Sunday, July 31, 2016

கர்னாடகம் – மற்றொமொரு அடங்காத மானிலமா?

கர்னாடகாவில், மீண்டும் ஒரு மாநிலம் தழுவிய ‘பந்த்’. இம்முறை, மகதாயி என்னும் நதியின் நீர்ப்பங்கீடு குறித்து, நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து பந்த்.  

அவர்களுக்கு, எல்லோரிடமும் எல்லாவற்றிலும் சண்டை. மகாராஷ்ட்டிராவுடன், கேரளாவுடன் எல்லை மற்றும் நதி நீர் குறித்து சண்டை.  ஆந்திரத்துடன் கிருஷ்ணா நதி  நீர் சண்டை.  பெல்காம் குறித்த எல்லைச் சண்டை பிரசித்தமானது. கேரளத்துடன் காசர்கோடு குறித்து எல்லை சண்டை.  தமிழ்நாட்டுடன், காவிரி உட்பட சகலத்திலும் சண்டை.

அந்த மானிலத்தில் பிறந்த ரஜினிகாந்த், ஜெயலலிதா போன்றோர் தமிழ் நாட்டில் பிரபலமாக இருந்தாலும் அவர்களை எதிர்த்தும் சண்டை.  பெங்களூரில், தமிழ்த்திரைப்படங்கள்  திரையிடும் அரங்குகள் எத்தனை தடவை கல்லடி வாங்கியிருக்கின்றன?   சண்டியர் நிறைந்த மானிலமாக கர்னாடகம் மாறிவருகிறது.

தமிழ் நாட்டில் மொழிவெறி, பிராந்திய வெறி, ஜாதி வெறி போன்றவற்றைத் தூண்டிவிட சில சக்திகள் விடாது முயற்சிப்பது போல, கர்னாடகத்திலும் ‘வட்டாள் நாகராஜன்’ போன்ற பல ஆசாமிகள் இருக்கிறார்கள். எப்பொழுது, எந்தமாதிரி சண்டை கிளப்பிவிடக் கிளம்பலாம் எனக் காத்திருக்கும் ஆசாமிகள் இவர்.  ஒரு கொலை விழுந்தால் கூடப் போதும் உடனே இந்த ‘மாமனிதர்கள்’ ஆஜராகி பிரச்சினை கிளப்புவதிலும், திசை திருப்புவதிலும் நிபுனர்கள்.  மகதாயி நதிநீர் குறித்து நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வந்ததுமே களத்தில் குதித்து ரகளை. பேச்சுவார்த்தை, சுமுகமான உடன்பாடு, நீதியை மதிப்பது எல்லாம் இவர்களுக்குத் அன்னியமான  நடவைக்கைகள்.

மொழிவாரி மாநினிலங்கள் இந்தியாவில் அமைந்தது,  நன்மைகளை விட தீமைகளையே அதிகம் விளைவிக்கிறது எனத் தோன்றுகிறது.   

நூறு சதம் இல்லாவிடினும், மக்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை பிராந்திய மொழிகளின் அடிப்படையில் பிரித்தறிவதுதான்  சரி.  பிராந்திய மொழிகளின் அடையாளம் காக்கப் படவேண்டும் என்பது மொழிவாரி மானிலங்கள் அமைக்கப்பட்டதன் முக்கியமான காரணிகளில் ஒன்று. ஆனால் அந்தக் காரணிகள் யாவும் முற்றாக முறியடிக்கப் பட்டுவிட்டன. தெலுங்கு, தமிழ், கர்னாடகம் ஆகியவை வெறும் பேச்சுமொழியாகவே மாறி விடும் துரதர்ஷ்டமான நிலைமை வெகுவிரைவில் வாய்த்துவிடுமோ என அச்சமாக இருக்கிறது. ‘மராட்டிய மொழி’ அந்த நிலைமையை கிட்டத்தட்ட அடைந்து விட்டது.  மலையாளம் ஓரளவு இந்த அபாயத்திலிருந்து தப்பிவிடுகிறது. அம்மானிலத்தின் செரிந்த இலக்கியங்களும், தேர்ந்த படிப்பாளிகளும் இதை சாத்தியமாக்கியுள்ளனர்.

மற்ற தென்னிந்திய மானிலங்களில், அரசியல் வாதிகள் கிளப்பிவிட்டதைப்போல  ஆபத்து ‘இந்தி’ யிடமிருந்து வரவில்லை; மாறாக  ஆங்கிலத்திலிருந்து!!  நகரப் பள்ளிகளின் பெரும்பாலான மானவர்களுக்கு, அவரவர் தாய்மொழியில் சரளமாகப் பேசவராது.  எழுத வராது. ஆங்கில மோகம் சிறு நகரங்களையும் கிராமங்களையும் கூட வேகமாக பாதித்துவருகிறது என்பது தெரிந்தது தானே? பெற்றோர்களுக்கு, என் மகன்/ள் களுக்கு தாய்மொழி தெரியாது என்பது ஒரு ‘கௌரவமான’ விஷயம்.  அது ஒருபுறம் இருக்கட்டும். விரிவாக பின்னர் பார்க்கலாம்.

இப்பொழுது கர்னாடகத்தின்  சண்டித்தனத்தைப் பார்ப்போம். 

நாடுகளுக்கிடையே நதி நீர்ப்பங்கீடு குறித்து போர்கள் வராமலிருந்ததே இல்லை. ஆனால், வெகு வருடங்களுக்கு முன்பே, இத்தகைய சண்டைகளைத் தீர்த்துக் கொள்வது குறித்து ஒரு தெளிவான வழிகாட்டுதல் உலக நாடுகள் இடையே ஏற்பட்டுள்ளது.  ஒரு நதியில் 1000 டி.எம்.ஸி தண்ணீர் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம்.  அந்நதி ஆறு நாடுகள் வழியாக ஓடுகிறது எனக் கொண்டால்,  தண்ணீரின் மூலாதாரம்(கேட்ச்மென்ட்) எந்த நாட்டிலிருந்து கிடைக்கிறது எனக் கருதாமல், ஒவ்வொரு நாட்டிலும், அந்த நதி கடக்கும் தூரத்திற்கு ஏற்றாற்போல கிடைக்கும் தண்ணீரை விகிதாச்சார முறைப்படி பங்கிட்டுக்கொள்வது ஏற்றுக் கொள்ளப் பட்ட நடைமுறை.  இந்த அடிப்படையில், நாடுகளுக்கிடையே (இந்தியா-பாகிஸ்தான்-வங்காளதேசம் உட்பட) இந்த சச்சரவு பெரும்பாலும் தீர்க்கப்பட்டு விட்டது. ஆனால் ஒரே நாடாக, இந்தியாவிற்குள் நடக்கும் சண்டைகளுக்கும் அழும்புகளுக்கும் கணக்கே இல்லை.  சதா எல்லோரிடமும் தகராறு.

இந்த சண்டைகளுக்கான தீர்வு என்னவென்று, இந்த அரசியல் வாதிகளுக்குத் தெரியாதா என்ன? நன்றாகத் தெரியும். ஆனால் ‘நியாயப்படி, நியதிப்படி நடந்து கொள்ள வேண்டும்’ என்று மக்களுக்குச் சொன்னால், பிறகெப்படி ஜாதி,மொழி,மாநில, இன வெறிகளைத் தூண்டிவிட்டு பிழைப்பை ஓட்டுவது? எல்லாத் தண்ணீரும் எங்களுக்கே வேண்டும், எனக் கிளப்பிவிட்டால்தானே சில்லறை பார்க்கலாம்? ஓட்டு வாங்கலாம்?

சரி... அரசியல்வாதிகள் நியாயத்தைச் சொல்லி மக்களை ஏற்க வைக்கும் அளவிற்கு நல்லவர்களும் அல்ல வல்லவர்களும் அல்ல. ஆனால் பிரச்சினையை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றபின்னும், நீதிபதிகள் பல்வேறு விஷயங்களை ஆய்ந்து ஒரு முடிவிற்கு வந்து தீர்ப்பளித்தபின்ன்ரும், நீதிமன்றங்களையே எதிர்த்து பந்த் நடத்துவது என்ன வகையில் சரி? மகதாயி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கன்னட  அமைப்புகள் சார்பாக முழு அடைப்பு நடைபெற்றுள்ளது. வழக்கம்போல கன்னட திரைப்பட அமைப்பைச் சார்ந்தவர்கள் பந்திற்கு முழுஆதரவு தெரிவித்து, போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். ஒழுங்கான சினிமா எடுப்பதைத் தவிர மற்ற மீனவர்,  நதி நீர், எல்லைத் தகராறு போன்ற எல்லாவற்றிலும் சினிமாக்காரர்கள் ‘கருத்து’ சொல்லத் தயார்.  தமிழக பேருந்துகள் கர்னாடகத்திற்குள் செல்லவிலை, கோவா மற்றும் மகாராஷ்டிர பஸ்களும் அப்படியே!

தேசிய-சுதேசி-இடது கட்சிகள் யாவும், ‘மொழி மற்றும் நதி’ விஷயங்களில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கின்றன. கேரள முதல்வர் ப்ரணயி விஜயன் அவரது அரசியல் சிந்தனை காரணமாக ‘முல்லை அணை’  நன்றாகத்தான் இருக்கிறது; நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்கிறோம் என தைரியமாக அறிவித்துவிட்டு பின்னர் ஜகா வாங்கியது நினைவிற்கு வருகிறதா?

நீதி மன்றங்களின் தீர்ப்பை மதிக்காவிட்டால், அராஜகவாதம் மட்டும் தானே மிஞ்சும்? பொறுப்பற்ற இந்த அமைப்புகளிடமிருந்து ஜன நாயகத்தை மீட்டெடுப்பது யார்?  இன்னும் எத்தனை காலத்திற்குத்தான்  மானிலங்களுக்கிடையே நிலவிவரும் எல்லை-நதி நீர்ப்பிரச்சினைகளை தீர்க்காமலிருப்பார்கள்? குறுகிய இன-மொழி-பிராந்திய வாதங்களையும், ஓட்டு அரசியலையும் தாண்டி ஒரு தீர்வுக்கு தலைவர்கள் உடன்பட வேண்டும் என்பதை எப்போது உணர்வார்கள்?

இவர்களுக்கு புத்தி வேண்டி ஆண்டவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர, வேறு வழி ஏதாவது...? 

Sunday, July 24, 2016

சென்னை விமானப் படை விபத்து

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிகார் அவர்களுக்கு,

இந்திய விமானப் படையின் AN32 போக்குவரத்து விமானம், அதில் பயணம் செய்த 29 பேர்களுடன் காணாமற்போய் மூன்று நாட்களாகி விட்டன. “அதிகாரத்துவ மொழியில்” நீங்கள் காணாமற் போய்விட்டது என்று சொல்லிக் கொண்டாலும், விலை மதிப்பற்ற 29 உயிர்களை இழந்தது விட்டோம் என்பது தான் உண்மை.

ருஷ்யத் தயாரிப்பான AN32, முப்பது வருடங்கள் பழமையானது என்றாலும், இந்திய விமானப் படையில் இன்னமும் முக்கியமான-கேந்திரமான போக்குவரத்து விமானமாக இதை வைத்திருக்கிறீர்கள். இதுவரை, 77 முறை இந்த வகை விமானம் விபத்தில் சிக்கி யிருக்கிறது. இந்த 29 பேர் நீங்கலாக, ஐம்பதுக்கும் மேற்பட்ட விமானப் படை வீரர்கள் உயிரழந்துள்ளனர் என கூகுள் சொல்கிறது. இந்தியா, போர்க்காலத்தில் இழந்த விமானப்படை விமானங்களை விட, அமைதிக் காலத்தில் இழந்தவையே அதிகம் போலும்.

உலகில், பாதுகாப்புப் படைகளில் விபத்துக்கள் நடப்பது ஒன்றும் புதிதல்ல. நடக்கும்; அத்தி பூத்தாற்போல; கடுமையான சூழ்நிலையில். ஆனால் இந்தியாவில் நடப்பது போல இவ்வளவு கேஷூவலாக, இழப்புக்களை வேறு எந்த நாடாவது சந்தித்திருக்குமா என்பது சந்தேகம். பனிச் சரிவில் சிக்கி உயிரிழப்பு; சப்மரீன் வெடித்து உயிரழப்பு; விமானம் வெடித்துச் சிதறி உயிரழப்பு. பறக்கும் சவப்பெட்டியாக உலவிக் கொண்டிருந்த ‘மிக்’ விமானங்கள்.

நாங்கள் செய்தித் தாள்களில் அறிந்து கொண்ட வகையில், விபத்துக்குள்ளான விமானம் இந்த மாதமே, மூன்றுமுறை டெக்னிகல் ஸ்னாக் ரிப்போர்ட் ஆகியுள்ளதாம். ஏர் வொர்த்தினஸ் என்ன ஆச்சு?
சம்பிரதாயமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் வந்து பார்த்துவிட்டார்.

ராணுவ ரகசியங்கள் உங்களுடையதாக இருக்கலாம்; வைத்துக் கொள்ளுங்கள்! ஆனால் உயிரழந்த வீரர்கள் எங்களைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கென்று குடும்பங்கள் இருக்கின்றன. அவர்கள் சிவிலியன்களான எங்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் இவ்வளவு விபத்துக்கள் நடக்கின்றன, விமானிகளின் உயிருக்கு தேவையற்ற வகையில் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க என்ன செய்தீர்கள் என எங்களுக்கு விளக்க கடமைப் பட்டுள்ளீர்கள்.

வாங்கிய காலத்தில் AN 32 கடுமையான சூழ்னிலையிலும் பறக்கும் திறன் கொண்டது என்றாலும், அவைகளுக்கு வயதாகிக் கொண்டிருப்பதையும், மாறுபட்ட சூழ்னிலையில் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து விமானங்கள், பெரிய எண்ணிக்கையில் தேவைப்படும் என்பதையும் காலத்தே உணர்ந்தீர்களா? அதற்காக காலத்தே திட்டமிட்டீர்களா?

பெரிய எண்ணிக்கையில் Antonov AN 32 க்களை வைத்துக் கொண்டு, அதற்காக ஸ்பேர்களை போதுமான அளவு வைத்துக் கொண்டிருந்தீர்களா? சரியான முறையில் அவற்றைப் பராமரித்தீர்களா? சரியான சமயத்தில் உதிரிகளையும் பராமரித்தலையும் டிஃபன்ஸ் செக்ரடரி உறுதி செய்தாரா? இல்லை மற்ற பொதுத் துறை நிறுவனங்களைப் போல, அதிகார வர்க்கம் தன் மூக்கைவிட்டு, நிலைமையை மோசமடையும் வரை காத்திருந்தார்களா? பராமரிப்புக்காக தேவையான நிதி ஒதுக்கீடு இருந்ததா?

தற்போது AN32 க்களை ரிப்பேர் செய்து கொண்டிருக்கும், உக்ரைனுடன் சரியான வகையில் ஒப்பந்தம் போட்டுள்ளீர்களா? இழந்த விமானங்களுக்கு அவர்கள் ஏதேனும் பொறுப்பு ஏற்கிறார்களா? காலத்தே முடிவெடுத்தீர்களா? அவர்கள் சென்னைக்கு வந்தார்களா?

ஒரு பைலட்டை உருவாக்க எவ்வளவு செலவு செய்கிறோம், அதற்காக எவ்வளவு காலம் பிடிக்கிறது என்பதெல்லாம் உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒரு விமானம் போய்விட்டால், இன்னொன்றை பெங்களூரிலோ அல்லது யூக்ரைனிலோ வாங்கிக் கொள்வீர்கள். ஆனால் இழந்த உயிர்களை திரும்பப் பெறமுடியுமா?

நடந்த விபத்து எங்களுக்கு பல சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன. சீனாவும், பாகிஸ்தானும் தங்களது பாதுகாப்பு சாதனங்களை, தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அவற்றிற்கு ஈடுகொடுக்கும் வகையில் நமது இந்திய பாதுகாப்பு படை இருக்கிறதா? அவர்களுக்கு தேவையான நவீன தளவாடங்கள் வழங்கப் படுகிறதா? அதி நவீன Sukhoi போர் விமானம் கூட எப்படி விபத்துக் குள்ளானது?

அரசியல் வாதிகள் “நமது படைகள் எதையும் சமாளிக்கும் திறன் கொண்டவைகள்” என கோஷம் எழுப்புதை இனி நாங்கள் நம்பத் தயாரில்லை.

இனி ஒரு பாதுகாப்புப் படை வீரர், இந்த மாதிரியான ‘தவிர்த்திருக்கக் கூடிய’ விபத்துக்களில் உயிரிழப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. நெருக்கடியான காலங்களில் ‘செயல்படும் அளவிற்கு’ பயிற்சியளிக்கப் பட்டார்களா.. அது உங்கள் நிரலில் இருக்கிறதா எனவும் அறிய விரும்புகிறோம்.

இழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குங்கள். கால நிர்ணயத்துடன் கூடிய, அதிகாரம் கொண்ட ஒரு கமிட்டி அமைத்து, நமது படைகளில் எங்காவது பலவீனம்-ஓட்டை இருக்கிறதா எனக் கண்டுபிடித்து, சரியான பயிற்சி மற்றும் மறு பயிற்சி ஆகியவற்றை உறுதி செய்யுங்கள்.

ஒரே நாள் இரவில் எந்த விமானப் பிரிவினையும் ஒழித்துவிட முடியாதென அறிவோம். எனினும் குறிப்பிட்ட காலக் கெடுவில் காலாவதியான விமானங்களையும் தளவாடங்களையும் மாற்றுங்கள்.

இந்தியத் திருநாட்டில், மனித உயிர்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது, எவர் கவலைப் படப்போகிறார்கள் என்பதை நன்கறிவோம். . அரசியல் வாதிகளைப் பொறுத்தவரை 29 என்பது ஒரு எண்ணிக்கை. எங்களுக்கு அவர்கள் உற்றார்-உறவினர்.



கோஷங்களை விடுத்து செயல்படுங்கள்! அதுவே எங்களது வேண்டுகோள்.

Friday, July 22, 2016

அலி சகோதரர்கள்.



அலி சகோதரர்கள்.

பொதிகைத் தொலைக்காட்சியில்,  ஒவ்வொரு வெள்ளியன்றும் காலை 0845 மணிக்கு, விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றி, சுதந்திரப் போராட்டத்தில் அவர்களது மகத்தான பங்கு, தியாகம் பற்றி நாம் கேட்டே இராத தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார், திரு முரளி என்பவர். ஒரு வருட்த்திற்கும் மேலாக வந்து கொண்டிருக்கிறது இந்நிகழ்ச்சி.

இரண்டாவது வாரமாக ‘அலி சகோதரர்களைப் பற்றி’ இன்று குறிப்பிட்டார் திரு முரளி. அலி சகோதரர்கள் தேசவிரோத குற்றம் சாட்டப்பட்டு (தேசவிரோதம் என்றால் – அக்காலத்தில் சுதந்திரப் போராட்டம்) கராச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர். இருவரில் முகமது அலி மிகச் சிறந்த பேச்சாளர். அறிஞர். அவரது வாதத் திறமை குறித்து, நீதிபதிகளே வியப்பர். தீவீரமான தேசபக்தர். 

அவர் கராச்சி சிறையில் தனிக் கொட்டடியில் பட்ட சித்திரவதைகள், அவமானங்கள் குறித்து விரிவாகப் சொல்லிவிட்டு, கடைசியில் ஒரு தகவல் சொன்னார் பாருங்கள்!  சிலிர்த்துப் போனது.  

பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு சமரசத் திட்டத்தை உருவாக்கி, அதற்கு அலி சகோதரர்கள் ஒப்புக்கொண்டால், சிறையிலிருந்து விடுதலையாகலாம், சித்தரவதைகளிலிருந்து மீளலாம் என்பதே அது.  

இம்மாதிரி பல விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஆசைகாட்டப் பட்டு, அவர்கள் அதை மறுத்து, தூக்குக் கயிற்றை ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளம்-ஏராளம். 

ஆனால், அலியின் தாயார் செய்த ஒரு காரியம், மகத்தானது. நம்ப முடியாதது.  பிரமையுறச் செய்வது.
(அந்தமானுக்குச் சென்றிருந்த போது, அங்கே உள்ள கொடுமையான சிறையில், நம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்ட வார்த்தைகளில் வடிக்க இன்னல்கள், கற்பனைகூட செய்யமுடியாத கொடூரங்கள், கொலைகள் ஆக்யவற்றைப் படித்து, ஒலி-ஒளிக் காட்சியாகப் பார்த்துவிட்டு, பல நாட்கள் தூக்கத்தைத் தொலைத்தேன்)

அந்தப் பெண்மணி, தன் மதத் தலைவர்களிடமிருந்து ஒரு நீண்ட வாளினைப் பெற்றுக் கொண்டு, அதைத் தன் உடையில் மறைத்து வைத்துக் கொண்டு, சிறையில் வாசலில் காத்துக் கொண்டிருந்தாரம். எதற்காக?  ஒருவேளை தன் மகன், அரசாங்கம் தரும் ‘சமரச் திட்டத்தை ஏற்றுக் கொண்டு, விடுதலை பெற்று வெளிவந்தால், அந்தக் கத்தியாலாயே தன் மகனை வெட்டித் தள்ளிவிட்டு, அவரைப் பெற்ற தன் வயிற்றையும் கிழித்துக் கொள்வேன்’ என்றாராம்.

இதைப் பற்றி வா.வே.சுப்ரமணிய ஐயர், குறிப்பிடும்போது, நாம் ஜான்ஸி ராணி மறைந்துவிட்டார் எனக் கவலைப்பட்டோம். இல்லை.. இல்லை இந்தத் தாயின் உருவில், பல ஜான்ஸிராணிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றாராம்.

எப்படிப்பட்ட தலைவர்களைப் பெற்றிருந்தோம் நாம்.
எந்தத் தேசம், தன் வரலாற்றை மறக்கிறதோ, தன் தியாகிகளை மறக்கிறதோ அவை மீண்டும் இருண்ட காலத்திற்கே செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம்.

சில வாரங்களுக்கு முன் சுப்ரமணிய சிவாவைப் பற்றி சிலவாரங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார் திரு முரளி. கேட்கும் போது, நம்மையறியாமல் கண்களில் நீர் திரளும்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளி காலை 0845க்கு முடிந்தால் பொதிகை பாருங்கள்.