Wednesday, July 21, 2021

ஏன் அனைவரும்.கீதை பயில வேண்டும்.

 Almost everyone, whom I interact with regarding Srimad Bhagavad Gita, agrees that one should definitely read this holy scripture, at least once. Many of them do admit that one should also follow the teachings of Gita. But only a handful of them are able to recognise the real purpose of Gita. Why is there more stress on Gita than any other holy book? Of course, there are plenty of other holy scriptures available, especially in the Santana Culture.

Primarily, there are two reasons why you should read, understand and then implement the teachings revealed in Srimad Bhagavad Gita. These are summarised as under:

Srimad Bhagavad Gita is the essence of all the Vedic knowledge that the truth seekers have been able to gather till date or will ever be able to gather in the future, using the faculties of mind and body possessed by human beings. It may sound like a comparatively bold statement to you, but it is true. One is able to understand this statement when one witness the truths revealed in Gita being verified, very often, by modern science.

Srimad Bhagavad Gita teaches you how to handle that knowledge. It not only inculcates in you, the right and unbiased perspective of observing and knowing your own self as well as the entire creation but also teaches you how to handle that knowledge acquired through such observance. The beauty of the text is that all this has been done while explaining the narrative between two friends who are at the verge of entering into the most fierce battle of their lifetime.

Srimad Bhagavad Gita is, thus, a compendium of knowledge with detailed description on how to put that knowledge to practical use. It reveals the absolute truth and at the same time, it discourses you, while treating like a child who is bewildered on receiving a new toy but does not know how to handle that. It does not leave you to discover your own ways to handle and use that knowledge. It does not leave you brainwashed. Chapter by chapter it takes you on a journey to understand the various aspects of this Supreme knowledge and keeps on narrating how to master them and use them to raise yourself to the highest possible position in life.

Srimad Bhagavad Gita does not even prescribe one particular path or solution for you. Lord Krishna, while speaking as the Brahman itself, promises that your individual faith and choice will be honoured. He will fix your faith and will make you achieve whatever goal you choose for yourself in your life, be it the most demonic or the most divine. He definitely makes it clear that when you actually have the choice to wish for something in life then why run after petty things? Why not wish for the highest seat available in the creation, the seat of the Brahman? He lovingly invites you to His heavenly abode. It is up to you to decide. He has even elaborated the highest achievable positions, in almost every category, that you can desire for.

Srimad Bhagavad Gita is not only a book of wisdom. It is ‘the Book’ of the absolute truth, the absolute knowledge appended with a detailed manual on how to use that knowledge for your ascension. The entire absolute knowledge is revealed by the Lord in the second chapter only. After that, he takes on the challenge to satisfy the queries of Arjuna and makes sure that there is not even an iota of doubt left, in Arjuna, that remains unanswered. He keeps on delivering until Arjuna is convinced that he is ready to take on the world with the divine knowledge that he has just received.

It’s high time you also start equipping yourself with the absolute knowledge.


நன்றி:-unknown friend

Sunday, September 6, 2020

விடாக் கண்டன்! கொடாக் கொரோணா!

கொரோணா வைரஸ்,  சீனாவால், சீனாவில் ஊருவாக்கப்பட்டதால் வெகு நாட்களுக்கு நாட்களுக்கு வராது; சீக்கிரமே ரிப்பேர் ஆகிவிடும் என்ற கனவில் மண் விழுந்துவிட்டது.

உருவாக்கிய புண்ணியவான் ஜம்மென கால்மேல் கால் போட்டுக்கொண்டு,  வ்ளாடிவாஸ்டாக் என்னுடையது; லடாக், ஜப்பான், பசிஃபிக் எல்லாம் என்னிது என அழிச்சாட்டியம் செய்து கொண்டு, கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கன்றுக்குட்டி போல, துள்ளிவிளையாடுகிறான். உலகமே, குறிப்பாக இந்தியா விழிபிதுங்குகிறது. சீன 'ஹிரண்யனை' வதம் செய்ய ஏதாவது ஒரு கடவுள் அருள் புரியட்டும்.

விஞ்ஞாணிகள் எப்போதாவது வாக்ஸின் கண்டுபிடிக்கட்டும்; இல்லை... கண்டுபிடிக்காமலே போகட்டும்;  வாழும் வரை லாபமே; அழப்படாது; எப்படியாயினும் எல்லோருக்கும் முடிவு உறுதி; அது இன்றா நாளையா என்பதுதான் வினா- என்ற கீதாச்சார்யன் மனோபாவத்திற்கு வந்துவிட்டதால் பயம் அற்றுவிட்டது.

இந்த 'பக்குவத்தால்' கோவிட் குறித்த பல்வேறு நபர்களின் எதிர்விணைகளை ரசிக்க முடிகிறது.

 அரசியல்வாதிகள் பாடு நிம்மதி; கோவிட் 19 அல்லது கோவிட்20 ,  எதுவாக இருந்தாலும் , 'ஆக..  பழனிச்சாமி ஊடனே பதவி விலகணும்'  என்று ஒரேமாதிரி ஒப்புவிப்பார் ஒருவர். '

மதச்சார்பு பிஜேபி ஒழிக ' என்பார் பப்பு'. 

கம்மிகளுக்கு பிரச்சினை இல்லை; யாராவது வாய்க்கு வந்த நபரைக் குறித்து 'முர்தாபாத்'  கோஷமிட்டுவிட்டு கலையலாம்.  

பிஜேபிக்கு கைவசம் தயாராக இருக்கு, 'தேச விரோதி' பட்டம். அதை சகட்டுமேனிக்கு வினியோகம் செய்வர். 

எனக்குத் தெரிந்த பலர் பதட்டத்தின் உச்சியில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் 'பழனிச்சாமி வேஸ்ட்' என்றார்; சரிசார் என்றேன். அப்புறம் 'மோடி , ஒழிக'  என்றார்; சரி சார்.. ஒழிச்சுடலாம். என்ன நினைத்தாரோ 'இந்த விஞ்ஞாணிகள் எல்லாம் தெண்டம்' என சான்றுரைப்பார்.

அப்புறம் இந்த முருகன் எல்லாம் சக்தியில்லாதவர்; இத்தனை நாட்களுக்குள் மருந்து கண்டு பிடிக்கலியே என்றார்.

இவரது ஒவ்வொரு ஐயத்திற்கும் பதில் சொல்லி மாளலை. எனவே, எனது நிம்மதி கருதி, அவர் என்ன சொன்னாலும் 'சரி..சரி ' எனபதோடு சரி.

'இன்னிக்கு ராத்திரிக்குள் வாக்ஸின் ரெடியாயிடுமா... ' என நிஜமாகவே பீதியடைந்து கேட்பார். 'தெர்ல சார்' என மையமாகச் சொல்லி வைப்பேன்.

'அந்த பழனி முருகனின் நவபாஷாணத்தில் கொஞ்சம் சுரண்டி சாப்பிட்டால் சரியாகாது?' 

அதுக்கென்ன அவரது ஒரு விரலை ஒடித்து எடுத்து வந்திடலாம்.

'அப்புறம், அந்த நடராஜர், சிவபெருமான், அம்மன்கள் எல்லாம் என்னதான் பன்றாங்க?'

'அவுங்கெல்லாம் த.நா நியூஸோ அல்லது சீரியலோ பாத்துக்கிட்டிருப்பாங்க போல.. போய் எழுப்பிகிட்டு வரேன்..'

'சார்.. நீங்க தமாஷ் பண்றீங்க; நான் எவ்வளவு சீரியஸா பேசிகிட்டிருக்கேன்..'

'சேச்சே..அப்படியெல்லாம் இல்லை; வாக்ஸின் கண்டுபிடிக்காத சாமி இருந்தால் என்ன .. இல்லாவிட்டால் என்ன?'

'அப்பறம் அந்த வேளாங்கன்னி, நாகூர் சாமி கூட , மருந்தைக் கணாடுபிடிக்கலை பாருங்க..'

ஐயய்யோ.. இப்ப இவரிடமிருந்து தப்பிக்க என்னதான் செய்யறது..?

'எல்லா சாமியும் தெண்டம் எனத் தீர்மாணம் போட்டுடலாம் சார்.. இப்ப குட் நைட் சார்'

வேறோருவர்  உள்ளார்.. எல்லாருமே இறந்துடனும். புதுசா ஒரு நல்ல உலகம் வரட்டும் என்பார். அவருக்கும் 'சரி சார் ' தான் பதில்.

மற்றும் ஒருவர் இருக்கிறார். தன்னைத்தவிர மற்றெல்லோரும் மூடர்கள்; ஊழல்பேர்வழிகள்' என்பார். ஆனால் மறைவாக வேண்டிய எச்சரிக்கைகளைச் செய்து கொள்வார்.

இன்னொருவர், 'கொரோணா என்ற வியாதியே இல்லை; மோடி சதி' எனபார். 'ஆமாம்..ஆமாம் உலகமே பொய் சொல்கிறது' என பதிலுரைக்க வேண்டியதுதான்.

ஒர் உறவு, தொடர்ந்து , 'நீங்க ஏன் வயசான காலத்தில் கஷ்டப்படுறீங்க.. எங்க கூட வந்துடுங்க'  என சொல்லிக் கொண்டே இருந்தார். பொறுத்துப் பொறுத்து சலித்துப்போய், நாளை மறுநாள் அங்கு வந்துவிடட்டுமா?"  என்றேன். திடுக்கிட்ட அவர், 'வீட்டில்  இப்ப அரளிப்பூ நன்றாக பூக்கிறதா?' என டிராக் மாறினார். இனி அவர் 'என் வீட்டிற்கு வரலாமே..' என மறந்தும் சொல்ல மாட்டார்.

பலருக்கும் கோவிட்19 பிரச்சினையில் லோக்கல் கட்சி அரசியலைச் சம்பந்தப் படுத்தாமல் சிந்நிக்கவே இயலவில்லை. 'இது இயற்கைக்கும் மனித இனத்திற்குமிடையேயான போராட்டம்; இப்படித்தான் நிகழும். சரித்திரத்தில் பல சான்றுகள் உள்ளன. அவற்றைச் சமாளித்துதான் வாழணும்; உள்ளூர் அரசியலை இணைப்பது வெட்டி வேலை '  என்றால் அடித்துவிடுவார்கள் போல.

பல இடங்களை; கோயில்களைத் தரிசிக்கணும் என்பது  என் அவா. கோவிட் முடிந்து, அதுவரை நாமும் உயிரோடிருந்து, அதற்குப்பின் விரும்பிய இடங்களுக்குப் போக 'டைம்' இருக்குமா? தெம்பும் ஆரோகயமும் இருக்குமா என ஒரு நப்பாசை.  இதற்கும் வேறொரு நன்பர் பதில் வைத்திருந்தார். 'உங்க வீட்டில் நீங்கள் விரும்பும் சிவன், அமர்ந்திருப்பதாகப் பாவித்துக் கொள்ளுங்கள்' என்றார். . 'சாயங்காலம் கடைக்குப் போகாமல், வீட்டில் சாப்பிடும் பிஸ்கோத்தையே அடை-அவியலாகப் பாவித்துக் கொள்வதுதானே' என சொல்ல விரும்பி மென்று விடுவேன்.

நித்தியப்படியாக  வாங்குவது மறந்து மாஸ்க்குகளையும், சானிடைசர்களையும் வாங்கிக் குவிக்கின்றனர் பலர். கபசுரக் குடிநீர் ஒரு மூட்டை..   மார்க்கெட்டில் இஞ்சியை இல்லாமல்ஸசெய்துவிட்டார்கள். கைகழுவியே கையைக் கரைத்துவிட்ட பலர்.

தெருவிற்கே சானிடைஸர் அடிக்கும் பலர். ஆறுமாதகாலமாக கதவை அடைத்துக் கொண்டு, பதுங்கிக்கிடந்து, கண்களை மட்டும் வெளியே நீட்டும் பலர்.

எனக்கொன்றும் வராது என எகத்தாளமாகச் சொல்லிக்கொண்டே அட்மிட்டாகி  மேலுலக ப்ராப்தி அடைந்தோரும் உண்டு. இத்தகைய மனிதர்களின் செய்கைகளின் கண்டுகொண்டது என்னவென்றால், வெளிப்புற ரியாகக்ஷன்  எப்படியிருந்தாலும், உண்மையில் அவர்களை ஆட்டிப்படைப்பது பீதி. உயிர்ப்பயம்.எந்தவிதமான தைரியமூட்டல்களும் பயன் தருவதில்லை. 

ரிப்வான் விங்கிள் மாதிர், கொஞ்ச வருடம் தூங்கி,  எல்லாம் சரியானபின் எழுந்து வர வாய்ப்புள்ளதா....? 

ஹலோ..ஹலோ நில்லுங்க! ஓடாதீங்க@









Monday, August 31, 2020

வியாபார ஆரோக்கியம்.

வீட்டில் களேபரம். ஆளாளுக்கு யோசனை! பரபரப்பு! இங்கும் அங்குமாகப் பாய்கின்றனர். என்ன ஆச்சு? யாராவது காசுள்ள பசையான  விருந்தினர் வந்துவிட்டாரா? 

ஒன்றுமில்லை; வீட்டிற்கு காய்கறிகளும் மளிகை சாமான்களும் வாங்கி வந்தாயிற்று. இவைகளை வீட்டினுள்ளே அழைத்து வருவதற்கான முஸ்தீபுகளுக்குத்தான் இப்படியான ரணகளம். உப்பு, மஞ்சள், வினிகர்,வெண்ணீர் என அனைத்துவகையான அபிஷேகங்களுக்குப்பின்னும்  இரண்டு மணிநேர சன்பாத் (வெயிலில் வை)ஆனால்தான் ஃபிரிட்ஜ்க்குள் காய்கனிகள் குடிபுகும்.

கொரோணா காலம். வாயைத் திறக்கப்படாது. என்னவோ செய்து கொள்ளட்டும்.  நமக்கு விபரம் போதாது.

ஏதாவது சொன்னால், 'உனக்கு வயசாயிடிச்சு; யூ டோன்ட் நோ எனிதிங். யூ மஸ்ட் அவேர்  ஹவ் த வைரஸ் ஸ்பரெட்ஸ் அண்ட் ஹவ் அக்ரஸிவ் இட் ஈஸ். வி டோன்ட் டேக் எனி சான்ஸஸ்.. ஓ.கே?' என மருமகள் வாயை அடைத்து விடுவாள்.  

நமக்குப் புகட்டப் படும் செய்திகள் யாவும் பீதியூட்டுவதாகத்தானே இருக்கு? அல்லது பீதியடைய வைக்கும் செய்திகளை மட்டுமே சொல்கிறார்கள். 

மாதம் ஒருகிலோ உப்பு வாங்கியது மாறி, பத்துகிலோ உப்பும், ஒருகிலோ மஞ்சள் போடி வாங்குகிறோம். 50 கிராமைத் தாண்டாத மிளகு, ஜீரகம், மஞ்சள் பொடியெல்லாம் இப்ப  கிலோக் கணக்கில் வாங்கப்படுகிறது.. 

உபரியாக,  இஞ்சியும் எலுமிச்சையும் சாக்கில் கிடக்கிறது.

ஷோகேஸில் சரித்து வைக்கப்பட்டிருந்த, ஒட்டடை அண்டிய போட்டோக்கள் எல்லாம் பரணில் ஏற, அந்த இடத்தை இம்யூனிட்டி பூஸ்டர்கள் பிடித்துக் கொண்டன. தினுசு தினுசான வண்ணங்களில் வைட்டமின் மாத்திரைகளையும் ஜிங்க்  டப்பாக்ஙளும் வாங்கிக் குவித்து விட்டனர். எலுமிச்சையையும் இஞ்சியையும் கண்டால் தலைதெரிக்க ஓடியவர்கள், லிட்டர் லிட்டராக குடிக்கின்றனர்.  ரவாதோசையில் கவனமாக மிளகைப் பொறுக்கி எறிந்தகாலம் காணாமற் போச்சு.

இச்சந்ததியினர் கவனமாக, எச்சரிக்கையாக இருக்கின்றனர். அதெல்லாம் சரி. அதென்ன இம்யூனிட்டி பூஸ்டர்? ஆக்ஸிலரேட்டர் மாதிரி அழுத்தினால் வேகம் பிடிக்குமா இம்யூனிட்டி?   எந்த வெப் பக்கத்தைத் திறந்தாலும் இந்த பூஸ்டர் விளம்பரம்தான்.

முன்பு, காலையில் கம்பு அல்து கேழ்வரகு  களி உருண்டைகளைத் தண்ணீரில் கரைத்துக் குடித்தோம். சிலர் பழைய சோற்றினைப் பச்சைமிளகாய் துணைகொண்டு சாப்பிடுவர். 'பொறுக்குமா ஹெல்த் பிஸினஸ் வியாபாரிகட்கு?'

காலையில் கார்ன் ஃபளேக்ஸ் சாப்பிடு என்றனர். சிரமேற்கொண்டு கார்ன் அவலை வெட்டித் தள்ளினோம். அப்புறம் ஓட்ஸ் என்றனர்.  குதிரைகள் கோபித்தனவா தெரியவில்லை. அதையும் வெளுத்துக் கட்டினோம். நமக்கு 'ஹெல்த் கான்ஷியஸ்' முக்கியமல்லவா? பின் படிப்பிற்கு பொருள் இல்லாமற் போய்விடுமே!

அப்பறப் க்ரீன் டீ குடி என்றனர். கான்ஸர்-எய்ட்ஸ்-TB ஏதும் அண்டாது; உடம்பு  இளைக்கும் என்றார்கள். Really? கேன்ஸரை அண்டவிடாதா?  இதைக்குடித்தால் இனி சூப்பர் மேன்தான்  என்றனர். மாய்ந்து மாய்ந்து குடித்தோம். வியாபாரம் பில்லியன் கணக்கில்.

அப்பறம் ஒல்லிதான் ஆரோக்கியம், அழகு என்றனர். ஜுரோ சைஸ் இடுப்பு என்றனர். அப்படியே ஆகட்டும் என்றோம். 

உடம்பு இளைக்க,  'தின்பதைக்குறை' என்பதற்குப் பதிலாக ஜிம்மிற்குப் போ' என்றனர். ஓட்டமாய் ஓடி வருடாந்திர சப்ஸ்கிருப்ஷன் கட்டினோம். அவர்களுக்குத் தெரியும், ஜிம்மெல்லாம் பிரசவ வைராக்கியம் போலத்தான் என. 

பின்,   'க்ளூடன் ஃப்ரீ உணவு'  என ஆரம்பித்து வைத்தனர். இரண்டு சதமான மக்களுக்கு க்ளூட்டன்  அலர்ஜி இருக்கக் கூடும்.  ஆனால் MNC க்களின் வெற்றி 20% மக்களை க்ளூட்டன் ஃப்ரீ உணவுகளைத் தேர்ந்தெடுக்க வைத்ததுதான். இவ்வகை ஊணவுகள் சாதாரண கோதுமை ரொட்டிகளை விட பன்மடங்கு விலை அதிகம். 42 பில்லியன் டாலர் பிஸினஸ், இந்த க்ளூடன் ஃப்ரீ ஊணவு.

நம் ஊர் நெய், வெண்ணை, தேங்காய்  உணவுகளின் மீது கொழுப்பு என்று பழி சுமற்றி சனோலா சஃபோலாக்களைச் சாப்பிடு என்றனர். மறுபேச்சின்றி நெய்யை ஓரம்கட்டினோம். 

ஓய்ந்த களைப்பான நேரத்தில் கோலாக்களைக் குடி என்றனர். 'அப்படியே ஆகட்டும் எஜபமானரே' என பாட்டில் பாட்டிலாக விழுங்கினோம்; ஒவ்வொரு கோலாவிலும் 40 கிராம் சர்க்கரை உள்ளது என்பதை மறந்து.

பசும்பாலை கொழுப்பு எனச்சாடி, பதாம்பாலையும் சோய் மில்க்கையும் முன்னிறுத்துகின்றனர். நாமும் கொழுப்பற்ற பாலைஸநோக்கிப் படையெடுத்தோம்.

ப்ரோட்டீன் பௌடர் என ஆரம்பித்தனர். ஆம்வேயில்  டின்டின்னாக வாங்கிக் குவித்தோம். 46 கிராம் புரொட்டீன் சாப்பிடவில்லை யெனின் யாரும் நம்மைச் சிறையில் தள்ளமாட்டார்கள். உடம்பு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். ஆனாலும் பதறினோம். 5.2 பில்லியன் டாலர்  பிஸினஸ் ஆயிற்றே!

வெள்ளை அரிசி, சிவப்பரசியை விட மாற்று குறைந்ததுதான்.ஆனால் விலையைக் கவனித்தீர்களா? 40 ரூபாய் மற்றும் 80 ரூபாய்.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க அவர்கள் பசும்பாலிருந்து நீக்கிய கொழுப்பை என்ன செய்கிறார்கள?  கடல் உப்பிலிருந்து நீக்கிய பல மினரல்களை என்ன செய்கிறார்கள்? வெண்மையாக் கப்பட்ட சோடியம் குளோரைடை மட்டும்தானே நாம் வாங்குகிறோம். நீக்கப் பட்டவையும் அவர்களுக்குத்  துட்டு! 

அப்பறம் 'வைட்டமின் வாட்டர்' தனிக்கதை. 

வூஹான் வைரஸ் வந்தது. இதோ..உலகு அல்லோல கல்லோலப் படுகிறது. மரண பீதியை மிகைப் படுத்தி விதவிதமான இம்யூனிட்டி பூஸ்டர்கள், சானிடைசர்கள், மாத்திரைகள், மாஸ்க்குகள் என சந்தையில் இறக்கி கல்லா கட்டுகின்றனர்.

சர்வதேச வியாபாரிகளின் வெற்றி ரகசியம் என்னவென்றால், ஆரோக்கிய விழிப்புணர்வு என்ற பெயரில் அனைத்து மக்களையும் பாதுகாப்பற்றவர்களாக (Insecure) உணர வைப்பதுதான்.  இந்தப் பதட்டத்தை, பாதுகாப்பின்மை போன்ற சூழலை, பீதியை உருவாக்கிவிட்டால் வியாபாரம் பிய்த்துக் போகாதா? 

பாரம்பர்யமோ அல்லது நவீன ஜங்க் ஃபுட்டோ அனைத்திற்கும் பின்னால் உலக வணிகர்கள் இருக்கிறார்கள்.

இப்போது நிலவும் கொரோணா காலத்தைப் பயன்படுத்தி துட்டு பார்க்கிறார்களா அல்லது துட்டு பார்க்க கொரோணா  ஏற்படுத்தப்பட்டதா?  ஏனெனில் உணவு, உடை, ரசனை, பழக்கம், கலாச்சாரம் என எல்லாவற்றையும் மாற்றும் திறனும் வல்லமையும் பணமும்  கொண்டவர்கள் சர்வதேச வியாபாரிகள்.

சரித்திரத்தில் பல கேள்விகளுக்கு விடையில்லை. இந்த பெண்டமிக்கும் அதில் ஒன்றாகி விடுமா?



Friday, October 4, 2019

நினைவுகள் பேசினால்...


எனது இல்லத்தில் தொலைக்காட்சி இணைப்பைத் துண்டித்து இரு வருடங்களாகின்றன. காரணம் சற்று விந்தையானது. கொலை. தமிழ்க்கொலை. ஒரு அறிவிப்பாளருக்கும் ண-ன, ள-ல சரியாக உச்சரிக்க வராது. ழ-வரவே வராது. வாக்கி யங்களை தன்மையில் ஆரம்பித்து படர்க்கையில் முடிப்பார்கள். ‘தளைவர் அவர்கல்... , மளை பெய்யும் ..இன்ன பிற.

சற்றே ஒதுங்கி பாடல்களை ஒளிபரப்பும் அலைவரிசைக்கு மாறினால், தீர்ந்தது கதை. அவர்கள் பாடுவது தமிழில்தானா அல்லது வேறு ஏதாவது மொழியா என ஆராய வேண்டியி ருக்கும். ‘நம்ம புல்லீங்க, எள்ளாம் பயங்கறோம்..’

கண்ணதாசன், வாலி போன்றோரின் கொஞ்சு தமிழைக்கேட்டு பழகியபின், இவற்றை எங்கே கேட்பது? விஜய் தொலைக் காட்சி மாதிரியான பொழுதுபோக்கு சானல் ஸ்டேஜ் ஷோக்களில், அறிவிப்பாளர்கள் அடிக்கும் கொட்டம் தாங்காது. தமிழை ரணகளப் படுத்திவிடுவர்.

பள்ளிப்பருவத்தில் எனது தமிழாசிரியர், தவறுதலாக ‘எளுமிச்சை’ என நான் உச்சரித்ததற்காக, ஒரு பீரியட் பூராவும் வெயிலில் நிற்கவைத்தார்.  அவர் நமது தொலைக்காட்சி அறிவிப்பாளர்களைக் கண்டால் என்ன செய்வாரோ? டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கூட, அரிதாகவே பிழையற்ற தமிழைக் காண முடிகிறது.

விந்தையாக, தமிழ்-தமிழ் என அக்காலத்தைவிட, தற்போது தான் அதிகமாக கூவப்படுகிறது;  தமிழின்பேச்சுத்தரம்-எழுத்துத்தரமும் இப்போதுதான் அதளபாதாளத்தில். வேறெந்த மானிலத்திலாவது, அவரவர்கள் தாய்மொழியினை இவ்வளவு சிதைக்கிறார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டியுள்ளது.

பெரும்பகுதியான நகர்ப்புர பள்ளிச் சிறுவர்-சிறுமியர்களுக்கு சரளமாக தமிழ் வருவதில்லை. ஆங்கிலம்தான். ஆங்கிலமோ அல்லது ஹிந்தியோ, அதிகப்படியான மொழிகளைக் கற்றுக்கொள்வதில் தவறேயில்லை. ஒவ்வொரு மொழியும் இன்னும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துபார்க்கும் சந்தர்ப்பத்தை அளிக்கிறது; ஆனால் நிச்சயமாக தாய்மொழியினைப் புறக்கணித்து அல்ல. தற்போது நிலவும் இருமொழி-மும்மொழிப் போராட்டங்கள் யாவும் ‘தமிழ்’ என்ற பதாகை தாங்கி நிற்கின்றனவே தவிர, ஆங்கிலத்திற்கு வால்பிடிக்கும் இயக்கங்களாகவே நடமுறையில் மாறியுள்ளன. நமது பிள்ளைகள் தமிழின்மீது இயல்பாகக் கொண்டிருக்கவேண்டிய உறவு, மெல்ல-மெல்ல மறைந்துகொண்டிருக்கிறதோ என அஞ்ச வேண்டியுள்ளது. சிறார்களது வார்த்தை வீச்சு (வெகாப்லரி),  நூறைத்தாண்டுமா என்பதே சந்தேகம்.

தமிழ் ஆசிரியர்கள் தங்களது தமிழ் ஞானம், உச்சரிப்பு குறித்து அவர்களே சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும். மானவர்களது தமிழ் ஆர்வம் தமிழாசிரியர்கள் மூலமாகவே அடுத்த தலைமுறைக்கு செலுத்தப் படவேண்டும். ஏனெனில் பெற்றோர்கள் தொலைக்காட்சித் தமிழில் மூழ்கிக் கிடக்கின் றனர்.  சேக்கிழார், திருமூலர், சங்க இலக்கியகர்த்தாக்கள், காளமேகம் போன்றோர்களது பெயர்களையாவது பெற்றோர் அறிந்திருப்பார்களா எனச் சந்தேகம். 

என்காலத்தில், பெரியவர்கள் வீட்டிற்கு வந்தால், ‘எங்கே, இரண்டு தேவாரம் சொல்லு, செய்யுள் சொல்லு  என குழந்தைகளைப் பாடச்சொல்லிக்கேட்பர். தவறிருந்தால் திருத்துவர். அந்த அளவிற்கு ‘இயல்பாகவே  தமிழ் நம்மிடையே கலந்திருந்த்து.

தற்போது, தங்களது குழந்தைகள் பெயரைக் கூட, தமிழில் வைக்க மறுக்கும் காலம். காளையன் என்றால் மட்டம்- ரிஷப் என்றால் ஆஹா! கருத்தம்மா என்றால் தூ... ஷியாமளா என்றால் பிரமாதம்; வெள்ளையம்மா என்றால் அபத்தம்- ஸ்வேதா என்றால் ஃபேஷன்.

பள்ளி, பட்டப் படிப்பு, வேலை, திருமணம், குழந்தைகள் என்ற அதிவேகச் சுழலில் தாய்மொழி-கலாச்சாரம் போன்றவை தள்ளிப்போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வாழ்வின் வேகம் குறைந்து,  நமது மொழி எங்கே எனத் தேடத் துவங்கும் போது,   பின்னாலிருந்து காலம் கடந்துவிட்டது...போஎன்று சொல்லி தமிழ் நகைக்கும்.

உண்மையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்வரை தமிழ் மட்டுமே எனக்குத் தெரிந்த மொழியாக இருந்தது.  எனக்கு மட்டுமல்ல, பல மானிலத்தவர்க்கும் அவரவர்கள் தாய்மொழி மட்டுமே அறிந்தவர்களாக இருந்தனர்.  பின்னாட்களில்தான் பல மொழிகள் வாழ்வில் இடம் பிடித்தன. 

இன்று பல மத்தியதர, உயர்மத்திய தர குடும்பங்களில் ஆங்கிலம் குடும்ப பேச்சு மொழியாக மாறிவருகிறது. அவர்களது நித்தியப்படி வாழ்க்கையிலிருந்து சிறிது சிறிதாக தமிழ் வெளியேறுகிறது.

தாங்கள் ஆங்கிலத்திற்குப் பழகிவிட்டது குறித்து பலரும் பலரும் பெருமிதம் கொள்கின்றனர். ஆனால் நம்முடைய தாய்மொழியோடு எந்தவிதமான உறவு இருக்கிறது என்பதைப் பற்றியும், அந்த உறவு முறியும்போது அது எந்தவிதமான சமுதாய தாக்கங்களையும், வலிகளையும் ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி பலரும் கவலைகொள்வதில்லை.   நவீன, தாராளமய யுகத்தில் நமது வாரிசுகள் முகமிழந்த மனைதர் களாக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். நமது அடையாளங்களான மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கம், உணவுமுறை ஆகியவற்றைத் தொலைத்து,   உலக மயமாகி விடும் அபாயம் சடுதியில் வாய்க்கும்.  நமது மண்ணோடு நம்மை அடையாளப்படுத்தும் முக்கியமான அம்சம் நமது தாய்மொழி. திரும்பவும் நமது மொழியோடு நம்மை இணைத்துக்கொள்ள இயலாத சூழலுக்கு ஆட்படுகிறோமோ என அச்சமாகவே உள்ளது.
வேலை, படிப்பு முக்கியம்தான்! கூடவே  நம்முடைய வேர்களிலும்  கவனத்தைச் செலுத்துங்கள் என்கிறேன்.  
நான் ஹிந்திக்கோ-ஆங்கிலத்திற்கோ எதிரானவன் அல்லன். ஆனால் நம்மீது ஆதிக்கம் செலுத்தும்  மொழியைக் கற்பதில்தான்  பிரச்சனை இருக்கிறது.  புதிய மொழி நமது தாய்மொழியை விரட்டிவிட யத்தினிக்கும்போதுதான் பதைப்பு உண்ணாகிறது.  பல மொழிகள் ‘கோஎக்ஸிஸ்ட்’ செய்ய முடியாது  என்று சொல்லவில்லை. ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள் என்கிறேன். கொஞ்சம் நேர்மையாக சிந்தித்தால், ஆங்கிலம் எவ்வாறேல்லாம் நமது வீட்டின் உள்ளிலும்-புறத்திலும் ஆதிக்கம் செலுத்தி, நமது வாழ்க்கை முறையை மாற்றியிருக்கிறது எனப் புரியும். 
புறக்கணிக்கப்படும் தாய்மொழி போட்டியிடுவதற்கு வழியே இல்லாமல் மெல்ல மெல்ல நம்மிடமிருந்து நம்மையும் அறியாமல் அப்புறப்படுத்தப்படுகிறது. எனக்கு நேரடியாகவும் சற்று சுற்றிவளைத்தும் 20க்கும் மேற்பட்ட பேரன்கள்-பேத்திகள். பெரும்பாலோருக்கு தமிழ் படிக்கத் தெரியாது!   
அமெரிக்கா போன்ற பிற நாடுகளில் பெற்றோரின் குடியேற்றத்திற்குப் பின், தாய்மொழியினை, அது தமிழோ-ஃப்ரஞ்சோ-போர்ச்சுக்கீஸோ, எதுவானாலும் தாய்மொழியினை நன்கறிந்த குழந்தைகளின் சதமானம் குறைந்து கொண்டேவருகிறதாம். விதிவிலக்குகள் இருக்கலாம்.
தாய்மொழியினை மறக்கும்பொழுது,  தங்களது வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும்  தேய்வுறுகிறது. மொழிக்கு நினைவுகளையும், வாசனைகளையும் மீட்டெடுக்கும்  சக்தி உண்டு.  மொழி, நம்முடைய அனுபவங்களோடு பின்னிப்  பிணைந்திருக்கும்.  தாய்மொழியினைப் பேசும்பொழுது, அது நம்மை நமது பழைய நினைவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் இட்டுச்செல்லும்.  ‘....மோர் என்று பேர்படைத்தாய், மும்பேரும் பெற்றாயே.....’ என்ற காளமேகப் புலவரின் சிலேடையை அசைபோடும் பொழுது, ஆனையாம் பட்டியையும், ஆத்தூரையும், அங்கே மோர் விற்ற கவுண்ட மூதாட்டியும் நினைவில் வந்து போகிறாரே? ‘பாபா ப்ளாக்ஷிப்’ பாடினால் அல்லது ‘ரெயின் ரெயின் கோ அவே’ பாடும்பொழுதோ எது நினைவிற்கு வரும்?
இளவயது துள்ளல்களையும், அல்லல்களையும் நினைவிற்கு கொண்டுவருவது மொழிதானே?  மொழி அனைவரது சிறுவயது நினைவுகளோடு பின்னிப் பிணைந்திருக் குமல்லவா?பின்னர் பிற மொழிகளில் புலமை அடைந்தாலும், தாய் மொழியின் சிறப்பு தனிதான். நினைவுகள் பேசினால், அது  தாய்மொழியி மூலமே பேசும்.

ஜூலி ஷெடிவி சொல்கிறார்: (அவரது வார்த்தைகளிலேயே-தமிழாக்கம்: திரு கிருஷ்ணன் சுப்ரமணியன்) “இயற்கையான மொழியிலிருந்து விலகும்போது உங்களை உருவாக்கிய ஒட்டுமொத்தக் கலாச்சாரத்திலிருந்து நீங்கள் விலக நேரிடுகிறது. நீங்கள் உள்வாங்கிய அறங்களையும், விதிகளையும் வெளிக்காட்டிய புத்தகங்கள், திரைப்படங்கள், கதைகள், பாடல்கள் ஆகியவற்றை நீங்கள் நெருங்க இயலாமல் போகிறது. உங்கள் குடும்பத்தை தங்களோடு அரவணைத்துக்கொள்ளும் ஒரு சமூகத்தை அல்லது ஒரு தேசத்தை நீங்கள் இழக்க நேரிடுகிறது. உங்கள் அடையாளத்தை நீங்கள் இழக்கிறீர்கள். இந்தத் துண்டிப்பு கடுமையானது. 2007ல் பிரிட்டிஷ் கொலம்பியாவின் குடிகளினிடையே டார்சி ஹாலட் என்ற ஆய்வாளர் நடத்திய ஆய்வு ஒன்றில், தங்களது மொழியைப் பேச இயலாதவர்களில் (பாதிக்கு மேற்பட்டவர்கள்) இளவயதில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை தங்களது மொழியைப் பேசும் சமூகங்களில் இருந்ததை விட ஆறு மடங்கு அதிகமாக இருந்தது என்று கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் தெரசா லாஃப்ரம்பாய்ஸ் என்ற மனவியலாளர், அமெரிக்க-இந்திய பதின்ம வயதினரிடையே தங்களது மொழியைப் பேசுபவர்களும் மரபைப் பின்பற்றுபவர்களும் அப்படிச் செய்யாதவர்களை விட  பள்ளியில் நல்ல முறையில் செயலாற்றினர் என்று கூறினார். இது போன்ற நிகழ்வுகள் கண்டங்களைக் கடந்து நடந்துகொண்டிருக்கின்றன. 2011ல் ஆஸ்திரேலியா புள்ளிவிவரக் கணக்கு ஒன்று அந்நாட்டுப் பழங்குடியினரிடையே தங்கள் தாய்மொழியைப் பேசியவர்கள் குடிக்கும் போதைக்கும் அடிமையாகும் வாய்ப்புக் குறைவு என்று தெரிவிக்கிறது.”
“தற்கொலைகளைப் பற்றி ஆய்வு செய்த மைக்கேல் சாண்ட்லர், கலாச்சாரத் தொடர்ச்சி ஒருவரை வலுப்படுத்தி தங்களுடைய அடையாளத்தை நிலைநிறுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது என்று குறிப்பிடுகிறதார். இந்தத் தொடர்ச்சி இல்லாவிடில், பழங்குடிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது என்றும் அவர்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுகிறது என்றும் எச்சரிக்கிறார். கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றை இணைக்கும் சங்கிலியை அவர்கள் இழக்கும் அபாயத்திற்கு உள்ளாகிறார்கள் என்கிறார் அவர்.”
‘அம்மா-அப்பா’, மம்மி, டாடி யாக மாறி, பிற்பாடு மாம், டாட் என்று மாறி அந்த ‘அம்மா’ வின் உணர்ச்சிகளையெல்லம் அடியோடு அழித்துவிட்டன.
மரபு சார்ந்த விஷயங்களை, மதசம்பந்தமான நெறிகளை குடும்ப உறவுகளை,  கர்னாடக இசையை, நாட்டுப் புறப்பாடல்களை,  பெரியவர்களுக்குச் செலுத்தும் மரியாதை முறைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த முகமிழந்த மனிதர்களால் முடியாது.  நம்புங்கள். மொழியின் நினைவுகள் நமது ஜீன்களில் பொதிந்துள்ளன். மீட்டெடுக்க சந்தர்ப்பம் மட்டும் தாருங்கள்.  
ஆழ்மனதோடு உரையாட, வார்த்தைகளின் ஜீவனை உணர தாய்மொழியால் மட்டுமே இயலும்.

Tuesday, October 1, 2019

வெட்டுக்கிளிகள்

1970 ஆம் ஆண்டு. வியட்னாம் வீடு என்ற சிவாஜிகணேசனின் திரைப்படத்தைப் பார்க்கப்போயிருந்தேன். திரையரங்கின் (செங்கற்பட்டு) வாயிலில் சிலர் குழுவாக நின்று கோஷமிட்டுவிட்டுச் சென்றனர்.
வினவியதில் ‘வியட்நாம் வீடு’ என்ற திரைப்படத்தின் தலைப்பை எதிர்த்து கோஷமிடுவதாகத் தெரிந்தது. படம் என்னவோ வழக்கமான சிவாஜி ஸ்டைல் சென்டிமெண்ட் படம்தான். ஒரு சாதாரண குடும்பச்சண்டைப் படத்தை, உயிரைப் பயணம் வைத்து, நாட்டிற்காக போராடும் யுத்தத்தோடு ஒப்பிடுவதா என்பது  இடது சாரிகளின் ஆதங்கம்.
பின்னர் சில தத்துவத்தேடல்களுடன் ,  விபரம் தேடிப் பிடித்ததில், அமெரிக்காவின் போர் வெறியும், இருபது ஆண்டுகள் வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகள் போரில் சந்தித்த கடுமையான உயிர்-பொருட்சேதங்களும்  தெரியவந்தன .
சென்ற 20/09/19 அன்று வியட்நாம் (சுற்றுலாவாகத்தான்) செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன்.  சைகோன் நகரின் வெளிப்புறத்தில் (தற்போதைய ஹோசிமின் சிட்டி) இன்றும் அரசு பாதுகாத்துவரும் ஒரு போர் நடந்த வெளியைக்கண்டேன்.
அதற்குமுன் மிகச்சுருக்கமாக:  தற்போது வியட்னாம் ஒரே நாடு. 1975க்கு முன், தெற்குவியட்னாம்- வடக்குவியட்னாம் என இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தன. அன்றைய சோவியத் யூனியன்,சீனா ஆகியவை வடக்கு வியட்னாமை ஆதரிக்க, தெற்கு வியட்னாமை அமெரிக்கா ப்ராக்ஸி அரசின்பேரில் ஆண்டது.
அமெரிக்காவை எதிர்த்து வியட்னாமியர்கள் போராடினார்கள். போராட்டம் என்றால் சாதாரண் போராட்டம் அல்ல. லட்சக்கணக்கில் உயிர்ப்பலி. சர்வ வல்லமை கொண்ட அமெரிக்காவை வெறும் மூங்கில் குச்சிகளோடும், இரும்புக் கம்பிகளோடும், சாதாரண துப்பாக்கிகளோடும் சந்தித்தது வியட்நாம்.  வியட்னாமியர்கள் கைக்கொண்ட போர்முறைதான் ‘கொரில்லா போர்த் தந்திர முறை’.
இன்றைக்கு உலகில் உள்ள  பல வன்முறையாளர்கள் கும்பல் தேர்ந்தெடுக்கும் தாக்குதல் முறை இதுவே. 
வியட்னாம் யுத்தத்தின் தலைமைப் போராளி, ஆலோசகர், வியூகம் வகுத்தவர்,  நுட்பமான அரசியல்வாதி ‘ஹோசிமின்’.
இவர் தலைமியில்தான் போர் நடந்தது. ஆகப்பெரிய ஜாம்பவான் அமரிக்கா தனது பல்லாயிரம் வீர்ர்களை இழந்து, தாக்குப்பிடிக்க இயலாமல் வியட்னாமைவிட்டு வெளியேறியது. வியட்னாமும் ஒன்றுபட்டது.
தற்போதைய, மற்றும் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்காக ஒரே ஒரு ‘வார் ஃபீல்டை’ மட்டும் பராமரித்து வைத்துள்ளனர். சும்மா வந்திடாதல்லவா சுதந்திரம், எந்த நாட்டிற்கும்?
அன்றைய தினங்களில், ஹோசிமின் எனக்கு அதிசயப்பிறவி. அவரது போர்த் தந்திரங்கள் எதிரியை நிலைகுலைய வைத்தவை. தேர்ந்த அறிவாளி. டிப்ளமாட். எந்த நிலையிலும் நிலை குலையாதவர்.  சலனமற்றவர்.  சமரசமற்ற போராளி. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரையும் ஒன்றினைத்து போராடினார்.
வெற்றியைத் தீர்மானிப்பது ஆயுதங்களல்ல.. வெகு மக்களேஎன்ற உண்மையை உலகுக்குப் பறைசாற்றியவர்.   விமானங்களையும், பீரங்கிகளையும் எதிர்க்க மூங்கில் குச்சிகளைத் தவிர நம்மிடம் ஒன்றும் கிடையாது. ஆனால் தத்துவ வழிகாட்டுதலில் நிகழ்காலத்தை மட்டுமல்ல... எதிர்காலத்தையும் பார்க்க முடிகிறது’’. “இன்று வெட்டுக்கிளிகள் யானையுடன் சண்டை போடுகிறது. ஆனால் நாளை யானையின் குடல் பிடுங்கி யெறியப்படும்’’ என்று சொன்னது உற்சாகப்படுத்த மட்டுமல்ல... உண்மையில் நடந்தேறியது.
ஹோசிமின் அவர்களை ஹோமாமாஎன வியட்நாம் மக்கள் அன்புடன் அழைத்ததிலிருந்தே அம்மக்கள் அவர் மீது வைத்திருந்த அளப்பரிய அன்பையும் மதிப்பையும் உணரலாம்.
உலகத்தின் அசைக்க முடியாத வல்லரசு எனக் கருதப்பட்ட அமெரிக்கா வியட்நாம் மக்களிடம் படுதோல்வியைச் சந்தித்தது. 30 லட்சம் மக்களின் உயிர்த் தியாகத்தில் வியட்நாம் வெற்றியை ஈட்டியது. அமெரிக்காவின் படையில் 58000 பேர் கொல்லப் பட்டனர்.
ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைக் கைப்பற்றும் பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையிலான போட்டியில் வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்ஸ் தேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டன. எனினும் வியட்நாம் மக்கள் ஆக்கிரமிப்புக்கெதிரான போரைத் தீரமுடன் நடத்தினர். விடுதலைக்கான சுதந்திரப் போரை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்து போராட்டத்தை வீச்சாகக் கொண்டு சென்றனர். அதன் விளைவாக பிரான்ஸ் வெளியேறியது. வியட்நாம் தெற்கு நோக்கி முன்னேறியது. ஐ.நா.சபை தலையிட்டு வெகுமக்களின் வாக்கெடுப்பின் மூலம் வியட்நாம் ஒன்றிணைக்கப்பட்டது. ஹனோயைத் தலைநகராகக் கொண்ட வியட்நாமும் சைக்கோனைத் தலைநகராகக் கொண்டு தென் வியட்நாமும் உருவாகின.
ஐ.நா.சபை வெகுமக்களின் வாக்கெடுப்பை நடத்தாத நிலையில் தென் வியட்நாம் மீது வட வியட்நாம் தாக்குதலைத் தொடங்கியது. 1955ல் மீண்டும் போர் ஆரம்பமானது. அமெரிக்கா, தென்வியட்நாம் அரசுக்கு ஆதரவாக 1964ல் வட வியட்நாம் மீது விமான குண்டுத் தாக்குதல் நடத்தியது, அமெரிக்க - வியட்நாம் போராகப் பரிணமித்தது.
நச்சு ரசாயன நாபாம் குண்டுகளை ஏவி வீடு, வயல், நிலங்களை அழித்தது அமெரிக்கா. எத்தகைய தாக்குதலுக்கும் அஞ்சாமல் வியட்நாம் மக்கள் போராடி 1975ல் அமெரிக்காவை விரட்டி அடித்தனர்.  .
அமெரிக்கா ஏவிய நச்சுப்பொருட்கள் மற்றும் நாபாம் குண்டுகளால் வியட்நாம் மக்கள் மிகப்பெரிய பாதிப்பை அடைந்தனர்.  நாபாம் குண்டுகளை வியட்நாம் மீது வீசி வியட்நாமிய மக்களை அடிபணிய முயற்சி செய்த ஆணவத்திற்கும், அடங்காப்பிடாரி தனத்திற்கும் மொத்தமாக ஆப்பு வைத்து, வெறும் முங்கில் கழிகளையும், குச்சிகளையும் வைத்தே கொரில்லா யுத்தத்தின் மூலம் பீரங்கிகளையும், விமானங்களையும், நவீன குண்டுகளையும் கொண்ட அமெரிக்காவைப் புறமுதுகிட்டு ஒட வைத்தனர் வீர வியட்நாம் மக்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 1975 வரை நடத்திய கொரில்லா யுத்தத்தின் வீர நினைவுகளை இன்றும் பாதுகாத்து வைத்து வருகின்றனர். குச்சி என்ற பகுதியில் ஆண்களும், பெண்களும் 4, 6, 10 மீட்டர் ஆழத்தில் பூமியில் குழிகளையும், பட்டறைகளையும் உருவாக்கி அதில் பதுங்கி இருந்து போரை நடத்தினார்கள். கையில் வெறும் கட்டைத் துப்பாக்கியும், மூங்கில் குச்சி களையும் வைத்துக்கொண்டு நவீன விமானங்களையும், பீரங்கிகளையும் வைத்து ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திய அமெரிக்காவை மண்ணைக் கவ்வ வைத்தது.
எனது இந்தப் பயணத்தின்போது, வியட்னாமியர்களின் பதுங்கு குழிகளையும், பட்டரைகளையும் காணும்போது, அவற்றின்மீது கால்வைக்கவே தயங்கினேன்.  ஒவ்வொரு பதுங்குக் குழிகளிலும் எத்துனை ஆயிரம்பேர் நாட்டிற்காக உயிரிழந்திருப்பர்? உண்மையில் மெய்சிலிர்த்தது. பகிர்ந்துகொள்ளத்தான் அருகில் எவருமில்லை. வழிகாட்டியாக வந்தவர் ‘ஹோசிமின்’ பாடலைப் பாடிக்காட்டியபோது, நெக்குருகிப்போனார். இத்தனைக்கும் அவர் போரினை நேரில் கண்டதில்லை.
எண்ணற்ற புத்தர்கோயில்களும், மெக்காங் டெல்டா படகுச் சவாரிகளும், நாட்ரடாம் சர்ச்சுகளும், மார்க்கெட்டுகளும் மனதைக் கொள்ளைகொண்டாலும், ஒரு சரித்திரப் புகழ்மிக்க ஒரு நாட்டைக் கண்டுற்றேன் என்பதே மகிழ்ச்சியளிக்கிறது.
ஃபிஸிகலாக அமெரிக்காவை வியட்னாமியர் வெளியேற்றிவிட்டனர்தான். ஆனால் அந்த நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் தற்போது மிளிரும் ‘கென்டகி ஃப்ரைடு சிக்கன்’ (கேஃப்சி)கடைகளும், ஃபோர்டு கார்களும். பெப்ஸி-கோலாக்களும் உலகின்மீது அமெரிக்கா கொண்டிருக்கும் பிடி இருகித்தான் இருக்கிறதே தவிர தளரவில்லை என்பதை நுண்ணரசியல் மதிகளால் எளிதில் விளங்கிக்கொள்ள முடிகிறதே!
இனி சில புகைப் படங்கள்: 













பழைய சர்ச்  

Add caption

உலகப் புகழ் பெற்ற புகைப்படம் 


 

Sunday, November 18, 2018

பா(வா)ல் கிண்ணம்



என்னிடம்  ‘இண்டெக்ஷன் ஸ்டவ்’ என்ற ஒரு வஸ்து இருக்கிறது. காஃபி போடுவதற்கு மட்டுமே, அதன் பயன்பாடு.

லோகத்தில் எல்லோரும் என்ன செய்வார்கள்? ‘ஆன்’ பட்டனைத் தொடுவார்கள். அடுப்பு உயிர் பெறும். அவ்வளவுதானே?  ஆனால், என்னுடையது, என்னைப் போலவே அலாதி டைப். ஆன் பட்டனைத் தவிர மற்ற பட்டன்களையெல்லாம் ஒவ்வொன்றாக அமுக்கிக் கொடுக்கணும்.  கொஞ்சம் கிட்ட போய், கொஞ்சணும். கெஞ்சணும்.  சிணுங்கிக் கொண்டு உயிர்பெற்றாலும் பெறும் அல்லது ‘தேமே’ என்று, சும்மா கிடந்தாலும் கிடக்கும். ‘கண்ணே..கலைமானே..’ பாடியபின் சிவப்புவிளக்குகள் எரியும். ‘அப்பாடா..’ என காஃபி போடும் வேலையைத் துவங்கலாம். சுருக்கமாகச் சொன்னால், கொஞ்சம் வயசான தம்பதியினரைப் போல சதா சண்டி பண்ணிக் கொண்டிருக்கும்.

‘ஆன்’ செய்யமட்டுமல்ல.. ஆஃப் செய்யவும் அதே போராட்டம். பால் பொங்கிக் கொண்டிருக்கும்... பயந்து, பாய்ந்து ஆஃப் பட்டணைத் தொட்டால் ஆஃப் ஆகாது. பால் யாவும் பொங்கி வழிந்து அடுப்பையும், டேபிளையும் ரணகளப் படுத்திவிட்டுத்தான் ஆஃப் ஆகும்.  அடுப்பையும், டேபிளையும் க்ளீன் செய்ய அடுத்த அரைமணி நேரம் அகும்.

இந்த இம்சைக்கு பயந்து, ‘உலகளந்தப் பெருமாள்’ போல, ஆஃப் பட்டணில் ஒரு கை.. சற்றே தள்ளியிருக்கும் மெயின் ஸ்விட்சில் ஒரு கை வைத்துக் கொண்டு, ஊர்த்துவ தாண்டவ போஸில் நின்று கொண்டு, ஆஃப் செய்யணும்.

ஒரு நாள் எரிச்சலாகிப் போய், இண்டக்ஷணை பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டுத்தான் மறுவேலை என ஆவேசமுற்று, சர்வீஸ் ஸ்டேஷணுக்கு எடுத்துப் போனேன்.  அரை மணி நேர காத்திருப்பிற்குப்பின் என்முறை வர, ‘என்ன சார் பிரச்சினை...?

அடுப்பு செய்யும் அழிச்சாட்டியத்தை விலாவாரியாக எடுத்துரைக்க முயல, சட்டசபை சபா நாயகர் போல, ‘போதும்.. உட்கார்.’ என கையமர்த்தினார். மனிதர் நிறைய அனுபவப் பட்டிருப்பார் போல.

பவர் கேபிளைச் செருகி, ஆன் செய்தார். உடனே பளிச்சென உயிர் பெற்றது. திரும்பத் திரும்ப.. திரும்பத் திரும்ப செய்த போதும், புதுப் பெண்போல உடனே பிரகாசமுற்றது. மெக்கானிக் கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஸ்டவ்வை சுருட்டி உள்ளே வைத்து, ‘போ.. அந்தண்டை..’ என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.

கொஞ்சம் அசிங்கமாக உணர்ந்து, ‘சே... அவசரப்பட்டு விட்டோமோ..?’ மற்ற சாக்கட்டுகளில் செருகி ட்ரை செஞ்சிருக்கலாமோ என எண்ணியபடி  வீட்டிற்குத் திரும்பினேன்.

சாயங்காலக் காபிக்கு முயலும்போது, ‘இண்டெக்ஷன்’ அதே சண்டி. ஒருகையில் ஸ்டவ்... அடுத்த கையில் பவர் கேபிள் என, ‘பவதி பிக்ஷாந்தேகி’ என்பது போல, வீட்டில் உள்ள அனைத்து சாக்கெட்டுகளிலும் முயல, ஏளனமாகப் பார்த்துக் கொண்டு ‘கம்முனு’ கிடந்தது . 

பழைய டெக்னிக்கான கொஞ்சிக் குலாவி, தட்டிக் கொடுத்தபின், ‘ம்ம்ம்... அப்படி வா வழிக்கு’ என்றபடி உயிர் பெற்றது.

ஸ்டவ்தான் அப்படி என்றால், பால் காய்ச்சவும், டிகாக்ஷனுக்கு வென்னீர் தயார் செய்யவும் வால்கிண்ணம் (அதென்ன வால்..?) என்ற ஒரு பாத்திரம் உண்டு. கையச் சுட்டுக் கொள்ளாமலிருக்க உதவும்.

ஒரு டம்ளர் தண்ணீர் உற்றி, ஆன் செய்தால், அந்த வால் கிண்ணம், ஏதோ ‘மாய மோகினி’ போல, ஸ்டவ் மேல் வட்டமடிக்கும். ஏதோ கொஞ்சம் ஒரு ‘பெக்’ போட்டவன் போல ஆடி நின்றுவிட்டால் பரவாயில்லை..சுற்றிச்சுற்றி வந்து மொத்த வால்கிண்ணத்தையும் கீழே தள்ளிவிட்டுவிட்டுதான், மறு வேலை பார்க்கும் என் செல்ல ஸ்டவ்.

ஒருவேளை சர்ஃபேஸ் ஈவனாக இல்லாததால் இப்படி வட்டமடிக்கிறது போலும் என நினைத்து, சுத்தியலால், வால் கிண்ணத்தின் அடிப்பாகத்தை நசுக்க முயன்று, நிலைமையை கெடுத்துக் கொண்டேன். அடுப்பின் மேல் வைத்தஉடனே, சர்ரென கீழ்  நோக்கிப் பாய்கிறது, ‘காஜா’ போல..

இந்தப் பீடை பிடித்த காஃபியை நிறுத்திவிடலாம் என்றாலும் அது சாத்தியமாகது போல...

ப்ளீஸ்.. எவராவது ஒரு கப் சூடா ஸ்ட்ராங்கா காஃபி கொடுங்களேன். ஆயாசமா இருக்கே!

Friday, August 3, 2018

ஹீலர்கள்!!

த.நாவில் 'ஹீலர்கள்' எனத் தங்களுக்குத் தாங்களாக  பட்டம் வைத்துக் கொண்டு, விஞ்ஞானத்திற்கு  புறம்பான கருத்துக்களைப் பரப்பிக் கொண்டு, பலர் திரிகிறார்கள்.

பத்தாவதோ, +2 வோ படித்துவிட்டு, நவீன மருத்துவர்களுக்கு  சவால் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எங்கேயாவது 'சடாரென' தீர்வு கிடைக்காதா எனப் பரிதவிக்கும், நோயாளி மக்களின் சைக்காலஜி தான், இந்த டுபாக்கூர்களின்  மூலதனம்.

டயபடீஸ் என்று ஒரு நோயே இல்லை;

டெங்கு வந்தால் ட்ரீட்மெண்ட் எடுக்காதே;

BP க்கு மாத்திரை வேண்டாம்;

டேண்ட்ரஃப் (பொடுகு) என்பது கபால எலும்பு உடைந்து மேலே வருவது;

பிரசவத்திற்கு மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது.....

தடுப்பூசிகள்  தேவையில்லை...

இவையெல்லாம் ஹீலர்களின்  அபத்தங்களுக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்.

பிரசவ மரணங்கள் அக்காலத்தில் எவ்வளவு சதவிகிதம்,  இன்று எவ்வளவு என்ற ஸ்டேடிஸ்டிக்ஸ் ஒன்றே போதும்; இம்மாதிரியான பேத்தல்களை  முறியடிக்க! அக்காலத்தில் பத்து பெற்றால் நாலு போய்விடுமே? இன்று துணிந்து ஒன்றோடு நிறுத்திக் கொள்கிறோமே, அந்த நங்பிக்கையையும், துணிவை யும் தந்தது யார்? நவீன மருத்துவம் தானே?

இந்த ஹீலர்  கிறுக்கர்களின்  முன்னோடி ஒருவன் உள்ளான்.

இவன் பேச்சைக் கேட்டு, வீட்டிலேயே இயற்கைப் பிரசவம்  என ஆரம்பித்த ஒருவனின் மனைவி சில நாள் முன்பு இறந்தே போனார். எவ்வளவு பெரிய விஷயம்?

மாற்று மருத்துவம் என்பது வேறு; ஏமாற்றுக்  கோஷ்டிகள் என்பது வேறு; லாட்ஜ் 'டாக்டர்கள்' எல்லாம் மாற்று மருத்துர்கள் அல்ல;

ஹீலர் ஃபிராடுகள்  போல, 'வாலிப வயோதிக அன்பர்களே' கோஷ்டிகள் தனிரகம்.  ஆண்களின் அறியாமையும், வெட்கமும்தான்  இவர்களின் கேபிடல்.

நானும் alternative medical system களில் ஓரளவு நம்பிக்கை உள்ளவனே!
மாற்று மருத்துவம் என்பது அங்கீகரிக்கப்பட்ட வேறு பல மருத்துவ முறைகள்! ஆயுர்வேதம்,சித்தா, யுணாணி போன்றவை!  ஹீலர்களின்  DVD உரைகள் அல்ல!

மாற்று மருத்துவத்திலும், எந்தெந்த முறை,  எது வரை, எந்தெந்த வியாதிக்கு என்பதில் தெளிவான பார்வை வேண்டும்!  உதாரணமாக மூட்டுவலிகளுக்கு  ஆயுர்வேதம் நல்லது! ஓரளவுவரை..ஆனால் மூட்டையே மாற்ற வேண்டுமெனில் அல்லோபதிதான்.

திருப்பூர் பெண் போல, ஹீலர்களின் பேச்சைக்கேட்டு  இன்னும் எத்தனை பேர் உயிரழக்கப் போகிறார்களோ?

நம்மவர்கள், தற்போது பெருவாரியாக உள்ள சில நோய்களுக்கு,  எங்கேயாவது  சுலபமாக, சகாயமாக தீர்வு கிடைக்காதா எனத் தேடுகன்றனர்.  சர்க்கரை நோய்க்கு, BP க்கு மருந்தற்ற தீர்வு இருக்காதா எனஅலைகின்றனர்.

ஒன்று தெரிந்து கொள்வோம்..அப்படி டயபடீஸுக்கு  எளிய  'மந்திர' சிகிச்சை அல்லது மருந்து இருந்தால், அதைக் கண்டுபிடித்தவன் தான் இன்று மிகப்பெரிய பணக்காரனாக  இருப்பான்.

நிரூபிக்கப்பட்ட முறையாக வேறு எதுவும் இல்லாததால்தான் 'மெட்ஃபார்மின்'  வியாபாரம் அத்தனை கோடிகளில்!

தற்போது ஒரு ஹீலரைப்பிடித்து உள்ளே
போட்டுவிட்டனர்  போலீஸார்.

இது போதாது! இவ்வித  போலி மருத்துவர்கள் அனைவரையும் உள்ளே  தள்ளினால்தான், நாட்டிற்கு நல்லது!

அல்லோபதி மட்டுமே, அப்படியே உன்னதம்  என்று கூறவில்லை!நோகாமல்  காசுபிடுங்க அவர்களும் ஏராளமான வழிமுறைகள் வைத்திருக்கின்றனர்.

விஞ்ஞானம் என்பது வேறு; அதை வைத்து காசு பார்ப்பது என்பது வேறு!


ஹீலர்களிடம் விஞ்ஞானம் சற்றும் கிடையாது!  காசு மட்டுமே குறி!

இந்த கோஷ்டிகளில் பலரையும் ஒரு ரவுண்டு வந்தவன் என்ற வகையில் 'எச்சரிக்கும்' உரிமையும்-கடமையும் உள்ளதாக நினைக்கிறேன்.

Life style காரணமாக, நாமே உருவாக்கிக் கொள்ளும் சில ஆரோக்கியச்  சிடுக்குகளுக்கு, நம்முடைய 'நடைமுறைகளை' மாற்றிக் கொண்டாலே போதுமானது என்பது வரைதான் அவர்கள் சொல்வதை எடுத்துக் கொள்ளவேண்டும்.

உதாரணமாக,பசித்துப்  புசி  என ஒளவையும, நோயென வேண்டா வென  ஐயன் வள்ளவரும்  சொன்னதுதானே?

பசித்துப்  புசிப்பதும், அகால உணவும், ஃபாஸ்ட் ஃபுட், சோடா வகையறாக்களை  புறந்தள்ளுவதும் நல்ல பழக்கம்.  ஆங்கில மருத்துவம் இவற்றைத் தின்றால்  நல்லது எனச் சொல்லவில்லைதானே?

அதற்காக, BP, uncontrolled diabetes, cancer யாவற்றிற்கும்  மருத்துவம் வேண்டாம் என்பது சமுதாயத்திற்கு தவறான  வழிகாட்டல்.

வீட்டிலேயே பிரசவம் என்பது விஷமம். ஸ்டேடிஸ்டிக்ஸ் ஏராளமாக உள்ளது.

Human evolution ல், நான்கு கால்களிலிருந்து  இரண்டுகால்   ஜீவன்களாக நாம் மாறியதனால் ஏராளமான நன்மைகள். சில சிக்கல்களும் உண்டு. பிரசவ அவசரங்கள், முதுகுவலி, ஹெர்ணியா  போன்றவை!

வீட்டில் பிரசவம், தடுப்பூசிகள்  வேண்டாம் ,
மருந்துகளே  தவறு என்பது கண்டிக்கப்  படவேண்டியவை!

10% உண்மையும், மீதி கைச்சரக்கும் இருந்தால் ஒரு ஹீலர்  தயாரென்பது   சமூக அபாயம்.

Friday, July 20, 2018

Beware of fraudulent tour operators.

Beware of fraudulent tour operators.
       **********************
As you all aware, I like to travel a lot. 

In April 18, I booked a cruise trip ticket to Lakshadweep, through M/s Lakshadweep Holidays, Cochin, who was a authorised tour operator for  Lakshadweep tourism department (SPORTS).

The trip was scheduled on 4/5/18.

The agency informed me two days before the commencement of tour that the trip was cancelled due to rough sea. On my request they postponed the trip to 24th May. That too was cancelled by them citing the same reason.

I doubted the cancellation reasons.

As per the terms and conditions I requested them to refund the full amount of ₹32,000 to me, as I found something fishy.

Hundreds of SMSs, Mails to him.. He preferred to keep silent. He ignored all my calls and didn't answer any of my calls. Two months gone.

On Googling,  I found that many letters / complaints / grievances against this company.

I came to the conclusion that my hard earned pension amount is gone and no scope for refund.

I appealed to the consumer complaints forum, Kerala tourism ministry; SPORTs etc., but no response.

Finally, yesterday,  I registered a complaint to Prime ministers Grievance Cell, against this company with a prayer to refund.

Central Govt tourism ministry  wrote a stern warning  letter to them to refund the amount else face the consequences from the government.

It worked.

Today that company refunded the amount under intimation to the central government.

How many common citizens can pursue the case like me? God only knows how much amount he looted from the innocent public.

BEWARE OF fraudulent operators.

Tuesday, July 3, 2018

பத்ரிநாத் யாத்திரை


இந்துக்களுக்கு சார் தாம் என்று குறிப்பிடப்படும் (நான்கு புன்னியத் தலங்கள்) கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் யாத்திரை என்பது மிக முக்கியமான ஒன்று.  

பொதுவாக தெற்கே ராமேஸ்வரம், கிழக்கே பூரிஜெகன்னாதர், மேற்கே துவாரகா, வடக்கே பத்ரிநாத் என நான்கு தலங்களை ‘சார் தாம்’ என்று குறிப்பிட்டாலும்  நடைமுறையில் ‘சார் தாம்’ என்பது மேலே சொன்ன நான்கு தலங்களாக கொள்ளப் படுகிறது. 

வாழ்வின் அந்திமக்காலத்தில், அதாவது வயதானபின், இமயமலைத்தொடரின் ஓரத்தில் உள்ள பத்ரி யாத்திரை செல்வது என்பது வழக்கமாகிவிட்டது. இனியும் அப்படித்தான் தொடரும் போல.  இவ்வளவு வசதிகள் இருக்கும் இக்காலத்திலேயே சலித்துக் கொள்ளும்பொழுது, ஒரு வசதியும் இல்லாத அக்காலத்தில், இக்கோயிலைச் நிறுவிய, ஆதி சங்கரர் எப்படித்தான் இங்கு சென்றாரோ?  

அக்காலத்தில்தான் பத்ரி யாத்திரை சவாலான ஒன்று. நவீன வசதிகள் வந்துவிட்டபின், இவ்வித யாத்திரைகள் எளிதாகி விட்டன.  முடிந்தால் பத்ரிக்கு மட்டும் செல்லாமல், ஜோதிர்லிங்கங்கத் தலமான கேதார்நாத்திற்கும் செல்வது உகந்தது. பத்ரியிலிருந்து கேதார்நாத் ஏரியல் டிஸ்டன்ஸ் 41கி.மீ என்றாலும் சாலைவழி 200 கி.மீக்கும் அதிகமாகிறது.

ஹரித்வார்தான்  (ஹரியைத் தரிசிக்க்ச் செல்வதற்கான நுழைவாயில்) சார் தாம்களுக்குச் செல்வதற்கான கேட்வே. எனவே முதலில் ஹரித்வார் சென்றோம்.  

ஹரித்வார்:

கங்கை, சமவெளியில் பாய்வதற்குத் தயாராகும் இடம் இது. கங்கை இங்கே சுத்தமாக இருக்கிறது.   ஆசை தீர,  நினைத்த போதெல்லாம் பன்முறை நீராடும் வாய்ப்பு! சீறிவரும் கங்கையில் நீராட வசதியாக தடுப்புக் கம்பிகள், சங்கிலிகள் வைத்துள்ளனர். தைரியமாகக்   குளிக்கலாம். மாலையில் கங்கைக்கு ஆரத்தி எடுக்கிறார்கள்.  ஹரிகிபூரி(டி) என்று ஒரு இடம் இருக்கிறது ஹரித்துவாரில். இங்கேயிருந்துதான் யாத்ரீகர்கள், கங்கைத் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறார்கள்; ஆரத்தியும் இங்கேதான்.  ஹரிகிபூரி என்றால் விஷ்ணுபாதம் என்று பொருள் கொள்ளலாம். கங்கையம்மன்  கோயிலும் இங்குதான்.

பார்ப்பதற்கு ஏகப்பட்ட கோயில்கள் – இடங்கள் இருந்தாலும் சில ஸ்னான கட்டங்கள், ஹரிகிபூரி, மானஸ் மந்திர், ஸ்ராவண மகாதேவ் கோயில், வில்வகேஷவர் கோயில், நீலேஸ்வரர் கோயில், வராக கம்பா கோவில், போலாகிரி கோயில், நவக்ரக கோயில் ஆகியவை தவறவிடக் கூடாத இடங்கள்.  ஏராளமான துறவியர். ஏகாந்தமாக அமர்ந்து தியானிக்க ஏகப்பட்ட இடங்கள். 

கோடையில் வெயில் வாட்டும். குளிக்க கங்கை அருகே ஓடுவதால் சிரம்மில்லை.

மானஸதேவி மந்திர் ஒரு மலைக்கோயில். ரோப் காரிலோ அல்லது நடந்தோ போகலாம்.  ரோப் காருக்கு காத்திருக்க வேண்டும். மேலோ சென்றால் கூட்டம் அம்முகிறது! 

ஹரித்வாரில் பல்வேறு பகுதியினருக்கும் அவரவர்கள் சம்பிரதாயத்திற்கு ஏற்றாற்போல (காசி போன்று)  ஏராளமான மடங்கள் கட்டிவைத்துள்ளனர். பெரும்பாலும் இவை இலவசம். அன்னதானம் பல இடங்களில்  நடைபெறுகிறது. எல்லா ஊர்களுக்கும் போக்குவரத்து வசதி இருக்கிறது. இது தவிர தனியார் லாட்ஜ்கள் ஏராளம்.

ரிஷிகேஷ்:

ஹரித்த்வாரிலிருந்து 30 கி.மீ தொலைவில், மேலே  ரிஷிகேஷ். சிவானந்தா ஆசிரமாம். லக்ஷ்மண் ஜூலா, சக்தி பீடம் ஆகியவற்றைப் பார்க்கலாம்.  இங்கும் ஏகக் கூட்டம். இந்தியாவில் பொதுவாக சுற்றுலாவென்றால் கோயில் சுற்றுலா என்றாகி விட்டதால்  எங்கு சென்றாலும் ஜன நெருக்கடி. ரிஷிகேஷும் விதிவிலக்கில்லை. ருத்ராட்சம் வாங்கு, ஸ்படிக மாலை வாங்கு என ஒரு கூட்டம், யாத்ரீகர்களை ஏய்க்க காத்துக் கொண்டிருக்கும். கவனம். 

ப்ரயாக்குகள்.

இதிகாச புராண காலங்களிலேயே இமயமலைச் சாரல் தவத்திற்கும் தியாணத்திற்கும் உகந்த இடமாக அறியப்பட்ட இடம்.   நதிக்கரைகளில் ஏகப்பட்ட கோயில்கள்.  எங்கெல்லாம் உபநதிகள், கங்கையில் கலக்கின்றனவோ அவையெல்லாம் ப்ரயாக்குகள். இந்த வழியில் ஏராளமான சிறுநதிகள் கங்கையில் கலக்கின்றன; எனவே ஏகப்பட்ட ‘ப்ராய்க்’கள்; கோயில்கள். ஒவ்வொன்றிற்கும் ஒரு கதை.

அல்கனந்தாவும், பாகிரதியும் ‘தேவ்ப்ரயாகில்’ கலக்கும்; ‘ருத்ர பிரயாகில்’ மந்தாகினி. ‘விஷ்னுப்ப்ரயாகில்’ மீண்டும் அல்கனந்தாவும் தவுலி கங்காவும்; ‘கர்ணப்ரயாகில்’ பிந்தரி.  
சுறுக்கமாக எங்கெல்லாம் உப நதிகள் கங்கையில் கலக்கிறதோ அதுவெல்லாம் ப்ரயாக்குகள்.  ஒவ்வொன்றிலும் இறங்குவது சாத்தியமாகாது, ஆனால் சற்று நின்று தரிசிப்பது  நல்லது. இறைஉணர்வுக்காக இல்லாவிடினும், அங்குள்ள கண்கொள்ளா காட்சிக்காகவேணும். நான் தேவ்ப்ரயாகில் மட்டும் குளித்தேன்.

பத்ரிக்கு...

சீறிவரும் நதிகள் கற்பனைக்கும் எட்டாத ஓவியங்களை வரைந்து கொண்டு உடன் வருகையில், பயணம் சலிக்குமா என்ன? யப்பா... என்ன மாதிரியான காட்சிகள்? உயரும் மலைகள்; சரேலெனச் சரியும் சமவெளிகள், சுழன்று-சுற்றி இடுக்குகளில் பாய்ந்து வரும் நதிகள்!  முழுமையாக ரசிக்க வேண்டுமெனில் பறவையாக மாறி, நதிகள் பயணப்படும் மலை இடுக்குகளில் பறந்துதான் பார்க்க வேண்டும் போல. கவிஞர்களாக இருப்பின் எழுதித் தள்ளியிருப்பார்கள்.  அவ்வளவு பேரழகு! அதுவும் விஷ்ணுப் ப்ரயாகிலிருந்து  பத்ரி செல்லும் மலைவழிச் சாலை ஒரு திகில் அழகு!  ‘போங்கப்பா... ஊரும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்.. நான் இங்கேயே இருந்து கொள்கிறேன்..’ என்று எண்ணவைக்கும் அற்புதக் காட்சிகள்.

எல்லாமே சுகமாகச் சென்றால் எப்படி? இடையூறு வேண்டாமா? வழியில் மிகப்பெரிய நிலச் சரிவு நிகழ்ந்தது! கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் தேங்கின.  வாகனம் நின்ற இடத்தில், மிக அழகான நதியொன்றும் பெரிய மணல் திட்டு ஒன்றும்!   ஆற்றையொட்டி சரேலென பல்லாயிரம் அடி உயரும் மலையொன்று!  உடனே ஒரு சமவெளி!

ஒரு பஞ்சாபிப் பெண் குதூகலம் கொண்டு, ‘ட்ராஃபிக் நின்றுவிட்டாலும், இப்படிப்பட்ட சொர்க்கத்தில்தானே நிறுத்தியிருக்கிறார்.. ஆனுபவிப்போம் வா... ஆண்டவனுக்கு  நன்றி..’ எனத் துள்ளிக் குதித்துக் கொண்டு தன் கணவனை  இழுத்துக் கொண்டு மணல் திட்டிற்கு விரைந்தார். அனுபவிக்கப் பிறந்த பெண்.

ஜெசிபிக்கள் சுழன்று சுழன்று சேற்றையும் கற்களையும் அள்ளி அள்ளி ஓரமாகத் தள்ளின. பாதை சரியாக வெகு நேரம் பிடித்தது.  பின் வழியில் பீப்பள்கட்டில் தங்கிவிட்டு, காலை பத்ரி பயணத் தொடக்கம்.

பத்ரியி என்றால் 'இலந்தை' !   நாலாபுறமும் மலை சூழ் பகுதி! எனவே, சூரியன் மேலேறும்வரை குளிருகிறது. அதே போலவே மாலையானதும். 

வருடம் முழுவதும் கோயில் திறந்திருக்காது!  ஏப்ரல் 30 வாக்கில் திறந்து, பனிக்காலத்தில் மூடப்பட்டுவிடும். மே-ஜூனில் கூட்டம் அதிகம் இருக்கும். கோயிலில் நம்பூதிரிகள்தான் பூஜை செய்கிறார்கள். காலை நான்கரை மணிக்கு திறந்து மதியம் ஒருமணிக்கு நடை அடைக்கப்படும். பிறகு மாலை நான்கு மணிக்கு திறந்து இரவு ஒன்பதுக்கு அடைக்கிறார்கள். 

பனிக்காலத்திற்காக நடை சாத்தப்படும் பொழுது, ஏற்றப்படும் தீபம், மீண்டும் ஆறு மாதம் கழித்து திறக்கப் படும்வரை எரிந்து கொண்டிருக்கும்; அதுவரை நாரத முணி பூஜை செய்து கொண்டிருப்பார் என்று சொல்கிறார்கள். 

பனிக்காலத்தில் கோயில் மூடப்படும்பொழுது, உற்சவர் கீழே இருக்கும் ஜோஷிமட்டிற்கு அழைத்து வரப்பட்டு  அங்கிருக்கும்  வாசுதேவர் கோயிலில் எழுந்தருளச் செய்வர்.
ஜோஷிமட்டில் ஒரு நரசிம்மர் கோயில் இருக்கிறது.  நீங்கள் பேக்கேஜ் டூரில் சென்றால், ஜோஷிமட்டிற்கும், முக்கியமான ப்ரயாக்களுக்கும் அழைத்துச் செல்வார்களா என்பதி உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிடில் நேராக பத்ரியை அரைகுறையாகக் காட்டிவிட்டு திரும்ப அழைத்து வந்துவிடுவர்.  

என்னைக் கேட்டால், ரிஷிகேஷிலிருந்து தனியாக ஒரு வாகனம் அமர்த்திக் கொண்டு, பார்க்க வேண்டிய இடங்களைப் பட்டியல் இட்டுக்கொண்டு, சாலை திறந்திருக்கும் நேரத்தையும் கணக்கில் கொண்டு, நிரலைத் தயார் செய்து கொள்வது நல்லது.  அவ்வளவு தூரம் சென்றுவிட்டு, எதையும் பார்க்காமல் திரும்ப வருவது வீண்.  அந்த வகையில் ஜோஷிமட் பார்க்க வேண்டிய ஒன்று.

பத்ரிநாதர் கோயிலின் அடியில் கங்கை ‘சில்லென’ ஓடிக் கொண்டிருக்கும்! குளிப்பதற்கு வசதியாகவும் இருக்காது; அந்தச் சில்லிப்பையும் தாங்க முடியாது. ஆனால் கொதிக்க கொதிக்க வெண்ணீர் ஊற்றுக்கள் இருக்கின்றன. நிர்வாகத்தினர் வெண்ணீரையும் தண்ணீரையும் சரிவிகிதத்தில் கலக்குமாறு செய்து, அங்குள்ள சப்த குண்டத்தில் விழுமாறு செய்துள்ளனர். அவ்விதம் மூன்று தொட்டிகள் உள்ளன! ஆனந்தமாக நீராடலாம. எடுத்தவுடன் ‘தடால்’ என தொட்டிக்குள் இறங்கிவிடாமல், கொஞ்சம் உடலை சுடுநீரின் சீதோஷ்ணத்திற்கு சில் நொடிகள் பழக்கப்படுத்திவிட்டு, பின் முழுவதுமாக இறங்க வேண்டும்.

ஆறங்கரையில் மூதாதையர்களுக்கு திதி (சிரார்த்தம்) கொடுக்கலாம். அவரவர்கள் வழக்கப்படி செய்துவைக்க ஆட்கள் இருக்கிறார்கள்.  இடையில்  'ப்ரோக்கர்கள்' அதிகம். சற்றே கவனம்,  அதிகமாக சார்ஜ் செய்வார்கள். நேரிடையாக சம்பந்தப்பட்ட ஆட்களிடம் சென்றுவிட்டால், ஓரளவு கட்டனம் குறையும்.  திதிகொடுத்தபின், பிண்டங்களை அருகிலேயே உள்ள பிரம்ம கபாலத்தில் காண்பித்துவிட்டு, பின் கங்கையில் கரைக்க வேண்டும்.

அந்த சடங்குகளை முடித்தபின்,  உடைமாற்றிக் கொண்டு, பத்ரிநாதரைத் தரிசித்தேன். ஆஹா... இதற்காகவன்றோ காத்திருந்தேன். திவ்ய தரிசனம்.

அவரை, யார் யார் எவ்விதமாகப் பார்க்கிறார்களோ அவ்விதமாகவே தோன்றுவார் என்று சொல்கிறார்கள்.  சிவனாகப் பார்த்தால்-சிவன்; பெருமாளாகப் பார்த்தால் பெருமாள்; காளியாகப் பார்த்தால் காளி.  நான் எவராகவும் பார்க்கவில்லை; எங்கும் உறை பரம்பொருளாக, உங்களுக்குள், எனக்குள், சகல ஜீவராசிகளுக்குள்ளும்,  சகல அண்ட-ப்ருமாண்ட்த்திற்குள்ளும் - அதுவாகவே இருக்கும் யூனிவர்ஸல் சக்தியாகவே பார்த்தேன்; எப்பொழுதும் போல!

பத்ரிநாதரை மிக அருகில் சென்று தரிசிக்கலாம். ‘ஜெருகண்டி’ வெளியே இழுத்துத் தள்ளிவிடுவது ஆகியவை இல்லை; மிக மரியாதையாகவே அடுத்தவருக்கு இடம்விடும்படி கேட்டுக்கொள்கிறார்கள். மறுபடியும்  தரிசிக்க வேண்டுமெனில், வெளியே உள்ள உயராமன மேடையிலிருந்தும் பார்க்கலாம்;  மிக  நல்ல முழு தரிசனம் கிடைக்கும்.எத்தனை முறை வேண்டுமென்றாலும் பார்க்கலாம்.

நான் தங்கியிருந்த லாட்ஜின் எதிரே ஒரு விபத்து நிகழ்ந்து, லாரி ஒன்று தலைகுப்புற மண்ணில் புதைந்துவிட்டதால், சாலை சரியாகும்வரை, இருதினங்கள்  பத்ரியிலேயே காத்திருக்க வேண்டியதாயிற்று. இதை இறைவன் கொடுத்த சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு பன்முறை கோயிலுக்குச் சென்றுவந்தேன்.

அனைத்தும் பத்ரிநாதர் அருளால் செம்மையாக நடந்து முடிந்தது.

குறிப்பு:

1.     எந்த இடங்களைப் பார்க்கப் போகிறோம் என்பதை கூகுளித்துவிட்டு செல்வது நல்ல உபாயம்.

2.     பேக்கேஜ் டூராக இருப்பின், எந்த எந்த இடங்களைக் காண்பிப்பார்கள் என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். அனுபவமிக்க டூர் ஆபரேட்டர்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

3.     கோடைகாலமாக இருப்பின், இரவில் தங்குவதாக இருந்தால் மட்டும் பத்ரிக்கு குளிருடை அவசியம். அன்று மாலையே திரும்புவதாக இருந்தால் ஒரு குல்லாவே போதும்.

4.     தேவையற்ற ல்க்கேஜ்களை ரிஷிகேஷோ அல்லது ஹரித்வாரோ எங்கிருந்து புறப்படுகிறீர்களோ, அங்கே விட்டுச் செல்லுங்கள்.

5.     மிகவும் டைட் ஷெட்யூல் போட்டுக் கொள்ளாதீர்கள். கைவசம் உபரியாக இரு தினங்களாவது வைத்துக் கொள்ளுங்கள். இயற்கை இடர்கள் அதிகம் நிகழும் இடம்.

6.     ஆதார் அட்டை அவசியம். ‘சார்தாமில்’ எந்த தாமிற்குச் சென்றாலும் ரிஷிகேஷில் கேட்பார்கள்.

7.     மருந்துகள், டார்ச் போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள்.

8.     மிக வயதானவர்களை சுமந்து செல்ல ஆட்கள் இருக்கின்றனர். தேயிலைத் தோட்டங்களில் தேயிலை பறித்துப்போட ஒரு கூடை ஒன்றை முதுகில் கட்டியிருப்பார்களே, அது போல ஒரு கூடை ஒன்றை முதுகில் கட்டி, அதனுள் பயணிகளை அமரச் செய்து,  அனாயாசமாக நடக்கிறார்கள்.

9.     ஆக்சிஜன் சற்றே குறைவு என்பதால் (பெரும்பாண்மையினருக்கு பிரச்சினையே இல்லை, வெகுசில நோயாளிகளுக்கு மட்டும்) கவனம் தேவை. வெளியில் மொபைல் எமர்ஜென்ஸி மெடிகல் கேர் வாகனங்கள், அத்தியாவசிய உபகரணங்களுடன் இருக்கின்றன.

10.  வழியெங்கும் தடையில்லா செல்போன் சிக்னல் கிடைக்காது. எனக்குத் தெரிந்து, சற்றே ‘வீக்காக்’ இருந்தாலும் பி.எஸ்.என்.எல் பெரும்பான்மையான இடங்களில் சிக்னல் கிடைக்கிறது.

 புகைப்படங்கள் : சில  படங்கள் நெட்; சில என்னடையது