Friday, February 27, 2015

'மகா பாரதம் -மாபெரும் விவாதம்' - புத்தகம்

மாகா பாரதம், இந்தியாவை இணைக்கும் சங்கிலியின் ஒரு கன்னி, ஒரு பெருங்கடல். அதில் மூழ்கி, அறிஞர்கள், அவரவர்களுக்கு, தங்கள் பாங்கில் பாரத்த்தைப் பார்த்த வண்ணம், முத்தெடுத்து எழுதியிருக்கிறார்கள். 

இன்னும் எத்துனை பேர்கள் வேண்டுமானாலும் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டே இருக்கலாம்.  அவ்வளவு கொட்டிக்கிடக்கும் இக்காப்பியத்தை, எண்ணிலடங்கா எழுத்தாளர்கள், இராஜாஜி முதல் எஸ்.ரா உட்பட (உபபாண்டவம்) பலர் காப்பியத்தினை அல்லது அதன் ஒரு பகுதியை, தங்கள் பாணியில் விரித்து எழுதியுள்ளனர். ஒவ்வொரு விரிவுரைக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது.

இராஜாஜி – கதை சொல்லும் போக்கு. சோ-தத்துவ வியாக்யானம், என்பது போல!  வாசுதேவன் நாயரின் இரண்டாம் நிலை முற்றிலும் புதுமையான நோக்கு..

அரசியல்வாதியும், தமிழ் ஆர்வலருமான திரு பழ. கருப்பையா அவர்கள் “மகாபாரதம் மாபெரும் விவாதம் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

இப்புத்தகம் ஒரு “கேரக்டர் அனாலிஸில்” என்ற வகையில் இருக்கிறது. ஒவ்வொரு கதை நிகழ்வையும் (எபிஸொட்) எடுத்துக் கொண்டு,   நிகழ்வு மாந்தர்ளின் மன நிலை, தத்துவார்த்த நிலைபாடு, அவர்களது குணாதிசயம் ஆகியவற்றை, இக்கால கண்ணோட்டத்தோடு பார்க்கும் நூல்.

‘புனிதம்’  அல்லது ‘தெய்வீக அந்தஸ்து’ கொடுத்து,  ‘நமஸ்கரிக்கும்’ பாங்கினை புறந்தள்ளி, சற்றும் தாட்சண்யமில்லாமல் விமர்சரிக்கிறார். பாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் எதுவும் விதிவிலக்கில்லை, கிருஷ்ணன் உட்பட.

பாரதம் குறித்து நூல் இயற்றிய, ‘சோ’, ‘இராஜாஜி’  ஆகியவர்களின், பாரதம் குறித்த அவர்களது பார்வையையும் கூட விமர்சிக்கிறார்.

‘பாஞ்சாலி’, ‘குந்தி’  ஆகியவர்கள் குறித்த இவரது பார்வை மாறுபட்டதே! இவர்களை முற்றிலும் ‘அரசியல் பெண்மணிகள்’ என்கிறார்.

சில வார்த்தையாடல்கள் வெகு கூர்மையானவை.

எழுத்தாளர், அரசியல் வாதியல்லவா? அதுவும் திராவிடக் கட்சி அல்லவா?
கிருஷ்ணனைப் பேசும் பொழுதே, பழ. கருப்பையா அவர்களது அரசியல் சிந்தனை, அவரை நிகழ்காலத்திற்கு இழுத்துவந்து ‘தற்போதைய அரசியல் நிகழ்வுகளை ஒரு பிடி பிடிக்க வைத்துவிட்டு, பின்  மறுபடியும் மகாபாரத்திற்குச் இட்டுச் செல்கிறது.

‘பார்ப்பனர்’, ‘சத்திரியர்’ போன்ற தற்காலத்திற்கு நெருடலான சப்ஜெட்களை தயங்காமல், ஓரளவிற்கு நியாயமாக அலசுகிறார்.

இவரது பார்வையில், கீதை, ‘வருணாசர தர்மத்தை’ நிலை நாட்ட, இடைப்பட்ட காலத்தில் பாரதத்தில்  செருகப்பட்ட நூல் .

எழுதும் போக்கினைப் பார்த்து, எங்கே கீதை மற்றும் பாரதத்தின் சாரமான ‘தர்மத்தை நிலை நாட்டும்’ மையக் கருவிற்கு கேடு விளைவித்து விடுவாரோ என அச்சமேற்பட்டது.  இல்லை... கடைசிவரை ‘சில தர்மங்களை’ விமர்சித்தாலும், தர்மம் காக்கப் படவேண்டியதே என்பதில் உடன்படுகிறார். வியாசரையும் – கிருஷ்ணனையும் கிலாசித்துப் பேசிகிறார்.

தேர்ந்த நடை, நல்ல தமிழில்.

ஆனால், பீசுமனன் (பீஷ்மர்), வீமன், இராசாசி, செயத்துரதன், தோடம்(தோஷம்), சயித்ரதன் பல சொற்களுக்கு சில வார்த்தைகளுக்கு பழகிக் கொள்ள வேண்டும்.

படித்து முடித்தவுடன், ஒரு நாள் பூரா, சன்டிவியில் வரும் ராஜா, சாலமன்ன் பாப்பையா போன்றோர் பங்கெடுத்த, சுவாரஸ்யமான ஒரு பட்டிமன்றத்தை பார்த்த உணர்வு ஏற்பட்டது.

மேடைப் பேச்சாளர்கள் உட்பட (ஏன் தின்னைப் பேச்சாளர்களும் கூட) பலரும் படித்துப் பார்க்க வேண்டிய புத்தகம்.  மாறுபட்ட பார்வை அல்லவா?

கிழக்கு பதிப்பகம். 310 பக்கங்கள். ரூ. 250/-

ஹலோ பத்ரி சார்... 250 ரூபாய்க்கு ஒரு நல்ல பேப்பரில் போடக்கூடாது? பழுப்புக் காகிதத்தில், இவ்வளவு மங்கலாக (இங்க் செலவாகி விடுமா?) அச்சடித்துக் கொடுத்தால்,  படிப்பது எப்படி?

Tuesday, February 17, 2015

மாற்று மருத்துவம்

“ஃபேஸ்புக்” கில் பரிந்துரைக்கப் படும் மாற்று மருத்துவ முறைகளைப் பற்றி, ஒருமுறை எழுதிவிடுவது நல்லது என நினைக்கிறேன்.

தற்பொழுது, ஒரு நாளைக்கு ஒரு பத்து பேராவது, சகலவிதமான நோய்களுக்கும் மாற்று மருத்துவ முறைகளைப் பற்றி எழுதுகிறார்கள். 

எழுதுகிறார்கள் என்று கூட சொல்ல முடியாது.  காப்பி பேஸ்ட் செய்கிறார்கள். இவர்களில் கனிசமானோர் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் அல்லர். செவி வழி பாட்டி மருத்துவ குறிப்புக்களே! 

குறிப்பாக, சிறுநீர்க் கற்கள், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை  நோய் போன்றவற்றிற்கான தீர்வுகள் மிக  அதிகமான வருகின்றன. 

ஏன், புற்று  நோய்க்குக் கூட மருந்து சிபாரிசு செய்கிறார்கள்.

மாற்று மருத்துவ முறைகளில் இருக்கும் பிரச்சினை என்ன வென்றால், தங்களால் தீர்க்க முடியாத வியாதிகளே இல்லை என கூறிக் கொள்வதுதான். இது தவிர அல்லோபதியை திட்டித் தீர்ப்பதும் நடக்கும்.

மாற்று மருத்துவ முறைகளில் பலனே இல்லை என்று சொல்லக் கூடாது. 

ஆனால், பெரும்பாலும் அவை ஆராய்ச்சிக்கு உட்பட்டதில்லை.  ஒரே மாதிரி நோய்வாய்ப்பட்ட இரு மனிதர்களுக்கு மாற்று மருத்துவ முறையில் ஒருவருக்கும், ஆங்கில மருத்துவ முறையில் ஒருவருக்கும் சிகிச்சையளித்து, அதில், மாற்று மருத்துவ முறை தன்னை நிரூபித்துக் கொண்டால் மட்டுமே, அது நிரூபணமானதாகும்.

தற்போது, முகனூலில் நடப்பது என்னவென்றால், எங்கோ ஒருவர் எழுதியதை, குஷாலாக, காப்பி – பேஸ்ட் செய்வது தான்.

வெளினாட்டு பாதிரியார் ஒருவர், சோற்றுக் கற்றாழை புற்று நோயைத் தீர்க்கலாம் என ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகமே என்னிடம் இருக்கிறது. ஆனால் அவரே தனது முன்னுரையில் – இந்த முறை  நவீன சிகிச்சைக்கு மாற்று அல்ல என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதை தமிழ்ப் படுத்தி, நூறு ரூபாய்க்கு புற்று நோய் தீரும் என யாரோ ஒருவர் எழுத, அதைக் காப்பி பேஸ்ட் செய்து ஒரு கோஷ்யே அலைகிறது. 

அது மாத்திரம் அல்ல. சர்க்கரை நோய்க்கு வெந்தியம்-கொத்தமல்லி, அப்புறம் ஒரு செடி, வெண்டைகாய் மருந்து, பீன்ஸ் மருந்து என பலவும் சொல்லித் திரிகிறார்கள். சிறுநீர் கற்களுக்கும் கணக்கிலடங்கா முறைகள் சொல்கிறார்கள்.

இவையாவும் ஸ்டேன்ட் அலோன் ட்ரீட்மென்ட் அல்ல.. துணை நிற்கும் உபாயங்களே.. 

இந்த காப்பி & பேஸ்ட் இன்டெர்னெட் டாக்டர்களின் பேச்சை நம்பி, எத்துனை பேர் தங்களது உடலை கெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.  

நீங்கள் கூட படித்திருக்கக் கூடும்.. சில நாள் முன்பு, சில நாட்கள் மருந்து சாப்பிட்டாலே, சர்க்கரை நோய் தீரும் என வட மானிலத்தில் ஒருவர் சொன்னதை நம்பி, அங்கே கொடுத்த மருந்துகளை விழுங்கிவைத்து, பின் சர்க்கரை 500-ஐ தாண்டிப் போக, அபாயகரமான நிலையில் மருத்துவ மணையில் சேர்க்கப் பட்டார்.

முகநூலில் தாங்களும் ஏதாவது சொல்கிறோம் பேர்வழி என எதையாவது சொல்லித் திரிவதா? அவர்கள் நோயாளிகளின் உயிருடன் விளையாடு கிறார்கள் என்பதாவது தெரிகிறதா இல்லையா எனப் புரியவில்லை.

சொல்வது யாராவது தேர்ச்சிபெற்ற மருத்துவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. அதுவும் இல்லை. சும்மா ஃபார்வேர்ட் செய்யும் கோஷ்டிகள். ஏதேனும் சந்தேகம் கேளுங்கள்? பதிலே வராது – அல்லது சொல்லத் தெரியாது. 

சும்மா சித்தர்கள்-முனிவர்கள் என்பது போல, மரியாதைப் பட்டவர்களின் பெயர்களை வைத்துக் கொண்டு ஜல்லியடித்தால் எப்படி?

ஆங்கில மருத்துவம் மட்டுமே உயர்வு என்று சொல்லவில்லை. குறைந்த பட்சம் எங்களால் தீர்க்க முடியாத வியாதிகள் என, அவர்கள் லிஸ்ட் சொல்லி விடுவார்கள். 

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞானம் என்பது வேறு. வணிகம் என்பது வேறு. விஞ்ஞானம் வளர்ந்து கொண்டேதான் இருக்கும். அதைப் பயன்படுத்தி எப்படி காசு பார்ப்பது என்பது வணிகம். பல நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கிறார்கள். அது விஞ்ஞாணம். அதை வைத்துக் கொண்டு பணம் பண்ணும் மருத்துவ கம்பெணிகள் அதிகம். (சில சமயம் மருந்துக்காக நோய்களை உண்டு பண்ணுகிறார்களோ என சந்தேகம் கூட வருகிறது)

தற்போது அல்லோபதியைக் கண்டு, மக்கள் அலறுவதின் காரணம் அவர்கள் காசேதான் கடவுளடா என்று இருப்பது தான். கிளினிகலாக டயக்னோசிஸ் செய்யக் கூடிய வியாதிகளுக்குக் கூட பல்லாயிரம் ரூபாய் செலவுக் கணக்கில் பரிசோதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. 

ஆங்கில,  நோய் கண்டுபிடிக்கும் முறைகளும்-மருந்துகளும் சாதாரண மக்களின் சக்திக்கு அப்பாற்பட்டு போய்விட்டன,. எனவேதான் ஜனங்கள் மாற்று மருத்துவ முறைகளை நாடுகின்றனர். 

மக்களின் இந்த பீதியை பயன்படுத்திக் கொண்டு, மாற்று மருத்துவ முறைகளில் காசு செய்யும் கோஷ்டிகளும் பல இருக்கின்றன. 

சில தினசரி பத்திரிகைகளை எடுத்துப் பாருங்கள். அப்பப்பா... எத்துனை விளம்பரங்கள்? ‘வாலிப வயோதிக அன்பர்களே.. ‘ முதற்கொண்டு, இரத்தக் கொதிப்பு – சர்க்கரை உட்பட, பல நோய்களுக்கும் தீர்வு சொல்லி, மக்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு, எப்படி வியாபாரம் செய்கின்றனர்  என்பது புரியும்.

இம்மாதிரியான லாட்ஜ் டாக்டர்களைப் போல ஆரம்பித்துவிட்டனர், இந்த முகனூல் போலி டாக்டர்கள். 

சர்க்கரை 500-ஐத் தாண்டும் பொழுது கூட, தனக்கு ஒன்றும் இல்லை என நாமாகவே நினைத்துக் கொண்டால் சரியாயிற்றா? பரலோகம்தான் போக வேண்டும்.

ஒரு இண்டகரேட்டட்  மருத்துவ முறை இருந்தால், நல்லது. அதாவது அல்லோபதி-மற்றும் மாற்று மருத்துவ முறைகளை இணைத்து செயல்படுத்தப் படும் முறை. சைனாவில் இது போல செய்கிறார்கள் என்று கேள்வி.. உண்மை தெரியவில்லை.

இனி,

அடிப்படையில், ஆரோக்கியம் பல விஷயங்களை ஆதாரமாகக் கொண்ட்து. 

1. நமது வாழ்க்கை முறை.

2. உணவுப் பழக்க வழக்கம்-மற்றும் உண்ணும் முறை.

3. ஹெரிடிட்டரி.

4. சுற்றுச் சூழல்.

5. செடன்டரி லைஃப்.

6. நமது எண்ணங்கள். (சதா எதிர்மறை எண்ணங்களைக் கொண்டிருந்தால், என்ன மருந்து சாப்பிட்டாலும் குணமாகாது)

குப்பை உணவுகளைத் தவிர்த்து, மனதில் நல் எண்ணங்களை வளர்த்து, சோம்பித் திரிவதைத் தவிர்த்து, முறையாக ஒரு யோகா மாஸ்டரிடம் யோகா பயின்று, பசித்த போதுமட்டும் உண்டு, மலச் சிக்கல் இல்லாமல் பழகி, ஏழு மணி நேரம் உறங்கி வந்தாலே பல நோய்கள் அண்டாது.

யோகா கூட, துணை முறையாகத்தான் கொள்ள வேண்டுமே தவிர, அதை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. எதை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தின்பேன்; எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன்; ஆனால் அரை மணி நேரம் யோகா செய்தால் போதும் என்றால், அவர்களைப் பார்த்து, சிரிக்காமல் வேறு என்ன செய்வது?

இது ஒருபுறம் இருக்க, இப்பதிவின் நோக்கம், இன்று வெறும் வயிற்றில் இள நீர் சாப்பிட்டால், இரத்த நாளங்கள் வெடிக்கும்; ஃபுட் பாய்ஸின் ஆகும் என ஒருவர் பயமுறுத்தி யிருந்தார். 


இளனீர் விஷம் அல்ல; அது ஃபுட் பாய்ஸின் ஆகாது.   எது சாத்தியம் என்றால், ஏற்கனவே ஆசிட் ரெஃப்லெக்ஸ் உள்ளவர்களுக்கு,  நெக்லிஜிபில் அளவுக்கு, வயிறு உப்புசம் ஆகக் கூடும். அவ்வளவே! ஏனெனில் இளனீரின் பி.ஹெச். வேல்யூ 4.2 விலிருந்து 5.3 வரை இருக்கும். அதாவது ஸ்லைட்லி அஸிடிக். மற்றபடி இளநீர் உடலுக்கு மிக நல்லது.

காப்பி – பேஸ்ட் ஆசாமிகளை தவிர்க்க இயலாது. ஆனால் நாம் விழிப்புணர்வோடு இருக்கலாம் அல்லவா?

உண்மையில், விந்தை புரியும் மூலிகைகள் இருக்கின்றன. தகுதியான ஆட்களிடம் கேட்டு/பயின்று பலன் பெறுவோம்.



Sunday, February 15, 2015

ஒரு நாள்... ஒரு இரவு...

13/02/2015. இரவு ஒரு மணி இருக்கும். வயிற்றில் ஏதோ சங்கடம் போலத் தோன்றவே விழிப்பு ஏற்பட்டு விட்டது. வாமிட் செய்யவேண்டும் போல உணர்வும் தோன்றியது. முந்தைய நாள் இரவு கூட, எப்பொழுதும் போல எதுவும் உண்ணவில்லையே! ஒத்துக் கொள்ளாமல் போவதற்கு வாய்ப்பே இல்லையே என்ற சிந்தனையோடு, லேசாக கண்விழித்துப் பார்த்தேன்.

தலைக்கு மேலே சுழன்று கொண்டிருக்கும் ஃபேன், சடாரெனெ எனக்கு இடது பக்கமும் திடீரென வலது பக்கமும் சழன்று கொண்டிருப்பது போன்ற உணர்வு. சற்றே தலையை திருப்ப முயல, எக்ஸார்ஸிஸ்ட் படத்தில்  வருவது போல, கட்டிலே படுக்கையறையின் உச்சிக்கும் கீழுக்குமாக பேய்ச்சுற்றல் சுற்ற ஆரம்பித்தது. கண்களில் கிங்கரர்கள்  தென்பட ஆரம்பித்தனர்.

ஆஹா... தலை சுழலுகிறதே.. வாஷிங் மெஷினில் போட்டு சுழற்றுவது போல, அனைத்தும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

சட்டென தலையனையை விலக்கி, கட்டிலை இருக்கப் பிடித்துக் கொண்டு, அமைதியாக இருக்க முயல,  தலைக்குள் நிகழ்ந்த பூகம்பம், சில நிமிடங்களில் ஒரு நிலைக்கு வந்தது. 

சரி... பாத்ரூமிற்குப் போகலாம் என நினைத்து, அவசரப்பட்டு எழுந்து  நின்று கொள்ள யத்தனிக்க, நான்கு அடி தூரத்தில் இருக்கும் பாத்ரூமினுள், கதவை முட்டித்தள்ளி தூக்கி வீசப்பட்டேன். யார் என்னைத் தூக்கி வீசியது என்பதை உணருவதற்குள் லேசாக மயக்கமும் ஏற்பட்டது. பாத்ரூம் என்னைச் சுற்றி சுழன்றது. நல்ல வேளையாக பைப்களில் தலை மோதவில்லை. அவசரப்பட்டு எழுந்து நின்றதில்தான் பிரச்சினை என்பதை உணர்ந்து,  பாத்ரூம் வேலைகளை நிதானமாக முடித்துக் கொண்டு, உட்கார்ந்த நிலையில் தவழ்ந்த வண்ணம், மெல்ல, மெல்ல வாசற்கதவை நோக்கி நகர்ந்தேன்.

உதவிக்கு யாரையேனும் அழைத்தாலும், அவர்கள் வீட்டினுள் நுழைவது எங்கனம்? அல்லது வேறு எதேனும் நிகழ்ந்து விட்டால், நிகழ்ந்தது வெளியே தெரியவே இரண்டு நாளாகி, உடல் நாற்றமடிக்க ஆரம்பித்து விடுமே என்ற அச்சம் வேறு. எனவே, அங்குலம் அங்குலமாக எழுந்து, வாசற் கதவைத் திறந்துவைத்துவிட்டு, அருகிலேலேயே இருக்கும் சோஃபாவில் சயனித்துக் கொண்டேன். காலை ஏழுவரை, ஒரு ஃபுல் அடித்தாற்போல முழு பிரக்ஞையும் இல்லாமல், முழு நிதானமும் இலாமல் கழிந்தது.

பின்னர் எனது  வடை நன்பரை கூப்பிட்டு, நடந்தவற்றை விளக்கி, ‘எந்த டாக்டரை அணுகலாம்?  நியூரோவா, ஆர்த்தோவா அல்லது ஜெனரல் பிஸிஷனா?’ எனக் கேட்டேன்.

“இம்மாதிரியான தலைச் சுற்றலுக்கு, காதில் பிரச்சனை அல்லது எனது முப்பது வருட சினேகிதன் செர்வைகல் ஸ்பான்டிலைடிஸ் அல்லது ஹை பி.பி இவற்றில் ஏதாவதோ ஒன்றோ அல்லது இதைத் தவிர்த்து வேறு இருக்கக் கூடுமோ” என்று வினவ,

‘ஓய்... உமக்கு என்ன, டாக்டர் என்ற நினைப்பா? எல்லாவற்றையும் நீரே தீர்மாணித்துக் கொள்வீரா? அதெல்லாம் டாக்டரின் வேலை!  அது கிடக்கட்டும், நீர் நேற்று என்னத்தை விழுங்கி வைத்தீர்? அன்று செய்தது போல, ஏதாவது வடை-கிடை  தின்று வைத்தீரா?’

‘அட.. அதெல்லாம் ஒன்றுமில்லை.. நேற்று உணவு ஏதும் கொள்ள வில்லைங்கானும்...’

நுணலும் தன் வாயால் கெடும். ‘அதாங்கானும் பிரச்சினை.., என்னத்தை யாவது தின்று வைப்பதுதானே?’

அட, பசி மயக்கத்திற்கும், இந்த தலைக்குள் நிகழும் சுனாமிக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது.. அதெல்லாம் காரணம் இல்லை.

“பேசாமல், அங்கேயே இரும்.. இன்னும் சற்று நேரத்தில் அங்கு வருகிறேன்”

இரு நன்பர்கள் புடை சூழ, கையில் ஒரு பி.பி மானிட்டரை எடுத்துக் கொண்டே வந்து சேர்ந்தார். பி.பி நார்மல்.

அவருக்கு பல மருத்துவர்களை தனிப்பட்ட முறையிலே நன்கு தெரியும். எனவே, திருப்பதி தரிசன கூண்டுகளையும், பாரதிராஜா படத்தில் வருவது போல, ஏழு கதவுகளைத் திறந்து கொண்டு அதன் பின் மூலவர் தரிசனம் கிடைக்கப் பெறும், கடலூர் சம்பிரதாயங்களை மீறி, எளிதாக டாக்டரை சந்திக்க முடிந்தது. 

நடக்க ஆரம்பித்தால், தரை சடாரென பத்தடி கீழேயும், அடுத்த நொடி, நெஞ்சுக்கு நேராகவும் வருவதுபோல இருந்தால் நடப்பது எப்படி?  நன்பர்களுக்கு முன் ஏதேனும் ‘சீன்’ போடுவது போலாகிவிடுமோ என பயந்து கொண்டு, தியான முறைகளைக் கைக் கொண்டு, சர்வ நிதானமாக அடியெடுத்து வைத்தேன்.

இவருக்கு, மூளையையும், கழுத்தையும் எம்.ஆர்.ஐ எடுக்கனும். ஆனால் இந்த மனிதர் இருக்கும் நிலையில், முக்கால் மணி நேரம் அந்த மெஷினுக்குள் படுக்க இயலாது. எனவே, தலைச் சுற்றலைக் கம்மி செய்ய மாத்திரை தருகிறேன். நாளை ஸ்கேன் எடுத்துக் கொள்ளுங்கள் என அறிவுரை தந்து, ஒரு டெக்கட்ரான் இன்ஜெக்ஷனையும் சில மாத்திரை களையும் அளித்தார்.

என்ன விந்தை? இன்ஜெக்ஷன் செலுத்தப் பட்ட மறுகணம், உலகு ஒரு நிலைக்கு வந்து விட்டது.

கொண்டுவந்து வீட்டில் விட்டுவிட்டு, ‘எதையாவது தின்று தொலையும்.. சாப்பிடாமல் இருந்தால் இப்படித்தான்’ என்ற உபதேச மழையோடு, சென்றனர்.

‘உடல், பசித்தால் தானே கேட்கும். பசிக்காத போது உண்ணுவதும், தாகம் எடுக்காத போது நீர் அருந்துவதும், தூக்கம் வரும்பொழுது தூங்காமல் இருப்பதும் தான் பிரச்சினைகளின் துவக்கம்’ என்பதை இப்பொழுது சொன்னால் அடிவிழும் என்பதால், வாயை மூடிக்கொண்டு, சரி.. சரி.. என்றேன். எனது ஒரு நன்பரே உணவை கொண்டுவந்து வைத்து விட்டு சென்றுவிட்டார்.

மாலை வரை அனைத்தும் சுகமே..

நினைத்துப் பார்த்தேன். இந்த உபாதைகளுக்கு எத்துனை தடவை, எத்துனை பேரிடம் சிகிச்சை பெறுவது?

ஒரு பத்து வாரம் விடாமல் திருச்சியில் ‘அக்கு டச்’.
பத்து வாரம் ஆயுர்வேதம்.
சில மாதம் சித்தா..
பயன்தான் பெரிய பூஜ்யம். ஆரம்பத்தில் சரியாவது போல போக்கு காட்டிவிட்டு, பின் ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ கதையாக உள்ளதே..

அல்லோபதி வேண்டாம் என நினைத்தாலும், மாற்று சிகிச்சை முறைகளில் தீர்வு கிடைக்காததால், விரும்பாவிட்டாலும் அவர்களிடமே செல்ல வேண்டிய நிலமைக்கு தள்ளப் படுகிறேன்.

மாலையில், மறந்து போய், சட்டென சோஃபாவிலிருந்து எழுந்து கொள்ள, பத்தடி தூரத்தில் இருக்கும் மற்றொரு சோஃபாவிற்கு, தூக்கி எறியப்பட்டது போல, தலை சுற்றி, அந்தகால திரைக் கதாநாயகிகள், மயக்கம் வந்தாலும் சௌகரியாமாக, கட்டிலில் விழுந்து வைப்பது போல, விழுந்து வைத்தேன்.

‘அட முட்டாளே.... நிதானமாக எழவேண்டும் என்ற புத்தி கூடவா இல்லை?’ என என்னை நானே சபித்துக் கொண்டு நிதானித்தேன்.

14/2/15. காதலர் தினம். எனதன்பு மனைவின் படத்திற்கு முன்னால், ‘என்னால் இயன்ற அளவு, இறுதிவரை உனக்கு பணிவிடை செய்தேன்.. இப்பொழுது நீ பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்? இனிமேலும் என்னை சோதிக்காதே..’ எனப் பிரார்த்திக் கொண்டு, அதே மருத்துவ மணையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்தேன்.

‘மூளையில் ( நல்ல வேளை.. அது மிஸ்ஸிங்.. என சொல்லவில்லையே) ஒன்றும் பிரச்சினை இல்லை.. செர்வைகல் பிராப்ளம்தான்.. சட்டென திரும்பவது.. டூவீலர் ஓட்டுவது போன்றவற்றை தவிர்க்கச் சொல்லும் ‘ரொட்டீன்’ அறிவுரைகள்.

இம்மாதிரியான பிரச்சினைகளை, கோட்டக்கல் ஆயுர்வேத மருத்துவ மனையில் சரி செய்கிறார்கள் அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருக்கி றார்களாம். இம்மாத இறுதியில் அங்கு செல்வதாக உத்தேசம். கழுத்து எலும்பு தேய்ந்து, அதனால் வரும் இம்மாதிரியான உபாதைகளுக்கு, தீர்வு இல்லையா என்ன?

சிலசமயம் துரதிர்ஷடம் துரத்தி வந்தாலும், பண்புகெட்ட காரியங்களை கூசாமல் செய்யும் மனிதர்கள் நிறைந்த இக்காலத்தில், சீர்மிகு நன்பர்களைப் பெற்றிருப்பது எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ தெரியவில்லை. அவர்களுக்கு என் வந்தனங்கள்.

Wednesday, February 4, 2015

The Secret of Old Age



The Secret of Old Age

Before Middle age – Do not fear..
After Middle age – Do not regret..

Enjoy your life – While you can..
Do not wait till you cannot even walk  Just to be sorry and to regret!
As long as it is physically possible, visit places you wish to visit

When there is an opportunity,
get together with old Classmates,
Old colleagues and old friends,
The gathering is not just about eating;
It’s just that there is not much time left…

Money kept in the banks may not be really yours,
When it is time to spend, just spen!

Treat yourself well as you are getting old..
Whatever you feel like eating, just eat
It most important to be HAPPY!!

Foods which are good for health – eat often 
And more but that is not everything,
Things which are not good for health – eat less once a while
But do not abstain from them totally!

Treat sickness with optimism,
Whether you are poor or rich,
Everyone has to be go through birth, aging, sickness and DEATH
There is no exception, that is life!

Do not be afraid or worried when you are sick,
Settle all the outstanding issues before hand 
and you will be able to leave without regret.

Let the doctors handle your body,
Let God / Nature handle your life!
But be in charge of your own moods

If worries can cure your sickness – then go ahead and worry!
If worries can prolong your life – then go ahead and worry!
If worries can exchange for happiness, then go ahead and worry!

Our kids will make their own fortune..

Look after four treasures:
1. Your ld body – pay more attention to health – 
         you can rely on yourself on this!

2. Retirement funds- money that you have earned,
         It is best to keep them yourself!

3. Your old companion – 
         treasure every moment with your other half,
         one of you will leave first!

4. Your old friends – seize every opportunity to meet up with your                  
         friends, such opportunities will become rare as the time goes by..

Things you must DO everyday..SMILE AND LAUGH..

Running water does not flow back.  So it is with life, make it happy,

முதுமையின் ரகசியம்...


எனதன்பு முதிய நண்பனே! முதுமை கண்டு அஞ்சவேண்டியதில்லை;
பிறப்பதும், வயதாவதும்,நோய்வாய்படுவதும், மரணிப்பதும் இயல்பான ஒன்றே!இவை ஏதும் உனக்கு மட்டுமே நடக்கும் பிரத்தேயேக நிகழ்வல்ல!
 சற்றே கண்களைத் திறந்து பார்...ரசிக்க வேண்டியவை உலகில் கொட்டிக் கிடக்கின்றன..சப்தமின்றி மலரும் பூக்களை ரசி!சலிப்பின்றி ஆர்பரிக்க்ம் கடலை ரசி!மௌன பிரம்மாண்டமான மலைகளை ரசி!தத்தித் தவழும் ஓடைகளையும்,
சீறும் ஆறுகளையும் பார்..மரகதக் காடுகளையும், அதன் மடியில் விளையாடும் விலங்குகளையும் பார்..ரசிக்க வேண்டியவை உலகில் கொட்டி கிடக்கின்றன.. நடந்தவை குறித்து வருந்தாதே!அதனால் பலனேதும் இல்லை..ஆயுளின் பாதிக் கிணறு தாண்டும் வரை எதற்கும் அஞ்சாதே!தாண்டியபின் நடந்தவை குறித்து வருந்தவும் செய்யாதே! நேற்றும் – நாளையும் உன்னுடையதல்ல! 
கடந்தவையாவும் உன் விருப்பம் போல அமையாமல் இருந்திருக்கக் கூடும்!

நடக்கவிருப்பதற்கும் எவரும் உத்தரவாதம் இல்லை! எனினும். இக்கணம் உண்ணுடையதுதானே!
ருசித்து வாழ்.. கோலூன்றுவதற்கு முன்னரே, பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துவிடு,

கேட்க வேண்டியவற்றை கேட்டுவிடு..உன்னால் முடியும் பொழுதே..... வாழ்வை சுவைத்துக்கொள்-நேர்வழியில்!

தளர்ந்தபின் வருந்தியும் - விரும்பியும் பலனில்லை நன்பா!

 இதுவே சந்தர்ப்பம்.. உன பள்ளித் தோழனைப் பார்..கல்லூரி நட்பைத் தேடிப்பார்..உன்னிடம்-உன்னோடு வேலை செய்தவர்களை நாடிப்பார்..அவை உண்டு களித்து கலைவதற்கு அல்ல..நினைவுகளை அசைபோடு..மலரச் செய்.. இதோ... உன் கண் முண்ணே காலம் கரைந்து கொண்டிருக்கிறது..முடிவு எப்போதும் வரலாம்..இக்கணம் விட்டால் எக்கணமும் இல்லாமல் போகலாம்..அதற்குள் அவர்களைப் பார்த்துவிடு.. ஆடி ஓடி சேர்த்து வைத்த பணம் யாவும்உண்ணுடையது என எண்ணாதே.. போகும் பொழுது உன் அரஞாண் கயிற்றைக் கூடஅறுத்துத் தான் புதைக்கப் போகிறார்கள்.உணர்ந்து கொள்..கொண்டு போவது யாதொன்றுமில்லை.. தேவைப் படும் பொழுது உனக்காக செலவழிக்கத் தயங்காதே..இலவு காத்த கிளியாகாதே.. முதுமையை மகிழ்ச்சியாக எதிர்கொள்..இக்கணம் மகிழ்ச்சியாக இருக்கிறாயா?
அதுவே வாழ்வின் பொருள்..! நல்லனவற்றை அடிக்கடி உண்.. அது நல்லது..விருப்பமானவற்றை விலக்கி விடாதே.. குறைவாக உண்.. நோய் வரட்டும்.. நம்பிக்கையோடு எதிர்கொள்..நோய் வராதவர் யார்?
தாய் கொண்டுவந்ததை நோய் கொண்டு செல்வது புதியதல்லவே?நீ மட்டும் விலக்கா என்ன?வாழ்வே அதுதானே? உடலுக்குமட்டுமே மருத்துவர்.. ஆன்மாவுக்கு இறைவனே! உன் சந்தோஷத்திற்கு நீ மட்டுமே பொறுப்பாளி!இது இருந்தால் மகிழ்வேன்.. அது கிடைத்தால் மகிழ்வேன்.என மகிழ்ச்சிகு  நிபந்தனைகள் விதிக்காதே..அப்படி ஒன்று உலகில்  நடக்கவே நடக்காது! கவலைப் பட்டால், வலி தீரும் எனில் தாராளமாக கவலைப் படு..கவலைப் பட்டால் சந்தோஷம் வரும் எனில் தாராளமாக கவலைப் படு..கவலைப் பட்டால் வாழ்வு நீடிக்கும் எனில் தாராளமாக கவலைப் படு..உனக்கே புரியும்,  எது சரியென.. வார்சுகளுக்காக  கலங்காதே..செய்ய வேண்டியது என்ன வென்று அவர்களுக்குத் தெரியும்..அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டும்.. உனக்கான கடமைகளை விரைந்து முடி...சிக்கல்களைத் தீர்த்துக் கொள்.. விடாப்பிடியாக சினம் கொண்டிருப்பவர்களையும்,உன்னை அவமானப் படுத்திப் பார்ப்பதில் மகிழ்வோரும் இருப்பர்அவர்களைப் புறம் தள்ளு.. அனைவரையும் மன்னிக்கக் கற்றுக் கொள்..அன்பு ஒன்றே அனைத்தையும் வெல்லும்... நான்கு மந்திரங்களை மறக்காதே.. 1.       உடல் நலத்தைப் பேண்.. மன நலமும் கூடத்தான்.. அதுவே      
       அடிப்படை!

2.       உன்காலம் வரை உன் பணத்தை உன்னிடமே வைத்துக் கொள்..

3.       வாழ்க்கைத்துணையை நேசி..ஒவ்வொரு கணமும்    ஆனால் புரிந்துகொள்.. இருவரில்      ஒருவர் முந்தியே ஆகவேண்டும்.. மனதளவில் தயாராகு..  

4.       நட்புக்களை ஒரு பொழுதும் இழக்காதே.. ஆறு ஒரு பொழுதும் பின்னோக்கிப் போகாது... மீண்டும் வாழ இயலாது.. ஒவ்வொரு கணத்திலும் புன்னகை செய்.. நகைக் கற்றுக் கொள்.. அன்பும் மகிழ்ச்சி பெருகட்டும்...

அற்றார்....

இன்று எனது  நண்பர் ஒருவர், ஆதரவற்றோர்களுக்கு (சுமார் 100 பேர்) ஒரு வேளை உணவளித்தார். அற்றார் பசி, ஒருவேளை தீர்த்தேன் என்றார்.

அற்றார் என்றால், அம் முதுமக்கள் ஏதுமற்றர்கள்.
உறவு அற்றார்..
பொருள் அற்றார்..
உற்றம் அற்றார்..
சுற்றம் அற்றார்..
நட்பு அற்றார்...

ஆனாலும்....

உணர்வற்றவர்களா?
பசியற்றவர்களா?
சுய மதிப்பற்றவர்களா?
கௌரவமற்றவர்களா?
மானமற்றவர்களா?
ஈனப் பிறவிகளா?

கேள்வி மனதைக் குடைகிறது!

ஒரு வருடத்திற்கு முன்பு வரை அனாதைகளுக்கு உணவளிப்பது ‘சமூக சேவை.’  அல்லது  ‘எனக்கும் மனித நேயம் இருக்கிறது, அவர்களுக்கு உணவளிப்பது ஒரு சமூக கடமை.’ என்பதாகத்தான் புரிந்து கொண்டி ருந்தேன்.

சற்றே, மிகவும் சற்றே உற்று நோக்கினால் கூட, மனம் பரிதவித்துப் போகிறது! அவர்களுக்குளாக, ஒரு வேதனைச் சமுத்திரம் பொங்கிக் கொண்டிருப்பதும், விரக்தியின் உச்சத்தில் பரிதவித்துக் கொண்டிருப்பதும் புரிகிறது.

அவர்கள் விரும்புவது என்ன? வெறும் உணவுப் பொட்டலங்களையா? ‘வயிற்றை நிரப்பிக் கொள்வது’ மட்டுமே அவர்களது விழைவாக இருக்கிறதா?

‘எல்லாம் நல்லாத்தான் இருந்ததையா, காலத்தின் கோலம் எங்களை இப்படி ஆக்கிவிட்டது’ என விழி நீர் சிந்தாத முதியோர்களைக் கண்டதுண்டா?’  ‘சீக்கிரம் ஆண்டவன் எங்களை அழைத்துக் கொள்ள வேண்டும்’ என வேண்டுகோள் வைக்காத, உதாசீனப்படுத்தப் பட்ட முதியோர்களைக் கண்டதுண்டா?

தற்போது மானுடம் நசிந்துதான் போயிற்றா?

சுய நலப் பிண்டங்களாக மாறிவிட்டதா நமது சமுதாயம்?

இந்திய நாட்டின் சிறப்பே, அது எந்த மதமாக இருந்தாலும், குடும்பத்தையும், வயதானவர்களைப் பேணுவதை யதார்த்தமான கடமையாக கொண்டதல்லவா நமது கலாச்சாரம்? எங்கே தவறிழைத்தோம்?  அனாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் ஏன் பெருகிக் கொண்டே போகின்றன?

‘எங்க உடம்புல தெம்பும், கையில காசும் இருக்கிற வரைக்கும் நாங்க எல்லோருக்கும் இனிப்பாத்தான் இருந்தோமுங்க... எந்த குறையும் இல்லாம எல்லப் புள்ளைங்களுக்கும் நல்லாத்தான் குடும்பம் அமச்சுக் கொடுத்தோமுங்க.. அவுங்களுக்கு கால் முளைச்சுடுச்சு..., எங்களை முட்டாள்ன்னு நினைக்கறாங்க..  தெம்பு போனதுக்கப்புறம், எங்களை சுமையா நினைக்கறாங்க..  நாங்க அவுங்களுக்கு வேண்டாத பளுவா போயிட்டோமுங்க..’  சொல்லும் வார்த்தைகளே இப்படியென்றால், மனதில் புதைந்து கிடக்கும் எண்ணங்கள் எவ்வளவு இருக்கும்?

தாய், தந்தை, மக்கட் செல்வங்கள், உற்றம், சுற்றம் ஏதும் இல்லாமல் ‘சுயம்பு அனாதைகளாக’ பிறந்தவர்களா இந்த முதியோர்கள்?

‘எல்லாம் இருந்துதையா... இப்ப யாரும் கண்டுக்கல... யாரையும் குறை சொல்லி பிரயோஜனம் இல்லீங்கையா! எல்லாம் எங்க விதி..’
பேச மறுத்து, தனக்குள்ளேயே புழுங்கும் பரிதாபிகளாகி விட்டனரே?..- ஏன்?’   

நாம் பிறருக்கு என்ன செய்கிறோமோ அதுவேதான் தங்களுக்கும் திரும்ப வரும் என்பது கூடவா சமூகத்திற்கு புரியவில்லையா?

‘இன்னும் கொஞ்சம் சாப்பாடு போட்டுக்கறீங்களா..?’

வேணாங்கநீங்க அன்பா கேட்டதே போதும்….’


புரிகிறதா அவர்களுக்கு என்ன வேண்டும் என?