Thursday, January 12, 2012

அனுபவங்கள்


                  (புத்தக விமரிசனம்)

புத்தகத் திருவிழாக்களில், ‘சாகித்ய அகதெமி விருது பெற்ற மொழி பெயர்ப்பு நாவல்களை வாங்கிவிடுவது வழக்கம். புதுவையில்  நடைபெற்ற புத்தக காட்சியில், அப்படி வாங்கிய ஒரு நாவல் ‘அனுபவங்கள். மூலம் வங்கமொழி. ஆசிரியர்: திவ்யேந்து பாலித். தமிழில் திருமதி புவனா நடராஜன். (சாகித்ய அகதெமி பதிப்பு. 220 பக்கங்கள். விலை  நூறு ரூபாய்)

கல்கத்தா நகரத்து, மத்திம வர்க்க பெண். வெளி நாட்டு மாப்பிள்ளைக்கு மணமுடித்துவைக்கப் படுகிறார். அங்கே போய், மாதங்கள் கழிந்தபின் தான் தெரிகிறது, அவன் லோக்கலில் ஒரு ‘செட்டப் வைத்திருக்கிறான் என்று. விவாகரத்து. தாய்நாடு திரும்பியபின், சமூகத்தால், உறவினரால், நண்பர் களால் அவள் படும் அவஸ்த்தைகள், நுனுக்கமாக விவரிக்கப் படுகின்றன.

வேலைதேடிக் கொள்கிறாள். அவளுக்கு இடப்பட்ட பணி, ‘கால் கேர்ல்ஸ்பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புகளை தயார் செய்வது!

பணியிடத்தில், அவளுக்கு ‘விவாகரத்து பெற்று தனியாய் இருக்கும் பெண் என்கிற காரணத்தால், அலுவலக அதிகாரிகள் அவளுக்கு  “காரண காரிய பதவி உயர்வு அளிக்கிறார்கள்.

தான் பேட்டி எடுத்த “கால் கேர்ல்ஸ்களின் கதைகளின் அனுபவத்தில், அலுவலகச் சூழலை எவ்விதம் எதிர்கொள்கிறாள் என்பது கதையின் இறுதியில் சொல்லப் படுகிறது.


சாதாரண கதை.  நிறைய கதைகள் இதுபோல வந்துள்ளன.  சொல்லிச் சொல்லி “நைந்து போன கதைக்கரு.

பெரும்பகுதி இடங்களில், மொழியாக்கம்  சரளமாக இருந்தாலும், சில இடங்களில் இரண்டு தடவை வாசித்தால் மட்டுமே புரிகிறது.  “சாகித்ய அகதெமி விருது பெற்ற நாவல் என்ற நிலையில் பார்த்தால் சற்று ஏமாற்றம்தான்.


125-ம் பக்கம் முதல், 141ம் பக்கம் வரை, ஒரு கட்டுரைபோல இருக்கும் ‘தாம்ஜாலி யின் உரை கனமானது. படித்துத் தக்க வைத்துக் கொள்ளவேண்டிய கருத்துக்கள். 

No comments:

Post a Comment