Saturday, October 1, 2011

காதலர் தினம் 2011- ஐ ஒட்டி எழுதிய சிறுகதை

என் முதல் காதல் கதை. 


1969. சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் அருகே ஒரு கிராமாந்தரமான பள்ளி.
அப்போது நான், தற்போது +1 என அழைக்கப்படும் 11-ம் வகுப்பு. வகுபபின் இடது பக்கத்தில் முதல் 3 வரிசை பெண்களுக்கு. அதில் மூண்றாவது வரிசையில் இரண்டாவதாக ஒரு பெண். 'சிவகாமி' என வைத்துக் கொள் வோமே!. வகுபிலேயே மிக அழகானவள். சிவந்தவள். நான் அவளுக்கு நேர் பின்.  




நீலக்கலர் தாவணி - பாவாடை. வெள்ளை பிளவுஸ். இதுதான் பெண்களுக்கான ஸ்கூல் யூனிஃபார்ம். 


அவளது நளினமான கழுத்தசைவுகளூம் கையசைவுகளூம், பளீரென்ற அவ்ளது கழுத்தும், பட்டுப் போன்ற மென்மையான கைகளும் வகுப்பில் யாவரையும் கிரங்கடிக்கும்.  அப்போதெல்லாம் பையன்களும்-பெண்களும் பேசிக்கொள்வதென்பதெல்லாம் பாவச்செயல்.   தூரப் பார்வையே தயங்கி-தயங்கித்தான். அவள் ஒரு நாள் வரவிலையெனில் வகுப்பே வெறிச் சோடிக் கிடக்கும்.   சிவகாமி பேசுவதெல்லாம் அவள் நண்பிகளுடந்தான். தப்பித்தவறி யாருடனாவது பேசிவிட்டால், அவன்தான் அன்றைய ஹீரோ. "என்னடா பேசினா?" கேள்விக்கு 'கைச்சரக்கு' சேர்த்து அளந் 
தாலும் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்போம். 


சிவகாமி உட்பட - எல்லோருக்கும் தேர்வு முடிந்து "ஆசிரியர்" விடைத் தாள் கொடுக்கும் நாள் திகில் நாள். அன்று வகுப்பே கிலியுடன் காத்தி ருக்கும்.   "மார்க்" குறைவாக வந்துவிடுமோ என்பதற்காக அல்ல! ஃப்யில் மார்க் எடுத்தவர்களுக்கு உள்ளங்கையில் அடி விழும். சிலருக்கு கையைத்திருப்பி ! (முட்டியில்). 


 சில சமயம் "தலைமை ஆசிரியர்" ரூமுக்கும் போக வேண்டியிருக்கும் அபாயங்களும் உண்டு.  "நாளைக்கு வரும் போது உன் அப்பாவையும் அழைத்துக் கொண்டு வரவேண்டும்" என உத்திரவு பீதியின் உச்சகட்டம்.  அடி வாங்கும் பசங்கள் வாத்தியாருடைய "சைக்கிள் காத்த" பிடிங்கி விடலாமா?  ஒளிந்திருந்து கல்லால் அடித்து விடலாமா ?" என புங்கமரத்திடையே யோசிக்க,  சில "வளர்ந்த" பையன்களுக்கு மட்டும் இந்த அடிகள் எல்லாம் பெரிய விஷயமாக இருப்பதே இல்லை. வாத்தியாரும் அவர்களைஅடிக்கத் தயங்குவார்.  அடித்தாலும் நக்கலாக சிரித்துக் கொண்டு வருவார்கள். ஒருபோதும் அப்பாவை அழைத்துக் கொண்டும் வருவதில்லை.    இந்த சாகசங்கள் எல்லாம் "முதல் பெஞ்ச்"  ஆட்களுக்கு வராது. "அவங்கடக்கான் விட்ரா" என்பதும் வத்தியார்களை 'அவன்' போட்டுப் பேசும் இந்த வளர்ந்த பையன்கள், எங்களுக்கு ஆசிரியர்களை அடுத்து எங்களை கலவரப்படுத்துபவர்கள்.




அந்த ஆண்டு காலாண்டு தேர்வு-விடைத்தாள்கள் வந்தது. ஃபெயில் ஆனவர்களுக்கு எப்போதும் போல உள்ளங்கை உபசாரம். சிவகாமி 'இங்க்லீஷ்'-ல் ஃபெயில்.   மற்றவர் போல் அவளுக்கு அடி ஏதும் கிடைக்க வில்லை. "ஒழுங்கா படிக்கனும்"கிற அறிவுரையோடு சரி.  வளர்த்திகள் அவர்களுக்குள் கிண்டலடிக்க - முன்வரிசை பசங்களுக்கு இந்த  "ஓரவஞ்சனை" புரியவில்லை.  "வேகமாக இல்லாட்டியும்-லேசாக் கூட" அடிக்காதது ஏமாற்றமளித்தது.    "எலக்டிவ்" கணக்கு தவிர மீதி எல்லாவற்றிலும் நான் "முதல்" மார்க்.  




அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சிவகாமியே வந்து.."நீ மாத்திரம் எப்படிடா எப்ப பாத்தாலும் ஃப்ர்ஸ்ட் வர்ரே, நானெல்லாம் ஃப்ர்ஸ்ட் வரவேண்டாமா?" இந்த கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.  ஆனாலும்  பெருமையாக இருந்தது.  அவள் என்னோடு  பேசியதே அன்றைய தூக்கத்தை துறக்க போதுமானதாக இருந்தது.  தொடர்ந்து புன்னகைகளும், "ஹோம் வொர்க்" செய்து தருவதும், 'சயின்ஸ்' -க்கு படம் வரைந்து தருவதுமாக 'நட்பு' வளர்ந்தது.   விஷ்யம் அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லையே!  அவளை காதலிக்க (!) ஆரம்பித்து விட்டென்.


பலமுறை மனசுக்குள் ஒத்தகை பார்த்து விட்டு, அந்த "அசட்டுத்தனமான கேள்வியை"  ஒரு நாள் அவளிடம் கேட்டே விட்டேன்.   


"என்ன கல்யாணம் பண்ணிக்குவியா?"   


"அதுகென்ன செஞ்சுக்கிட்டாப் போச்சு.." சிரித்துக்கொண்டே போய்விட்டாள்.  


அந்த நிமிடந்தொட்டு     "சிவாஜி-சாவித்திரி"- "எம்ஜியார்-சரோஜாதேவி"  யாகப் பாவித்துக் கொண்டு கற்பனை சாம்ராஜ்ஜியத்தில் கோலோச்ச ஆரம்பிக்க, அவள் என்னவோ 'அப்படி ஒரு பதிலைச் சொன்னதாக கூட" நினைவின்றி எப்போதும் போல வந்து போய்க்கொண்டிருந்தாள். 




"அரையாண்டு"  கழித்து, முழு ஆண்டு நெருங்கும் பொது,  அவள் ஸ்கூலுக்கு வரவில்லை.  யாரிடம் கேட்க?  வீட்டுக்குப் போய்ப்பார்க்க பயம். விசாரிக்கவும் பயம்.  அவள் உட்கார்ந்திருந்த இடத்தையும்
அவள் வரும் வழியையும் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.


"வளத்திப் பசங்கலளிடமிருந்து" விஷயம் வந்தது.  அவளுக்கு பரிசம் போட்டுட்டாங்களாம்.  இனிமே 'ஸ்கூலுக்கு' வரமாட்டா'


'நிஜமாவா?"


"ஏண்டா பொடிசு...நீ எதனாச்சும் மாப்புள பாத்து வச்சுருக்கியா?..போடா அப்பாலே" பிடரியில் ஒன்று கொடுத்தனர்.


"அழுகையும்-ஆத்திரமும்" வர ஏதும் செய்வதரியாமல் "ஏமாத்திட்டாளே" என ரகசிய அழுகையோடு இருந்த போது -அவளை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. 


'தம்பி..போய கவுண்டர் வீட்ட்குப் போய அரை சேர் பால் வாங்கிட்டு வாடா' - ஏவினாள் எனது அக்காள்.


அவசர பால் தேவைகளுகு 'கவுண்டர்'  வீடு தான் அப்போது. 


"கவுண்டர் வீடு" எனப்படுவது சிவகாமியின் வீடுதான்.


அவள் வீடு பாரதிராஜா படங்களில் வருவது போல வயல்களுக்கு நடுவே தோப்பும் துரவுமாக இருக்கும்.


"என்னடா?"


"அக்கா பால் வாங்கியாரச் சொன்னாங்க.. அரை சேர்"   சொம்பைகொடுத்ததேன்.. உள்ளே போய் எடுத்து வந்தாள்.."இந்தா..."


"உனக்கு கல்யாணமா?"


"ஆமாம், அவ்யளுக்கு 7 எச்.பி மோட்டாரே மூணு இருக்காம்.. ரெண்டு கிழங்கு மில் இருக்கு..டவுன்ல வேபாரம் வேற செய்யராரம்..."


'அப்ப.. என்னை கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொன்னியே.."


'என்னாது?  எப்ப..?'


'இல்லே நீ சொன்னே..சயின்ஸ் நோட்டில் டிராயிங் போடும்போது" 


'இந்த மாரி லூசுத்தனமா பேசினே..சித்தப்பாரு கிட்டே சொல்லிடுவேன்...உன்னை இந்த டான்ஸ்பார்மர் மரத்திலேயே கட்டிவச்சு தோல உரிச்சுடுவாரு...கேனப்பயலே...  சித்தப்பாஆஆஆஆ!"


"ஐயய்யோ...சொல்லீடாதே..சிவகாமீ......"   தலை தெறிக்க அத்தனை வரப்புகளையும் சேற்றையும் தாண்டி ஓடிவந்து சேர்ந்தேன்..


நான் விழுந்தடித்து ஓடுவதைப் பார்த்து சிவகாமி 'சிரித்தது'  போல இருந்தது.


இப்பொது கூட 'ட்ரான்ஸ்ஃபார்மர் போஸ்ட்' களை பார்க்கும் போது சில சமயம் 'சிவகாமி' நினைவுக்கு வருவாள்..



No comments:

Post a Comment