Monday, July 20, 2015

திருவனந்தபுரம் பொக்கிஷம்.

திருவனந்தபுரத்தில், ஏ.கே 47 சகிதம், பத்மனாபசுவாமி பள்ளி கொண்டிருக்கிறார். தீவீர வாதிகளிடமிருந்து பாதுகாப்பு, மற்றும் பொக்கிஷ அறைகள் காரணமென்றாலும், கோவிலில் இவ்வளவு கெடுபிடிகள் கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது. கேரள சம்ப்ரதாயப்படி சட்டையைக் கழற்றிவிட்டு சென்றவுடன் ‘மெட்டல் டிடக்டர்கள்’.
இரும்பு பைப்புகள் கொண்டு அடைகாக்கப்படும் ‘நீளமான’ பக்தர்களின் பாம்பு வரிசைகள். இலவச மற்றும் 300 ரூபாய் க்யூக்கள். 

விச்ராந்தியாக உள்ளே சென்று இறைவன் முன்னால், மெய்யுறுகி நிற்கவும் அவனிடம் கொஞ்சம் பேசவும் ஆசையாகத்தான் உள்ளது. விரட்டியடிக்கிறார்கள். அதிகாரமும் பணமும் இருக்கும் ஆசாமிகளுக்கு தரிசனம் சுளுவாய் வாய்க்கிறது. ஆயாசமாகவும் சலிப்பாகவும் இருக்கிறது. என்ன செய்ய? அம்மாதிரியாய் ஆசையிருந்தால், ‘பாப்புலர்’ கோயில்களுக்கு வராதீர்கள் என்றார் நன்பர். சரிதான்.

அத்தனையையும் மீறி, க்ஷண நேர தரிசனத்தில், பெருமாளின் ஆகுருதியும், அழகும், அவர் நமக்குள்ளே ஏற்படுத்தும் சிலிர்ப்பையும் வருணிக்க இயலவில்லை.

இங்கே எழுத வந்தது அதுபற்றியல்ல. கோயிலின் உள்ளே, ‘தர்மதரிசன’ ‘க்யூ’ துவங்கும் இடத்தில் ஒரு சிற்பக்கலைக் கூடம் இருக்கிறது. ஆட்கள் நடமாட்டம் இல்லை. நுழைவுக் கட்டணம் பத்து ரூபாய்.  உள்ளே சென்றால், ஆஹா... என்ன இது? தங்க நகையில் கூட இவ்வளவு வேலைப்பாடுகள் சாத்தியமா என்பது சந்தேகமே!  அங்கே  கண்டது  கருங்கல் நகைக் கூடம். 

மண்டபத்தின் இருபுறம் வரிசையாக தூண்களில் பல்வேறு புராணக் கதைகளைச் சித்தரிக்கும் அற்புதமான சிற்பங்கள். நாரதர் கையில் இருக்கும் வீணையின் நரம்புகள் கூட தனித்தனியாகத் தெரியும் அற்புதக் கலைவண்ணம். தேவியர்கள் அணிந்திருக்கும் நகைகள் எல்லாம் என்ன நேர்த்தி? முக பாவங்களை விவரிக்க இயலாது. மோனத்தவம் செய்யும் பொழுது உள்ள பாவமும், சிருங்காரத்தில் இருக்கும் போது ஏற்படும் முகபாவமும், போரின் போது வெளிப்படும் முகபாவமும்  நேரில் கண்டுணர வேண்டிய நுணுக்கங்கள்.

தூண்களின் நாற்புரமும் இவைமாதிரியான சிற்பங்கள். இம்மாதிரி இருபது தூண்கள். ஒவ்வொரு தூணிற்கும் அரைமணி நேரம் செலவழித்தால் கூட முற்றிலும் புரிந்து கொள்ள இயலுமா என்பது சந்தேகமே! ஒவ்வொரு தூணும், எண்ணற்ற  சிற்பங்களுடன் ஒரே கல்லில்.... ‘

கல்லிலே கலை வண்ணம் கண்டான்’       என வருணிக்க  பொருத்தமான இடம்.

“சிற்பங்களை நிழற்படம் எடுத்துக் கொள்ளட்டுமா?”
இல்லை... கூடாது, நோட்டீஸ் போர்டை பார்க்கவில்லை?

தெய்வங்களை நிழற்படம் எடுக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.  இந்த காலரிகளையும் எடுக்காதே என்பது என்ன லாஜிக்?

“இந்த தூண்களைப் பற்றி விவரிக்க முடியுமா? “
தெரியாது சார்.

“கைடு யாராவது?”
அப்படியாரும் இல்லை.

“இது சம்பந்தமாக ஏதேனும் புத்தகங்கள்?”
இல்லை..

“இவ்வளவு அற்புதமான சிற்பங்கள் வைத்திருக்கிறீர்கள். அதன் அருமையும் புரியவில்லை. ஒட்டடையாவது அடிக்கலாம் தானே? அந்த அற்புத சிற்பங்களின் மீது, இரும்புக்கம்பியெல்லாம் போட்டு வைத்திருக்கிறீர்களே, அதை அகற்றலாமே சார்?”

“இப்ப நீ பேசாமல் எங்கூட வரப்போறீயா இல்லியா?” இழுத்து வந்துவிட்டார் என தமக்கை. உனக்கு சிற்பங்களைக் கண்டு களிக்க விருப்பமாக  இருந்தால், திண்டுக்கல் அருகே இருக்கும் தாடிக்கொம்பு எனும் ஊரில் சௌந்தரராஜப் பெருமாள் எனும் கோயில்  இருக்கிறது. போய்ப்பார் என்றார் அவர்.

கோவிலின் பொக்கிஷ அறைகளுக்கு சீல்வைத்து காவல் காக்கிறீர்களே, உண்மையான பொக்கிஷம் அங்கே இல்லை... இந்த சிற்பக் கூடத்தில்தான் இருக்கிறது.  தங்க நகைகளை செய்து கொள்ளலாம். இந்த தொன்மையான நுணுக்கமான கற்சிற்பங்களை செய்ய முடியுமா? என்றேன். விரோதமாகப் பார்த்தார். 

பின் குறிப்பாக: 

(தி.புரத்தில் எல்லா கோயில்களிலும் சட்டைய கழற்றி, கழற்றி பழக்கமாகிப்போய், அந்த ஊரில் இருக்கும் ‘போதீஸ்’ டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நுழையும் பொழுது, அங்கே இருந்த வரவேற்பு பெண்ணிடம், ‘என்னம்மா, இங்கேயும் சட்டையை கழற்ற வேணுமா எனக் கேட்க, அவர் விழிக்க, ‘இப்ப நீ என்னிடம் அடி வாங்கப்போறே’ என்றார் தமக்கை.)

ஊர்வந்ததும் எனது நன்பர் திரு செந்திலிடம், தாடிக்கொம்பு கோயில் பற்றிச் சொன்னேன், “லைக் மைன்டட்”  என்பதால்.  உடனே திட்டமிட்டு,  நான், திரு செந்தில், திரு. எஸ். ராமனாதன் ஆகியோருடன் தாடிக்கொம்பு பயணம்.

கேள்விப்பட்டது மிகவும் சரி.  மலைக்கச் செய்யும் அற்புதமான சிற்பங்கள். 

தமிழ் நாட்டில், சிற்பக்கலைகளுக்கு  பெயர்பெற்ற, தாராசுரம், க.கொ.சோ.புரம், கிருஷ்ணாபுரம், தாரமங்கலம் போன்ற தலங்களுள் இடங்களுக்கு நிகரானது... இல்லை கொஞ்சம் மேலானது என்றே கூறலாம்.  தாயார் சன்னதிக்கு முன்புறம் உள்ள மகாமண்டபத்தில், இருபுறமும் 7+7 என அமைந்திருக்கும் 14 தூண் சிற்பங்கலைக் கூடங்களை, இங்கே விவரிக்கப் போவதில்லை.  வாய்ப்புக் கிடைக்கும் பொழுது சென்று வாருங்கள். 

சைவை-வைணவ இணக்கத்திற்கு கட்டியம் கூறும் கோயில். இப்படியான ஒரு கோயிலை எப்படி இத்தனை நாள் ‘மிஸ்’ செய்தேன்?


கோயில்  முகப்பு 





திரும்பும் வழியில் முக்கொம்பு.

திருச்சி முக்கொம்பு  - இதைப் பார்த்திருக்கிறீர்களா?

குணசீலம் பிரசன்ன வெங்கடேசர் கோயில்

திருவாணைக்கா.. உட்பிரகாரம்
 பிரம்மாண்டமான கோயில்

திருவானைக்கா கோபுரம்



சென்னை திருச்சி நெடுஞ்சாலையில், பாடலூர் அருகே ‘ஊட்டத்தூர்’ (ஊற்றத்தூர்) என்ற ஒரு கிராமம் உள்ளது. இங்கே மிகப் பழமையான, அழகான பெரிய கோயில் ஒன்று உள்ளது.

இறைவன்: சுத்தரத்னேஸ்வரர் (மாசிலாமணி).
இறைவி: அகிலாண்டேஸ்வரி.
காலம்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு.

இங்கே ஒரு நடராஜரர் சிலை இருக்கிறது. உடல் நலம் வேண்டி, இங்கே வருகிறார்கள். நடராஜரின் மேல், வெட்டிவேரிலான ஒரு மாலையை,
இரவு முழுக்க அணுவித்து, காலை எடுத்துக் கொடுக்கிறார்கள். அந்த மாலை நாற்பது வெட்டிவெர் முடிச்சுக்களால் ஆனது. அதை தினம் ஒன்றாக இரவு முழுக்க நீரில் ஊறவைத்து, நாற்பது நாட்கள், காலையில் வடிகட்டி அருந்திவர சிறுனீரக பிரச்சினைகள் தீரும் என்கிறார்கள். 

 மூலவர் எதிரிலேயே, பிரம்ம தீர்த்தம் எனும் கிணறு இருக்கிறது. சிறப்பாகச் சொல்கிறார்கள்.



கோயில் முகப்பு - நண்பருடன்.

நடராஜர்.. மேலே அணுவித்திருப்பதுதான் வெட்டிவேர் மாலை 


மூலவர் சுத்தரத்னேஸ்வரர் .

பிரம்மா தீர்த்தம். 





No comments:

Post a Comment