல்லிலோ சிமெண்டிலோ அவரவர் வசதிக்கு ஏற்றாற் போல கட்டிக்கொள்கிறார்கள்.  இதில் விதி விலக்கே இல்லை. அதை ‘ப்ரைவேட் டெம்பிள்’ என்கின்றனர்.  தவறாமல் பூக்களையும் நீரையிம் கொண்டு பூஜை செய்கிறார்கள். 

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் 

மறந்தறியேன்

நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் 

னாவில் மறந்தறியேன்

உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு 

சூலை தவிர்த்தருளாய்

அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை 

அம்மானே ...என்ற தேவாரம் தான் நினைவிற்கு வந்தது.



பாலியின் பரோங் டான்ஸ் (இராமாயணா டான்ஸ்) 

பிரசித்தம்.

பாலித்தீவுகள் சுற்றுலா என்பது, டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பர்சேஸ் பண்ணுவது போல.  அவரவர்களுகு அவரவர்களின் விருப்பப்படி அனைத்தும் கிடைக்கும்.

வாட்டர் ஸ்போர்ட்ஸ் வேண்டுமா? அனைத்தும் உண்டு; ஸ்கூபா டைவ், ஸ்னார்கலிங், பாரா டைவிங், ஸ்கீயிங்க், விதவிதமான போட் சவாரிகள் என பல வகைகள்.  எனக்கு மிக விருப்பமான ஸ்கூபா டைவிங்கும், பாரா செய்லிங்கும் செய்தேன். ஸ்கூபா செல்லும் போது என் உண்மையான வயதைச் சொல்லாமல், 58 என சொல்லிவைத்தேன். உண்மையைச் சொன்னதால், அந்தமானில் ‘கிழவர்களுக்கு ஸ்கூபா கிடையாது’ என மறுத்து விட்டனர். கெஞ்சிக் கூத்தாடி செல்லும்படியாகி விட்டது.  இங்கே அப்படி நிகழக்கூடாது என்பதால் ஒரு சிறு பொய். ஒரு மணி நேரம் கடலுக்கடியில் வண்ணமிகு மீன்கள், தாவரங்கள் என கண்டுவிட்டு மேலே வந்த்தும், என் உண்மையான வயதைச் சொல்ல, ‘ நோ ப்ராப்ளம்.. யூ டன் வெல்.. என்ஜாய்’ என்றனர். இதற்குப் பரிசாக அரை மணி நேரம் இலவசமாக ‘ஸ்னார்கலிங்’ கிடைத்தது.

அடுத்து, கோயில்களா? பஞ்சமேயில்லை. ஏகப்பட்ட கோயில்கள். ‘ஜெகன்னாத் கோயில்’ உட்பட வெள்ளமென இருக்கின்றன. திருமூர்த்தி கோயில் ஒன்று இருக்கிறது... அங்கே ஓரிடத்தில் இயற்கை நீரூற்று வருகிறது. அதை குளம்போல சேகரித்து, ‘ஆவுடை’ அமைப்பில் ஆறு இடங்களில் விழுமாறு செய்திருக்கிறார்கள். அங்கே பக்திப் பரவசத்துடன் வரிசையில் நின்று ‘தீர்த்த  நீராடுகிறார்கள்’.  பெரும்பாலான கோயில்களுக்குச் செல்ல அவர்களது பாரம்பர்ய உடை அவசியம். கோயிலின் வெளியே இலவசமாக அவற்றை வழங்குகிறார்கள்.  (திரும்ப வரும்பொழுது கொடுத்து விடவேண்டும்) .  கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் கோயில்கள் அழகோ அழகு. அவற்றை மிதக்கும் கோயில்கள் என்கிறார்கள். ஹை டைட் வரும்பொழுது செல்ல இயலாது. லோ டைடின் பொழுது உள்ளே செல்லலாம்.

டனா ரோட் (மிதக்கும் கோயில்கள்), உலுவட்டு கோயில், பெரட்டான், தீர்த்த டெம்பிள்,குனுங்காவி கோயில், தாமன் அயுன் கோயில், புரா தமன் சரஸ்வதி கோயில், லெம்புயாங்க் டெம்பிள், பெஸாகி (வைஸாகி) கோயில் ஆகியன தவிர்க்கக் கூடாதவை. முக்கியமாக உலுவட்டு கோயிலை மாலையில் காணவேண்டும். மூன்று பக்கமும் கடல் சூழ அழகின் உச்சமாய் இருக்கிறது. சூரிய அஸ்தமனத்தைக் காண ஏகக் கூட்டம். கடலிலிருந்து, அதன் கரையிலேயே 200 அடி உயரத்தில் இருக்கிறது உலுவட்டு. இயற்கை வரைந்து வைத்த ஓவியம் இந்த இடம்.  இந்தத் தீவில் அழகைத் தேடி ஓட வேண்டியதே இல்லை; கண்களை மட்டும் திறந்தால் போதுக்; காணுமிடமெல்லாம் அழகு வழிந்தோடுகிறது.

‘பர்சேஸ் மேனியாக்களுக்கு’ என ஏகப்பட்ட கடைகள். கைவினைக் கடைகள் ஏராளம். எல்லா இடங்களிலும் மரவேலைச் சிற்பங்கள் கிடைக்கின்றன. ஹேண்ட் மேட் சோப்புகள், ஊதுபத்திகள், சிறு பைகள், வாசனைத் திரவியங்கள், உடைகள், மஸாஜ் ஆயில்கள் என பலதும். மரத்தில் ‘பாட்டில் ஓபனர்கள்’ செய்து வைத்திருக்கிறார்கள் பாருங்கள். எப்படித்தான் ‘அந்த டிசைனில்’ செய்ய வேண்டும் எனத் தோன்றியதோ?  

என்ன.... மால்களைத் தவிர மற்ற இடங்களில் அவர்கள் இஷ்டத்திற்கு விலை சொல்லுவார்கள். என்னைப் போன்ற கேட்டதைக்  கொடுத்துவிடும் பசுக்கள் வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தென்பஸாரில், ஒரு சிறு கைப்பை வாங்கினேன். ஒரு லட்சம் ரூபாய் சொன்னார்கள். (இந்திய ஒரு ரூபாய்க்கு 200 இந்தோனேஷிய ரூபாய் கிடைக்கும்). மிகவும் சாமர்த்தியமாகப் பேசுவதாக நினைத்து ‘ஐம்பதாயிரம் தருவியா?’ என்றேன். அந்தப் பெண்மணி உடனே தந்து விட்டாள். என் சாமர்த்தியத்தை நானே மெச்ச நினைத்த வேளையில், மற்றொரு பயணி வெறும் பத்தாயிரம் கொடுத்து வாங்கிச் சென்றார். அடப் போங்கப்பா... நீங்களும் உங்க பர்சேஸும் என நினைத்துக்கொண்டேன். அதே போல கருடன் மரச்சிலையை இந்திய மதிப்பில் ஐனூறு ரூபாய்க்கு பேரம் பேசி முடித்தபின், மற்றொருவர் அதே சிலையை நூறு ரூபாய்க்கு வாங்கிச் சென்றார். நல்லவேளையாக   நான் தனியன். இல்லாவிடில் என் சாமர்த்தியத்திற்கு முதுகில் நாலு அடி விழுந்திருக்கும். 

சிறு நீர் கழிக்க டாய்லெட் கட்டணம் மூவாயிரம் ரூபாய். மூன்று நாட்களானாலும் பரவாயில்லை; இந்தியாவிற்கே வந்துவிடலாம் எனத் தோன்றும்.

இயற்கைக் காட்சிப் பிரியர்களா? அவையும் திகட்ட திகட்ட கிடைக்கும். எரிமலைகள், ஏரிகள், மலைகள், நீர் வீழ்ச்சிகள், அழகிய கடற்கரைகள் என ஏகமாய்.  மலைச் சரிவுகளில் நெல் வயல்கள் அமைத்து பாசணம் செய்கிறார்கள். அவற்றை   Paddy Terrace என அழைகிறார்கள்.  நெல் வயல்களை வேடிக்கை பார்ப்பது நமக்கு புதிதாக இருந்தாலும், மேலை நாட்டவர்கள் கும்பல் கும்பலாய் வயல்களை பார்க்கின்றனர். அவர்களையெல்லாம், தஞ்சைக்கு அழைத்து வந்து காண்பிக்க வேண்டும் எனத் தோன்றியது.  அதே போல குரங்குக் காடுகள் என ஒரு இடம் வைத்து டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்றியிருக்கின்றனர்.  அது குரங்குகள் பார்க் என்றுதான் அழைக்க வேண்டும். கருங்குரங்குகள். வாலியின் வம்ஸாவளிகளென கூறுகின்றனர். 
ஒரு அழகிய மலைச் சரிவில், எரிமலையையும் அதனடியில் அமைந்திருக்கும் மிகப்பெரிய ஏரியையும், சம வெளியையும் கண்டுகளித்துக் கொண்டே உணவருந்துமாறு பல  இடங்கள் இருக்கின்றன.  இவற்றை மேலை நாட்டினர் அனுபவிக்கும் விதமே அலாதி. அவர்கள் அனுபவிப்பதை  நாம் காண்பதே சுற்றுலா போல இருந்தது . உணவு விடுதியின் ஓரத்தில், மலைச் சரிவைப் பார்த்த வண்ணமாய், கையில் ஒரு பீர் கேனுடன், சிற்றுடைகளில் காதலியையோ மனைவியையோ  அணைத்துக் கொண்டு, கையில் வைத்திருக்கும் டெலஸ்கோப்பில் எரிமலையை கண்டுகொண்டு,  தட்டு நிறைய உணவு வகைகளை நிரப்பிக் கொண்டு மணிக்கணக்கில் உட்கார்ந்து அனுபவிக்கின்றனர். தே பார்ன்  டு என்ஜாய்.

இதுதவிர, கேளிக்கைப் பிரியர்களா? அவற்றிற்கும் பஞ்சமில்லை. ‘அனைத்து’ வகையான கேளிக்கைகளும் உண்டு. இரவு விடுதிகள் அனைத்தும் வெகு நேரம் வரை  திறந்திருக்கின்றன. பியர்களும் அசைவ உணவுகளும் வழியும். கூடவே இசைக் கலைஞர்கள் பாடிக் கொண்டே இருக்கின்றனர்.  இசையும், நடனமும், முடிவேயில்லாத உணவுவகைகளும், மதுவும் வழிந்தோடும் இரவுகள்.  

சைவர்கள் எங்கேயாவது தந்தூரி ரொட்டியாவது கிடைக்கிறதா என அலைய வேண்டும்.  அசைவர்களுக்கு காணுமிடமெல்லாம் நாவில் நீரூறும். எங்கே பார்த்தாலும் மஸாஜ் சென்டர்கள். தாய் மஸாஜ், ஸ்டோன் மஸாஜ், லெக் மஸாஜ் என விதவிதமாய்.. சார்ஜைக் கேட்டால் தலை சுற்றும்.

இங்கே ஒரு காஃபி ப்ராஸஸிங் இடத்திற்குச் சென்றேன். எல்லாம் இந்தியாவிலேயே பார்த்ததுதான்.  ஆனால் இங்கே, ‘லுவாக் காஃபி’ என்று ஒன்று கொடுத்தார்கள். இதில் என்ன ஸ்பெஷாலிடி என வினவினால், காஃபி பழங்களை தேவாங்கு போல இருக்கும் ஒரு விலங்கு (ஏஷியன் பாம் சிவெட்) அப்படியே விழுங்குமாம். விழுங்கிவிட்டு காஃபிக் கொட்டைகளை மட்டும் அதன் மலத்தோடு புழுக்கை போடுமாம். அவற்றை சேகரித்து சுத்தம் செய்து, பின் வறுத்து காபிப் பொடி தயாரிப்பார்களாம். உவ்வேக்........ போங்கப்பா எனக்கு லியோ காஃபியே போதும்.


இங்கே விவரித்த்து கொஞ்சமே... இன்னும் காணவேண்டியது ஏராளம். நேரமும் காசும் உள்ளவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கேற்போன்ற சொர்க்கம் பாலி. சில படங்கள் மட்டும் கீழே!























Monday, October 16, 2017

துபாய்க்கு ஒரு பயணம்.

 தனது ஏழ்மையையும், மெச்சிக்கொள்ளும்படியில்லாத கலாச்சாரப்பிண்ணனியையும், கல்வியின்மையையும் ஆழக்குழி தோண்டிப் புதைத்துவிட்டு,  நாற்பதே ஆண்டுகளில் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த நாடு எதுவெனில், அது  UAE யின் அங்கமான துபை.

பனி மூடும் மலைமுகடுகள் இல்லை; நீர் வீழ்ச்சிகள் இல்லை; காடுகள் இல்லை; மக்கள் வளம் இல்லை; புராதணக் கட்டிடங்கள் இல்லை; தொழிற்சாலைகள் இல்லை. எனினும் உலக சுற்றுலாத் தலங்களில் தலையாய இடங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது இன் நாடு.

மக்கள் தொகையில் 80 சதமானவர்கள் வெளி நாட்டினர்.  யாருக்கும் வருமாண வரி இல்லை; அன் நாட்டு குடிகளுக்கு கல்வி இலவசம். மருத்துவ வசதி இலவசம்.  பெட்ரோலியம் உபயத்தில் துபை செழித்துக் கிடக்கிறது. ஒரு காலத்தில் எண்ணைய் வற்றிவிடக்கூடும் என்பதை உத்தேசித்து, சுற்றுலாவை முக்கியத் தொழிலாகமாற்றியுள்ளார் அந் நாட்டு மன்னர்.

இங்கே மக்களாட்சி இல்லை. சர்வ அதிகாரமும்ம ன்னரிடத்தும்,  அவர் குடும்பத்தினரிடமும் தான். ஆனால், உலகில் என்னென்ன சௌகரியங்கள் கிடைக்கிறதோ, அத்தனையும் தன் நாட்டு மக்கள் துய்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அவர். அவரது கணவுதான் துபை.

குற்றங்கள் மிகக் குறைவு. அரசு இயந்திரத்திடம் ஊழல் இல்லை;  நாட்டின் முன்னேற்றம், மக்களின் நலன் இவைகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறது அரசாங்கம்.  அரச குடும்பமாகவே இருந்தாலும், மக்களோடு மக்களாக, சாலை விதிகளையும் சிக்னல்களையும் மதித்து விதி மீறாமல் செல்கின்றனர். பல உயர் அரசாங்க அதிகாரிகள் கார்களையும், அரச குடும்பக் கார்களையும் சாலையில் பார்த்தேன். சைரன், பந்தோபஸ்து, கெடுபிடி ஏதும் காணோம். வரிசையில் காத்திருந்து சிக்னல் கிடைத்ததும் தான் கார் நகர்கிறது.

ஒழுங்கு என்றால் அப்படி ஒரு ஒழுங்கு! கிலோ மீட்டர் கணக்கில் வாகனங்கள்  காத்துக் கிடந்தாலும் ஒரு ஹாரண் சப்தம் இல்லை. லேன் மாறி புகுவோர் இல்லை. ஒரு வாகனத்திற்கும் மற்றொரு வாகனத்திற்கும் ஐந்து அடி இடைவெளி விட்டு நிற்கின்றனர். 

ஒரு படத்தில் வடிவேலு சொல்வாரே, அது போல, அப்படியே ரோட்டில் உணவைக் கொட்டி சாப்பிடும் அளவிற்கு, சாலைகள் யாவும் படு சுத்தம். ஒரு குப்பையைக் காணோம். அழுக்கான கார்களை வெளியில் எடுத்து வந்தால் அபராதம்;  அது யாராக இருந்தாலும்.

இப்படி ஒரு யோக்கியமான, நாட்டை மட்டுமே – அதன் மக்களை மட்டுமே கருதும் ஒரு யதேச்சியதிகாரி இந்தியாவிற்கு வாய்த்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை தடை செய்ய இயலவில்லை.

கடுமையான சட்ட திட்டங்கள். சட்டங்களை அவற்றை இயற்றியவர்களும், அவற்றை அமுல் படுத்துபவர்களும், பொது மக்களும் மீறுவதில்லை. சட்டத்தின் ஓட்டைகளைத் தேடுபவர்கள் இல்லை! விளைவு?  A disciplined  Nation. Growth is assured.  திறப்புவிழாவின் தேதியை நிர்ணயித்துவிட்டுத்தான், திட்டத்தையே  துவங்குகிறார்கள்.  துல்லியமாக நிறைவேற்று கிறார்கள். நிறைவேற்று பவர்களுக்கு எந்த விதமான் இடையூறுகளும் செய்வதில்லை.  இங்கே பண்ருட்டியில் ஒரு ரயில்வே மேம்பாலத்தைப் போடுகிறார்கள்..போடுகிறார்கள்... போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இன்னும் எத்தனை வருடங்களாகுமோ தெரியவில்லை. இத்தகைய நிர்வாகத்தைக் காண ஏக்கமாக இருக்கிறது.

சாலைகளில் மெர்ஸிடஸ்களும், லெம்போர்கினிகளும் உலா வருகின்றன. சர்வ சாதாரணமாக 12 லேன் கொண்ட சாலைகள். அத்தனையையும் மீறி துபையின்  நெருக்கடியான போக்கு வரத்து பிரசித்தம்.  பக்கத்து ஷார்ஜாவிற்குச் செல்லும் சாலையில் கண்ணிற்கெட்டிய தூரம் வரை கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாரத்தின் முதல் நாள் திங்கள் அல்ல.. ஞாயிறு. வியாழன் வெள்ளி விடுமுறை.  எனவே வியாழன் அன்று மாலையில் சாலைகள் மூச்சு முட்டுகின்றன. நம் ஊர் பல்ஸர்களை டெலிவரி பாய்கள் பயன்படுத்து கிறார்கள். டாட்டாவின் பஸ்கள் இருக்கின்றன. தொழிலாளர்களை பணியிடங்களுக்கு அழைத்துச் செல்ல.

மதியம் இரண்டு மணிக்கு துபை சர்வதேச விமான   நிலையத்தை அடைந்த பொழுது, சுள்ளென வெயில் வரவேற்றது. விமாண நிலையம் பெரிதெனப் கேள்விப்பட்டிருக்கிறேன். எவ்வளவு பெரிது என்பதை நேரில் பார்க்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது. Arrival இடத்திலிருந்து, இமிக்ரேஷன் கவுண்டர்களுக்குச் செல்ல மெட்ரோ ரயில் விட்டிருக்கிறார்கள்.  அதன் நீள அகல பரிமாணங்களை யூகித்துக் கொள்ளுங்கள்.

இமிக்ரேஷன் கவுண்டர்களில், திருப்பதி கூண்டுகளில் அம்முவது போலக் கூட்டம். ஆனாலும் சட் சட்டென தற்காலிக கவுண்டர்கள் திறக்கப்பட்டு பதினைந்து நிமிடங்களுக்குள் அத்துணை ஆயிரம்பேருக்கும் க்ளியரன்ஸ் கிடைத்துவிடுகிறது. ‘காமா சோமாவென’ செக்கிங் செய்வதில்லை;  முழுமையாக, என்ன கொண்டுவருகிறார்கள் என்பதில் உஷாராக இருக்கின்றனர். எல்லாம் எலக்ட்ரானிக் உபயம். போதை மருந்துகள் இருந்தால் கம்பி எண்ணுவது உத்திரவாதம். தடை செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன என்பதை கூகுள் செய்து, கவனமாகச் செல்வது உசிதம்.

உடைகள் விஷயத்தில் கவனம் அவசியம். ஷார்ட்ஸ் போடுவது அநாகரீகம். பிகினி சமாசாரங்களை உள்ளூரிலேயே விட்டுவிட்டு வரவேண்டும். கணவன் மணைவியாகவே இருந்தாலும், பொது இடங்களில் நாகரீகம் காப்பது அவசியம். கைகோர்ப்பது, அணைத்துக் கொளவது, நெருக்கமாக இருப்பது இவற்றிற்குத் தடா!  அதே போல பொது இடங்களில் புகை, மது போன்றவற்றிகும் தடை.  இடது கையால் பொருட்களை வாங்குவதோ-கொடுப்பதோ கௌரவமான செயல் அல்ல.

எனக்கு தூக்கம் வராது. ப்ரிஸ்கிரிப்ஷன் மருந்துகள் துணையோடுதான் உறக்கம். எனது துரதிர்ஷ்டம் xenox தடை செய்யப்பட்ட மருந்து. எனவே இங்கே புறப்படும் பொழுதே ப்ரிஸ்கிரிப்ஷனோடு மருந்து வாங்கிக் கொண்டு சென்றுவிட்டதால்  பிழைத்தேன்.

துபையிலும், அபுதாபியிலும் சில நாட்கள் கழிக்க உத்தேசித்திருந்தேன். அந்த நாட்கள் முழுவதும் பிரமிப்பு மயம். மனிதனின் கற்பனை எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ, அந்த அளவிற்கு ப்ரமாண்டமாய்,  சாத்தியப்பட்ட வடிவங்களில் எல்லாம், வாணுயர் கட்டிடங்கள்.  புகழ்பெற்ற துபை மால், உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கலிஃபா’ டவர், பணி உறையும் விளையாட்டு அரங்கம், மாலின் நடுவே பிரமாண்டமாய் ஒரு அக்கோரியம், கடலைத் தூர்த்து, ஈச்ச மரவடிவில் வடிக்கப்பட்ட செயற்கைத் தீவுகள்; துபையை இரண்டாகப் பிரிக்கும் க்ரீக் (அதில் கணிசமான தூரம் Man made),  இரவு நேரங்களில் க்ரீக் (Back water river) ஊடே மிதந்து செல்லும் வண்ணமிகு சிறுகப்பல்கள் என களிக்க ஏராளமான அம்சம். க்ரீக் படகுகளில் பயணம் செய்து கொண்டே, துபையின் இரவு நேர அழகையும்-சுவை மிகு உணவையும் ருசிக்கலாம். ஆர்கிடெக்டில் ஆர்வமுள்ளொருக்கு துபை ஒரு சொர்க்கம். புர்ஜ் கலிஃபாவின் 124 மாடிவரை சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கிறார்கள். 124 மாடிகளும் அறுபதே நொடிகளில் சென்றடைகிறது லிஃப்ட். அங்கிருந்து துபையைப் பார்ப்பது ஒரு visual delight.

துபை ஒரு Shopping Paradise. உலகில் என்னவெல்லாம் உற்பத்தி செய்யப்படுகிறதோ அவை யாவும் இங்கே கிடைக்கும். மத்தியமர் நெருங்கக்கூட இயலாத உயர்குடிகளுக்கான மால்கள், சாதாரணர்களுக்கான எதையெடுத்தாலும் 10 to 20 திராம்கள் போன்ற கடைகளும் இருக்கின்றன.  19 இந்திய ரூபாய் கொடுத்தால் ஒரு திராம் -  Arab Emirate Dirham -கிடைக்கும். பல இடங்களில் இந்திய ரூபாய்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.

துபையின் நகைக் கடைகள் உலகப் பிரச்சித்தமானவை.  நம் ஊர் கல்யாண், மலபார் நகைக் கடைகள் கூட இருக்கின்றன. கிராமிற்கு நாணூறு ரூபாயாவது விலை குறைவு.  நகைகளாக-சாதாரணமாக அணிந்துவரும் அளவிற்கு வாங்கி வரலாம். கிலோ கணக்கில் சூடிக்கொண்டு வந்தால், இமிக்ரேஷனில் மாட்டுவது உத்திரவாதம். எலக்ட்ரானிக் பொருட்கள் சகாயம்.  

ஐ-ஃபோன் 8, ரூபாய் 52,000 தான். உள்ளுர் சந்தையை சீனப் பொருட்கள் ஆக்கிரமிக்கின்றன.

உள்ளூர் மக்களுக்கு லைசென்ஸ் பேரில்தான் மது விற்கப்படும். ஆனால் ஹோட்டல்களில் ஏராளமான ‘பார்கள்’ இருக்கின்றன. அந்தந்த நாட்டு கலாச்சாரதிற்கு ஏற்ற கேளிக்கைகள் இருக்கின்றன. ஆபாசம் இல்லை.  பெண்கள் காரோட்டுகிறார்கள். சமயத்தின் பேரால் சட்டத்தில்  பாகுபாடு இல்லை.

சுற்றுலாப் பயணிகளில் கணிசமானோர் இந்தியர்களாக இருப்பதால், சைவ உணவுகள் கிடைக்கின்றன. அபுதாபியில் ‘சரவண பவன்’ கிளை கூட இருக்கிறது.  

நமது ஆங்கில அறிவு பல சமயங்களில் கைகொடுக்க மறுக்கிறது. காரணம் அவர்களது  உச்சரிப்பு. பணியாளர்களில் பலர் சீனர்கள் போலவோ, கொரியர்கள் போலவோ இருக்கின்றனர்.  நான் வாங்கிய போர்டிங் பாஸில், கேட் நெம்பர் இல்லை. கேட் நெம்பருக்கான இடத்தில் ஒரு * தான் இருந்தது.  போர்டிங் கேட்கள் எங்கே ஒளித்து வைக்கப்பட்டுள்ளன என வினவினால், ப்ராம்டாக பதில் சொல்கின்றனர். நமக்குத்தான் உச்சரிப்பு காரணமாக விளங்கவில்லை. ஒரு இளம் மங்கையிடம் விசாரித்ததில்           ‘நவ் கேத்? நவ் ப்தாப்ள..கேத் மெத்ராவ்!’  என பதில் சொன்னார். பேய் முழி விழிக்க வேண்டியிருந்தது.  நல்ல வேளையாக அருகே ஒரு பஞ்சாபி இருந்ததால், ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொன்னார். அதாவது, ‘No Gate number? No problem! Catch a metro!’ அவர்களுக்கு ‘ட்’ வராது! எல்லாம் ‘த’ தான்.

கீழ்மட்ட தொழிலாளர்களில் பெரும்பாலோர் இந்தியர்,பாகிஸ்தானியர், பாங்ளா, இலங்கை தேசத்தவர். கொளுத்தும் வெயிலில் வானுயர் கட்டிடங்களில் கயிற்றில் தொங்கிக் கொண்டும், கண்ணாடிகளைத் துடைப்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. வாட்டியடுக்கும் கடுமையான சீதோஷ்ண நிலையில்  தோட்ட வேலை, கட்டிட வேலை போன்றவற்றைச் செய்பவர்கள் பலரும் மேலே சொன்ன நாட்டினர்களே!  நன்கு படித்திருந்து நல்ல வேலையில் அமர்ந்தால் துபை சொர்க்கம் தான். கீழ் மட்ட வேலைகள் என்றால் சந்தேகமன்றி நரகமே!

இங்கே மழை என்பது அரிதானது. ஆண்டிற்கு 10 செ.மீ பெய்தாலே அதிகம். வறட்சி;உஷ்ணம். ஆனால் கடல் நீரைச் சுத்தம் செய்து (desalinisation) நகரெங்கும் வினியோகிக்கிறார்கள். அனைத்துக் கழுவு நீரும் முழுமையாகச் சுத்திகரிக்கப்பட்டு, அதன் மூலம் நகரின் சோலைகளும் மரங்களும், சொட்டு நீர்ப் பாசன முறையில் பராமரிக்கப் படுகின்றன.  மரங்களும் செடிகளும் வளர்வதற்கு ஏற மண் இல்லையாதலால்,  அவைகள் கூட இறக்குமதி செய்யப் படுகின்றன. எப்படி இருந்த நாடு, எவ்விதம் வளர்ச்சியடைந்துள்ளது என்பதை, அங்கே இருக்கும் துபை மியூசியத்தைக் கண்டாலே விளங்கும்.

எனக்கு வாய்த்த டூர் கெய்டு ஒரு தஞ்சாவூர்க்காரர்.  தமிழர். மாலிக் என்று பெயர். ப்ரொஃபெஷனல். எதைச் சொல்லவேண்டும். எப்படிச் சொல்ல வேண்டும்.. எதைச் சொல்லக் கூடாது என்பதில் வித்தகர்.

பெரிதாக மேலும் ஒரு விமாண நிலையம், ப்ரமாண்டமான கட்டிடங்கள், ஜெயண்ட் வீல், துறைமுகப் பணிகள் என இன்னமும் பல ப்ராஜக்டுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் துபை செல்லும் பொழுது பல மாற்றங்களைக் கொண்டிருக்கும், விந்தை நாடு. 

திட்டமிடலில் துபையில் நேர்ந்த இடையூறுகளைக் கவணத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு இன்னும் பெரிதாக, இன்னும் ஐம்பது வருட வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது அபுதாபி. அபுதாபியில் மிகப்பெரிய மசூதி இருக்கிறது. அனைவரும் செல்லலாம். சில உடைக் கட்டுப்பாடுகளோடு. பளிங்கினால் இழைத்து வைத்திருக்கிறார்கள்.

இப்படியும் ஒரு திட்டமிடல் இருக்க முடியுமா என்பதற்காகவும், ஷாப்பிங் அனுபவத்திற்காகவும்,  மனித முயற்சியினால் ஒரு பாலையை சோலையாக மாற்றவது எங்கனம் சாத்தியமாயிற்று என்பதற்காகவும், இந்த நாட்டைப் பார்த்து வரலாம்.

                        Click here for Some Photos


குறிப்பு:

1.    ஓரளவு ஆங்கில ஞானமும், அந்த நாட்டைப் பற்றிய அடிப்படைப் புரிதலும் இருந்தால், பேக்கேஜ் டூராக இல்லாமல், தனியாகச் செல்வது நல்லது.
2.    வெளி நாட்டு நாட்டு  நாணயமாற்றலை விமாண நிலையத்தில் செய்ய வேண்டாம். கூடுதல் செலவு.
3.    பட்ஜட் ஹோட்டல்கள் நிறைய இருக்கின்றன. கூகுளில் தேடிப் பார்த்தால் கிடைக்கும்.
4.    விமாணப் பயணத்தைத் திட்டமிடும் பொழுது, காலைப் பொழுதில் சென்றடையும் வண்ணம் திட்டமிடுதல் நல்லது.  புறப்படும் பொழுது இரவில் புறப்படல் நலம்.
5.    ஏதேனும் வாங்க மறந்துவிட்டால், ட்யூட்டி ஃப்ரீ ஷாப்கள் துபை விமான நிலையத்தில் வரிசை கட்டி நிற்கின்றன. அங்கே வாங்கிக் கொள்ளலாம்.