Wednesday, November 30, 2011

முல்லைப் பெரியார் அணை


தமிழகத்தில் தற்போது சூடாக இருக்கும் விஷயங்கள் இரண்டு. ஒன்று கூடங்குளம்; மற்றொன்று முல்லைப் பெரியார் அணை. 

கூடங்குளம் விஷயத்தில், பல்வேறு அமைப்புகளின் நிலைப்பாடும், நிலைபாட்டின் காரணங்களும் தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டன.  

இம்மாதிரியான எல்லா விஷயங்களிலும் ஒரு மறைவான நிரல் (Hidden Agenda) அரசாங்கங்களுக்கு  இருந்தே தீரும். மீடியாக்களின் நிலை, தூண்டிவிடப் படும் போராட்டம் யாவும் இந்த மறைவான நிரலை ஒட்டியோ, வெட்டியோ தான் இருக்கும். ரீடெயில் மார்க்கட்டில் 51% அன்னிய முதலீட்டை அனுமதி கொடுத்த்தில் கூட அரசுக்கு (மத்திய), ஒரு நிரலோ அல்லது நிர்பந்தமோ உண்டு.

ஆனால், முல்லைப் பெரியார் அணைக்கட்டு விவகாரத்தில் தமிழகத்திற்கு ஏதும் மறைமுகத் திட்டம் இருக்க நியாயம் இல்லை. ஆனால் அம்மாதிரியான திட்டம் கேரள அரசுக்கு இருக்க வாய்ப்பு உண்டு.  கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

இந்த அணை 1895-ல், பிரிட்டிஷ் அரசாங்கத்தால், பெரியார் மற்றும் முல்லையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது.  கடல் மட்டத்திற்கு மேல் 2889 அடி உயரத்தில் இருக்கிறது. 176 அடி உயரம். கட்டி முடித்து நூறு ஆண்டு களுக்கு மேல் ஆகிறது.  

கேரள அரசியல் வாதிகள், இந்த அணை உடையப் போகிறது என எல்லாவகையில் மக்களைப் பயமுறுத்தி விட்டனர். தமிழகத்திற்கு எதிராக எல்லாவகையான பிரச்சாரங்களயும் முடுக்கி விட்டு, அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர். இதில் கட்சி பேதம் ஏதும் இல்லை.


முல்லை பெரியார் அணைகுறித்த கேரளத்தின் எதிர்மறையான நிலை பாட்டிற்கு, கீழ்க்கண்ட மூன்று காரணங்கள்தான் மறைவு நிரலாக இருக்க முடியும்!

(1) அணையின் உறுதித்தன்மை குறித்து உண்மையிலேயே சந்தேகம்.

(2) கேரளத்தின் தண்ணீரை எதற்காக தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற ‘பரந்த மனப்பான்மை

(3) இந்த அணையினை உடைத்துவிட்டால், அதன் கீழே இருக்கும் இடுக்கி அணைக்கு இன்னும் அதிக தண்ணீர் கிடைக்கும்.




1. உறுதித்தண்மை: 

தமிழ், மலையாளம் போன்ற உணர்ச்சிகளைத் துறந்து, உணர்ச்சி வயப்படாமல் தீர்மாணிக்க வேண்டிய விஷயம் இது. அணைக்கட்டு உண்மையிலேயே, பலவீனமாதாக இருக்குமானால், அதனால் ஏற்படக்கூடிய துயரம் பெருத்த அளவில் இருக்கும்தான். ஆனால் அணை பலவீனமாய் இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்பவர்கள் யாராக இருக்க வேண்டும்? நிச்சயம் அரசியல்வாதி களாக இருக்க முடியாது!

அரசியல்வாதிகள் யாவரும் பித்தலாட்டக்காரகளாக இருப்பதும், எல்லா விஷயத்திற்கும் நரம்பு புடைக்க, உணர்ச்கிகரமான உரை நிகழ்த்தி, மக்களை உசுப்பேற்றி விடுவதிலும் வல்லவர்களாக இருப் பதும் துரதிர்ஷ்டம். ஆனால் முடிவெடுக்கும் அதிகாரத்தில்அரசியல் வாதிகள்தானே  இருக்கிறார்கள்?

புதிய அணைகட்ட விடமாட்டோம் என தமிழகத்திலும், புதிய அணை கட்டாமல் விடமாட்டோம் என கேரளத்திலும், கம்யூனிஸ்ட்கட்சிகள், பாரதிய ஜனதா, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளும் சந்தேகத்திற் கிட மின்றி பேசுகிறார்கள். தேசீய கட்சிகளாக இருந்துகொண்டு, இவ்வாறு இடத்திற்கு ஒன்றாக, மாற்றி-மாற்றி பேசுவது குறித்து அவர்களுக்கு வெட்கமேதும் இல்லை. முரணாகக்கூட உணரவில்லை.

இதுவரை மத்திய, மநில அரசுகளால் அமைக்கப்பட்ட எந்த ஒரு கமிட்டியும் அணை பலவீனமாக இருக்கிறது என்று அறுதியிட்டு சொல்லவில்லை. அதுமாத்திரமல்ல,  நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம்என உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகவே தீர்ப்புக் கூறி விட்டது.  உச்ச நீதிமன்றம் தானாக எதுவும் கூறிவிட இயலாது. நிபுணர் குழுவின் சிபாரிசுகளை கணக்கில் கொண்டிருக்கும்.  இவை யாவும் கேரள அரசின் காதில் விழவே இல்லை. உறுதித் தண்மை குறித்து யாவரின் சந்தேகத்தைப் போக்க, இந்த அணையினைக் கட்டிக்கொடுத்த பிரிட்டனிடமோ அல்லது ஐ.நா சபையையோ அணுகி, நிபுணர் குழுவின் கருத்துக்களைக் கோரலாம். அக்கருத்தை இரு தரப்பும், அப்பீல் ஏதுமின்றி ஏற்றுக் கொள்ளவேண்டும். இதற்கான முன் முயற்சிகளை மத்திய அரசு செய்யவேண்டும்! செய்வார்களா?

2. எதற்காக தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டும்?

இந்த மனோபாவத்திற்கு எந்த மருந்தும் இல்லை.  உண்மையில் கேரளத்தில் ஓடும் ஆறுகளின் தண்ணீரில் பெரும்பகுதி, அரபிக் கடலில் தான கலக்கிறது. நீர் ஆதாரத்தில் கேரளா ஒரு உபரி மாநிலம். மக்களைத் தூண்டிவிடாமல், கேரளம் பல்வேறு பொருட்களுக்கு தமிழகத்தைத்தான் நம்பி இருக்கிறது என்பதை, புரியவைக்க வேண்டும். அரிசி, மாடு, காய்கறிகள் உட்பட பலவும் இங்கிருந்து தான் செல்லவேண்டும். எனவே தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதில் தவறொன்றுமில்லை என கேரள மக்களுக்கு விளங்க வைக்க வேண்டும்.  இக்காரியத்தை அங்குள்ள சில எழுத்தாளர்கள் செய்கிறார்கள். பேசித் தீர்த்துக் கொள்ளச் சொல்லுகிறார்கள்.  

ஆனால் விந்தையாக கம்யூனிஸ்ட்கட்சிகள் கூட மக்களை சிந்திக்க விடாமல், மக்களை "வெறியேற்றி விடுகின்றன" என்றால் என்ன சொல்வது? அனைத்து நதிகளையும் “மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரலாம். இது நடந்தால் காவிரி உட்பட அனைத்து பிரச்சி னைகளும் தீர்வடையும்.  நாடுகளுக்கிடையே ஒடும் நதித் தாவா வினை எல்லா நாடுகளும் தீர்த்துக் கொண்டுவிடுகின்றன; இந்தியா உட்பட.  

ஆனால் ஒரு நாட்டுக்குள்ளேயே ஓடும் நதித்தாவாவினை தீர்க்க முடியவில்லை என்பது பரிதாபம் மட்டுமல்ல, நமது அரசியல் சட்டத்தின் failure என்று கூட வர்ணிக்கலாம்.

3. இடுக்கி:

இந்த இடத்தில் தான் சூட்சமம் இருக்கிறது என சந்தேகமாய் உள்ளது. அணை பலவீனமாகி விட்டது என்ற கோஷம் உருவானது 1979ல். அதாவது இடுக்கி அணை கட்டப்பட்ட பின். அதற்கு மிக முக்கியக் காரணமும் இருக்கிறது. கேரள மாநிலத்தின் மின் உற்பத்தியை மனதில் கொண்டு, முல்லைப் பெரியாறு அணைக்கு 50 கிமீ தொலைவில் இடுக்கி அணை கட்டப்பட்டது. 1970ல் திட்டமிடப்பட்டு 1976ல் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது. மின்சாரம் தயாரிக்கும் நோக்கத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு கட்டி முடிக்கப்பட்ட நீர் மின்திட்ட அணை இது. கட்டி முடிந்ததும், ‘இடுக்கி நீர் மின்திட்டம்அமல்படுத்தப்பட்டது. இதன் பலனாக, கேரள அரசின் மின் உற்பத்தி அளவு ஒரு மடங்கிற்கு மேல்  உயர்ந்தது.
முல்லைப்பெரியாறு அணையை விட, பன் மடங்கு பெரிதாக  இடுக்கி அணையை கட்டி முடித்தபின்தான் தெரிந்தது. அணையை நிரப்புகிற அளவுக்கு நீர்வரத்து இல்லை என்பது. எதிர்பார்த்த அளவில் மின்சாரம் தயாரிக்க முடியவில்லை அப்போதுதான், கேரள அரசியல்வாதிகளின் பார்வை முல்லைப்பெரியாறு அணை மீது திரும்பியது. அதை உடைத்து விட்டால், அங்கு சேரும் தண்ணீரை அப்படியே, இடுக்கி அணைக்கு திருப்பி விடலாம். எந்தக்காலத்திலும் தண்ணீர் பிரச்னை இருக்காது.

அதன் பிறகு ஆரம்பித்ததுதான் கேரள அரசின் நாடகங்கள். அணை பலவீனமாகி விட்டது; உடைந்து விழுந்தால் இடுக்கி மாவட்டத்தின் லட்சக்கணக்கான மக்கள் மாள்வார்கள் என பிரச்சாரம் செய்தனர். அதன் ஒரு பகுதிதான் டாம்999 சினிமா. (தமிழகத்திற்கும் கேரளத் திற்கும் இடையே ஏற்பட்ட அணை உடன்பாடு 999 வருடங்களுக் கானது! எவ்வளவு சாமர்த்தியம் பாருங்கள்)

மார்ஸிஸ்ட்கள், பா.ஜ.க, காங்கிரஸ் ஆகியோர், தேசிய ஒருமைப் பாடு என்பதை ஊறுகாய் என நினைத்துக் கொண்டிரு க்கிறார்கள் போலும்.  நினைத்தபோது தொட்டுக்கொள்ள!

கோர்ட்டின் மூலமோ, அல்லது கோர்ட்டுக்கு வெளியிலோ அல்லது அரசியல் சமரசம் மூலமோ, குறிப்பிட்ட கால வரையரைக்குள் சரிசெய்து கொள்ள வேண்டிய பிரச்சினையை ஊதி,ஊதி பெரிதாக்குகிறார்கள். இதன் விளைவு என்னவாகும் என்பதைப்பற்றியோ, தேசீய ஒருமைப்பாடு என்பதைக் கேலிப் பொருளாக மாற்றுகிறோம் என்பதைப் பற்றியோ கவலையின்றி, கச்சேரி நடத்துகின்றனர். இந்த அணை இல்லையெனில் மதுரைப் பகுதி வறண்டுவிடும் என்பது எவருக்கு புரிகிறது?

நாடு விடுதலை அடைந்தபின், நாம் பல தவறுகளைச் செய்திருக்கிறோம். ஆசாத் காஷ்மீரை (POK) விட்டுக் கொடுத்தது, இந்தியக் குடியரசை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது, நதிகளை மத்திய அரசின் கட்டுப் பாட்டில் கொணராதது பல வகைப்படும். அதன் விளைவுகளை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!


இது சம்பதமான குறும்படம் (1)  Click Here
                 குறும்படம் (2)  Click Here

Sunday, November 27, 2011

அம்மா...நீ பாடாதே...!


புத்தியில்லாவிடினும் பரவாயில்லை! ஆனால் தனக்கு புத்தியில்லை என்கிற புத்தியாவது வேண்டும். கற்பகவல்லிக்கு, இந்த அளவு கடுமை யான வார்த்தைகள் தேவைப்படாவிட்டாலும், சற்றே மாற்றி, “பாடத் தெரியாவிடினும், தனக்கு பாட வராது”  என்கிற ஞானம் கூட இல்லாமற் போனது, மற்றவர்களின் துரதிர்ஷ்டம்.

ஒரு பாட்டின் அனைத்து வரிகளும் மனப்பாடமாகத் தெரிந்துவிட்டால் போதும்!  குரல், ராகம் பற்றி கவலையில்லை என எவரோ அவருக்கு தப்பாக போதித்து விட்டார்கள் போலும். கற்பகவல்லிக்கு அடங்காத சங்கீத தாகம். இவளது “சங்கீத பிரவாகம்  நவராத்திரி நாட்களில் உச்சத்தை எட்டும்.

அப்போது “கற்பகா பள்ளியில் பயின்று கொண்டிருந்தாள். தெருவில் மற்றவர்கள் அனைவரும், நவராத்திரியில் என்றென்றைக்கு என்ன சுண்டல் செய்யலாம் என திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது, இவள் எந்தெந்த வீட்டில், என்னென்ன பாட்டுக்கள் பாடலாம் என அட்டவணை தயார் செய்து கொண்டிருப்பாள்.

இதில் என்ன தப்பு என்கிறீகளா? பிரச்சினை என்னவெனில், கற்பகாவுக்கு மேல் ஸ்தாயியும் வராது, கீழ்ஸ்தாயும் வராது. “பாட்டுபாடாமல் “அவள்பாட்டுக்கு பாடிக்கொண்டிருப்பாள். கீர்த்தனையின் இரண்டாவது வரியிலேயே கிறீச்சிடுவாள். எல்லோரும் பாடிப்பாடி நைந்து போன ‘அலைபாயுதே.. கூட உன்னைப்பிடி என்னைப்பிடியென்று குதித்து-குதித்து தான் வரும்.  சுறுக்கமாகச்  சொன்னால் தற்போது பஸ்களில் இருக்கும் ‘ஏர் ஹாரன் போல பாடுவாள்.

என் வீட்டிற்கும் கொலுவிற்கு வந்தாள். எச்சரிக்கையாக, அவளை யாரும் பாடச்சொல்வதில்லை என, ஏக மனதாக தீர்மாணம் நிறை வேற்றியிருந்தோம். ஆனால் கற்பகாவின் ஆர்வம், அனுமதி யையோ, வேண்டு கோளையோ எதிர்பார்ப்பதில்லை!  ‘குழலூதி மனமெல்லாம்... என ஆரம்பித்தாள். “கற்பகாவுக்கு சுண்டல் கொடுக்கலை? ரொம்ப நேரமா பாடரது பார்என்று அப்பா குறுக்கிட்டார்!   பாவம் கற்பகாவுக்கு புரியவில்லை. ‘இன்னொரு நாள் வந்து பாடுகிறேன்.. என அச்சுறுத்தி விட்டு சுண்டலுடன் விலகினாள்.  அவளுக்கு திருமணமாகும் வரை நவராத்திரியின் மாலை நேரங்களை ‘திகில் நேரங்களாக மாற்றிக் கொண்டிருந்தாள்.  சில பொழுது போகாத விஷமக்கார மாமிகள் இவள் வாயைக் கிளறி ‘பாட்டுப் பாடச் சொல்லி ரசிப்பார்கள். வாழ்க்கையில் ‘நகைச் சுவையும் வேண்டும் என்பது அவர்கள் வாதம்,

குரல்தான் கடூரமாயிருக்குமே தவிர, அழகாய் இருப்பாள்.  இருபத்தி இரண்டு வயதில் கல்யாணம் நிச்சயமாயிற்று. மாப்பிள்ளை சென்னையில் இருக்கிறார்.

திருமணத்தில், நலங்கின்போது ‘பாடியே அப்பளத்தை நொறுங்க்ச் செய்த வரலாறு இவளுக்கு உண்டு. ‘போதும்.. போதும், என்ன சின்ன குழந்தை மாதிரி தேங்காய் உருட்டிக்கொண்டு, பாடிக்கொண்டு...?  இதெல்லாம் சின்ன குழந்தைகள் செய்தால் பார்க்கலாம், ரசிக்கலாம்! இந்த வயதில் இதெல்லாம் தேவையே இல்லை என, கற்பகாவின் மாமியாரே, நலங்கினை சீக்கிரமாக முடித்து வைத்ததில் வருத்தம் கற்பகாவுக்கு! இன்னும் இரண்டு பாட்டு பாடும் சான்ஸை கெடுத்து விட்டாளே?

கற்பகாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது!

நவராத்திரியின் பொழுது, பாட்டு பாடுவதற்கென்றே, ஆபீஸ் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவாள்.

ஒரு நாள், பக்கத்து பிளாக்கில் ஒரு வீட்டிற்கு, கொலுவிற்கு கூப்பிட் டார்கள் என, தனது இரண்டு வயது குழந்தையையும் தூக்கிக் கொண்டு சென்றாள்.  அவள் குழந்தைக்கு ஒரு பழக்கம். சதா முன்று விரல்களையும் வாய்க்குள் போட்டுக் கொள்வாள். அதை எடுத்துவிட்டால் போச்சு, பெருங் குரல் எடுத்து ஓலமிட ஆரம்பித்து விடும். அம்மாவின் பாட்டு அளவுக்கு மோசமில்லை எனினும், அந்த ஏரியாவே நடுங்குமளவுக்கு அலறுவாள்.

குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு, சாங்கோ பாங்கமாக அமர்ந்து கொண்டு, ‘கண்டேன் கமலாலயம்... ‘என்று பாட ஆரம்பிதாள். உடனே அந்த வீட்டுக்கார மாமா தனக்கு வெளியில் அவசர வேலையிருப் பதாக சட்டையை மாட்டிக்கொண்டு எஸ்கேப் ஆனார். கொலுவிற்கு கூப்பிட்ட மாமி பரிதவித்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது, மூன்று விரல்களை வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்த குழந்தை, நிதானமாக விரல்களை வெளியிலெடுத்து அம்மாவிடம் சொல்லியது:  “அம்மா..... நீ பாடாதே...!   கற்பகா இதைக் கண்டு கொள்ளாமல், எடுத்த விரல்களை மீண்டும் வாய்க்குள் அனுப்பிவிட்டு, ‘கமலாலயத்தைத் தொடர்ந்தாள். இம்முறை குழந்தை வேகமாக ‘அம்மா..நீ பாடாதே.. என கத்தியது. இந்த விளையாட்டு நான்கு முறை தொடர்ந்த்து.

“அட.. சட்.. இந்த சனியனை வைத்துக் கொண்டு, நிம்மதியா ஒரு பாட்டு பாடமுடியாது. எப்ப பாத்தாலும் பாடாதே..பாடாதேன்னு பிலாக்கனம் பாடிக்கொண்டிருக்கும். நான் போய் இதை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்”   என கலவரப்படுத்திவிட்டு, கிளம்பினாள் கற்பகா.  சாட்சாத் ‘அம்பிகையே குழந்தை உருவில் வந்து, தன்னைக் காப்பாற்றியதாக கசிந்து கண்ணீர் விட்டாள் கொலுவிற்கு அழைத்தவள்.


ஒரு நாள் இரவு.  என்ன காரணம் எனத் தெரியவில்லை! கற்பகாவின் குழந்தை, தூங்காமல் விடாமல் அழுது கொண்டிருந்தது.  சமாதனப்படுத்த முயன்று கொண்டிருந்தனர் அவளது மாமனாரும், மாமியாரும். குழந்தைக்கு அழுகையை நிறுத்தும் உத்தேசம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சமையலறையில், வேலை செய்து கொண்டிருந்த கற்பகா, ‘விஸ்கென வெளியே வந்தாள்.

“உங்களுக்கெல்லாம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளவே தெரியவில்லை, வயதாகி என்ன பிரயோஜனம்? நான் அழுகையை நிறுத்துகிறேன் பாருங்கள் என அவர்களை காய்ந்தாள். வெடுக்கென குழந்தையை பிடுங்கிக் கொண்டாள். பெட் ரூமினுள் நுழைந்தாள். கதவைச் சாத்திக் கொண்டாள். ஃபேனைப் போட்டாள். லைட்டை ஆஃப் செய்தாள். குழந்தையை படுக்க வைத்தாள். தானும் அதன் அருகில் படுத்துக் கொண்டாள். அக்கால லீலா, பி.சுசீலா வில் ஆரம்பித்து இக்கால நித்யஸ்ரீ வரை அனைத்து வகையான பழைய-புதிய பாடல்களை பாட ஆரம்பித்தாள். அரை மணி நேரமாக ‘கானப் பிரவாகம் நடந்து கொண்டிருந்த்து. அழுகை நின்றுவிட்டாலும்,
தூங்குவதாகக் காணோம்.

திடீரென குழந்தை திருவாய் மலர்ந்தருளியது.  ‘அம்மா.. நீ பாடுவதை நிறுத்தினால், நானாகவே தூங்கிடுவேன்... என்றது.

இந்த கணத்திற்காகவே, பெட் ரூமின் வாசலில் காத்துக் கொண்டிருந்த, அவளது கணவன், மாமனார், மாமியார் ஆகிய மூவரும், படாரெனறு கதவைத் திறந்து கொண்டு உள்ளே பாய்ந்தனர்.  அந்த பிஞ்சுக் குழந்தை யின் கால்களைப் பிடித்துக் கொண்டனர். ‘நீ குழந்தையே இல்லை..! தெய்வம்!  எங்களைக் காப்பாற்றிய தெய்வமே! இப்ப நீ சொன்னியே அதைத்தான் நாங்கள் சொல்ல வேண்டும் என அரை மணி நேரமா தவித்துக் கொண்டிருந்தோம்.  நீயே சொல்லிட்டே..” என சிசுவின் கால்களை நமஸ்கரித்தனர். தன்னை கிண்டல் செய்வதாக கோபித்துக் கொண்டாளே தவிர, தனக்கு பாட வரவில்லை எனத் தெரியவில்லை.

அவளது வீட்டிற்கு, இரண்டு நாட்களுக்கு முன்னால் செல்ல நேர்ந்தது.
‘அன்ணா! டிசம்பர் மாதம் வருகிறதே, சங்கீத சபாக்களில் நிறைய பேர் கச்சேரிகள் செய்கி றார்கள்!  நீ எனக்கு யாரிடமாவது சொல்லி, எனக்கு பாடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வாங்கித் தாயேன். அது மத்யான நேரமோ, காலையோ எதுவானலும் பரவா யில்லை என்றாள்.

என்ன சொல்லித் தப்பிப்பது எனத் தெரியவில்லை! எவரேனும் உதவி செய்தால், உங்களுக்கு மட்டும் ஜெயலலிதாவிடம் சொல்லி, பால் விலை குறைக்கச் சொல்லி ஏற்பாடு செய்யலாம்.

Saturday, November 26, 2011

யாரையும் விட்டுவைக்காதே!

இந்தியாவில் சில்லறை வணிகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய  முதலீட்டை அனுமதிக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சில்லறை  வணிகத்தில் பன்னாட்டு நிறுவன்ங்களை அனுமதிப்பது நல்லதா என்பதை பார்ப்போம்!



இத்துறையில் கிட்டத்தட்ட 25 
லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பணம் புரளுகிறது. எனவே தான், இத்துறையினை விழுங்குவதற்கு, பன்னாட்டு நிறுவனங்கள் அலைகின்றன. ஆனால், சில்லறை விற்பனை என்பது நமது நாட்டில் கோடிக் கணக்கான சிறு வியாபரிகளின் உயிர் மூச்சு! 


நமது நாட்டு சில்லறை வணிகர்களின் நலனில் சிறிதும் அக்கறை யில்லாத மத்திய அரசு, பல தரப்பெயர் கொண்ட பொருட் களை விற்பனை செய்வதற்கான சில்லறை விற்பனை நிலையங் களை அமைப்பதில் 51 விழுக்காடு நேரடி அந்திய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துள்ளது;


பல்வேறு அரசியல் கட்சிகள்சிறு வணிகர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு, பல தரப்பெயர் கொண்ட சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு கதவைத் திறந்து விட்டிருக்கிறது. அது மட்டுமல்ல,  ஒற்றை தரப்பெயர் கொண்ட சில்லறை வணிகத் துறையில் நேரடியாக அந்திய முதலீட்டிற்கான உச்சவரம்பையும் 100 விழுக்காடாகவும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.


ஏற்கனவே, உள்நாட்டு பெரு முதலாளிகளின் சங்கிலித்தொடர் விற்பனை மையங்களால், நலிந்துபோன வியாபாரிகள் ஏராளம். இந்த நிலையில்25 லட்சம் கோடி ரூபாய் பணம் புழங்கும் சில்லறை வணிகச் சந்தை வால்மார்ட்டெஸ்கோ உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித் துள்ளது மத்திய அரசு. இதனால் சில்லறை வணிகத்தையே நம்பியிருக்கும் சுமார் கோடி சிறு வணிகர்களும், அவர்களை சார்ந்த சுமார் 25 கோடி பேரின் வாழ் வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
.


மத்திய அரசு விதிக்கும் எல்லா நிபந்தனை களையும், மீறும் சாகசம்  மிக்கவை பன்னாட்டு நிறுவனங்கள். தாங்கள் விற் பனை செய்யும் பொருட்களில் முப்பது விழுக்காட்டை சிறு தொழில் துறையினரிட மிருந்துதான் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற  நிபந்தனையை காற்றில் பறக்கவிட்டு, விதிகளின்  ஓட்டைகளில் புகுந்து கொண்டு, சீனா போன்ற 
நாடுகளிடமிருந்து மிகக்குறைந்த விலைக்கு பொருட் களை 
வாங்கி, அதிக விலைக்கு நமது தலையில் கட்டி, கல்லா கட்டுவதில்தான் கருத்தாய் இருப்பார்கள்.  

அமெரிக்காவிலும், கனடாவிலும் கூட, இந்த பன்னாட்டு நிறுவனங் கள் விற்பனை செய்யும் பொருட்களில் மிகப் பெரும்பாலானவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே; அந்த நாடுகளின் தேசியக்கொடி உட்பட! விதிமுறைகளை கடுமையாக அமுலாக்கும் அந்த நாடுகளுக்கே இந்த கதி என்றால், காசுக்காக எது வேண்டு மானாலும் செய்யும் ஊழல்அரசியல் வாதிகளும்-ஊழல் அதிகாரிகளும் மலிந்த நமது நாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் என்னவெல்லாம் செய்வார்கள்?


இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்? கோடிக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்வாதரம் கேள்விக்குறியாவதோடு, கட்டுக் கடங்கா விலையுயர்வும், பணவீக்கமும் ஏற்படும். வேலையின்மை அதிகரிக்கும். இதன் மூலம் மக்களிடையே, வெறுப்பும்,ஆத்திரமும் மேலிடும். சமூக அமைதி கெடும்!


வெளினாட்டு மூலதனங்களை, இக்காலத்தில் தவிர்க்க இயலாது என்றாலும் கூட, சிறுவணிகத்துறையிலும் பன்னாட்டு பகாசுர கம்பெனிகளை அனுமதிப்பது, நம் நாட்டின் வணிகர்களின் எதிர் காலத்தை இருட்டிலாழ்த்தும். யாரைத் திருப்திப்படுத்த இம் மாதிரி யான முடிவுகளை மத்திய அரசு எடுக்கிறது என்பது ஒன்றும் இரகசியமானதல்ல!


மக்களை ஏமாற்றுவதற்காக, மிக எளிதாக தப்பிகக்க் கூடிய உதவாக்கரை நிபந்தனைகளை விதித்துள்ளது மத்திய அரசு! பத்து லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில்தான் கடைகளை திறக்கவேண்டும் என்பதெல்லாம் ஏமாற்றுவேலை. அந்த மாதிரியான நகரங்களில் சிறு வியாபாரிகளே இல்லையா என்ன? இந்த மாதிரியான பழமான நகரங்கள்தானே அவர்களுக்கு வேண்டும்?


இந்தியாவில் 1000 நபர்களுக்கு, 11 என்றவிகிதத்தில் கடைகள் இருக்கின்றன. இதுபோல 1.2 கோடி கடைகள் இருக்கின்றன. நேரடியாக நான்கு கோடிபேர்கள் இந்த கடைகளில் வேலை செய்கின்றனர். இம்மாதிரியான கடைகளில் 95%  சுயவேலைவாய்ப்பாக கடைகளை அமைத்துக் கொண்டவர்கள்.  நகரங்களில் உள்ள இம்மாதிரியான சிறு வியாபாரிகள் தான்  மிக மோசமாக பாதிக்கப்படப் போகிறார்கள்.  பன்னாட்டு  நிறுவனங்கள் அமைக்கப்போடும் சூப்பர்மார்க்கட்களால், உள்ளூர் வணிகர்கள் துடைத்தெறியப்படப் போகிறார்கள்.  இதுதான அமரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நடந்த்து.


வியாபாரிகள் மட்டுமல்ல, சிறு உற்பத்தியாளர்களும் கூட கடுமை யாகப் பாதிக்கப் படப் போகிறார்கள்.  உதாரணமாக, 20 ஆண்டு களுக்கு முன்னால் , எத்தனைவிதமான சோப்புக் கட்டிகள், சகாய விலையில் கிடைத்தன?. 555, சன்லைட், பொன்வண்டு போன்றவற்றை, சர்ஃப், ரின் போன்றவைகள் வழித்தெறியவில்லை? குழந்தைகள் விளையாடும் உள்ளூர் பொம்மைகளை, சீனத்து பொம்மைகள் வெளியேற்றவில்லை?   

அதாவது, உள்ளூர் மார்க்கட், வெளினாட்டுப் பொருட்களால்  நிரப்பப்படும். இதன் காரணமாக உள்ளூர் உற்பத்தி மூடப்படும்!



திரு மன்மோகன் சிங் எந்த நாட்டுக்கு பிரதம மந்திரியாக இருக்கிறார் என சந்தேகமாய் உள்ளது. பன்னாட்டு நிறுவனங் களின் பணத்தாசைக்காக, நமது நாட்டு சிறு வணிகர்களின் உணவில் மண்ணை அள்ளிப் போடும் அளவிற்கு முடிவெடுக்க  அவருக்கு ஏற்பட்ட நிர்பந்தம் என்ன

இந்த முடிவு UPA அரசாங்கத்தின் மக்கள் விரோத போக்கினை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.  திரு மன்மோகன் சிங் அவர்களுக்கு, நமது வியாபாரிகளை காப்பதைவிட, அமெரிக்க பெரு முதலாளிகளை காப்பதுதான், முக்கியமாகப் படுகிறது.


மத்திய அரசின் தனது முடிவினை உடனடியாக திருப்பப் பெற வேண்டும் எனக் கோருகிறோம்!

Sunday, November 13, 2011

ஞானம்


தொழிற்சாலையில் நுழையும் போதே, “சூழ்நிலையில்”,  ஏதோ வழக்கத்திற்கு மாறாக உணர்ந்தான் முகுந்தன். தொழிலாளர்கள் மூலைக்கு மூலை கொத்துக் கொத்தாக நின்று கொண்டிருந்தனர். அனைவரின் முகத்திலும், கோபம், ஆத்திரம், ஆவேசம் நீக்கமற தீற்றப்பட்டிருந்தது. ஆங்காங்கே லத்தியுடன் தென்படும் “காவல் துறையினர் நிலைமையின் தீவீரத்தை சந்தேகமற உணர்த்தினர். தொழிற்சாலை கேண்டீன் சுவற்றில், வரிசையாகத் தொங்க விடப்பட்டிருக்கும், யூனியன் “நோட்டீஸ் போர்டுகள் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தன. ஒரு போர்டைத் தேர்ந்தெடுத்து ‘சிவப்பு நிறத்தில்  அச்சடிக்கப் பட்டிருந்ததைப் படித் தான் முகுந்தன்.

விஷயம் மிகவும் சீரியஸ்தான்.   நிர்வாகம், தொழிற்சாலையில் ஆட்குறைப்பு செய்ய தீர்மானித்திருப்பதாகவும், கணிசமான தொழி லாளர் களுக்கு ‘கட்டாய ஓய்வு அளித்து வீட்டிற்கு அனுப்ப முடிவெடுத்திருப் பதாகவும், இத்திட்டத்தினை தொழிற்சங்கங்கள், ஒன்றினைந்து,  ஒட்டு மொத்தமாக எதிர்ப்பதாகவும், போராடு வதற்காக கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டிருப்பதையும் அறிவித்திருந்தார்கள்.

ஆறு மாதமாகவே, அரசல் புரசலாக இந்தச் செய்தி உலவிக் கொண்டி ருந்தது உண்மை தான். ஆனால் இவ்வளவு விரைவில், ‘திடுதிப் பென்று‘ இந்த அறிவிப்பை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. 
அது ஒரு இரசாயனப் பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. வட சென்னை புறநகர்ப் பகுதியில் இருக்கிறது. ஃப்ளோரின் உற்பத்தி செய்கி றார்கள். போட்டித் தொழிற்சாலைகள் அதிகம்  இல்லா ததாலும், ஃப்ளோரினுக்கு உள்நாட்டில் நல்ல டிமான்ட் இருந்ததாலும் தொழிற்சாலை லாபகரமாக நடந்து கொண்டிருந்தது.  உற்பத்திக்கும் குறைவில்லை.  இங்கு, “யூனிட் என அழைக்கப்படும் ஃபாக்டரியில் மட்டும் 500 பேர் வேலை செய்கிறார்கள்.  அலுவலகத்தில் ஒரு முப்பது பேர் வேலை செய்கின்றனர்.

திடீரென ‘சீனாவின் உருவில் வந்தது வினை.  இவர்கள் உற்பத்தி செய்யும் அதே ஃப்ளோரினை, சீனர்கள், இவர்களின் விலையில் “பாதி யில் இந்தியாவில் சப்ளை செய்தார்கள். வினியோகஸ்த்தர்கள் அதிக விலை கொடுத்து இவர்களது ஃபாக்டரியிலிருந்து வாங்குவதை விட குறைந்த விலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து கொண்டார்கள்.

இந்த திடீர் தாக்குதலால் சற்று நிலை குலைந்தாலும், நிர்வாகத்தில் கூடுமானவரை செலவினங்களைச் சுருக்கியும், லாபத்தினைக் குறைத்தும், தொழிற்ச்சாலையினை ஓட்டி வந்தார்கள்.

எனினும், ஒர் அளவிற்கு மேல், போட்டியினை சமாளிக்க முடியாமல், நிலைமை கையை விட்டுப் போனது.  விற்பனையில் கடும் வீழ்ச்சியினை சந்தித்த்து ஆலை. ஒன்று தொழிற்சாலையை மூடி விட வேண்டும் அல்லது தொழிற் சாலையின் ஆட்களில் பாதிக்கும் மேல், விற்பனைக்கு ஏற்ப  ‘ஆட் குறைப்பு செய்து செலவைக் குறைத்தாக வேண்டும் என்ற கடுமையான நிலைக்கு தொழிற்சாலை தள்ளப்பட்டது.  பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பெயர்கள் கூட இறுதி செய்யபட்டுவிட்டது.

நிலைமையை விளக்கி, ஆட்குறைப்பு பற்றிய தகவல் தொழிற் சங்களுக்கு அறிவிக்கப் பட்டதும், எதிர்பார்க்கக் கூடிய பதற்றமான சூழ்நிலை தான் தற்போது நிலவுகிறது. காவல் துறை யினரும், லேபர் ஆபீஸரும் தொழிற்சாலையில் முகாமிட் டுள்ளனர்.

முகுந்தன் இந்த ஃபாக்டரியில் ஒரு “அக்கவுன்டன்ட்’.  தொழிற் சாலையின் நிர்வாக அடுக்குகளில் மேலேயும் இல்லாமல், கீழேயும் இல்லாமல் இருக்கும் ஒரு ‘திரிசங்கு நிலை அலுவலர்.

தொழிற் சங்கங்கள் இவனை “தொழிலாளிகளில்ஒருவராகவோ, நிர்வாகம் தனது ‘நிர்வாகிகளில் ஒருவராகவோ சேர்த்துக் கொண்டதில்லை. எனினும் அக்கவுன்டன்ட் ஆக இருப்பதால் இவனுக்கு, தொழிற்சாலையின் நிதி நிலையும், உற்பத்தி நிலையும் நன்கு தெரியும்.

நிலைமை, மிக மோசமாக இருப்பதென்னவோ உண்மைதான்.  இதே நிலையில் தொழிற்சாலை  நடத்த முடியாது.   நிர்வாகம் சொல்லும் “ஆட்குறைப்பும்  தொழிற்சாலையை ‘ஆட்டோமைஸ் செய்வதும் தான் வழி..  நிர்வாகம் இரண்டு மாதங்களாக நடத்தும் ‘மீட்டிங் களில் இந்த ‘ஆட் குறைப்பு பற்றிய விவாதம்தான்  பிரதான அங்கம் வகித்துள்ளது. 

முகுந்தன், அக்கவுன்டன்ட் என்ற முறையில், “எவ்வளவு பேரை வீட்டுக் கனுப்பினால் எவ்வளவு ரூபாய் செலவு மீதமாகும் என்று நிர்வாகத்தில் கேட்கப்பட்டிருந்தத்தற்கு ‘ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தான்.

உண்மையில் ஊழியர்கள் பாவம்தான்! திடீரென வேலை இல்லை யென்றால் என்ன செய்வார்கள்?  தான் ஃபாக்டரியில் இல்லாமல், அலுவலகத்தில் இருப்பதால், ‘ஆட்குறைப்பிலிருந்து தப்பித்துக் கொண்டோம் என்ற சிந்தனையுடன் தனது அலுவலக அறைக்குள் சென்றான் முகுந்தன்.

பணி நீக்கம் செய்யப்படும் லிஸ்ட்டில் தனது பெயர் இல்லை என்பதால், மாலை வீடு திரும்பும் போது ஊழியர்கள் ஏதும் மறியல் செய்வார்களா? ஏதும் அடிதடி ரகளை நடந்துவிடுமா? என பல்வேறு விதமாக சிந்தனை ஓடியது அவனுக்குள்.

சே.. சே.. அப்படி யெல்லாம் இருக்காது. போலீஸ் பாதுகாப்பு போட்டி ருக்கிறார்கள்!  வேலையிலிருந்து எடுக்கும் அதிகாரம் எனக்கா இருக்கிறது? கேரோவோ, மறியலோ மேல் மட்ட நிர்வாகத்தைத் தான் செய்வார்கள்.  “எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லைதனக்குள் சமாதானம் செய்து கொண்டு தனது அலுவலக அறைக்குள் சென்றான் முகுந்தன். 

எப்போதும் புன்முறுவலுடன் “குட் மார்னிங் சொல்லும் எழுத்தர் ‘சுமேதா’, முகுந்தனை மௌனமானப் பார்த்தாள்.

“குட் மார்னிங்க் சுமேதாஎன்ன டல்லாக இருக்கிறாய்?

“ஒன்னுமில்லை சார்..  இன்றைய தபால்களை ஃபைலில் போட்டு வைத்தி ருக்கிறேன்.. பாருங்கள் என்றாள்

என்ன ஆச்சு இவளுக்கு? இப்படி சுணக்கமாக இருக்க மாட்டாளே! ஒருவேளை ஆட்குறைப்பு  லிஸ்ட்டில் இவள் பேரும் இருக்கிறதா? இருக்காதே!  யூனிட்களில் தானே ஆட்குறைப்பு.  ஆபீஸில் இல்லையே?

யோசனையுடன் தபால் கட்டைப் பிரித்தான்.  முதல் கடிதம் அவனது பெயருக்கு வந்திருந்த்து.  “கான்ஃபிடன்ஷியல்என்ற உறையுடன். 

‘திரு முகுந்தன் அவர்களுக்கு,

     பல்வேறு நிர்வாகக் குழு  மீட்டிங்குகளில் “தொழிற்சாலையின்  தற்போதைய உற்பத்தி நிலை, நிதி நிலை குறித்து நடந்த விவாதங்களை உங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.  இது குறித்து நிர்வாக போர்டில் இயற்றப்பட்ட தீர்மானத்தையும் இணைத்துள்ளோம்.

இந்த தொழிற்சாலையினை தொடர்ந்து நடத்த வேண்டுமானால், இருக்கும் மனித சக்தியில் அறுபது சதவிகிதம் குறைத்தாக வேண்டிய நிர்பந்தத்தில்  நிர்வாகம் இருக்கிறது. இல்லையெனில் தொழிற் சாலை யினை மூடி விட வேண்டும்.

இங்கு பணி செய்யும் தொழிலாளர் நலன் கருதி, நாங்கள் முதல் முடிவினை அமுல்படுத்த உள்ளோம்.  அதன்படி “யூனிட்களிலும், “அலுவலகங்களிலும் பணி புரிபவர்களில் அறுபது சதமானவர்களுக்கு, கட்டாய ஓய்வு அளிக்கப்பட தீர்மானிக்கப் பட்டுள்ளது. அத்தகைய நபர்களின் பெயர்களையும் இறுதி செய்துள்ளோம்.  துரதிர்ஷட வசமாக தங்களது பெயரினையும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் தொழிற்சாலையின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு, நிர்வாகம் கொடுக்க உத்தேசித்துள்ள ஈட்டுத் தொகையினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  நிதி  நிலைமை சீரானதும், தங்களது சேவையினை, நாங்களே  நாடிப் பெற்றுக் கொள்வோம். தாங்கள் இதுவரை  நிர்வாகத்திற்கு அளித்து வந்த  ஒத்துழைப்பிற்கு நன்றி!. ஆபீஸில் பணிபுரியும் அலுவர்களுக்கு, இந்த ஆட்குறைப்பு உத்தரவுகள் உடனடியாக அமுலுக்கு வருகிறது.


நன்றியுடன்,
ஒப்பம்
மேனேஜிங் டைரக்டருக்காக.

காலுக்குங் கீழ் உலகம் திடீரென நழுவியது போலிருந்தது முகுந்தனுக்கு.  நில நடுக்கம் ஏறபட்டாற்போல் உணர்ந்தான்.  தலை சுற்றியது.    நம்ப இயலாமல் மீண்டும் ஒருமுறை அந்த கடிதத்தை படித்தான். எதிர்காலம் திடுமென தன்னிடமிருந்து பிடுங்கப்பட்டது போலிருந்தது.

எனக்குமா? நிஜமாலுமேவா? இனி என்ன செய்வேன்? இந்த கம்பெனிக்காக எவ்வளவு உழைத்திருப்பேன்?  கொஞ்சம் கூட நன்றியே இல்லாமல், என்னையும் வீட்டிற்கு அனுப்பி விட்டார்களே?  நடந்த மீட்டிங்குகளில், இந்த பணி நீக்கம் அலுவலகங்களுக்கும் உண்டு என ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே?  நெற்றியில் வழியும் வியர்வையை துடைத்துக் கொண்டான். 

சப்தமின்றி வந்து ஒரு “டம்ளர் ஐஸ் வாட்டரை வைத்துவிட்டு அகன்றாள் சுமேதா! 

இவளுக்கு முன்னமேயே தெரிந்திருக்க வேண்டும்!

நிர்வாக அதிகாரி கூப்பிட்டனுப்பினார். 

“ஐ யாம் சாரி..மிஸ்டர் முகுந்தன்..  உங்களது உழைப்பும்,  நேர்மையும், உண்மையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. மெச்சத் தகுந்தது தான்.   ஆனாலும் தொழிற்சாலை இருக்கும் நிலைமை கருதி, நிர்வாகம் சில கடுமையான முடிவுகளை எடுக்க நேர்ந்துவிட்டது. அக்கவுன்ட்ஸ் முழுவதும் கம்ப்யூட்டரைஸ் பண்ணப்போறோம். உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.

‘இட்ஸ் ஆல்ரைட் சார்.. பரவாயில்லை..

கண்ணீரை மறைக்க மிகவும் சிரமப் பட்டான்.

காம்பவுன்ட் சுவற்றின் வெளியே ‘ஜிந்தாபாத்.. “ கோஷங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

மதியம் மூன்று மணிக்கு சுமேதாவை கூப்பிட்டான். 

“நான் புறப்படுகிறேன் சுமேதா.  இதுவரை அலுவலகத்தில் நீ செயத பணிகளுக்கு பாராட்டும், நன்றியும்! ஐ அம் லீவிங்க் திஸ் ஆபீஸ் ஒன்ஸ் அண்ட் ஃபார் ஆல். தேங்க் யூ..

அவனது முகத்தை நேராகப் பார்க்க தயங்கி, வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள் சுமேதா.  

வெறுமை பொங்க, வெளியே வந்து தனது ஹீரோ ஹோண்டா பைக்கை எடுத்தான்! 

‘என்ன மச்சி... உனுக்கும் வெச்சுட்டானா ஆப்பு? தெனமும் ஆபீஸுக்கு வர்ரக்குள்ள பெரிய ஆபீஸர்ன்னு நெனப்புல, திரும்பாமக் கூட  போவிய... இப்ப என்ன ஆச்சு...என்றார் ஒரு ஒரு காக்கிச் சட்டை ஊழியர்.

‘சும்மார்ரா... அவுரு என்ன செய்வாரு... அவரை போய் ஏன் காயரே?  நமக்காவது யூனியன் இருக்கு.. அவுரு எங்க போய் சொல்லுவாரு.... நீ போ சார்.. “ என்றார் ஒரு சக தொழிலாளி.

செலுத்தப் பட்டது போல, பைக்கில் வீட்டை நோக்கி சென்றான். 

இதை எப்படி ‘அனுவிடம் சொல்வேன்?  வீட்டு செலவுகளுக்கும், வீட்டுக்கடன் தவணைக்கும் எங்கே போவது?  இருக்கும் சேமிப்பில் இரண்டு மாதம் ஓட்டலாம். பிறகு?

“அனு அவன் காதல் மனைவி.  திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது. “ஜெயராஜின்  ஓவியம் போல இருப்பாள்,  கச்சிதமாக.. அழகாக. முகத்தில் எந்த நேரமும் வாடாத புன்னகை. ஒருவர் மேல் ஒருவர் கொள்ளை பிரியத்துடன், ஆதர்ச தம்பதிகளாக இருப்பவர்கள். ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தை.    

தூரத்தில் தெரியும் தனது ஃப்ளாட்டினைப் பார்த்தான். “பிரைட் ஃப்யூட்சர்  அபார்ட்மென்ட்ஸ். எட்டாவது மாடி.

அனுவும் அவனும், ஆசை ஆசையாய் வாங்கியது.  வீட்டை நேர்
த்தியாக, சுத்தமாக, அழகாக பராமரிப்பாள் அனு. ஒவ்வொரு அறையிலும் அவளது ரசனை வெளிப்படும். வீடு வாங்கி, ஆறு மாதம் தான் ஆகிறது.  மாதத் தவணையே ரூபாய் பதினைந்தாயிரம் கட்டவேண்டும்.

இந்த தவணைத் தொகை நினைவுக்கு வந்தவுடனே வயிறு கலங்கிற்று.  எப்படி கட்டுவேன் இந்த தொகையினை?  சிந்தனை ஒரு இடத்தில் நிற்கவில்லை.

அபார்ட்மென்டில், அவனது ஃப்ளாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இட்த்தில், பைக்கினை நிறுத்திவிட்டு லிஃப்டை  நோக்கி நடந்தான். லிஃப்ட் பொத்தானை அழுத்தும் போது தான்,  வண்டியிலேயே “லன்ச் பேக்கினை வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வர,  “சே... சலித்துக் கொண்டு, திரும்பி வந்து சாப்பாட்டுப் பையினை எடுத்துக் கொண்டு வந்தான்.

எப்போதும் போல சிரித்த முகத்துடன்,  ‘கை கால் கழுவிகிட்டு வாங்க.. காஃபி தர்ரேன். என்றாள் அனு.

‘.......

‘ஏன் முகம் ஒரு மாதிரியாய் இருக்கு.. உடம்பு ஏதும் சரியில்லியா?

‘ஒன்னுமில்லியே...  இன்னிக்கு ஆபீஸ்ல கொஞ்சம் வேலை அதிகம்.. அதுதான்

‘சந்தேகமாய் பார்த்துக் கொண்டே சென்றாள் அனு.

மனைவியை ஏமாற்றுவது என்பது கடினமான காரியம்.

காபி சாப்பிட்டு விட்டு, ‘அனு,  நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வர்றேன்..என உடை மாற்றிக் கொண்டு கிளம்பினான.

‘எங்கே? என அனு பார்வையால் வினவியதற்கு, பதிலளிக்காமல் வெளியே சென்றான். 

கொஞ்சம் நேரம் இலக்கின்றி சுற்றினான். மணி எட்டாகிவிட்டது.   இந்த நேரத்திற்கெல்லாம் வீட்டிற்கு வந்திருப்பார் நண்பன் ராமனாதன், என தீர்மானித்து, அவரது வீடு நோக்கி நடந்தான். ராமனாதன் என்பவர், முகுந்தனது நெருங்கிய நண்பன். இவனை விட மூத்தவர். ஒரு பெரிய ஆடிட் கம்பெனியில் வேலை செய்கிறார்.

கல்யாணம் முதல், வீடு வாங்கும் வரை, சகலத்திற்கும், அவனுக்கு வழி காட்டி யிருக்கிறார். அவரை கலந்தலோசிக்காமல் இவன் எதுவும் செய்ததில்லை. அவரது வீடு இவன் வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிறது.   

“வாப்பா. முகுந்தா.. என்ன திடீர்னு? ஃபோன் கூட பண்ணாமல்? ஏதாவது  விசேஷமா?

“உங்களிடம் தனியாய்ப் பேசனும்

‘ம்ம்ம்?... சரி வா வெளியே போய்ப் பேசலாம் சட்டை மாற்றிக் கொண்டு வெளியே வந்தார்.

‘இப்ப சொல்லு... 

சொன்னான். 

“இதோ பார்ப்பா.  பிரைவேட் கம்பெனி என்றால் அப்படித்தான்.. ‘உன்னோட அக்கவுண்ட்ஸ் படிப்புக்கு,  நல்ல சம்பளத்தில் உடனடியாய், வேறு வேலை கிடைப்பது  சாத்தியமில்லை. ....கிடைக்கும்!  கொஞ்சம்  டைம் ஆகும்.
உடனே வேணுமின்னா, ரொம்ப கம்மியான சம்பளத்தில் தான் கிடைக்கும்.  எனக்குத் தெரிந்த ஆடிட்டர்களிடம் சொல்லி வைக்கிறேன். கொஞ்சம் பொறுமையாய் இரு. கவலைப்படாதே!

‘அனுவிடம் சொல்ல வேண்டாமென்று பார்க்கிறேன்

“அந்தமாதிரி கிறுக்குத்தனமாய் ஏதும் யோசனை பண்ணாதே!  எல்லாவற்றையும் அவளிடம் சொல்லிவிடு.  அவளுக்கு தெரியாமல் மறைப்பது தான் தப்பு..

‘அவள் மனசு ரொம்ப கஷ்டப்படும்...

“இந்த சினிமா வசனத்தை முதலில் நிறுத்து.  அப்புறம் பொய் மேல் பொய்யாய் சொல்லிக் கொண்டே போக வேண்டிவரும்.  இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் மறைக்க முடியாது, தெரிஞ்சுக்கோ!. ரெண்டு பேருமாய் சேர்ந்து, கொஞ்ச நாள் எப்படி சிக்கனமாய் வண்டியை ஓட்டுவது என்று யோசனை செய்யுங்கள்

ராமனாதனிடம் பேசியபின், முகுந்தன் மனதில் பளுவும், வேதனையும் கூடிப்போயின.

ஓயாமல் மோதும் கடலலைகள் போல முடிவற்ற எண்ணங்களும் கவலைகளும், அவனுக்குள் மோதிக் கொண்டேயிருந்தன.

தனது வீட்டிற்கு வந்து,  மௌனமாக உண்டு முடித்தான். அனுவிடம் ஏதும் பேசாமல் கட்டிலில் விழுந்தான்.

‘அனு’,  குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு அவனருகில் வந்து படுத்தாள்.

“இப்ப சொல்லுங்கள்.. என்ன ஆயிற்று உங்களுக்கு? என்ன விஷயம்? ஆபீசில் ஏதாவது பிரச்சினையா? என்ன நடந்தது? அவன் முகத்தைப் பிடித்துக் கேட்டாள் அனு.

விவரித்தான் முகுந்தன்.

அவள் முகத்தில் பீதியும், கவலை ரேகைகளும் உடனடியாய் தோன்றின.  ஆனால், தனது கவலைகள், கணவனது துயரத்தை மேலும் தூண்டும் என உணர்ந்து, சடுதியில் அவற்றை மறைத்தாள். 

“ராமனாதன் சாரைப் பாத்தீங்களா?

“ம்ம்ம்...  பார்த்தேன்.. வேற வேலைக்கு முயற்சி பண்றேன் என்றார்.

‘பாருங்க... ராமனாதன் சார் சொன்னா நிச்சயம் எதனாச்சும் செய்துகொடுப்பார்.  அப்படியே வேற வேலை கிடைக்க தாமதமானாலும், நகைகள் இருக்கு... சாமாளிக்கலாம்.. மனசைப் போட்டு குழப்பிக்காதிங்க... ஆண்டவன் எல்லாத்துக்கும் ஒரு வழி வச்சிருப்பான்.... இப்ப கவலைப்படாமல் தூங்குங்கள். காலையில் பார்த்துக் கொள்ளலாம்.

 ‘அனு...

‘சொல்லுங்க...

‘என்ன பண்றதுண்ணே தெரியல.. எதிர்காலத்தை நினைச்சா கதி கலங்குது.. வேலை கிடைக்கலேன்னா?. இல்லே ரொம்ப கம்மியான சம்பளத்தில் வேலை கிடைச்சா? நம் கதி என்ன ஆகும்? வீட்டுத் தவணையே  பதினைந்தாயிரம் கட்டணும்.  அப்புறம் மாசாந்திர செலவு.. குழந்தைக்கான செலவு.. ரொம்ப பயமாயிருக்கு அனு...

‘பயந்தோ, கவலைப்பட்டோ என்ன ஆகப்போகிறது.  நடந்தது நடந்து போச்சு...! இதுவெல்லாம் நம் கையில் இல்லை. இனி ஆக வேண்டியதைத் தான்  பார்க்கனும். எல்லாம் காலையில் பேசிக் கொள்ளலாம் .. பேசாம தூங்குங்க...

அவனுக்கு தூக்கம் வரவில்லை.  பொதி பொதி யாய் கவலை மனதை அழுத்தியது. 

கவலைகளையும் மீறி எப்போது தூங்கினான் எனத் தெரியவில்லை.  விழித்த போது காலை மணி ஏழு!

கூடத்தில் அனு, வீட்டு வேலை செய்யும் ‘சரசு விடம்  பேசிக் கொண்டி ருந்தாள்.

“........ ..உனக்கு இதில் கஷ்டம் ஏதுவுமில்லையே சரசு.. இவருக்கு வேற வேலை  கிடைச்சதும், உன்னை மறுபடி வேலைக்கு  கூப்பிட்டனுப்புகிறேன்.. வருத்தப் படாதே.. கோவிச்சுக்காதே...

‘ஐய... இப்ப இன்னாத்துக்கு, இப்படி டயலாக் பேசிக்கினு கீர... இனிமே, நானு வேலைக்கு வரவேணாம்னு சொல்ற.. எனக்கு சம்பளம் கொடுக்க உனுக்கு இப்ப வழியில்ல.. ஒன்னோட வூட்டுக்காரருக்கு வேல பூடுது... அவ்வளோவ் தானே?   

ஆண்டவன் நான் பொறக்கும் போதே ‘அனுவம்மா வூட்ல வேல செஞ்சு பொளச்சுக்கன்னு, என் தலில எளுதி வுட்டார என்ன?

இத பாரு அனுவம்மா,  சாமி, புத்தியையும், கை-காலயும் கொடுத்தது பொலம்பிகினு கடக்கிறதுக்கு இல்ல.. அத்த வச்சு பொழச்சுக்கறதுக் குத்தான். இந்த வூடு இல்லன்னா வேற வூடு.. இதுக்கெல்லாம் இந்த ‘சரசு அசர மாட்டா..

கேட்டுக்க அனுவம்மா...  நீ குடுக்கற ஆயிரம் ரூவா இல்லாங்காட்டி நா செத்துப் பூடுவனா என்ன? நாங்க வெட்டி கௌரவம் எல்லாம் பாக்க மாட்டோம்.  ஆயிரம் ரூவா வேல போச்சுன்னா இன்னா? ஐநூறு ரூவா வேலை சிக்காம பூடுமா? அப்பால, ஆயிரம் ரூவாயிலேயோ அதுக்கு மேலேயோ  வேல கெடச்சுதுன்னா, ஐநூறு ரூவா வேலய விட்டுடுவேன்.

என்னா? வேற வூட்டுல வேலை கெடக்க கொஞ்ச நாளாவும்.. அம்புட்டுத் தானே?.. அது வரிக்கும் சமாளிச்சுக்குவேன்.   ஆயினாலே, எனக்கு என்னோட  வேலயப் பத்தி ஒன்னும் கவல இல்ல அனுவம்மா..

இன்னா? உன்னிய மாதிரி நல்ல மனுஷாள பாக்கறதுதான் கஷ்டம். அதுகோசரம் இன்னா பண்ண முடியும் சொல்லு? பொலம்பிகினு கடந்தா ஆச்சா?  

அப்பால, உனுக்கு எதுனாச்சும் ஒடம்பு முடியாங்காட்டி சொல்லி அனுப்பு.. நான் வந்து ஆக்கி பொடறேன்..  அதுக்கெல்லாம் நீ காசு கொடுக்க வேணாம்... என்னா, தெர்தா? “

படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்த முகுந்தனுக்கு, ‘சரசு பேசிய ஒவ்வொரு வார்த்தையும், முகத்தில் அறைவது போலிருந்தது.  சரசுவின் நம்பிக்கையும், தைரியமும் எனக்கில்லாமல் போய்விட்டதே!. எதற்காக பல்வேறு விதமாக  நம்பிக்கையற்றுப் போய் சிந்தனை செய்தேன்?  எனது படிப்புக்கும், அனுபவத்திற்கும், திறமைக்கும் ஏற்ப வெறியாய் வேலை தேடுவதைவிட்டு..வெட்டியாக புலம்பிக் கொண்டு.. அனுவையும் கவலைப் பட வைத்து... சே.. என்ன இது... இந்த மிடில் கிளாஸ் புத்தி.....

வெளியேறிக் கொண்டிருந்த சரசுவைக் கூப்பிட்டான் முகுந்தன். 
“இரு சரசு..  நீ ஒன்னும் வேலையிலிருந்து நிக்க வேண்டாம்.  எப்போதும் போல வேலைக்கு வா.. எனக்கு எப்படியும் வேலை கிடைத்துவிடும்

‘இன்னாங்கடா இது... திடீல்ன்னு  உங்களுக்கு இன்னா ஆச்சு?  “

அவனுக்குள் ‘என்ன ஆச்சு என்பதும்,  நம்பிக்கையையும் தைரியத்தையும் அவனுள் விதைத்தவள் சரசுதான் என்பதும் முகுந்தனுக்குத்தானே தெரியும்?

-0-