Tuesday, June 6, 2017

காஷ்மீருக்கு ஒரு பயணம் – ஸ்ரீ நகர் (பகுதி – 1)

எம்.ஜி.ஆர் தனது சினிமாவில் , ‘காஷ்மீர்..ப்யூட்டிஃபுல் காஷ்மீர்’ என டூயட் பாடியது தான் காஷ்மீரைப்பற்றிய முதல் நினைவு. ஏராளமான  இந்தித் திரைப்படங்களில் அந்த எழில் மிகு மாநிலத்தைக் கண்டு களிதத்தோடு சரி. ஒவ்வொரு முறையும் அங்கே செல்லவேண்டும் என திட்டமிடும்போது, அங்கு நிலவும் அசாதாரணச் சூழல்குறித்து பத்திரிக்கைகளும், மீடியாக்களும் அளித்த பிம்பம் அச்சமூட்டுவதாகவே இருந்தது. எனது நன்பர் ஒருவர் சமீபத்தில் இரு நாள் விஜயமாக காஷ்மீருக்கு குடும்பத்துடன் சென்றுவந்து, ஆங்கே நிலைமை அப்படியெல்லாம்ஆபத்தாக இல்லை. சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடம்தான்-பாதுகாப்பானது தான் என சான்றுரைத்தார்.

‘வாழ்வது ஒருமுறை - ஆனது ஆகட்டும்’ எனத் தீர்மாணித்து, மே’2017, 31ந்தேதி அன்று ஸ்ரீநகர் செல்ல விமாணப் பயணத்திற்கு முன்பதிவு செய்துவிட்டேன்.விமாணம் தில்லியடையும் வரை மனம் இலேசாகத்தான் இருந்தது. ஸ்ரீநகருக்கு  விமானத்தில் ஏறியதும் ஹார்ட்பீட் கொஞ்சம் அதிகரிப்பதை உணர முடிந்தது. ஒரு குழுவாக்ச் செல்லாமல், தனியனாக அம்மாநிலத்திற்குச் சென்றதும், கழகங்களின் புண்ணியத்தில் ‘இந்தி’ அறவே தெரியாததும்தான் காரணம்.

ஸ்ரீநகர் தில்லியிலிருந்து ஒன்றரை மணி நேரப்பயணம்.  ஜன்னலோர இருக்கை கேட்டு வாங்கிக் கொண்டிருந்தேன். 

இமயமலைகளின் ஊடே பறக்கும் பொழுது, கீழே தென்பட்ட காட்சி... அட..அட... என்னே ஒரு ரம்மியம். கருகருவென, வானுயர,  முடிவில்லாமல் நீண்டுகொண்டிருக்கும் இமயமலைத் தொடர்.  குச்சிகுச்சியாக நீண்டிருக்கும் பைன் வகை மரங்கள். சிறிதும் பெரிதுமாக, தெள்ளிய நீருடன் ஆங்காங்கே பாயும் ஓடைகள்/ஆறுகள். ஊடவே பாய்ந்து பறக்கும் பிருமாண்ட வெண்ணிற மேகக் கூட்டங்கள். கொத்து கொத்தாக கிராமங்கள். கிராமங்களைச் சுற்றி நெல் வயல்கள். மீண்டும் காடுகள். இயற்கையன்னை தன் திறமையெல்லாம் ஒன்று திரட்டி,  ஒரே இடத்தில் செய்து வைத்ததுபோல கொள்ளை அழகு!  திகட்ட திகட்ட பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே ஸ்ரீநகரின் ஓடுபாதையைத் தொட்டது விமானம்.

எல்லா விமான நிலையங்களையும் போலவே, ஏராளமான காவல் துறையினர். கூடவே CRPF. ராணுவ ஜீப்கள்.  ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்ததுமே, இதமான காற்று வருடியது. வாசலில் 'திரு முகமது அல்டாஃப் சாப்ரி 'அவர்கள் குடும்பத்தைச் சார்ந்த ‘ஆதுல்’  என்பவர் எனது பெயர் எழுதிய காகிதத்தைக் கையில் தாங்கிக் கொண்டு காத்திருந்தார். (இவரைப் பற்றி தனியாக அடுத்த பகுதியில் எழுதுகிறேன். தங்களது விருந்தினர்களை  கண்போலக் காத்து, உபசரித்து, அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் இவர் போன்ற மனிதர்கள் அபூர்வர்கள். இவரை நம்பி நமது பயணத்தை அமைத்துக் கொள்ளலாம். இவரைப்பற்றிய தகவல்களை தனியே தருகிறேன்.)

மற்றவர்களுக்கு எப்படியோ, சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியாவின் வேறெந்தப் பகுதியைப் போலவே பாதுகாப்பானதுவே. இத்தனைக்கும் நான் ஒரு குழுவாகச் செல்லவில்லை. 'டூர் மேனேஜர்' என எவரும் இல்லை. தனியாள்.  மீடியாக்கள் மிகுந்துரைப்பது போல, ஆங்கே தெருவெங்கும் கல்வீச்சும், துப்பாக்கிச் சண்டைகளும் இல்லை. கலவரம் இல்லை. எப்பொழுதும் போல பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும், அலுவலகங்களும், இன்ன பிற துறைகளும் சாதாரணமாகவே இயங்குகின்றன. 

அப்படியானால் துளிக்கூட கலவரம் இல்லையா? இருக்கிறது. எல்லையின் அருகே. ஊருக்குள் எப்போதாவது. தீவீரவாதிகள் பதுங்கும் கிராமங்களில்.  அவை எந்த வகையிலும் சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்காதவகையில் பார்த்துக் கொள்கிறார்கள்.  

போலீஸ் வாகனங்களும், CRPF வாகனங்ககளும், ராணுவ வண்டிகளும் சதா ரோந்து வந்து கொண்டிருக்கின்றன. ‘சாதாரண’ மக்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

நகரின் ஊடே ‘ஜீலம் நதி’  ஓடுகிறது.  அவர்கள் அதை ஜைலம் (Jhelum ) என்கிறார்கள். அந்த நதி Pir Panjal என்னுமிடத்தில் ஊற்று நீராக உருவாகி, ஸ்ரீநகர் ஊடே பாய்ந்து, பின் பாகிஸ்தானுக்குச் செல்கிறது.

விமான நிலையத்திலிருந்து பத்து கிலோமீட்டர் பயணத்தில் அமைந்திருக்கிறது டால் ஏரி. ஏரி என்றாலும் அது தேங்கி நிற்கும் நீர் அல்ல. மெல்ல - மெல்ல நகரும் நீரினைக் கொண்டது. கிட்டத்தட்ட 22 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஏரி. ஏரியில் ஆயிரத்திற்கும் அதிகமான ‘படகு வீடுகள்’.  ஒவ்வொரு படகு வீடும் மினி அரண்மணைபோல அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. படகுவீட்டிற்குச் செல்ல ஏரிக்கரையின் ஓரத்தில் நிறைய படித்துறைகள் அமைத்திருக்கின்றனர்.  நான் சென்ற, ‘சாப்ரி’ குழுமத்தைச் சார்ந்த படகுவீடுகளில் ஒன்றான ‘பாம்பே பிரின்ஸ்’ படகுவீட்டிற்கு அருகில் உள்ள படித்துறை எண் ஒன்பது. 

படித்துறையிலிருந்து படகுவீட்டிற்குச் செல்ல ஏராளமான குட்டிப் படகுகள் சுற்றி வருகின்றன.  குட்டிப் படகுகளுக்குண்டான சவாரிச் செலவை, படகுவீட்டின் உரிமையாளரே ஏற்றுக் கொள்கிறார்.

இரவு நேரத்தில், மின்னும் விளக்கொளிகளின் நடுவே, ஏரியின் மத்தியில் இருக்கும் படகு வீட்டின் முன்னால், நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு, வீசும் தென்றல் காற்றை அனுபவித்துக் கொண்டு, இரவில் மின்மினி போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் சிறுசிறு படகுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு, சலசலக்கும் நீரலைகளை அனுபவிப்பது போல பேரின்பம் ஏதும் உண்டோ? கவிதை எழுத இதைவிட தோதான நேரமும் இடமும் இருக்காது. 

காய்கறிகள், மளிகைச் சாமான்கள், பிஸ்கட்-தீனி வகையறாக்கள், மணிகள், மாலைகள், குங்குமப்பூ வகைகள், குளிர் கால உடைகள்  என அனைத்தும்  சிறு படகுகளில் கொண்டுவந்து விற்கிறார்கள். (இவற்றை வாங்காமல் இருப்பதே உத்தமம்)

தால் ஏரியை வர்ணிப்பதைவிட பார்த்து மகிழுங்கள்:






அடுத்த பகுதியில் ஸ்ரீநகரில்  அமைந்துள்ள சோலைகள், ஹஸ்ரத்பல் மசூதி  மற்றும் இன்னபிற  இடங்களைப்  பார்க்கலாம். (வீ டியோவைப்  பாருங்கள் )

6 comments:

  1. உங்கள் அனுபவத்தின் ஒளி அச்சு நகல்கள் போல வரிகள் !! அருமை !! அன்பவிங்க சார் அனுபவிங்க !!

    ReplyDelete
  2. ஆஹா அருமையான பயணத் தொடர்
    முடிவில் செலவு விவரங்கள் குறித்தும்
    பதிவிட்டால் போக நினைப்பவர்களுக்கு
    உதவியாக இருக்கும்...
    வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
  3. Beautiful very nice அருமை அருமை பிரமாதம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஸ்ரீநகர் விமான ஓடுபாதையானது விமானபடைக்குச் சொந்தமானது. அங்கே சுமார் ஒன்றரை வருடங்கள் பணிபுரிந்திருக்கிறேன்.நானிருந்த குளிர்காலம் -13 டிகிரி வரை சென்றது

    ReplyDelete
  5. very nice description of srinagar

    ReplyDelete
  6. Very good experience we also want to visit

    ReplyDelete