Friday, September 25, 2015

முந்திச் செல்வோம்....

சில வருடங்களுக்கு முன்னால், சபரிமலைக்குச் சென்றிருந்த பொழுது, சன்னிதானத்திற்கு நுழைவதற்கு முன்னால், எல்லாக் கோயில்களையும் போல, வளைந்து-வளைந்து செல்லும் இரும்புக் கிராதிகள் போட்டு வைத்திருந்தார்கள். இப்பொழுதும் அப்படியே! அதுசமயம், பகல் 11 மணியிருக்கும். கூட்டம் அவ்வளவாக இல்லை. ஒரு நபர், கிராதிகளுக் கிடையே புகுந்து முன்னேற, அதைப் பார்த்துவிட்ட ஒரு போலீஸ்காரர், அவரை உதைத்து வெளியேற்றினார். ஆனால், நீல வேட்டி உடுத்திக் கொண்டு, பூஜை சாமன்களையும் வைத்துக்கொண்டு உதை வாங்கியதை, அந்த நபர், ஒரு பொருட்டாகவே  நினைக்கவில்லை.

(இரும்புக் கிராதிகளின் இடையே நின்று கொண்டிருக்கும் எதேனும் ஒரு பக்தருக்கு, அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அவரை உடனடியாக வெளியே கொண்டுவருவது கூட இயலும் காரியம் இல்லை. திருப்பதி கூண்டுகளிலும் அப்படித்தான். கூண்டுகளுக்குள்ளும் உதவி வரும்.. தாமதமாக. அதற்குள் அவர் உயிர் பிழைத்திருக்க ஆண்டவன் அருள வேண்டும்.)

சென்றவாரம் பெங்களூர் சென்றிருந்த போது, போக்குவரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். ஆம்புலன்ஸின் சைரன் ஒலித்துக் கொண்டே இருந்தது, 20 நிமிடங்களாக. உள்ளுக்குள் இருக்கும் நோயாளி என்ன ஆனாரோ தெரியவில்லை. எவரும் ஒதுங்குவதாகவோ, வழிவிடுவதாகவோ தெரியவில்லை. பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் உலகப் பிரசித்தம். இரண்டு கிலோமீட்டர் தொலைவே உள்ள ஒரு இடத்தை அடைய 10 நிமிடம் ஆனாலும் ஆகும், மூன்று மணி நேரம் ஆனாலும் ஆகும். அன்பிரடிக்டபிள் டிராஃபிக். ஆம்புலன்ஸின் சைரன் குறித்து எவருக்கும் எந்த பதற்றமும் இல்லை. சாவதனமாக டிராஃபிக் ஊர்ந்து கொண்டிருந்தது. ஏர் லிஃப்டிங் எல்லாம் கனவுதான். 

சென்ற வருடம் ராமேஸ்வரம் சென்றிருந்தேன். அங்குள்ள 22 நாழிக் கிணறுகளில் குளிப்பதற்காக வரிசையில் சென்று கொண்டிருந்த பொழுது, ஒரு தெலுங்கு ஆசாமி எகிறிக் குதித்து, முன்னே போய் கிணற்றின் மேல் நின்று கொண்டு, தீர்த்தம் ஊற்றிக் கொண்டிருப்பவர் முன் தலையை நீட்டினார். தீர்த்தம் ஊற்றிக் கொண்டிருந்தவர், இந்த நபர் வரிசை தாண்டி வந்ததைக் கண்டு எரிச்சலாகி, ‘பக்கட்டாலேயே’ அவரை ஒரு மொத்து மொத்தினார். அடி வாங்கியவர் அதைப் பற்றி கவலையே படாமல், ‘அடியுடன்’ கூட, கொஞ்சமாக கிடைத்த தீர்த்தத்தை பெற்றுக் கொண்டு, அடுத்த கிணற்றிற்கு பாய்ந்தார்.

2011-ல், சபரிமலையில், ஜனவரி 14 அன்று நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

கும்பமேளாக்களில் நெரிசல் சாவு சகஜம்.

தற்போது, ஹஜ் பயணத்தில், ஜன நெருக்கடியில் சிக்கிக் கொண்டு  பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வளவு கூட்டம் வரக்கூடும் என்பதை எதிர்பார்த்து, அடிப்படை வசதிகள் செய்து தருவதில் அரசு தரப்பில் சுணக்கம், நெரிசல் இறப்புகள் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.

ஆனால், உதாரணத்திற்காக மேற்சொன்ன சம்பவங்கள் யாவற்றிலும், தான் ‘எப்படியாவது தான் முதலில் சென்றுவிடவேண்டும்’ என்ற நமது மனோபாவம் முக்கிய காரணமாகிறது.

எவ்வளவு கூட்டம் இருந்தாலும், மற்றெல்லோரையும் தள்ளிவிட்டு, ‘முந்திச் சென்று’ சடங்குகளை முடித்துவிடும் அவசரம் / தெய்வ தரிசனம் செய்துகொள்ளும் அவசரம் இல்லாமலிருந்தால், பல துயர சம்பவங்களை தவிர்த்து இருக்கலாம். பல சமயங்களில் வெறும் வதந்தி கூட  நெரிசலை தோற்றுவித்து, பலர் உயிர் இழக்க காரணமாகியிருக்கிறது.

துரதர்ஷடவசமாக ‘சுய ஒழுங்கு’  நம்மிடையே அருகிக் கொண்டே இருக்கிறது.  தனி நபராக ஒழுங்காக செயல்படும் சிலர், கூட்டமாகிவிடும் பொழுது, எப்படியாகிலும் ‘முந்திச் செல்லும்’ மனோபாவத்தை பெற்றுவிடுவதை விட்டொழிக்க முடியவில்லை.

லேன்ட் ஆகியதுமே, கேபினிலிருந்து ஹேண்ட் லக்கேஜ்களை ஏன் உருவ வேண்டும்? இடித்து பிடித்து கதவருகே கலவரம் ஆவதேன்? எல்லோரும் இறங்கியபின், மீண்டும் ஆட்களை ஏற்றிக்கொண்டு தானே டேக்ஆஃப் ஆகும்?

டெர்மினல்  ஸ்டேஷன் என்று தெரிந்தாலும், ரயிலை விட்டு இறங்க கதவருகே எல்லா லக்கேஜ்களையும் அடுக்கி ஏன் வழிமறிக்கனும்?

பெங்களூர் போல கனத்த போக்கு வரத்து நகரமாக இருந்தாலும் கூட, வாகன ஓட்டிகள், ஒழுங்கைக் கடைப்பிடித்தால், இவ்வளவு சிரமம் ஏற்படாதல்லவா? அவரவர் அவரவர் லேன்களில் சென்று கொண்டி ருந்தாலே கனிசமாக நெருக்கடி குறையுமே? இது எல்லோருக்கும் தெரிந்தும்கூட ஏன் கடைபிடிக்க மறுக்கிறோம்?

தனிநபராக, நிதானமாக-ஒழுங்காக இருப்பது நிஜமா இல்லை கூட்டத்தில் அடித்துப் பிடித்து ஓடுவது நிஜமா? எது ஒரிஜினல் குணாதிசயம்?
சமுதாயமாக, நமது சைக்காலஜியை மாற்ற ஏதேனும் வழி இருக்கிறதா எனத் தெரியவில்லை.

சக பிரயாணிமேல், சக யாத்ரீகர்கள் மேல் நாம் கொள்ளும் அக்கறை, வேறெந்த மதச் சடங்குகளையும் விட ‘புன்னியமானதே’. சக மனிதனை நேசிக்கத் துவங்கிவிட்டோமானால்,  நாட்டில் அமைதியே நிலவும்.

சட்டம் ஒழுங்கை பராமரிப்பவர்களாவது க்ரௌட் சைகாலஜியைப் புரிந்து கொண்டால் நல்லது.


Wednesday, September 23, 2015

கூட்டத்தினின்றும் தனியே! (Odd Man out!)

நமக்கு சம்பந்தமில்லாத ஒரு மீட்டிங்கில் சிக்கிக்கொள்வதும் ஒரு சுவாரஸ்யம்தான், அறிமுகமில்லாத ஊரில், வழிதவறிப்போவது போல.

சென்றவாரம் பெங்களூர் சென்றிருந்தபொழுது, தொழிலதிபரும், எனது நண்பருமான ஒருவர், BNI (Business Network International)  மீட்டிங்கிற்கு வருகிறீர்களா என்றார். இந்த அமைப்பைப் பற்றி கிஞ்சித்தும்

அறிந்திலேனெனினும், இது தொழில் முனைவோரின் கூட்டமைப்பாக இருக்கக் கூடும் என்பது பெயரிலிருந்து விளங்கியது. நுகர்வோரில்


ஒருவனாகிய என்னை, தொழில் முனைவோரின் அமைப்பிற்கு அழைத்தற்கு காரணம் என்னவாக இருக்கக் கூடும் என விளங்கவில்லை. ஒருவேளை, வாரம் ஒருவரை ‘அறிமுகம்’ செய்தாக வேண்டும் என்ற சிடுக்கில் மாட்டிக்கொண்டுள்ளாரோ என்றால், அப்படியும் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அழைத்தவர் பிக் ஷாட். ஒருவேளை, 'வாடிக்கையாளரே கடவுள்' என்ற வாசகத்திற்கு பொருள் கொடுக்க வேண்டி, அழைத்திருப்பாரோ?

எப்பொழுதும் போல, எனது ‘டிரேட்மார்க் குர்த்தாவை’ ,இந்த மீட்டிங்கிற்கும் அனிந்துகொள்ள யத்தனித்தபொழுது, எனது அண்ணன் மகள் ஆட்சேபித்தார். “சித்தப்பா.. Formal உடை உடுத்திக்கொண்டுதான் போகணும், இந்த குர்தா.. கிர்தா வெல்லாம் போட்டுக் கொண்டு போகக் கூடாது..“ என்றார். அடாடா.. ஆரம்பமே சரியில்லையே..!! ‘குர்தா – ஜீன்ஸ்’ Formal இல்லையெனில் வேறு என்ன உடுத்திக் கொள்ளனும்? அவர்கள் என்ன Dress Code வைத்திருக்கிறார்கள் எனப் புரியவில்லையே? இது என்ன தொழிற்சங்க மீட்டிங்கா என்ன, point of order  எழுப்பி, ஆட்சேபிப்பதற்கு?

அந்த காலத்தில், மாப்பிள்ளை அழைப்பிற்கு, மணமகன்  ‘கோட்’ அனிந்தாகனும் என ஒரு ‘டிரஸ் ஒழுங்கு’ இருந்தது. மாப்பிள்ளைவாள், அன்று கோட் அணிந்தபின் இந்த ஜென்மத்தில் இன்னொரு முறை அணியக்கூடாது என்பது மத்யதர வர்க்கத்தின் Code. அந்த உடை, கரப்பான்பூச்சிக்கோ, வண்டுகளுக்கோதான் பயன்படனும்.

ஆனானப்பட்ட உலக மகா கோடீஸ்வர கடவுள், வெங்கடாஜலபதியே, Dress Code வைத்துக் கொண்டு  எல்லோரையும், வேட்டி-புடவையில்தான் வரணும் என சட்டமியற்றும் பொழுது, உள்ளூர் மானுட பணக்காரர்கள் சட்டமியற்றுவதில் தவறொன்றும் இல்லையே? கோயில்களுக்கான ‘உடை ஒழுங்கில்’ கேரளம் பரவாயில்லை எனத் தோன்றியது. அங்கு மேலே சட்டையே போடக் கூடாது! செலவில்லாத இறைவன் கொடுத்த உடையே போதுமானது!

என்ன...., அடுத்தவர் உடல் மேலே பட்டால் கொஞ்சம் அருவருப்பு ஏற்படும், அவ்வளவே!

சரி... நமது கவலைக்கு வருவோம். சூட்கேசைக் குடைந்து, ஒரு சட்டையை எடுத்துக் கொடுத்தார் மகள். உடுத்திக் கொண்டு ‘பிஸினஸ்’ செய்யக் கிளம்பியாயிற்று!

கூட்டம் நடக்கவிருந்தது, ஒரு மூன்று ஸ்டார் அந்துள்ள ஹோட்டல் போலிருந்தது. கான்ஃப்ரன்ஸ் அறைக்குள் நுழையும் முன்பே, வழி மறித்தார் பதிவாளர் ஒருவர். "உங்களது பெயர், தொழில் சொல்ல முடியுமா, பதிவேற்றனும்."

பெயர் சொன்னேன்.

தொழில் ‘கதையடிப்பதுதான்’ என்றேன், ‘அஸ்வத்தாமா என்ற யானை‘ என்பது போல மெலிதாக.. ‘Pardon me Sir…’ என்றார். சீரியஸான இடத்தில் ஜோக்கடித்தால் எப்படி?

‘தொழில் என்று, ஒன்றும் இல்லை’

பின் ஏன் வந்தாய் என்பது போலப் பார்த்தார்’

‘பிஸினஸ் கார்டு தர்ரீங்களா...’

விசிட்டிங் கார்டு பையில் இருந்ததுதான். அதில் அவருக்குப் பயன்படும்படியான தகவல் ஒன்றும் இல்லாததினால், ‘கார்டு இல்லை’ என்றேன். பூச்சியைப் பார்ப்பது போலப் பார்த்தார் பதிவாளர். முகத்தில் ஐயம் தொற்றிக் கொண்டது. அவர் தோளில் வாத்ஸல்யமாய் கையை வைத்து, ‘டோன்ட் வொர்ரி ஜென்ட்ல்மேன்.. ஐயாம் ஜஸ்ட் ஆன் அப்ஸர்வர்.. எ ஃப்யூட்சர் பிஸினஸ் மேன், ... காட் இட்? .. ஓகே.. நௌ?’ என அமைதிப் படுத்த, மனிதர் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.

‘ஐநூறு ரூபாய், ரிஜிஸ்ட்ரேஷன் ஃபீஸ் ப்ளீஸ்...’

இனி அரங்கிக்குற்குள் போவோம்.

எடுத்த எடுப்பிலேயே, தங்களது ‘மோட்டோ’ என்ன, என்பதை ஐயம் திரிபர தெளிவாக்கி விடுகிறார்கள். ‘வி வான்ட் டு மேக் மோர் மணி...’ இன்னும் அதிகமாக பணம் சம்பாதிக்கனும்.

அங்கு, அன்று, கவனித்தவரை நடுத்தர தொழில் முனைவோர், வாரம் ஒருமுறை கூடி, தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுவதற்கான  அமைப்பு இது. ஐநூறு கோடி, ஆயிரம் கோடி முதலீடு செய்யும் ஆட்களை இங்கு பார்க்க முடியவில்லை. ஐம்பது கோடிக்குள்ளான முதலீட்டுடன் தொழில் துவங்குபவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

உதாரணமாக, ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்பவர்கள் (DLF எல்லாம் வரமாட்டார்கள்) என வைத்துக் கொள்வோம். அவருக்கு, இன்டீரியர், எலக்ட்ரிகல், ப்ளம்பரிங்க் சேவைகள் தேவை. அவருக்கு, விளம்பரத்திற்கு, வெப் டிசைனிங் செய்பவரும் தேவை. அக்கவுன்டிங் ஸ்பெஷலிஸ்ட் தேவை.. இன்ஸ்யூரன்ஸ் ஆட்கள் தேவை. இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒரே கூரையின் கீழ் அறிமுகமாகிக் கொண்டு, ஒருவருக்கொருவர், பொறுப்புடன்,  தொழிலில் உதவி செய்து கொள்கிறார்கள். விதவிதமான ஆட்கள் ஒன்று கூடி ஒருவர் மற்றொருவரின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, தங்களின் தொழிலையும் அபிவிருத்தி செய்து கொள்கிறார்கள். 'Camaraderie' என்பது இவர்களுக்குள் உண்மையாகவே இருக்கிறது. தொழில் என்றாலே போட்டியும் பொறாமையும்தான் என்பதை மாற்றுகிறார்கள். 

மற்றவர்களால் வழங்கப்படும் வாய்ப்பை இவர்கள் referrals என்கிறார்கள்.

கூடியிருக்கும் அத்துனை பேரும், புது முகங்கள் உட்பட, தங்களை, தங்களது தொழில் பற்றிய அறிமுகத்தை பதினைந்து வினாடிக்குள் முடித்துக் கொள்கிறார்கள். குறிப்பெடுத்துக் கொண்டு, கடைசியில் தொழில் வாய்ப்புக்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள். ரெஃப்ரல்கள், நடைமுறைப் படுத்தப்பட்டு, பிஸினஸ் நடந்துவிட்டால், அதற்கான நன்றியும் தெரிவிக்கிறார்கள். நடுவில், தொழில் நுணுக்கங்களைப் பற்றிய ஒரு சிறு, சிறப்பு உரையும் உண்டு.

நல்ல நடைமுறைதான். தொழில்முனைவோருக்கான ஒரு நல்ல என்ட்ரி பாயின்ட் இது.

எப்பொழுதும் போல, வலையில் ‘ஏன் BMI – ல் சேரணும்’ என கதறிக் கொண்டு ஒரு கோஷ்டியும், ‘ஏன் சேர வேண்டாம்’ என புலம்பிக் கொண்டு ஒரு கோஷ்டியும் இருக்கிறது.


மிக-மிக பெரிய தொழில் முனைவோருக்கு இந்த அமைப்பு தேவையில்லை. சேர்ந்தால் ஒரு Burden ஆகிவிடும். மற்றவர்களுக்கு ஏற்றதே! 

Sunday, September 13, 2015

மீண்டும் வாழ்ந்தால்…

வெளியூருக்குச் சென்றுவிட்டு வந்த எனது நன்பர் ஒருவர், தனது அனுபவங்களை எப்பொழுதும் போல பகிர்ந்து கொண்டார். சென்ற இடத்தில் தனது பேரக் குழந்தையையும் பார்த்துவிட்டு வந்ததாகச் சொன்னார். பொடியனுக்கு இரண்டு வயது கூட நிரம்பி யிருக்காது. எல்லா குழந்தைகளையும் போல, தாத்தா ஊருக்கு கிளம்பும்போது அழுது, ஆர்பாட்டம் செய்திருக்கிறான். குழந்தையின் தாய், நீங்க கிளம்புங்க.... வீட்டுக்குள் போனால் சரியாகிடுவான் என்றிருக்கிறார். அப்படித்தான் நடந்திருக்கிறது. எனக்கும் இப்படிப்பட்ட அனுபவம் நிறையவே நிகழ்ந்திருக்கிறது என்றாலும், வீட்டிற்குள் சென்றதும் சடுதியில் தனது ‘மூடை (Mood)’ மாற்றிக் கொண்ட அந்த சிசுவின் மனோபாவம் இப்பொழுது வசீகரிக்கிறது, யோசிக்க வைக்கிறது. குழந்தைகளின் துக்கமும், அழுகையும் Carry forward ஆவதில்லை போலும். அந்தந்த கணத்தில் வாழ்ந்து தீர்த்து விடுகின்றனர்.

உண்மைதான். பாலகர்களிடமிருந்து நாம் (குறிப்பாக பெரியவர்கள்) கற்றுக் கொள்ள ஏராளமிருக்கிறது. சிறுவர்கள் சிரிப்பதற்கும் ஆனந்தமாய் இருப்பதற்கும் வெளிக்காரணம் ஏதும் தேவையில்லை. அவர்களின் இயல்பான நிலையே சந்தோஷமும் சிரிப்பும்தான். அவர்கள் நம்மைவிட தைரியமாகவும், தீவீரமாகவும் வாழ்வது புரிகிறது. நாமும் அப்படித்தானே சிறுவயதில் இருந்திருப்போம்? ஆனந்தத்தில் திளைக்கும் அந்த மனோ நிலை, வயது ஏற-ஏற மாறிப்போய், சிடுமூஞ்சிகளாக மாறிவிட்டோம். நாளில் ஒருமுறையாவது ஆனந்தமா யிருக்கிறோமா, சிரிக்கிறோமா என்றால், தலையைச் சொரிய வேண்டியதாய் இருக்கிறது.

அவர்களிடமிருந்து என்னவெல்லாம் கற்றுக் கொள்ளலாம்?

ஒவ்வொரு நாளும் - புத்தம் புதியகாலை:

அவர்கள் ஒவ்வொருதினத்தையும் புத்தம் புதிதாகத் துவக்குகிறார்கள். அடுத்த தினத்திற்கு ‘அனுபவிப்பதற்காக’ துயரங்களை மூட்டை கட்டி வைப்பதில்லை. புதிய நன்பர்கள், புதிய விஷயங்கள், புதிய அட்வென்ட்சர்கள்... எதற்கும் தயங்குவதில்லை.. நாம் செக்க்ஷன் டிரேன்ஸ்ஃப்ர் போட்டால் கூட, புதிய விஷயங்களைக் கண்டு அஞ்சுகிறோம். புத்ய டெக்னாலஜியைக் கண்டு அஞ்சுகிறோம். கையாள முடியுமா என ஆரம்பத்திலேயே சந்தேகம் வந்துவிடுகிறது. அவர்களுக்கு எல்லாமே ஒரு வாய்ப்பாகக் காணுகிறார்கள். கம்ப்யூட்டர்களையும்-பேக்கேஜ்களையும் பெரியவர்கள் கையாளத் தயங்குவதன் காரணம் இதுதான்.


க்ரியேடிவிட்டி:

அவர்களது படைப்பாற்றல் இயல்பானது, அவர்கள் அதை அனுபவித்துச் செய்து, மகிழ்கிறார்கள். அந்தப் பணியில் தங்களை மறந்து இயங்குகிறார்கள். நாம் வயது கூடக்கூட, கிரியேடிவிட்டியை மறந்து தேக்கமடைந்து விடுகிறோம். 65 வயதில் கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும் போது, ஆர்வத்தைவிட பயமே மேலிடுவதால், எதுவும் நடைபெறுவதில்லை. குழந்தைகளிடம் ஆர்வம் மட்டுமே மேலிடுவதால், மென்டல் ஃப்ளாக்கேடுகள் இல்லை.

அஞ்சுவதில்லை:

நமது உறுதிக்கும் தைரியத்திற்கு ஏற்றாற்போலவே வாழ்க்கையும் விருந்து சுருங்குகிறது என்கிறார் ஒருவர். குழந்தைகள் கீழே விழுவதையோ, மோதிக்கொள்வதையோ, தவறிழைப்பதையோ ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. வெற்றிபெரும்வரை
அவை விடாது. அப்படியே ஜெயிக்காவிட்டாலும் கவலையில்லை. ஆனால், நமக்கு நம் தோல்விகள்மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது; பின் எப்படி வெல்வது?

அவர்கள் சிரிக்கிறார்கள்.

சிரிப்பற்ற ஒவ்வொரு தினமும் வீணாக்கப்பட்ட தினங்களே என்கிறார் சார்லி சாப்ளின். குழந்தைகள் சிரிப்பதற்கு யோசிப்பதே இல்லை. அது பார்க்கோ, பார்டியோ, பள்ளியோ, அவர்கள் சிரிப்பதற்கு காரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நமக்கு
நாசூக்கு,கௌரவம்,இடம்,பொருள் எல்லம் தேவைப்படுகிறதே?

சுறுசுறுப்பு:

அப்பொழுதான் பள்ளியிலிருந்து வந்திருப்பார்கள். “போய்த் தெருவில் விளையாடிவிட்டு வா” என்ற ஒரு வார்த்தை போதும். சிட்டாக பறந்துவிடுவார்கள் (நகர குழந்தைகள் இதில் கணக்கில் வராது) எனக்கு டயர்டாக இருக்கு என்ற வார்த்தை அவர்களிடமிருந்து வராது. நமக்கு ‘ஆபீஸுக்கு’ போய்விட்டு வந்தாலே ஓய்ந்துவிடுவோம். பலருக்கு ஆபீஸ்
நேரம்போக மீதி நேரத்தில் கனிசமான பகுதி படுக்கையில்தான். ரெக்ரியேஷன் என்பது வேறுவேலை செய்வதுதானே தவிர, படுத்துக் கிடப்பது அல்லவே! இனிமேல் தவறாது உடற்பயிற்சி செய்தாகனும் என வாரத்தில் ஏழு நாளும் தீர்மாணம் செய்தாலும் ஒன்றும் நடக்காது.

இயல்பான நட்பு:

குழந்தைகள் நட்புக்கு ‘ நன்பர்கள் ‘ வேண்டும் அவ்வளவே! அனுபவி ராஜா..அனுபவிதான். நமக்கு நன்பர்கள் என்றால், ஸ்டேடஸ் வேணும், ஈகோ அனுமதிக்கனும், ‘நான் உன்னைவிட ஏதாவது ஒருவிதத்தில், (அறிவில், அனுபவத்தில்,
செல்வத்தில், கௌரவத்தில்) ‘உயர்வானவன்’ என நிரூபித்தாக வேண்டும். நமக்கே ஆமாஞ்சாமி போடனும். எங்கே நட்பை அனுபவிப்பது?

ஈகோ அற்ற ஹீரோ:

குழந்தைகளின் பள்ளிக் கதைகளைக் கேட்டுப் பாருங்கள். எல்லாக் கதைகளிலும் அவர்கள்தான் ஹீரோவாக இருப்பார்கள். கதையே அவர்களைச் சுற்றி இருந்தாலும், அதில் ‘அகந்தை’ இருக்காது. என்னால் ‘இந்த வயதில் என்ன முடியும்’ என்ற புலம்பலில்தான் நம் கதையையே ஆரம்பிப்போம். அப்படியே ஏதேனும் சாகஸம் செய்துவிட்டால், கூடவே அடுத்தவரை இகழ்வதையும் கலந்தே செய்வோம்.


தழும்புகள் கௌரவமானவை.

அவர்கள் கீழே விழுந்து ஏற்படுத்திக் கொண்ட தழும்பைக்கூட ஒரு
கௌரவமாக (Honour) ஆகச் சொல்லுவார்கள். நாம் நமது தழும்புகளை (உடல் தழும்புகளை மட்டுமல்ல.. மனத் தழும்புகளையும் தான்) கூடுமானவரை மறைக்கவே முயலுகிறோம். அவை ரகசியத் தகவல்களாகிவிடும். என்ன சார் காலில் காயம், கீழே விழுந்துட்டீங்களா? (கேட்பவருக்கு, உனக்கு வண்டி ஓட்டத் தெரியவில்லை என்ற இளக்காரம் மறைந்திருக்கும்) இல்லையே.., கதவு இடித்துவிட்டது (கௌரவம் காப்பாற்றப்பட்டுவிட்டது)


முயற்சி:

சிறுவர்கள் புதியனவற்றை முயல தயக்கம் காட்டுவதே இல்லை. புதிய கருவிகள் அவர்களுக்கு வசமாவத்ன் ரகசியமே இதுதான். நாம் நமது கம்ஃப்ர்ட் Zone ஐ விட்டு வெளிவர ஏகத் தயக்கம் காட்டுவோம். புதிய முயற்சிகள் என்பது கிட்டத்தட்ட இருக்காது.

அலுவலகங்களில் புதிய பேக்கேஜ்கள் அறிமுகமாகும்போது, அவற்றை குறைச்சொல்லாத பெரிகள் இருக்காது. இளசுகளுக்கு அதில் என்னதான் இருக்கிறது என்ற ஆர்வமே இருக்கும். தனியாக டூர் சென்று பார்ப்பதில் கூட தயக்கம். புதிய முயற்சிகளே வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கும்.


கவனிப்பு:

குழந்தைகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனிப்பார்கள். பார்ப்பவற்றை தவறாது திரும்ப செய்து பார்ப்பார்கள். குழந்தைகள் கண்ணிலிருந்து எதுவும் தப்பாது. ‘அம்மா... அந்த காமேஷ் இருக்கானே, அவனோட பேண்ட் பாக்கட் கிழிஞ்சு போயிருந்துச்சு பாத்தியா?...’

நாமும் சின்னஞ்சிறு விஷயங்களையும் கவனித்து ரசிக்கக் கற்றுக் கொள்ளனும். அட.. குறைந்தபட்சம் பறவைகளையாவது கவனியுங்களேன். எனது நன்பர் ஒருவர் அரை நாள் முழுசும் ஒரு எறும்புக் கூட்டத்தையே கவனித்துக் கொண்டிருந்தார். ஆனால்
எத்தனைபேர் இப்படி இருக்கிறார்கள்?

இசை, புத்தகங்கள் இப்படி எதிலாவது ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாமே?

மீண்டும் குழந்தைகளாக முடியாதுதான். அவர்களது மனோ நிலையை, கூடுமானவரை கடைப்பிடிக்கலாமே?

Saturday, September 12, 2015

நான் எதைச் சாப்பிட வேண்டும்?

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும், இருவேளை உணவை உறுதிசெய்ய இயலாத நிலைதான் இன்று இருக்கிறது. தொலைதூரங்களிலும், மக்கிப்போன குடிசைகளிலும், தெருவோரங்களிலும் வசிப்போருக்கு அடுத்தவேளை உணவைப் பற்றித்தான் கவலை. ஆனால் அரசாங்கங்களுக்கு, வேறு ஒரு கவலை. யார் யார், எந்தெந்த ‘கறி’ சாப்பிடலாம் அல்லது சாப்பிடக்கூடாது என நிர்ணயிக்கும் அதிகாரத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு கவலைப்படுகிறார்கள்.

அடுத்த மனிதரைக் கொன்று, அல்லது திருடி உண்ணாதவரை, ஒரு தனிமனிதன் என்ன சாப்பிட வேண்டும் என்பது அடிப்படை உரிமையா இல்லையா?

தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் ‘பதார்த்தங்களை’ தடுப்பதற்கு அரசு உரிமை பெற்றவையே. எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதற்காக, போதை மருந்துகளை உண்ணவோ அதை விற்கவோ உரியையில்லை.. சரிதான்.

ஆனால் இந்தந்த நாட்களில் இதை இதை சாப்பிடக்கூடாது என்பதைச் சொல்ல அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டா?

ஜெயின் சமூகத்தினரின் “ பர்யுஷான் “  பண்டிகையை ஒட்டி, மாட்டிறைச்சி விற்க தடைவிதித்திருக்கிறது மகாராஷ்ட்ராவும் ராஜஸ்தானும். ராஜஸ்தான் இன்னும் ஒருபடி மேலே போய், அந்த பன்டிகை தினங்கங்களில் மீனும் விற்கக் கூடாது என சட்டம் போட்டுவிட்டனர். இந்த என்ன மாதிரியான கேலிக்கூத்து? கேட்டால், இந்தத் தடை  அக்பர் காலத்திலிருந்தே இருக்கிறதாம்!

இறைச்சிக் கடைக்காரர்கள், ‘இன்று நீ கறி சாப்பிட்டே ஆகனும்’ என ஜெயின் சமூகத்தினரின் வாயில் ஊட்டி விடுகிறார்களா என்ன? அவரவர்கள் அவரவர்களின் மத-குடும்ப நம்பிக்கையை ஒட்டி எதையாவது சாப்பிடட்டும் அல்லது சாப்பிடாமல் போகட்டும்.  அது அவர்களது விருப்பம். அதில் மூக்கை நுழைக்க எவருக்கும் அதிகாரமில்லை.  ஆனால், அவர்கள் சாப்பிடவில்லை என்பதற்காக ஊரில் எவருமே கறி சாப்பிடக் கூடாது என சட்டம் போடுவது என்ன நியாயம்?

நான், கறி சாப்பிடுவதை அனுமதிக்காத ‘புரிஷ்யான்’ பண்டிகையை கொண்டாட ஜெயின் சமூகத்தவர்க்கு தடை விதிக்க வேண்டும் என கோரினால் எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம், அவர்களுக்காக மற்றவர்கள் மாமிசம் சாப்பிடக் கூடாது என்பதும்.

இன்று ஏகாதசி விரதம், அமாசை விரதம் எனவே எங்கும் கறி விற்கக் கூடாது என கிளம்பலாமா? புரட்டாசி மாதங்களிலும், ஐயப்பன் விரதம் இருக்கும் நாட்களிலும் மாட்டுக் கறி விற்கக் கூடாது என ஆரம்பிக்கலாமா?

இது என்ன விபரீதம்?

இந்திய அரசியல் கட்சிகள் யாவும், ஓட்டுகளுக்காக ‘ஜிம்மிக்’ அரசியல் செய்கின்றனவே தவிர, கொள்கை-நியாயம் எதுவும் கிடையாது. சிவசேனா, கறி விற்பனைத் தடையை எதிர்த்து, கறிக் கடைபோடுகிறார்களாம்! பி.ஜே.பி க்கு ஏதேனும் ஒரு நெருக்கடி-சங்கடம்-நெருடல் உண்டாக்க வேண்டும் என்பதைத் தவிர வேறேன்ன காரணம் இருக்க முடியும்?

இவ்வருட ஆரம்பத்தில், மகாராஷ்டிர அரசு, பசுக்களை கொல்லக் கூடாது, அதன் கறியை விற்கக்கூடாது, வைத்திருக்கக் கூடாது  சட்டம் இயற்றியது. பால் வற்றிய மிருங்களை வேறு என்னதான் செய்வது? யார் பராமரிப்பது? அதற்காகும் செலவை யார் ஏற்றுக் கொள்வது? ஈகலாஜிகல் பேலன்ஸ் என்ன ஆவது? அவற்றை முக்கிய உணவாகக் கொண்டிருப்போர் என்ன செய்வார்கள்? இந்த தடை அவர்களது உரிமையை பரிப்பதாகாதா? இறைவனின் படைப்பில் படைப்பில் சகல ஜீவன்களுமே சமம்தானே? சிலஉயிரினங்கள் மட்டும் எப்படி ‘புனிதமாகி’ விடும்? மற்றவை எப்படி ஹீனமாகிவிடும்? புராணங்களில், மாட்டிறைச்சி பரிமாறப்பட்டதாக வருகிறதே?

சரி... அவரவர்கள்  நம்பிக்கையின்படி எதைவேண்டுமானாலும் புனிதமாக வைத்துக் கொள்ளட்டும். அது கழுதையோ அல்லது கரப்பான் பூச்சியோ, அவற்றை அவர்கள் மட்டும் ஹிம்சை செய்யாமலிருந்தால் போதாதா?

எத்தனையோ நாட்டில் ‘பாம்புகளும்’, ‘நாய்களும்’, ‘பன்றிகளும்’ முக்கிய உணவு! அந்த நாட்டினருடன் ‘வணிக உறவு இல்லை’ எனற நிலையெடுக் கலாமா?

பண்டிகை நாட்களில் அமலுக்கு வரும் இந்த மாதிரியான ‘டோக்கன்’ தடைகள் நகைப்புக்குரியன. (தேர்தல் நாள் அன்று சாராய விற்பனை தடை.. புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அக்டோபர் இரண்டு மட்டும் ‘சாராயம்’ விற்கக் கூடாது. மற்ற நாட்களில் ‘மட்டையாகி’ ரோடில் கிடக்கலாம்? இது என்ன வகையான லாஜிக்?)

மத சார்பற்ற நாடு என்றால், வீட்டின் பூஜையறையில் அல்லது வழிபாட்டுத் தலங்களில் அவரவர்களுக்கு விருப்பமானவர்களை வழிபடும் உரிமையை உறுதி செய்வதும், அதற்கு குந்தகம் விளைவிபோரை தண்டிப்பதும் தான். வீட்டைத் தாண்டி தெருவிற்குள் வந்துவிட்டால் இந்திய அரசியல் சட்டத்தின் முன் அனைவரும் சமம். எவருக்கும் மதத்தின் பேரால் சலுகையோ அல்லது சலுகை மறுப்போ இருக்கக் கூடாது. அவ்வளவே!

இன்று நான் எதைச் சாப்பிடக் கூடாது என சட்டம் போடுவதெல்லாம், கடைந்தெடுத்த பிற்போக்குத் தனம்.



Sunday, September 6, 2015

மோடியும் – தமிழும்.


மோடியைப் பிடிக்காது. எனவே அவர் என்ன சொன்னாலும் எதிர்த்தாக வேண்டும். எது செய்தாலும் ரகளை செய்யனும் என்பது நம்மைப் பீடித்துள்ள சின்ட்ரோம்.

தனது கடுமையான நிகழ்ச்சி நிரலிலும், தலை நகரிலிருந்து ஒரு பிரதமர், ஒரு புத்திசாலி தமிழ்ப் பெண்ணிடம் உரையாடுகிறார், என்பதை மறந்துவிட்டு, அந்த பெண் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு ஏன் இந்தியில் பதில் சொன்னார் என ஆரம்பித்துவிட்டனர்.

அவர் ஒரு தமிழ் மாணவியிடம்தான் உரையாடினார் என்பதை சௌகரியமாக மறைத்துவிடுவர். அந்தப் பெண் என்ன பேசினார் என்பதைப் பற்றி ஒரு ரிப்போர்டிங் இல்லை. அதற்கு பிரதமர் என்ன பதில் சொன்னார் என்பதைப் பற்றியும் அக்கறையில்லை. அவ்வளவுதான் நாம்.

அந்தப் பெண் தமிழிலா பேசினார்? இல்லையே? ஒரு அயல்மொழியில் தானே? அதற்கு பிரதமர் ஸ்பேனிஷிலோ, ஃபிரஞ்சிலோ பதலிளித் திருந்தால் கோபப்படலாம். அட... குஜராத்தியில் பதில் சொல்லியிருந்தால் கூட ஆட்சேபிக்கலாம். இந்தியில்தானே சொன்னார். அந்தப் பெண்ணிற்கு இந்தி தெரியாது என யாராவது சொன்னார்களா?

சரி.. அவர் பேசியது நாட்டிற்கே புரியனும் என்று ஆரம்பித்தால், எந்த மொழியில் பேசினால் அதிகம் பேருக்கு புரியும்? பரவலாகப் பேசப்படும் மொழி எது? அதில்தானே பதில் சொன்னார்?

அந்த பெண் ஏன் தமிழில் பேசவில்லை என யாரும் ஆட்சேபிக்க வில்லை? அப்படி கேட்டிருந்தால், தமிழ்நாட்டில் அனைவருக்கும் புரிந்திருக்குமே? மோடி கூட இதை வரவேற்றிருக்கக் கூடும். ஒரு இன்டர்ப்ரட்டர் போட்டு, மோடி பேசியதும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கும். இந்தியில் பேசுவது ‘திணிப்பு’ என்றால் அன்னிய மொழியில் பேசுவது எந்த வகையில் சேர்ப்பது?

வெளினாட்டு ஆங்கிலம் கற்றாலும் கற்றுக்கொள்வொமே தவிர இந்திய மொழிகள் வேண்டாம் என்பதுதான் நிலைபாடு என்றால், அது தமிழுக்கு நல்லதல்ல. இந்த நிலைபாட்டினால்தான், தமிழக பள்ளிகளில் தமிழே இல்லாமல் போய்விட்டது.

இந்தத் தலைமுறையினருக்கு தமிழில் தொடர்ச்கியாக பேசவே வரவில்லை. அவர்களது வொகபலரி ஐம்பது வார்த்தைகளுக்குள் அடக்கம். அதுவும் சென்னைத் தமிழ் என்றால், அந்த ஐம்பது வார்த்தைகளுமே படுகொச்சையாக இருக்கும். கனவான்களே, கொஞ்சம் பள்ளிகள்-கல்லூரிகள் பக்கம் போய்ப் பாருங்கள். அவர்கள் வாயில் தமிழ் வருகிறதா என்று கவணியுங்கள்.

அட.. புத்திசாலிகளே! தமிழுக்கு ஆபத்து இந்தியினால் அல்ல; ஆங்கிலத்தால்தான். இதை எந்த காலத்தில் புரிந்து கொள்வீர்களோ தெரியவில்லை! ஒருவேளை தமிழ் வெறும் பேச்சு மொழியான பின்னால் புத்தி வருகிறதோ என்னவோ?

இத்தாலியில் சோனியா பேசினால் ஒத்துக் கொள்வார்கள். இந்தியை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு, பாராளுமன்றத்தில் பேசும் நபர்களை ஏற்றுக் கொள்வார்கள். ஒரு பிரதமர் இந்திய மொழியில் பேசினால் கொலைபாதகச் செயல்.. இல்லையா?

இந்திய வரலாற்றில் எந்தப் பிரதமர், ஒரு 15 வயது சிறுமியிடம், அவரது புத்திசாலித் தனத்திற்காகவே, கூப்பிட்டு பேசியிருக்கிறார்? இதையே காங்கிரஸ் செய்திருந்தால், ஒரு தமிழ்ப்பெண்ணிடம் ராகுலோ-சோனியாவோ பேசிவிட்டார் என தம்பட்டம் போட்டிருக்க மாட்டார்கள்?


நம்மைப் போல ஆங்கில அடிமைகள் உலகில் வேறு எங்கும் இருக்க மாட்டார்கள். 

Saturday, September 5, 2015

'நல்லவர்களே!"

நல்லவர்களும், திறமையானவர்களும் அரசியலுக்கு வரவேண்டும்” – ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு மோடி அவர்கள் அறைகூவல். 

இந்திரா காந்தி காலத்திலிருந்து, இந்த வசனங்களைக் கேட்டு அலுத்துவிட்டது. சுதந்திரப் போராட்ட காலத்தில்,  “நல்லவர்களே, போராட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்” எனத் தலைவர்கள் கேட்டுக் கொண்டா அரசியலுக்கு வந்தனர்? அது தன்னிச்சையாக  நடந்தது!

பி.ஜே.பி-காங்கிரஸ் உட்பட, அரசியல் கட்சிகளில், நல்லவர்களும் திறமை யானவர்களும் இல்லவே இல்லையா? அவர்களுக்கு எம்.எல்.ஏ, எம்.பி சீட் கொடுத்தீர்களா? ஒரு சிலரைத் தவிர்த்து, கிரிமினல் பிண்ணனி உள்ளவர்களும், குண்டர்களும், தாதாக்களும்தானே ‘சீட்’ பெறுகின்றனர்?
இந்த பாராளுமன்றம் உட்பட, எத்தனை பேர் கிரிமினல் பின்ன்னி கொண்டவர்கள் என்பது ரகசியமா என்ன? எடியூரப்பாக்கள் தானே முதலமைச்சராக முடிந்தது?  நீங்கள் குறிப்பிடும் ‘நல்ல நபர்கள்’ கையில் அதிகாரம் இருந்திருந்தால், இன்று ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?

அரசாங்கத்தை விடுங்கள்...அரசியல் கட்சிகள், கட்சித் தலைமைப் பதவிகளில், எளிமையானவரை-நேர்மையாளவர்களை அமர்த்தி யிருக்கின்றனவா? பணபலம்-அதிகார பலம்-தாதாக்கள்-குண்டர்கள் இவர்கள்தானே வரமுடிந்திருக்கிறது? இல்லையென்றால் வாரிசு மயம்!

நல்லவர்கள், அதிகாரத்திற்கு வந்துவிடாமல் பார்த்துக் கொண்டு, பிறகு அரசியலுக்கு வாருங்கள் என அழைப்பு விடுப்பது என்ன நாடகம்? கொடி ஒட்டுவதற்கா?

நாட்டில் உலவும்  நக்ஸல் போன்ற, பல தீவீர வாதக் குழுக்கள் (நம்ம ஊர் ஈய வாதக் குழுக்கள் அல்ல), அரசியல் கட்சிகளின் மேல் நம்பிக்கை இழந்து, வெறுப்படைந்து, சாதாரண மக்களுக்கு ஏதேனும் நல்லது உடனடியாக செய்யவேண்டும் என்ற ஆக்ரோஷத்தினால் உண்டான வைதான். இதை எங்களைவிட  நீங்கள் நன்றாகப் புரிந்து வைத்திருபீர்கள். ஆனாலும் அவர்களை ‘சட்ட ஒழுங்கு’ பிரச்சினை செய்பவர்களைப் போலத்தானே அணுகுகிறீர்கள்?

அரசியல் கட்சிகளை விடுங்கள்... குறைந்த பட்சம், உங்களது மொழியில் ‘நல்ல-திறமையான’ அதிகாரிகளை எப்படி நடத்துகிறீர்கள்? அரசு இயந்திரத்தை உங்களது கொள்ளைக்கு பயன்படுத்திக் கொள்வது எப்படி என்ற நுணுக்கம் உங்களுக்கு கைவந்த கலையாயிற்றே? உங்களது கொள்ளைக்கு உடன்பட மறுத்தால், பழிவாங்குவீர்கள்! ட்ரான்ஸ்வர் செய்வீர்கள்! டம்மி பீஸாக்குவீர்கள்!  எத்தனை எத்தனை உதாரணங்கள்  இருக்கின்றன!!  (நம்மை அடிமைப் படுத்திய ஆங்கிலேய அரசாங்கத்தில் ‘யேல்’ என்ற அதிகாரி ஒருவர் இருந்தார். உங்களது யூகம் சரி. அண்ணாவை கௌரவப் படுத்திய அதே பலகலைக் கழகத்திற்கு உதவியவர் தான். அவர்மேல் வருமாணத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த்தாக வழக்கு தொடர்ந்து, அரஸ்டும் செய்த்து பிரிட்டிஷ் அரசாங்கம்)

நிருபன் சக்ரவர்த்தியையும் காமராஜையும் இன்றும் எங்களால் மறக்க முடியவிலை என்றால், அவர்களுக்கு நீங்கள் வைக்கும் ‘கட்டவுட்’ களால் அல்ல..  நேர்மையாக-திறமையாக-எளிமையாக வாழ்ந்து காண்பித்ததால்.

ஆசிரியர் தினம் போல, ஏதோ ஒரு தினம், அனுதினமும் வந்துகொண்டே தான் இருக்கிறது. நீங்களும் அந்த தினத்திற்கேற்றாற் போல, செக்ரடரியோ அல்லது நீங்களாகவோ எழுதிவைத்த ஒரு அறிக்கையை படித்துவிட்டுப் போவீர்கள். பத்திரிகைகளிலும் அவை பக்கங்களை நிரப்பிக் கொள்ளும்!


அட..போங்க, சலித்து விட்டது!! இந்தியாவில் மாறுதல் என்று வருமோ தெரியவில்லை!    

Thursday, September 3, 2015

மொய்

“Things aren’t often what they appear to be at first blush. But embarrassment is.” 


மாதம் ஒரு நூறு கிராமுக்கு குறையாமல், திருமண அழைப்பிதழ் வந்து விடுகிறது. தினுசு தினுசாக பத்திரிகை டிசைன் வருவது போல, ‘பத்திரிகை வைப்பதும்’ பலவிதங்களில் ‘நவீனமாகி’ விட்டது. பத்திரிகையை ஸ்கேன் செய்து எல்லோருக்கும் மெயில் அனுப்பி, கூடவே ஃபோனில் கூப்பிட்டு சொல்வது வழக்கமாகிவிட்டது.   ‘என்னங்கானும், நீர் கல்யாணத்துக்கு வரவேயில்லை’ என்ற ராமர் அம்புக்கு, ‘அப்படியா, பத்திரிகை வரவேயில்லையே?’ என்று போஸ்டல் மேல் பழியைப் போடமுடியாது. இந்த வழக்கம் ஏற்றுக் கொள்கிற மாதிரித்தான் இருக்கிறது. பேப்பர் செலவு மீதி. மரங்கள் இல்லாவிடினும் சில கிளை களாவது தப்பும். தாமதம் இல்லை. நேரம் மிச்சம்.

சில ‘ஆபீஸர்ஸ்’ இருக்கிறார்கள். “நீங்க என் ஆபீஸுக்கு வந்து, என் மகன்/ள் கல்யாணப் பத்திரிகையை வாங்கிக் கொள்கிறீர்களா?” என்பர். அதெற்கென்ன...ஹி..ஹி வந்தே வாங்கிக்கொள்கிறேன் என வழிவோர் சிலர் இருந்தாலும், என் நண்பர் ஒருவர் சட்டென், ‘மொய்க் கவர் வீட்ல வந்து வாங்கிக்கிறீங்களா?’ எனக் கேட்டுவிட்டதாகச் சொன்னார்.  அது உண்மையோ இல்லையோ, மிகச் சரியான பதில் அதுதான்.

அலுவலகங்களில் பார்க்கலாம். சம்பந்தமில்லாத ஒருவர், ‘இன்னாருக்கு கல்யாணம்.. இந்தாங்க பத்திரிகை..’ என தகவல் சொல்லிக் கொண்டே, காலை தினசரி பேப்பர் மாதிரி போட்டுக் கொண்டே செல்வார்.

மௌனகுரு மாதிரி, வாயைத்திறக்காமல், தன் வீட்டு விழாவிற்கான பத்திரிகையை சுண்டல் மாதிரி கொடுத்துவிட்டுச் செல்வோரும் உண்டு.

“நோட்டீஸ் போர்டில்” பத்திரிகையை ஒட்டி ‘அனைவரையும்’ அழைப் போரும் உண்டு.

நமக்கு நல்ல அறிமுகமான நண்பர் வருவார். அவருடனே,  கை  நிறைய பத்திரிகையோடு இருக்கும் மற்றொருவரையும் அழைத்து வருவார். அவரை எந்த ஜென்மத்திலும் பார்த்திருக்க மாட்டோம். பார்க்கப் போகும் வாய்ப்பும் இருக்காது. ஆனால் நமது நண்பர், ‘சார்... என்னோடு ஃப்ரண்டு, அவரது வீட்டுக் கல்யாணம்.. பத்திரிகை வைக்கிறார்..’ என்பார். அந்த திடீர் நட்பும்,  நம்மிடமே, நமது பேரைக் கேட்டு அழைப்பிதழில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு எழுதி பத்திரிகை நீட்டுவார்.

இதுதான் சங்கடம். இந்த திருமணத்திற்கு போவதா வேண்டாமா? ஒரிஜினல் நண்பருக்கு என்றால் அவசியம் போகணும்.. அவர் மூலம் வரும் திடீர் நட்புக்கு என்ன செய்வது?

இப்படி ஒரு கல்யாணம் நேர்ந்துவிட்டது. 

வேலைமெனக்கெட்டு, வழியில் பார்த்து அந்த கல்யாணத்திற்கு வந்துவிடனும் என்ற வேண்டுகோள் வேறே!  நாள் நெருங்கட்டும் பார்க்கலாம் என தீர்மாணிப்பதை ஒத்திவைக்கும் போது, வெளியூரிலிருக்கும் வேறு ஒரு நண்பர் கூப்பிடுகிறார்.

‘சார்... அந்த திருமணத்திற்கு போகிறீர்களா?’

‘போகக்கூடும்..ஏன்..?’

‘நான் வெளியூரில் இருப்பதால். வர இயலாது..!’

‘ஒஹோ.. உங்களுக்கு தெரிந்தவரா?’

‘இல்லை... பத்திரிகை வைத்துவிட்டார். நீங்கள் போகும் பொழுது எனக்கும் சேர்த்து மொய் வைத்துவிடுகிறீர்களா?’

‘அதுக்கென்ன வைத்துட்டா போகுது...?’

இக்கட்டான சூழல்களில் வலுவே சென்று மாட்டிக் கொள்வது எமது குல வழக்கம். சரி... போய்த்தான் வந்துவிடலாமே, என முடிவெடுத்து விட்டேன். மண்டப வாசலில் இயல்பாக கண்கள், எனது நண்பரைத் தேட.. அவர் தென்படவே இல்லை...’

மண்டபத்தில், ஏகக் கூட்டம். பெரிய கை போலிருக்கிறது. தெரிந்த முகம் யாதொன்றும் இல்லை. ஏற்கனவே சங்கோஜி…


யாரோ ஒருவர் சாப்பிட வாருங்கள் என அழைக்க, சங்கடமாக சாப்பாட்டு ஹாலில்.

அப்புறம், மொய்க்கவர் கொடுக்கணுமே?

சம்ரதாயங்கள் முடியாததால், பலரும் மொய்க் கவர்களை மணமகள் தந்தையிடத்திலோ அல்லது மணமகன் தந்தையிடத்திலோ கொடுத்துக் கொண்டிருந்தனர்.

வந்தது சந்தேகம்.  யாரிடம் கொடுப்பது? யார் பத்திரிகை வைத்தது? பையன் அப்பாவா? பெண்ணின் அப்பாவா?

மறந்துவிட்டதே...வெளியில் வைத்திருக்கும் போர்டையும் கவணிக்க வில்லையே?

பையன் பக்கம்தான் பத்திரிக்கை கொடுத்ததாக நினைவு...
அப்படி என்றால், இதில் பையனின் அப்பா யார்? பெண்ணின் அப்பா யார்?

இருவருக்கும் என்னைத் தெரியாது, என்னையும் இருவருக்கும் தெரியாது..

எனக்கு பின்னே ஒரு இருநூறு பேர், கையில் மொய்க்கவருடன் வரிசையில்..

பின்னே இருப்பவரின் காதைக் கடித்தேன். ‘இதில் பையனின் அப்பா யார்?’ அவர் விந்தையாகப் பார்த்துவிட்டு, ஒரு தம்பதியினரைக் காட்டினார். அவரிடம் கவர்களைத் திணித்துவிட்டு..

விடு ஜூட்....