Sunday, April 6, 2014

குக்கர்

அது ஒரு, ஒரு இரண்டு லிட்டர் குக்கர். சமையல் அறையின் மேல் தட்டில் இருந்தது.  அது, ஒரு மாத காலமாக கடுமையான கோபத்தில் இருக்கிறது. 

இருக்காதா பின்னே? ஒவ்வொருமுறை குக்கரை எடுக்கும் பொழுதும்,
ஷைலஜா, வருக்-வருக் கென சுரண்டுகிறாள். டொம்..டொம். என வைக்கிறாள். நாசூக்காக கையாள வேண்டாம்?  தண்ணீர் குறைவாக வைத்து சாதத்தைத்  தீய விடுகிறாள். இல்லாவிடில் அதிகமாக தண்ணீர் வைத்து, வெயிட் வழியே, கஞ்சியை வழிய விடுகிறாள். குக்கருக்கு வலிக்கிறது போலும்! அதைவிட ஷலஜா பண்ணும் சேட்டை, குக்கருக்கு, தலவலியை உண்டு பண்ணுகிறது.

அன்றும் அதேபோல குக்கரை எடுத்து வரும்பொழுது ‘பொதேர்’ என கீழே போட்டாள்.

குக்கருக்கு பொறுக்கவில்லை?

‘ஏய் பெண்ணே! உனக்கு நிதானமாக வேலை செய்யத் தெரியாது?

‘அட, குக்கர்....  நீ பேசுவியா?’

‘பேசுவேன்.’

‘ஆச்சர்யமாய் இருக்கிறது!’

‘என் கேள்விக்கெங்கே பதில்...’

‘என்ன கேள்வி..?’

‘என்னை ஏன் நிதானமாக கையாளாமல், போட்டு உடைக்கிறாய்...?’

‘அப்படியா..?  எனக்கு சமைக்கத் தெரியாது! இப்பொழுதுதான் கற்றுக் கொண்டிருக்கிறேன்..’

‘தெரியாதா..? இது நாள்வரை வேறு ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்தாளே..? அது யார்..?’

‘அது என் அம்மா?’

‘ஓ... அவர் எங்கே?’

‘அவர் இனி வரமாட்டார்’

‘ஏன்..?’

‘அவர் இறந்து போய்விட்டார்’.

‘இறந்து போதல் என்றால் என்ன?’

‘அப்படி ஒரு ஆள் இல்லாமலேயே போய்விடுவது..’

‘இனிமேல் அவர்களை பார்க்க முடியாதா?’

‘ஆம்.. முடியவே முடியாது.! ஆனால், அப்பாவும், என் தம்பியும் சாப்பிட்டாக வேண்டுமல்லவா? உயிருடன் இருக்கும் வரை எதை நிறுத்த முடிகிறது? அதனால்தான் நானே சமைக்கிறேன்!ஆனால் எனக்கு சமைக்கவே பிடிக்கவில்லை!’ எரிச்சலாக இருக்கிறது.'

'சமைக்கும்பொழுது ஆத்திரப்படாதே! அது சரி...
இறந்து போதல், உன் அம்மாவுக்கு மட்டும் தான் வருமா  இல்லை எல்லோருக்குமா?’

‘எல்லோரும் ஒரு நாள் சாக வேண்டியது தான். நான், என் அப்பா, என் தம்பி... எல்லோருமே!’

“ஓ....நான் கூட சாவேனா?’

‘குக்கரா? அது எனக்குத் தெரியாது...ஆனால் நீயும் ஒரு நாள் கெட்டுப் போவாய்.’

‘அப்பொழுது, என்னை, என்ன செய்வீர்கள்?’

‘உன்னை பழைய பாத்திரக் கடையில், போட்டுவிடுவோம்.. ’

‘அப்புறம்?’

‘அவர்கள், உன்னை நசுக்கி சப்பையாக்குவார்கள். பின்பு உன்னை உருக்கி, 
வேறு ஒரு பொருளாக மாற்றிவிடுவார்கள்..’

‘வேறு ஒரு பொருள் என்றால்?’

‘கரண்டி, குண்டான் இது போல.. சில சமயம் ஆபீஸ் பொருளாகக் கூட மாறக்கூடும்..’

‘அப்படி மாறிய;பின், நான் பழைய குக்கர் என்பது எனக்குத் தெரியுமா?’

‘தெரியாது.. அப்பொழுது என்ன பொருளோ அதுவாகத்தான் நினைத்துக் கொள்வாய்.’

‘உன் அம்மாவும் இப்பொ வேற ஒரு ஆளா மாறியிருப்பாங்களா?’

‘தெரியாது.. ‘

‘தெரியாதா?  நான் என்ன அவேன் என்று தெளிவாகச் சொல்கிறாயே? ஏன் உன் அம்மாவைப் பற்றி சொல்ல முடியாது..?’

‘நானே செத்துப் பார்த்தால்தான் எனக்குத் தெரியும்.. ஆனா செத்துப் போனபின், நான் ஷலஜா என்பவள் இல்லை என்பது மட்டும் தெரியும்.. ஏனெனில், அது இந்த உடலின் பெயர். உனக்கு குக்கர் என்று  பெயர் இருப்பது போல..’

‘அப்ப நான் குக்கர் இல்லையா?’

‘இல்லை!’

‘பின் நான் யார்?’

‘அலுமினியம் தான்.  இன்னும் உள்ளே..உள்ளே.. போய்ப் பார்த்தால், நீ வெறும் அணுத் துகள்..’

‘அப்ப உன் அம்மா என்பது உன் அம்மாவின் உடலோட பெயரா?’

‘நீ அதிகம் பேசுகிறாய்..’

‘பரவாயில்லை.. தெரிஞ்சுக்கறேன், சொல்லு’

‘அப்படித்தான் தெரிகிறது.’

‘நான் குக்கர் அல்ல, அலுமினியம் அல்லது வேறு ஏதோ உலோகம் என்பது போல உன் அம்மா உண்மையில் யார்..?’

‘தெரியாது... ஆன்மா என்று சொல்கிறார்கள்.’

‘நீ ஆன்மா என்பது உனக்குத் தெரியாதா? ஆச்சரியமாய் இருக்கிறது!’

‘ஷலஜாவாக இருக்கும் வரை, ஆன்மாவாக இருக்க முடியாது?’

‘அது எப்படி? நான் அலுமினியம்தான் , குக்கர் இல்லை என்பது எனக்கு தெரிகிறதே?’

‘நீ நசுக்கப்படும் வரை, நீ குக்கர் தானே?’

‘ஆமாம்..’

‘அது போலத்தான். ஷலஜாவாக இருக்கும் வரை ஷலஜாதான்.’

‘குழப்புகிறாய்.. நீ அன்மா என்பது எப்பொழு உனக்குப் புரியும்?’

‘உனக்கு நான் சொன்ன மாதிரி, எனக்கு யாராவது, நீ ஷலஜா அல்ல என்று  சொல்ல வேண்டும். ஞானம் அடைய வைக்க வேண்டும்..’

‘யார் சொல்ல வேண்டும்?’

‘தெரியாது! ஆனால் அவரை ‘குரு’ என்று அழைப்பார்கள்.

‘உனக்கு இதுவரை யாரும் குரு கிடையாதா?’

‘இல்லை என்றுதான் நினைக்கிறேன். உண்மையாக, நேர்மையாக நான் குருவை விரும்பி இருந்தால், இன்னேரம் குருவும் என்னைத் தேடி வந்திருப்பார், அல்லது நான் குருவைக் கண்டிபிடித்திருப்பேன்..’

‘வேண்டாம்.. நீ பேசுவது ஒன்றும் விளங்கவில்லை..’

‘எனக்கெ சரியாகத் தெரியவில்லை..!’

‘அது இருக்கட்டும்.. நீதான் எல்லோருக்கும் சமைக்கிறாயா?’

‘ஆமாம் சமைத்துவிட்டு, காலேஜ் போகனும். அப்பாவுக்கும், தம்பிக்கும் சேர்த்து செய்யணும். எனக்கு, சமைப்பதற்கு வரவேயில்லை. தெரியவில்லை!  நன்றாகவே இல்லை. போரகிறது. ஆனாலும் அப்பாவும், தம்பியும் ஒன்றும் சொல்லாமல் “நல்லா இருக்கேன்னு’ சொல்லி சாப்பிடறாங்க..பாவம்! '

‘உன்னைப் பார்க்க எனக்கு கஷ்டமாக இருக்கிறது. உன்மேல் எனக்கு அன்பாகவும், பாசமாகவும் இருக்கிறது..!’

‘குக்கருக்கு கூட அன்பு, பாசம் உண்டா?’

ம்ம்ம்ம்ம்’

‘ஷைலு கண்ணு... என்னடா செல்லம், இன்னிக்கு சாப்பாடு நல்ல டேஸ்டியா இருக்கு. வெரிகுட்ரா ..  என்றார் அப்பா

‘தேங்க்ஸ் அக்கா.. இன்னிக்கு அம்மா சமைச்ச மாதிரியே இருக்கு’ என்றான் தம்பி.

குக்கர் மௌனமாகச் சிரித்துக் கொண்டது.

  
(இது குறுங்கதை மாதிரி.. பொருள் சற்றே மறைந்திருக்கும்.)

4 comments:

  1. அருமையான கதை! உள்ளே மறைந்திருந்த பொருளும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  2. Thank U so much Shri Suresh sir...

    ReplyDelete
  3. சிறு கதை , பொருள் பெரிது . நண்பரே .
    குரு அமைவதெல்லாம் மிக அறிய விஷயம் . சிலருக்கு குருவை காணும் பாக்கியம் கிடைக்கும் . கிடைத்த குருவை போற்றுவோர் உண்டு .
    சீர்காழி ஒவ்வொரு கச்சேரி முடியும்போதும் குருவணக்கம் சொல்வார் .
    அதில் சொல்வார் " அன்னை தந்தை அதன்பிரகவரே
    என்கீதஞானம் அவர்தந்த வாழ்வு
    என்னுள்ளம் என்றும் அவருக்கு தாழ்வு ' என்பார் .
    குருவை சிந்தித்தல் பற்றி திருமூலர் வார்த்தைகள்
    "தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே.'
    குரு அமைவது நம்கையில் இல்லை . அது அவன் அருள் .
    அன்புடன்
    அரசு

    ReplyDelete
  4. Thanks for comments. Great men never forget their GURUs. True.

    ReplyDelete