Wednesday, June 7, 2017

காஷ்மீருக்கு ஒரு பயணம் – பகுதி 2

முழுக் காஷ்மீருமே அழகு வனம்தானே? ஆயினும், ஸ்ரீநகரில் ஏராளமான  பூங்காக்கள் அமைத்திருக்கிறார்கள். சில மொகலாயர் காலத்தியது.  ஷாலிமார் பாக் (Shalimar Bagh), Chashmishi Spring Gardan, நேரு பார்க், பரிமஹல் பார்க், அல்மண்ட் பார்க், டுலிப்  கார்டன் போன்றவை பெரியவை. அழகானவை.  அனைத்து பூங்காக்களும் நேர்த்தியாக பராமரிக்கப் பட்டு வருகின்றன. ஸ்பிரிங் பார்க் என்னும் இடம் அமைப்பில் மைசூர் பிருந்தாவன் கார்டனை நினைவு படுத்துகிறது. இந்த ஸ்ப்ரிங் கார்டனின் தண்ணீரைத்தான் நேரு குடித்தார், மருத்துவ குணம் மிக்கது என்றெல்லாம் சொல்வார்கள். தப்பித்தவறி குடித்து வைக்காதீர்கள். பனி உருகி வரும் நீர்தான். என்றாலும் பாசி போன்றவை மிதக்கின்றன. வயிறு கெட்டுவிடப் போகிறது.

அனைத்துப் பார்க்குகளும் திகட்ட திகட்ட இனிக்கிறது.  அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, நிறைந்த நீர்வளம், அக்கறையோடு கூடிய பராமரிப்பு காரணமாக பூத்துக் குலுங்குகின்றன – பளீரென்ற வண்ணத்தோடு. 

ரோஜாச் செடிகளின் விதைகள் விற்கிறார்கள். நம் ஊர் தட்பவெட்ப நிலைக்கு வளருவது கடினம். மனதை கொள்ளை கொள்ளும் டுலிப் கார்டன் இப்பொழுது சீசன் இல்லை. மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மட்டுமே பூக்குமாம்.  மொகல் ஹெரிடேஜ் கார்டன் 12 அடுக்கு கொண்ட நீரூற்றுகளைக் கொண்டு ரம்மியமாக இருக்கிறது.  எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்னும் அளவிற்கு பசுஞ்சோலைகள்; உன்னத அழகுடன்.

ஸ்ரீநகர் கோடைகாலத் தலை நகர். ஜம்மு குளிர்காலத் தலைநகர். இரு செக்ரடேரியட் கட்டிடங்கள் இருக்கின்றன. மிகப்பெரிய ஃப்ரான்ஸிக் லேபோரட்டரி இருக்கிறது. வெளியேயிருந்து வேடிக்கை பார்க்கலாம்.

அழகிய குருத்வாராக்கள் இருக்கின்றன (சீக்கியர்களின் கோயில்). நகரில் ஆங்காங்கே டர்பன் அணிந்த சீக்கியர்கள் தென்படுகிறார்கள். 

ஊரின் சற்றுத் தொலைவில் ‘மாதா கீர்பவானி ‘ கோயில் இருக்கிறது. ஜம்மு-கட்ராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைஷ்னோதேவி கோயில் தெரியும்தானே? அந்த வைஷ்னோ தேவியின் தங்கைதான் கீர்பவானி. அறுகோன அமைப்பிலான ஒரு வாய்க்காலின் (Man made) நடுவே, மிகப்பெரிய மேம்பிள் மரங்கள் சூழ, அற்புதமாய் அமைந்திருக்கிறது இக்கோயில்.  நான் சென்றிருந்த சமயம் கோயிலில் விழாக் காலம்.  அண்டை மானிலங்களிலிருந்தும்கூட, லட்சக் கணக்கில் மக்கள் கூடுவார்களாம். ஆனால் இப்போது நிலவும் சில அசாதாரண சூழல்களால் சில ஆயிரம்பேர்தான் வந்தார்களாம். அமைதியான சூழலில் அழகானதோர் கோயில். வாய்ப்பு கிடைத்தால் தரிசனம் செய்யுங்கள். அபிஷேக பால் வெளியே செல்ல ஒரு சிறிய ஓடைபோல அமைத்திருக்கிறார்கள். கோயிலின் வெளியே இருக்கும்  பல்வேறு கடைகளை நடத்துபவர்கள்/ வைத்திருப்பவர்கள் முஸ்லீம்களே!  

நான் தங்கியிருந்த தால் ஏரியின் எதிரே,ஆதி சங்கராச்சார்யார் தபம் செய்த குன்று ஒன்று இருக்கிறது. இரண்டாயிரம் அடி உயரம் இருக்கும்.  குறிப்பிட்ட தூரம் வரை வாகனங்கள் செல்லும். அதன் பிறகு  நேர்த்தியான 247 கருங்கற் படிகள்.  அனைவரும் சோதனைக்குப் பிறகுதான் உள்ளே அனுமதிக்கப் படுகிறார்கள். உள்ளே சென்றால், அங்கே அழகான சிவன் கோயில் இருக்கிறது. கோயிலின் பெயரே ‘சங்கராச்சார்யார் ஜி மந்திர்’ தான்.  கோயிலை ஒட்டிய வனப்பகுதி ரிசர்வ்ட் ஃபாரஸ்ட். இரவு நேரங்களில் சிறுத்தைகள், மான்கள் இருக்குமாம். இங்கேநாமே சிவலிங்கத்தை தொட்டு வணங்கலாம். பெரும்பாலான வட இந்தியக் கோயில்களில் சிவபெருமானை நாமே தொட்டு வணங்கலாம். அபிஷேகம் செய்யலாம். யாரும் தடுப்ப தில்லை. காலை ஆறு முதல் மாலை ஆறு வரை திறந்திருக்கும். ஸ்ரீநகர் சென்றால் அவசியம் இக்கோயிலுக்குச் சென்று வாருங்கள்.

பார்க்க வேண்டிய மற்றுமொரு இடம். ஹஸ்ரத்பால் மசூதி.  தால் ஏரியின் பின்புறம், நிஷாத் பார்க்கின் (park) அருகே, பளிங்குக் கற்களால் ஆன முஸ்லீம்களின் பெருமரியா தைக்குரிய மசூதி இது. ஏழைகளின் ஹஜ் என்று உடன் வந்தவர் சொன்னார். மெக்கா யாத்திரை செல்ல இயலாத ஏழைகள் இந்த மசூதிக்குச் செல்லலாமாம். This revered shrine houses the Moi-e-Muqqadus (preserved sacred hair) of Prophet Mohammad. Public display of the hair takes place only on religious occasions. Some of the other names of the Hazrat Bal mosque are Assar-e-Sharief, Madinat-us-Sani and Dargah Sharif. One of the most revered Muslim shrines, Hazratbal is an epitome of the love and respect of Muslims for the Prophet. முஸ்லீம்கள் அல்லாதோர் தொழுகை நடக்கும் இடத்திற்குள் செல்ல அனுமதியில்லை. ஆனால் மற்ற இடங்களைப் பார்க்கலாம்.


சங்கராச்சார்யார் கோயிலின் புகைப்படம் கீழே:



சங்கராச்சார்யார் ஜி மந்திர்.


'தால்' ஏரியின் கடைசியில் வாட்டர் ஸ்போர்ட்ஸ் இடம் இருக்கிறது. கபூதர் கானாவைத் தாண்டி. ஏரியின் நீரில்,  ஒரு பலகையின் மேலே நின்று கொண்டு கயிற்றினைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், நம்மை இழுத்துக் கோண்டு ஒரு விசைப் படகு விரைந்து செல்லும்.  'தேன் நிலவு' திரைப்படத்தில் ஜெமினி கணேசனும் வைஜயந்திமாலாவும் (?) இந்த விளையாட்டை ஆடிக்கொண்டு, சர்ஃபிங் செய்வார்கள். சிறுவயதில் இப்படத்தைப் பார்த்த பொழுது, ஆஹா.. நாமும் இந்த மாதிரி போகமுடியுமா என யோசித்திருந்தேன்.  66 வருடத்திற்குப்பின் அந்த வாய்ப்பு கிடைத்த பொழுது, கொஞ்சம் வெட்கமாகத் தான் இருந்தது. வெளியூர்தானே? யார் பார்க்கப் போகிறார்கள் என 'தைரியமாக' இந்த விளையாட்டை ஆடித்தீர்த்தேன். 




மேலே குறிப்பிட்ட அனைத்து இடங்களையும் கீழே கொடுக்கப்பட்ட வீடியோ தொகுப்பில் பார்க்கலாம். 



1 comment:

  1. அருமையான தகவல்களுடன்
    படங்களுடன்
    பயணப் பதிவு வெகுஅருமை

    உள்ளத்து இளமையை
    சவாரியில் உணர முடிகிறது
    வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete