Sunday, March 4, 2018

Jio


BSNL வருவதற்கு முன்னால், தனியார் அலைபேசி   நிறுவனங்கள், பத்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே,  நிமிடத்திற்கு  பத்து ரூபாய் வசூலித்த காலமெல்லாம் உண்டு. BSNL அலை பேசிச் சேவையை அளிக்க, அனுமதி மறுத்த அரசாங்கம், பல ஆண்டுகளுக்குப்பின்,  DoT அதிகாரிகள் முன்முயற்சியெடுத்ததால்,   அனுமதித்தது.
எடுத்த எடுப்பில், BSNL  நிமிடத்திற்கு  ஒரு ரூபாய்தான் கட்டணம் என ஆரம்பித்ததால், வேறு வழியின்றி தனியார் நிறுவனங்கள் தங்களது கட்டணங்களைக் குறைக்க ஆரம்பித்தன. அந்த கட்டணம்தான் உண்மையானது. அதனால்தான் அனைத்து நிறுவணங்களும் தாக்குப்பிடிக்க முடிந்த்து. தனியாரின் கட்டணக் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டது.
இன்று தொலைத் தொடர்புத் துறையில், மீண்டும்  பழைய தணியார்களின் ஏகபோக கொள்ளைக்கு, நாடு திரும்பிக் கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அலைபேசிச் சேவையில், சமீப ஆண்டுகளில், இன்டர்னெட் சேவை பிரதானமாகிப்போய், வாய்ஸ் கால்ஸ்களை (Voice calls) இலவசமாகவே கொடுக்கும் காலம் வந்துவிட்டது.  VoIP (Voice over internet protocol) அறிமுகப்படுத்தப்பட்டபின் மலிவான குரல்சேவை சாத்தியமாயிற்று.
இந்த அதீத போட்டியின் காரணமாக, ஜியோவின் இலவசங்களைச் சமாளிக்க இயலாமல், நட்டமாகிப் போய், ஏர்செல் திவாலாகி விட்டது.
ஏர்செல்லின் உள்அரசியல் ஒருபுறம் இருக்க, இது இந்திய தொலைத் தொடர்பு வரலாற்றில், ஏர்செல்லின் மறைவு, தொலைதொடர்பில், ஜியோவின் ஏகபோக ஆட்சியின் துவக்கமாகவே கருதுகிறேன்.
முன்னாள் BSNL ஊழியன் என்பதற்காக இதைக் கூறவில்லை. தொலை தொடர்பில் ஏகபோகம் ஆபத்தானது மட்டுமல்ல;  பொதுத் துறை நிறுவனமான BSNL காணாமற் போவது மக்களுக்கும், நாட்டிற்கும் நல்லதல்ல என்பதால் கூறிகிறேன்.
ஒருவருடம் இலவசமாகவே பிராட்பேண்ட் சேவையை ஜியோ அளித்தது; இது வரை நாம் கண்டிராத வேகத்தில். 4ஜி தொழில் நுட்பத்தின் காரணமாக இந்த வேகம் சாத்தியமாயிற்று.
அதிவிரைவு இண்டர்னெட் சேவையை, இலவசமாக அளித்ததால், இதுவரை உலகம் கண்டிராத வளர்ச்சி விகிதத்தை  ஜயோ கண்டது;  கூடவே சக தொலை தொடர்பு கம்பெணிகள் நஷ்டத்தின் காரணமாக  லாப விகிதங்கள் கடுமையாக குறைந்தது.  நட்டத்தைத் தாங்க முடியாத ஏர்செல், திவாலாக உள்ளது. வோடஃபோண் தடுமாறிக் கொண்டுள்ளது. ஏர்டெல்லின் வளர்ச்சி விகிதம் குறைந்து விட்டது. வருமாணம் பாதிப்பு. அதே நிலைமைதான் ஐடியாவிற்கும், BSNL க்கும். இது எந்த வகையிலும் வரவேற்கத்தக்க நிகழ்வல்ல. இன்று ஏர்செல்லுக்கு நிகழ்ந்தது  நாளை ஏர்டெல்லுக்கும் மற்ற நிறுவனகளுக்கும் நிகழலாம்.
எல்லா நிறுவணங்களையும் ஒழித்தபின், ஜியோ ஏகபோகமாகி, பின் அது வைத்ததுதான் கட்டணம் என்றாகிவிடும்.
அந்தக் காலத்தில், அரசாங்க டெண்டர்களில், ஏகபோகம் எதிலும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு,  ஒரு விதிமுறை உண்டு. Unreasonably low tenders will not be accepted என.
ஜியோ விவகாரத்தில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. இலவசமாக சேவையளித்து, சக போட்டியாளர்களை ஒழித்துக்கட்டும் முயற்சிக்கு TRAI (தொலைதொடர்பு  ஒழுங்குமுறை ஆனையம்) துணைபோவது போல் தெரிகிறது.  இலவச சேவையளிக்க ஏன் TRAI ஒப்புக் கொள்ள வேண்டும்? ஜியோவின் இலவசங்கள் சக நிறுவணங்களை ஒழித்துக் கட்டும் முயற்சியென் TRAI க்குத் தெரியாதா?  இன்று இலவசங்களுக்கு தலையாட்டும் டிராய், நாளை, கடுமையான கட்டணங்களுக்கு தடைவிதிக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
ஜியோவிற்கு இந்த அளவு இலவச சேவை அளிக்க முடிந்தது எப்படி?  எந்த வங்கி, எந்த அளவு ஜியோவிற்கு கடன் கொடுத்துள்ளது? குறுகிய காலத்தில் இந்த அளவு முதலீட்டை யார் செய்தது? மாதம் பத்தாயிரம் டவர்களுக்கு மேல் நிறுவுவது அவர்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று? இதுபற்றி மக்களுக்குத் அறியப்படுத்த வேண்டாமா?
அதே சமயம், இது நாள்வரை BSNL 4ஜி சேவை அளிப்பதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லையே,, ஏன்?  அந்த நிறுவனத்திற்கு, 4ஜி சேவையை அளிக்க தேவையான மூலதனத்தை அரசாங்கம் ஏன் தர மறுக்கிறது?
தொலை தொடர்புத் துறையில் நடப்பன எதுவும் சரியெனப் படவில்லை!
எந்தத்துறையிலும் ஏகபோகம் என்பது, நாட்டிற்கும் மக்களுக்கும் கேடு!

1 comment:

  1. வணக்கம்
    நல்ல பதிவு..
    TRAI எப்போது நியாயமாக நடந்தது....
    பிஎஸ்என்எல் செல் சேவையில் வர காரணமான திரு ராஜகோபாலன் அவர்களையும் அவர் தைரியம் , நேர்மையும் பாராட்டுக்குறியது சார்....
    திருநாவுக்கரசு

    ReplyDelete