Friday, May 12, 2017

காசிக்குப் போன சன்யாசி... (பகுதி-1)

காசிக்கும் கயாவிற்கும் சென்றுவரவேண்டும் என்ற அவா,  நமது முயற்சிக்கு அப்பாற்பட்ட பலவேறு காரணங்களால் தள்ளிக் கொண்டே சென்று கொண்டிருந்தது.  இந்த கொளுத்தும் வெய்யிலில் எந்தக் காசிக்குப் போகப் போகிறாய்..., அங்கே கங்கையில் நீர் மிகவும்  குறைவாகத்தான் இருக்கும் என்ற ஆலோசனைகளை மீறி, இம்மாதம் சென்று வந்தேன். காசி-கயாவில் திதி கொடுப்பது, சில அசௌகரியங்களைவிடவும் முக்கியமாகப் படவே புறப்பட்டாயிற்று.

செல்வது எனத் தீர்மாணித்தபின், அப்படியே புவனேஷ்வர், புரி, கொனார்க், அயோத்தி, அலகாபாத் என மேலும் சில ஊர்களும் பட்டியலில் சேர்ந்து கொண்டன.
முதலில் சென்றடைந்த இடம் புவனேஷ்வர், இரவு பதினொரு மணி.  அந்த நேரத்திலும் மக்கள் குறுக்கும் நெடுக்குமாய் போய்வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மென்மையான மக்கள். பெயர்ப்பலகைல் குடையை கவிழ்த்துப் பிடித்த்து போன்ற ஒரிய எழுத்துக்கள். தினுசு தினுசாய் இருக்கும் குடையின் கைப்பிடியை வைத்து எழுத்துக்களைப் பேதம் கண்டுகொள்கிறார்கள் போல. பலகைகளிலும், சாலையோர அறிவிப்புகள், மைல்கற்கள் யாவற்றிலும் ஒரியாவும்-ஆங்கிலமும்தான். அத்தி பூத்தாற்போலத்தான் ஹிந்தி. இவர்களுக்கு ‘வ’ வராது போல. ‘வ’ விற்கு பதில் ‘ப’.  புவனேஷ்வரி, புபனேஷ்வரி. பெங்காலிகளுக்கு ‘ப’ வராது.. பிருந்தாவன் என்பது ‘வ்ருந்தாவன்’.

புவனேஷ்வரில் சிறிதும் பெரிதுமாய் ஏகமாய்க் கோயில்கள். பெரியது லிங்கராஜ் கோயில். கோயிலினுள் ஏராளமாய் சன்னதிகள். முக்கிய தேவதை ஹரிஹர புவனேஷ்வரி. மத்திய கோபுரம் 180 அடி.  கோயில் ஏ.எஸ்.ஐ கண்ட்ரோலில் இருக்கும் புராதனமான கோயில்.  நுன்னிய வேலைப்பாடுகள். அசப்பில், தாராசுரத்தை நினைவு படுத்துகிறது. லைம்ஸ்டோன் போல இருக்கும் கற்கள். நிறைய ஸ்தல புராணங்கள் சொல்கிறார்கள்.  ஆண்கள் எல்லாம் ‘சம்போ மகதேவ்..’ என முழங்க, பெண்கள் புடவைத்தலைப்பை தலையில் போர்த்திக் கொண்டு... பக்தி மணக்கிறது.

அடுத்து பூரி ஜெகன்னாதர் ஆலயம். என்ன ஒரு அற்புதமான கட்டமைப்பு? கம்பீரமான கோபுரங்கள். ஜெகன்னாதர், சுபத்ரா, பலராமர் என மரத்தாலான மூலவர்கள். 13 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவர்களை மாற்றுவார்களாம். புரி ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றதல்லவா? இங்கு மூலவரை அருகில் சென்று பார்க்க முடியாது. அறுபதடிக்கு முன்னாலேயே நிறுத்தி விடுகின்றனர்.  உத்தேசமாக பார்த்து வைக்கணும், குருவாயூர்போல. வடக்கத்தி ஸ்வாமிகள் எல்லாம் கண்களை பெரிசாக வைத்துக் கொண்டு, காளிகள் யாவுரும் நாக்கைத் துருத்திக் கொண்டு இருக்கின்றனர். ஜெகன்னாதரும் அப்படியே.

இதை முடித்துக் கொண்டு சென்ற இடம் கயா.பயணத்தின் நோக்கமே கயாவிலும்-காசியிலும் திதி கொடுத்தலே. அங்குள்ள கர்னாடகா பவனில், இக்காரியங்களை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து தருகிறார்கள். பல்குணி நதிக்கரையிலும், விஷ்ணு பாதத்திலும், அக்ஷய வடம் என்னும் மரத்தினடியில், ஸ்ரீராமன் தனது தந்தைக்கு திதி கொடுத்த இடத்திலும் பிண்டம் விடவேண்டும். நீத்தாருக்கு கயைபோன்ற இடத்திற்குச் சென்று, திதி கொடுக்க வேண்டும்
கயாவில் தாய்க்கு மட்டும் 16 பிண்டங்கள் விடச் சொல்கிறார்கள். பதினாறு பிண்டங்களை விடுவதற்கான காரணங்களை திதி செய்துவைப்பவர் விவரிக்கும்பொழுது, பலரது கண்கள் கலங்கியது.

இந்தப் பிண்டங்களில் பல்குணி நதியில் 17 பிண்டங்கள் வைத்துப் படைக்க வேண்டும். விஷ்ணு பாதத்தில் 64 பிண்டங்கள் படைக்க வேண்டும். பிறகு இறுதியாக அக்ஷய வடத்தில் 64 பிண்டங்கள் படைக்க வேண்டும். அந்த 64 பிண்டங்களில் தாய்க்கு மட்டும் 16 பிண்டங்கள் உரித்தானவை. அந்த அளவுக்கு தாய்க்கு முக்கிய ஸ்தானம் அளிக்கப்படுகிறது. ஏன்?

நம்மைப் பத்து மாதம் சுமந்து, உதிரத்தைத் தாய்பாலாக்கி அளித்து, பெற்று வளர்த்து ஆளாக்குபவள் அன்னை. அந்த அன்னைக்கு இறந்த பின்னரும் காட்டும் நன்றிக் கடனே மேற்கண்ட 16 பிண்டப் பிரதானம். அதற்கென்று உள்ள மந்திரங்களைச் சொல்லி அந்தப் பிண்டத்தைப் படைக்கின்றனர்.

1. அம்மா, என்னை கர்ப்பத்தில் தாங்கியபடி, மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது அதனால் சொல்லொணா வேதனைகளை அனுபவித்தாயே, அதனால் எனக்கு விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தை உனக்குத் தருகிறேன். ஏற்றுக் கொள்வாயாக!
2. ஒவ்வொரு மாதத்திலும், பிரசவத்தின் போதும் உனக்கு வேதனைகளை உண்டாக்கிய பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், அம்மா, ஏற்றுக் கொள்வாயாக!.
3. உன் வயிற்றில் நான் கால்களால் உதைத்து உண்டாக்கிய வேதனையை நீ சகித்தாய் அம்மா. ஆனால் அதனால் எனக்குச் சேர்த்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக!.
4. நீ நிறைகர்ப்பிணியாக என்னைச் சுமந்தபோது உனக்கு உண்டான வேதனைகள் எனக்குச் சேர்த்த பாவத்தைப் போக்குவதற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன் அம்மா, ஏற்றுக் கொள்வாயாக!.
5. அம்மா, உன் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட களைப்பு, மூர்ச்சை போன்றவற்றால் வந்த வேதனைகள் எனக்கு விளைவித்த பாவத்தைப் போக்கப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக!.
6. அன்புள்ள அன்னையே, என்னை வியாதிகள் தாக்காமல் இருக்க, நீ கசப்பான மருந்துகளைச் சாப்பிட்டாயே , உனக்கு நான் செய்த இந்தக் கொடுமைகளினால் எனக்கு உண்டான பாவத்தைப் போக்கப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், தயை கூர்ந்து ஏற்றுக் கொள்வாயாக!.
7. நான் பிறந்தபோது மூன்று நாள்கள் அன்ன ஆகாரமின்றி பசி என்னும் பெருநெருப்பில் நீ நொந்தாயே அம்மா, உனக்கு என்னால் ஏற்பட்ட இந்தக் கொடுமை எனக்கு விளைவித்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள் அம்மா!.
8. இரவில் நான் உன் ஆடைகளை மல, மூத்ரத்தால் அசுத்தம் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், பெற்றுக் கொள் அம்மா.
9. என் பசி, தாகம் தீர்க்க அவ்வப்போது உணவும் நீரும் எனக்குத் தந்தாயே உன்னை அவ்வாறு வருத்திய பாவத்தை நீக்கப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், தயவு செய்து ஏற்றுக் கொள்.
10. அல்லும் பகலும் உன் முலைப் பாலை அருந்தும்போது உன்னை நான் துன்புறுத்தினேன். அதனால் விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக அம்மா.
11. கோடைக்காலங்களில் என்னைக் காக்கத் உன் உடலை வருத்திக் கொண்டாயே அம்மா! உனக்கு நான் தந்த இந்தத் துன்பங்களால் விளைந்த பாவங்களைப் போக்கிக் கொள்ளப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன் அம்மா.
12. மகன் நோய்வாய்ப்பட்டானே என்ற கவலையால் வாடி இருந்தாயே, அம்மா உனக்கு விளைவித்த அந்த மனத்துயருக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள் அம்மா.
13. என் அன்பார்ந்த அன்னையே, யமலோகம் செல்லும் நீ கோரமானவற்றை எல்லாம் கடந்து செல்வதற்குத் துணை நிற்பதற்காக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன் ஏற்றுக் கொள்வாயாக!.
14. உனக்கு நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக, அறிவுசால் புத்திரர்கள் அவர்களின் தாய்க்குச் செய்வதை ஒப்ப, நானும் இப்பிண்டத்தைத் தருகிறேன் அம்மா! கருணை கூர்ந்து இவற்றை ஏற்றுக் கொள்வாயாக.
15. நான் நன்கு வளர்வதற்காகத் உனக்கு ஆகாரம் இல்லாமல் கூடக் கஷ்டப்பட்டாயே அம்மா, உனக்கு நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக!
16. கர்ப்பத்திலும், சிசுவாக இருந்தபோதும், நான் மரணவேதனையை ஒத்த பல கஷ்டங்களை உனக்குத் தந்தமைக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைப் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக அம்மா!

அக்காலத்தில், தாய்க்கு கொடுத்திருந்த ஸ்தானமும் மரியாதையும் வியக்க வைக்கிறது.ஆனால் தற்காலத்தில் தந்தைக்கும் தாய்க்கும் கிடைக்கும் மரியாதை நினைவில் வந்து போவதை தடுக்க இயலவில்லை.

அக்ஷய வடத்தினருகே ஒரு காய், ஒரு கனி, ஒரு இலை ஆகியவற்றை ஆயுளுக்கும் விட்டுவிட வேண்டுமாம். உண்மையில் அங்கே சென்றுவிட்டு வந்தபின் காம, க்ரோத துற்குணங்களை விட்டுவிடனும். அதற்குப் பதிலாக (!) இவை போலும். அனைவரும் எச்சரிக்கையாக ஈச்சம்பழம், கோவக்காய், ஆலஇலை ஆகியவற்றை விட்டுவிடுகின்றனர்.

எல்லாம் நன்றாகத்தான் நடந்தது.  என்னதான் ‘காண்ட்ராக்டாக’ பேசிக்கொண்டாலும் ஆங்காங்கே, ‘செய்துவைப்பவர்’ உட்பட பலரும் காசு பிடுங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.  கயா வாசிகளுக்கு திருப்தி என்பதே ஏற்படாது போல. காற்றில் சதா கலந்துவிட்டிருக்கும் சாணி-மற்றும் சாக்கடையின் மணம் போல, ‘ஆசை’ இவர்களது இரத்தத்தில் கலந்துவிட்டிருக்கிறது. கேட்பதில் அவர்களுக்கு தயக்கமொன்றும் இல்லை. நமக்குத்தான் ‘இல்லை’ என்று சொல்ல தயக்கம். அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அடுத்த பகுதியில் கொனார்க், காசி, அயோத்தியா பார்க்கலாம்.




(மேலே கண்ட படங்கள்  நெட்.)


 அக்ஷ்ய வடம் 


1 comment:

  1. காசி யாத்திரை நானும், என் கணவரும் முடித்து விட்டோம். ஆனால் எழுத நேரமில்லாததால் எழுதவில்லை.

    தற்பொழுது முக்திநாத் யாத்திரை சென்றுவிட்டு வந்தோம். அதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். நொண்டிச்சாக்காக நேரமில்லாததால் உங்கள் அளவிற்கு அழகாக எழுத முடியவில்லை.

    உண்மையில் நான் உங்கள் எழுத்துக்கு ரசிகை.

    நேரம் கிடைக்கும் போது என் வலைத் தளத்துக்கும் வாருங்கள்.

    முக்திநாத் யாத்திரை 1 - http://aanmiigamanam.blogspot.in/2017/05/1.html

    முக்திநாத் யாத்திரை 2 - http://aanmiigamanam.blogspot.in/2017/05/2.html

    மிக்க நன்றி
    ஜெயந்தி ரமணி

    ReplyDelete