Tuesday, December 29, 2015

சௌரிராஜப்பெருமாள் - திருக்கண்ணபுரம்

நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் என்ற ஊரில் காட்சியளிப்பவர் சௌரிராஜப் பெருமாள். இந்த தலம் 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. மூலவர் நீலமேகப் பெருமாள்.  உற்சவர் மூர்த்திதான் சௌரிராஜப் பெருமாள். இவரைத் தரிசிக்க வேண்டும் என ஓடோடி வந்தேன். 

இவருடன் இன்னும் ஆறு கோயில்களைத் தரிசிக்க வேண்டும் எனத் திட்டமிட்டருந்ததாலும், மார்கழி மாதங்களில் விரைவாகவே நடை சாத்திவிடுவார்கள் என்பதாலும், பெருமாள் கோயில்களில் அக்கோயில்களின் விதிப்படி  திரைபோட்டு விட்டால் தரிசிக்க முடியாமல் போய்விடுமோ என்ற  அச்சமும் இருந்ததால் அவசரப்பட்டுக் கொண்டு வந்தேன்.  ஒன்றும் பதற வேண்டாம், உனக்கு காட்சி உண்டு என்பது போல எல்லாக் கோயில்களில், சௌரிராஜன் உட்பட, நல்ல தரிசனம் கிடைத்தது.

பெருமாள் இங்கு கிழக்கு நோக்கி, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். தானம் பெறும் கரத்துடன் உள்ளார். பக்தர்களின் துன்பங்களையெல்லாம் அவர் பெற்றுக்கொள்வார் என்பதை இது உணர்த்துவதாக உள்ளது. வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது அதிகாலையில் சிவனாகவும் மாலையில் பிரம்மாவாகவும், இரவில் விஷ்ணுவாகவும் காட்சிதரும் மும்மூர்த்தி தரிசனம் இக்கோயிலின் சிறப்பாகும்.

கோவிலுக்கு வந்த அரசனுக்கு, இக்கோவில் அர்ச்சகர் ஒருநாள், சுவாமிக்கு சூடிய மாலையை அளிக்க,  அதில் ஒரு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால் கோபங்கொண்ட அரசனிடம், அர்ச்சகர் அது பெருமாளின் திருமுடி என்று சொல்லிவிட்டார். 

அர்ச்சகர்,அரசு அதிகாரியாக இருந்திருக்க வேண்டியவர்  போலும். சும்மா எடுத்துவிட்டுவிட்டார்.   ஒரு வேளை இந்த ஜன்மத்தில் ஐ.ஏ.எஸ் ஆக இருக்கிறாரோ என்னவோ?

அரசன், தான் நாளை வந்து பெருமாளைப் பார்க்கும் போது, பெருமாளுக்கு முடி இல்லையெனில், அர்ச்சகர் தண்டனைக்குள்ளாவார் என்று கூறிவிட்டுச் சென்றான். திகிலுற்ற அர்ச்சகர் பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். 
அரசனிடம் ஏதோ சொல்லிவிட்டாலும்,நிஜமான பெருமாள் பக்தர். காப்பாற்றாமல் இருப்பாரா?

அவரிடம் இரக்கம்கொண்ட பெருமாள் அவரைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார். அடுத்த நாள் அரசன் வந்து பார்த்தபோது உண்மையிலேயே பெருமாள் தலையில் திருமுடி இருந்தது. இந்நிகழ்வின் காரணமாகவே உற்சவர் சௌரிராஜப்பெருமாள் எனப் பெயர் கொண்டுள்ளார் என்பது நம்பிக்கை. 


நான் தரிசனம் செய்துகொண்டிருக்கும் பொழுது, பின்னால் நின்ற ஒருவர், பெருமாளின் சௌரியை காணமுடியுமா, காட்டமுடியுமா, தரிசிக்க முடியுமா என விதவிதமாக கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தார். பட்டாச்சார்யார் கண்டு கொள்வதாகவே இல்லை. உற்சவர் உலாவில் அமாவாசையன்று மட்டும் திருமுடி தரிசனம் காணலாமாம். பக்தர் நகருவதாக இல்லை. மூலவருக்கு சௌரி இல்லையா என்று மல்லுக்கு நின்றார். மூலவர் நீலமேகப் பெருமாள்; உற்சவர்தான் சௌரிராஜர் என விளங்கவைப்பதற்கு பெரும்பாடுபட்டார் அர்ச்சகர்.

காளமேகப் புலவர் தெரியும்தானே? இருபொருள்பட பாடுவதில் வல்லவர். பிறப்பால் வைணவர். பின்னர் சைவராக மாறிவிட்டார். இதனால் கண்ணபுரம் பெருமாளுக்கு கோபம் ஏற்பட்டதாம். மழைநாளில் கண்ணபுரம் பெருமாள் கோயிலில் மழைக்காக புலவர் ஒதுங்க, கோயில் கதவுகளை மூடிப் பெருமாள் உள்ளே விடவில்லை.உடனே காளமேகப்புலவர் கவிதை ஒன்று இயற்றி, பெருமாளை நோக்கிப் பாட கோயில் கதவுகள் திறந்தனவாம்.
கண்ணபுரமருவே கடவுனினும் நீயதிகம்
உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள் - முன்னமே
உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமாம்
என் பிறப்போ எண்ணத் தொலையாது.

நான் சென்றிருந்தபோது ராமருக்கு அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அனந்தமான தரிசனம். காணவேண்டிய கோயில்.

சில புகைப்படங்கள்:

கோபுரம்

கோயில் குளம் - நீர் மிகுந்திருந்தாலே அழகுதானே?

வெளியிலிர்ந்து





இந்தபடம் நெட்டில் எடுத்தது



ராதே க்ருஷ்னா!!

கோயிலின் பின்புறம்.

எல்லா கோபுரங்களும்...

1 comment:

  1. அண்ணா ! பிரசாதம் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறதே. கிடைத்ததா ? சமீபத்தில் நண்பர் ஒருவர் மார்கழி மாதத்தில் அங்கு செய்யப்படும் நைவேத்யம் பற்றி பிரஸ்தாபித்தார். அதான் ஹிஹிஹிஹி.
    அரசு

    ReplyDelete