Sunday, July 26, 2015

வண்ணமயமான வாழ்க்கை

ரியா" எனக்கு, கிரடிட் கார்டு வழங்கியே தீருவேன் என அடம் பிடிக்க,

UK லாட்டரியில் 40 கோடி டாலர் பணம் கிடைக்க,

எவனோ ஒருவன் தெ.ஆ வில் எல்லா சொத்தையும், என் பேரில் எழுதி வைத்துவிட்டு மண்டையைப் போட,

"தனியாய்த்தான் இருக்கேன் வா" என பூஜா அழைக்க,

"நிமிஷத்துக்கு அஞ்சு ரூபாய்தான், வா கடலை போடலாம்" என நிஷா அழைக்க,

என்னை கோடீஸ்வரனாக்கியே தீருவது என ஸ்டாக் புரோக்கர்கள் கங்கனம் கட்டிக் கொள்ள,

ICICI loan , வீட்டு வாசலில் தயாராய் நிற்க ....

வாழ்க்கை வண்ணமயமாகத்தான் இருக்கு -- வலையில்

Monday, July 20, 2015

திருவனந்தபுரம் பொக்கிஷம்.

திருவனந்தபுரத்தில், ஏ.கே 47 சகிதம், பத்மனாபசுவாமி பள்ளி கொண்டிருக்கிறார். தீவீர வாதிகளிடமிருந்து பாதுகாப்பு, மற்றும் பொக்கிஷ அறைகள் காரணமென்றாலும், கோவிலில் இவ்வளவு கெடுபிடிகள் கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது. கேரள சம்ப்ரதாயப்படி சட்டையைக் கழற்றிவிட்டு சென்றவுடன் ‘மெட்டல் டிடக்டர்கள்’.
இரும்பு பைப்புகள் கொண்டு அடைகாக்கப்படும் ‘நீளமான’ பக்தர்களின் பாம்பு வரிசைகள். இலவச மற்றும் 300 ரூபாய் க்யூக்கள். 

விச்ராந்தியாக உள்ளே சென்று இறைவன் முன்னால், மெய்யுறுகி நிற்கவும் அவனிடம் கொஞ்சம் பேசவும் ஆசையாகத்தான் உள்ளது. விரட்டியடிக்கிறார்கள். அதிகாரமும் பணமும் இருக்கும் ஆசாமிகளுக்கு தரிசனம் சுளுவாய் வாய்க்கிறது. ஆயாசமாகவும் சலிப்பாகவும் இருக்கிறது. என்ன செய்ய? அம்மாதிரியாய் ஆசையிருந்தால், ‘பாப்புலர்’ கோயில்களுக்கு வராதீர்கள் என்றார் நன்பர். சரிதான்.

அத்தனையையும் மீறி, க்ஷண நேர தரிசனத்தில், பெருமாளின் ஆகுருதியும், அழகும், அவர் நமக்குள்ளே ஏற்படுத்தும் சிலிர்ப்பையும் வருணிக்க இயலவில்லை.

இங்கே எழுத வந்தது அதுபற்றியல்ல. கோயிலின் உள்ளே, ‘தர்மதரிசன’ ‘க்யூ’ துவங்கும் இடத்தில் ஒரு சிற்பக்கலைக் கூடம் இருக்கிறது. ஆட்கள் நடமாட்டம் இல்லை. நுழைவுக் கட்டணம் பத்து ரூபாய்.  உள்ளே சென்றால், ஆஹா... என்ன இது? தங்க நகையில் கூட இவ்வளவு வேலைப்பாடுகள் சாத்தியமா என்பது சந்தேகமே!  அங்கே  கண்டது  கருங்கல் நகைக் கூடம். 

மண்டபத்தின் இருபுறம் வரிசையாக தூண்களில் பல்வேறு புராணக் கதைகளைச் சித்தரிக்கும் அற்புதமான சிற்பங்கள். நாரதர் கையில் இருக்கும் வீணையின் நரம்புகள் கூட தனித்தனியாகத் தெரியும் அற்புதக் கலைவண்ணம். தேவியர்கள் அணிந்திருக்கும் நகைகள் எல்லாம் என்ன நேர்த்தி? முக பாவங்களை விவரிக்க இயலாது. மோனத்தவம் செய்யும் பொழுது உள்ள பாவமும், சிருங்காரத்தில் இருக்கும் போது ஏற்படும் முகபாவமும், போரின் போது வெளிப்படும் முகபாவமும்  நேரில் கண்டுணர வேண்டிய நுணுக்கங்கள்.

தூண்களின் நாற்புரமும் இவைமாதிரியான சிற்பங்கள். இம்மாதிரி இருபது தூண்கள். ஒவ்வொரு தூணிற்கும் அரைமணி நேரம் செலவழித்தால் கூட முற்றிலும் புரிந்து கொள்ள இயலுமா என்பது சந்தேகமே! ஒவ்வொரு தூணும், எண்ணற்ற  சிற்பங்களுடன் ஒரே கல்லில்.... ‘

கல்லிலே கலை வண்ணம் கண்டான்’       என வருணிக்க  பொருத்தமான இடம்.

“சிற்பங்களை நிழற்படம் எடுத்துக் கொள்ளட்டுமா?”
இல்லை... கூடாது, நோட்டீஸ் போர்டை பார்க்கவில்லை?

தெய்வங்களை நிழற்படம் எடுக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.  இந்த காலரிகளையும் எடுக்காதே என்பது என்ன லாஜிக்?

“இந்த தூண்களைப் பற்றி விவரிக்க முடியுமா? “
தெரியாது சார்.

“கைடு யாராவது?”
அப்படியாரும் இல்லை.

“இது சம்பந்தமாக ஏதேனும் புத்தகங்கள்?”
இல்லை..

“இவ்வளவு அற்புதமான சிற்பங்கள் வைத்திருக்கிறீர்கள். அதன் அருமையும் புரியவில்லை. ஒட்டடையாவது அடிக்கலாம் தானே? அந்த அற்புத சிற்பங்களின் மீது, இரும்புக்கம்பியெல்லாம் போட்டு வைத்திருக்கிறீர்களே, அதை அகற்றலாமே சார்?”

“இப்ப நீ பேசாமல் எங்கூட வரப்போறீயா இல்லியா?” இழுத்து வந்துவிட்டார் என தமக்கை. உனக்கு சிற்பங்களைக் கண்டு களிக்க விருப்பமாக  இருந்தால், திண்டுக்கல் அருகே இருக்கும் தாடிக்கொம்பு எனும் ஊரில் சௌந்தரராஜப் பெருமாள் எனும் கோயில்  இருக்கிறது. போய்ப்பார் என்றார் அவர்.

கோவிலின் பொக்கிஷ அறைகளுக்கு சீல்வைத்து காவல் காக்கிறீர்களே, உண்மையான பொக்கிஷம் அங்கே இல்லை... இந்த சிற்பக் கூடத்தில்தான் இருக்கிறது.  தங்க நகைகளை செய்து கொள்ளலாம். இந்த தொன்மையான நுணுக்கமான கற்சிற்பங்களை செய்ய முடியுமா? என்றேன். விரோதமாகப் பார்த்தார். 

பின் குறிப்பாக: 

(தி.புரத்தில் எல்லா கோயில்களிலும் சட்டைய கழற்றி, கழற்றி பழக்கமாகிப்போய், அந்த ஊரில் இருக்கும் ‘போதீஸ்’ டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நுழையும் பொழுது, அங்கே இருந்த வரவேற்பு பெண்ணிடம், ‘என்னம்மா, இங்கேயும் சட்டையை கழற்ற வேணுமா எனக் கேட்க, அவர் விழிக்க, ‘இப்ப நீ என்னிடம் அடி வாங்கப்போறே’ என்றார் தமக்கை.)

ஊர்வந்ததும் எனது நன்பர் திரு செந்திலிடம், தாடிக்கொம்பு கோயில் பற்றிச் சொன்னேன், “லைக் மைன்டட்”  என்பதால்.  உடனே திட்டமிட்டு,  நான், திரு செந்தில், திரு. எஸ். ராமனாதன் ஆகியோருடன் தாடிக்கொம்பு பயணம்.

கேள்விப்பட்டது மிகவும் சரி.  மலைக்கச் செய்யும் அற்புதமான சிற்பங்கள். 

தமிழ் நாட்டில், சிற்பக்கலைகளுக்கு  பெயர்பெற்ற, தாராசுரம், க.கொ.சோ.புரம், கிருஷ்ணாபுரம், தாரமங்கலம் போன்ற தலங்களுள் இடங்களுக்கு நிகரானது... இல்லை கொஞ்சம் மேலானது என்றே கூறலாம்.  தாயார் சன்னதிக்கு முன்புறம் உள்ள மகாமண்டபத்தில், இருபுறமும் 7+7 என அமைந்திருக்கும் 14 தூண் சிற்பங்கலைக் கூடங்களை, இங்கே விவரிக்கப் போவதில்லை.  வாய்ப்புக் கிடைக்கும் பொழுது சென்று வாருங்கள். 

சைவை-வைணவ இணக்கத்திற்கு கட்டியம் கூறும் கோயில். இப்படியான ஒரு கோயிலை எப்படி இத்தனை நாள் ‘மிஸ்’ செய்தேன்?


கோயில்  முகப்பு 





திரும்பும் வழியில் முக்கொம்பு.

திருச்சி முக்கொம்பு  - இதைப் பார்த்திருக்கிறீர்களா?

குணசீலம் பிரசன்ன வெங்கடேசர் கோயில்

திருவாணைக்கா.. உட்பிரகாரம்
 பிரம்மாண்டமான கோயில்

திருவானைக்கா கோபுரம்



சென்னை திருச்சி நெடுஞ்சாலையில், பாடலூர் அருகே ‘ஊட்டத்தூர்’ (ஊற்றத்தூர்) என்ற ஒரு கிராமம் உள்ளது. இங்கே மிகப் பழமையான, அழகான பெரிய கோயில் ஒன்று உள்ளது.

இறைவன்: சுத்தரத்னேஸ்வரர் (மாசிலாமணி).
இறைவி: அகிலாண்டேஸ்வரி.
காலம்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு.

இங்கே ஒரு நடராஜரர் சிலை இருக்கிறது. உடல் நலம் வேண்டி, இங்கே வருகிறார்கள். நடராஜரின் மேல், வெட்டிவேரிலான ஒரு மாலையை,
இரவு முழுக்க அணுவித்து, காலை எடுத்துக் கொடுக்கிறார்கள். அந்த மாலை நாற்பது வெட்டிவெர் முடிச்சுக்களால் ஆனது. அதை தினம் ஒன்றாக இரவு முழுக்க நீரில் ஊறவைத்து, நாற்பது நாட்கள், காலையில் வடிகட்டி அருந்திவர சிறுனீரக பிரச்சினைகள் தீரும் என்கிறார்கள். 

 மூலவர் எதிரிலேயே, பிரம்ம தீர்த்தம் எனும் கிணறு இருக்கிறது. சிறப்பாகச் சொல்கிறார்கள்.



கோயில் முகப்பு - நண்பருடன்.

நடராஜர்.. மேலே அணுவித்திருப்பதுதான் வெட்டிவேர் மாலை 


மூலவர் சுத்தரத்னேஸ்வரர் .

பிரம்மா தீர்த்தம். 





Monday, July 13, 2015

பத்மநாபா அரண்மனை

மைசூர் அரண்மனை மாதிரி பிரம்மாண்டம் இல்லைதான்.
அந்தக்கால ஒரு பெரிய ஜமீன் வீடு போல இருக்கிறது.  பார்க்கலாம்

உணவுக்கூடம்.  2000 பேர் ஒரே சமயத்தில் சாப்பிடலாம்.
அன்னதானம் செய்யும் இடமாம்.





கதவு 


பால்கனி அழகாய் இருக்கிறது. 

அரண்மனைக்குள் குளம். அதற்குச் செல்லும் வழி.  









மேலே இருக்கும் முன்றும் பேச்சிப்பாறை அணைக்கட்டுப் பகுதிகள் 
அகத்தியர் அருவி 


மணிமுத்தா அருவி



*(சில படங்கள் மட்டும் நெட்)




Sunday, July 12, 2015

நண்பர்களுடன்.....


திற்பரப்பு அருவியின் அழகே அலாதி 




கன்யாகுமரி சூரிய அஸ்தமனம் 

கன்யாகுமரி சூரிய உதயம்



  தொட்டிப் பாலம் 

Water from one hill to another hill is taken through Over Bridge Chanel 
Add caption

View from Top of the Thotti Palam



Details about the Thotti Palam
பாபநாசம்  கோயில் கோபுரம் 

கோயில் அருகே சீறிவரும் தாமிரவருணி

Saturday, July 11, 2015

கோடை சுற்றுலா - 2015

இந்த வருடமும், நண்பர்களுடன், மூன்று நாள் சுற்றுலா சென்றிருந்தோம்.
குற்றாலம் காய்ந்து போய்க் கிடக்க, காட்டெருமைக் கூட்டம் போல வெறும் பாறைகளே கண்களை நிறைத்ததால், தமிழக எல்லையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரமுள்ள, “பாலருவி” என்ற அருவிக்குச் சென்றோம். பொருத்தமான பெயர்தான் வைத்திருக்கிறார்கள்.  பால்போல ‘வெள்ளை வெளேர்’ என வீழ்கிறது அருவி.

பாலருவி கேரளாவில், “ஆரியங்காவு”க்கு அருகில் உள்ளது. ‘கல்லாடா’ ஆற்றின் அருவி இது.   நான் பற்பல அருவிகளுக்குச் சென்றிருந்தாலும், இந்த அருவி மிக வித்தியாசமாக இருக்கிறது.  299 அடி உயரத்திலிருந்து விழுகிறது அருவி.

இது வரை அருவிகள் என்றால், உயரத்திலிருந்து, நீர், பாறைகளின் மீது கொட்ட, நாம் தலையை உள்ளே நீட்டி, குளித்து மகிழ்வது எனக் கருதியிருந்தது போலன்றி, இந்த வீழ்ச்சி, மிக உயரத்திலிருந்து, கீழே உள்ள ஒரு நீர்த் தேக்கத்தில் விழுகிறது. மார்பளவு நீரில் நின்றுகொண்டு அருவியில் குளிக்கலாம் - நீந்தலாம். இந்த அருவிக்கு இதுதான் முதன் முதலில் செல்வது என்பதாலோ என்னவோ, இதன் அழகு பிரமிப்பாக இருந்தது.

இதமான, மப்பும் மந்தாரமான மந்தகாச காலநிலையில்,
சாரல் மழை எங்கும் தூவ, அடர்ந்த பசுங்காடுகள் சூழ,
எழிலான கருத்த ராட்சதன் போன்ற முரட்டு மலையின் மேலிருந்து, பேராணவம் மிக்க எழிலான மங்கை ஒருத்தி, எனக்கு நிகர் எங்கேனும் உண்டா என வினவும் ‘கம்பீர நாட்டியம்’ போல பேரோசையோடு தெளித்து விழுகிறது அருவி.

தெளிந்த - குளிர்ந்த நீர்...  நெருக்கியடித்து முட்டித் தள்ளும் கூட்டம் இல்லாமல், அமிர்தம் உண்டது போல, ஒரு மணி நேரத்திற்கும் மேல் அருவியிலும் தேக்கத்திலும் நீந்தித் திளைத்து மகிழ்ந்தேன். 

ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கேரள அரசாங்கம் இந்த அருவியினையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்திருக்கிறார்கள். அருவிக்கு அருகில் உள்ள படிக்கட்டுகளைக் கூட ஒரு பெண் ஊழியர் கழுவி விட்டுக் கொண்டே இருக்கிறார். வாகனங்கள் நிறுத்தப் படுவதிலும் ஒரு ஒழுங்கு.

குற்றாலத்தில், அருவி எங்கே இருக்கிறது என்பது கூடத்தெரியாமல்,  எல்லா அருவிகளின் அருகிலும், பஜ்ஜிக் கடைகள், குல்லாய்க்கடைகள், ஊறுகாய்க்கடைகள், சிப்ஸ்கடைகள், தோசைக் கடைகள், ஸ்பைசஸ் (போலி) கடைகள், டீக்கடைகள் என காளான் போல, நடக்கக் கூட  இடமில்லாமல், நெருக்கியடித்து வியாபாரம் செய்வார்களே அது போல அருவறுக்கும் காட்சி இங்கே இல்லை.  ஒரு ஒரு கேரள அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு சுகாதாரமான காஃபி ஷாப். அவ்வளவே.

தமிழக சுற்றுலா இடங்களில் மட்டும் எதற்காக இவ்வளவு கடைகள்? 

இயற்கையை அதன் போக்கில் விடாமல், நாசப்படுத்தி அழகை ரசிக்க விடாமல், பார்க்க விடாமல், அனுபவிக்க விடாமல் எதற்கு இத்தனை உபத்திரவங்கள்?

ஊட்டியில், தொட்டபெட்டா சிகரத்தில் உள்ள ‘டெலஸ்கோப் ஹவுஸிலிருந்து’ ஒரு நூறு அடி தூரத்தில் இருக்கும் வியூ பாயிண்டிலிருந்து பார்த்தால், பொள்ளாச்சி உட்பட பலப்பல சுற்றுப் பகுதிகள் தெளிவாகத் தெரியும்.  உண்மையிலேயே மிக நல்ல வ்யூபாயிண்ட். 

ஆனால், டெலஸ்கோப் ஹௌஸிலிருந்து, வ்யூ பாயிண்ட்டிற்கும் இடைப்பட்ட அந்த மிகக் குறுகிய  நூறு அடி பாதையின் இருபுறத்திலும் எத்தனை கடைகள்? 

அந்த நூறடிக்குள்தான்,  நமக்கு ‘பஜ்ஜி தின்றாக வேண்டும்”, போண்டா மெல்லனும், ‘ஸ்வெட்டர் வாங்கனும்’, ‘சாக்ஸ் வாங்கனும்’, ‘குல்லாய் வாங்கனும்’, ‘சுண்டல் தின்ன வேணும்’, ‘வளையல் வாங்கனும்’, ‘ப்ளாஸ்டிக் பொருட்கள் வாங்கனும்’, ‘சிப்ஸ் வாங்கனும்’, ‘பொரி தின்னனும்', ‘ஹேர் கிளிப்கள் வாங்கி செருகிக் கொள்ள வேண்டும்’,  உலகின் அத்தனை ‘டிம்டிம்ஸ்’ பொருட்களும் விற்றாகனும்.... சை... என்ன ரசனை நமக்கு?  இதை அரசாங்கம் ஒழுங்கு படுத்த வேண்டுமா? வேண்டாமா?

கன்யாகுமரியிக்கும் சென்றிருந்தேன்... அப்ப்பா... சொல்லி மாளாது கடைகள்.. எதையும் ரசிக்க முடியாது!  நெருக்கியடித்து, சந்தைக் கடைபோல இருக்கிறது கன்யாகுமரி..  சகல இடங்களிலும் நீக்கமற நடக்க விடாமல், கடைகள்.

வியாபார ஸ்தலங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை! உள்ளூர் பொருளாதாரம் அதைச் சார்ந்ததுதான்.  அதற்கென ஒரு விரிந்த இடம் ஒதுக்கி, அங்கே மட்டும்தான் வியாபாரம் என கட்டுப் படுத்தினால் என்ன?  உலகெங்கும் அப்படித் தானே நடக்கிறது?

சுற்றுலாத் தலங்களை எவ்விதம் பராமரிப்பது என்பதை உடணடியாக கற்றுக்கொண்டு அமுல் படுத்தியாக வேண்டும்.

இனி சில படங்கள்...