Monday, July 2, 2018

முக்திநாத்திற்கு ஒரு பயணம் – இறுதிப் பகுதி.

முதல் பகுதி லிங்க: Click here 

என்ன இந்த ஆள்? நாள் முழுவதும் அலுப்பான பயணத்தை முடித்துவிட்டு, அதி காலையிலேயே எழு என்கிறாரே.. என சலித்துக் கொண்டு உறங்கப் போனேன்.  ஆனால் பயாலஜிகல் க்ளாக் சரியாக மூன்றரைக்கு எழுப்பிவிட்டுவிட்டது!

வெளியே வந்தால், அதிகாலை நான்கிற்கே வானம்  பளீர். எதிரே வெள்ளிக் கவசமிட்டது போல, பனிச் சிகரம். சற்று நேரத்தில் சூரிய ஒளி பட்டு, தங்கம் போல ஜொலிக்கும் பாருங்கள் என்றார் ஒருவர். உண்மைதான். சூரியக் கிரணங்கள் பட்டதும் பனி மூடிய வெள்ளிச் சிகரங்கள், தங்கக் கவசம் பூட்டிக் கொண்டன.

ஜொம்சொம்மிலிருந்து முக்திநாத் கோயிலின் ராணிபாவா கிராமம், 22 கி.மீ தூரம். ஆச்சர்யமென்னவென்றால்,   இந்த இடைப்பட்ட தூரத்திற்கு அருமையான வழு வழு தார்ச்சாலை அமைத்திருக்கிறார்கள்.  தனியாகச் செல்பவர்களுக்கு மோட்டார்பைக் சவாரியும் வாடகைக்குக் கிடைக்கும்.

கோயிலிற்கு இரு கி.மீ தூரத்திற்கு முன் வண்டி நிறுத்தப்படும். அதன் பின் நடந்து செல்ல வேண்டும். முடியாதோர் குதிரையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த கிராமத்தில் கடைகள் இருக்கின்றன. பெரும்பாலும் குளிர் உடைகள்தான் விற்பனை! நடக்கக் கூடிய தூரம்தான் என்பதால், குதிரை வேன்டாம். நடுவே பெரிய புத்தர் சிலை. அதைத் தாண்டி உள்ளே சென்றால், முக்திநாத் கோயில். ஆஹா... இதைக் காண்பதற்குத்தானே இவ்வளவு நாள் காத்திருந்தேன். உள்ளம் நெகிழ்ந்தது.  

கோயிலுக்கு பின் புறமாக 108 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றை வரிசையாக குழாய் போல, நந்தி வடிவில் அமைத்திருக்கிறார்கள். நாம் முதல் தீர்த்தத்தில் ஆரம்பித்து 108வது வரை தலையையும் உடலையும் காட்டிக்கொண்டே செல்ல வேண்டும். பின்னர், கோயிலுக்கு முன்புறமாக இருக்கும் பாப குண்டம் – புன்னிய குண்டம் என்ற  இரு சிறிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். அதன் பிறகு முக்தி நாதரை தரிசிக்கலாம்.

குளிர் என்றால் அப்படி ஒரு குளிர். சட்டையைக் கழற்றியதுமே உடல் நடுங்கியது! க்ளேசியரிலிருந்து உருகி, அப்படியே வரும் நீர் போல! அதில் போய் எப்படி நீராடுவது என ஒரு கணம் யோசித்தபோது, ஒரு மூதாட்டி சற்றும் தயக்கமின்றி நாராயணா..நாராயணா என ஜபித்துக் கொண்டே, நீராடிச் சென்றார். அவரின் செயலைப் பார்த்த்தும் சற்றே வெட்கமாகிவிட்டது. 

108 தீர்த்தங்களிலும் நீராடி, பாப-புன்னிய குண்டங்களிலும் நீராடி பின் நாராயணனைத் தரிசித்தேன்.  ஒரு நிமிடத்தில் உடல் இந்த குளிருக்கு தன்னைத் தயார் படுத்திக் கொண்டுவிட்ட்து.

முக்திநாத்  105வது திவ்ய தேசமாகும்.  எட்டு அதிமுக்கிய கோயில்களில் ஒன்று.  புஷ்கர், ஸ்ரீரங்கம், பத்ரிநாத், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, நைமிசாரண்யம், நாங்குனேரி ஆகியன பிற ஏழு!

கூட்டம் அதிகமில்லை!  நிம்மதியாக ஆர அமர மெய் சிலிர்க்கும் தரிசனம் கிடைத்தது.  பெருமாளைக் கண்ட திருப்தி வெகுநாள் மனதை ஆக்கிரமித்திருக்கும்.

சூரியன் மேலேற, குளிர் குறைந்தது. பசுமையான நினைவுகளோடு, ஜீப்பில் பொக்காரா வந்தடைந்தேன்.

தில்லியிலிருந்தும், பொக்காராவிலிருந்தும் ஏராளமன டூரிஸ்ட் ஆபரேட்டர்கள் முக்திநாத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். தனியாகவும் செல்ல்லாம். பயமில்லை. இந்தி தெரிந்தால் போதுமானது.

கவனம்:  எல்லா இடங்களிலும், ருத்ராட்சம் விற்கிறேன், சாலிக்கிராமம் விற்கிறேன் என பலர் சூழ்ந்து கொள்வார்கள். ஒரிஜினல் சாலிக்கிராமம் தேர்ந்தெடுக்கத் தெரிந்தவர்கள் மிகக்குறைவு! சாதாரண கல்லை, ரூ 1000, 2000 எனத் தலையில் கட்டிவிடுவார்கள்.  ஒரிஜினல் போல பிளாஸ்டிக்கிலும் செய்கிறார்கள். அதே போல ருத்ராட்சமும். அவர்கள் வைத்ததுதான் விலை! 

நாராயாணா....





108 தீர்த்தம் (படம் நெட்)

கெண்டகி நதி  (நெட்) 
மூலவர் (நெட்)

பாப குண்டம் 



புண்ணிய குண்டம் 





4 comments:

  1. Excellent, exploring article.

    ReplyDelete
  2. சார்.. கொஞ்சம் விரைவில் முடித்தது போல இருந்தது.

    தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. Sir நாங்கள் முக்தினாத் செப்டம்பரில் செல்ல உள்ளோம். தங்களது பயண கட்டுரை மிக பயனுளளதாக இருந்தது. ருத்ராட்சம், பவளம், சாலி கிராம் எங்கே வாங்கலாம் .எந்த விதமான ஆடை எடுத்து செல்ல வேண்டும் என்ற விபரம் தெரி வித்தால் உதவி யாக இருக்கும்

    ReplyDelete
  4. தங்களது பயண அனுபவம் பகிர்ந்து கொண்டது சுவா ரசியமாக இருந்தது

    ReplyDelete