Sunday, June 19, 2011

இன்றய இளைஞர் சமுதாயம் நம் தாய் மொழியினைப் பற்றி என்ன நினைக்கின்றது?

இக்கேள்விக் கான விடை தேடி என்னால் இயன்றவரை பள்ளி இறுதி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளிடையே பேசிப் பார்த்திருக்கிறேன். அது பற்றிய செய்திகளை  உங்களுடன் பகிர்ந்து கொள்ளுமுன், இன்று இரவு 9.00 மணிக்கு 'போர்ட் மேலே ஆறு ஆப்ஷன் தரும்' ஒரு 'ஆரோகிய' நிகழ்ச்சியினை, தொலைக் காட்சியில் கண்டேன்.  


















அந்த தொலைக் காட்சி சேனலுக்கு, இந்த நிகழ்ச்சிக்கு,  தமிழ் பேசும் ஒரு 'நாயகி' ஒருபோதும் கிடைக்கவே மாட்டார்கள் போலும். ஒரு மாஜி நடிகை கழுத்து நரம்பு புடைக்க 'தமிழினை கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார்'.  அம்மணிக்கு, தமிழினை, தமிழல்லாத வேறு ஒரு மொழியினில் எழுதிவைத்துக் கொண்டு படிக்கும் வழக்கம் போலிருக்கிறது!.  'சுக்குமி',  'ளகுதி', 'ப்பிலி' என வாசித்துகொண்டிருந்தார்.   நல்லவேளை!  அவர் பங்கேற்பவர்களுக்கு என்ன கேள்வி கேட்கிறார் என்பதை 'எழுதி' காண்பித்து விடுகிறார்கள். இல்லாவிடில் 'பதிலைப் பார்த்து, கேள்வி இதுவாகத்தான் இருக்கும்' என யூகிக்க வேண்டியிருக்கும்.

இந்த வாரம் முழங்கையில் எதோ வெள்ளையாக 'பாண்டேஜ் போல சுற்றிக் கொண்டிருந்தார்'. ஒருவேளை கையில் ஏதும் அடி பட்டுவிட்டதோ என விசனப்பட்டு, , இல்லையெனில்,  இது என்னவாக இருக்கும் என, ஆர்வத்துடன்   'க்ளோசப்' காட்சிகளில் காண முயன்று,  தோல்வியடைந்து, மனைவியிடம் கேட்க, அவர் உற்றுப் பார்த்துவிட்டு, அது 'துப்பட்டா' என கண்டறிந்தார்.  "அது வேறு இடத்தில் போடப்படும் சமாச்சாரம் ஆயிற்றே?  முழங்கையில் ஏன் சுற்றிக் கொள்ள வேண்டும்" என கேட்க விழைந்து, பின் விளைவுகளை நினைத்து, வாயை மூடிக்கொண்டேன். 

அது கிடக்கட்டும்!  இந்த வாரம் 'சென்னை' மற்றும் 'மன்னார்குடி' யிலிருந்து மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தனர்.  ஒரே ஒரு மாணவன்.  

ஒரு நகரம். ஒரு கிராமம். (கிராமம் என சொன்னதற்காக மன்னார்குடி அன்பர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது)

இவர்களுக்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றும், மாணவிகள் அளித்த பதில்களும் தான், இந்த கட்டுரை தலைப்புடன் சம்பந்தப் பட்டது.

வழக்கம் போல அனைவரும் (நகரம் மற்றும் கிராமம்) தவறியும் கூட 'வணக்கம்... என் பெயர் இது... இந்த பள்ளியில் படிக்கிறேன்' என்று அறிமுகப் படுத்திக் கொள்ளவில்லை.  எல்லாம் Hi... Iam  .....  and coming from  .....   shcoool தான்.  

பார்ப்போம் என் ஆயுள் முடிவதற்குள்ளாகவாவது எவரேனும் (பங்கேற்பவர்கள்) முழுவதும், தமிழில், தவறில்லாமல் பேசுவதை கேட்டு விட்டால், என் ஜன்ம சாபல்யம் அடைந்து விடும்.  

சரி.  இப்போது கேட்கப்பட்ட கேள்வியைக் பார்ப்போம்.  

பெரும்பாலானவர்கள் 'ஆங்கில பள்ளியில்' சேர விரும்புவதன் காரணம் என்ன? இந்த வினாவிற்கு வந்தபதில்கள் என்னை வியப்பிலும், வேதனையிலும் ஆழ்த்தியது.

ஏனென்றால் (1)  ஆங்கிலத்தில் படிப்பதுதான் கௌரவம் (2) அப்பொழுத்தான் கட்டுப்பாடு வரும் (3) வேலை வாய்ப்பு அதிகம் (4) அங்குதான் நன்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.  (5) தமிழைவிட அங்கிலம் கற்றுக் கொள்வது சுலபம் (6) ஆங்கிலத்தில் தான் செய்தி பரிமாற்றம் செய்யலாம் .  இந்த பதில்கள்தான் இக்காலத்திய இளைஞிகளிடமிருந்து வந்தது.

(பதில்கள் யாவும் மொழிபெயர்க்கப் பட்டவை.  பங்கேற்றவர்கள் பதில்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் தான்.)

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட சில 'ஆராய்ச்சி' மூலம் நான் கண்டறிந்த 'மேலே குறிப்பிட்ட கேள்விக்கான விடைகளை' இந்த மாணவிகள் அளித்த விடைகளோடு ஒப்பிட்டு பார்ப்பது சுவாரசியமானது. 

இனி நான் கண்டறிந்த உண்மைகள்!

1. தமிழினை சும்மா வீட்டில், கடையில் பேசிமளவுக்கு தெரிந்து கொண்டால் போதுமானது.

2. தமிழில் வெளியாட்களிடம் பேசுவது இயலாது.  ஆங்கிலம் தான் சரியான மொழி. சரியாக, effective ஆக பேச, நாம் சொல்லுவதை மற்றவர்கள் கவணிக்க வேண்டுமென்றால் ஆங்கிலம் தான் சரி.

3. 'தாய்மொழி', 'மொழி உணர்வு' போன்றவை எல்லாம் வெறும் "டயலாக்குகள்" கவைக்கு 
   உதவாது.

4. பாரதியார், கம்பன், அவ்வையார் ஆகியோரை ஓரளவு தெரிந்திருக்கிறது.  

5. மௌனி, அசோகமித்ரன், புதுமைப்பித்தன்,லா.ச.ரா இவர்கள் எல்லாம் யாரென்றே   தெரியவில்லை.

6. வெகு சிலருக்கு மட்டும் 'சுஜாதா' வினை தெரிந்திருக்கிறது. 

7. தமிழ் நாவல்கள் படிப்பதில்லை.  எல்லாம் ஆங்கிலம் தான். 

8. 'உங்க' தமிழ் 'பேசின்பிரிட்ஜ்' தாண்டாது சார்.

9. முன்பு ஒருமுறை இந்த வலைப்பூவினில் சொன்னது போல 'ழ', 'ள', 'ல', 'ர','ற' 'ந' 'ன',, 'ண' ,  'ச','ல',ள' எல்லாமே தகராறு தான். Click here

10. ஆங்கிலம்தான் கௌரவம்.  தமிழ் 'லொக்கல்' ஒன்னும் பெரிசா பிரயோஜனம் இல்லை.

எனது 'ஆராய்ச்சி(!) தவறோ என நான், நினைத்துக் கொண்டிருந்தது, இந்த வார நிகழ்ச்சியினைப் பார்த்ததும் நீங்கி விட்டது. நான் கண்டு கொண்ட முடிவினை அப்படியே பிரதி பலித்திருக்கிறார்கள்.

இறைவா!  மற்ற மாநில மக்கள் யாவரும் தத்தமது மொழியின் மீது நேசமும், காதலும் கொண்டிருக்க, நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்?

ஒருவர் சொன்னது போல 'தமிழ் இனி மெல்லச்சாகும் ' என சொன்னது சத்தியமாகிவிடுமோ என அச்சமாக உள்ளது. 

இந்த போக்கினை மாற்றுவது எங்கனம்?  வாசகர்களுக்கு இது பற்றி எதெனும் கருத்து இருந்தால், பின்னூட்டத்தில் எழுதவும்.  நன்றி.

4 comments:

  1. vanakkam thiru balaraman avargale enakku thooya thamizhil pesa viruppam aanaal enakku inge kurippittulla la, na, ra eppadi verupaduththi pesuvadhu enbadhu theriyadhu, dhayavuseidhu enakku eppadi uchcharikkavendum enbadhai minnanjal moolam theriyapaduththavum nandri 'ள', 'ல', 'ர','ற' 'ந' 'ன',, 'ண' , 'ச','ல',ள'

    ReplyDelete
  2. vanakkam thiru balaraman avargale enakku thooya thamizhil pesa viruppam aanaal enakku inge kurippittulla la, na, ra eppadi verupaduththi pesuvadhu enbadhu theriyadhu, dhayavuseidhu enakku eppadi uchcharikkavendum enbadhai minnanjal moolam theriyapaduththavum nandri 'ள', 'ல', 'ர','ற' 'ந' 'ன',, 'ண' , 'ச','ல',ள'

    ReplyDelete
  3. Neengal kandarintha irandavathu unmayil neengal "effective" enra aangila vaarthaiyai ekadiyamaga payanpaduthiyulleergala?.

    ReplyDelete
  4. நண்பர் ஒருவர் உங்க பதிவை படிக்கும் படி சிபார்சு செய்து அனுப்பியிருந்தார்.
    தமிழகத்தின் தமிழர்களின் தாய்பாஷையின் யாதர்த்த நிலமையை தெரிவிக்கும் நல்லதொருபதிவு.
    நான் விடுமுறைகளில் தமிழகம் வரும்போது அறிந்து கொண்டவை.ஆங்கிலத்தின் மீதான பயங்கரமான கவர்ச்சி, தாய்பாஷை தமிழின் மீதான வெறுப்பு, நிராகரிப்பு.
    ஆங்கிலத்தில் படிப்பதுதான் கௌரவம்
    ஆங்கிலத்தில் தான் முன்னேற முடியும்.
    ஆங்கிலத்தில் தான் எல்லாமுமே.
    தமிழை வீட்டில், கடையில், தமிழ் சினிமா, தமிழ் பாட்டுகள் கேட்க மட்டும் பயன்படுத்தலாம்.

    ReplyDelete