Monday, December 12, 2011

இது போன்ற கூத்துக்கள் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்!


கொல்கத்தாவில் AMRI மருத்துவமனையில், கடந்த வெள்ளியன்று, நடை பெற்ற தீவிபத்தில்,  93 பேர் இறந்து போயினர்.  விபத்து நடந்த இந்த மருத்துவமனையின், கீழ்த்தளத்தில் தான் முதலில் “தீ ஆரம்பித்ததாம். இந்த ‘கீழ்த்தளம் வாகனகள் நிறுத்துவதற்காக அனுமதிக்கப்பட்ட இடம். இந்த இடத்தில் மிக எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை  போட்டு, குடோன் போல உபயோகித்து வந்திருக்கின்றனர். 
காலை மூன்று மணிக்கு தீப்பிடித்திருக்கிறது! ஆஸ்பத்திரி தரப்பிலிருந்து தீயனைப்பு நிலையத்திற்கு தகவல் சொல்லவே இல்லை!. 4.10 மணிக்குத் தான் தகவல் போயிருக்கிறது. அப்பவும் நிர்வாகம் சொல்லவில்லை! பக்கத்து காவல் நிலையத்திலிருந்து செய்தி போய் வந்திருக்கிறார்கள்! இதிலிருந்தே தெரியவில்லை, நிர்வாகத்தின் “களவானித்தனம்”?. 


கடந்த 2010, மார்ச் மாதம் நிகழ்ந்த தீவிபத்தின் காரணமாக (43 பேர் கருகி சாவு), மேற்குவங்க அரசு, ஒரு உயர் அதிகாரம் கொண்ட குழு ஒன்றினை அமைத்தது.  இக்குழு, நகரில் 48 கட்டிடங்கள் அடையாளம் கண்டு, இக் கட்டிடங்கள், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப் பிடிக்கவில்லை எனச் சொல்லியது! இக்குழுவில், தீயனைப்புத்துறை, மின்சார வினியோகத்துறை, கொல்கத்தா கார்பொரேஷன் – ஆகியவற்றைச் சார்ந்த உயர் அதிகாரிகள் இருந்தனர்.  இக்குழு, பாதுகாப்பற்றது என சுட்டிக் காட்டிய 48 கட்டிடங்களில் ஒன்றாம், இந்த மருத்துவமணை. இந்த அறிக்கையின் மீது அரசாங்கத்தின் ‘மேல்நடவடிக்கை என்ன? எவருக்கும் தெரியாது!

 கீழ்த்தளத்தில், அபாயகரமான பொருட்களை போட்டுவைத்திருந்ததை இக்குழு, சுட்டிக்காட்டியபோது, கடந்த ஆகஸ்ட் மாதமே, இத்தகைய பொருட்களை அகற்றிவிடுவதாக எழுத்து பூர்வமாக மருத்துவமணை நிர்வாகம் சொல்லியுள்ளது. ஆனால், எதையும் செய்யவில்லை.

 இந்தியாவில், இது போன்ற துயரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

1997-ஜூன் 13-ல் ‘உப்ஹார் திரையரங்கில் நடந்த தீவிபத்தில் 59 பேர் உயிரழந்தனர்.  குடந்தையில் 100 சின்னஞ்சிறிய மலர்கள் தீயில் கருகின. நமது சிவகாசியில், தீ விபத்தின் காரணமாக, வருடா-வருடம், பல உயிர்கள் கருகுகின்றன.  இதுபோல இன்னும் ஏராளம். ஒவ்வொரு தீவிபதிற்குப் பின்னும் ஏதேனும் ஒரு விசாரணைக் குழு ஒன்று ஏற்படுத்தப்படும். இக் குழுக்கள் என்னத்தைக் கண்டுபிடித்தன? இவற்றின் சிபாரிசுகள் அமுலாக் கப்பட்டனவா? நாம் எதிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள மாட்டோமா? 

தீ விபத்து என்றில்லை. எல்லா பெரிய விபத்துக்களுக்குப் பின்னும், (முக்கியமாக ரயில் விபத்து) காரணம் கண்டறிய ஒரு குழு போடப்படும். அவற்றின்அறிக்கைகளை குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்களோ?  அவற்றின் அறிக்கைகளை செயலாக்கி யிருந்தால், இம்மாதிரியான விபத்துக்கள் ஏன் நிகழ்கின்றன?

குழுவின் அறிக்கைகளை எவரும் நினைவில் வைத்துக் கேட்பதில்லை. அடுத்த விபத்து நடக்கும் வரை இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்து விட்டு, பின்னர் மறந்து விடுவோம். (சென்னை சென்டரலில் இருந்து ஒரு ஆள் தன்னந்தனியாக ரயிலை ஓட்டிப்போய் விபத்து ஏற்படுத்தினானே? அந்த கேஸ் என்ன வாயிற்று?)

மிகப்பெரிய ஆஸ்பத்திரி என்று சொல்லப்படும் AMRI மருத்துவமணையே இந்த இலட்சனத்தில் இருக்கிறது என்றால், நகரில் சந்து பொந்துகளில் எல்லாம் இயங்கும் ஆஸ்பத்திரிகளை நினைத்தாலே கலக்கமாயிருக்கிறது.


சென்னையில், மிகப் பெரிய துணி நிறுவனங்களும், நகைக்கடைகளும் இருக்கும் பகுதிக்குச் சென்றிருப்பீகள்தானே?  அங்கெல்லாம் ஏதேனும் இதுபோன்ற விபத்து ஏற்பட்டால் என்னவாகும் என நினைத்தாலே கதி கலங்குகிறது! ‘தீ என்ற புரளியே கூட போதும்! மிதிபட்டே நூற்றுக் கணக்கில் சாவர்கள். உள்ளே செல்லுவதற்கும்-வெளியே வருவதற்கு அவ்வளவு குறுகலான படிகள். அதுவும் சில கடைகளில் விபத்து ஏற்பட்டால் அவர்களை ‘முருகன் தான் காப்பாற்ற வேண்டும்.

இவர்களுக்கெல்லாம் எப்படி லைசென்ஸ் கிடைக்கிறது? நமது "பிணம்  தின்னி" அதிகார வர்க்கம், வாயிலும், பையிலும் அள்ளிக் கொட்டிக் கொள்வதில் காட்டும் அக்கறையினை கொஞ்சம் விதி முறைகளை கடைப்பிடிப்பதிலும் காட்டினால், மக்கள் பிழைப்பார்கள்.  இல்லை, இன்ஸ்பெக்க்ஷன்களை ‘கல்லா கட்டுவதற்கு இன்னுமொரு வழியாகக் கொள்ளுவார்க ளேயானால்,ஒன்றும் செய்ய முடியாது!

இந்த தீவிபத்திற்குப் பிறகாவது அரசுகள் விழித்துக் கொள்ளுமா? எல்லா மருத்துவமணைகளையும், ஷாப்பிங் மால்களையும், ஹோட்டல்களயும் ஆய்வு செய்வார்களா? விதிமுறைகளை கடைப் பிடிக்காத கட்டிடங்களை தயவு தாட்சண்யமின்றி மூடுவார்களா?

1 comment:

  1. அரசு பொறுப்பாளர்களுக்கு பணம் மட்டுமே குறி.

    ReplyDelete