Monday, October 24, 2011

திபாவளிக்கு முதல் நாள்

உங்களை, கொஞ்சம் பின்னோக்கி அழைத்துப் போவதாக உத்தேசம். கொஞ்சம் என்றால், ஒரு 44 வருடங்கள் பின்னால். “அட.. போப்பா கிழவா! என்கிறீர்களா! எனக்காக, அடம் பண்ணாமல், வந்துதான் பாருங்களேன்!


ஆத்தூருக்கு அருகில் "ஆனையாம்பட்டி" என்று ஒரு கிராமம். “ஜலதரங்க வித்துவான் “ஆனையாம்பட்டி கணேசன் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டி ருக்கிறீர் தானே? அதே ஆனையாம்பட்டிதான்! அந்த ஊரின், பெரிய தெரு ஒன்றில் குடியிருந்தோம். (மொத்தமே இரண்டு தெருதான் அப்போது) 

பாரதிராஜா தனது சினிமாக்களில், சித்தரித்த, ‘அக்ரஹாரம் ஒன்றினை நினவில் கொண்டு வாருங்கள். அதுபோலத்தான் இருக்கும் அந்த தெரு. விசாலமாக-நீளமாக.  வீதியின் ஒருபக்கம், பெருமாள் கோவில், அடுத்த பக்கம் சிவன் கோவில். நடுவில் ஒரு பஜனை மடம். பெரும்பாலான வீடுகளின் சுவற்றில், காவிப்பட்டைகள் தீட்டியிருக்கும். தெருவைத் தள்ளி,  கொஞ்ச தூரத்தில் ‘ஸ்வேத நதி ஓடும்.  பழமையான வீடுகள்.  அந்த தெருவின் நடுவில் உள்ள ஒரு பெரிய வீட்டில், நாங்கள் குடியிருந்தோம்; வாடகைகுத்தான். 

வீட்டின் முன், இரு பக்கமும் பெரிய திண்ணைகள். நடுவில் வாசற்படி.  குனிந்து உள்ளே வரணும், உயரம் கம்மி. அடுத்து ரேழி. அந்தக் காலத்தில் ரேழி என்பது இருட்டாகத்தான் இருக்கும். ரேழி எனப் படுவது, ஒரு சிறிய “நடைமாதிரி. இந்த வார்த்தையே புதிதாக இருக்கிற தல்லவா? அதைத்தாண்டி உள்ளே வந்தால் பெரிய கூடம். நடுவில் முற்றம். கூடத்தை அடுத்து, சாமன்கள் வைக்கும் அறை; அதன் பின் சமையலறை.

அது தீபாவளிக்கு முதல் நாள்.  வீடு திமிலோகப்பட்டுக் கொண்டி ருந்தது.  அம்மா சமையலறையில், டின் டின்னாக பட்சணம் செய்து குவித்துக் கொண்டிருக்கிறாள். விறகு அடுப்புதான். ஸ்வீட் வகைகள் முதல் நாளே தயாராகி விட்டன. பட்சணம் என்றவுடன், தற்போதைய ‘ஆனந்த பவனை நினைத்துக் கொள்ளாதீர்கள். கைமுறுக்கு, தேன் குழல் (பாட்டி இதனை மனங்கோம்பு என்பாள்), மிக்ஸர் இவைகள் தான்.

பாட்டி, அப்பாவின் நாலு முழ வேட்டியினை துவைத்து, காயவைத்து, அதை சமையல் கட்டில் பரப்பி, அதன் மேல், கை முறுக்கு சுற்றிக் கொண்டிருக்கிறாள். வேட்டியின் நடுவில் ஏதோ, மாவினால், சின்னதாக பிடித்து வைத்திருக் கிறார்களே-அது என்ன என்று கேட்கிறீர்களா? அதுதான் பிள்ளையார்; முறுக்கு விண்டுவிடாமலும், வாணலியில் வெடித்து விடாமலும் அவர் பார்த்துக் கொள்வார்.  மணி-மணியாய் முறுக்கு சுற்றுவதில், தன்னை மிஞ்ச, “ஜில்லா  விலேயே ஆளில்லை என, பாட்டி தானே சொல்லிக் கொள்வாள்.

அம்மா, இரண்டு அடுப்பில் எண்ணை வாணலிகளை வைத்து, ஒன்றில் தேன் குழலும், இன்னொன்றில் முறுக்குமாக, மாறி-மாறி போட்டு எடுத்துக் கொண்டிருக்கிறாள். முறுக்கு என்றால் இப்போது போல, கிலோ கணக்கெல்லாம் இல்லை; 58, 108 என்று,  எண்ணிக்கையில் தான் செய்யணும்.  மூணு சுற்று, ஐந்து சுற்று, ஏழு சுற்று என ‘அகலத்தில் சைஸ் எல்லாம் உண்டு.

ஸ்வீட் வகையாறாக்களில், வீட்டுக்கு வீடு மைஸூர்பாகு நிச்சயம். அப்போதெல்லாம் தீபாவளியையும் ‘மைஸூர் பாகை யும், கல்யாணமும் ‘சண்டையும்போல பிரிக்க முடியாது. அப்புறம் ரவாலாடு அல்லது மாலாடு. எந்த வீட்டிற்குப் போனாலும் இந்த ஐட்டங்கள் உத்தரவாதம்.

“அம்மா, நான் வேணா முறுக்கெல்லாம் டின்னில் அடுக்கி வைக்கட்டுமா என்று கேட்டுப் பார்த்தேன். “கரண்டிக் காம்பாலே சூடு போடுவேன்; போடா அந்தண்டை - என விரட்டுகிறாள். நான் எதற்காக அம்மாவுக்கு ‘உபகாரம் செய்ய வந்தேன் என அவளுக்குத் தெரியாதா? 
ஆனால், பாட்டிக்கு நான் செல்லம். திட்டவே மாட்டாள். இங்கே வாடா ‘பாலு’ (என்னைத்தான்) என கூப்பிட்டு, “ஏகமா வேக்கறது.. கொஞ்சம் விசிறிவிட்டு போயேண்டா என்பாள். பாட்டியின் பாசாங்கு எனக்குத் தெரியும்! விசிறிக் கட்டையை எடுத்து நாலு விசிறு விசிறியதும், அம்மா பாக்காத போது ரெண்டு கை நிறைய பட்சணத்தை எடுத்துக் கொடுப்பாள். டிராயர் பை நிறைய  நிரப்பிக் கொண்டு ஓடிவந்துவிடுவேன்.


“இந்த “கடன்காரன் தொச்சு (துரைசாமி) எங்கே ஒழிஞ்சு போனான்? மிக்ஸருக்கு அவல் பொறி வாங்கச்சொல்லி நாலு நாழிகையாகிறது. இன்னும் வரல அம்மா அடுப்புடன் பேசிக் கொண்டிருக்கிறாள்.

'கடன்காரன்' என்றதும் தீபாவளி செலவுக்காக கடன் வாங்கியவன் என நினைத்துக் கொள்ளாதீர்கள். தனது தம்பி ‘துரைசாமியைத்தான், அன்பொழுக அப்படி கூப்பிடுகிறாள். அப்போதெல்லாம், வீட்டுக்கு ஒரு ‘தொச்சுஅவசியம் இருப்பார். அம்மாவின் தம்பியோ, அப்பாவின் தம்பியோ அல்லது “அம்மாஞ்சி என வினோதமான உறவுப்பெயர் கொண்ட ஒருவரோ, எடுபிடி வேலை செய்து கொண்டு இருப்பார்.

முற்றத்தின் ஓரமாக, ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டி ருக்கிறாரே, அவர்தான் என் தாத்தா. அப்பாவழி பாட்டி-தாத்தா தான்.
காது மந்தம். அருகில் போய், அலறினால் ‘யாரு? என்பார்.

கண்பார்வையும் குறைவு. பத்து நிமிடம் தூணையே உற்றுப் பார்த்து விட்டு, ‘ஏண்டா... நீ தொச்சு தானே? ஏன் நின்று கொண்டே இருக்கிறாய்? உட்காரேன் என்பார்.

நினைவு கொஞ்சம் தவறும். “நாளை பண்டிகைக்கு விளாம்பழம், சோளக் கதிர் எல்லாம் வாங்கி விட்டீர்களா? என்பார்.

“அட..சட்... நீ வாயை மூடிக்கொண்டிருக்கப்போறியா இல்லையா? சதா சர்வகாலமும் கொழுக்கட்டையே ஞாபகம் என தாத்தாவைப் பார்த்து கத்துகிறாரே, அவர்தான் என் அப்பா. ஆனால், அம்மா அவரை “துர்வாசர்”  (முன் கோபத்துக்கு பெயர் போன முனிவர்)  என்று தான் பக்கத்து வீட்டில் சொல்லுவாள்.

எனது அக்காவுக்கு இது தலை தீபாவளி. அத்திம்பேரையும், அக்கா வையும் அழைத்துவர ‘கெங்கவல்லிக்கு கிளம்பிக் கொண்டிருக் கிறார் அப்பா. கெங்கவல்லி என்பது இந்த கிராமத்திலிருந்து ஒரு மைல்.

கிளம்பிப் போனவர் உடனடியாகத் திரும்பி வந்துவிட்டார்.  ‘அலமு... கொஞ்சம் தண்ணி கொண்டுவா... வெளியில் போகும்போது சகுனம் சரியில்லை..  சமையல் அறையை நோக்கி குரல் கொடுத்தார்.  எதிர்த்தாற்போல எவரோ வந்து விட்டாற் போலிருக்கிறது.

“கைவேலையாய் இருக்கேன்.. எழுந்து வர முடியாது.. நீங்களே வந்து குடித்துக் கொள்ளுங்கள் என அம்மா குரல் பதிலாக வந்தது. பிற நாளாக இருந்தால், இந்த பதிலுக்கு உடணே சண்டை வந்திருக்கும்.

“டேய்..பாலு.. உள்ளே போய் ஒரு தம்ளர் தண்ணி கொண்டுவாடா.. அது என்ன, டிராயரில் எண்ணைக் கறை?

“ஒன்னுமில்லியேப்பா.. “

தண்ணீர் குடித்துவிட்டு, அம்மா இருக்கும் திக்கு நோக்கி ... ‘ஏய்... அலமு இந்த பயலுக்கு, சதா தின்னக் கொடுக்காதே.. நாளும் கிழமையும் அதுவுமா வயித்தைக் கெடுத்துப்பான்என்றார்.  உடன டியாக பையில் இருக்கும் பட்சணத்தை காலி பண்ண ‘ஸ்வேதநதி க்கு எடுத்தேன் ஓட்டம்.

ஆத்தங்கரை, ஆல மரத்தில் சாக்கட்டி கோடு போட்டு, ‘கிரிக்கெட் விளையாடும் பசங்களுக்கு, பந்து பொறுக்கிப் போட்டுவிட்டு (ஒரு போதும் எனக்கு பேட்டிங் தர மாட்டார்கள்), வீடு திரும்பியபோது, கூடம் நிரம்பி இருந்தது. அக்கா, அத்திம்பேர், சித்தப்பா, சித்தி, அவர்கள் குழந்தைகள் என வீடே.. ஜே..ஜே...

தாத்தா, மாப்பிள்ளையைத் தவிர, மற்றேல்லாரையும் பார்த்து, கண்களை இடுக்கிக் கொண்டு, ‘மாப்பிள்ளை.. சௌக்கியமா.? எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

எனக்கு பட்சணம் தரமறுத்து, “கரண்டிக் காம்பால் அடிப்பதாகச் சொன்ன அம்மா, மாப்பிள்ளைக்கு மட்டும் தட்டு நிறைய பட்சங் களை கொண்டு வந்து வைத்தாள். அக்கா கூட, நிமிஷத்துக்கு ஒரு தடவை, ‘அத்திம்பேரை பார்த்து ஈஷிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் “என்ன வேணும், .என்ன வேணும்“ என உபசாரம் செய்து கொண்டிருந்தாள்.  எல்லாமே "அத்திம்பேருக்குத்தான்" என்பது, அநியாயமாய் பட்டது. சிடுமூஞ்சி அப்பா கூட அவரிடம் சிரித்து-சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார். இது என்ன ஓரவஞ்சனை? அடுத்த ஜன்மாவில் ‘அத்திம்பேராக பிறக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன்.

‘வாடா... பாலு.. நீ இப்ப பத்தாவது தானே படிக்கிறே என்றார், அக்கா புருஷன்.

“அவனுக்கென்ன.. படிப்பில் மகா சூட்டிகை....கிளாஸில் அவன் தான் எப்போதும் ஃப்ர்ஸ்ட். பிரைஸ் எல்லாம் வாங்கியிருக்கான் தெரி யுமோ" என்றாள் அம்மா.   புளுகு.  அரையாண்டில் ‘எலக்டிவ் மேத்தமடிக்சில் ஃபெயில்’. 

அப்படியா?  நல்லா படிக்கணும்.. தெரியுமா?  எங்கே ‘பித்தாகொரஸ் தேற்றம் சொல்லு பாக்கலாம்?

“கூப்பிட்டியா  பாட்டி... ?  சமையலறைப் பக்கம் பார்த்தேன்.

“இங்கே வாடா.. நீ தேற்றம் எல்லாம் சொல்ல வேண்டாம். உனக்கு தீபாவளிக்கு என்ன வேணும்?

இது நல்ல ஏற்பாடாகத் தெரிந்தது!

“செட்டியார் கடையில் ஓலைப் பட்டாசு விக்கிறாங்க.. பாக்கட் மூணு ரூபா.  நூறு வெடி இருக்கும்.

“மூணு ரூபா தானே?  வாங்கிட்டாப் போச்சு.. “

காசு எடுக்க, பாக்கெட்டில் கைவிடுகிறாரா எனப் பார்த்தேன்.. ம்ஹூம்..  அப்பாவிடமும், அக்காவிடமும் பேசுகிறாரே தவிர, காசு கொடுப்பதாய்த் தெரியவில்லை. நானும் வேண்டுமென்றே அத்திம்பேர் முன்னால் குறுக்கும் நெடுக்குமாய், அவ்வப்போது நடந்து பார்த்தேன்.  மனுஷன் கண்டு கொள்ளவே இல்லை.

‘அத்திம்பேர்.  ராத்திரி பத்து மணி வரைக்கும் தான் செட்டியார் கடை திறந்திருக்கும்.

“அதுக்கென்ன இப்போ..?

“ஓலைப் பட்டாசு வாங்கித் தர்ரதா சொன்னீங்களே.?

“நாளைக்கு கூட வாங்கிக்கலாம்டா..

எரிச்சலாக வந்தது.  “நாளைக்கு தீந்து போயிடும் அத்திம்பேர்..

“அப்படியெல்லாம் தீந்து போகாது.  நிறைய ஸ்டாக் வைத்திருப்பான்

‘என்ன சொல்றான் ..பாலு....பித்தாகொரஸ் தியரியெல்லாம் சரியா சொன்னானா?”  என்று வந்தார் அப்பா!

“நான் வாசலுக்குப் போறேம்ப்பா...

அப்பா வேலை மெனக்கெட்டு சீனுவெடிக்கட்டை (இப்போது சர வெடி என்கிறோமே.. அந்த சீன வெடிதான்), தனித் தனித்தனியாகப் பிரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார் அப்பா. அப்போதுதான் தலைக்கு பத்து வெடி வரும். ஒரு சரவெடியினை மட்டும், முழுசாக, மாப்பிள்ளைக்கு என்று எடுத்து வைத்துவிட்டார். அக்கிரமம். அத்திம்பேர் மீது பொல்லாத கோபம் வந்தது.

காலை மூன்று மணிக்கெல்லாம் எழுப்பி விட்டாள் அம்மா.  ராத்திரி முழுக்க தூங்கியிருக்க மாட்டாளோ?

வீட்டில் பத்து பேருக்கும் மேல் விருந்தினர். . எல்லோருக்கும் எண்ணெய் எடுத்துக் கொடுத்து, குளிக்க வென்னீர் போட்டு, எல்லோரையும் பாத் ரூமிற்கு அனுப்பிக் கொண்டிருந்தாள். அப்பா முன்னமேயே எழுந்து குளித்து விட்டாற் போலிருந்த்து. சாமி படத்தின் முன்னால், புது டிரஸ், பட்சணம், வெடிகளை, படைப்ப தற்காக  அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

நானும், மற்றவர்களும் குளித்து முடித்து, அப்பாவிடம் நமஸ்காரம் செய்து புது டிரஸ் வாங்கிக் கொண்டிருந்தோம்.
‘அப்பா.. பட்டாசு....
“இரு பறக்காதே... உன் அத்திம்பேரும் வரட்டும்..
‘அதுக்குள்ள வெளிச்சமாயிடும். மத்தாப்பு எரியரதெல்லாம் நல்லா தெரியாது
“நாளும் கிழமையுமா, நீ எங்கிட்ட, திட்டு வாங்காம இருக்க மாட்டேல்ல....
ஒரு வழியாய் அத்திம்பேர் என்கிற வில்லனும் வந்து சேர.. பட்டாசுக் கட்டை எடுத்துக் கொண்டு வெளியே போணோம். என் பங்கிற்கு, நாலு கம்பி மத்தாப்பு பெட்டி, இரண்டு சாதா மத்தாப்பு பெட்டி, கொஞ்சம் ‘விஷ்ணு சக்கரம், தரைச் சக்கரம், இருபது உதிரி வெடி கிடைத்தது. “கலசம் எல்லாம் அத்திம்பேருக்காம்!

தெருவே வாசலில் கூடி, மத்தாப்பும் வெடியுமாய் குதூகலித்துக் கொண்டிருந்தது.  அந்த ஒரு மணி நேர சந்தோஷம் முடிந்தது. நான் உதிரி வெடிகளை வெடிக்காமல் “ஜேபியில்போட்டு வைத்துக் கொண்டேன். ஆற்று ஆலமரத்தடியில் வெடிப்பதற்கு.  பொழுது நன்றாக விடிந்ததும், தெருவின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிவரை நடந்தேன்.  யார் வீட்டில் அதிகமாக ‘வெடிக் காகிதங்கள்  கிடக்கின்றன என ஆராய்வதற்கு!  என் வீட்டைவிட குறைவாக இருந்தால் சந்தோஷமும், அதிகமாக இருந்தால் துக்கமும் வரும்.
உலா முடிந்து வீட்டிற்குள் வந்தால், தாத்தா அப்போது தான், குளிக்க புறப் பட்டுக் கொண்டிருந்தார்.
‘பாலு.. தாத்தாவை கையைப் பிடித்து அழைத்துப் போய் பாத்ரூமில் விட்டுவா. என்றார் அப்பா. இது ஒரு நச்சு வேலை!  பாத் ரூமிற்கு ஒரு அடி முண்ணாலேயே, தாத்தாவை, விட்டு விட்டு வந்துவிட்டேன்.  
“ஹையா.. அப்பா சொன்ன பேச்சை முழுசா கேக்கலை.. ஒரு திருப்தி.

அம்மா,  “தீபாவளி லேகியம் என்று ஒன்று கொடுத்தாள்.  அந்த வயதில், தீபாவளி தினங்களில், எனக்கு பிடிக்கவே பிடிக்காத ஒரு விஷயம், இந்த லேகிய சமாச்சாரம். "திபாவளி லேகியம் ஒடம்புக்கு நல்லதுதா, சாப்ப்பிடு! நாட்டு மருந்தெல்லாம் போட்டு, வெல்லம்-நெய் கலந்து, குழைவாக இருக்கும்டா. கொஞ்சம் காரமாக-இனிப்பாக இருக்கும் . அஜிரணத்திற்கு நல்லது, நன்றாக பசியெடுக்கும்" என்றாள் 


கையில் வாங்கி, அம்மா பார்க்காத போது, தாத்தாவுடைய பழைய வேட்டியின் உள்ளே போட்டுவிட்டேன்.

தாத்தா குளித்து முடித்துவிட்டு வெளியே குச்சியை ஊன்றிக் கொண்டு வந்தார்.  அவ்வளவு தான், அவரைப் பார்த்ததும், அனைவரும் இடியாய் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.  அத்திம்பேர் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, கீழே விழுந்து, சிரித்தார்.  விஷயம் இது தான். தாத்தா, ‘சீயக்காய்ப் பொடி' என்று நினைத்து பாத்ருமில் வைத்தி ருக்கும் மஞ்சள் பொடி யினை தலை முழுசும் அப்பிக் கொண்டு, குளித்துவிட்டு வந்திருக்கிறார்.

அக்கா, ‘மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட.. தாத்தா.. தாத்தா... என பாட ஆரம்பித்து விட்டாள். (மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட. ராமா.  ராமா என்று ஒரு பிரபலமான சினிமா பாட்டு ஒன்று இருந்தது).

"தான்" தான், அத்துனை பேரின் சிரிப்புக்கும் காரணம் என்பதை உணராத தாத்தா, “இப்பவெல்லாம் சீயக்காய்ப்பொடி என்ணையே போறதில்லை என்று சொல்லிக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்தார். அன்று முழுவதும் அந்த தெருவிற்கே அவர்தான் “ஹாஸ்ய“  நாயகன்.

அத்திம்பேரும், அக்காவும் அன்று மாலையே ஊருக்கு புறப்பட்டார்கள்.

“அத்திம்பேர்.. ஓலைப்பட்டாசு  வாங்கித்தருவதாக சொன்னீர்களே..

“கார்த்திகைக்கு வாங்கித் தர்ரேண்டா..
-0-

நிகழ் காலத்திற்கு வருவோம்.  அத்திம்பேர் என அழைக்கப் பட்ட அந்த வில்லன், தற்போது கிழவனாகி விட்டார்.

இப்போது கூட அவரைப் பார்க்கும் போது, “கடைசி வரை எனக்கு ஓலைப் பட்டாசு வாங்கித்தராமல் ஏமாற்றி விட்டீர்கள் அல்லவா? என கேட்கத் தோன்றும்.

"வேண்டாம். வாங்கித்தராமலேயே இருந்ததால்" தான், நாற்பது தீபாவளிக்குப் பின்னும்,  இவ்வளவு தீர்க்கமாக, அந்த தீபாவளியினை நினைவில் வைத்திருக்க முடிகிறது.

“இந்த தீபாவளிக்கு என்ன பட்சணம் செய்யலாம் என்றார் என் மனைவி.  “ஒன்றும் வேண்டாம் போ.. ஏதாவது, டையார் ஆனந்த பவனில் வாங்கிக் கொள்ளலாம். வீட்டிற்கு வருபவர்களுக்கு கொடுக்க அது போதாதா? நமக்கு என்ன வேண்டிக்கிடக்கிறது? என்கிறேன்.

தீபாவளி உற்சாகமெல்லாம் வடிந்தபின்னும் கூட, வருடா வருடம் அந்த தினத்தை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அது அந்த வருடத்திய தீபாவளியை கொண்டாட அல்லா.. சிறு வயது தீபாவளி நினைவுகளை அசை போட...

18 comments:

  1. அப்பா.. என்ன ஒரு நடை

    ReplyDelete
  2. மிக்க நன்றி திரு.இளா அவர்களே! உண்மையில்
    உங்களது கமெண்ட் தான் எனக்கு டானிக்.

    ReplyDelete
  3. மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். என் கையை பிடித்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக நீங்கள் காட்டியதோ போல் பதிந்து விட்டது உங்கள் எழுத்து!

    ReplyDelete
  4. Dear Sir,
    I read ur blog first time.simply superb.. wow!I m completely agree with ILA@இளா...Pls தொடர்ந்து எழுதுங்க, sir! Thanks a lot.

    ReplyDelete
  5. Thank you Madam Sugana and Shri Bandhu!

    ReplyDelete
  6. சூப்பரா உங்க அனுபவத்த சொல்லியிருக்கீங்க சார்..!!தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. திரு. சேலம் தேவா அவர்களுக்கு எனது தீபாவளி நல்வாழ்த்துக்களும்- நன்றியும்.

    தாங்கள் சமீபத்தில் இந்த ஆனையாம்பட்டிக்கு சென்றிருக்கிறீகளா?

    ReplyDelete
  8. SUPER NARRATION... WE RECALL OLD DIWALI

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. உங்களுடைய எழுத்து நடை மிகவும் அருமை... 'தீபாவளி லேகியம்' அப்டீன்னா என்ன சார்?

    ReplyDelete
  11. Dear Shri Karthik! It is a kind of medicine, in paste form, prepared at home, for 'Indigestion' and the Ingredients are herbals. Even now in departmental stores you can buy "Deepalavali Marundhu"

    ReplyDelete
  12. sir,
    this post reminds me the "srirengathu devathaigal" by great Sujatha.
    very nice!!!

    ReplyDelete
  13. well written.

    excellent.

    - vimal

    ReplyDelete
  14. மிகவும் சரளமாக தமிழ் விளையாடி இருக்கிறது சார். கோர்வையாக தீபாவளி பண்டிகையை பார்த்த திருப்தி.
    அரசு

    ReplyDelete
  15. மிகவும் சரளமாக தமிழ் விளையாடி இருக்கிறது சார். கோர்வையாக தீபாவளி பண்டிகையை பார்த்த திருப்தி.
    அரசு

    ReplyDelete
  16. பலராமன், மிகவும் அருமை அந்த காலத்து கிராம தீபாவளிக்கு அழைத்துச் சென்று மூழ்க வைத்து விட்டீர்கள்

    ReplyDelete
  17. அப்படியே எங்கள் வீட்டில் நடந்தது போலவே இருந்தது சார்...பெயரை மட்டும் மாற்றினால் போதும். குறிப்பாக அந்த அத்திம்பேர் விஷயம் நூற்றுக்கு நூறு உண்மை. என்னை ஒரு 40 வருடம் பின்னோக்கு அழைத்து சென்றமைக்கு நன்றி நன்றி நன்றி....

    ReplyDelete
  18. அத்திம்பேர் வெடி வாங்கி தராத காரணம் என்னவோ?

    ReplyDelete