Wednesday, January 21, 2015

அல்ப ஆசை...

வயசான காலத்தில், வாயை மூடிக் கொண்டு ‘கம்மென..’ இருந்திருக் கலாம். அல்லது கிடைக்கும் இடத்திற்குப் போய் விட்டிருக்கலாம். சபலம் யாரை விட்டது? வாயைக் கட்ட முடியாமல் அப்படி என்ன அல்ப ஆசை? 

மதியம் மூணு மணி. தூக்கம் கண்களை சுழற்றும் நேரம். ஒரு மயக்கத்தில் கிடந்த சமயம்.  யாருடைய போதாத காலமோ, எனது நன்பருக்கு என்னை சீண்டிப் பார்க்க வேண்டும் என தோன்றிவிட்டது. 

வேலைமெனக்கெட்டு, அந்த நேரத்தில், என்னைக் கூப்பிட்டு, கண காரியமாக, இன்று ஐந்து வடை சாப்பிட்டேன் என சொல்லிவைத்தார். 

ஏற்கனவே, எனக்கு, அந்த வட்ட வடிவ, பொன்னிற அமிர்தத்தின் மேல் மையல் அதிகம். ஆசை காட்டிவிட்டார்.

இஞ்சி, பச்சைமிளகாய், கருவேப்பிலை போட்டு, மேலே கிரிஸ்பியாக, உள்ளே சாஃப்டாக, மணமணக்கும் சூடான மெதுவடைகள் மனதில் ஓடியது. ஆஹா..

“இதை ஏன், இந்த நேரத்தில் என்னிடம் சொல்லி, ஆசையை கிளப்பிவிட்டீர்?  வடை சாப்பிடும் ஆசை வந்து விட்டது.  நானே செய்யப் போகிறேன்!”

‘கேளும், உமக்கு வடை வேண்டுமெனில், ஆனந்த பவனுக்கோ, ஆனந்தமில்லா பவனுக்கோ சென்று சாப்பிட்டுவிட்டு வாரும்! நானே செய்கிறேன் என கிளம்பினீர்... விளைவுக்கு நான் பொறுப்பல்ல...’


“வடை செய்வதில் என்னங்கானும் பொல்லாத சாமர்த்தியம் வேண்டிக் கிடக்கு? நான் செய்யப் போகிறேன்.. உமக்கும் கொண்டு வந்து தருகிறேன்”

‘இந்த வேலையே வேண்டாம்... நீரே செய்து, நீரே சாப்பிட்டுக் கொள்ளும்.. என்னிடம் கொண்டுவந்து கொடுக்கும் எண்ணம் ஏதாவது இருந்தால், அதை உடனடியாக ரத்து செய்து விடும்.. புரிகிறதா? நான் என்ன பரிசோதனைச் சாலை எலியா?’

‘உமக்கு சாப்பிடும் கொடுப்பினை இல்லைங்கானும்... செஞ்சு காமிக்கிறேன் பாரும்...’

‘மனுஷனுக்கு சாமர்த்தியம் இல்லாட்டியும் பரவாயில்லை! ஆனால் தனக்கு சாமர்த்தியம் இல்லைன்னு தெரிஞ்சுக்கற சாமர்த்தியமாவது வேணும்... நமக்கு வடை சுட வராதுன்னு அனுபவப்பட்டு சொல்றேன்... கேட்க மாட்டேங்கிறீர்.. அனுபவியும்...’

வைத்து விட்டார்.

உடனடியாக களத்தில் இறங்கினேன். உளுந்தை ஊர வைப்பதற்கு முன்னால், திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டிக் கொள்ளலாமா என உத்தேசித்து, வேண்டாம்.., அவர் ராஜபக்ஷேவை கவிழ்த்து விட்ட (ஆ)சாமி யாச்சே என பயந்து, வடைப் பிரியரான ஆஞ்சனேயரிடமே,  ‘உளுந்தும், இஞ்சியும், பச்சை மிளகாயும், வெங்காயமும் நான் உனக்குத் தருவேன், செம்முகத்துத் தூமணியே நீ எனக்கு மெதுவடை தா’ வென பிரார்த்தனை. 

அரைத்த மாவு விழுதிலிருந்து கொஞ்சம் விண்டு, பிளாஸ்டிக் பேப்பரில் ‘சொத்’ தென மெல்ல அறைந்து, வட்ட மாக்கி, நடுவில் ஓட்டை போட்டால்,  விரலைவிட்டு மாவு விலகாமல் கூடவே வந்தது. இது என்ன ‘உடன் பிறப்பு’ மாவா? ‘கையை’ விட்டு விலக மாட்டேன் என்கிறதே என வியந்து, மீண்டும் வழித்து ஒரு அறை. ஹி..ஹி.. குறி தவறி, பிளாஸ்டிக் பேப்பரைவிட்டு விலகி, மேடையில் விழுந்தது மாவு. 

ரோஷக்கார மாவு போலும் – டைகோ போல.. கூட்டணியிலிருந்து விலகிவிட்டதே எனத் தவித்து, இந்த முறை, நிதானமாக முயல, வட்ட வடிவில் மாவும், நடுவில் பெரும் குழியும்.

அப்படியே எடுத்து, எண்ணெய் சட்டியில் போட முயல, மாவு அப்படியே ஒன்று சேர்ந்து கொண்டு, ‘ஸ்ரீலங்கா’ மேப் போல நீள் உருண்டையாக எண்ணையில் விழுந்தது. சே.... அப சகுனமாயிற்று.. அதை எடுத்து, டஸ்ட் பின்னில் போட்டு, மீண்டும் முயல, இம்முறை மாவு கையைவிட்டு விலகாமல் ‘ஜாமீன் வாங்க’ மறுத்தது.  லேசாக உதறி என்ணையில் போட யத்தனிக்க, வடைமாவுக்கு பதிலாக, விரல் நுணி எண்ணைசட்டியில்! ஆ.. வென அலறி, தண்ணீர் மக்கில் கையை நனைத்து ஆசுவாசம். ஆனால், அதற்குள், வடை பழைய ‘சோவியத் யூனியன்’ சைசில் சட்டி முழுவதும் ஒரே வடையாக..  அதை எடுக்க முயல, அது பழகிரி போல, இன்னமும் நான் சட்டியில்தான் இருப்பேன் என அடியில் ஒட்டிக் கொண்டது.. அதுவும் டஸ்ட்பின்னுக்கு அர்ப்பணம்

விரல் எரிச்சலுக்காக தண்ணீரில் கையை நனைத்ததால், அடுத்த வடை ஒழுங்காக வந்தது. (தண்ணீரில் கையை லேசாக தொட்டுக் கொள்வதுதான் சூட்சமமா?) ஆனால் வட்ட வடிவமும், மெதுவடைக்கே உரித்தான அந்த ‘கவர்ச்சி’ தொப்பூழும், மிஸ்ஸிங்.. ஓட்டை இல்லாத வடையா? 

சரி..சரி.. ஷேப் எப்படி இருந்தால் என்ன? சுவைதான் முக்கியம் என சமாதானம். 

இனியும் டஸ்ட்பின்னுக்கு அர்ப்பனம் செய்ய, மாவு இல்லாததினால், வந்த வரைக்கும் லாபம் என செய்தாயிற்று.  

எடுத்துப் பார்த்தால், முற்போக்கில் அது போண்டா போலவும், பிற்போக்கில் பக்கோடா போலவும் தெரிந்தது. எந்தப் போக்கிலும் வடை போலத் தெரியவில்லை. 

பெயரில் என்ன இருக்கிறது? சகலமும் பரமாத்வே (உளுந்துமாவே) அல்லவா? போண்டா,வடை, பக்கோடா நாமகரணம் சொல்லிக்கொள்வதெலாம் நமது வசதிக்காகத்தான் என ‘பலராமானந்தா’ தத்துவம்.

தேறியது.. பத்து உளுந்து உருண்டைகள் என வைத்துக் கொள்ளலாம்.

பத்து ‘அனாமிகாவையும்’ நானே விழுங்குவது சாத்தியமில்லாத காரணத்தால், காஷ்மீர் கூட்டணிக்கு ஆள் தேடுவது போல, இதை யாரிடம் பகிர்ந்து கொள்ளலாம் தேடினேன். கீழே குடியிருக்கும் பாட்டியிடம் கொண்டுபோய் கொடுத்தேன். இந்த கூட்டணியின் தர்ம்ம் என்னவென்றால் , ‘அந்த பாட்டிக்கு சரியாக கண் தெரியாது’ என்பது தான். 

அவர் இந்த வஸ்துவை உருட்டிப் பார்த்துவிட்டு ‘இது என்ன?’ என்றார்! வாயில் போட்டுக் கொண்டு, ‘இது என்ன போன மாசம் செய்த களியின் மீதியா?’  என்று கேட்கக் கூடிய அபாயம் கண்ணுக்கு தென்படவே, பாட்டியிடமிருந்து வடைகளை ‘பறித்துக் கொண்டு’ வந்துவிட்டேன்.

ஒரு சந்தேகம் சொல்லுங்கள்! இந்த ‘வடை மாகத்மியத்தை’ என்னை கிளப்பிவிட்ட அந்த நன்பருக்கு சொல்லலாமா, வேண்டாமா?இப்பவே, அவருடைய வீரப்பா வில்லன் சிரிப்பு காதில் ஒலிக்கிறதே?

(சமயலறையை சுத்தம் செய்ய 'ஸ்வச் பாரத் ஆட்கள் யாராவது இருக்காங்களா? மோடியிடம் கேட்டுப் பார்க்கனும்)
                                                                 -0-

2 comments:

  1. Don't worry Sir. It's our fate. I had similar experience. Shape does not matter only taste. Ok who is that friend? Let him stop his nonsense. Very bad. - Arasu.

    ReplyDelete
  2. Don't worry Sir. It's our fate. I had similar experience. Shape does not matter only taste. Ok who is that friend? Let him stop his nonsense. Very bad. - Arasu.

    ReplyDelete