Friday, June 30, 2017

குங்குமப் பூ

ஸ்ரீநகரின் ‘தால்’ ஏரி கருத்துக் கிடந்தது. தங்கியிருந்த ‘போட் ஹவுஸின்’ வராந்தாவில் நாற்காலியொன்றை இழுத்துப் போட்டு, கால்களை நீட்டி அமர்ந்திருந்தேன்.  எதிரே இருந்த குன்றொன்றில் அமைந்த  'சங்கராச்சார்யா கோவில்' கோபுரத்தின் விளக்கு நீரில் பட்டு பிரதிபலித்துக் கொண்டிருந்தது. நகரெங்கும் நிரம்பியிருக்கும் மசூதிகளிலிருந்து தொழுகையழைப்பு, காற்றில்   மிதந்து கொண்டிருந்தது.

இரவு ஏழரை மணியானாலும் முழுமையாக இருட்ட ஆரம்பிக்கவில்லை. அடிவானில் பரவிக்கிடக்கும் வெளிச்சத்தைப் பார்த்தால், இருள் கவ்வ இன்னமும் அரைமணி நேரம் ஆகும் போலிருக்கிறது. 
எனக்கு வித்தியாசமாக இருந்தது.  நம் ஊரில் எத்தனைமணிக்கு இருட்டும்? ஊரில் இருக்கும்போது இதைப்பற்றி நினைத்தாவது பார்த்திருக்கிறோமா.. சிரித்துக் கொண்டேன்.  புதிய இடத்திற்கு வரும்பொழுது, நம் ஊரில், கவணிக்க மறந்த, சர்வ சாதாரணமான விஷயெமல்லாம், இங்கே ஆச்சர்யமாக இருக்கிறது. இப்ப,  நம்ம ஊரில் எப்படியிருக்கும்? இருட்டியிருக்குமா? ஊரில் இருந்திருந்தால் என்ன செய்து கொண்டிருப்போம்? எதற்காக ஆறு மணிக்கு இருட்டிவிடவேண்டும் என எதிர்பார்க் கிறோம்?  நவீன காலத்தின் தேவை கருதி, ஒவ்வொரு நாடும் ஒன்றோ, அதற்குமேலோ தங்கள் நாட்டிற்கு  ஸ்டேன்டேர்ட் டைம் வைத்திருக்கிறார்கள். அலஹாபாத்தில் ஆறாகிவிட்டால், நாகாலாந்திலும் மணிஆறாகிவிடவேண்டுமா என்ன?

படகின் அடியில், மௌனமாக மெல்ல மெல்ல நீர்  நகர்ந்து கொண்டிருந்தது. இரவில், பாட்டரி விளக்குகளைப் பொருத்திக் கொண்ட குட்டிப் படகுகள்,  இருண்டவானின் நட்சத்திரங்கள் போல ஆங்காங்கே மினுக்கிக் கொண்டிருந்தன.  பெயரறியா  சொடிகளும் பாசிகளும், நீரினோடே ‘பாகிஸ்தான்’ நோக்கி பயணப் பட்டுக் கொண்டிருந்தன.  மனித உலகிற்ககுத்தான் எல்லைகளும் விசாக்களும் தேவை! நீரும் பறவைகளும், ஏன், எந்த ஜீவராசிகளும் மனிதன் வரையறுத்த எல்லைகளை சட்டை செய்வதில்லை.  அவை, அதனதன் நியதிக்குட்பட்டு பயணப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.  

மௌனம்..எங்கும் மௌனம்.  செவிடாக்கும் இந்த மௌனம் அனுபவிக்க வேண்டியதா இல்லை அச்சப்பட வேண்டியதா? காஷ்மீரில்  நிலவும் மௌனமும் அமைதியும், எந்தச் சமயத்திலும் வெடிக்கக் காத்திருக்கும் அமைதியல்லவா?

இருளில், ‘களக்-களக்’ கென துடுப்புபோடும் சப்தம் அருகில் கேட்டது. எட்டிப் பார்த்தேன். குட்டிப் படகொன்று வெண்ணையில் கத்தி இறங்குவது போல வழுக்கிக்கொண்டு போட் ஹவுசின் அருகே வந்தது.  ஒரு மனிதர் அதனின்றும் வெளிப்பட்டு மேலேறி வந்தார். கையில் ஒரு மூட்டையுடன்.

காஷ்மீர் சால்வைகள்.. குங்குமப்பூ.. ஷிலாஜித்து விற்பவர்.  எனக்குப் பெரும் சங்கடம். ‘வேண்டாம்..’ என்று சொல்லத் தயங்கும் குணவான். 

வந்த மனிதரோ, படபடவென தனது சரக்குகளை விரித்தார்.  குங்குமப்பூ டப்பாக்கள், ஷிலாஜித் குப்பிகள், சால்வைகள், சுடிதார்கள்.

‘நன்பா.. இவை எதுவும் எனக்கு உபயோகப்படாது. வீணாகச் சிரமப்படாதீர்கள். தேவையானால் நானே கேட்டு..... ‘     ம்ம்ம்.. வந்த மனிதர் எதையும் காதில் போட்டுக் கொள்ளும் உத்தேசத்தோடு வந்தவரல்ல. ஷிலாஜித்தின் மகிமையை எடுத்துவிட்டார்.

“பிரமாதமான சக்திதரும் ஐட்டம் சார், உள் நாட்டில் இது கிடைக்கவே கிடைக்காது. கிடைத்தாலும் ஏக விலை விற்கும், ஒரிஜினலா இருக்காது”.   

“இல்லை..இல்லை எனக்கு ஷிலாஜித்திற்கான தேவையே இல்லை” எனக் கதற, அப்போதுதான் கொஞ்சம் என்னை உற்றுப் பார்த்தார். வயது தெரிந்துவிட்டிருக்கும் போல. உடனே ஷிலாஜித்தின் மகிமையில் முட்டிவலி-முழங்கால் வலி ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டார்.   

“எனக்கு முட்டிவலி உபாதைகள் ஏதும் இல்லை..”

மனிதர் ஏமாற்றமடைந்துவிட்டார். உடனே காஷ்மீரத்து சால்வைகள் பக்கம் தாவினார்.

“ஐயா.. எங்க ஊரில் எப்போதும் கோடைகாலம்தான். மார்கழி குளிரெல்லாம் காணாமற்போய் மாமாங்கம் ஆகிறது. உங்க சால்வையைப் போர்த்திக் கொண்டால், ஜங்கம சொத்துக்கள் எல்லாம் வெந்துபோகுமய்யா...’

மனிதர் கொஞ்சமும் சளைக்கவில்லை.  சர்வ ஜாக்கிரதையாக, வேண்டாம் எனச் சொல்ல முடியாதபடி,  குங்குமப்பூவின் மகிமையைச் சொல்ல ஆரம்பித்தார்.  அவருக்கென்ன.. வார்த்தைகள்தானே மூலதனம்? தேர்ந்த மேடைப்பேச்சாளரின் லாகவத்தோடும், சாதுர்யத்தோடும், மணிப்பிரவாகமாக பொழிந்து தள்ளினார்.

ஏமாந்து போவதில், தனித்திறமையாளன் நான். சற்றே வற்புறுத்திப் பேசினால் போதும். இளகிவிடுவேன்.  கஷ்டங்களை அடுத்தவர் சொல்லும்போது, அவர் புரிந்து கொள்கிறாரோ இல்லையோ, அவர் சார்பாக நானே புரிந்துகொண்டு, பரிதாபப்படும் விந்தை ஜீவன். ஏற்கனவே, காஷ்மீர் இளைஞர்களின் வேலையின்மை குறித்து அனுதாபப்பட்டுக் கொண்டிருக்கும் போது, இந்த மனிதரின் எப்படியாவது வியாபாரம் முடிக்க வேண்டும் என்ற நோக்கம் புரியவே, ‘குங்குமப்பூ கிராம் எவ்வளவு..?’ என்றேன்.  என்ன மாயமோ, இங்குள்ளவர்கள் சாஃப்ரானுக்கு (Saffron) எல்லா மொழிகளிலும் அதற்குண்டான வார்த்தையைத் தெரிந்து வைத்துள்ளனர். அழகாக தமிழில் ‘குங்குமப் பூ’ சார் என்கின்றனர்.

மீன் தூண்டிலில் சிக்கியது என உணர்ந்து கொண்டார். ‘சார் மற்றவங்க போல இல்லை சார்.. இங்கே நிறைய ஏமாற்றுப் பேர்வழிகள் உள்ளனர். தேங்காய்ப்பூவில் சாயம் ஏற்றி குங்குமம்பூ  என விற்றுவிடுவர். நாக்கை நீட்டுங்க.. அதில் இரண்டு பூ போடுகிறேன். எப்படி மஞ்சளாகிறது எனப் பாருங்க..”  என் நாக்கில் அந்தத்  துருவலை தீற்றிவிடும் உத்தேசத்தோடு பாய்ந்தார். 

“வேண்டாம்..வேண்டாம்.. நான்  நம்புகிறேன். உங்களோடது, நிஜமான கு.பூ தான்.. ” . 

‘இல்லைசார். நீங்க நாக்கில் வைத்துக்குங்க..  நாக்கை நீட்டுங்க.. நான் மொபைலில் போட்டோ எடுத்துக் காண்பிக்கிறேன்.”

ஐயகோ.. இதென்ன சோதனை.. காளி போல போஸ் கொடுக்கும் கற்பனையே, பீதியடைய வைத்தது.

“க்ராம் எவ்வளவு என்று சொல்லுங்கள். அது போதும்”.    இந்த ஆளை எப்படியாவது சீக்கிரம் அனுப்பியாகவேண்டும் என்ற பதைப்பு ஏற்பட்டுவிட்டது.  

“முன்னூறு ரூபாய்.. உங்களுக்காக 290 ரூபாய்.”

நான் தான் முதலிலேயே சொன்னேனே.. ஏமாறுவதில் நான் தேர்ந்த திறமைசாலியென... 

“சரி.. 250 ரூபாய் போட்டுக்கோ.. இரண்டு கிராம் கொடு..” இந்த பேரத்தை அவராலேயே நம்ப முடியவில்லை போல.  நாலுகிராமா வாங்கிக்கோங்க சார். ஒருகிராம் ஃப்ரீயா தரேன்.

“வேண்டாம்..வேண்டாம். ரெண்டு கிராம் போதும்..”

‘உங்கள மாதிரி நல்ல மனுஷங்களுக்கு ஒரு கிராம் ஃப்ரீயா கொடுப்பதில் சந்தோஷம் சார். வாங்கிக்கோங்க...’

‘எவர் வேண்டுமானாலும் மிளகாய் அரைக்கலாம்’ என வரம் வாங்கிக்கொண்டு வந்துள்ளேன் போல.

ஆயிரம் ரூபாய் காலி.


மேலே குறிப்பிட்ட “குங்குமப் பூ"டயலாக்கை “ அப்படியே ஒருதடவை ரிபீட் செய்யுங்க... அதே வசனங்களைச் சொல்லி, கிராம் முன்னூறு ரூபாய் என ஒரு ‘ஜமீன்தார்” கடை வியாபாரி ஒருவர், இரண்டு கிராம் பூவை என்னிடம் தள்ளிவிட்டார். ஜமீன்தார் கடை கு.பூ தான் ஒரிஜினல் என டிரைவர் சான்றுரைக்க, இந்த வியாபாரம்  முடிந்தது.

எல்லாம் முடிந்து, மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு ‘இண்டிகோவிற்கு’, படகில் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் சமயம், ஒருஆள் வந்தார். பரிதாபமான தோற்றம். பரம ஏழை என்பது முகத்தில் எழுதிவைத்திருந்தது. ‘சார்.. எல்லாரும் ஏமாத்துக்காரங்க... என்னிடம் கிராம் நூறு ரூபாய்தான். நிஜத்தச் சொல்றேன்.இதை வித்தா, பத்து ரூபா கமிஷன் கிடைக்கும். அவ்வளவு தான் எனக்கு வருமானம் என்றார்.  இம்முறை அவருக்கு உதவனும் என்றே இரண்டுகிராம் வாங்கினேன். என்னவோ இவரிடம் ஏமாந்தது   நிறைவாகவே இருந்தது.

கேட்டவர்களுக்கு கொடுத்ததுபோக, மீந்த ஆறு கிராம் கு.பூக்களை, குப்பியோடு மளிகைச் சாமான்களுக்கிடையே திணித்து வைத்திருந்தேன். தினம் பால் அருந்தும்போது, கொஞ்சம் கு.பூ போட்டு குடிக்க வேண்டும் எனபது எனது திட்டம்.

இந்த திட்டம், தீர்மானமாக, பால் குடித்தபின் நினைவுக்கு வரும்.

இன்று மதியம் உறங்கி எழுந்தபின், “ப்ளாக்கில்” எழுதி நாளாகிவிட்டதே..  அவுட்லைன் போட்டு வைத்திருக்கும் கதைகளில் ஒன்றை  எழுதலாமா யோசித்துக் கொண்டிருக்கும் போது, வீட்டில் பாத்திரம் கழுவும் பெண்மணி, ‘இன்னாது... என்னவோ டப்பா டப்பாவ செவப்பா கருப்பா துருவி வச்சுருக்கே.. பூசாணம் புடிச்சுக்கும்.. அல்லாத்தையும் குப்பத்தொட்டில கடாசுட்டேன்.. தேடாதே...” என்று அறிவித்துவிட்டு சென்றார்.
-0-



Saturday, June 24, 2017

கார்டு வாங்கலையோ.. கார்டு!!

மனுஷனுக்கு எந்தெந்த விதங்களிலெல்லாம் இம்சை வந்து சேரும் என்பது யூகிக்கமுடியாத சமாச்சாரம்.  அதிமுகவிற்கு வரும் இம்சைகளைக்கூட மோடி புன்னியத்தில் சமாளித்து விடலாம். ஆனால் மோடி நமக்குக் கொடுக்கும் குடைச்சல் இருக்கே!  சரியான நமுட்டு விஷமம் புடிச்ச ஆள்.

இது நாள் வரை, நான் பசுமாடு போல, அரசாங்கம் சொல்லும் வரியைக்கட்டிவிட்டு, தலையை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். குடைச்சல் வந்து சேர்ந்தது ‘பான் கார்டு’ மூலம்.ஆதார் கார்டுடன், பான் கார்டையும் இணை. அதுவும் ஜூன் 30க்குள்ளாக என்று ஒரு ஆணை.  

இந்த வங்கிக்காரர்கள், செக்குமாடு போல, உடணடியாக அருகில் இருக்கும் வங்கிக்கிளைக்கு வந்து, ஆதார் எண்ணை சமர்ப்பிக்குமாறு சகட்டுமேனிக்கு, நாளொன்றுக்கு பத்து எஸ்.எம்.எஸ் அனுப்புவார்கள்.  மெஸேஜ் அனுப்பும் ப்ரோக்ராமில், ‘யாரெல்லாம் ஆதார் எண் சமர்ப்பிக்கவில்லையோ, அவர்களுக்கு மட்டும்’ என்று ஒரு கண்டிஷன் போடமாட்டார்களா?  வேகாத வெயிலில் வங்கிக்குச் சென்றால், ‘ நீங்க, முன்னாலயே ஆதாரை கொடுத்து விட்டீர்களே?’ என அழகு காண்பிப்பார்கள்.  இந்த பிடுங்கலாவது உள்ளூரோடு முடியும்.   ஆனால், ஆதார்-பான் கார்டு இணைப்பு இருக்கே, அது கங்கையையும் காவிரியையும் கூட இணைத்துவிடுவது சுலபம் என்று தோன்ற வைக்கும்.

இன்னும் என்னென்ன கார்டை, எந்தெந்த கார்டோடு இணைக்கச் சொல்லி உத்தரவு வரப்போகிறதோ என பீதியாயக் இருக்கு!  டிபார்ட்மெண்ட் ஐ.டி கார்டு,  க்ரெடிட் கார்டு, டிரைவிங்க் லைஸென்ஸ் கார்டு, மெடிகல் கார்டு, உள்ளூர் லைப்ரரிகார்டு என கைவசம் ஒரு கத்தை கார்டு வைத்திருக்கிறேன். என் வீட்டுப் பால்காரர், பேப்பர் போடுபவர் என பலரும் ஆளுக்கொரு ஒரு அட்டையை திணித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். தேவுடா....‘மன் கி பாத்’ நமக்கு இல்லையே!

ஆதார்கார்டை, பான்கார்டுடன் இணைக்க, ஒரு தளத்தின் இணைப்பை வழங்கியிருந்தார்கள். உள்ளே சென்று இணைப்பைச் சொடுக்கினால்,  பெயர் பொருத்தமில்லை என ரிஜெக்ட் ஆகியது.  இதென்ன கல்யாணப் பொருத்தமா.. அதெப்படி பொருந்தாமல் போகும் என சிண்டைப் பிய்த்துக்கொண்டு (வழுக்கை விழுந்துவிட்டாலும்) ஆராய்ந்து சொல்லச் சொன்னால்,  இரண்டு கார்டிலும் பெயர் வேறுவிதமாக இருக்கிறது  எனப் பதில் வந்தது.

தமிழ் நாட்டிற்கு, வேறு எந்த மானிலத்திற்கும் இல்லாத ஒரு இம்சை இருக்கிறது.  இங்கே பெயர் என்றால் பெயர்தான். அதற்கு சஃப்க்ஸ்-ப்ரிஃபிக்ஸ் எல்லாம் கிடையாது. பெயருடன் பெரும்பான்மையாக ஒரு இனிஷியல் இருக்கும். அது அனேகமாக அப்பா பெயர். அவ்வளவே! பலராமன் என்றால் பலராமன் தான். அட்டாச்மென்ட்கள் இல்லை. 

ஆனால் வடக்கே  கிவன் நேம், ஃபர்ஸ்ட் நேம், சர் நேம், மிடில் நேம், பெட் நேம் என பல தினுசுகள் இருக்கும் போல. இந்தப் பெயர்களுக்கு என்னதான் விளக்கம் எனத் தெரிந்துகொள்ள முப்பது வருடமாக முயன்று தோற்றுவிட்டேன். 

R. பலராமன் என்றால் என் பெயர் ராமச்சந்திரன் பலராமன். பலராமன். R  என்றால் என் பெயர் பலராமன் ராமச்சந்திரன்.

பான் கார்டு அப்ளை செய்யும் போது, ஏஜண்ட் பெயரைக் கேட்டார். சொன்னேன். அப்பா பெயர் என்னவென்றார். ‘ராமச்சந்திரன்’ என்றேன். அந்த புன்னியவான் எந்தப்பெயரை எங்கு எழுதினாரோ தெரியவில்லை. கார்டில் பலராமன் ராமச்சந்திரன் என வந்திருந்தது. அட, இது அப்பாவின் பெயர்தானே.. இருந்துட்டுப் போகட்டும் என விட்டுவிட்டேன். இது நடந்தது 15 வருடங்கள் இருக்கும். இப்ப வந்தது வினை.

ஆதாரில் என்பெயர் பலராமன். ஆனால் பான் கார்டில் என்பெயர் பலராமன் ராமச்சந்திரன்.  எனவே இணைக்க முடியாதாம். இதென்ன இம்சை. இரண்டு கார்டிலும் அப்பா பெயர் ராமச்சந்திரன் தானே? ஏற்றுக் கொள்ளக் கூடாதா என்றால், முடியாது என்றது சிஸ்டம். இந்தியாவில் மனிதர்கள் கூடவே பேசுவது சாத்தியமாகத நிலையில், மிஷினுடன் என்னத்தைப் பேச?

சரியென ஆன்லைனில், பெயரை மாற்றும் ஆப்ஷனுக்குச் சென்றேன்.

அடாடா.. எப்படித்தான் மைனஸ் -12 சைஸில் எப்படித்தான்  ஃபாண்ட் வைக்கிறார்களோ? மஞ்சள் நிறக்கட்டங்களில்,  உமிக்கொசு சைசில் எழுதியிருப்பதைப் படித்தாக வேண்டும். அதைப் புரிந்து கொள்ளவேண்டும். பின் ஃபில்லப் செய்யணும். சை.. பெயரை மாற்ற காசு வேறு கேட்டார்கள். ஆன்லைனில் கட்டியாகிவிட்டது.

ஒரு வழியாக என்பெயர் பலராமன்.என் அப்பா பெயர் ராமச்சந்திரன் தான் என டைப் செய்தவுடன்,  பெயர் மாற்றம் செய்யணும் என்றால், எந்தெந்த சர்டிபிகேட் தேவை அவர்கள் சிஸ்டம் என ஒரு லிஸ்ட் படித்தது.  எல்லாம் மலையைக் கிள்ளி எலியைப் பிடிக்கிற வேலை. 

நான் பலராமன் தான் என நிரூபிக்க ஆதார் கார்டு, பென்ஷன் ஆர்டர், பென்ஷன் புக், வங்கிக் கணக்கு முதல் பக்கம் எல்லாம் கொடுத்தேன்.

பதினைந்து நாள்  கழித்து மெயில் வந்தது. “பெயரை உறுதிப் படுத்த பென்ஷன் ஆர்டரோ, ஆதார் கார்டோ, வோட்டர் ஐ.டியோ ஏற்றுக் கொள்ளக் கூடிய தஸ்தாவேஜூகள் இல்லை. போய் பள்ளிக்கூட சர்டிபிகேட்டை தேடி எடுத்துவா..”

அடப்பாவிகளா.. நான் பள்ளியைமுடித்தது 1969ல். அந்த சர்டிபிகேட்டை எங்கே தேட? நான் படித்த படிப்புகளின் அடிப்படையில் தானே  வேலை கிடைத்தது? அப்பாயின்மெண்ட் ஆர்டரில் பலராமன் என்று தானே இருக்கு? நாப்பது வருடம் குப்பைகொட்டிவிட்டு ரிடயர்மெண்ட் (சூப்பரானுவேஷனில் தான்) ஆர்டரும் அதன் அடிப்படையில்தானே?   அதில் பலராமன் என்றுதானே இருக்கிறது? அதை எப்படி சான்றாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்-என வினவினால், “ஆத்தா வையும்.. சந்தைக்குப் போகனும்.. காசு கொடு...” என சொன்னதையே சொல்லும் கமல் போல, ஸ்கூல் சர்டிபிகேட் கொடு என சண்டித்தனம் செய்த்து இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட்.

வீட்டை தலைகீழாகப் புரட்டிப்போட்டாகிவிட்டது. 1971-ல் சேலம் பேலஸ் தியேட்டர் சைக்கிள் ஸ்டேண்டில் கொடுத்த ‘டோக்கன் கூட’ கிடைத்தது.. எஸ்.எஸ்.எல்.ஸி சர்டிபிகேட் காணவில்லை.

இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் என்ன பெண்டாட்டியா என்ன, கோவிச்சுக்க முடியுமா? முறையிடுவதைத் தவிர வேறு வழி?

ஐயா.. ஆதார் கார்டும், வோட்டர் ஐடியும், பென்ஷன் புக்கும் ‘பலராமன்’ என்றுதானே இருக்கு? அதன் அடிப்படையில் பான் கார்டில் பெயர் மாற்றக் கூடாதா? அரசாங்கத்தின் பெட் திட்டமான ஆதாரையே நம்ப மாட்டீர்களா என அழுது புரண்டாலும், ஸ்கூட்ல் சர்டிபிகேட்... சந்தைக்கு போகனும்னு அடம்.

வேறு வழியின்றி, பிரதம மந்திரியின் ‘குறைகேட்கும்’ அலுவலகத்திற்கு முறையீடு செய்தேன். ஐயா... சத்தியமா நான் பலராமன் தான். ஆதார், ரிடயர்மெண்ட் ஆர்டர்..இத்தியாதிகளை நம்புங்கள். இது நாள் வரை சம்பளத்தில் வருமான வரி பிடித்தமெல்லாம் ‘பலராமன்’ என்ற பெயரில் அதே பான் கார்டு எண்ணில், கட்டும்போது ஏற்றுக் கொண்ட வருமான வரித்துரை, இப்போது ஏற்றுக் கொள்ள மறுப்பது அக்கிரமம், வரிகளை ஏற்றுக்கொள்ளும்போது இது முரணாகத் தெரியவில்லையா.. எனப்  புலம்பியிருந்தேன்.

நமது அதிகார வர்க்கத்திற்கு மூளை எப்போதும் நேரே போகாது போல. “தவளையின் நான்கு கால்களையும் வெட்டிவிட்டால், தவளைக்கு காது கேட்காது.. அதனால்தான்  தாவ முடியவில்லை” என தீர்மாணிக்கும் அதிபுத்திசாலி அல்லவா?  

இந்த முறையீட்டை, அவர்கள் யாருக்கு அனுப்பியிருக்கனும்? பான் கார்டு பெயரை மாற்றும் அலுவலகத்திற்குத்தானே? அவ்வளவு எளிதாக முடிவெடுத்துவிட்டால், அதிகார வர்கத்தின் மூளை என்னவாவது? எனது புகாரினை, ஆதார் அலுவலகத்திற்கு அனுப்புவிட்டனர்.

ஐயகோ... ஆதார் அட்டையில் பழுதொன்றுமில்லை. பிரச்சினை பான் கார்டில் தான் என புலம்பினால், ‘Further comments not allowed.. some problems noticed” என பதில் வருகிறது.

படுபாவிகள்.. ஆதார் கார்டில் பெயரை மாற்றித் தொலைக்கப் போகிறார்களோ என அச்சமாக இருக்கிறது.

திட்டம் என்னவோ நல்ல திட்டம்தான். அதை அமுல் படுத்தும் பொழுது, மேலே இருக்கும் ஒன்றரை கிலோ சமாசாரத்தை கொஞ்சமாவது பயன்படுத்த வேண்டாம்?  செக்கு மாடுபோல அங்கேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

சிக்கலைத் தீர்க்கப் போகிறார்களா? இல்லை புதுசாக ஏதாவது சிக்கலை தோற்ற்விக்கலாமா என யோசிப்பார்களா தெரியவில்லை.


அரசாங்கத்தோடு பேசி புரியவைக்க இயலாது. என் பெயர் பலராமன் தான் என ஏற்றுக் கொண்டால், ரூ 101/- உண்டியலில் போடுவதாக வடிவழகியம்மனுக்கு வேண்டிக் கொண்டுள்ளேன். அது மட்டுமே இங்கு சாத்தியம்.

Friday, June 9, 2017

காஷ்மீருக்கு ஒரு பயணம் – இறுதிப் பகுதி.

மலைவழிப்பாதைகள் என்றுமே கவர்ச்சிக் கன்னிகள்தான்.  சலிக்காத காட்சிகள். ஆனாலும் ஸ்ரீநகரிலிருந்து பெஹல்காமிற்குச் செல்லும் வழி, ரசிக்கவைக்கும்.அடுத்துச் சொல்வதென் றால் சோனாமார்க்கிற்குச் செல்லும் வழி.

சோனாமார்க்கிற்குச் செல்லும் வழியெங்கும் உடன் கைபிடித்துக் கொண்டே வரும் நதி சிந்து.  வளைந்து நெளிந்து, மலையிடுக்குகளிலும் சமவெளிகளிலும் நளினமாக ஊர்ந்தும், பாய்ந்தும், சீறியும் உடன் வருகிறது. சோனாமார்கில் பார்க்க வேண்டுமெனில் ஆங்கே விரிந்து கிடக்கும் க்ளேசியரைச் சொல்வார்கள். என்னைக் கேட்டால் அந்த ஊருக்குச் செல்லும் வழியே பிரமாதம் என்பேன்.

சோனாமார்கின் அடிவாரத்தில் நாம் சென்ற வாகனத்தை நிறுத்திவிடுவார்கள். அங்கிருந்து ஆறு கிலோமீட்டர் மலைகளில் ஏறிச் சென்றால் மேற்சொன்ன க்ளேசியரைப் பார்க்கலாம். எப்பொழுதும் போல, க்ளேசியருக்கும் மேல் மலைக்கவைக்கும் பனிமூடிய சிகரங்கள்.

பிரச்சினை என்னவென்றால், காஷ்மீர் முழுவதும் நாம் அமர்த்தியிருக்கும் டாக்ஸியை மலை அடிவாரத்திலேயே நிறுத்திவிடுகிறார்கள். அதற்குமேல் செல்ல, உள்ளூர் டாக்ஸியைத்தான் நாட வேண்டும். அது யூனியன் விதியாம். அவர்கள் கூறும் கட்டணத்திற்கு GPFஅல்லது DCRGஓ தான் வாங்கனும். உதாரணமாக இந்த சோனா மார்கில் மேலே செல்ல வேண்டிய தூரத்திற்கு அவர்கள் கேட்கும் வாகணக் கட்டணம் ரூ 5000/- . அதுவும் முழு ஆறுகிலோ மீட்டர் தூரத்திற்கும் அல்ல; பாதியிலேயே (மூன்று கிலோ மீட்டர்) இறக்கிவிட்டு, பின் குதிரையிலோ அல்லது நடந்தோ போகச் சொல்லிவிடுவார்கள். குதிரைச் சவாரிக் கட்டணத்தைக் கேட்டால், குதிரையின் விலையைச் சொல்வார்கள். போதுமான காசு இருந்து மேலே போனால், ஸ்லெட்ஜ் கட்டணம் ஆயிரம் என்பார்கள். தலை சுற்றும்.

எனது Cab Driver,  நல்லவேளையாக கீழிருந்தே மேலே சென்று கீழேவர குதிரைக் கட்டணம் ரூ.1200/-க்கு அமர்த்திக் கொடுத்தார்.  நான் சென்ற குதிரை மீடியம் சைஸ். பார்ப்பதற்கு சாதுவாகத்தான் இருந்த்து. அதன் மேல் ஏறுவதும் இறங்குவதும் கடினமாக இல்லை. ஆனால் பிரச்சினை வேறுவடிவில் வந்தது. கற்களிலும், இடுக்குகளில் ஒற்றையடிப்பாதையில் புதுப்பெண்போல தலையைக் குனிந்துகொண்டு மெல்ல-மெல்ல சென்று கொண்டிருந்த குதிரை, திடீரென வான் நோக்கி அன்னாந்து, ‘ம்மஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ..’ என கனைத்தது.  குதிரையின் கூட  நடந்து வந்தவர், ‘கயிற்றை இறுகப் பிடிங்க..’ என ஹிந்தியில் அலற... அதை மொழிபெயர்த்து, எனது மூளை புரிந்துகொள்ளுவதற்குள், கன நேரத்தில். நான் பயணித்த குதிரை விருட்டென ஒரே பாய்ச்சலாம எதிரே வந்துகொண்டிருந்த ஒரு குதிரையை நோக்கிப் ஓடியது. இதை சற்றும் எதிர்பாராத நான் குதிரையிலிருந்து ......... வேண்டாம்; அது சோகக் கதை. 

இடுப்பைப் பிடித்துக்கொண்டு, பேண்ட் - சட்டையை சரிசெய்து கொண்டு, என்னவாயிற்று என விசாரித்தால், எதிரே வந்து கொண்டிருந்த குதிரை, இந்தக்குதிரையின் காதலி என்றார் குதிரை வாடகைதாரர். இடுப்பு வலி-வீக்கம் தீர கோட்டக்கல் ஆயுர்வைத்யசாலையில்  அப்பாயிண்மென்ட் கேட்டுள்ளேன்.

வழியெங்கும், இந்த இடத்தில்தான் ஷாருக்கான் பாட்டுப்பாடினார்..அமிதாப் சண்டைபோட்டார்.. மது டான்ஸ் ஆடினார் என, அவர் சொல்லிக் கொண்டே வந்தார். அவர் குஷி அவருக்கு; என் இடுப்பு வலி எனக்கு. 

அடுத்த நாள் பெஹல்காம்.

பெஹல்காமில் பார்ப்பதற்கு பத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. வழக்கம்போல அடிவாரத்திலேயே,  நான் வந்த டாக்ஸி நிறுத்தம். அதற்கும்மேல் பயணிக்க ஜி.பி.எஃப். 

அதிசயமாக இந்த இடத்தில் மட்டும் எந்தெந்த இடங்களுக்குச் செல்ல எவ்வளவு கட்டணம் என யூனியனில் வரையறுத்து, அறிவிப்புப்பலகையில் போட்டுள்ளனர். ரூ 1200 முதல் ரூ 5000 வரை கட்டணம் செல்கிறது.  கொடுக்கும் ரூபாய்க்கு ஏற்ப இடங்கள் காண்பிக்கப்படும். நான் மூன்று இடங்களைமட்டும் தேர்வு செய்தேன். சந்தன்வேலி, பேடாப் வேலி, அருவேலி. சர்க்கரை இனிக்கிறது என சொல்லவேண்டுமா என்ன? எல்லா இடங்களும் கண்கொள்ளாக் காட்சிகள். இதில் சந்தன் வேலி என்பது ‘அமர்நாத்’ யாத்திரை செல்வோரின் பேஸ்கேம்ப்.  இங்கிருந்து அமர்நாத் குகை வெறும் 30 கி.மீ தான்.  யாத்திரை செல்வோர் குதிரையில்தான் செல்ல வேண்டுமாம். 

டைகர் ஹில் (கார்கில் சண்டை நடந்த்தே... அந்த இடம்) வெகு அருகில்.  பெஹல்காமுற்குச் செல்வதாயிருந்தால், காலை எட்டு-ஒன்பது மணிக்கே சென்றுவிடுங்கள். இல்லையெனில் எல்லா இடங்களையும் கவர் செய்ய இயலாது.
வழியெங்கும் ஆப்பிள் தோட்டங்கள். மலைச் சரிவுகளில் வால்நட் (வாதுமைக் கொட்டை) மரங்கள், மேப்பிள் மற்றும் வில்லோ எனப்படும் கிரிக்கெட் பேட் செய்யப்பயன்படும் மரங்கள்.

கீழேகொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தொகுப்பைப் பாருங்கள்.

உபரியாக..
டூரிஸ்ட் ஆபரேட்டர்கள் சென்ஸிடிவான விஷயங்களை பேசுவதில்லை. மதம்..பாகிஸ்தான்..இந்தியா என எதிலும் தங்கள் கருத்தைச் சொல்வதில்லை. ஃப்ரொஃபஷனலஸ்.  நாமும் அப்படியே நடந்து கொள்ளவேண்டும். ஃபேஸ்புக்போலவே, வாட்ஸப்போலவோ நமது கருத்தை அந்தவினாடியே சொல்லியாகவேண்டும் என்ற உந்துதலுக்கு ஆட்படக்கூடாது.  வந்த வேலை ஊர்சுற்றிப் பார்ப்பது. அதைமட்டுமே கவனிக்கவேண்டும். டூரிஸ்ட்களுக்கு ஆபத்து ஏற்படாதவாறு கவனித்துக் கொள்கிறார்கள்.  நான் சென்ற படகுவீடு சாப்ரி குழுவினர் (9797111189) டிரைவர் அயூப் சாப்ரி (9906546016). இது ரெகமென்டேஷன் அல்ல. ஒரு தகவலாக மட்டுமே; நன்றாக பாதுகாப்பாக கவனித்துக் கொண்டனர் என்பதால். 

பொதுவாக இளைஞர்கள் மாநில-மத்திய அரசாங்கங்கள் மேல் அசாத்தியக் கோபத்தோடு இருக்கிறார்கள். தங்களுக்கு அவர்கள் துரோகம் இழைத்துவிட்டதாக நம்புகிறார்கள். வளர்ச்சித் திட்டங்கள் பல நடந்துகொண்டிருக்கின்றனதான். அவை அவர்களைத் திருப்தியுறச் செய்யவில்லை. வேலை வாய்ப்பு மிக அதிகம் வேண்டும் என விரும்புகிறார்கள். ‘பாக்’கும் வேண்டாம்-இந்தியாவும் வேண்டாம். விடுதலைதான் வேண்டும் என்பது பொதுவான அபிப்ராயம்.

பாதுகாப்புப் படைகள் உயிரைக் கொடுத்து கடமையாற்றுகிறார்கள். அவர்கள் மட்டும் இல்லையெனில்...... 

காஷ்மீருக்கான தீர்வு கண்ணுக்கெட்டிய தூரம்வரை அங்கே தென்படவில்லை.



Thursday, June 8, 2017

காஷ்மீருக்கு ஒரு பயணம் – பகுதி 3 – குல்மார்க்.

“நாளை குல்மார்க் போகிறோம். காலை 9 மணிக்கு ரோட் பாயிண்டுக்கு வந்துவிடுங்க. குல்மார்க்கை என்றென்னும் மறக்க மாட்டீங்க  பாருங்க..” புதிர்போட்டுவிட்டு, தால் ஏரிக்கரையில் விட்டுவிட்டுச் சென்றார் Cab driver அதுல். 

ஏற்கனவே திகட்டும் அளவு ஸ்ரீநகரையும் அதன் சுற்றுப்புறத்தையும் பார்த்துவிட்டபின், பின் எதுதான் நம்மை திக்கு முக்காட வைத்துவிடமுடியும் என்ற நினைவோடு,  சிறு படகு ஒன்றின் மூலம், படகுவீட்டிற்குப் போனேன்.

‘க்யா சாப்.. ஆஜ் கைசே ஹை?’ விசாரித்தார் படகுவீட்டின் ஓனர் சாப்ரி.  ஒவ்வொரு டூரிஸ்ட் ஸ்பாட்டிற்கு சென்று வந்ததும், அனைத்து காஷ்மீரிகளும் விசாரிக்கும் கேள்வி இது. இன்றைய தினம் எப்படி இருந்தது? எங்க காஷ்மீர் எப்படி இருக்கு?  அனுபவித்தீர்களா? இத்தகைய கேள்வியை எதிர்கொள்ளாத தினம் இல்லை. அந்த மாநிலம் குறித்து அவர்கட்கு அவ்வளவு பெருமை. ஆஹா... பிரமாதம் என்று பதிலுரைத்துவிட்டால், அவர்களுக்கு உச்சி குளிர்ந்து விடுகிறது. எத்துனை ஆயிரம் டூரிஸ்ட்களைப் பார்த்தி ருப்பார்கள். இதே கேள்வியைக் திரும்பத்திரும்ப கேட்பதற்கு அவர்கள் தயங்குவதே இல்லை.  கிடைக்கும் பதிலிலால் பெருமிதம் அடைவதிலும் அவர்கள் சலிப்பதே இல்லை.

சார்.. இன்னிக்கு ‘ஷிகாரா’ போய்விட்டுவாருங்கள். உங்களுக்காக ஷிகாரா இனாமா அளிக்கிறோம் என்றார் சாப்ரி.

அதென்ன ஷிகாரா? சிறுபடகொன்றில் ஏறிக்கொண்டு, விரிந்து பரந்திருக்கும் தால் ஏரியையும், தெரு அமைப்பது போல, வரிசைகட்டி நிற்கும் படகுக் கடைகளுக்கிடையே சுற்றிவருவதுதான் ஷிகாரா. மிதக்கும் போஸ்டாபீஸ், மிதக்கும் விதவிதமான கடைகள் என அனைத்தும்ஏரியினுள். படகுவீட்டிற்குவந்து ரிஃப்ரஷ் செய்துகொண்டு, ஷிகாராவிற்கு தயாரானேன். மாலை ஆறுமணிக்கு ஆரம்பித்த ஷிகாரா , இரவு எட்டுமணிவரை நீண்டது. வெனிஸ் கூட இவ்வளவு அழகாயிருக்க இயலுமா என்பது சந்தேகம். அங்கு கோடையில் இரவு எட்டு மணிக்குத்தான் சூரியன் மறைகிறான். அதுவரை படகுச் சவாரி. அருமையான அனுபவம். One cannot ask more. இது பற்றிய புகைப்படங்களை பகுதி 1 ல், பார்த்திருப்பீர்கள்.

இது ரம்ஜான் நோன்பு மாதம். விடியற்காலை முதல் இரவு வரை உண்ணமாட்டார்கள். அவர்கள் இவ்வாறு உண்ணா நோன்பிருக்கும்போது, நான் மட்டும் டிரைவரைப் பார்க்கவைத்துவிட்டு  உண்ணுவது எனக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே நான் அங்கிருந்த ஆறுதினங்களிலும் மதிய உணவை எடுத்துக் கொள்ளவில்லை. இந்த அப்ரோச் அவர்களுக்கு பிடித்துவிட்டது போல.  

தென்னிந்திய இட்லி-தோசை-பொங்கல்-சாம்பார்-வடைப் பிரியர்கள் வாயைக் கட்டிக் கொள்ளவேண்டும். எளிதில் கிடைக்காது. காலை போஹா எனப்படும் அவல் உப்புமாவின் கொடுங்கோலாட்சியை விரும்பாமல், ‘ப்ரெட்-வெண்ணை’ மட்டும் எடுத்துக் கொள்வதையும், இரவில் ‘சப்பாத்தி-தால்’ எடுத்துக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொண்டேன். கோதுமை எனக்கு ஒத்துவராது. க்ளூடமைன் அலர்ஜி..இரவு முழுவது நெஞ்செரிச்சல் வரும். ஆனால் வேறு தேர்வு இல்லை. ‘சாவல்’ (அரிசி சாதம்) உண்டு. சாதமும் சுவைக்காது..அதற்குத் துணையாக பொருந்தாத் திருமணம் போன்ற ‘தாலும்’ சுவைக்காது. எனவே ‘பெட்டர் ஈவில்’ ரொட்டிதான். உண்டுவிட்டு இரவு பத்து பன்னிரெண்டுவரை, காலை நீட்டிக்கொண்டு படகுவீட்டின் வராந்தாவில் நிலவையும், சிற்றலைகளையும், இரவில் மின்னிக் கொண்டிருக்கும் இதர படகுவீடுகளையும், எதிரே இருக்கும் சங்கராச்சார்யா குன்றையும் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு பிறகுதான் படுக்கை.

காலை சரியாக எட்டேமுக்காலுக்கே, டிரைவர் அதுல் அழைத்துவிடுவார். ‘சார் ரெடியா...?’

‘இதோ வந்துவிட்டேன்’ கிளம்பிவிடுவேன்.

குல்மார்க் நகரம்,  ஸ்ரீநகரிலிருந்து இரண்டுமணி நேரப் பயணம்.  வழியெங்கும் சிறிதும் பெரிதுமாக நிறைய ஊர்கள்.  Breathtaking என்று சொல்ல முடியாவிடினும் வழியெங்கும் அழகான காட்சிகள். குல்மார்கை  நெருங்க நெருங்க, காற்றில் குளுமை கூடிக்கொண்டே போனது. குல்மார்கில் அப்படி என்ன புதிதாக இருந்துவிடப் போகிறது என்ற அசுவாரஸ்யத்துடன் காரில் அமர்ந்திருந்தேன்.

ஒருவழியாக குல்மார்க் வநத்து. குல்மார்க் என்பது வென்பணி சூழ்ந்த மலைமுகடுகளைக் கொண்ட இடம். அவ்லான்ச் எனப்படும் பனிச்சரிவின் காரணமாக பாதிமலைவரை விரிந்து பரந்திருக்கும் வெண்பனி (Snow) போர்த்திய பரப்புகள். அந்த இடத்திற்குச் செல்ல கேபிள் கார்கள் அமைத்திருக்கிறார்கள். 

 இந்த கேபிள் கார்களை, ‘இரண்டு ஸ்டேஜாக’ வைத்திருக்கி றார்கள். முதல் ஸ்டேஜ் 8000 அடிகள் உயரத்திற்குச் செல்லும். 700 ரூபாய் கட்டணம். அடுத்த ஸ்டேஜுக்குச் செல்ல வேறு ஒரு கேபிள்கார். அது 14000 அடி உயரம் வரை தூக்கிச் செல்லும். 900 ரூபாய் கட்டணம்.  இரண்டிற்கும் சேர்த்து அடிவாரத்திலேயே டிக்கட் வாங்கிக் கொள்ளலாம். 1600 கொடுத்து டிக்கட் வாங்கிக் கொண்டேன். நல்ல வேளையாக, உடன் வந்த கைடிற்கு டிக்கட் வேண்டாம் என்று அறிவித்துள்ளார்கள்.  குல்மார்கை அவர்கள், காஷ்மீரியில் ‘குலுமரே’ என்கிறார்கள். எப்படியாவது சொல்லிக் கொள்ளட்டும். A rose is a rose is a rose is rose.

பெரும்பாலான ஆட்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். மைல்கற்கள், கடைகளின் நேம்போர்டுகள், அறிவுப்புகள் யாவும் ஆங்கிலம் மற்றும் உருதுவில்தான். இந்தி இல்லை. இதே காட்சியை ஒரிஸாவிலும் கண்டேன். அங்கே ஒரியா மற்றும் ஆங்கிலம். இங்கே இந்தி தெரியாவிடினும் சமாளித்துக் கொள்ளலாம். என்ன.. அவர்களது அக்ஸென்டை புரிந்துகொள்ள நிதானிக்க வேண்டியிருக்கிறது. மிலுக்கு என்றால் மில்க். இஸ்ஸலெட்ஜு என்றால் ஸ்லெட்ஜ். ஹாரஸு என்றால் ஹார்ஸ் (Horse).  இந்த அக்ஸென்ட் விளங்காமல் சற்று நேரம் விழிக்க வேண்டியிருந்தது.  

முதல் ஸ்டேஜுக்குச் செல்வதற்கான கேபிள்காரில் ஏறிக்கொண்டேன்.  ஜிவ்வென வேகமெடுத்து நம்மை ஏந்திச் சென்ற கணங்களில், கீழே பார்க்க வேண்டுமே... அடாடா.. என்ற ஒரு காட்சி! ஓவியன் வரைந்துவைத்தது போல விரிந்துகொண்டேயிருக்கும் ஓவியங்கள். காஷ்மீர் சால்வைகள் செய்ய பயன்படும் ஷீப் என்னும் ஆட்டுக்கூட்டம், ஆயிரக்கணக்கில் மேய்ந்து கொண்டிருந்தன.  ஆங்காங்கே மேய்ப்பர்களின் குடியிருப்புகள்.  சற்று நேரத்திலேயே பச்சைநிற காட்சிகள் மறையத் தொடங்கியது. பின் காலின் அடியில் கண்கள் கூசும் வெள்ளை நிறப்பனிச்சரிவுகள். வின்முட்டும் சிகரங்கள். டிஸ்கவரி சேனலில் மட்டுமே பார்த்திருக்கும் அவலான்சுகளும் வெண்மலைகளும், வின்முட்டும் சிகரங்களும் 70 MM ஸ்க்ரீன் போல விரிந்தது.  அடாடா... மனிதக் கண்கள் அதிகபட்சம் 120 டிகிரிமட்டும் பார்க்கும்படி ஆண்டவன் அமைத்துவிட்டானே? 360 டிகிரியும் பார்க்கும்படி அமைத்திருக்கக் கூடாதா என ஏங்க வைக்கும் காட்சிகள். அவற்றை வர்ணிக்கவார்த்தைகள் போதாது.

‘இதுக்கே மலைச்சுப்போயிட்டீங்கன்னா.. இரண்டாவது கேபிள் கார்ப் பயணம் இருக்கே என்ன செய்வீர்கள்?’ என இன்னும் ஒருகிலோ திருநெல்வேலி அல்வாவைத் தூக்கிப் போட்டார் கைடு.என்ன சொல்ல? வாய்பிளக்க, கண்கள் கொள்ளுமளவு காட்சிகளை உள்வாங்கிக்கொள்ளலாம்.. அவ்வளவே!

முதல் கேபிள்கார் தன் பயணத்தை முடித்துகொண்டது. இரண்டாவது கேபிளுக்குள் செல்வதற்கு முன்னாக, இந்த இடத்தில் உள்ள இயற்கை நீரூற்றுகளையும் ஒரு அருவியையும் இயற்கைக் காட்சிகளையும் காணலாமா என்றார் கைடு. ‘வேண்டாம்.. திரும்பவரும்போது பார்த்துக் கொள்ளலாம்..’ என அவசரமாக மறுத்தேன். திரும்ப வரும்போது அவற்றைப் பார்த்தும் விட்டேன்.

இரண்டாவது கேபிள், புதிய உயரங்களுக்குத் தூக்கிச் சென்றது. எங்கும் பனிப் பிரதேசங்கள். ‘ரோஜா’  நாயகி, ஆச்சர்யத்துடன் பார்த்தது போல பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டாவது கேபிள் பயணமுடிவில், ஒரு மலையின் பள்ளத்தாக்கில் நின்றுகொண்டிருந்தோம்.

சொற்பமாகவே கூட்டம். சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பனிப்பிரதேசம் இரண்டு ச.கிலோமீட்டர் பரப்பளவுள்ள பனிச்சரிவு. அதில் பாதிதூரம் வரை ஸ்பெஷல் பூட்ஸ் அணிந்துகொண்டு நடந்தும் செல்லலாம்  அல்லது ஸ்லெட்ஜ் எனப்படும் ஒரு பலகையில் அமர்ந்து கொண்டால் இருவர் இழுத்துச் செல்கிறார்கள்; அப்படியும் செல்லலாம். 
பாதி தூரத்தை எட்டியபின், ஸ்லெட்ஜ் முடிந்து,  ‘ஸ்கீயிங்’ எனப்படும் பனிச்சரிவிற்கான ஸ்னோபோர்டுகளில் பயணித்து மீதி தூரத்தைப் அனுபவிக்கலாம். ஒன்றும் வேண்டாம் எனில் சும்மா  நின்றுகொண்டு, அன்னாந்து   வேடிக்கை பார்க்கலாம். 

நான் எந்த வாய்ப்பையும் விட்டுவிடத் தயாரில்லை.
சாதாரண ஷூ வேலைக்கு ஆகவில்லை. பத்தடி ஏறியதும் இருபதடி சறுக்கியது. மூச்சு வாங்கியது. இங்கே ஆக்ஸிஜன் குறைவு என்றார் உடன் வந்தவர்.  ஏன் ரிஸ்க் என, ஸ்லெட்ஜ்க்கு சொல்லிவிட்டேன். உட்காரவைத்து இழுத்துச் சென்றார்கள். அப்படியும் ஓரிடத்தில் குட்டிக்கரணம் அடித்தேன்.  நல்லவேளையாக உடனே தூக்கிவிட்டார்கள்.
பனித்துகள்களை அள்ளியெடுத்து விளையாடலாம். விவரம் புரியாமல், வெகுநேரம் ஸ்னோவை வெறும்கைகளால்  அள்ளிவைத்து விளையாடியதால், விரல் நுனியொன்றில் ‘ஸ்னோபைட்’ ஏற்பட்டுவிட்டது.

அடுத்து ஸ்கீயிங்!  தனியாகவா அல்லது கூட ஆள் வரட்டுமா என்றார்கள். அங்கே தனியாக யாரையும் விடுவதில்லை என்பது வேறுவிஷயம். சற்றே சறுக்கினாலும் 5000 அடி பள்ளம். எலும்புகூடத் தேறாது. ஃப்ரொஃபெஷனல் ஒருவரின் ஸ்னோபேடில் நானும் ஏறிக்கொண்டு வளைந்து நெளிந்து அந்த ஏரியா முழுவதும் சறுக்கிவிளையாடினேன். என்ன ஒரு அனுபவம்? ஆஹா...

எச்சரிக்கை. 1. இங்கே  தயக்கமின்றி பேரம் பேசவேண்டும். அவர்கள் இஷ்டத்திற்கு கூலி கேட்கிறார்கள். 2. என்னைப்போல அனைத்திலும் விளையாட வேண்டுமென ஆர்வமிருந்தால் தேவையான க்ளவுஸ், கம் பூட்ஸ் அணிந்து கொள்ளவேண்டும்.இவை வாடகைக்குகிடைக்கும். குளிர்தாங்காது எனில் தரமான ஸ்வெட்டர் அவசியம்.  என்னைப்போல ஒரு சாதா ஷூவும், சாதா ஸ்வெட்டரும், க்ளவுஸ் இல்லாமலும் போனால், அகப்பட்டீர்கள். இவை இல்லாமலும் போகலாம். சும்மா வேடிக்கை பார்க்கலாம். அவ்வளவே.

சிம்லா, ரொடாங் பாஸ் என பல இடங்களில் வெண்பனியினைக் கண்டிருந்தாலும் குல்மார்கின் அழகே அழகு. LoC is near to this hill.

இந்த அத்தியாயத்தோடு காஷ்மீர் பயண அனுபவத்தை முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் இதுவே நீண்டுவிட்டது.  அடுத்த அத்தியாயத்தோடு (அதில் சோனாமார்க் மற்றும் பெஹல்காம் பற்றி எழுதுவேன்) முடித்துக் கொள்வேண். உறுதியாக J.


Click here to view some Photo Collections 




Hazrathbal Mosque (Courtesy - net)