Wednesday, April 6, 2016

“ங்கொப்பன் மவனே... சிங்கம் டா...” ( குறுங்கதை)


மதியம் ஒரு மணி இருக்கும். மதிய உணவிற்குப்பின் ஒரு குட்டித்தூக்கம் போடுவது, அரவிந்தனின் வழக்கம். குட்டித் தூக்கம் என்றால் ஒரு 10 நிமிஷம் தான். உண்டது, சாப்பாடோ அல்லது கஞ்சியோ, அது பிரச்சினையில்லை! உணவு, வயிற்றிற்குள் இறங்கியதும் லேசாக கண்ணைச் செருகும். அந்தக் கணம் அரவிந்தனுக்கு கோடிபெரும். மாத்திரை போட்டே தூக்கம் வரவழைத்துக் கொண்டிருப்பவருக்கு, தானே வரும் தூக்கம் அல்ப நேரமேயானாலும், அது தரும் சுகமே தனியல்லவா? தூங்கி எழுந்ததும் கிடைக்கும் சுறுசுறுப்பு அற்புதம்.  அதனால், அக்கணத்தை நழுவவிடாமல், தூங்கிவிடுவார்.

அன்றும் அப்படித்தான். கண்கள் தூக்கத்திற்கு நழுவும் தருணம்.  அப்போது, சடாரென, நேராக மண்டைக்கு மேலிருந்து, கடைவாய்க்கு ஒரு கூரான ஈட்டி கொண்டு செருகினாற்போல ஒரு சுரீர் வலி. அலறி அடித்து எழுந்து உட்கார்ந்தார், அரவிந்தன். அந்த வினாடி நேர வலியே, கண்ணீரை  வரவழைத்துவிடப் போதுமானதாக இருந்தது.  
என்ன ஆச்சு? கீழ்த் தாடை முழுவதும், வலி வந்துவிட்டுப்போன தடயம் தெரிந்தது.

மூன்று தினங்களுக்கு முன் தான், மேல் கடைவாய்ப்பற்களுக்கு ஏதோ, ‘பொட்டானிகல்’ பேர் போலத் தெரியும் “வேர் சிகிச்சை” என்று அறியப்படும் ரூட்கேனால் பற்சிகிச்சை செய்து கொண்டு வந்தார்.   இச்சிகிச்சைக்கு முன்னும் பின்னும் அனுபவித்த இம்சைகளினால் அவதியுற்று மீண்டிருக்கும் அரவிந்தன், இன்னும் ஒரு பல் வலியா என பீதியுற்றுப் போனார்.

ஒருவேளை மனப் பிரமையோ? மீண்டும் சாய்ந்து படுத்துக் கொள்ள பயம். இனி அந்த தூக்கக் கணம் வராது. பரவாயில்லை அந்த வலி வராமலிருந்தால் போதும் என கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் கணத்தில், அந்த விருந்தாளி வந்தே விட்டார்.

அந்தக் கால ஓனிடா டி.வி விளம்பரம்போல தலையில் கொம்பு முளைத்த ராட்சதன் வந்தே விட்டான். மின்சார ஷாக் போல சுண்டி இழுத்தது வலி. இம்முறை ‘டீசர்’ காட்டிவிட்டு போக வில்லை. பிரசவத்திற்கு தாய்வீட்டிற்கு வந்த பெண்போல நன்கு ஆற அமர சௌகரியமாய் கால் நீட்டி உட்கார்ந்து விட்டது பல்வலி. ஒவ்வொரு நொடிக்கும் ஒரு சுரீர். 

வ்வாஆஆஆஆஆ..  தானே கைகளால் வாயை மூடிக் கொண்டார்.

கத்தாதே! நிதானம்... நிதானம்.. பதறாதே!

மருந்துப் பெட்டியை குடைந்தார். ஒரு கையால் வாயைப் பிடித்துக் கொண்டே!

ப்ரூஃபன்? பாராசிட்டாமல்? அட.... ஒரு சாரிடான்? ஒன்றுமே இல்லை. கிராம்புத்தைலம் வைத்தால் நிவாரணம் கிடைக்குமாமே? அதெல்லாம் வீட்டில் இருக்குமா என்ன?

அவசரமவசமாக, பழைய பிரிஸ்கிரிப்ஷனைத் தேடினார். ‘டென்டிஸ்டின்’ கன்சல்டிங் நேரம் மாலை நான்கு முதல் இரவு எட்டு மணி வரை என்றிருந்தது.  வேர் சிகிச்சை செய்து கொண்ட ஆஸ்பத்திரிதான் அது.

மணியைப் பார்த்தார். இப்பதான் மணி இரண்டு. கதவைப் பூட்டக் கூட இல்லாமல், தெரு முனையிலிருந்த ஒரு மெடிக்கலை நோக்கி ஓடினார். ஏதாவது ஒரு பெயின் கில்லர் கொடுங்க... பல்வலி.. தாங்கல.. சீக்கிரம்.

கடைக்காரர் இரு மாத்திரைகளைத் தந்தார்.  மாத்திரை செயல்பட ஒருமணி நேரமாவது ஆகும்... தெரிந்தும் கேட்டார். பல்வலிக்கு, இந்த மாத்திரை எவ்வளவு  நேரத்தில் கேட்கும்?
கூடவே, வென்னீர்.. உப்புத்தண்ணீரில் கொப்பளித்தல் என கைவைத்தியமும்.

வேலையில்லாதவன் பொழுதும், வலி வந்தவன் பொழுதும் செலவழியாது. மணி மூன்றரை ஆயிற்று.. இனியும் பொருக்க இயலாது.. கதவைப் பூட்டிக் கொண்டு கிளினிக்கு விரைந்தார், ஆட்டோவில்.  மாத்திரை எந்த வலியையும் சரியாக்க வில்லை.

கிளினிக்கில்  நோயாளிகள் யாரையும் கணோம்!  

வரவேற்பரையில் இருந்த டி.விக்கு கண்களை அடகு வைத்த ஒரு ரிசப்ஷனிஸ்ட், தமிழ் ஹிந்து பேப்பரில் மடித்து வைத்த வடையை மென்று கொண்டிருந்தார்.

“டாக்டர் எப்ப வருவார்...?”

“வந்திடுவார்..”

“அது எனக்குத் தெரியும்.. எப்ப என்று கேட்டேன்... ஆ.. ஐயோ..”

“.........”

“இங்கே ஒருத்தன் கத்தறது உன் காதில் விழல..., எப்ப வருவார்..?”

“வருவாருங்க...”

“அதான்யா.. எப்ப? கன்சல்டிங்க ஹவர் மாலை நாலுன்னு போட்டிருக்கு... இப்ப மணி நாலு..”

“வரும் நேரம்தான்..” மீதி வடையை மெல்ல ஆரம்பித்தான்.

“ஆ...அம்மா.. ஐயோ...”

இந்த கிளினிக்கில், வலிக்கு ஒரு மரியாதையும் கிடையாது போலிருக்கிறது. அவர்கள் இம்மாதிரியான அலறல்களுக்கு பழகிவிட்டிருந்தனர். டி.வியில் சந்தோஷ் சுப்ரமணியம், ஜெனிலியாவுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“டி.வி வால்யூமைக் குறை... தலைவலி”

‘........’

“சொல்றேன்ல... டி.வி வால்யூமைக் குறை.. இங்கே என்ன சினிமாவா போடறீங்க.. டீக்கடை மாதிரி அலறவிட்டுக் கொண்டு?”

“உங்களுக்கு பல் வலியா.. தலைவலியா சார்..”

“மயிறுவலி... அந்த டி.வியை அனைத்துத் தொலை..”, 

 “வ்வ்வ்வ்வ்...அம்மா.....”

பத்து  நிமிஷம் ஆகியிருக்கும்..

“எப்பாய்யா  வருவாரு உங்க டாக்டர்...  “

‘இப்ப எதுக்கு கத்தறீங்க.. அவர் வர்ரப்பதான்.. அவுங்க எங்கிட்ட சொல்லிகிட்டு போவறதில்லை.. சொல்லிப்புட்டு வர்ரதில்லை.. வரும்போது பாக்கலாம். நீங்கதான் ஒன்னாம் நெம்பர் டோக்கன்..”

“அந்த டாக்டர்கிட்ட மொபைல்ல பேசு.. இங்க நான் வலியால் துடிக்கிறேன்னு சொல்லு..”

“அதெல்லாம் பேச முடியாது..”

“அப்ப என்னாத்துகுய்யா, விசிட்டிங் நேரம், மாலை நாலு முதல்ன்னு போர்டு போட்டிருக்கீங்க..? “

எரிச்சலாகிப் போன அவன், ரிமோட்டை எறிந்துவிட்டு வெள்யேறினான்.

ஒவ்வொரு நொடியும் கழிவதற்கு யுகம் போல இருந்த்து.
அந்தப் பக்கமாக, ஒரு புடவைகட்டிய நர்ஸ் வந்தாள். பாய்ந்து சென்று, சிஸ்டர்.. வலி உயிர் போகுது.. ஏதாவது பவுர்ஃபுல் பெயின் கில்லர் கொடுங்க... டாக்டர் வர்ரமாதிரி தெரியல..
சீற்றமுற்றஅந்தப் பெண்மணி திட்டுவதற்கு எத்தனித்த பொழுது, அரவிந்தனின் வயதையும் நிலைமையும் பார்த்து, “கொஞ்சம் உக்காருங்க.. இப்ப வந்துடுவார் டாக்டர்..”

"அப்படித்தான் ஒருமணி நேரமா சொல்லிக்கிட்டிருக்கீங்க... டாக்டர் வந்த பாடில்லை..   நாலு மணிக்கே வந்துடுவார்னு, வக்கனமா போர்டு மாத்திரம் வச்சுக்குவீங்க... கூட்டம் சேர்க்க. ஆனால் வரமாட்டீங்க... டாக்டர்னா என்னா, மேலே வானத்திலிருந்து குதிச்சுட்டீங்களா? உங்க தயவு வேணுங்கறதனால நீங்க எப்படி வேணா நடந்துக்குவீங்களா? எதிக்ஸ் வேணாம்?”

‘இப்ப உங்களுக்கு என்ன வேணும்...? அவர் சாயங்காலம் ஆறரை மணிக்குத்தான் வருவார். வெயிட் பண்ணிப் பாக்கறதுன்னா பாருங்க.. இல்லாட்டி வேற கிளினிக்குக்கு போங்க... வீணா சத்தம் போடாதீங்க...”

“அப்ப, போர்டுல விசிட்டிங் அவர் மாலை ஆறரைன்னு மாத்துங்க.. எதுக்காக நாலுன்னு எழுதிவைச்சுருக்கீங்க... “

“போர்டுல எப்படி இருந்தா என்ன... சாயங்காலம்தான்.. நான்தான் வேற டாக்டரிடம் போங்கன்னு சொல்லிட்டேனுல்ல..?”

“இது நீங்க ட்ரீட்மெண்ட் கொடுத்ததுக்கு அப்புறம் வந்த  வலி.. வேற டாக்டரிடம் போகனுமா வேண்டாமான்னு நான் தீர்மாணித்துக் கொள்வேன்.. உங்க அறிவுரை தேவையில்லை..”

“அப்ப பேசாம இருங்க... கத்தக் கூடாது..”

வலிவந்தால், வெட்கம்கூட கொஞ்சம் விலகிவிடும் போல.. மீண்டும் முனக ஆரம்பித்தார். உள்ளேயிருந்து ஒரு ஃபார்மஸிஸ்ட் ஒருத்தர் வந்தார்.

“என்ன பிரச்சினை?”

‘இவருக்கு பல் வலி... இப்பவே டாக்டரை வரச்சொல்லுது...”

“அவர் சாயங்காலம்தான் வருவாரு..”

இனி சீன் போட்டு பலன் இல்லை என உணர்ந்த அரவிந்தன், 
“மதியத்திலிருந்து வலி உயிர் போவுது.. தாங்கல... ஏதாவது பெயின் கில்லர் கொடுங்க.”

“ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாம கொடுக்கக் கூடாதுங்க...”

“வலி என்ன, ப்ரிஸ்கிரிப்ஷனோட வருமா? முடியல.. ப்ளீஸ்...சீக்கிரம் ஒரு பெயின் கில்லர் கொடுங்க...”

இடைமறித்த அந்த நர்ஸ்,  இவுருக்கு வலி முடியல..அதான் கத்தராரு.. ஒரு  ‘............. 500 mg’ கொடுத்துடுங்க.

அந்த நர்ஸ் ஒரு மாத்திரையையும், தண்ணீர் குவளையையும் சேர்த்தே கொண்டுவந்து கொடுத்தார்.

‘தேங்க்ஸ் சிஸ்டர்..”

மணி ஐந்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. அனத்தலும் புலம்பலுமாய் கிடந்தார் அரவிந்தன்.

வெளியே சென்ற அந்த ரிசப்ஷனிஸ்ட் உள்ளே வந்தான். முதல் காரியமாய் டி.வியை அலறவிட்டான்.

“இப்ப நீ டி.விய நிறுத்தப் போறியா இல்லியா... இங்க என்ன பொழுது போக்கவா வந்தோம்? நிறுத்து... இல்லாட்டி ம்யூட்ல போடு”

‘யோவ்..அப்பத்திலிருந்து பாத்துக்கிட்டிருக்கேன்.. இன்னாத்துக்கு வம்படிச்சுகிட்டிருக்க? நீதான் அதிசயமா ஆஸ்பத்திருக்கு வந்துட்டியா? இங்க வர்ரவுங்க எல்லாத்துக்கும்தான் வலி.. அதுக்கென்ன செய்யமுடியும்.. பேசாம இரு...”

வெகுண்டெழுந்தார் அரவிந்தன்.
அடுத்த அரைமணி நேரம்.. ரணகள சந்தைக்கடை. “மீண்டும் விசிட்டிங் ஹவர் “ சண்டை.

“நீங்களே எக்ஸ்ரே, நீங்களே பார்மஸி,  நீங்களே க்ளினிக்.. கொள்ளையடிக்கறதுமில்லாம, பேஷண்டை இல்ட்ரீட் வேறு செய்வீங்களா?”

இதற்குள், க்ளினிக்கில் கூட்டம் சேர்ந்துவிட்டது.  “ஆமா சார்... நாமெல்லாம் இவுங்க தயவுல தான் உயிர் பொழைக் கோணுமில்ல... அந்த திமிர் இவுங்களுக்கு... காசு கொடுத்து சீட்டுவாங்கி நம்ம கிட்ட பணம் கறக்குறாங்க.. தொழில்லேயும் ஒரு தெறமை கெடயாது...”

“ஆஸ்பத்திரியில வேல செஞ்சுட்டா.. இவுங்களுக்கு டாக்டரைவிட உசத்தின்னு நினைப்பு:

விதவிதமான கமெண்ட்கள்.

மணி ஆறரையை நெருங்க, டாக்டர் வரும் நேரம் உணர்ந்த ஒரு நர்ஸ், டிவியை ம்யூட்டில் போட்டார்.

டாக்டரின் கார் உள் நுழைந்தது.

முதல் ஆளாக உள் நுழைந்தேன்.

அந்த ரிசப்ஷனிஸ்ட், நர்ஸ் எல்லோரும் உடன் வந்தனர்.

‘டாக்டர் சார்... இந்த பேஷன்ட் உங்ககிட்ட பேசனுமாம். ரொம்ப நேரமா சண்டை போட்டிகிட்டிருக்கார்.”

‘யெஸ்... சொல்லுங்க, என்ன ஃப்ராளம்’ என்றார் டாக்டர்

‘ஒண்ணுமில்லியே... மத்யானத்திலிருந்து கடுமையான வலி.. அதான்..’

‘நோ ஃப்ராளம்.. யூ வில் பி ஆல்ரைட் நௌ... அந்த சேரில் படுங்க..’

அரவிந்தனை விந்தையாகப் பார்த்துவிட்டு விலகினார் ரிசப்ஷனிஸ்ட்.


2 comments:

  1. நல்ல வலிமையான கதையாகத்தான்
    இருக்கிறது.!
    படித்தவர்களே ஏமாற்றும் போது
    இப்படி வலிக்கோபம் வருவது
    இயல்புதான் நானாய் இருந்தால்
    மருத்துவரின் பல்லை பிடுங்கி இருப்பேன்.!

    ReplyDelete
  2. அடடா..... பல் படுத்தும் பாட்டை விட.. அரவிந்தன் படுத்திய பாடு... அய்யகோ......
    நல்ல கோர்வையாக பல்வலி கதை சொல்லப்பட்டுள்ளது .
    அரசு

    ReplyDelete