Friday, March 14, 2014

தனிமை, தனிமையோ.....


வாழ்க்கையின் கணிசமான தருணங்களில், சந்தோஷமும் அன்பும் பொங்கிப் பெருக, தெள்ளிய நீரோடை போல இல்லாவிடினும், பெரும்
சுழல்களில் சிக்கிக் கொள்ளாமல், அமைதியாக அமைந்திட ‘காதல்’ அவசியம் தானே?

வாழ்க்கைத் துணை அமைவெதெல்லாம் யாராலோ தெரியாது! வாய்த்திட்ட துணை, காதலும் அன்பும் கொண்டவராய் அமைந்திட்டால், அனைத்தும் சுகமே! 

சிரம காலங்களை கடந்து செல்வதும், வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர் கொள்வதும்,  உற்ற துணை இல்லாமல் சாத்தியமில்லைதானே?

மனமொத்த தம்பதியினர்,  ஒருவருக்கொருவர் பாதுகாப்பளித்துக் கொள்கின்றனர். இருவரும் Insecuriety ஆக உணர்வதில்லை. துயரங்களை நம்பிக்கையுடன் எதிர் கொள்கின்றனர்.

வாழ்க்கைத்துணையினை இழந்தபின், மன அழுத்தமும், சுய நம்பிக்கை இழப்பும் மெல்ல பாசி போல படர ஆரம்பிக்கிறது. உணர்வுகளைப்
பகிர்ந்துகொள்ள, Emotional support ற்கு ஆளில்லாமல் கையறு நிலையி லிருக்கிறார்கள். இந்த சூழ்னிலை மெல்ல-மெல்ல டிப்ரஷனுக்கு இட்டுச் செல்கிறது.

தனிமையாளர்களை,

தனிமை வாட்டும். நாளாவட்டத்தில் ஒரு குழப்பமான மன நிலைக்கு இட்டுச் செல்லும்.

அடுத்த கணத்திற்கு, நிகழ்வுக்கு, எவ்விதம்  முடிவெடுப்பது என மனக்கலக்கம் ஏற்படும்.

எவ்வளவு உறவுகளிருப்பினும், அத்யந்த உறவு இல்லாத  நிலை, கூட்டத்தின் நடுவே ‘தனியாளாய்’ நிற்பது போன்ற  நிலையை ஒத்தது.

வாழ்க்கை பொலிவிழந்துவிட்டது போல உணரப்படும்.

தனிமையும், அதன் உப விளைவகளுமாகச் சேர்ந்து, உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். எவ்வளவுதான் ஒத்துக் கொள்ள மறுத்தாலும், உண்மை இதுவாகத்தான் இருக்கிறது.


சரி... இவற்றை சமாளித்து மீள்வது எப்படி?

முதலில், தனமை ‘வாய்த்த’ சூழ்னிலையினைப் புரிந்து கொள்வது நல்லது.

(1)    என் விஷயத்தில், என் முன்னே கடவுள் தோன்றி, ‘உனக்கு உன் மனைவிதானே வேண்டும்? இந்தா வைத்துக்கொள்... விஜியை உனக்கு திரும்பத் தந்துவிட்டேன். ஆனால் ஒரு நிபந்தனை! அதே  நோயுடன், வலியுடன், வேதனையுடன் திரும்ப வருவாள்... பரவாயில்லையா?” என்று சொன்னால், என்ன சொல்வேன்? அச்சமாய்த்தான் இருக்கிறது.

மீண்டும், அவள் அந்த நரக வேதனையை அவள் அனுபவிக்க வேண்டுமா?  அதனைப் பார்த்து   நானும், நட்பும், சுற்றமும் அல்லலுற வேண்டுமா?  அல்லது தனிமையே பரவாயில்லை என்று சொல்வேணா?

(2)    நேர்மையுடன் பதிலளித்தால், பல கணவன்மார்களும்-மனைவிமார்களும், துணையிருக்கும் பொழுதே, சொல்லக்கூடிய-
அல்லது செல்லமுடியாத பல்வேறு காரணங்களினால், சேர்ந்திருக்கும் பொழுதே, தனிமையில் வாழ்வதாய் ஒத்துக் கொள்வார்கள்.

(3)    வாழ்க்கைத் துணை, உடனிருப்பது மட்டுமே, மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும் உத்தரவாதமளிக்காது. அவை இன்னும் பல மனம் சார்ந்த-உடல் சார்ந்த விஷயங்களைச் சார்ந்தது.

(4)    ‘ஆண்டாண்டு அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ?’ எப்பொழுதுமே, ஏன் இல்லாத ஒன்றையே நினைத்து அல்லலுற வேண்டும்? இருக்கும் ஒன்றை அனுபவிக்க முயலக்கூடாதா? Try to Enjoy the loneliness.

(5)    தினசரி வாழ்வில், முன்பிருந்ததில் சிலவற்றையாவது  மாற்றியமைத்தல் சின்ன-சின்ன சுவாரஸ்யங்களைத்தரும்.

(6)    உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவை, உடல் மற்றும் மன நலத்தைப் பேணக்கூடியது. ஆரோக்கியமான-இயற்கை உணவு முறையினை நாடுவது, நல்ல நட்பு வட்டாரத்தில் சேர்ந்து கொள்வது, சத்சங்க நடவடிக்கைகளில் நாட்டம் கொள்வது, சேவை நிறுவனங்களில் பணியாற்றுவது போன்றவை நல்ல பலனிக்கும்.

(7)    ஆதம பரிசோதனைகளும், ஆன்மீக ரீதியில் உயர முயலுவதும் வாழ்வின் பொருளை உணரவைக்கும்.

(8)    நல்ல பொழுது போக்கு நடவடிக்கைகளில் நாட்டம் கொள்வது சிறப்பானது. எனது ‘தனிமை’ நண்பர் ஒருவர், ‘நிதமும் மலர்களைச் சேகரித்து, மாலையாக்கி இறைவனுக்கு சாத்துவதில் இன்பம் காண்கிறார்.

(9)    Stop procrastination! Eliminate Toxic friends or similar groups.  Keep a long distance from these people. Think  for long term perspective. Look for people with similar interest / ideas.

(10)துணையின்மையையும், தனிமையும் வேறு வேறு வடிவங்கள். தனிமையே அல்லது துணையுடன் வாழ்வது மட்டுமே சுகம் என்பதெல்லாம் myth.      எல்லாம் நமது மனதில்-அதன் பாவனையில் இருக்கிறது.

(11)உணர்ச்சிவயப்படாமல், தீர்மாணமாகத்  சிந்தித்து, ‘சுய அழிவுப் பாதையில் செல்ல வில்லை’ என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

(12)வெறுமைப் பார்வையை விலக்க வேண்டும். எதிரே வரும் சந்தோஷ தருணங்களை இழக்க வேண்டாம். உலகில் இன்னமும் சில பசுமைத்திட்டுக்கள் இருக்கின்றன. கண் திறந்து பார்க்க வேண்டும்,

(13) எதிர்மறை எண்ணங்களை அடையாளம் கண்டுகொண்டு, அவற்றை முளையிலேயே கிள்ளியெறியுங்கள். மிச்ச சொச்ச தினங்களைஅழுது கொண்டே கழிக்க வேண்டியதில்லை. அழுவதாலும் துயருறுவதாலும் எந்த பொருளும், பலனும் இல்லை.

(14)தனியாய் வாழ்ந்து காட்டுங்கள். உங்களுக்கே நம்பிக்கை ஊற்றெடுக்கும். அண்டிப் பிழைக்க வேண்டாம். என்னைப் போன்ற தனிமை நிலையில் இருக்கும் நன்பரை,  ஒருவர் கேட்டாராம். ‘சாப்பாடு எல்லாம் எப்படி சாப்பிடுறீங்க......?” கேட்பவரின் கதைகேட்கும் சுவாரஸ்யம் நன்பருக்கு புரிந்துவிட்டது! ‘ நகைச் சுவையுடன், ஏன்..? எல்லாரையும் போல வாயால்தான் சாப்பிடுகிறேன்...” என்றார். செக்குமாடு போன்ற வாழ்க்கை முறையினை விட்டு  நீங்கி, சுவாரஸ்ய தருணங்களை கொணரலாம்.

(15)இந்த சமூகம், தனியாளை (இருபாலரையும்தான்) எதிர்மறைக் கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறது. விட்டுத்தள்ளுங்கள். தூற்றுவார் தூற்றட்டும். போற்றுவார் போற்றட்டும். இது உங்களது தினம். உங்களது வாழ்க்கை. அதை வாழ்வது உங்களது உரிமை.

(16)உங்களுக்கு பிரியமான நல்ல பொழுபோக்குகளை, பயணங்களை, கோயில் தரிசனகளை, தடையின்றி மேற்கொள்ள, நம்மை நாமே மேலெடுத்துச் செல்ல தனிமை நேரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

(17) நம்மையறியாமல், நமக்கு நாமே ‘அசௌகரியங்களை’ ஏற்படுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும். தனிமை அச்சம் தரக்கூடியதல்ல. Bottom line is, whether we are positive or negative – it is up to us.


கொசுறு:

சில நகைச்சுவையான, சுவாரஸ்யமான தினப்படி நிகழ்வுகளை கொசுறு பகுதில் சொல்லி வருகிறேன். இன்றும் அதைப் போல ஒன்று:

ஒரு நாட்டுமருந்துக் கடையில் நின்று கொண்டிருந்தேன். எனது தூக்கமின்மை பிரச்சினைக்காக ‘கசகசா’  வாங்கிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது எனது ஒரு நன்பர் ஒருவர் ‘விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென’ டி.வி.எஸ்ஸை கொண்டுவந்து கிட்டத்தட்ட கடைக்காரர் முகத்தின் மேலே கொண்டுவந்து நிறுத்தினார்.  அரண்டு போன கடைகாரர் எழுந்து நின்றுவிட்டார்.  டி.வி.எஸ் கார்ர்  எதையும் கண்டு கொள்ளவில்லை.  ‘தேன்.. , தேன்..,  தேன்..’ என அலறினார். 

‘டி.வி.எஸ் எங்கே கடைக்குள் வந்துவிடுமோ’ என்ற பதட்டம் தனிந்த கடைக்காரர் ‘ அப்பாடி... தேன் தானே வேண்டும்?  எவ்வளவு?’

‘20 மில்லி’

‘என்ன?  20 மில்லியா?’

‘ஆமாம்..’

‘பையா.. அந்த சேம்பிள் தேன் பாட்டிலை எடு’

‘எவ்வளவாச்சு..?’

நாயைப் பார்ப்பது போல பார்த்தார் கடைக்காரர். ‘ரெண்டு ரூவா கொடுங்க...’

தெரிந்தவராயிற்றே என்ற பரிவினால், ‘ஹலோ...வணக்கம்..’ என்றேன்.

டி.வி.எஸ் கண்டு கொள்வதாய்த் தெரியவில்லை.
இத்தனைக்கும் அவருக்கும் எனக்கும் 6 அங்குலம் தான் இடைவெளி.

விடாப்பிடியாக ‘அவரை உலுக்கி, ‘ஹலோ.ஓஓஓஓஓஓஓ... வணக்கம்’ என்றேன்.

‘ஆவ்வ்....வ்வ்வ்வ்....தா..தூ..பாஆ.. து.. ஹ்..ஹி.  பேஏஏஏஏஏஏ, ஹி...உ...... வணக்...வணக்...வணக்கம் சார்’ என்றார்.

‘என்ன இவ்வளவு பதற்றம்..?’

‘அதெல்லாம் ஒன்னுமில்லையே...  சாதரணமாய்த்தான் இருக்கிறேன்...’

‘உங்க முகத்தைப் பாத்தா ஏதோ ஆபத்தில் இருப்பது போல இருக்கிறது...!’

‘அது கிடக்கட்டும் சார்.... என் இரண்டாவது பெண்ணுக்கு டெலிவரி..
சிசேரியன்தான் நடக்கும்.. போன தடவை மாதிரி, இந்த தடவையும் நீங்கதான் இரத்தம் டொனேட் பண்ணணும்... உங்க இரத்த க்ரூப்தான் என் மகளுக்கும்....’

(எனது இரத்த வகை ஏ.ஒன் நெகட்டிவ்.  அரிதான க்ரூப். அவரது
முதல் மகள் பிரசவத்திற்கும் (சிசேரியன்) நான் இரத்தம் அளித்ததாக ஞாபகம். அதை நினைவு வைத்துக் கொண்டு, நாட்டு மருந்துக்கடை வாசலில் வேண்டுகோள் வைக்கிறார்)

வயது 61 ஆகிவிட்டதே? இரத்தம் கொடுக்கலாமா என ஒரு கணம் தோன்றியது. ஒரு ஜீவன், இன்னொரு ஜீவனை பெற்றெடுக்க போராடுகிறது. எளிதில் கிடைக்காத இரத்த க்ரூப். இப்பொழுது உதவ வில்லையெனில், உயிருடன் உலவுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

‘சரி... டென்ஷனாகாதீர்கள்.. நான் இரத்தம் தருகிறேன்..’

‘உங்க மொபைல் நெம்பர் கொஞ்சம் கொடுங்கள்...’

சொன்னேன்.

‘மொபைல் நெம்பரைக் குறித்துக் கொள்வதற்காக, மேல் சட்டைப் பையில், ஒரு இரண்டு கிலோ அளவிற்கு அடைத்துக் கிடந்த ஏதேதோ பேப்பர்களை பிடுங்கியடுத்தார்.  பேப்பர்களோடு, ஏழெட்டு பத்து ரூபாய் நோட்டுக்கள் கீழே விழுந்தன.  ‘ஐயையோ... ‘ என வாலில் தீ வைத்தாற்போல பதறி அடித்து கீழே குனிந்தார், ரூபாய் நோட்டுக்களைப் பொறுக்க... சட்டைப் பையின் அடியில் கிடந்த சில்லறை நாணயங்கள் யாவும் கலகலவென சாக்கடைக்குள் விழுந்தன. பார்டிக்கு இன்னும் டென்ஷன் ஏறிவிட்டது.

‘என்ன, இப்படி, இவ்வளவு டென்ஷனாகிறீர்கள்...? 

‘ஆஸ்பத்திரியில் எப்பொழுது இரத்தம் கொடுத்தாலும் எடுத்துக் கொள்வார்கள்.  இப்பொழுதே போகலாம் வாங்க.. எந்த ஆஸ்பத்திரி..? எப்பொழுதும் போல  ‘மகாத்மா’ தானே? உங்க மகளுக்கு ஒன்றும் ஆகாது..பயப்படாதீங்க.. வாங்க போகலாம். ஆஸ்பத்திரிக்கு. என் வண்டியிலேயே போகலாம். நீங்க பின்னாடி பதட்டமடையாம உட்காந்துட்டு வாங்க...’

‘இப்ப வேண்டாம் சார்... ஆப்பரேஷன் போது,  வந்து இரத்தம் கொடுத்தால் போதும்..’

‘சரி... எப்ப ஆபரேஷன்.. சாயங்காலமா? நாளைக்கா?’

‘இல்லை.. இன்னும் அட்மிட் பண்ணவேயில்லை..!’

வாட்? அட்மிட் பண்ணவேயில்லையா?  பின் எப்படி சிசேரியன்... இரத்தம் என்று.........?’

‘நேத்தைக்குத்தான் பிரக்னென்ட்’ என்று கன்ஃப்ர்ம் ஆச்சு....’

‘என்னாது.....? நேத்தைக்குதான் கன்ஃப்ர்ம் செஞ்சீங்களா?   இப்ப எத்தனையாவதுதான் மாசம் தான்  நடக்குது...?’

இருக்கும்... இது ரெண்டாவதோ.. மூணாவது மாசமோதான்...’


‘அடங்க்...கொக்கா மக்கா...........’



4 comments:

  1. very nicely written and you just reflected your true feelings. pls continue to write.

    ReplyDelete
  2. // தனியாய் வாழ்ந்து காட்டுங்கள். உங்களுக்கே நம்பிக்கை ஊற்றெடுக்கும் //

    இது ஒன்றே போதும்...

    பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை...
    காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை...
    மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை...
    சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை...

    ஹா.... ஹா.... ஜோக் செம...!

    ReplyDelete
  3. மிக நல்ல சிந்தனை . வாழ்க .

    சின்ன கதை சுவையாக இருக்கிறது .
    நாம் வாழ்ந்தோமே ஒரு வாழ்க்கை அதன் பொருளே இனி நாம் வாழ்வதில்தான் இருக்கிறது .
    மலர் பறித்து தெய்வத்துக்கு மட்டுமல்ல என் தேவிக்கும் தினம் சமர்பிக்கிறேன் .
    நம் வாழ்வின் அன்றைய நாட்களை அர்த்தமுள்ளதாக ஆக்க - இன்று வாழ்வோம் அவரின் நினைவு சூழ .

    அரசு

    ReplyDelete
  4. Taking life practically and good suggestion to others. All the Best.

    Srini

    ReplyDelete