Saturday, January 25, 2014

கண்ணாடிக்கூண்டு குடியரசு தினம்




























25/01/2014. ஜொராட். அஸ்ஸாமில், குவஹாத்தியிலிருந்து 400 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு நகரம். பாண்டிச்சேரியைப்போல இருக்கும் விஸ்தீரணத்தில்.

அங்குதான்  நான், தற்போதைக்கு அடைக்கலம். 

எப்பொழுதும் போல, காலையில் வாக்கிங் போகலாம் என வெளிக் கிளம்பினேன். 

எனது மருமகன் வந்தார்“மாமா.. நீங்கள் இன்னும் இரண்டு நாட்களுக்கு வெளியே எங்கும் செல்லக் கூடாது...” தடை உத்தரவு போட்டார்.

ஏன்? வடகிழக்கு மாநிலங்களில், இந்திய சுதந்திரத் திருநாளைக் கூட பொறுத்துக்(!)கொள் வார்களாம். ஆனால் குடியரசு தினத்தை சகித்துக் கொள்ள மாட்டார்களாம். எங்காவது ஒரு இடத்தில் குண்டு வெடித்தாக வேண்டுமாம்.


என்ன இது! 1947-க்கு முன் வெள்ளையனை எதிர்த்து ஒன்றாகத்தானே போராடினோம்? வடகிழக்கிலிருந்து தென்மேற்கு வரை! வடமேற்கிலிருந்து தென கிழக்கு வரை – இந்தியா முழுவதும் ஒன்றாக இணைந்துதானே சுதந்திரத்தை வென்றெடுத்தோம்? குதூகலமாக, சந்தோஷமாக, உற்சாகமாத்தானே எல்லாம் ஆரம்பித்தன?  பின் ஏன் நாட்டின் பல பகுதிகள் ‘தனிக்குடித்தனம்’ போயாக வேண்டும் என அடம்பிடிக்கின்றனர்? எங்கே தவறு  நிகழ்ந்தது? எங்கே கோளாறு  நடந்தது? இளைஞர்கள் எப்படி ரௌத்ரதாரிகளானார்கள்? அவர்களுக்கு என்னதான் கோபம்? எப்படி இவ்வளவு ‘வெறி கொண்டனர்?’ சக மனிதர்களை சகித்துகொள்ளும் மாண்பையும், பொறுமையையும் எப்படி இழந்தோம்? சக மனிக்தர்களுக்கு எதிராக எப்படி கொலைவெறி கொண்டோம்?

போலீஸ்காரகளும், ராணுவத்தினரும் ‘டீல்’ செய்வது போல இது வெறும் ‘சட்டம் ஒழுங்கு’ பிரச்சினையா?

இல்லை.. அப்படி இல்லை.  இது சமூக பொருளாதார பிரச்சினை சார்ந்தது.

பிரச்சினையின் ஆரம்பம், வடகிழக்கில், குறிப்பாக அஸ்ஸாமில் வெளிநாட்டு-வெளிமாநில மக்களின் ஊடுறுவல்தான். குறிப்பாக “பங்களாதேசத்தினர்” பல லட்சங்களில் ஊடுறுவி உள்ளனர். இந்தியாவில் ஊடுறுவி இருக்கும் வெளிநாட்டினர்-குறிப்பாக பங்களா தேசத்தினர் கோடிகளில் இருக்கும் என அமைப்புசாரா புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இவர்களில் பலர் இந்திய குடிமகனாக பதிவு செய்து கொண்டுள்ளனர். இவர்கள் யாவரும் உள்ளூர் மக்களின் வேலை வாய்பினை பறித்தனர். சொத்துக்களை வாங்கிக்குவித்தனர்.

பல டீ எஸ்டேட்டுகள் வெளி மாநிலத்தவர்கு சொந்தமானது. குறிப்பாக மேற்கு வங்கத்தினருக்கு.  

ஏழை அஸ்ஸாமியர் சொந்த மாநிலத்திலேயே தெருவில் நின்றனர். உள்ளூர் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் இல்லை. குறிப்பாக ‘போடோ’ மொழிக்கு.

இங்கு நிலவும் ஏழ்மை உண்மையிலேயே நம்மைச் சாடுகிறது. நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் கூலிக்கு கூட தினசரி தொழிலாளர்கள் கிடைக்கின்றனர். இங்கு நிலவும் குளிரில் காலில் செருப்பு கூட இல்லாமல் தள்ளுவண்டிகளை இழுத்துக் கொண்டு செல்லும் தொழிலார்களை தினமும் பார்க்கிறேன். கடுமையான உழைப்பாளிகள்.

அரசியல் கட்சிகள்-குறிப்பாக காங்கிரஸ் இந்த ஊடுறுவலை, பல பல ஆண்டுகள் கண்டுகொள்ளவே இல்லை. காரணம் ஊடுறுவல்காரர்களின் ஓட்டு. அவர்களது ஓட்டு காங்கிரஸுக்கு கிடைத்து வந்தது.

அரசியல் அதிகாரம் நிலைத்து நிற்க எது வேண்டுமானாலும் செய்யும் கேடுகெட்ட அரசியல் கட்சிகள் உள்ளுர் மக்களின் உணர்வுகளை புறக்கனித்தனர். அவர்களுக்கு என்ன வேண்டும் என காது கொடுத்து கூட கேட்கவில்லை. மக்களின் கடுமையான கோபத்திற்கு ஆளாயினர்.

இதன் விளைவுதான் 1979 ஆரம்பித்த “உல்ஃபா”. பின்னர் நடந்தது அனைவருக்கும் தெரியும். 

ஆனால், கடந்த 30 வருடங்களில், தீவீர வாதக் குழுக்கள் ‘நெல்லிக்காய் மூட்டை போல’ உடைந்துகொண்டே வந்திருக்கின்றன. தற்பொழுது, குறைந்த பட்சம் இருபது குழுக்களாக, தீவீரவாதிகள் சிதறிக் கிடக்கின்றனர். யாரை எதிர்த்து, எதற்காக இம்மாதிரியான இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதோ அவை மறக்கடிக்கப்பட்டு, குழுக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளும், பணம் பண்ணும் முயற்சிகளும் தான் விஞ்சி நிற்கின்றன.

பத்து தினங்களுக்கு முன்னால் கூட, ‘கோக்ரஜார்’ என்னும் ஊரின் அருகே, ஓடும் பஸ்ஸிலிருந்து, ஐந்து பீகாரிகளை வெளியே இழுத்துப்போட்டு, பட்டப் பகலில், நாயைச் சுடுவது போல, தீவீரவாதிகள்  சுட்டுத் தள்ளியுள்ளனர். குடியரசு தினத்திற்கு முன்னால் இப்படி ஒரு தீவீரவாதக்குழு இருக்கிறது என்பதை அடையாளப்படுத்திக் கொள்ள இப்படி ஒரு செயலை அரங்கேற்றியுள்ளனர். 

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம், கர்னாடகம் போன்ற மானிலங்களில், கட்டுமானப் பணிகளிலும், ஹோட்டல்களிலும் பணியாற்றிக் கொண்டிருக்கும் லட்சக் கணக்கான வடகிழக்கு மானிலத்தவர்களை நினைத்துப் பார்க்கிறேன்.  இந்த மானிலங்களில் எல்லாம் வடகிழக்கு மானில தொழிலாளிகளை எதிர்த்து மக்கள்  தெருவில் இறங்கிவிட்டால் என்னாவது என அச்சமாக இருந்தது.

இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது கூட, கவுஹாத்தியில் குடியரசு தின பேரணியின் மீது ஏவப்படுவதற்காக  எடுத்துச் செல்லப் பட்டுக் கொண்டிருந்த ஒரு IED வெடித்து இருரவர் இறந்ததாக செய்திப் பத்திரிகை கூறுகியது.

இதற்கு தீர்வு?

எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு தான். 

ஆனால்,அரசியல் வாதிகளும், தீவீர வாதிகளும் நிலைமையை, சீர்பண்ண முடியாதபடி,  இடியாப்பச் சிக்கலாக்கிவிட்டனர்.

தேவை என்னவெனில், அனைத்துத் தரப்பிலும், தீர்வு கண்டாக வேண்டும் என்ற தீர்மானமும், உறுதியும் தான்.  குறுகிய அரசியல் லாபத்தினை மறந்து நாட்டைப்பற்றியும் மக்களைப் பற்றியுமான  உண்மையான அக்கறையும்தான்.

இது நடக்கும் என்று நம்புக்கூடிய நிலைமை கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தெரியவில்லை!

அதுவரை? மகிழ்ச்சியோடும், ஆரவாரமாக   நாடே கொண்டாடவேண்டிய, குடியரசு, சுதந்திரத்திரு நாட்களைக்கூட ராணுவ பாதுகாப்போடு, குண்டு துளைகாத கண்ணாடி மேடைக்குள்ளிருந்து, பல சாவுகளுக்களிடையே கொண்டாடிக் கொண்டிருபோம்!!




1 comment: