Tuesday, August 19, 2014

இன்னொமொரு நாளே!

இன்னொமொரு நாளே!

மாந்தர் மகிழ்வுறவும், துன்புறவும் ஏதேனும் ஒன்று நடைபெற்றாக வேண்டியிருக்கிறது. வாழ்வின் நிகழ்வுகள், விரும்பும் வண்ணம் நடந்தேறினால் மகிழவும், மாறாக நடந்தால் துன்புறவும் பழகிக் கொண்டுள்ளோம்.

புற நிகழ்வுகளின் தாக்கம் இன்றி, தானாக மகிழ்வுறுவதும், கண்ணீர் சிந்துவதும் சாத்தியம் தானா?

யோசித்தால், ஒரு சமயம் சாத்தியம் என்றும், அதுதான் இயல்பு என்றும் தோன்றுகிறது! மறு சமயம், இல்லை... புற நிகழ்வுகளின் தாக்கம் இன்றி மனநிலை மாறுவது சாத்தியம் இல்லை எனவும் தோன்றுகிறது.

ஆன்மீகவாதிகள் சொல்வது போல, நாம்தான், நாளாக-நாளாக தூண்டுதலின்றி மகிழ்வுற்றிருக்க மறந்து போனோமா?

மூளைக்குள் அறிவுக் குப்பைகளை தினித்துக் கொள்ளாதவரை மகிழ்ச்சியாகத்தானே இருந்தோம்? சிசுவாக இருக்கும்வரை அது தானே நிகழ்ந்தது! பிறகுதானே எண்ணங்களும் அறிவும் வளர-வளரத்தானே இன்ப துன்பங்கள் பற்றிய பிரக்ஞை உருவாயிற்று!

ஆனால் எப்பொழுதுமே சிசுவாக இருப்பது இயலும் காரியமா?

வாழ்வின் நோக்கம் தான் என்ன?
வாழ்வது!
எப்படி?
மகிழ்ச்சியாக!

நாம் எப்படி வேண்டுமானாலும், நமக்கு பிடித்த மாதிரி, புற வாழ்வினை அமைத்துக் கொள்ளலாம். வியாபாரம், வேலை, படிப்பு, அதிகாரம், கல்வி – இப்படி எதுவானாலும்.

ஆனால், இவற்றினால் மகிழ்கிறோமா என்றால் – கொஞ்சம் யோசிக்கத்தான் செய்கிறோம்.

பின் மகிழ்வான மன நிலையை தீர்மாணிப்பது எது? ஆன்மவாதிகள் சொல்வது போல உள் நிலை தானா?

பசியும், வறுமையும், ஏழ்மையும், வலியும், பிரிவும்  நிஜமாகத் தாக்கும் பொழுது, “எல்லாம் மாயை” என கண்ணை மூடிக்கொண்டால் துன்பம் மறந்துவிடுமா? பறந்து விடுமா?

கடைசிவரை, யாராவது ‘குழந்தையை பராமரிப்பது போல’ அனைவரையும் யாரோ ஒருவர் பராமரித்துக் கொண்டிருந்தால்தான் இது இயலும் காரியம்.

வாஸ்தவத்தில், பள்ளியில் சேர்வது முதலே வாழ்க்கைப் போராட்டம் துவங்கிவிடுகிறதே? வேலை, திருமணம், குடும்பம், குழந்தை என போராட்டம் இல்லாமல் ஏதாவது நடக்கிறதா என்ன?
ஏன்... மரணம் கூட போராட்டமில்லாமலா வருகிறது? கார்பொரேட் மருத்துவமனைகள் பத்து லட்சமாவது பிடுங்கிக் கொண்டுதானே மரணிக்க விடுகிறார்கள்!

போராட்டம் என்றாலே வலிதான்.. துன்பம் தான்..!

இன்று (20/08/14) எனக்கு பிறந்த நாள். சென்ற ஆண்டுவரை அது மகிழ்ச்சியான நாளே! இந்த ஆண்டு மகிழ்ச்சியாக இல்லாதது மாத்திரம் அல்ல; துயரம் கூடிய நாளாகக் கூட பாவித்துக் கொள்கிறேன். ஏன்? என் வாழ்க்கைத் துணை என்னுடன் இல்லை! இது நாள் வரை மகிழ்வு கொள்ளச் செய்த ஒரு நாள், இந்த வருடமும் மாற்றமில்லாமல் வந்து விட்டாலும், மன நிலை மாத்திரம்-நேர்மாறாக!

எவர் மரித்தாலும் – மரிகாவிட்டாலும் நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன் என ‘சும்மா’ சொல்லிக் கொள்ளலாமா? 

பிறந்த நாள் மகிழ்வுடன் கொண்டாட வேண்டிய தினம் அல்ல-மற்றும் ஒரு நளே என்றால், இத்துனை வருடங்கள் இந்த தினம் தந்த ‘சந்தோஷங்கள்’ பொய்யா?

பட்டிணத்தார் கரும்பு போல மேலே இனிப்பும், கீழே கசப்புமாக மாறிப்பொனதேன்?

ஜக்கி சொல்கிறார்: The first and most fundamental responsibility for a human being is to become a joyous being. Every single action that we perform on this planet springs from an aspiration to be happy because it is the original nature. Today we are seeking happiness so vigorously that the very life of the planet is being threatened. All those people, who depend on external situations to be happy, will never know true joy in their lives. The source of joy is within you; you can take charge of it. When you are fundamentally joyous, when you do not have to do anything to be happy, then every dimension of your life – the way you perceive and express yourself and the world – will change. You will no longer have vested interests because whether you do something or you do not do something, whether you get something or do not get something, whether something happens or does not happen, you will be joyous by your nature. When you are joyous by your nature, your actions will rise to a completely different level.


இதே ஜக்கிதான், ஒருவன் பசியால் மயங்கிக் கிடக்கும் பொழுது, 
அவனுக்கு ஆன்மீகத்தை உறைப்பது கிறுக்குத்தனம். அவனுக்கு முதலில் 
சோறு கிடைக்க்ச் செய்துவிட்டு, பிறகுதான் மற்றவையெல்லாம் என்றும் 
சொல்லியிருக்கிறார்.

கருவரையிலிருந்து - கல்லறை நோக்கிய வாழ்க்கைப் பயணத்தில், நிகழ்வுகள் அனைத்தும் சுகமாயே இருப்பதில்லை; அனைத்தும் துக்கமும் அல்ல;

சுகத்திலும் துக்கத்திலும் மூழ்கிப்போகாமல், அந்தந்த தருணங்களில் நிகழ்வனவற்றை ஏற்றுக்கொண்டு, அது சுகமோ துக்கமோ அனைத்தையும் வாழ்ந்து தீர்வதுதான் வாழ்க்கை.


2 comments:

  1. வள்ளல் பெருமான் சொல்கிறார் ======l பசி நேரிட்டபோது பெற்றவர்கள் பிள்ளைகளை விற்றும், பிள்ளைகள் பெற்றவர்களை விற்றும், மனைவியைப் புருடன் விற்றும், புருடனை மனைவி விற்றும், அந்தப் பசியினால் வருந்துன்பத்தை மாற்றிக் கொள்ளத் துணிவார்களென்றால், அன்னியமாகிய வீடு, மாடு, நிலம், உடைமை முதலியவைகளை விற்றுப் பசியை நீக்கிக் கொள்வர்களென்பது சொல்லவேண்டுவதில்லை. உலக முழுதும் ஆளுகின்ற சக்கரவர்த்தியாகிய அரசனும் பசிநேரிட்டபோது தனது அதிகார உயர்ச்சி முழுதும் விட்டுத் தாழ்ந்த வார்த்தைகளால் 'பசி நேரிட்டது, என்ன செய்வது!' என்று அருகிலிருக்கின்ற அமைச்சர்களிடத்துக் குறை சொல்லுகிறான். பகைவரால் எறியப்பட்டு மார்பிலுருவிய பாணத்தையுங் கையாற் பிடித்துக்கொண்டு எதிரிட்ட பகைவரையெல்லாம் அஞ்சாது ஒரு நிமிஷத்தில் வெல்லத்தக்க சுத்த வீரரும் பசி நேரிட்டபோது, சௌகரியத்தை யிழந்து பசிக்கஞ்சிப் பக்கத்தில் நிற்கின்றவரைப் பார்த்து 'இளைப்பு வருமே' சண்டை எப்படிச் செய்வது!' என்று முறையிடுகின்றார்கள். இவ்வுலக போகங்களோடு இந்திரபோக முதலிய போகங்களையும் துரும்பாக வெறுத்து முற்றும் துறந்து அறிவையறிந்து அனுபவம் விளங்கிய ஞானிகளும், இந்திரியங்களை அடக்கி மனோலயஞ்செய்து உண்மை நிட்டையிலிருக்கின்ற யோகிகளும், இறந்தோரையும் எழுப்பத்தக்க அளவிறந்த மகத்துவங்கள் விளங்கிய சித்தர்களும், முனிவர்களும், தவசிகளும் பசி நேரிட்டபோது தங்கள் தங்கள் அனுபவலட்சியங்களை விட்டு அடுத்த ஊரை நோக்கிப் பலிக்கு வருகின்றார்கள்; பலி நேராதபோது நிலை கலங்குகின்றார்கள். சொற்பனத்தில் ஓர் இழிவு வரினும் அதுகுறித்து உயிர்விடத்தக்க மானிகளும் பசி நேரிட்டபோது, சொல்லத் தகாதவரிடத்துஞ் சொல்லி மானங் குலைகின்றார்கள். சாதி சமய ஆசாரங்களில் அழுத்தமுடைய ஆசாரியர்களும் பசி வந்தபோது, ஆசாரத்தை மறந்து ஆகாரத்திற்கு எதிர்பார்க்கின்றார்கள். கல்வி கேள்விகளில் நிரம்பி அறிதற்கரிய நுட்பங்களை யறிந்து செய்தற்கரிய செய்கைகளைச் செய்து முடிக்கவல்லவர்களும் பசி நேரிட்டபோது, அறிவுங் கருத்தும் அழிந்து தடுமாறுகின்றார்கள். இராப்பகல் தோன்றாது புணர்ச்சி இன்பத்திற் பொங்குகின்ற காமிகளும் பசி நேரிட்டபோது, புணர்ச்சியை மறந்து காமத்தைக் கசந்து கலங்குகின்றார்கள். நாமே பெரியவர் நமக்குமேற் பெரியவரில்லை யென்று இறுமாப்படைகின்ற அகங்காரிகளும் பசி நேரிட்டபோது, அகங்காரங் குலைந்து ஆகாரங்கொடுப்பவரைப் பெரியவராகப் புகழ்கின்றார்கள். ஒருவகைக் காரியங்களில் அனேக வகைகளாக உபசரிக்கச் செய்கின்ற டம்பர்களும் பசி நேரிட்டபோது, டம்பத்தை இழந்து மயங்குகின்றார்கள். இவரிவர் இப்படி இப்படியானால் ஒருவகை ஆதாரமுமில்லாத ஏழைகள் பசி நேரிட்டபோது என்ன பாடு படார்கள்! அந்தக் காலத்தில் அந்த ஏழைகளுக்கு ஆகாரங்கிடைத்தால் எப்படிப்பட்ட சந்தோஷமுண்டாகும்! அந்தச் சந்தோஷத்தைத் தோற்றுவித்தவர்களுக்கு எப்படிப்பட்ட லாபங் கிடைக்கும்! இப்படிப்பட்டதென்று சொல்லுதற்கும் அருமை என்றறிய வேண்டும்.

    சீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில் சீவஅறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது - அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது - அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது - அது சோரவே பிரகிருதிதத்துவம் மழுங்குகின்றது - அது மழுங்கவே, குணங்களெல்லாம் பேதப்படுகின்றன - மனம் தடுமாறிச் சிதறுகின்றது - புத்தி கெடுகின்றது - சித்தம் கலங்குகின்றது - அகங்காரம் அழிகின்றது - பிராணன் சுழல்கின்றது - பூதங்களெல்லாம் புழுங்குகின்றன - வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன - கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது - காது கும்மென்று செவிடுபடுகின்றது - நா உலர்ந்து வறளுகின்றது - நாசி குழைந்து அழல்கின்றது - தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது - கை கால் சோர்ந்து துவளுகின்றன - வாக்குத் தொனிமாறிக் குளறுகின்றது - பற்கள் தளருகின்றன - மலசலவழி வெதும்புகின்றது - மேனி கருகுகின்றது - ரோமம் வெறிக்கின்றது - நரம்புகள் குழைந்து நைகின்றன - நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன - எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன - இருதயம் வேகின்றது - மூளை சுருங்குகின்றது - சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது - ஈரல் கரைகின்றது - இரத்தமும் சலமும் சுவறுகின்றன - மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது - வயிறு பகீரென்றெரிகின்றது - தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன - உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன. பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக்கெல்லாம் பொதுவாகவேயிருக்கின்றது.

    ReplyDelete
  2. ஒரு நாள் வாழ்வில் வரும்போது ஒரு நேரம் இனிமை மற்றொரு நேரம் இப்படி ஒரு சிந்தனை ! நாள் ஏதும் செய்யவில்லை . மனம் தான் எல்லாம் நண்பா !

    அரசு

    ReplyDelete