Wednesday, December 28, 2011

தவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-3/3)


தவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள்    (பாகம் – 3/3)

 

          1.   மற்றவர்களிடம் இருப்பதெல்லாம், உங்களிடமும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை! மற்றவர்களிடம் இருப்பதையே பார்த்துக் கொண்டிருந்தால், உங்களிடமிருப்பதை பார்க்கத் தவறிவிடுவீர்கள்! திருப்தி என்பது வெளியில் இல்லை! உங்களுக்குள்தான்!

வாழ்வின் இறுதியில் தான், பொறாமையினால், எவ்வளவு தினங்களை வீணடித்திருக்கிறோம் என உணர வேண்டும் என்பதில்லை. இப்போதே கண்டு கொள்வோம். இறுதியில் கொண்டு போவது எதுவுமில்லை! எனவே ‘பொறாமைஎன்பதை அறவே நீக்குவோம்! முயற்சி என்பது வேறு-பொறாமை வேறு!

 

        2.    அன்றைக்கு ஒரு மனை வாங்கிப் போட்டிருந்தால்...., அப்போதே இன்னும் தங்கம் வாங்கியிருந்தால்..., வேறு வேலைக்கு போயிருந்தால்.., அப்படிச் செய்திருந்தால், இப்படி செய்திருந்தால் – இன்றைக்கு எங்கேயோ போயிருப்பேன் என சொல்வதை பலரும் கேட்டிருப்போம். கடந்த காலத்தில் செய்திருக்க வேண்டிய செயல்கள் குறித்து, இன்று புகார் ஏதும் கூற வேண்டாம். இபோது விசனப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை! அது மாத்திரமல்ல,  எந்த நிகழ்வும், நடக்கும்போதே அதன் பின் விளைவுகள் குறித்து, பூரணமாக அறிந்து கொள்ளும் அளவுக்கு உலகில் எவரும் இல்லை!   நேற்று இருப்பதைக் காட்டிலும் இன்று நன்றாக இருக்கிறீர்கள் தானே! அதுகுறித்து புன்னகை செய்யுங்கள்! நேற்றைக்காக இன்று வருந்துவதை விட இன்றைக்காக வாழ்வது புத்திசாலித்தனம்.


3.       எவரையும் வெறுக்காதீர்கள்! இதனால் காயமடைவது நீங்கள்தான்! அவர்கள் அல்ல! “மன்னிப்பு என்பதன் பொருள் “ நீ எனக்கு தீங்கிழைத்து விட்டாய், அதைப் பொறுத்துக் கொண்டுவிட்டேன் என்பது அல்ல மாறாக, ‘நீ எனக்கு தீங்கிழைத்தது,  நான் கஷ்டப்பட வேண்டும் என்பது தான்; ஆனால் உனது செய்கை என்னைத் துன்பப்பட அனுமதிக்க மாட்டேன் என்பது தான். பிறர் உங்களுக்கிழைத்த தீங்கினின்றும் வெளியே வாருங்கள்! அமைதி கொள்ளுங்கள். மேலும் மன்னிப்பு என்பது பிறருக்கு அளிப்பது மாத்திரமல்ல! உங்களுக்கும் வழங்கிக் கொள்ளுங்கள்! “அடுத்தமுறை இந்த மாதிரி அசட்டுத்தனமான், தவறான காரியங்களைச் செய்யாதேஎன உங்களையும் மன்னித்துக் கொள்ளுங்கள்.

4.       உங்களுக்கான ‘தரம்என்ன என்பதை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மற்றவர்களின் ‘நெருக்குதலுக்காக உங்களது தரத்தினை தாழ்த்திக் கொள்ளவே கூடாது.

உதாரணத்திற்கு: ‘அலுவலகத்தில் ஏராளமான அதிகார துஷ்பிரயோக கும்பல் இருக்கும்’  அவர்கள், அலுவலக வாகனம், பணம், பொருள் போன்ற வற்றை ‘பயன்படுத்திக் கொள்வார்கள்! அது அவர்களது ‘தரத்திற்கு சரி. உங்களது கொள்கைப்படி  சரிப்படாது  எனில், என்னால் முடியாது என மறுத்து விடுங்கள்.

 

5.       மற்றவர்களுக்கு தேவையின்றி விளக்கமளிப்பதை நிறுத்துங்கள்! உங்களது நிஜமான  நன்பர்களுக்கு உங்களது ‘விளக்கம் தேவைப்படாது! எதிரிகள் நீங்கள் என்ன சொன்னாலும் ‘நம்ப மாட்டார்கள்’!  பின் ஏன்  நேர விரயம்? மனசாட்சிப் படி செயல்படுங்கள்.

6.       செக்கு மாட்டு வேலை உதவாது.  செய்தவற்றையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருந்தீர்களானால், இப்போது கிடைப்பது தான் திரும்ப திரும்ப கிடைக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், மற்றவற்றையும் செய்யுங்கள். பணத்திற்காக மட்டும் அல்ல! அனுபவத்திற்காகவும் கூட!

7.       வாழ்வின் “அற்புதகணங்களை தவற விடாதீர்கள். வாழ்க்கையில், சந்தோஷமளிக்கும் விஷயங்கள் யாவும் பெரியதாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை! அழகை ரசியுங்கள்.

ஐந்து வருடத்திற்கு முன் எனது பேரன், வரைந்து வைத்த ஒரு சித்திரம்,

ஒரு பிச்சைக்காரன் தன்னிடம் இருக்கும் ஒரு ரொட்டியினை விண்டு, ஒரு தெரு நாய்க்கு போடும் ஒரு புகைப்படம்,

முன் பின் தெரியாத ஒருவருக்கு, அவசர நேரத்தில் செய்த உதவிக்காக, அவர் எழுதிய நன்றிக் கடிதம் ஆகியவை என்னிடம் உள்ளன! இவை தரும் சந்தோஷம் வேறு எதற்கும் குறைந்ததல்ல!

8.       எல்லா நடைமுறைகளிலும், விடாப்பிடியான முழுமையாளியாக (Perfectionist) இருப்பது முடியாது, தவறு. வறட்டுத்தனமாக Perfection  பார்ப்பவர்கள் வீட்டிலும், அலுவலகத்திலும் வெறுக்கத்தக்க மனிதராக இருப்பர். குழந்தை 5.15-க்கு விளையாடப்போய், 6.15-க்கு படிக்கப் போய், 8.00க்கு சாப்பிட்டுவிட்டு 9.15-க்கு தூங்காவிட்டால் என்ன குடி முழுகிப் போச்சு? ஒரு அரைமணி நேரம் அதிகமாக விளையாடினாலோ, டி.வி பார்த்தாலோ ‘காச்-மூச்கூடாது!

9.       எப்பொழும், இருப்பதிலியே மிக்ச் சுலுவான வழிகளைத் தேடிக் கொண்டிருக்காதீர்கள். கொஞ்சம் வேறுவகையாகத்தான் முயலுங்களேன்!

10.    மற்றவர்களுக்காக உணர்ச்சிகளை மறைக்க வேண்டாம். வாய்விட்டு சிரிக்கத் தோன்றுகிறதா? சிரியுங்கள். அழவேண்டும் போல் உள்ளதா? அழுங்கள். எப்போதுபம் இரும்பு மனிதன் போர்வை போர்த்திக் கொண்டிருப்பது தப்பாட்டம்.

11.    உங்களது கனவுகளின் ‘வெற்றி என்பது நீங்கள் எவ்வளவு முயன்றீர்கள்-அதற்கு எவ்விதம் பொறுப்பேறுக் கொண்டீர்கள் என்பதில் தான் உள்ளது. பிறர்மீது ‘சௌகரியமாக பழிபோடுவதில் அல்ல!

12.    எல்லாமுமாக, எல்லோரிடத்திலும் இருக்க முயல்வது சாத்தியமானதல்ல! எனவே பன்முகத்தன்மை என்பதை ஓரளவோடு நிறுத்திக்கொண்டு ‘குறிப்பிட்ட துறையில் ‘ஒருமுகமாக ஈடுபடுவதே நல்லது!

   13.   கவலைகள் உங்களது தினங்களை விழுங்க அனுமதிக்க வேண்டாம்.
     அதீத கவலைகள் தீங்கானவை.

14.    தேவையற்ற, நடக்க இயலாத செயல்களில் கவணம் செலுத்த வேண்டாம்.

15.    நன்றி கெட்ட மனிதராக ஒருபோது இருக்காதீர்கள்!  “நன்றிஎன்பது விலங்குகளிடம் கூட இருக்கிறது. 

    இது (இறுதி) முன்றாம் பகுதி.  
    முதல் பகுதிக்கு Click here
    இரண்டாம் பகுதிக்கு Click here

Sunday, December 25, 2011

தலைப்பைப்பார்த்து... (Few things left unsaid.” Book review:)


தலைப்பைப்பார்த்து... 
:Few things left unsaid……..”  Book review:
(231 pages; Rs. 100/- by Srishti  Publishers, New Delhi)
ஆசிரியர் “சுதீப் நகர்கர்”.



நெட்டில் சர்ஃப் செய்து கொண்டிருக்கும் போது ஒரு புத்தகம் கண்ணில் பட்டது! Few Things left Unsaid.

 “சொல்லாமல் விடப்பட்ட சில விஷயங்கள்..இந்த தலைப்பே “இலக்கியமாகஇருந்ததால், படித்தே ஆகவேண்டும் என்ற உணர்ச்சி உந்த, ஆர்டர் செய்தேன்.

இஞ்சினியரிங் காலேஜில் சேரும் ஒரு மாணவன், முதலாம் ஆண்டே காதலில்(!)  விழுகிறான். இது அமரக்காதலாம்! ஆறே மாதத்தில் இந்த உண்மைக் காதல் பிடிங்கிக் கொள்கிறது. அதற்கு  காரணம் நாயகனே! இதற்கான விளக்கங்கள் சொதப்பலாக சொல்லப் படுகிறது! ஒரு லாஜிக்கும் இல்லை!

உடனே நாயகன் ‘பீர் அடிக்கிறான் ‘தம்அடிக்கிறான். ஒருவருடம் ‘அரியர் வைக்கி றான். நாயகியோ வேறு ஒருவனை நாடிச் செல்கிறாள். இந்த இரண்டாம் காதலன்,  நாயகியைப் ‘பயன்படுத்திக் கொண்டு விட்டு விலகுகிறான்.

மீண்டும் அந்த பெண், பழைய காதலனிடமே வருகிறாள். இருவரும் சேருகிறார்கள். கதை இத்தோடு நின்றாலும் பரவாயில்லை! மீண்டும் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். பிரிகிறார்கள்.

ஒரு ‘டைம்பாஸ்நாவலுக்குக் கூட தேறாத கரு! மஹா போர். புத்தகமெங்கிலும் திரும்பத் திரும்ப, ஒரே மாதிரியாக வரும் வர்ணனை களும், நிகழ்வுகளும் 'கொட்டாவி' விட வைக் கின்றன.

எல்லாம் சரி.... சண்டையெல்லாம் முடிந்து ஒன்று சேர்ந்து விட்டு, மீண்டும் எதற்காக, நாயகன் இரண்டாம் முறையும் சண்டை போட்டுக் கொள்கிறான்? அந்த பெண் கூறும் ‘பணம் கதையில் எங்கிருந்து முளைத்தது? அது என்ன ரூ. 18,000/- ? புரிந்தவர்கள் சொல்லுங்கள்!

பைசாவுக்கு பெறாத கதைக் கரு! அமெச்சூர் தனமான, மோசமான, சலிப்பூட்டும் நடை! ஒருவேளை ‘விடலை களுக்குப் பிடிக்கலாம்!. ‘சேதன் பகத்தைப் பார்த்து ‘சூடு போட்டுக் கொண்டாரா ‘சுதீப்?


இது நேஷனல் பெஸ்ட் புக் செல்லராம்! கஷ்டம்!



தவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் பகுதி (2/3)


1.       காலம் உங்களிடம் விட்டுச் சென்ற தழும்புகளைப் பற்றியும், கசப்பான அனுபங்களையும் சதா நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். அதனால் ஒரு பயனும் இல்லை. (இது சம்பந்தமாக இன்னொரு கட்டுரை). அதே போல உங்கள் நன்பரோ, உறவினரோ, அலுவலகத்தில் வேலை செய்பவரோ, எப்போதோ ஒரு தவறு செய்திருந்தால், அதே கண்ணோட்டத்திலேயே அவர்களைப் பார்ப்பது அபத்தம். நீங்கள் எப்படி பண்பட்டிருப்பதாக  நம்புகிறீர்களோ, அதே போல மற்றவர்களும் ரிஃபைன் ஆகியிருப்பார்கள். எனவே கடந்தகால அபிப்ராங்களை விடாப்பிடியாக வைத்திருக்க வேண்டாம்.

2.       ஒரு முடிவெடுத்தாக வேண்டிய நிலை! எங்கே அது தவறாகிவிடுமோ என பயந்துகொண்டு முடிவெடுக்காமலிருக்கிறீர்கள்! முடிவே எடுக்காமலிருப்பதைக் காட்டிலும், சில தவறான முடிவுகள் பரவாயில்லை!. ஏனெனில் ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் சில தோல்வியில் முடிவடைந்த முயற்சிகள் இருக்கின்றன. எனவே தவறுகளுக்கு பயப்படாதீர்கள்.

 

          3.       சில சமயம் தவறான மனிதர்களுடன் பழகியதற்காகவும், தவறான செய்கைகளுக்காகவும்  நாம் வருந்தியிருக்கிறோம். அந்த அனுபவங் களிடமிருந்து பாடங்கள்தான் கற்றுக் கொள்ளப்படவேண்டுமே தவிர, அவற்றை நினைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதினால் பலனொன்றும் இல்லை!

4.      மகிழ்ச்சியென்பது விலைக்கு வாங்கும் சரக்கல்ல! எனவே அவற்றை “பார்களிலும் மற்ற இடங்களிலும் தேட வேண்டாம். அது உங்களுள் இருப்பது! கடமைகளை விருப்பமுடனும், காதலுடனும் செய்யுங்கள். ஒரு நாளைக்கு 10 முறையாவது வாய்விட்டு சிரியுங்கள். மகிழ்ச்சி உங்களிடம் வாசம் செய்யும்.

5.      உலகில் யாரை உங்களுக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும்? உங்களைத் தானே? உங்களை உங்களுகே பிடித்திருக்கிறதா என (நேர்மையாக) வினவிக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே விரும்பாத நிலையில் மற்றவர்கள் உங்களை  நேசிக்க வேண்டும் என விரும்புவது சரியில்லை!

6.       சோம்பியிருக்காதீர்கள். சோம்பலான மனது “இல்லவே இல்லாத கஷ்டங்களை யெல்லாம் இருப்பதாக் கற்பித்துக் கொள்ளும். பிரச்சினைகளை சந்திப்பதை தவிர்க்க்ச் சொல்லும். எனவே உடலை மாத்திரமல்ல; மனதையும் சுறுசுறுப்பாக, பாஸிட்டிவாக வைத்துக் கொள்ளுங்கள்!

7.       ஆற்றில் குதிக்காதவரை நீச்சல் வராது! தயங்கிக் கொண்டே இருந்தீர்களானால், ஆற்றின் கரையிலேயே உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டியது தான். எனவே சந்தர்ப்பம் கிடைக்கும்போது புதிய சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள். இத்தகைய சவால்கள்தான் உங்களை திறமையிலும், அறிவிலும் மேலே இட்டுச் செல்லும். இறங்கிப்பார்த்தால், நாம் அஞ்சும்படியாக அந்த சவாலகள் இருக்காது!

8.      மோசமான  நன்ப / நன்பிகளை விட தனிமை பல மடங்கு உத்தமமானது! அதே போல ஒரு காதலர்களை தேர்ந்தெடுப்பதிலும் அவசரம் வேண்டாம்.  ‘அலைவரிசை ஒத்து வரும் பொழுது தானே நிகழும்! தடியால் அடித்து “கனியவைத்தால்”  வெம்பித்தான் போகும்.

9.       தோல்வி கண்ட பழைய நட்பு / காதலின் அனுபவக் கண்கொண்டு ‘புதிய நட்புக்களைபார்க்காதீர்கள். ஒன்று போலவே இருப்பதற்கு மனிதர்கள் ‘இயந்திரங்கள் அல்ல’. அவர்கள் தனித் தனியானவர்கள். கடந்து போன நட்பு போலவே, புதியது இருக்கும் என்று கட்டாயமில்லை!

10.   வாழ்க்கை ஒன்றும் “கார் பந்தயம் அல்ல! வழியில் பார்கிறவர்கள் எல்லோரையும் ‘முந்திச் சென்றாக வேண்டும் என வம்படித்துக் கொண்டிருக்காதீர்கள். எந்த நிலைக்கு உயர்ந்தாலும் / தாழ்ந்தாலும் உங்களை விட உயர்ந்த நிலையில் / தாழ்ந்த நிலையில் மக்கள் கட்டாயம் இருப்பார்கள். எனவே எல்லோரையும் வெல்ல வேண்டும் என்பதைத் தவிர்த்து  நீங்கள் ‘உங்களைவெல்வதற்கு முயலுங்கள்.

                                   -o-
இத்தொடர் முன்று பகுதிகளைக் கொண்டது.
முதல் பகுதிக்கு Click here
மூன்றாம் பகுதிக்கு Click here

Saturday, December 24, 2011

தவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)


திரு கேசவன் சக்ரவர்த்தி என, ஒரு ஃபேஸ்புக் நன்பர். அவர் சிபாரிசு செய்த ஒரு கட்டுரை எனக்கு பிடித்திருந்ததால், அதன் தமிழாக்கத்தினை பகுதி பகுதியாக, வழங்க உத்தேசம்!

 

தவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள்    

1.       உங்களது நேரத்தை விழுங்குவதற்காகவே சிலர் காத்திருப்பர். நேரத்துடனே, உங்களது சந்தோஷத்தினையும், சேர்த்து விழுங்குவர். அது மாத்திரமல்ல, வேண்டாத சில வட்டங்களுடன் உங்களை கோர்த்தும் விடுவார்கள். சில சமயம் “கூடா நட்பு கேடாய் முடியும்!”  எனவே தவறான மனிதர்களுடன் உங்களது நேரத்தை செலவிடுவதை தவிருங்கள். முடியாவிட்டால் குறைவாக செலவிடுங்கள்.

 

2.      அலுவலகத்திலோ, வீட்டிலோ பிரச்சினை வராமலா இருக்கும்? பிரச்சினையைக் கண்டு கலங்குவது, காயப்படுவது, தடுமாறுவது, துன்பப்படுவது போன்ற உபாதைகளுக்கு ஆளாதவர்கள் யார்?  ‘பிரச்சினைகளைக்கண்டு மறைந்து கொள்வது அல்லது தீர்வினைத் தள்ளிப் போடுவது’ - பெரும்பாலோர் கடைப்பிடிக்கும் உபாயம்! இதற்கு மிகச் சுலபமான மருந்து ஒன்று உள்ளது! அது பிரச்சினையை நேருக்கு நேர் சந்திப்பது! கடினமானது போலத் தோன்றும். அது உண்மையல்ல! தீர்வுகளில்லாத பிரச்சினை என்று ஒன்று உலகில் இல்லை!  எனவே பிரச்சினைகளைக் கண்டு ஓடாதீர்கள். அது உங்களுக்கு மதிப்பிடமுடியாத அனுபவத்தைத் தரும்! அறிவைத் தரும்! உங்களைப் பண்படுத்தும்!

 

3.      சே..சே... நான் அப்படியெல்லாம் செய்வேனா?  என்னால் முடியாதது ஒன்றுமே இல்லை!  என்னை மாதிரி ‘ நேர்மையாளரை பார்க்கவே முடியாது! -- இந்த மாதிரி ‘பஞ்ச் டயலாக்குள் அடிக்காதவர்களை பார்க்காமலிருக்க முடியுமா? எவரோ சப்தமில்லாமல் சாதித்துக் காட்டிய ஒன்றை தான் செய்ததாக டமாரமடித்துக் கொள்ளும் இது போன்ற ஆசாமிகளை அலுவலகங்களில் காணாமல் இருக்க முடியுமா?  புரிந்து கொள்ளுங்கள் ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க! எனவே உங்களுக்கு  நீங்களே பொய் சொல்வதை நிறுத்துங்கள்!


4.       எனக்கு எதுவும் வேண்டாம். எல்லாம் மற்றவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் என சொல்லும் நபர்களையும், சிறந்தவை அனைத்தையும் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, ‘சக்கையை எடுத்துக் கொள்ளும் பெண்களையும் அறிவேன். இது மகா தவறு! மற்றவர்களுக்கு உதவுவதில் தவறே இல்லை! அதற்கு விலையாக உங்களது சந்தோஷத்தினையும், தேவையையும் கொடுப்பது தேவையில்லை! எனவே உங்களுக்காகவும் வாழுங்கள்!

5.       சிலர் விந்தை மனிதர்கள் இருக்கிறார்கள்! "சகல கலா வல்லவர்களாக" தங்களை பாவித்துக் கொள்கிறார்கள்! அப்போதுதான் மற்றவர்களின் மதிப்பினைப் பெற முடியுமாம்! “அவருக்கு எல்லாம் அத்துபடியப்பா என பிறர் சொல்லக் கேட்பதில் ஆனந்தம். உண்மை என்னவெனில், அப்படி ஒரு மனிதர் உலகில் இருக்க வாய்ப்பே இல்லை! உங்களுக்கு என்ன வருகிறதோ, நீங்கள் என்னவாக உண்மையில் இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். அதற்குண்டான மதிப்பும் மரியாதையும் தானே வரும்! எனவே உங்களிடம் இல்லாததையெல்ல்லாம் இருப்பதாக காட்டிக் கொள்ள வேண்டாம்..

 

     இத்தொடர் மூன்று பகுதிகளைக் கொண்டது

      இரண்டாம் பகுதிக்கு இங்கே கிளிக் செய்யவும்
     மூன்றாம் பகுதிக்கு இங்கே கிளிக் செய்யவும்

சிறார்களுக்கு (16)


ஆயுத பூஜை (16) 

அது ஒரு அலுவலகம். மறுநாள் ஆயுத பூஜை. ஆயுத பூஜையைக் கொண்டாடுவதற்காக, ஒரு மீட்டிங் போட்டார்கள். அலுவலகர்கள் யாவரும் மிகவும் ஊற்சாகத்துடன், ஆளுக்கு ஒரு வேலையினை ஏற்றுக் கொண்டனர்.

ஒருவர், தான் 'சரஸ்வதி' படத்தினை அளிப்பதாகச் சொன்னார். மற்றொருவர் 'சர்க்கரைப்பொங்கல்' கொண்டுவருவதாகச் சொன்னார். மற்றோருவர் 'சுண்டல்', இன்னொருவர் அலுவலகத்தை சுத்தம் செய்வதாகச் சொன்னார். மற்றும் ஒருவர் அலுவலகத்தை அலங்காரம் செய்வதாகச் சொன்னார்.

அந்த அலுவகலத்தில், ‘சோனாசலம் என்று ஒருவர் இருந்தார். எங்கே மீட்டிங்கில் இருந்தால் தானும் ஏதாவது செய்ய வேண்டிவருமோ என அச்சம் எழுந்தது அவருக்கு!. மீட்டிங்கிலிருந்து ‘நைசாக  நழுவினார்.

மறுநாள் ஆயுத பூஜை! ஆளுக்கு ஒன்றாக பங்களிப்பு இருந்ததால் பூஜை மிகச் சிறப்பாக நடந்தது. பூஜையின் முடிவில் அனவருக்கும் பிரசாத ‘பாக்கட்டுகள் அளிக்கப்பட்டன.  அனைவரும் மிக்க மகிழ்ச்கியுடன் பாக்கட்டுகளைப் பெற்றுக்கொள்ள, நமது ‘சோனாசலம் பாக்கட்டை வாங்கிக் கொள்ளும் போது தலை குனிந்தவாறு, சற்று ‘வழிந்தபடி தான் வாங்கிக் கொள்ள முடிந்தது.

நீதி: எவர் பங்களிப்பு செய்வதில்லையோ, அவர் பங்கு பெறுவதிலும், தானாகவே, உரிமையற்றவராகிறார். கடமையைச் செய்யாதவர்கள், உரிமைகளைக் கோருவதிலும்,  தயங்கத்தான் நேரிடும்.



Thursday, December 22, 2011

சிறார்களுக்கு (14)


14.திரும்பத் திரும்ப......

தியாகு என்று ஒருவர். அவர், எந்த நேரமும் தனக்கு தீங்கு செய்தவர் களைப்பற்றியே, நினைத்து நினைத்து மருகிக் கொண்டிருப்பார். அவர் இப்படி எனக்கு தீங்கிழைத்தார்; இவர் எனக்கு இப்படி தீங்கிழைத்தார் என பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். அப்படியும், மனம் நிம்மதி அடையவில்லை!

ஒரு நாள், அவர், ஒரு அறிஞரை சந்திக்க நேர்ந்தது! அவரிடமும் போய், தனது உறவினர்கள், தனக்கு தீங்கிழைத்த கதையினை விபரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்!

தியாகுவை, ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார் அந்த அறிஞர். “உனக்கு பிடிக்கவே பிடிக்காத சினிமாவின் பெயர் ஒன்று சொல் என்றார்.  தியாகுவும் சொன்னார்.

உடனே, அந்த அறிஞர், அந்த சி.டி யை வரவழைத்து, DVD பிளேயரை 'ஆன்' செய்துவிட்டு, ரூமின் கதவுகளை வெளிப்புறமாகத் தாளிட்டுவிட்டு, இந்த சினிமா முழுவதையும் பார் என்றார். சொல்பவர் அறிஞர் ஆயிற்றே? மறுக்காமல் மூன்று மணி நேரம் சங்கடத்துடன், நெளிந்தவாறே உட்கார்ந்து பார்த்தார்!  படம் முடிந்தது! உள்ளே வந்தார் அறிஞர். அதே சி.டி யைப் போட்டு,  மீண்டும் அந்த சினிமாவைப் பார் என்று சொல்லிவிட்டு, கதவை தாளிட்டுக் கொண்டு சென்று விட்டார். இந்த முறை தாங்கமாட்டாத சலிப்புடன் அதைப் பார்த்தார். அறிஞர் விடவில்லை! முன்றாம் முறையாக, மீண்டும் பார் என்றார்.

வெகுண்டெழுந்தார் தியாகு! “பைத்தியமா நீ? இந்த பாடாவதிப் படத்தை ஒரு முறை பார்ப்பதே தண்டனை! மூன்று முறை பார்ப்பதற்கு நான் என்ன கிறுக்கா? நீர் அறிஞரே அல்ல; சரியான மூடன் என சீறிப் பாய்ந்தார்.

சிரித்தவாரே கேட்டார், அறிஞர். “நீ பார்த்தது சினிமாதானே?

“ஆம்

“அதில் நடந்தது நிஜம் அல்லவே?

“இல்லவே இல்லை!

“இந்த சினிமா உன்னை, உண்மையாக கொடுமைப் படுத்தியதா?

“நிஜமாக இல்லை தான்! அதற்காக ஒரு மோசமான சினிமாவை எதற்காக திரும்ப திரும்ப பார்க்கவேண்டும்? அது என்னை கோபமுற வைக்கிறதே?

“உனக்கு பிடிக்காத ஒரு பிம்பத்தை, மூன்று முறை திரும்ப திரும்ப பார்ப்பதே உனக்கு கிறுக்குத் தனமாகத் தோன்றுகிறதல்லவா?

“வேறு எப்படித் தோன்றும்? இது சரியான பைத்தியக்காரத்தனம் தான்!

"ஆனால், நீ உனக்குப் பிடிக்காத நினைவுகளை (உனக்கு கெடுதல் செய்தவர்களின் நினைவுகளை) மட்டும் எதற்காக தினமும் மனதில்,திரும்ப திரும்ப போட்டு பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய் ?

தியாகுவிற்கு சட்டென்று எல்லாம் புரிந்தது!







“உண்மைதான்! வேண்டாத நினைவுகளை ரிவைண்ட் செய்து, ரிவைண்ட் செய்து பார்ப்பதினால் என் மன நிம்மதிதான் கெடுகிறது! இந்த கணமே அவைகளை தூக்கி எறிந்தேன் என கூறிவிட்டு, மகிழ்ச்சியுடன் வெளியேறினார் தியாகு!

========================================================================
நீதி:  உனக்கு கெடுதல் செய்தவர்களை மற! அந்த நினைவுகளினால்
      பலனொன்றும் இல்லை! உன் மன நிம்மதியை இழப்பதைத் தவிர!
========================================================================



Wednesday, December 21, 2011

அரசும் அதிகார மையங்களும்.



அரசு:
மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள், அரசாங்கத்தினை நடத்துவதற்கு அதிரகாரமளிக்கப்படுகின்றன. கோட்பாடு ரீதியில், இது சரிதான். ஆனால் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மிக்க மக்கள், தங்கள் கையில் வைத்திருக்கும் வாக்குச் சீட்டில் வைக்கப் போகும் முத்திரையின் ‘முக்கியத்துவம்,பொறுப்பு, ‘இந்த சீட்டுதான் தங்களை அரசாள்வதற்கான உரிமையையும், அதிகாரத்தினையும் அளிக்கிறது என்பனவற்றை ஊணர்ந்திருக்கிறார்களா – என்றால், 100% உறுதியாகக் கூற இயலவில்லை; சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கழிந்தும்!


தங்களது அரசாங்கத்தினை தேந்தெடுப்பதற்கு, மேற்சொன்ன காரணங்களுக்கு புறம்பாக, ‘சில ஈனமான காரணங்களுக்காக  வாக்களிப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது! திருமங்கலம் ‘ஃபார்முலாக்கள் இதைத்தான்  தெரியப்படுத்துகின்றன.

‘எக்காலத்திலும், மக்கள் முழுவதுமே, இப்படித்தான் வாக்களிக்கிறார்களா என்றால், அப்படி இல்லை! மேற்கு வங்கம், தமிழக ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் தெளிவாகவே இருக்கின்றன. “ஆகவே... மக்களனைவரும் அரசியல் தெளிவும், அரசியல் அறிவும் பெற்றுவிட்டனர் என்ற முடிவுக்கும்  வந்து விடலாகாது! அவர்களுக்கே பொறுக்க முடியாத அளவிற்கு ஊழலும், அராஜகமும், அதிகார துஷ்ப்பிரயோகமும் தலைவிரித்தாடின என்றுதான் கொள்ள வேண்டும்.

வாரிசுகள்:

இப்படியாக, ‘ஏதோ ஒரு வகையில் அரசாங்கத்தினைக் கைப்பற்றும் கட்சிகளின் தலையினைப் பார்த்தால், அது ‘ஒரு முடியாட்சி அரசியல் போலத்தான் இருக்கிறது! தலைவருக்குப் பின் அவரது மகன்; பின் அவரது மகன் என்றுதான், துயரமாகப் போய்க் கொண்டிருக்கிறது!  இதற்கான நிரூபனத்தை தேடுவதற்கு, சிரமம் ஏதும் வைக்க வில்லை நமது அரசியல் கட்சிகள். ஜவஹர்லால் நேரு காலந்தொட்டு, சில காலம் நீங்கலாக, இன்றளவும், நாட்டை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஆள்வது நேரு குடும்பம் தான்.  கருணாகரன், கருணாநிதி,  என அரசியலில்  வாரிசுகளை கொணர்ந்தோர்களை, அடுக்கிக் கொண்டே செல்லலாம். 

இம்மாதிரியான வாரிசு அரசியல் உலகெங்கும், இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்தாலும், இந்தியா போல ‘சாசுவதப் படவில்லை’.  குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் இது அதிகம்.  'இது என்ன அநியாயம்' என்ற கோபமும் யாருக்கும் இல்லை!

என்ன காரணம்:

கட்சிகளில், உட்கட்சி ஜன நாயகம் என்பது முற்றிலும் அற்றுப் போய்விட்டதே வாரிசு அரசியலுக்குக் காரணம். சோனியாவையோ, கருணாநிதியையோ எதிர்த்து, அவர்கள் கட்சியில் எவர் போட்டியிட முடியும்? போட்டியிட்டுவிட்டு ஊர் போய்ச்சேர முடியுமா? உட்கட்சி ஜனநாயகம் என்பது பெயரளவிற்குத்தான் உள்ளது!

தலைமை தனிமைப்படுகிறது!

வாரிசு அரசியல், தலைமையினை தனிமைப்படுத்துகிறது! அதாவது, தலைவர்களின் “வாரிசு பாசம் அவர்களது கண்களை மறைக்கிறது!  எனவே, அவர்களது  தீர்மாணங்கள் யாவும் ‘மக்களின் நலன்களைவிட வாரிசுக்கு லாபமானதா என்பதை வைத்தே முடிவெடுக்கப் படுகிறது.

இந்த வாரிசுகளைச் சுற்றி, எப்போதும் ஒரு ‘களவாணிக் கூட்டம் சுற்றிக் கொண்டே இருக்கும். இவர்களது முக்கிய வேலையே, கட்சியின் தலைமைக்கு,  நாட்டின் உண்மை நிலைமையின மறைப்பது தான். அடுத்த வேலை, உண்மையான நேர்மை யானவர்களையும், திறமையானவர்களையும்  தலைமையினை நெருங்காமல் பார்த்துக் கொள்வது! அடுத்து, மக்களின் உணர்வுகளை, ஏமாற்றங்களை, கோபங்களை, ஆத்திரத்தை, எதிர்பார்ப்புகளை தலைமையிடமிருந்து மறைப்பது! இந்த வேலையில் இந்த ‘ சட்டத்திற்கு புறம்பான அதிகார மையங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுவிடும். இந்த அதிகார மையங்களின் முக்கிய நோக்கம், முடிந்தவரை ‘கொள்ளையடிப்பது, நிலங்களை அபகரிப்பது ஆகியவை தான். நிழலான (மறைவான) காரியங்களைச் செய்து திருடும் இக்கும்பல், பழியினை சாமர்த்தியமாக ‘தலைமை மீது திருப்பி விட்டு விடும். இந்த கோஷ்டிகள் வெகு எளிதில் வாரிசுகளின் பெயர்களைச் சொல்லி தலைமையை வளைத்துப் போட்டுவிடுவதில் வல்லவர்களாக இருப்பர்.  

கொஞ்சம் பின்னால்:

கொஞ்சம் வயதானவர்களுக்குத் தெரியும். 1975-ல் இந்திரா காந்தி ‘எமர்ஜென்ஸிகொண்டுவந்தார். ஜனநாயகம் ‘சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதற்குக் காரணமே ‘அதிகாரக் கும்பல் தான். இந்த கும்பலுக்கு அப்போதைய பெயர் ‘Extraordinary constitutional authority’ (Caucus) .  அடக்கு முறைகளும், ஜனநாயக விரோத செயல்களும் கூச்ச நாச்சமின்றி இந்தியா முழுதும் அரங்கேறியது! அடித்த கொள்ளைகளுக்கு கணக்கில்லை!  இந்த கும்பலின் முக்கிய புள்ளியாக இருந்தவர், இந்திரா காந்தியின் புதலவர் திரு. சஞ்சய் காந்தி!  அடுத்த தேர்தலில் படு தோல்வி அடைந்த்து காங்கிரஸ். தெரிகிறதா வாரிசுகளின் வேலைகள்!

தலைமையின் பொறுப்பு:

கட்சித்தலைமைக்கு கொஞ்சமேனும், மக்களைப் பற்றிய சிந்தனையும், நாட்டைப் பற்றிய அக்கறையும் இருந்தால், தன்னைச் சுற்றி அதிகார மையங்களை உருவாக விட மாட்டார்கள்! காமராஜர், ராஜாஜி, வாஜ்பாய், நிருபன் சக்ரவர்த்தி, ஜோதிபாசு ஆகியோர் சிறந்த உதாரணங்கள். இதற்கு மாறாக ‘சம்பாதிப்பதையே நோக்க மாக்க் கொண்டிருந்தால், அதிகார மையங்கள் உருவாவதை தவிர்க்க முடியாது!

அதிகார வர்க்கம்:

நாம் குறிப்பிடும் ‘அதிகார மையங்கள் முக்கிய வேலையாக்ச் செய்வது, அதிகார வர்க்கத்தினை வளைத்துக் கொள்வது தான். நாட்டின் துரதிர்ஷ்டம் என்ன வெனில், நமது அதிகார வர்க்கம், முதுகெலும்பற்றதாக மாறி விட்டது தான். அதிகார மையம் போடும் எலும்புத் துண்டுகளுக்காக ‘ஏவல் நாய்களைப் போல (இந்த வார்த்தையினைப் பயன் படுத்தியதற்காக மன்னிப்பு கோருகிறேன்), அவர்கள் சுட்டிக் காட்டிய திக்கிலெல்லாம் பாய்கின்றனர்,! கொடுமை என்ன வெனில், இவர்கள் ரிடயர் ஆனதும் ‘நீட்டி முழக்கி அநியாயங்களைப் பற்றி புத்தகமாக எழுதுவார்கள்!

யார் என்ன மிரட்டினாலும், சட்டப்படிதான் நடப்பேன் என ஐம்பது சதமான அதிகாரிகள் உறுதி மேற்கொண்டாலே போதும்! மாறாக துணிச்சலும், நேரிமையும் கொண்ட அதிகாரிகள் மிகச் சிறுபான்மை யாக இருப்பதால், ‘அதிகாரக் கும்பலால் பந்தாடப் படுகிறார்கள்!

கண்ணால் காண்பது பொய்:

நாம் செய்தித் தாட்கள் மூலம் தெரிந்து கொள்ளும், தேசீய, சர்வதேசீய செய்திகள் யாவும் ஒரு சிறு பகுதி தான். மறை நிரலாக (Hidden agenda) வேறு ஒரு காரியம்தான் இருக்கும். உதாரணமாக மக்களுக்கு இன்ஸூரன்ஸ் திட்டம் கொண்டுவருகின்றனர் என்பது படிக்கும் செய்தி; அதன் மூலம் நன்மை பெறுவது, தலைமைக்கு வேண்டப்பட்ட ஒரு கம்பெனியாக இருக்கும்! 


சில பொருட்கள் ‘ஆன் லைன் வர்த்தகத்தில் தடுக்கப் படுகிறது என்றால், அதன் மூலம் சிலர் ஒழித்துக் கட்டப்படுவர் (அ) சிலர் கொழுக்க வைக்கப் படுவர். எனவே மக்கள் உண்மைச் செய்திகளை தெர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். (நக்கீரன் பானி செய்திகள் அல்ல)

தமிழ் நாட்டில்:

சில நாட்களுக்கு முன், தமிழ் நாட்டில், இத்தகைய கும்பல் ஒன்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் அடியோடு நீக்கப் பட்டுள்ளனர். இது தொடருமா இல்லை மீண்டும் சேர்ந்து கொள்வார்களா என்பதற்கு பதிலளிக்க இயலாது! ஏனெனில்,இவை யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படுவது!

தற்போதைக்கு நடந்தது நல்லதே! இத்தோடு நிறுத்திக் கொள்வது கூடாது! இக்கும்பல் ஏற்படுத்திய நாசங்களை சீர்படுத்த வேண்டும்!  முப்பது வருட பந்தத்தின் மூலம், சுவை கண்டவர்கள், எளிதில் விட்டு விட மாட்டார்கள்! மறைவான செயல்களில் ஈடுபவதை எதிர்பார்க்க வேண்டும். மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
முதல்வர் தான் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்தே செய்திருப்பார் என நம்புகிறோம். முதலில் இந்த கும்பலின் ‘Miss deeds’ அனைத்தும் திருத்தப் பட வேண்டும். இந்த கும்பல் அரங்கேற்றிய அராஜகங்கள் யாவும் இனிமேல் தான் ஒவ்வொன்றாக வெளிவரும்.
எப்படியாயினும் ஒரு நல்ல சம்பவம் நடந்துள்ளது! கட்சி எம்.எல்.ஏ க்கள் அனைவரும் அவருக்கு பூரண ஒத்துழைப்பினை உறுதி செய்துள்ளனர். அக்கட்சி தொண்டர்களும், பொது மக்களும் இக்கும்பல் ஒழித்துக் கட்டப்பட்டதை வரவேறு உள்ளனர்.

இனி: 

தலைமை தனது ஆலோசனையாளர்களாக,  நேர்மையாளர்களையும்- துணிச்சலானவர்களையும் அமர்த்துதல் அவசியம். அப்படிப் பட்டவர்கள் இன்னமும் சிலர் இருக்கிறார்கள். நேர்மையான அதிகாரிகளை, அவர்களது பாணியில், சுதந்திரமாக, அரசியல் குறுக்கீடு இன்றி செயல்பட அனுமதிக்க வேண்டும். மக்களின் உண்மையான உணர்வுகளைச் சொல்லும் உளவுத்துறை அதிகாரிகளை ஊக்கு விக்க வேண்டும். இல்லையெனில் ஆபத்து தலைமைக்குத் தான்.

பிற

இப்படிப் பட்ட அதிகார மையங்கள், இந்த கட்சியில் மட்டுமல்ல; முக்கியமான பிறகட்சிகளிலும் உள்ளது! இவர்களும் துணிவோடு,  செயலாற்றினால், அது அந்த கட்சிகளுக்கும், நாட்டிற்கும் நல்லது! செய்வார்களா?




Tuesday, December 20, 2011

சிறார்களுக்கு (13)


 ஊதியத்தின் அருமை எதில்?


செல்வம், ஒரு நூறு சத சோம்பேறி! ஏதோ ஒரு டிகிரியை முடித்துவிட்டு, வீட்டில் சோம்பியிருக்கிறான்.

Sunday, December 18, 2011

ஞாயிறு இரவு ஒரு மீட்டிங் (ஒரு பக்க சிறுகதை)


ஞாயிற்றுக்கிழமை! மாலை மூன்று மணி. “பாஸ்கரன், வீட்டில் உட்கார இயலாமல் தவித்துக் கொண்டிருந்தார். டி.வி யையும், புத்தகத்தையும் நாட, மனம் மறுக்கிறது! நேரம் ஆகிக் கொண்டே இருக்கிறது! இன்னும் ஒரு அரை மணியில் கிளம்பினால்தான், அவர் போக வேண்டிய இடத்திற்கு, சரியான நேரத்திற்குப் போகமுடியும்.  மனைவியோ தூங்கிக் கொண்டி ருக்கிறார். விஷயத்தை, மனைவியிடம் சொல்லுவது எப்படி என்ற தவிப்பு அவருக்கு! சொன்னால் ஒரு சண்டையும், சொல்லாமல் போனால் இரு சண்டையும் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், முதலாவதையே நாடினார்.  

‘கண்மணி... கண்மணி...

‘ம்ம்ம்..ம்ம்ம்.

முனகினாளே தவிர விழிப்பதாக காணொம்.


சரி ஒரு ஐந்து நிமிடம் பொறுத்துப் பார்ப்போம். போய் சாய்வு நாற்காலி யில் அமர்ந்து கொண்டார். சட்டைப் பையில் வைத்திருந்த குறிப்புகளைப் மீண்டும் ஒரு முறை பார்த்துக் கொண்டார்.

கைபேசி கூப்பிட, ‘ஹலோ...

‘என்ன தோழர்... கிளம்பிட்டீங்களா?

“இதோ ஆச்சு.. புறப்பட்டுக்கிட்டே இருக்கேன்! நீங்க நேரா பஸ்-ஸ்டாண்டுக்கு வந்திடுங்க,  நாலேகால் பஸ்ஸைப் பிடித்து விடலாம்

‘சரி... தாமதப்படுத்தாமல் வந்திடுங்க...

இந்த உரையாடல், கண்மணியை எழுப்பி விட்டது போலும்!

‘எங்க போறீங்க..?

‘அது வந்து..., பக்கத்து ஊர்ல ஒரு இலக்கிய கலந்துரையாடல் கூட்டம் இருக்கு, அதில் பேசுவதற்கு, என்னையும் ஒருத்தராக போட்டிருக்காங்க. அதான்

‘உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லியா? யார் கூப்பிட்டது? ரங்கனாதனா? அந்த ஆளுக்கும் புத்தியில்லை, உங்களுக்கும் இல்லை! ஞாயித்துக் கெழம கூட வூட்ல இல்லாம அப்படி என்ன மீட்டிங்? இன்னிக்கு சாயங்காலம் கோவிலுக்கு போவலாம்னு சொன்னீங்களே, அது என்ன ஆச்சு?

‘அதில்லை கண்மனி, இந்த மீட்டிங் முன்னாடியே ஒத்துக்கிட்டது. இப்ப, நான் போவலன்னா நல்லா இருக்காது!  கடசி நேரத்துல வேற ஆளைப்புடிப்பதும் கஷ்டம், ஏழு மணிகெல்லம் மீட்டிங் முடிஞ்சுடும், போய்ட்டு வந்துடுறேன். அதுக்கப்புறம் கோவிலுக்கு போவலாம். இல்லேன்னா நம்ம “சங்கர்ஆட்டோவைக் கூப்பிட்டுக்க, இருந்து அழைச்சுகிட்டு வந்துடுவான்! நான் வேனா, சங்கரை கூப்பிட்டு சொல்லிட்டு போவட்டுமா?

‘ஒரு எழவும் வேணாம்.. நீங்க போய் ஊர் சுத்திட்டு வாங்க! நா வூட்லய அடஞ்சு கிடக்கேன். நீங்கள்ளெல்லாம் என்னாத்துக்கு கல்யாணம் கட்டிகிட்டு, பொண்டாட்டி உயிரை எடுக்கிறீங்களோ தெரியல! பேசாம அந்த மீட்டிங்கையே கட்டிக்கிட்டுருந்திருக்கலாம். 

'.........'

"ஊருக்கு உபதேசம் பண்ணிக்கிட்டு,  மைக் கெடச்சா போதுமின்னுகிட்டு, வெட்டிக்கா பேசிக்கிட்டு திரியரீங்க! ரோட்ல அவனவன் வெட்டிக்கிட்டுத்தான சாவறான். என்ன ஆச்சு உங்க உபதேச பேச்செல்லாம்?" 

"வேண்டாம் இவளுடன் பதில் சொல்ல ஆரம்பித்தால் இன்னொரு சண்டைதான் மிச்சம்"  சப்தம் காட்டாமல் செருப்பை அணிந்து கொண்டு வெளியேறினார் பாஸ்கர். அனேகமாக எல்லா மீட்டிங் தினங்களிலும் நடக்கும் உரையாடல் இது! 


“அப்பாடா, இன்னிக்கு வெளியே போறோம்னு சொல்லியாச்சு! அதுவே பெரிய திருப்தியாகிவிட்டது அவருக்கு.

பஸ் பிடித்து, நன்பருடன் பக்கத்து ஊருக்கு போய்ச்சேரும் போது மணி ஐந்தரை. கூட்டம் ஒரு சிறிய உள் அரங்கில் நடைபெற உள்ளது.   எல்லா பேச்சாளர்களையும் சேர்த்தே, ஒரு இருபது பேர்தான் வந்திருந்தனர்.

இன்று, இரண்டு புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது. இவர் அறிமுகப்படுத்தி பாராட்ட வேண்டிய புத்தகம், ஒரு உப்பு சப்பில்லாத, ‘மின்சார அடுப்பின் கதை என்பது போன்ற ஒரு ‘கட் அண்ட் பேஸ்ட் புத்தகம்! “என்னத்தைப் பேசுவது? 


நினைத்திருந்த விஷயங்களைப் பேசிவிட்டு, கடைசியில் மாட்டைப் பிடித்து தென்னை மரத்தில் கட்டிவிட வேண்டியது தான் என திட்டமிட்டார் பாஸ்கர்.

மின்சார அடுப்போ இல்லை பல்போ,  "எப்படியாவது, தமிழர்கள் புத்தகம் வாங்கிப் படித்தால் சரி” என நினைத்துக் கொண்டார். 

எப்போதும் போல, ஆறு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி ஏழுமணிக்குத் தான் துவங்கியது. இப்போது ஒரு முப்பது பேர் கூட்டத்தில் சேர்ந்திருந்தனர். புத்தக எழுத்தாளர்கள் ஆளுக்கு ஒரு பத்து பேரை ‘ஓட்டிக்கொண்டு  வந்திருப்பார்கள் போலும்!

எனினும், ‘மைக் மோகன்கள் விடுவதாக இல்லை! இவரது முறை வரும்போது மணி எட்டாகிவிட்ட்து. அதற்குள் இரண்டு மிஸ்டு கால் வந்துவிட்டது.  கண்மணி கூப்பிட்டிருந்தாள். எதற்கு கூப்பிட்டிருக் கிறாள் எனத்தெரியும் பாஸகருக்கு!

இருபது நிமிடத்தில் தனது பேச்சினை முடித்துக் கொண்டுவிட்டார்.

இவர் பேசி முடிக்கும் போதும, மனைவியிடமிருந்து வந்த ஒரு எஸ்.எம்.எஸ், ‘இப்போது மணி எட்டரை!  என்றது

சற்று பொறுத்து, மீண்டும் ஒரு எஸ்.எம்.எஸ்! ‘நான் தூங்கலாமா?

“விழாக் குழுவினர்,  "ஏதும்" ஏற்பாடு செய்திருப்பார்களா? இவர்களை நம்பி மனைவிக்கு ‘தூங்கு என பதில் சொல்லிவிடலாமா?

'தூங்கு என்பதைத் தவிர, வேறு மாதிரி செய்தி அனுப்பினால் சண்டைதான் வரும்! எனவே ‘நீ தூங்கு.. என பதில் அனுப்பிவிட்டார்.

மீட்டிங் முடிந்தது!  வங்க தோழர்,  "டீ" சாப்பிடலாம் அழைத்தனர் விழாக் குழுவினர்.

‘ஓ..........

பஸ் ஏறி வீட்டுக்கு வந்த போது மணி பத்தரை ஆகிவிட்டது.

தன்னிடம் எப்போதும் வைத்திருக்கும் இன்னொரு சாவியினால் வீட்டைத் திறந்தார் பாஸ்கர்.

ஒரு சபலத்தில், சமையல் உள்ளே சென்று பார்த்தார். எல்லாம் சுத்தமாக கவிழ்க்கப்பட்டிருந்தது. ஒரு சொம்பு நீரை எடுத்துக் கொண்டு படுக்கைக்கு வரைந்தார் பாஸ்கர்!