Thursday, October 16, 2014

நினைவுகள்



                    ‘புண்ணியம் செய்தார்க்கு பூவுண்டு நீருண்டு...’


நினைவுகள் - வரமா சாபமா புரியவில்லை,
நினைவுக்காட்டிற்குள் புகுந்துவிட்டால்,
மகிழ்ச்சித் தருணங்களை மறந்து,
விட்டுச் சென்றவரை நினைந்து,
இழந்தவர் காட்டிய பாசத்தை,
இல்லாத இடத்தில் தேடியலைந்து,
வெறுமைமட்டுமே விஞ்சி நிற்கும் என்பதை உணர்ந்து..
இனி அன்பென்பது நினைவுகளில் மட்டுமே சாத்தியமென தெளிந்து..

அப்பப்பா.....

ஞானம் பெறுவதற்கு இவ்வளவு விலையா..?
தீ உன்னை சுட்டுத் தின்றபின்னும்,
வலி என்னைத் தொடர்ந்து சுடுவது உனக்குத் தெரியுமா?

ஆனாலும் கண்ணீர் வரம் தான்.
கண்ணீர் என்று ஒன்று இல்லாவிடில்
துக்க வெள்ளம்  வடிவதெப்படி?
கண்ணீரில் கலந்திருக்கும் ரணமாற்றும் ரசாயணம்!



(துணைவியாரின் புகைப்படங்கள் நூற்றுக் கணக்கில் இருந்தாலும், பெரிது செய்து, பூஜை அறையில் வைக்க இயலும் படங்கள் இல்லாதது இம்சித்தது. ஆனால் நண்பர் திரு # Tp Jayaraman அவர்கள், மனைவியின் திருவுருவப் படத்தை வரைந்து கொடுக்க இசைந்தார். இங்கு காண்பது அவர் வரைந்த ஓவியம் தான். இன்று மதியம் தபாலில் அனுப்பி வைத்தார். அவருக்கு எனது கோடிக் கோடி நன்றிகள்)

No comments:

Post a Comment