Tuesday, June 3, 2014

பால்ய வீதி (புத்தகம்)

பால்ய வீதி (புத்தகம்)

தேர்தல் முடிந்த சமயம். பெரும்பகுதியோர், ஏதோ ஒரு கட்சி சார்பு கொண்டிருந்ததால், முகநூல் சுவர்கள் யாவும், களேபரமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.

அதுசமயம், ஒருவர் ஒருவர் கட்சியைக் குறிப்பிட்டு, ‘எரிப்பதா?’, ‘புதைப்பதா?’ என முகநூலில் வினவிக் கொண்டிருந்தார்.

எழுதியவர் ஒரு கவிஞர். எனவே கவிஞர்கள் ‘அறம்’ பாடலாகது என, அவருக்கு மறுப்பெழுத, அதுவே முகநூல்  நட்புக்கு முகவுரையானது. பின்னர் அவரது கவிதைகளை முகநூலில் கவணிக்கலானேன். கவிதைகள் யாவும் ‘சுருக்கமாகவும்’, ‘சுறுக்கெனவும்’ அமைந்திருந்தது.



அவர்தான் வத்தராயிருப்பு தெ.சு.கவுதமன்.

இவரது ‘பால்வீதி’ என்னும் கவிதை நூல் சென்ற மார்ச்,2014-ல் வெளியானது. மெனக்கெட்டு புத்தகத்தை வாங்கிப்படித்தேன். இனி அவரது புத்தகத்தினுள்...

புத்தகம் எதைப்பற்றியது என்பது புத்தகத் தலைப்பிலேயே. புத்தகக் கவிதைகள் யாவும் ஒன்று, அவரது இளமைக்கால அனுபவங்களையும்-கண்களையும் கொண்டு, தற்கால நடப்புகளை கவணிப்பதாக இருக்கிறது. இன்னொன்று, தற்போதைய அல்லல்களையும்-நிகழ்வுகளையும்  நேரடியாக விவரிப்பதாகவும் இருக்கிறது.

உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, கட்டுமானத்திலும் கூட, கவிதைகள், இரு விதமாக உள்ளது.  ஒன்று சற்றே பெரியவை (தோராயமாக 20 வரிகளில்). மற்றொன்று  நான்கு அல்லது ஐந்து  வரிகளில்.

கவிதைகளில்கூட, சின்னசின்னதாய் இருப்பவை சுவையாய் இருக்கும் போலுள்ளது.

---  ‘குன்றுகள்’ யாவும் கல்குவாரிகளாகிப் போனால், முருகன் என்ன ஆவார்? (80)

---மனிதாபிமானம் என்னவோ நிறையத்தான் இருக்கிறது! வெளிக்காட்டுவதை பர்ஸ்தானே தீர்மாணிக்கிறது? (79)

--'தபால் பெட்டிகள்' யாவும் அனாதைகளாகி விட்டனவே என ஊடவே விசனப் படுகிறார் (78)

--- கூண்டுக் கிளிக்கு விடுதலை எப்போது என நம்மை சீட்டு எடுத்துப் பார்க்கச் சொல்லுகிறார் (77)

நான் ஒருமுறை சென்னைக்கு, ஒரு அமங்கல காரியத்தையொட்டி சென்றிருந்தேன். ‘பாடி’ யை, மின் மயானத்திற்கு கொண்டுசெல்வதற்கு தாமதாகிவிட்டது. (ஆம்புலன்ஸுக்கே வழிவிடாத சென்னை வாசிகள், அமரர் ஊர்திக்கா வழிவிடுவார்கள்?)  அக்னி பகவானுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்கு, மயான மேடையருகே வரிசையாக பிணங்கள். மிக மிக சங்கடமாக உணர்ந்த தருணம். அத்தகைய ஒரு காட்சியை இவரும் கண்டிருப்பார் போல (76).

--வழியெல்லாம் நம்மிடம் யாசிப்பவர்களை உதாசீனப்படுத்திவிட்டு, கோயிலினுள் கடவுளிடம் கருணை வேண்டி யாசிக்கிறோம்! எப்படிக் கிடைக்கும்? (75)

-பலகாரம் சாப்பிட்டுக் கொண்டே எழிதியிருப்பார் போலும். பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட கடுகு இவரின் வார்த்தைகளிலும் மாட்டிக் கொண்டது!(74)

--துணிகளை விட துணிக்கடைகளில் ‘கட்டைப் பைக்கு’ அலையும் நம்மவர்களின் மனோபாவம் (73) !

--- சிதறு தேங்காய் சில்லுகளை பொறுக்கியெடுத்த சிறுவயது (70),  நெரிசல் பஸ்ஸில், கண்டக்டரின் விரலிடுக்கு நெரிசல்களில்  நோட்டுக்கள்(66), தங்கள் பூசல்களை பேசித்தீர்த்துக்கொள்ளாமல், ஒருவருக்கொருவர் முகம் காட்டாத நவக்கிரகங்கள் (64) – இவை போன்ற சுவாரஸ்யமான கவிதைச் சொடுக்குகள் ஏராளம்.

---கவுதமனுக்கு குழந்தைகளின் மேலும், குழந்தைப் பிராயத்தின் மேலும் தீராத மோகம். குழந்தைகள் உலகினுள் சென்று வருவது சுலபமாக, அழகாக, நுணுக்கமாக வருகிறது.  அக்காவை அடித்த செய்தி (63), சந்தோஷிக்க கற்றுக் கொடுத்த குழந்தை (60)..., அவஸ்தைகளுக்காக செல்லும் ஆஸ்பத்திரியில் கூட, நம்மை சிரிக்க வைக்க அங்கே ஒரு குழந்தை (47) போன்றவை உதாரணங்கள்!

---இடுப்பைவிட்டு இறங்க மறுக்கும் குழந்தை; இது தாய்க்கு "இரண்டாவது கர்ப்பகாலம்"  என்கிறார் – ஹ..

---பெப்ஸியும், கோலாவும் அடிமையின்  எச்சங்கள் என வர்ணிக்கிறார்.

எடுத்துக் காட்டுகள் போதும். ரசிக்க,  புத்தகத்தில் இன்னும் நிறைய இருக்கின்றன.

 எல்லாரையும் போல, ‘காதல்’ இவரையும் அவ்வப்பொழுது வீழ்த்துகிறது. எனக்குத்தான் வயதின் காரணமாக ஈடுபாடு கொள்ளவில்லை – அதனால் எழுதவில்லை.

நான் வேண்டுமென்றேதான், சம்பிரதாயமாக, அனைவரும் செய்வது போல கவிதை வரிகளை ‘Re-produce’  செய்யவில்லை. வாசகர்களுக்கு வாசிக்கும் சுவாரஸ்யம் குறையக் கூடாது என்பதற்காக!

திறமையாக, அடர்த்தியாக, கூர்ந்து கவணிக்கும் வலுவுடன், சமூக பிரக்ஞையுடன் எழுதுகிறார் கவுதமன்.  நல்ல எதிர்காலம் இருக்கிறது.

புத்தகம் நன்றாகவே வந்துள்ளது. படியுங்கள். 9841809235-க்கு தொலைபேசித்தால் அனுப்புவார். 80 பக்கம் 80 ரூபாய்.




4 comments:

  1. அருமையான நடையில் அமைந்துள்ள எதார்த்தமான விமர்சனம் சார். மிக்க மகிழ்ச்சி.. நன்றி சார்! :-)

    ReplyDelete
  2. A very balanced review!

    = ANANDAN =

    ReplyDelete
  3. A well balanced review!

    = ANANDAN =

    ReplyDelete
  4. புத்தக விமர்சனம் அருமை! நன்றி!

    ReplyDelete