Tuesday, February 28, 2012

மெரினா – திரை விமரிசனம்


'மெரினா கடற்கரையின்' சிறப்பு, அனைத்து தரப்பு மக்களயும் தன்பால் இழுக்கும் அதன் வல்லமையும், கவர்ச்சியும் தான். சமுதாயத்தின் சகலதரப்பு மக்களும் அதனுடன் தொடர்பு கொண்டிருப்பதால், அது கதைகளின் ஊற்றுக் கண்ணாகவும் இருக்கிறது. எனவே மெரினாவோடு உறவுகொண்ட அனைவருமே, ஒரு சுவாரஸ்யமான கதை வைத்திருப் பார்கள். 

ஊரை விட்டு ஓடிவந்த சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும், சென்னை அளிக்கும் புகலிடங்களில், முக்கியமானது மெரினா.
‘மெரினா திரைப்படம், அவ்விதம் ஊரை விட்டு ஓடிவந்து, கடற்கரையில் வாழும் அனாதைச் சிறுவர்களைப் பற்றிச் சொல்கிறது! சென்னையைப் பற்றிச் சொல்கிறது! அதன் பன்முக கலாச்சாரத்தைச் சொல்கிறது! கடற்கரையின் மணல்களைப் போல எண்ணிலடங்கா, கதைமாந்தர்களுக்கு, மௌன சாட்சியாக இருக்கும் மெரினா,  தனது மடியில் நிகழ்ந்த மற்றுமொரு சோகத்தை, சுண்டல், தண்ணீர் பாக்கட் விற்கும் ‘பக்கோடா பாண்டியன் வழியாகச் சொல்கிறது! படம் வந்து, நாட்கள் பலவாகி விட்டதால் கதை அனைவருக்கும் தெரிந்தே இருக்கும். போஸ்ட்மேனாக வரும் மோகன், பெரியவராக வரும் சுந்தர்ராஜனும் பரவாயில்லை. குறிப்பாக ‘டான்ஸ் ஆடும் அந்த சிறுமி பிரமாதம்.

ஒரே படத்திலேயே, எல்லா விஷயங்களையும் சொல்லிவிட வேண்டும் என்ற, டைரக்டரின் ஆர்வம் (போலீஸ்-சிறுவன் கதை,காதல் ஜோடிக் கதை, மருமகளால் விரட்டப்படும் பெரியவரின் கதை) தேவையற்றது. ஏனெனில், இந்த அருமையான கதையின் முடிச்சு, ‘ஸ்லம் டாம் மில்லேனியரை விட சிறப்பானது. உலகத்தரத்தில் எடுக்கப் பட்டிருந்தால், பல அவார்டுகள் தேடி வந்திருக்கும். இக் கதையின் ‘ட்ரீட்மெண்ட் பன் மடங்கு பட்டை தீட்டப்பட்டிருக்க வேண்டும்.  அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட்து போல உள்ளது. எடுக்க வேண்டிய விதத்தில் எடுக்கப் பட்டிருந்தால், எல்லா அவார்டுகளுக்கும் ஒரு நல்ல ‘போட்டியாளராக இப்படம் இருந்திருக்கும். ஆயினும் எடுத்தவரை பரவாயில்லைதான். பார்க்கலாம்.




இயக்கம்: பாண்டியராஜன்

Friday, February 24, 2012

சென்னை உபச்சாரம்!

அறுபதுகளின் பள்ளிவிடுமுறை  தினங்களுக்கு, மனம் விரும்பிச் செல்கிறது. அப்பொழுது பள்ளிகளுக்கு, ‘கால் பரீட்சை, ‘அரைப் பரீட்சை, ‘முழுப் பரீட்சை முடிந்ததும் கிடைக்கும் லீவில், உறவினர்களின் வீடுகள் யாவும், உறவுகளால் நிறையும். ‘காலுக்கு நாம் அங்கே சென்றால் ‘அரைக்கு அவர்கள் இங்கே! வீடுகளில் சிறுவ-சிறுமிகளின் கும்மாளமும், குதூகலமும், சந்தோஷமும் வீட்டின் அனைத்து கதவுகளின் வழியாகவும் வழிந்தோடும்.

உறவுகளுக்க்காகவென்று சிறப்பான விருந்துஎதுவும் இருக்காது; தினசரிச்  சமையல் ‘மெனுவே அப்போழுதும் தொடரும். ஆயினும் என்ன? மாலை முழுதும் விளையாடித் தீர்த்துவிட்டு, இரவில், வீட்டின் முற்றத்தில், குழந்தைகள் அனைவரும் முக்கால் வட்டமாக அமர்ந்து கொள்ள, நடுவில் அம்மாவோ, பாட்டியோ இருந்து  கொண்டு,  ஒரு பெரிய பாத்திரத்தில் சோறு பிசைந்து வைத்துக் கொண்டு, ரம்மியமான நிலவொளியில், ஆளுக்கொரு உருண்டையாக பரிமாறினால், இரண்டுபடி அரிசி போட்டு சாதம் செய்திருந்தாலும் நிமிஷத்தில் காலியாகிவிடாதா?  அந்த இரவின் மங்கிய வெளிச்சத்தில், குழந்தைகளின் கூச்சலும், இரைச்சலும், குதியாட்டமுமாக, அவர்கள் உண்ட ருசி, நிலாச் சோற்றினாலா, பாட்டியின் அன்பினாலா அல்லது எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்ட, சந்தோஷ  தருணத்தாலா என்பது விளங்காத ஒன்று!

 அப்போதெல்லாம், ஆறுகளில் கொஞ்சமேனும், மெல்லிய பட்டையாக  தண்ணீர் ஒடிக் கொண்டிருக்கும், பரந்த மார்பினில் யக்ஞோபவீதம் போல.  காலையில் எழுந்து பழைய சாதமோ, கேப்பங்கூழோ குடித்துவிட்டு, பத்து மணிக்கு “குளிப்பதற்காகஆற்றிற்கோ, குளத்திற்கோ சென்றால், உங்களை யெல்லாம் அம்மா சாப்பிடக் கூப்பி டறாங்க என்று ஆள் வந்து சேதி சொல்லும்வரை, தண்ணிரில்  வாண்டுகளின் கும்மாளம் தொடரும். நடுவில், பக்கத்து வயல்களில், மாங்காய், நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை திருடித் தின்பதும்  நடக்கும். மாட்டிக் கொள்வோமென்ற பயமெல்லாம் இருக்காது.

மதிய உணவு முடிந்ததும், தாயக்கட்டையோ அல்லது பரமபதமோ ஆடுவார்கள். சிறுமிகளுக்கு பல்லாங்குழி, ஐந்தாம் கல், ஏழாம்கல் விளையாட்டு உண்டு. இவ்விளையாட்டுகளில், வீட்டின் பெரிய வர்களும், குழந்தைகளாகக் கலந்து கொள்வார்கள். ஐந்தாம் கல்-ஏழாம் கல் விளையாட்டிற்கெல்லாம், ‘ரெட்டைக்கு சிட்டு – ரெவணத்து முட்டை,-கோழிக்குஞ்சு சப்பட்டை “ என வினோத பாட்டெல்லாம் உண்டு

சூரியனின் உக்கிரம் குறைந்ததுமே, சுவற்றில் சாக்கட்டி அல்லது கரிக்கட்டி ‘ஸ்டம்ப் நட்டு கிரிக்கெட், அடிபட்டால் உயிர் போகும் படியாக வலிக்கும் ‘எறிபந்து, ‘ரிங்பால்’, ‘டென்னிஸ்எல்லாம் உண்டு. சிறுமிகளுக்கு பாண்டி. விளையாடி, விளையாடி மாளாத நாட்கள் அவை.




வீட்டில் பொருளாதார நிலை கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் கூட இத்தகைய உறவுகளின் வருகைக்கு யாரும் சலித்துக் கொள்ள மாட்டார்கள். சொல்லப் போனால் வரவில்லையென்றால் தான்  கோபித்துக் கொள்வார்கள். பிள்ளைகளும், வந்த இடத்தில் ‘டிமாண்ட் எல்லாம் வைப்பதில்லை! மூன்றுவேளை, ஏதேனும் ஒரு உணவு இருந்தால் போதுமானது! நடுவில் ஒரு நாள் ‘டெண்ட் கொட்டகையில் சினிமா உண்டு! ‘டெண்ட் கொட்டகை என்பது, கூரை வேய்ந்த திரையரங்கம். அத்தகைய திரையரங்கிற்கு ஒரு வருஷம் லைசென்ஸ் உண்டு.  திரையரங்கில் மொத்தம் மூன்று ‘கிளாஸ் இருக்கும். தரை டிக்கட் (13 பைசா) என்பது, திரையின் அருகே, ஆற்று மணல் பரப்பி இருக்கும். உட்கார்ந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ சினிமா பார்க்கலாம். அதன் பின் இருக்கும் “பெஞ்ச்கிளாஸ் (30 பைசா) கொஞ்சம் நாசூக்கு ஆசாமிகளுக்கு! முதல் வகுப்பு (75 பைசா) என்பது “ஃபோல்டிங் சேர்”.  சினிமா சப்தத்தோடு புரொஜெக்டர் போடும் ‘கொட..கொட சப்தத்தையும், பின்னாலிருந்து கேட்கலாம். பெஞ்சுகளும்-சேர்களும் சாதாரணர்களுக்கானதல்ல.

'லீவு' முடிந்து அழைத்துச் செல்ல வரும் பெற்றோரிடம், ‘நீங்க அடுத்த லீவுக்கு அங்கே வாங்க என்பதோ அல்லது “அடுத்த லீவுக்கும் மறக்காம பிள்ளைகளை இங்கே அனுப்பி வையுங்க என்ற உபசரிப்போ தவறாது நடக்கும்!

அந்த பழங்கதையை, இப்போது எதற்குச் சொல்ல வேண்டும் என்கிறீர்களா? காரணம் உள்ளது!

“செல்விருந்தோம்பி, வருவிருந்து காத்திருப்பதெல்லம்" அந்த காலம். தற்போதெல்லாம் ‘விருந்தினர் என்றாலே திகிலோடு எதிர்பார்ப்பது தான் 'நடைமுறை' என்றாகிவிட்டது.

பக்கத்து வீட்டுக்கு போவதென்றாலும் கூட ‘அப்பாயின்மென்ட் (தகவல் சொல்லிவிட்டு செல்வது) இல்லாமல் போவது, “நாகரீகமற்ற செயல் என்னும் மோஸ்தர்,  சிறு நகரங்களில் கூட சாதாரணமாகி விட்டது. பின் சென்னைக்கு கேட்பானேன்! 

மாலை, அலுவலகத்திலிருந்து  வீட்டிற்கு வந்ததும் ‘சட்டென கதவைத்திறந்து, உள் நுழைந்து, பின் ‘பட்டென சாத்திக் கொள்கின்றனர். பின் அடுத்த நாள் காலை அலுவலகம் செல்லும் போதுதான் கதவு திறக்கப்படும்.

கண்ணுக்கு முன்னால் ‘இரத்தமும் சதையுமாக இருக்கும் உறவுகளையும் நட்புக்களையும் புறக்கணித்து ‘ஃபேஸ்புக்கின் மாய நண்பர்களோடு ‘சேட்டிப்பதும், ‘லைக்கிப்ப தும் ’, புதிராகத்தான் உள்ளது.

சில நாட்களுக்கு முன்னால், எனது நண்பர் ஒருவர், சென்னையில் உள்ள ஒரு உறவுக்காரர், ‘விரும்பிக் கேட்டுக் கொண்டதால் சென்றுவிட்டு வந்தார்.  அதன் பின்விளைவாக, "சென்னை உபச்சாரம்" (விருந்தோம்புதல்) குறித்து, சில ஆலோசனைகளைத் தந்துள்ளார். அவை உங்களது பரிசீலனைக்கு:  


அ. “அடுத்த முறை அவசியம் வீட்டிற்கு வாங்க” என்று 'சென்னை உறவுகள்' சொல்வதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொண்டு, அவர்கள் வீட்டிற்குப்போய் நிற்கக் கூடாது. அந்த உபசாரங்கள் யாவும் ‘சும்மா, ஒரு பேச்சுக்காகக்’ கூட இருக்கலாம்.


ஆ. இந்தெந்த வேளை, வீட்டிற்கு சாப்பிட வருவேன் அல்லது வரமாட்டேன் என்று தெளிவாகச் சொல்லிவிடுவது நல்லது.  அது அவர்கள் திட்டமிட(!) ஏதுவாக இருக்கும். எனினும் சாப்பிட வரமாட்டேன் என்ற பதிலே, அவர்களால் பெரிதும் விரும்பப் படும்.

இ. காஃபி அல்லது டீ வேண்டுமெனில், சப்தம் காட்டாமல் தெருமுனையில் உள்ள காபிக்கடைக்குச் செல்வதுதான் உத்தமம

. எப்போது கிளம்பப் போகிறீர்கள் என்பதை, அவர்களது  ‘ஐயம் தீர’ சொல்லி விடுவது நல்லது.  சொன்னபடி நடப்பது அதனினும் நல்லது. கூடுமானவரை இரவுத்தங்கலை தவிர்ப்பது நலம்.     

. அப்படியே, மீறித் தங்கவேண்டி வந்துவிட்டால், மாலை ஆறு முதல் இரவு ஒன்பது மணிவரை ‘வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும்'. ஏனெனில் அந்த நேரம், டி.வி யில் ‘பீக்’ அவர்.  அவர்கள் உங்களுக்காக தொலைக்காட்சித் தொடரைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை.

. தவறிப்போய் கூட, முகம் துடைக்க துண்டு, சோப்பு போன்ற வற்றை கேட்காதீர்கள். அவை ‘கண்ணியமற்ற-ஊரான்கள்’ செய்யும் வேலை. 

. வீட்டின் எந்த பொருளையும் ‘நன்றாக உள்ளது (அ) நன்றாக இல்லை’ போன்ற விழையா விமரிசனங்களைத் தவிர்க்கவும்.

ஏ. அவர்கள் வீட்டுக் குழந்தை, உங்கள் மீது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து, உங்கள் ‘செல்போனைக்’ கவர்ந்து சென்று "நான்-ஸ்டாப்பாக" கேம்ஸ் விளையாடினாலோ அல்லது 'தொம்மென்று' கீழே போட்டுவிட்டாலோ, ஒரு அசட்டுச் சிரிப்புடன், பதற்றத்தை மறைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் செல்போன் உடைந்ததைப்ப்றி கண்டுகொள்ளாமல், "எங்க குழந்தை எப்போதுமே ரொம்ப 
சூட்டிகை, அவனுக்கு எல்லாம் அத்துப்படி" என்ற அவர்களது புகழ்ச்சிக்கு சிரித்து வைப்பது நல்லது. 

. ‘யாருப்பா இந்த அங்கிள்? ஊரிலிருந்து ஒரு உபத்திரவம் வரப்போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தாயே, அது தானா இது” என்ற ஏவுகணைத் தாக்குதல்களை எந்த நேரமும் எதிர்பாருங்கள்.   

. “உங்க வீட்டு ஜனங்களுக்கு மேனர்ஸே கிடையாது! வந்தோமா, பார்த்தோமா, கிளம்பினோமா என்றில்லாமல், நாள் பூராவுமா தங்கியிருப்பார்கள்?” என வீட்டுத் தலைவனோ (அ) தலைவியோ உங்கள் காதுபட கமெண்ட் பாஸ் பண்ணும் வரை புறப்படக்  காத்திருக்காதீர்கள். 

. மேற்சொன்ன ஆலோசனைகள் யாவும், நீங்கள் அவர் வீட்டிற்கு சென்ற உடனேயே, அவர்களுக்காக நீங்கள் வாங்கி வந்திருக்கும் பழ,பலகார வகைகள் (வகைக்கு அரை கிலோவாவது முக்கியம்; இல்லாவிடில் 'கஞ்சுஸ்' பட்டம் வரும்)  மற்றும் ஊரிலிருந்து ‘ஸ்பெஷலாக’   ஏதேனும் வாங்கி வந்திருந்தால் அவற்றையும் கொடுத்துவிட்டால், 
அனுசரிக்க வேண்டிய விதி முறைகள்தான் இவை!

. வெறுங்கையை வீசிக்கொண்டு அவர்கள் வீட்டிற்குப் போய் விட்டால், “சென்னை உபசரணை” பன்மடங்காக இருக்கும். அதன்பின் உங்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்! 



நண்பர், எடாகூடமாக ஒருத்தர் வீட்டில் அனுபவப்பட்டு விட்டார் போலிருக்கிறது! அதன் விளைவாகத்தான் இந்த 'ஆலோசனை' களைத் தந்திருக்கிறார் போலும்!   இது "நண்பரின் தனிப்பட்ட அனுபவமா" இல்லை "சென்னைக்கே உரித்தான இயல்பா" என விளங்கவில்லை! ஏனெனில் சென்னையில் உறவுகளின் வீடுகளில் நான் தங்குவதில்லை.

Friday, February 17, 2012

இப்படியாகக் காதல் செய்வீர்...(ஒருபக்க சிறு கதை)

சோடியம் ஒளியில், கேட்டில் இருக்கும் “வி. சொக்கலிங்கம் – டெபுடி செக்ரடரிஎன்ற பித்தளை பெயர்ப்பலகை மின்னுகிறது. மணி எட்டாகிறது. அவர் இன்னும் வீட்டிற்கு..,  சாரி பங்களாவிற்கு  வரவில்லை. வீட்டினுள் அவரது மனைவி ஸ்வர்ணம் மாலையிலிருந்து  யார் யாருடனோ, மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.  அப்படி என்னதான்  விஷயம் இருக்கும், இவ்வளவு நேரம் பேச?  கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்ப்போமே? எப்படியும் சொக்கலிங்கம் சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்துவிடுவார். அவரிடம், இவ்வளவு நேரம் தொலைபேசியதின் சாராம்சத்தை சொல்லாமல் தூங்கமாட்டார். எனவே பொறுத்திருக்கலாம்.

ஸ்வர்ணத்திற்கு இருப்புக் கொள்ளவில்லை! கணவனுக்கு ஃபோன் போட்டார். “என்னங்க, வீட்டிற்கு வருவதற்கு எவ்வளவு நேரமாகும்?


"இப்பத்தான் செக்ரடேரியட்டிலிருந்து புறப்பட்டேன். பயண நேரம் தான். அரை மணியில் வந்துவிடுவேன். ஏதாவது முக்கியமான விஷயமா? 


“தலைபோகிற விஷயமொன்றுமில்லை! நேரா வாங்க. பேசிக்கலாம்.

சொக்கலிங்கத்திற்கு ஐம்பத்தைந்து வயதாகிறது. மாநில அரசின், தொழில் துறையில் டெபுடி செக்ரடரியாக இருக்கிறார். கன்ஃப்ர்டு. பீர் தொந்தியும், வாங்கி, வாங்கி, வீங்கிய பையுமாக, சஃபாரி உடையில் இருக்கும் அவரை சுமந்துகொண்டு அவரது “இனோவா  உள்ளே  நுழைகிறது. டிரைவர் போட்ட “சலாமைதலையாட்டி ஏற்றுக் கொண்டு, “நாளை பார்ப்போம்  என கூறிவிட்டு, பங்களாவின் உள் நுழைகிறார்.

அவர் உடைமாற்றிக் கொண்டுவரவும், ஸ்வர்ணம் அவருக்கு உணவு பரிமார தயாராக இருந்தார்.  சாப்பிட்டுக் கொண்டே, “என்ன விஷயம் சொல்லுஎன்றார்.

“நம்ம பையன் ‘குமரனுக்கு வரும் ஏப்ரலில், 25 வயது  பூர்த்தியாகிறது. அவன் வேலைக்குப் போய், இந்த மாசத்தோட மூணு வருஷமாயிடுச்சு..

“அதுக்கென்ன இப்ப?

“யாராவது ஒரு குட்டியை புடிச்சுக்கிட்டு வந்து, இவளைத்தான் கட்டிக்குவேன்னு ஏதும் சொல்றதுக்குள்ள, நாமளே அவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து முடிச்சுடனும்"

“ஆமாம்.. ஆமாம்,  நானும் கூட யோசிச்சுக்கிட்டுதான் இருக்கேன். சீக்கிரமா ஒரு இடத்தை அவனுக்கு செட்டில் பண்ணணும்.

இவர்கள் கவலைப்படும் “குமரன்“ அவர்களது மகன். மூத்தவன்.  இளையவளுக்கு சென்ற வருடம் திருமணம் செய்வித்துவிட்டார்கள். குமரன், பி.டெக் முடித்துவிட்டு பெங்களூருவில் ‘ஆரக்கிளில் வேலை பார்க்கிறான். புத்திசாலிப் பையனாதலால், விரைந்து நிர்வாகப்படிகளில், ஏறிவருகிறான்.

“நம்ம ஜாதியில, நமக்கேத்தமாதிரி, தெரிஞ்ச பொண்ணுங்க யாராவது இருக்காங்களா? “ என்றார் சொக்கலிங்கம்.

“இருக்காங்க.  சாயங்காலம் முழுசும் அதுபற்றித்தான் விசாரிச்சுக்கிட்டிருந்தேன்.  உங்க தங்கச்சி புருஷனோட, சொந்தக்காரப் பொண்ணு ஒருத்தி இருக்கிறாள். சகுந்தலான்னு பேர். பி.இ படிச்சிருக்காளாம். அவளும் பெங்களூருவில்தான் வேலை பார்க்கிராளாம்.நாம கூட, ரொம்ப நாளைக்கு முன்னால, அவளைப் பார்த்திருக்கோம்.  நல்லாத்தான் இருப்பா. ஆனா சட்டுனு முகம்  நினைவுக்கு வரமாட்டேங்குது.

‘அப்படியா? எனக்கும் அந்தப் பெண் நினைவில்லை. பொண்ணோட அம்மா-அப்பா, அப்படி-இப்படின்னு ஒன்னும் கிராஸ் இல்லையே?

‘என்ன ஒன்னும் தெரியாதமாதிரி கேக்குறீங்க? அவங்க எல்லாம், நம்ம ஜனங்கதான்.  நீங்க மறந்துட்டீங்க போல. அதையெல்லாம் விசாரிக்காமலா இருப்பேன்? எல்லாம் சுத்தம் தான்.

‘நீ விசாரிச்சு வச்சிருப்பேன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் கன்ஃப்ர்ம் பண்ணிக்கறதுல என்ன தப்பு? கல்யாணத்திற்கப்புறம் தெரியவந்திச்சுன்னா கஷ்டம் தானே? அதுனால கேட்டேன்.

“அதுபத்தி  கவலைப்பட வேண்டாம்.   நமக்கு வேண்டியவங்களைவிட்டு விசாரிச்சுட்டேன்.

“அப்ப சரி.. ஸ்டேட்டஸ் எப்படியாம்?

“பொண்ணோட அப்பா, பெங்களூரில் ரியல் எஸ்டேட் செய்யராராம். பொண்ணு பேர்ல ஒரு ஃப்ளாட் இருக்கு. அந்த வீடே, பெரிய ரூவா ஒன்னு தேறுமாம்!

“அவ எங்க வேல பாக்குறா?

“இண்டெல் கார்பொரேஷன்ல..

“எவ்வளவு சம்பளம் வருமாம்?

“எழுவதாயிரம்னு சொன்னாங்க..

“பரவாயில்லியே. நல்ல இடமாத்தான் இருக்கு.

“நான் உங்க தங்கச்சி கிட்ட பேசிட்டேன். அவுங்க சொல்றதைப் பாத்தா, பொண்ணு வீட்டில,  நம்ம பையனுக்கு கொடுக்க இஷ்டப்படுவாங்க போலத்தான் தெரியுது!  நீங்க உங்க தங்க்ச்சி வீட்டுக்காரர் கிட்ட பேசுங்க.

“சரி, அவுங்களுக்கு ஃபோனைப் போடு

"கொஞ்சம் இருங்க பேசலாம்; அதுக்கு முன்னால, உங்க பையன் கிட்ட பேசிடுங்க. பேச்சு வார்த்தை ஆரம்பித்தப்பின், குமரன் எதனாச்சும் குழப்பிட்டான்னா, கௌரவக் குறைவாகப் போய்விடும்

“நல்லாத்தான் ஐடியா கொடுக்குற! இப்ப பேசலாமா, இல்ல தூங்கியிருப்பானா?


“அவனாவது, இன்னேரத்தில தூங்கறதாவது? பேசுங்க!


பையனை போனில் அழைத்தார். 

“குமரா, அப்பா பேசறேண்டா.  நல்லா இருக்கியா? என்ன ஒரு மாசமா சென்னைக்கு வரல? ஆஃபீஸில பிசியா?

“என்னப்பா, அங்கே வந்து 20 நாள்தானே ஆவுது? அதுவுமில்லாம டெய்லி, அம்மாகிட்ட பேசிக்கிட்டுதானே இருக்கேன்? இப்ப நீ எதுக்கு கூப்பிட்டேன்னு நேரா விஷயத்துக்கு வா. நான் பார்ட்டிக்கு போகனும்.

“பெங்களூர்ல, இண்டெலில், சகுந்தலான்னு 'நம்ம' பொண்ணு ஒண்ணு வேலை செய்யுதாம். நம்ம சொந்தக்காரப் பொண்ணு!

“அப்பா, இன்டெலில் நூற்றுக் கணக்கில் பொண்ணுங்க இருக்காங்க. அதுக்கென்ன?

“முழுசும் கேளுடா!  பொண்ணு நம்ம ஆளுகதானாம். ரொம்ப நல்லா இருக்குமாம். அம்மா விசாரிச்சுட்டா. உன்னை ஒரு வார்த்தை கேட்டுகிட்டு, அவளோட அம்மா-அப்பா கிட்ட, உனக்கு பெண் கேட்டு பேசலாம்னுதான் ஃபோன் போட்டேன்.

“எனக்கு அப்படி யாரையும் தெரியாதுப்பா..

“நீ ஒருதடவை நேரா போய் அந்த பொன்ணைப் பாத்து, விசாரிச்சுட்டு வாயேண்டா.. உனக்கு புடித்திருந்தால் மேலே பாக்கலாம்

“தமாஷெல்லாம் பண்ணாதேப்பா.. அந்த பொண்ணுகிட்ட போய் என்னன்னு  கேட்பது? என்னை மேரேஜ் பண்ணிக்கிறியான்னா?

“இதையெல்லாம் இந்த காலப் பசங்களுக்கு, அதுவும் உனக்கு, சொல்லித்தரணுமா? அவளை நேரா போய்ப் பாத்துட்டு வந்து உங்க அம்மாகிட்ட சொல்லிடு, புரிஞ்சுதா?“

“பாக்கலாம்...


போனை வைத்துவிட்டார். 

“குமரன் பேசறதப் பாத்தா, பையனுக்கு கல்யாணத்தில் இஷ்டம் போலத்தான் தெரியுது. நாம, பொண்ணோட அப்பாவிடமே  பேசிடலாம். அவுங்களுக்கு ஃபோனைப் போடு. முதல்ல  நீயே பேசு, நான் அப்புறமா பேசிக்கிறேன்..

பெண்ணின் அப்பா, தர்மலிங்கம் தான் போனை எடுத்தார். 

“யாரு சொக்கலிங்கத்தோட வீட்லயா பேசறீங்க? நல்லாயிருக்கிங்களா? என்ன.. என்ன ....என்னங்க இப்படிக்கேட்டுட்டீங்க?   உங்களைத் தெரியாதவங்க இருக்க முடியுமா? நல்லாத்தெரியும். சொல்லுங்க என்ன விஷயமா கூப்பிட்டீங்க?

‘ஒண்ணுமில்ல.. உங்களுக்குத்தான் தெரியுமே? எங்க பையன் குமரன் பெங்களூரில ‘ஆரக்கிளில் வேலை பாக்குறான். அவனுக்கு நம்ம ஜனத்தில நல்ல பொண்ணு கிடச்சா முடிச்சுடலாம்னு பாக்குறோம். எங்க சொத்துபத்து நிலவரம் தான் உங்களுக்குத் தெரியுமே? உங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைச்சா, தோதான இடம் அமையும்போது சொல்லுவீங்கன்னு தான் கூப்பிட்டேன்”.    மற்ற விஷயங்களைப பேசிவிட்டு,  குமரனைப்பற்றிய குறிப்புகளையும் சொன்னாள் ஸ்வர்ணம்.

“அதுக்கென்ன? அவசியம் பாக்கறேன். அடுத்தவாரமே உங்களுக்கு தகவல் சொல்றேன்.  உங்க வீட்டுக்காரர் இன்னும் செக்ரடேரியட்லிருந்து வர்லியா?

“இன்னும் வர்லீங்க.. டெபுடி செகரட்டரி ஆனதுக்கப்புறம் எப்ப போவார், எப்ப வருவார்னு சொல்ல முடியலீங்க!

“இருக்கட்டும் பரவாயில்லை..  நானே அப்புறம் கூப்பிட்டு பேசறேன்.
                                ---

தர்மலிங்கம், தனது மனைவி புஷ்பாவை அழைத்தார். உனக்கு சொக்கலிங்கத்தைத் தெரியுமா? சென்னையில், கவர்மெண்ட்ல இருக்கிறாரே?

“தெரியுமே.. சாயங்காலம், அவுங்க வீட்டுக்காரம்மா பேசினாங்க. அவுங்க பேசுறதப் பாத்தா, அவுங்க பையனுக்கு, நம்ம பொண்ணு சகுந்தலாவைக் கேக்குறாங்க போலத்தெரியுது

“அமாம். அதை மனசுல வச்சுகிட்டுத்தான், ஏதாவது பொண்ணு இருந்தா சொல்லுங்கன்னு சொல்றாங்க!

“நல்ல இடம்தான். தாராளமா சகுந்தலாவை குடுக்கலாம். கிராமத்துல, நில புலன்கள் எல்லாம் இருக்கு. கவர்மெண்ட்ல பவர்ஃபுல் போஸ்ட் வேற. எப்படியும் 10 கோடி சொத்து தேறும்.

"சகுந்தலாவிடம் கேட்டுப்பார்".

அவள், மாடியில் தனது அறையில் இருந்தாள்.

“ஏண்டி சகுந்தலா, உனக்கு ஆரக்கிளில் வேலை செய்யும் குமரனைத் தெரியுமாடி?” 

“உளறாதே மம்மி! திருப்பதியிலே மொட்டை அடிச்சவனைப் பாத்தியான்னு கேக்குறமாதிரி இருக்கு நீ விசாரிக்கறது. அதுவுமில்லாம எங்க கம்பெனிக்கு, அவுங்ககூட காண்டிராக்ட் இப்ப ஏதுவுமில்லை. ஆகையினால, அவுங்க கூட  கான்டாக்ட் கிடையாது! எதுக்கு கேக்குற?

விவரமாகச் சொன்னாள்

“அவனுக்கு என்ன சம்பளமாம் ம்ம்மி?

“ஒரு லட்சமாம்

“ஓ! டுவல் லாக்ஸ் பர் ஆனமா? வீடு, கார் எல்லாம் இருக்காமா? என்ன கார் வச்சுருக்கான்??

“என்ன கார் வச்சுருக்கானெல்லாம் தெரியாது. அவன் அப்பன் கோடீஸ்வரன். கிம்பள ராஜா! பையனுக்கு நல்லதாத்தான், வாங்கித் தந்திருப்பான்.

“எனக்கு ஒரே ஒரு கண்டிஷன்தாம்மா. எனக்கு அடுத்த வருஷம், ஒரு ஃப்ராஜக்டுக்காக ஸ்டேஸ் போகும் சான்ஸ் வரும். அவனும் அதே மாதிரி இருந்தாத்தான் ஒத்து வரும்.  கிரீன் கார்டு தான் என் லட்சியம். அதுக்கு ஒத்து வராத மாதிரி இடமாயிருந்தா வேண்டாம்.

‘நீ அவனைப் பார்த்து பேச முடியுமா?

“டிரை பண்றேன்...
                                     ----

அடுத்த வாரம் குமரன் தனது பி.ஸிக்கு முன் இருக்கும் போது, ஒரு மெஸேஜ் வந்தது.  ‘ஒன் மிஸ் சகுந்தலா ஃப்ரம் இண்டெல் ஈஸ் வெய்டிங்க ஃபார் யுமீட் ஹர் அட் லவுன்ச்

வெளியே வந்தான்.  எழுந்து நின்றாள் சகுந்தலா. "ஆள் பரவாயில்லை தான்" என்று கணக்குப் போட்டாள்.  

‘யூ மஸ்ட் பீ குமரன்!

“யா. மே ஐ நோ ஹூ யு ஆர், இஃப் யு டோண்ட் மைன்ட்..?

“ஐ ஆம் சகுந்தலா, ஃபரம் இண்டெல்.உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்.  ஒரு வருஷத்துக்கு முன்னாடி, என் ஃப்ரண்ட் தேவகின்னு ஒருத்தி இங்கே, ஆரக்கிளில் வேலை செய்தாள். அப்புறம் கான்டாக்டே இல்லாம போச்சு. ஒரு விஷயமா அவளைப் பாக்கணும். இப்ப எங்க இருக்கான்னு தெரியல. என்னோட அம்மா தான்  சொன்னாங்க.. இங்கே குமரன்னு ஒருத்தர் இருக்கார். நம்ம சொந்தக்காரர்தான்.  அவரிடம் போய் விசாரின்னு. அதான் நேரே வந்தேன்.

‘அது ஒன்னும் பெரிய பிராப்ளம் இல்ல.  ஸ்டாஃப் ரோல் எங்கிட்ட தான் இருக்கு. வெரிஃபை பண்ணி சொல்றேன். முடிஞ்சா, இப்ப எங்க இருக்காங்கன்னும் கேட்டு, உங்களுக்கு ஃபோன் பண்றேன். 

“ஓ.. தேங்க் யூ..

நெம்பர்களை பரிமாறிக்கொண்டனர்.

‘ஹொவ் அபவுட் எ காஃபி?

“வொய் நாட்?

அடுத்த நாள் குமரன், சகுந்தலாவுக்கு ஃபோன் செய்தான். யூஷூவல் “எப்படி இருக்கீங்க..” க்கு அப்புறம் சொன்னான், “இஃப் யூ டோன்ட் மைன்ட் ... ஷெல் ஐ ஸே ஒன் திங் அபவுட் யு?"

'நோ ப்ராப்ளம்.. கோ அஹெட்"


"குந்தலா, யு லுக் ஸோ பிரட்டி

“நானும் அதையே சொல்லனும்னு எதிர்பாக்காதீங்க..

சிரித்தார்கள். முதல் நாள் தேடிக்கொண்டு வந்த ‘தேவகியைப்பற்றி, அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை.

ஒரு மாததில், அவர்கள் இருவரும் ‘டிஸ்கோத்தே களுக்கு போகும் வரை முன்னேறினார்கள்.

அவர்கள் லேசான "ரெட் வைன் அருந்திவிட்டு, அவளது இடையினைப் பற்றிக் கொண்டு, அவன் நடனமாடிக் கொண்டிருக்கும் பொழுது, அவளைக் கேட்டான்.

“சகுந்தலா.. வில் யூ மேரி மீ.?

அதற்கான பதிலை முத்தமாகத்தந்தாள் சகுந்தலா
                               ------
சகுந்தலா தனது ‘மம்மியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.


‘மம்மி ஹி இஸ் குட்.  நான் எதிர் பார்த்தமாதிரியே அவனுக்கும் அடுத்த வருஷம் ஸ்டேட்ஸ்ல  ஃப்ராஜக்ட் வருதாம். எப்படியும், கொஞ்ச வருஷத்தில கிரீன் கார்ட் வாங்கிவிடுவோம். ஸோ, யு கேன் புரொஸீட் வித் திஸ் அலயன்ஸ்


"அப்புறம் நீ ஏதும் எங்களை குறை சொல்லக் கூடாது!


"அதெல்லாம் ஒண்ணுமில்லை! "


"அப்ப, நாங்களே  நேரே போய் சொல்லிட்டு வரலாமா?"


"அதெல்லாம் வேண்டாம்.  அவனே, அவங்க அப்பாகிட்ட சொல்லுவான். அவுங்களே நம்ம வீட்டிற்குவருவாங்க!"


'அது வரைக்கும் கூடவா பேசிக்கிட்டீங்க? 


"ஆமாம்.."



"சரியான ஆளுதாண்டி நீ!"

ஸ்வர்ணம் தனது மகனிடம் கேட்டாள். என்னடா அவளைப் பாத்தியா? பேசினியா? உனக்கு இஷ்டமா?

எனக்கு ஓ.கே தான், அம்மா! குட் சாய்ஸ். மேலே நீங்களே, நேரா போயி பேசி முடிச்சுடுங்க..
                               ------

சொக்கலிங்கம், ஸ்வர்ணத்திடம் கேட்டார். யாரு முதல்ல பேச ஆரம்பிக்கனும்? பொண்ணு வீட்டுக்காரங்களா? பையன் வீட்டுக் காரங்களா? நாமளே முதல்ல கேட்டுப் போய் கௌரவத்தைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது பாரு?” 


"அதை நீங்க, உங்க அப்பா கிட்ட கேட்டுக்குங்க.. இங்க யாருகிட்டயும் கேக்காதீங்க..


இவரது அப்பா, ‘வெங்கடேசன் கிராமத்திலிருக்கிறார். அவரிடம் விசாரித்ததில், ‘நாமதாண்டா, நம்ம வழக்கப்படி பொண்ணு கேட்டு  போகணும்”.  அதுமட்டுமில்லாமல்,  போகும்போது இன்னின்ன வாங்கிக் கொண்டு போகவேண்டுமென லிஸ்ட் வேறு சொன்னார்.


"சரி.. சரி. வச்சுடு.. போய்ட்டு வந்து விவரம் சொல்றோம்."
-------

பெங்களூரில், தர்மலிங்கத்தின் வீட்டில், தடபுடலான உபச்சாரத்துடன் வீற்றிருந்தார் சொக்கலிங்கம்.

“நம்ம காலத்தில, எந்த ‘லவ்வைக் கண்டோம். ‘கிவ்வைக் கண்டோம்! ஏதோ அப்பா காட்டின களுதைய, கட்டிக்கிட்டோம்.  நம்ம பசங்க அப்படியில்லியே? ஏதோ சின்னப் பசங்க, ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க. அவுங்க ஆசைக்கு நாம ஏன் தடை போடனும்? அவுங்க விருப்பப்பட்ட மாதிரியே செஞ்சுடலாம்னுதான், நானே நேரே கிளம்பி, பொண்ணு கேட்டு வந்துட்டேன்.என்றார் சொக்கலிங்கம்

‘சரியா சொன்னீங்க போங்க!  நமக்கு நம்ம பசங்க சந்தோஷம் தானே முக்கியம்? உண்மைய சொல்லப்போனா, உங்க கூட சம்பந்தம் வச்சுக்க நாங்கதான் கொடுத்து வச்சுருக்கணும்

திருமணம் நல்லபடியாக, தடபுடலாக, ஆர்பாட்டமாக நடந்து முடிந்தது. 
-------
இப்படியாக ‘குமரனும், ‘ சகுந்த லாவும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

Monday, February 13, 2012

கும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.


இந்த மாதம் (ஃபிப்ரவரி-2012), இரண்டாம் சனிக்கிழமை. ஒரு மாறுதலுக்கு எங்கேயாவது, வெளியூர் சென்றுவிட்டு வரலாமா என யோசித்தபொழுது, இந்தியாவில் ‘சுற்றுலா என்பது பெரும்பாலும் ‘கோயில் உலா வாகவே இருக்கவே, நாங்களும் கோயில் நகரமான,  கும்பகோணம் சென்றுவரலாம் என தீர்மானித்தோம்..

கும்பகோணத்தைச் சுற்றியுள்ள, ஏராளமான கோயில்களில் பெரும்பாலனவற்றை பார்த்துவிட்டாலும், குடந்தையிலேயே உள்ள கோயில்களைப் பார்த்ததில்லையாதலால், சாரங்கபாணி, சக்ரபாணி, ஸ்ரீராமசுவாமி, ஆதி கும்பேஸ்வரர் ஆகிய கோயில்களைப் பார்த்துவிட்டு வரலாம் என நானும் எனது துணைவியாரும் கிளம்பினோம்.

சாரங்கபாணி கோயில் கோபுரத்தின் சிற்பங்கள் அனைத்தும் அற்புதம். கோயில் அதைவிட! இத்தனை நாள் இந்த பிரம்மாண் டத்தை எப்படி ‘மிஸ் செய்தோம் என்று வியந்த வண்ணம், தரிசனம் செய்தோம். காலை விஸ்வரூப தரிசனம் ஆயிற்று.  கோயிலைப் பற்றி கிலாசித்தவாறு வெளியே வந்து, ஸ்ரீராமசுவாமி கோயிலைப் பார்த்தால், மூச்சு முட்டியது. என்ன அற்புதமான சிற்பங்கள் நிறைந்த தூண்கள்!? ஒவ்வொரு சிற்பமும் பேசுகிறது. . என்ன ஒரு வேலைப்பாடு? இழைத்திருக்கிறார்கள். மூலவரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்று, பேரழகு!

































பிரகாரத்தின் உட்சுவர்களில் இராமாயன காதையை சித்திரமாகவே வரைந்திருக்கிறார்கள். கண்டு களிக்க, ஒரு முழு நாள் வேண்டும். அதன் பின் பிரசித்தி பெற்ற கும்பேஸ்வரர். ஸ்தம்பிக்க வைக்கும் கோயில். நீண்ட பிரகாரம். நுழை வாயிலில் இருந்தே, மூலவரைப் பார்த்துக் கொண்டே செல்லலாம்.
உபரியாக, சக்ரபாணி திருக்கோயில்.  வருடத்தில் ஆறு மாதம் வடக்குப் புறமாகவும் (உத்ராயணம்), மீதி ஆறு மாதம் தெற்கு புறமாகவும் (தட்சிணாயனம்) மூலவரைக் காணச் செல்ல வேண்டும்.


















குடந்தையில் புராதனமான, தொன்மைமிக்க, நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய மிகப் பெரிய கோயில்கள் திகட்ட திகட்ட, நிறைய இருப்பதால், இந்த அற்புதமான கோயில்களின் அருமை பெருமைகளை நாம் உணரவில்லையோ என கவலையா யிருந்தது! அமெரிக்காவில் 100 வருடம் ஆனாலே அவை புராதனச் சின்னங்களாகி விடுகின்றன! சாரங்கபாணிக் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானதாம்!









கோயில்களும், சிற்பங்களும் மலைக்க வைத்தாலும், நமக்கு காலைப் பொழுதில் பசி யெடுக்காமலா போய்விடும்? பசி நீங்க ஆதி கும்பேஸ்வரார் கோயில் அருகே உள்ள ஒரு ‘கபே யில் நுழைந்தோம்.

ஹோட்டலின் உள்ளே பரிமாறுபவர் ஒரு பெரியவர். உற்சாகமாக வரவேற்றார்.

“சார்வாள் வரணும்! என்ன டிபனா?

பின் வேறெதற்கு இங்கு வருவார்கள்?

“சாருக்கு இலை போடு!ஆணையிட்டார் பரிமாறுபவர்.

‘என்ன சாப்பிடலாம்? இட்லி-வடை தரட்டுமா?

கேள்வியும் கேட்டுவிட்டு, பதிலையும் அவரே தீர்மானித்துவிட்டார்.

“சரி.. மூணு பிளேட் இட்லி-வடை

“அப்ப அவருக்கு என்ன..? டிரைவரைக் கேட்கிறார்.

“அவருக்கும் இட்லிதான்

“அப்ப மாமிக்கு?என் துணைவியாரைச் சொல்கிறார்.

இதென்ன தொல்லை! “அதுதான் முன்பே சொன்னேனே? மூணு பிளேட் இட்லி-வடை

“அப்ப மூணு பேருக்கும் இட்லியா?

“அமாம்

“ஆக மூணு பேருக்கும் அதுவேதான்?

“பெரியவரே, இதில் என்ன பிரச்சினை, என்ன குழப்பம் உங்களுக்கு? மூணு பேருக்கு, மூணு பிளேட் இட்லி.. அவ்வளவுதான்

“சரியாப் போச்சு போங்கோ! யாருக்கும் ஒரு கேள்வியுமில்லை. சங்கடமேயில்லை! மூணு பேருக்கும் இட்லிதான்..

ஏதாவது தப்பான இடத்திற்கு வந்து விட்டோமா?

“சாருக்கு சட்னி போடலாமா?

பின் என்னத்தைத் தொட்டுக் கொள்ள?

“பெரியவரே, மூணு பேருக்கும் சட்னி, சாம்பார் போடுங்க., ஒருத்த ரொத்தருகிட்டயா போய், கேள்வி கேக்காதீங்க.

“அப்படியே செஞ்சுட்டா போச்சு.. “

“ம்ம்..ம்ம்?

பின், செக்கச் செவேல் என ஒரு சட்னியைத் தூக்கிக் கொண்டு வந்தார்.

“என்ன இது?

“காரச் சட்னி..

“வேண்டாம், காரம் ஆகாது!

“சார்வாள் கொஞ்சம் போட்டுத்தான் ஆகணும். காரம் ஜாஸ்தி இல்லை. உடம்புக்கு ஒன்னும் பண்ணாது..!

“வேண்டாம்னா விடுங்களேன் பெரியவரே!

“அப்ப சரி, உங்க இஷ்டப்படியே ஆகட்டுமே..

அடுத்து ஏதேனும் ஒரு ஐட்டம் சாப்பிடலாமென்று யோசனை. மூவருக்கும் பூரி கிழங்கு சொல்லிவிடலாமா? ஆனால் இந்த பெரியவர் கேள்வி கேட்பதை  நினைத்தால், கலக்கமாயிருந்தது. என் சங்கடத்தைப் புரிந்து கொண்டார் டிரைவர்.

‘பெரிசு.. இங்க வா... நல்லா கேட்டுக்க.. மூணு செட் பூரி கிழங்கு கொண்டு வா.. புரிஞ்சுதா?

எனது துணைவியாருக்கு, எனது தீர்மானம் எதிலும் மாறுபட்டே ஆக வேண்டும். அப்படி ஒரு வரம் வாங்கிவந்தவர்.

“இல்லை... எனக்கு தோசை..

அச்சமயம், எனது நாக்கில் சனி வாசம் செய்தான் போலும்!
“தோசைன்னாலும், இட்லின்னாலும் அதே மாவுதானே? மாறுதலுக்கு பூரிதான் சாப்பிட்டுப் பாரேன்எனச் சொல்லிவிட்டேன்.

“என் தலை எழுத்து, 35 வருஷம், உங்ககூட குடித்தனம் நடத்தினப்புறமும், அற்பம், ஒரு தோசை கூட என் இஷ்டத்திற்கு சாப்பிட முடியல..”.  கூடவே ஒரு சொட்டு கண்ணீர் “டுமுக்கென எட்டிப் பார்த்த்து!

ஆஹா.. கொள்கைப் பிரச்சினை ஆரம்பமாகிவிட்டதா? மனைவிமார்கள் கோபித்துக் கொள்ள, காத்திருக்கிறார்கள். அதற்கேற்ற தருணங்களும் ஏராளமாயிருக்கின்றன போலும்.  

அட போங்கடா.. “விதவிதமான ஆர்டரை, இந்த பெரியவருக்கு எப்படி விளங்கவைப்பதுதான் என் கவலை யென்பதை எப்படி இவளுக்கு புரியவைப்பது?

“பெரியவரே, கொஞ்சம் நில்லுங்க.. மூணு செட் பூரி சொன்னோமில்ல.. அது வேண்டாம். ரெண்டு செட் பூரி, ஒரு தோசை

“அப்ப, முதலில் மூணுசெட் பூரி, அப்புறம் மூணு தோசையா?

கடுப்பாகிப் போனார் டிரைவர். பெரியவரை இழுத்துக் கொண்டு, பூரிகள்  அடுக்கி வைத்திருக்கும் இடத்திற்குப் போனார். பூரியைக் காண்பித்து “இதில ரெண்டு செட்”.  தோசையைக் காண்பித்து, ‘இதுல ஒண்ணே ஒண்ணு என்றார்.

“அப்படியே ஆகட்டும்!

ஆயிற்று.

“அப்புறம் சார்வாளுக்கு என்ன? காஃபியா?

குடந்தை டிகிரி காப்பி இஷ்டம் தான் என்றாலும், பெரியவரிடம் மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பாததால், “அவ்வளவுதான்.. பில் தாருங்கள்” என்றேன். 

மீண்டும் துணைவியாருக்கு என்னோடு உடன்பாடில்லை.

“எனக்கு ஒரு காஃபிஎன்றார்.

“அதை நீயே அந்த பெரியவரிடம் சொல்லிவிடு என்றேன்.

“மாமா.. இதோ பாருங்க! எனக்கு மட்டும், சூடா, ஸ்டிராங்கா, சர்க்கரை கம்மியா, கொஞ்சமா, சீக்கிரமா  ஒரு காஃபி என்றார் மனைவி.

காஃபி பற்றிய எனது துணைவியாரின் வர்ணனைகள் யாவற்றையும் காதில் வாங்கிக் கொண்ட பெரியவர், “உள்ளே ஒரு காஆஆஆஆஅஃபி என்று ஆர்டர் செய்தார், காஃபி போடுபவரிடம் சிம்பிளாக! துணைவியாருக்கு, தனது காஃபி பற்றிய வர்ணனை, இவ்வளவு சிம்பிளாக போனது குறித்து கோபம் வந்து விட்டது. அதற்கு நான் என்ன செய்ய முடியும்? மனைவி என்னை ஒரு முறைத்தார்.

ஒரு வழியாக போராட்டம் முடிந்தது என நினைத்தேன்.

“சார்வாள் கோயிலுக்கு வந்தீர்களோ?  எந்த ஊர்? என்றார் பெரியவர். அவருக்கு பதில் சொல்லி, வம்பில் மாட்டவிரும்பாமல் கவனிக்காதது போல, வேறு பக்கம் திரும்பிக்கொண்டேன். .

எனது விருப்பமில்லாத அனைத்திலும், எனது மனைவிக்கு உடண்பாடே! பெரியவரின் கேள்விக்கு பதிலளிக்க ஆரம்பித்து விட்டார். இனி பிராட்டியாரின் உரையாடல், அப்பெரியவரிடம் தொடர்ந்தது!.

“ஆமாம் மாமா, நாங்க கடலூர். கோயில்களைப் பார்க்க வந்தோம், சாரங்கபாணி, சக்ரபாணி..... “ என அவரிடம் லிஸ்டித்தார்.

“அப்ப நீங்க இன்னும் ‘கரும்பாயிரம் பிள்ளையாரை பாக்கலியா?

“இல்லியே?

“நல்ல கேள்வி கேட்டீங்க போங்கோ! கரும்பாயிரம் பிள்ளையாரைத் தெரியாவதங்க கூட, இருக்காங்களா நாட்டில..?‘ அற்புதமான சக்தி மிக்கவர் கரும்பாயிரம் பிள்ளையார். (சக்தியில்லாத சாமிகூட உண்டா என்ன?)  கேட்டதை கொடுப்பவர். அவசியம் பாத்துட்டுப் போங்க!

எழுந்து நின்று புறப்படத் தயாரான டிரைவர், இந்த உரையாடலைக் கேட்டு, விரோதமாக பார்த்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டார்.

“அது என்ன கரும்பாயிரம்?தொடர்ந்தார் மனைவி.

“ஒரு கரும்பு விவசாயி, கரும்பு நன்றாக வந்தால், ஒரே ஒரு கரும்பினை பிள்ளையாருக்குத் தருவதாக வேண்டிக் கொண்டாராம். கரும்பும் மிக நன்றாக வந்தது. ஆனால், வேண்டிக் கொண்டபடி ஒரு கரும்பினை பிள்ளையாருக்கு தர மனம் வரவில்லை. வெட்டிய ஆயிரம் கரும்புகளையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு,  சந்தைக்கு வந்தாராம். இரவாயிற்று. பிள்ளையார் தனக்கு சேரவேண்டிய ஒரு கரும்பினை மாத்திரம் எடுத்துக் கொண்டுவிட்டாராம். காலை எழுந்து பார்த்த அந்த நபர் ஒரு கரும்பு குறைவதைக் கண்டுகொண்டாராம்.  


யார் அந்த திருடன் என வெகுண்டாராம். அவனுக்கு பாடம் கற்பிக்க நினைத்த ‘பெருமாள் மீதி இருந்த 999 கரும்புகளையும் மறைத்து விட்டாராம். பிறகுதான், தான் செய்த தவறு நினைவுக்கு வர, பிள்ளையாரிடம் போய் மன்னிப்புகேட்டு, மன்றாடினானாம். 

மனமிரங்கிய பிள்ளையார் அவனுக்கு 1000 கரும்புகளையும் மீண்டும் தந்தருளினாராம். அது தான் “கரும்பாயிரம்பிள்ளையார். அந்த கோயிலுக்கு சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் ஆயிற்று! போய்ப் பாருங்கள் என்றார் பெரியவர்.

“என்னங்க, அந்த கோயிலுக்கு போகலாமா? – மனைவி.

“போகலாமே என்று சொல்லுவதைத்தவிர வேறென்ன ‘ஆப்ஷன் இருக்க முடியும்?

"அடுத்து அந்த கோயிலுக்கே போகலாம்" என்றேன்.

“பெரியவரே, பில் தர்ரீங்களா?

“சார்வாளுக்கு ஒரு 116 ரூபாய்க்கு பில் போடு என்றார்.

‘எப்படி 116 ரூபாய் ஆயிற்று என, அந்த பெரியவரிடம் விபரம் கேட்பதற்கு நான் என்ன பைத்தியமா?

அவரிடம் 120 ரூபாயைக் கொடுத்துவிட்டு வெளியேறினேன்.
துரத்திக் கொண்டு வந்தார் எங்களுக்கு "சர்வ்"  செய்த அந்த பெரியவர்.

“மீதி நாலு ரூபாயை வாங்காமல் போறீங்களே?  அதை நானே வச்சுண்டா பெருமாள் குத்தமாயிடும்

பதிலை எதிர்பார்க்காமல் திரும்பிச் சென்றார் அந்த பெரியவர்.