Saturday, January 24, 2015

உணவே விஷம்.

நமது நாட்டில் மக்களின் வாழ்வு, தொழில் நுட்பத்தினால் மேன்மை அடைந்துள்ளது எனப் பெருமிதம் கொள்கிறேம். ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த மக்களைவிட உடல் வலிமையிலும், நோய் எதிர்ப்ப சக்தியிலும் பின் தங்கியிருக்கிறோமா அல்லது வலுவாகியிருக்கிறோமா என்பது ஆராயப்பட வேண்டிய வினா.

மனிதனின் சராசரி ஆயுள் அதிகமாகி உள்ளது! உண்மை.. ஆனால் முற்காலத்தில் இறுதிவரை தெம்புடன் இருந்து வந்தனர். இப்பொழுது அதிக நாள் வாழ்கிறோம். உபகரணங்கள், மற்றும் மருந்துகள் மூலமாக – நடைப் பிணம் போல.  சாலை முக்குக் கடையில் ‘டீ’ போடுபவர் கூட கேட்கிறார்! சர்க்கரை நார்மலா? ஆஃபா?

நமது தேகம் வலுவிழந்து போனதற்கு நாம் நமது பாரம்பர்ய உணவுப் பழக்க வழக்கத்தை கைவிட்டது தான் காரணம்.

நமது உணவுப் பழக்கம் ‘உணவே மருந்து’ அடிப்படையில் அமைந்தது. தற்போதைய உணவுப் பழக்கத்தால் ‘உணவே எமன்’ என்ற  நிலைக்கு  தள்ளப்பட்டிருக்கிற்றோம்.

நமது உணவான இட்லி-சாம்பார், அவியல், ரசம், சிறுதானியங்கள் , எள், சிகப்பரிசி, பெருங்காயம், கசகசா போன்றவை உடலை வலுவாக்கின.

கீழ்க்கண்ட பத்து விதிகளை கடைப்பிடித்தாலே, பெரும்பாலான வியாதிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம்?

1. பிராஸஸ்டு (பதப்படுத்திய) உணவுப் பக்கம் போக வேண்டாம்.  ரெடிமேட் சப்பாத்தி, நூடுல்ஸ், டப்பா பால்-தயிர், சிப்ஸ் போன்றவை. ‘சுருக்கமாக ரெடி டு ஈட்’ வேண்டவே வேண்டாம்.

2. இதைச் சாப்பிடு, அதைச் சாப்பிடு என வற்புறுத்தும் டி.வி விளம்பரங்களின் வரும் உணவு-போஷாக்கு பாணங்களைத் தவிருங்கள்.

3. சிப்ஸ், கணக்கின்றி கிடைக்கும் நொறுக்குத் தீனி வகைகளைத் தவிர்க்கலாம். பதிலாக கொட்டைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் உன்னதம்.

4. இயந்திரங்களால் தயாரிக்கப்படும் உணவுகள். மனிதர்களின் கைபட்ட உணவே உத்தமம். குறிப்பாக, தாய்-மனைவி.

5. பருவ கால உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். வருஷம் முழுவதும் மாம்பழம் என்பது தப்பாட்டம்.

6. காய்கறிகள் முதலிடம். பறவைகள் இறைச்சி / மீன்கள் இரண்டாம் இடம். நான்கு கால் பிராணிகளின் இறைச்சி குறைவாக.

7. இயற்கையான முறையில், இரசாயனக் கலப்பின்றி விளையும் தானியங்கள் / காய்கறிகளை தெரிவு செய்யுங்கள்.

8. உப்பும் சர்க்கரையும் மிதமாக.

9. செயற்கை குளிர் பாணங்கள் (கோலா வகைகள்) பக்கம் போக வேண்டாம்.

10. மருத்துவருக்கு கொடுப்பதைவிட, பலசரக்கு கடைக் கார்ருக்கு கொடுங்கள். தரம் அறிந்து தேடிப் பார்த்து வாங்கவும்.

பாரம்பர்ய உணவுப் பழக்க வழக்கத்திற்கு திரும்பினாலே பாதி பிரச்சினைகள் இல்லை.
                                                                                            -சுதேசி செய்தி (ஜனவரி-15)

No comments:

Post a Comment