Sunday, May 14, 2017

காசிக்குப் போன சன்யாசி – இறுதிப்பகுதி

கடைசியாகச் சென்றது காசி. 

வாரணாசி, காசி, பனாரஸ் என்ற பெயர்களில் அழைக்கப்படும் புராதனமான புனிதமான நகரம்.  மலைக்க வைக்கும் அகலத்தில் கஙகை. இந்த கோடையிலும் ஓரளவிற்கு நீர் ஓடுகிறது.  

வாரணாசியின் கரைகளைத் தொட்டபடி வளைந்தோடும் கங்கை. 64 க்கும் மேற்பட்ட படித்துறைகள். ஒவ்வொரு படித்துறைக்கும் ஒரு பெயர். ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும், புழங்கும் முடிவில்லா கதைகள். இவ்வளவு பெரிய கதைத் தொகுப்புகள் வேறு எந்த நகரத்திற்காவது இருக்கிறதா எனத் தெரியவில்லை. 

படகொன்றில் ஏறிக் கொண்டு  வாரணாசியின் கரைகளையும், அதன் கரைகளில் கம்பீரமாக கட்டப் பட்டிருக்கும் -  இன்னமும் பெருமளவில் பழமை மாறாத கட்டிடங்களையும் பார்த்துக் கொண்டே பயணிப்பது பேருவுகை.  படகில் மிதந்தபடி புகழ்பெற்ற ‘கங்கா ஆரத்தியைக்’ காண்பது இன்னும் பேருவுகை.  

எத்தனை ஆயிரமாயிரம்அரசர்களையும், அவர்தம் வரலாறுகளையும், காலம் காலமாக செழுமைப்படுத்தப்பட்டிருகும் நாகரீக வளர்ச்சியையும்  தனக்குள் புதைத்து வைத்திருக்கிறாளோ இக்கங்கை?  அத்தனையும் தன்னுள் அடக்கிக் கொண்டு அமைதியாகப் பயணிக்கும் கங்கையை ஸ்பரிசிப்பதே ஆனந்தம்.

ஆன்மீகத்தேடலுக்காக எவ்வளவு கோடிப்பேர்கள் இங்கே வந்திருப்பர்?  எவ்வளவு பேர்  ஞானமடைந்திருப்பர். எவ்வளவு பெரிய மகான்கள் கால்பட்ட பூமி!  இப்புரதன நகருக்கு நாமும் வந்துவிட்டோம் என்ற நினைவே சிலிர்க்க வைக்கும். 
ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கில் யாத்ரீகர்கள் வந்து போகும் நகரம்.

மணிகர்னிகாவிலும் ஹரிஷ்சந்திரா கட்டிலும் முடிவின்றி எரிந்து கொண்டிருக்கும் உடல்கள். கங்கையில் பிணம் நாறாதாம்; மல்லிகை மணக்காதாம்; காகம் கரையாதாம்.  அவ்வளவு உடல்கள் தகனிக்கப்பட்டும் காற்றில் நாற்றமில்லை. காகங்களை எங்கும் காணவில்லை. பூவைப்பற்றித் தெரியவில்லை.  இங்கே சுற்றுவட்டாரத்தில் இறந்தவர்களை கங்கை நதியின் கரைக்கு கொண்டுவந்துவிடுகிறார்கள். எந்த நேரமும் மூன்று உடல்களாவது காத்திருப்பில் இருக்கிறது. எலக்ட்ரிக் க்ரெமிட்டோரியமும் இருக்கிறது என்கிறார்கள். உடல்கள் அரைமணி நேரத்தில் சாம்பலாக்கப்பட்டுவிடுகின்றன. முடிந்தது வாழ்க்கை.

கங்கை  நீராடலும்,   நீத்தார்க்கு திதி கொடுத்தலும் காசி யாத்திரையின்  நோக்கம். நினைத்தபடி இரண்டும் ஹனுமன் கட்டில் நடந்தேறின. 
-0-
முன்பு மணிகர்னிகாவிலும் ஹரிஷ்சந்த்ராவிலும் சாம்பல் குவியல்கள் நதியின் ஓரத்தில் ஏராளமாக மிதந்து கொண்டிருக்கும். பூமாலைகள் துணிகள் என பலவும் மிதக்கும். தற்போது சாலில் வேஸ்ட்கள் அனைத்தையும் அப்போதைக்கப்போது நீக்கிவிடுகிறார்கள். ஐந்தாறு படகுகள் இந்தப் பணிக்காகவே வடிவமைக்கப் பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மற்றபடி நீர் அசுத்தமாகவே ஓடுகிறது.

காசியின் போக்குவரத்து மிரளவைக்கிறது. எவர் வேண்டுமெனினும் எப்படி வேண்டு மானாலும் சாலைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.   ஃப்ரீ ஃபார் ஆல்.  குறுகலான சாலைகள். புறநகர் சற்று பரவாயில்லை. விதிகள் எல்லாம் காற்றில். போதாக் குறைக்கு எந்த நேரத்திலும்திம்மென்ற வயிற்றோடு எல்லா இடங்களிலும் சுற்றிவரும் மாடுகள். காற்றில் சாணத்தின் நாற்றத்தை உணராமல், காசியாத்திரை சாத்தியமில்லை.

ஹனுமண் கட்டில் பாரதியாருக்கு சிலை வைத்திருக்கிறார்கள். வெங்கட்ராமன் திறந்திருக்கிறார். சிலையின் அடியில் அடுப்புக்கரி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். சென்றமுறை சென்றபொழுது சம்ஸா விற்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது தற்செயலாக தமிழர் ஒருவரைக் காண, அவரும் நானும் சேர்ந்து சிலையைக் கழுவிட்டோம்.
-0-

காசி விஸ்வனாதர், விசாலாட்சி, அன்னபூரணி ஆகியோர் தரிசனமும் திருப்தியாக நடந்தது. இந்த மூன்று கோயில்களும் சிறிய சந்திற்குள் இருக்கின்றன. விஸ்வனாதர் கோயில் நெருக்கியடித்துக் கொண்டு இருக்கிறது.  சாதாரண தினங்களிலும் இருபது-முப்பதாயிரம் யாத்ரீகர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். திக்குமுக்காடுகிறது. கோயில் அமைந்திருக்கும் சந்தினை விஸ்தீரணமாக்கியே தீரவேண்டும்.  மொழிதெரியாத ஒருவர் தலைசுற்றவைக்கும் சந்துகளில், சடுதியில் காணாமற் போய்விடுவது சாத்தியமே.

விஸ்வனாதர் கோயிலுக்குள் செல்ல எப்பொழுதும் போல கெடுபிடி. சோதனை. இப்பொழுதெல்லாம், அன்னிய நபர்கள் நமது உடலைத் தடவிப் பார்ப்பதை சகஜமாக ஏற்றுக் கொள்ள பழகிவிட்டோம். பெரும் மால்கள், திரையரங்குகள், கோயில்கள், விமான நிலையங்கள் எனப் பல இடங்களிலும் ஸ்கேனரும், செக்யூரிட்டியின் கைகளும் வருடிவிட்டுத்தான் உள்ளே அனுமதியளிக்கின்றன. யாரைக் குறை சொல்ல? காலத்தின் கோலம் அப்படி.
-0-

அருகே புகழ்பெற்ற காலபைரவர் கோயிலுக்குச் சென்றேன். கோயிலின் உட்பிரகாரம் முழுவதும் கடைகள். ஒரு வினாடி தயங்கினால், உடனே மயிலிறகு கட்டு ஒன்றினால் தலையில் ஒரு தட்டு தட்டி, ஏதோ மந்திரத்தை முனகி, காசிக்கயிற்றுக் கட்டு ஒன்றினை கையில் திணித்து விடுவார்கள்.  பின் அவர்கள் சொல்லும் விலைதான்.

என்போன்ற பேரம் பேசும் திறனற்றவர்கள் இவ்வூரில் பர்சேஸ் பக்கம் போகக்கூடாது; பட்டுப் புடவைகளுக்கும் இவ்விதி பொருந்தும். உடன் வந்த ஒருவர், கடைக்காரர் ரூ. 1500 சொன்ன  ஒரு பட்டுப்புடவையை(?) சற்றும் தயக்கமின்றி 250/-க்கு கேட்டார்.  கடைக்காரர் எங்கே எங்களை ‘அடித்துவிடப்’ போகிறாரோ என பீதியடைந்த போது, கூலாக பேரம் நடந்து 450/-க்கு விலை படிந்தது. இன்னும் எத்தனை ஜென்மா அடைந்தாலும் இக்கலை வரவே வராது.
-0-

வாரணாசிக்குச் சென்றால் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டியவை 1. கங்கையோரத்தில் மாலைவேளையில் படகுச் சவாரி. 2. படித்துறைகள்  3. மாளவிகா பாலம்.  4. காசியின் சந்து பொந்துகள். 5. கங்கா ஆரத்தி.

-0-





No comments:

Post a Comment