Wednesday, September 2, 2026

துக்ளக் தர்பார்

துக்ளக் தர்பார்!

​கோயில்களுக்குள் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என ஒரு தடை உத்தரவு. காரணம், ஒருசிலர் ‘ரீல்ஸ்’ எடுக்கிறார்கள் என்பதற்காக! சட்டம் இயற்றுபவர்கள் தீரச் சிந்திக்காமல் செயல்பட்டால், அல்லது மக்களைக் கோயிலுக்கு வரவிடக் கூடாது என்ற தவறான எண்ணத்தோடு முடிவெடுத்தால் மட்டுமே இதுபோன்ற அராஜக விதிகளை அமல்படுத்த முடியும்.

​ரீல்ஸ் எடுத்தாலோ, உரத்த குரலில் பேசினாலோ, அனுமதி இன்றி புகைப்படம் எடுத்தாலோ, அல்லது போனை ‘சைலன்ட் மோடில்’ போடத் தவறினாலோ போனைப் பறிமுதல் செய்வோம் என்று எச்சரியுங்கள். ஒவ்வொரு மூலைக்கும் CCTV கேமராக்கள் எதற்காகப் பொருத்தப்பட்டுள்ளன? கொஞ்ச நாட்களுக்குக் கூடுதல் காவலர்களைப் பணியமர்த்தி விதிமீறல்களைக் கட்டுப்படுத்துங்கள்; பிரச்சினை முடிந்தது.

​அதை விடுத்து, செல்போனே எடுத்துச் செல்லக் கூடாது என்பது இக்காலத்திற்குச் சற்றும் சாத்தியமில்லாத ஒன்று.

​சில பெரிய கோயில்களுக்குச் சென்று தரிசித்துத் திரும்ப நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை ஆகிறது. அதுவரை போனை லாக்கரில் வைத்துவிட்டு வர வேண்டும். போனை வைப்பதற்கு ஒரு மணி நேரம் வரிசை; அதை மீட்டு எடுப்பதற்கு ஒரு மணி நேரம் வரிசை.

​மணி கணக்கில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு எத்தனையோ அவசரத் தேவைகளும் அழைப்புகளும் வரத்தானே செய்யும்?

​வீடு, பணியிடம், குழந்தைகள் படிக்கும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், காவல் துறை என யாருக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் அவசர அழைப்பு வரலாம். ஏன், கோயிலுக்குள்ளேயே ஒருவருக்கு திடீரென உடல்நலம் குன்றலாம்; உடன் வந்த முதியவர்களோ, குழந்தைகளோ கூட்டத்தில் காணாமல் போகலாம்; உடைமைகள் திருடு போகலாம். அப்படி ஒரு சூழலில் யாரிடம் உதவி கேட்பது? எப்படித் தொடர்புகொள்வது?

​முதியவர்களை அழைத்து வரும் குடும்பங்களுக்குத்தான் இந்த நடைமுறைச் சிக்கல்களின் தீவிரத்ன்மை புரியும். சிறப்பு வழியில் ('VIP') எளிதாகச் சென்று வரும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இது எப்படிப் புரியும்?

​சொந்த மொபைல் எண்களையே நினைவில் வைத்திருக்க இயலாத இந்தக் காலத்தில், அவசர நேரத்தில் மற்றவரை எப்படித் தொடர்புகொள்வது?

"கோயிலுக்குச் செல்வதையே மக்கள் தயங்கும் அளவுக்கு இந்த விதிகளால் சிரமங்கள் உருவாகக் கூடாது" என்கிறார் அண்ணாமலை.

​அமைதியான முறையில் இறைத்தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்தத் தேவையில்லாத கட்டுப்பாடுகள் கடும் பதற்றத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகின்றன.

​மக்களின் ஆன்மீக நம்பிக்கையையும் வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோயில் விதிமுறைகள் இருக்க வேண்டும். மாறாக, மக்களைக் கோயிலை விட்டே விலகிப் போகச் செய்வதற்கு அல்ல. ஒருவேளை அதுதான் நோக்கமா?

​எனவே, தமிழக அரசு இந்த நடைமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களைத் துன்புறுத்தும் இந்தத் தடையைத் திரும்பப் பெற வேண்டும்.

​பாடல் பெற்ற ஸ்தலம், திவ்ய தேசம், வைப்புத் ஸ்தலம் என்ற வரிசையில், "செல்போன் தடைத் தலம்" என்று புதிதாக ஒரு பட்டியலை உருவாக்கத் தேவையில்லை.

​இந்து சமய அறநிலையத் துறை முதற்கட்டமாக 52 கோயில்களின் பெயர்களுடன் இப்படி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. மிக முக்கிய ஆலயங்களில் 'பாதுகாப்பு' காரணங்களுக்காக மட்டுமே இதை விதிவிலக்காகச் செயல்படுத்தலாமே தவிர, நிர்வாக வசதிக்காகப் பொதுமக்களை வதைக்கக் கூடாது.

​கோயில் வளாகங்கள் என்பவை வழிபாடு மட்டுமன்றி, ஆன்மீகச் சொற்பொழிவுகளும், கலை நிகழ்ச்சிகளும், சமூகக் கூடல்களும் நடக்கும் பொதுவெளிகளாகவே காலம் காலமாக இருந்துவந்துள்ளன என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment