Friday, January 17, 2014

‘பஷ்பா.......’

புஷ்பம்... ஏ.. புஷ்பா.. இங்கே வா..’

ஹாலில் வந்த குரலுக்கு ‘தோ... வர்ரேங்க...’ பதிலிருத்தாள் புஷ்பா.

புஷ்பா அந்த பங்களாவில் பாத்திரம் கழுவி, கூட்டிப் பெருக்கும் வேலை செய்பவள். வேலைக்கு சேர்ந்து, பத்து நாள் தான் ஆகிறது. இங்கு வேலைக்கு சேரும் முன், ‘சித்து’ வேலை பார்த்து வந்தாள். ‘சித்தாள்’ வேலை என்றால், கட்டிட வேலையில் மண் அள்ளிக் கொட்டுவது, ‘கலவை’ அள்ளிக் கொடுப்பது போன்ற எடுபிடி வேலை செய்யும் பெண்களைக் குறிக்கும்.

மேஸ்திரி கமிஷன் போக இரு நூறு ரூபாய் சம்பளம் வரும். காலை 8 மணிக்கு போனால் மாலை 6 வரை இடுப்பொடிய வேலை.  அதுவாகிலும் பரவாயில்லை. ‘கொத்துக்கள்’ எனப்படும் சில கொத்தனார்கள் தரும் ‘சில்மிஷ தொந்தரவுகள்’ அதிகம்.  பெரும்பாலான ‘சித்துக்கள்’ வாயடி அடித்து எதிர்த்து நிற்பார்கள். அங்கொன்றும் இங்க்கொன்றுமாக சில சித்துக்கள் பல பலன்களையும், சொளகரியங்களையும் உத்தேசித்து ‘அனுசரித்து’ போவார்கள். நமது புஷ்பா போன்ற ‘வாயில்லா பூச்சிகளின்’ பாடுதான் சிரமமானது. எனவேதான் சம்பளம் குறைவு என்றாலும் ‘சித்தாள்’ வேலையை விட்டுவிட்டு, வீட்டு வேலை செய்வதற்கு வந்து விட்டாள். 

இந்த வீட்டு வேலையில், காலை வந்தால் மதியம் போய்விடலாம். வெய்யிலில் கிடந்து மாள வேண்டியதில்லை. ‘சுகமாக’  நிழலில் வேலை செய்யலாம். இரண்டு வேளை  நல்ல சாப்பாடு கிடைக்கும். முக்கியமாய் ‘கொத்துக்களின்’ தொந்தரவு இல்லை.இங்கு இரண்டு வேளை உணவு கொடுத்து 1,500 ரூபாய் தருவதாய் பேச்சு. பரவாயில்லை.

புருஷன் ‘சின்னையன்’ பெயிண்டர் வேலை பார்க்கிறான். நல்ல வருமாணம் வருகிறதுதான். ஆனால் ‘டாஸ்மார்க்’ குக்குபோக, பாதி கூலி வீடுதங்குவதே பெரும்பாடாக இருக்கிறது.

அவன் சொல்கிறான்தான்,. ‘நீ ஒன்னும் வேலைக்கு போவேணாம்.. நா  சம்பாரிக்கறதே போதும்.. ஆக்கிப் போட்டுக்கிணு வூட்டுல கெட’ என்று. புஷ்பாவிற்குத்தான் மனசு கேட்கவில்லை.

அவர்களுக்கு  ‘சம்பத்’ என்று ஒரு பையன். நாலு வயசாகிறது. பொறந்தது முதலே  நோஞ்சான். கவர்மெண்டு ஆஸ்பத்திரியில் சொன்னாங்க. ஏதோ.. நெஞ்சுல ‘வால்வு’ இருக்காமே... அது சம்பத்துக்கு ரிப்பேராம். நல்லா வேலை செய்யலியாம். அஞ்சு வயசுக்கு அப்புறம் ஆப்பரேஷன் செய்யணுமாம். சேஞ்சா சரியா பூடுமாம். கவருமெண்டோட ரேஷன் அட்டை இன்சூரன்ஸ் மூலமா செஞ்சுக்கலாமாம். செலவு கம்மியாவுமாம். ஆனாலும் “மேஞ்செலவுக்கு” அம்பதாயிரம் ஆவுமாம்..

அதுக்குத்தான் பணம் சேர்க்கிறாள் புஷ்பா. இருவதாயிரம் சேர்த்து விட்டாள். அடுத்த வருஷம் சம்பத்துக்கு அஞ்சு வயசாகறதுக்குள்ள மீதி ரூபாயை சேத்தாகணும்.

“ஏய்.. புஷ்பா... காதுல விழல... சீக்கிரம் வா...” இறைந்தாள் எஜமானி.

‘தோ ... வந்துட்டேங்க..’

‘பார்... இந்த சோஃபாவில் டீ கொட்டி விட்டது. ஈரத்துணியால் சுத்தம் செய்து, சரி பண்ணு..’

‘சரிங்க...’

யஜமானியம்மாவை பார்ப்பதற்காக அவரது சினேகிதி வந்திருக்கிறார். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கைதவறி சோஃபாவில் ‘டீ’ கொட்டிவிட்டது போலிருக்கிறது.  அதை சுத்தம் செய்து கொண்டிருகும் பொழுது புஷ்பாவின் கவணம் அவர்களது உரையாடலில் சென்றது. அவர்கள் பேசிக் கொண்டதில் பாதி விளங்கவில்லை..பாதி இங்கிலீஷ். ஒருவழியாக யூகம் செய்து புரிந்து கொண்டாள்.

‘அவனுக்கு’ ஒண்ணுக்கு போகும் பாதையில் கல் வந்து அடைத்துக் கொண்டு விட்டதாம். “அவன்” என்று யாரைச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை. மருந்து மாத்திரையில் குணமாகவில்லையாம். வலியால் ரொம்ப கஷ்டப்பட்டானாம். சரியான டாக்டர் வேறு கிடைக்கவில்லையாம். கடைசியாக ஒரு ‘நல்ல’ டாக்டர் கிடைத்து ‘ஆப்பரேஷன்’ செய்து குணமாக்கினார்களாம். 75 ஆயிரம்  ரூவாய் செலவாகி விட்டதாம்.

‘அட...  வூட்டுக்கு வூடு வாசப்படிதானா? எம் மவனுக்கு ‘வால்வு’ ரிப்பேர்னா, அவிங்க வூட்டு பையன் யாருக்கோ ‘ஒண்ணுக்கு போர எடத்துல’ அடப்பு.. அதை சரிபண்ணத்தான் இம்புட்டு ரூவா செலவாச்சாம். பணக்காரங்கன்னா வியாதி வராமலா பூடும்!’  ஏதோ  ஒருவகை திருப்தி வந்தது புஷ்பாவிற்கு. 

அவுங்களுக்கு காசு இருக்கு சரி பண்ணிக்கிட்டாங்க.. நாம தான் காசுக்கு அல்லாட வேண்டியிருக்கு, தனக்குள் எண்ணியவண்ணம் தனது வேலையைத் தொடர்வதற்காக,  உள்ளே செல்ல யத்தனித்தாள் புஷ்பா.

‘அப்ப, நான் கிளம்பரேன். ‘அவன்’ உடம்பை பாத்துக்கோ..’ எனச் சொல்லிவிட்டு கிளம்பினாள், யஜமானியின் சினேகிதி.

அச் சமயத்தில், ஒண்ணுக்கு போகும் இடத்தில் அடைப்பு வந்து சரியான பையன் அங்கு வந்தான்.

“ஓ...க்யூட் பாய்.. யு ஆர் அல்ரைட் நௌ... ஒகே... நோ மோர் பெயின்”
“ஹி இஸ் ஃபைன்  நா... ஒ கே ஸ்மார்ட் பாய்.. கோ டு யுவர் பிலேஸ்.. டேக் ரஸ்ட்..”

“அவனும்” சாதுவாக, பௌயமாக ‘வாலை ஆட்டிக்கொண்டு’ வ்ழ்...வ்ழ்... என கத்திக் கொண்டு தனது இடத்துக்கு சென்றான்.
-0-

No comments:

Post a Comment