Friday, January 24, 2014

அன்பும் ஆன்மீகமும்

அன்பு சுயநலமற்றது! அகங்காரமற்றது!! தன் நலனை மட்டுமே முன்னிறுத்தாது.

‘அன்பு’ ! நாம் அனைவரும் பயன்படுத்தும், ஆனால் முழுவதுமாக  புரிந்து கொள்ளாத வார்த்தை! ஆன்மீக விளக்கத்தின்படி, அன்பின் முழு வீச்சினையும், ஆழத்தினையும், தீவீரத்தினையும் குறைந்தபட்சம் தெரிந்தாவது வைத்திருக்கிறோமா என்றால் துரதிஷ்டவசமாக ’இல்லை’ என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது.

எவர் மீதாவது நீங்கள் ‘அன்பு’ செலுத்துகிறீர்களா என்று எவரேனும் கேள்வி கேட்டால், உமக்கு ஏதாவது மறை கழன்றுவிட்டதா என்றுதான் கேட்கத்தோன்றும். மனைவி, கணவன், குழந்தைகள், உற்றார், நண்பர்கள் என பலரிம் மீதும் அன்பு செலுத்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று பதிலிருப்போம். ஆனால் சற்று ஊன்றிப் பார்த்தால் அப்படியில்லை என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியுள்ளது.

மனைவி, மக்கள், தாய் - தந்தை என பலரிடமும் ‘அன்பு’ எனபதாக நாம் சொல்லிக்கொள்ளும் ‘பரிவு’ , ‘அன்பு’ ஆகாது. அவர் எப்பொழுதாவது, தமது விருப்பத்திற்கு எதிராகவோ அல்லது அவர்கள் விரும்பியபடியொ நடந்து கொண்டுவிட்டால்,   நாம் சொல்வதைக் கேட்காவிட்டால், ‘அன்பு’ பின் சீட்டிற்குப் போய்விடும். ஈகோ முன்னின்று ரகளைய ஆரம்பித்துவிடும். ஏன்? 
எனது மக்கள், என் மனைவி-அவர்கள் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும், என்ற ‘தான்’,’எனது’ எனற அகங்காரம் முன் நின்று விடுகிறது. தம்பதியர் தமது துணையுடன் உயிரையே வைத்திருப்பதாக கதைப்போம். ஆனால் அவர் இறந்தவுடன் ‘பாங்க’ பேலன்ஸ் பற்றியும் சொத்துக்கள் பற்றியும் யோசிக்க ஆரம்பிப்போம். இறக்கக் கூட வேண்டாம்; மனைவி நோய்வாய்ப்பட்டாலோ, வசீகரம் குறைந்துவிட்டாலோ, விகாரப்பட்டு விடாலோ அன்பின் அளவும் கனிசமாக குறைந்துவிடுகிறது.

நண்பர்களிடம் ‘உயிர் நட்பு’ பாராட்டுவதாச் சொல்லிக் கொள்வோம். ஆனால்  நன்பரைப்பற்றி வேறுவிதமாக கேள்விப்பட்டுவிட்டாலோ அல்லது நம்மைப்பற்றி, அவர், பிறரிடம் குறையோ அல்லது புகாரோ சொல்லியதாக கேள்விப்பட்டாலும் சரியே (அது உண்மையாக இருக்கேண்டிய அவசியம் இல்லை) உடனே அவரை வெறுக்கத் தயாராகிவிடுவோம்.

திடீரென நண்பர் பணச் செல்வம் அடைந்து விட்டாலே கூட போதும், நமது மாச்சர்யங்கள் துவங்கிவிடும். பொறாமை தலை தூக்கிவிடும்.
உற்றம், சுற்றம் நண்பர்களிடத்தில் பெரும்பாலோனோர் காட்டும் ‘அன்பு’ சுய நல கலப்பன்றி அமைவது இல்லை.  தனது என்ற அகங்காரம் இன்றியும் அமைவது சிரமமாய் உள்ளது.

பின் எதுதான்  நிஜமான அன்பு?

நண்பர்கள்  நன்கு வாழ்ந்தாலும், நம்மைப்பற்றி புகார் கூறுவதாக தெரிய வந்தாலும், அவரிடமிருந்து நமக்கு பலன் ஏதும் வராது-அவரால் நமக்கு இனி பலன் இல்லை என்ற நிலை வந்தாலும், உண்மையாக வாழ்த்தும் மனோபாவம் (தன் நெஞ்சறிவது பொய்யற்க!) எப்பொழுது வருகிறதோ அப்போது!

உற்றார்-உறவு, மனைவி மக்கள், தனது விருப்பப்படி நடந்து கொள்ளவில்லையென்றாலும் அன்பு செலுத்தும் பாங்கு வரும் பொழுது!

அகங்காரம் முற்றாக ஒழிந்து நிற்கும் நிலையில்தான் அன்பின் சொரூபத்தினை கொஞ்சமேனும் தரிசிக்க இயலும். நமது சொந்த பந்தங்கள் பட்டிணி கிடக்கும் பொழுது ஏற்படும் உணர்வு, தாக்கம் நாம் கேள்வியே பட்டிராத மக்கள் பட்டிணி கிடக்கும் பொழுதும், எப்போது ஏற்படுகிறதோ அப்போதுதான் அது அன்பு எனப் பொருள்படும்.

அன்பு எப்பொழுதும் ‘பேரம்’ பேசாது.

நமது ‘அன்பு’,  ‘மொய்’ எழுதுவது முதல், கடவுளிடம் காணிக்கை அளிப்பதுவரை அனைத்தும் ‘பேரம்’ பேசுவதன்றி வேறு ஏதும் அறியாது. பிறர், நம்மிடம் எவ்வளவு அன்பு செலுத்துவதாக நாம் உணருகிறோமோ, அந்த அளவுக்குத்தான் நாமும் அன்பை திருப்பித்தர முடிவெடிக்கிறோம். ‘அவன் செஞ்சதுக்கு இதுவே அதிகம்’ என்ற வசனம் பேசப்படாத வீடு உண்டா?

ஒரு நிமிடம் நான் அன்பாக இருக்க முயலுகிறோம். மறு நிமிடம் மனமெனும் குரங்கு குதியாட்டம் போடும். ‘உனக்கு அவர்கள் செய்த கெட்டவற்றை(!) மறந்துவிட்டாயா என ஃப்ளேஷ்பேக் கொணரும்! நம்மை  நன்னெறியிலிருந்து பின்னால் இழுக்கும். பெரும்பாலான நேரங்களில் வெல்வது மனதாகவே உள்ளது.

நண்பர்-உற்றார்களின் கதியே இவ்விதம் என்றால், கடவுளிடம் நாம் கொண்டிருக்கும் ‘அன்பு’ விசித்திரமானது. துயரம் நேரும் போதெல்லாம் வசமாக அகப்பட்டுக் கொள்பவர் கடவுள் தான். சிறு துன்பம் வந்தாலும் கூட ‘எனக்கு ஏன் இந்த சோதனை அளித்தாய்?’ என புலம்புகிறோம். பெரும் சோதனைகள் வரும்பொழுது கடவுளுக்கு கண் இல்லை; அறிவு இல்லை என மெடிக்கல் சர்டிபிகேட் தருவோம். அதுவும் கொஞ்ச நேரம்தான். கடவுளிடம் நமக்கு பயம் வந்துவிடும். அவர் ஏதாவது ‘தண்டனை’ கொடுத்துவிட்டால்? உடனே கன்னத்தில் போட்டுக் கொண்டு, உண்டியலில் பத்து ரூபாய் சேர்ப்பித்துவிடுவோம். எல்லாம் நமக்கு பேரம் தானே?

இறைவன் திருவுள்ளம் அதுவானால், அவருக்கு எல்லாமுமே அளிப்பேன். பிரபஞ்சத்தில் உள்ள எதுவும் எனக்குத் தேவையில்லை.  கடவுளிடமிருந்து எதுவும் வேண்டாம். அவரை நேசிக்கிறேன். அவரிடமிருந்து எதுவும் எனக்கு வேண்டாம். கடவுளின் சக்தியோ, அதன் வெளிப்படுகளோ எதுவும் எனக்கு வேண்டாம். அவரே அன்பின் சொரூபம். அன்பே கடவுள். அதுவே எனக்குப் போதுமானது. வேறு கேள்விகள் எதுவும் என்னிடம் இல்லை - இந்த மனோபாவம் நமக்கு வரும்வரை நாம் கடவுளிடம் கூட அன்பு சொல்லுத்துவதாகச் சொல்லமுடியாது. 

அன்பு பயம் அற்றது

அன்பு உள்ள இடத்தில் பயம் எப்படி இருக்க முடியும்? அடிமைகள் யஜமானிடம் அன்பு கொண்டிருப்பதாக காட்டிக் கொள்வார்கள். அவை எப்பொழுதும் போலியானது. தண்டனைக்கு பயந்து செலுத்தும் அன்பு எப்பொழுதும் அன்பாக மாட்டா. 

இறைவன் பொருள் கொடுக்கிறாரா? செல்வம் கொடுக்கிறாரா? ஆரோக்கியம் கொடுக்கிறாரா? தண்டனை அளிக்கிறாரா? எனப் பார்த்துக் கொண்டிருக்கும் உணர்வு உள்ள மனதில் ஒரு பொழுதும் அன்பு மலராது.

ஒரு போலீஸ் அதிகாரி வீட்டிற்கு வரும் பொழுது, அவரது குழந்தைகள் அவரை என்னவாகப் பார்க்கின்றனர்? தண்டனை அளிப்பவர் என்றா? மன்னிப்பு அளிப்பவர் என்றா? பரிசு கொடுப்பவர் என்றா? எதுவுமிமல்லை. அவர்கள் காண்பது ஒரு தகப்பனை! அவ்வளவே!

கடவுளின் குழந்தைகளான நாம் மட்டும் ஏன் அவரைப் பார்த்து பயப்பட வேண்டும்? அவரது அன்பு வடிவம் புரியாததினால்தான் அவரைப் பார்த்து பயப்படுகின்றோம். அல்லது பேரம் பேசுகின்றோம்.

அன்பு உயர் லட்சியம் கொண்டது.

வியாபார  நோக்கத்தையும், பயத்தையும், பேரத்தையும் விட்டபின், அன்பே மிகவும் உயர்ந்த லட்சியம் என்பதை ஒரு ஆன்மீகி உணரத் தொடங்குகிறான். 

இவ்வுலகத்தை தீயவர்கள் முழு நரகமாகவே பார்ப்பார்கள். காதலர்கள் இவ்வுலகை காதல் நிரம்பியதாகப் பார்ப்பார்கள். வெறுப்பவர்கள் வெறுப்பு நிரம்பியதாக; பேராளிகள் போராட்டத்தை; அமைதி விரும்பிகள் அமைதி ரூபமாக; 

துரியோதனுக்கு உலகமே துஷ்டர்களால் நிரம்பியதாகத்தெரிய, தர்மனுக்கு உலகமே நல்லவர்களால் நிரம்பியதாகத் தெரிகிறது.

அழகற்றவளை காதலிக்கும் ஆணிடம் – அவன் கண்களுக்கு அவள் காதாலுக்கு உரியவளாத்தான் சொல்வான். மூன்றாம் மனிதனின் கண்களுக்குத்தான் அழகற்றதகத்தெரிவதெல்லாம்,
உண்மையில் சொல்லப்போனால், ‘அழகு’ என்பதற்கு நாம் கொண்டிருக்கும் விளக்கத்தை, உத்தேசத்தை நாம் விரும்புவரிடம் ஏற்றிப் பார்க்கிறோம். 

ஆக நாம் விரும்புவது எதிரிலிருக்கும் ஆணையோ அல்லது பெண்ணையோ அல்ல! நாம் நமது சொந்த எண்ணத்தை, லட்சியத்தையே பிறர் மீது ஏற்றி வணங்குகிறோம்.  அதே போலத்தான்   நாம் அன்பால் நிரம்பியிருக்கும் பொழுது, அந்த எண்ணத்தை உலகின் மேல் ஏற்றிப்பார்க்கிறோம். உலகமே அன்பு மயமாகத் தோன்றும்.

எவ்வளவு ‘கயவாளியாவும்’ இருக்கட்டும். அவனிம் ஏதும் எதிர்பாராமல், இயல்பாகவே அன்புடன் நடந்து கொண்டால், உங்களைப் பொருத்தவரையாவது  அந்த ‘கயவாளியும்’ நல்லவனே!

அன்பு நிரம்பியவர்கள்-மேற்சொன்னை நிபந்தனைகளுகு உட்படாத அன்பு நிரம்பியவர்கள் இவ்வுலகத்தினை இறைவனின் வடிவமாகவே – அன்பின் வடிவமாகவே பார்ப்பார்கள். அவர்களுக்கு உலகமே அன்பு மயமாகத்தான் தோன்றும்.

சர்வ மக்களும்,  சர்வ மதங்களும் அனுசரிக்க வேண்டிய முதல் தர்மம் ‘அன்பு’ மட்டுமே. 

No comments:

Post a Comment