எவரேனும், பத்து வருடங்களாகக் கஷ்டப்பட்டுக் கட்டிய ஓர் அத்தியாவசிய அமைப்பை, ஒரே நிமிடத்தில் வெடிவைத்து உடைத்தெறிவார்களா? வளர்த்த குழந்தையின் கழுத்தை வெட்டிப் பார்ப்பார்களா?
செய்வார்கள்! நமது மத்திய அரசு செய்யும்.
யுபிஐ (UPI) சேவைகளுக்கு வரி போட்டுள்ளார்கள். ஏன்? வங்கிகளுக்குச் செலவாகிறதாம்!
வங்கிகளுக்கு ஆகும் எல்லாச் செலவையும் முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பணத்தைக் கையாள வங்கிகளுக்கு எவ்வளவு செலவாகிறது எனக் கணக்கெடுங்கள்.
வங்கிகள் பணத்தை எண்ண, பணப் பெட்டகங்களில் (Currency Chest) வைக்க, நோட்டுகள் போலியா அல்லது கள்ள நோட்டா எனப் பார்க்க, ஏடிஎம்களில் (ATM) பணத்தை நிரப்ப, ஏடிஎம்களைப் பராமரிக்க, அதற்கான மின்கட்டணம், இணைய இணைப்புச் செலவு (Uplink cost), பணத்தைக் கொண்டுசெல்லும் வாகனங்களின் போக்குவரத்துச் செலவு, பாதுகாப்புச் செலவு (Security), பழைய நோட்டுகளைத் திரும்பப் பெற, அவற்றை மீண்டும் அச்சடிக்கும் செலவு, ரிசர்வ் வங்கிக்கு (RBI) ஆகும் செலவு என அனைத்தையும் பார்க்க வேண்டும்.
வியாபாரிகள், பயனாளிகள் ஏடிஎம்களுக்குக் கட்டும் பணம், சில்லறை மாற்றுகின்ற செலவு, அவர்கள் பணத்தை எண்ணுகின்ற வேலை, அதைத் திரும்பக் கொண்டுவந்து வங்கியிலே கட்டுகின்ற வேலை என மேலும் பல செலவுகள் உள்ளன.
இவை அனைத்தையும் யுபிஐ தவிர்க்கிறது. யுபிஐ செலவை ஈடுகட்டுவதாகக் கூறி மக்களைப் பிழிவது இரக்கமற்ற கொடூர மனம்; அது பேரறிவீனமான செயல்.
பணத்தைக் கையாள்வதில் எவ்வளவு சிக்கல்கள் உள்ளன என்பதைப் பார்த்துவிட்டுத்தானே யுபிஐ கொண்டுவரப்பட்டது? அந்தச் சிக்கல்கள் இப்போது சரியாகிவிட்டனவா?
வங்கிகள் என்று மட்டுமல்லாமல், காவல்துறை, நிர்வாகத் துறை, வருமான வரித்துறை என எல்லாவற்றிலும் யுபிஐ-யின் பயன்பாடு இருக்கிறது.
எல்லாப் பரிவர்த்தனைகளும் வங்கிக் கணக்குகளுக்குள் வருவதால், எல்லாக் கணக்கு வழக்குகளையும் கண்காணிக்க முடியும்.
எல்லாவற்றையும் விடுத்து, முட்டாள்தனமாக 2,000 ரூபாய்க்கு மேலே போனால் அரசு வரிவிதிக்கிறது.
2014-இல் மோடி அரசு வந்தபோது, "கருப்புப் பணத்தைத் தடுப்போம், பணப் பரிவர்த்தனையைக் குறைத்து டிஜிட்டல் மயமாக்குவோம், மக்களுக்குச் சேவை செய்வோம்" என்று சொல்லிவிட்டு, அதற்கு நேர்எதிராகச் செயல்படுகிறார்கள்.
"அரசின் பண உதவிகள் நேரடியாக வங்கிகள் மூலமாகவே மக்களுக்கு வரும்; அதனால் ஊழலை ஒழிக்க முடியும்" எனச் சவடால் அடித்துவிட்டு, இப்போது யுபிஐ-க்கு வரி போடுவோம் என்கிறார்கள். கந்துவட்டிக்காரர்களை விட மோசமாகச் செயல்படுகின்றனர். மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைத்துவிட்டு, உலக மகா தலைவர்கள் எனத் தங்களைச் சீராட்டிக்கொள்வது ஏமாற்று வேலை.
கேஸ், மின்சாரம், மளிகை, செய்தித்தாள் என அனைத்திற்கும் டிஜிட்டல் முறையிலேயே பணம் செலுத்துகிறோம்! அதற்கு மோடியும் நிர்மலாவும் வேட்டு வைத்தார்கள்.
2014-15-இல் என்னென்ன பேசினீர்கள் என்பதைச் சற்றே படித்துப் பாருங்கள்!
மேலும், டிஜிட்டல் முறைக்கு மக்களைக் கொண்டுசெல்ல முயலாமல், "வரி விதிப்பேன், கொத்து பரோட்டா போடுவேன்" என்பது அராஜகம்.
வங்கிக் கடன் முதல் அனைவரின் பொருளாதாரம் உயர டிஜிட்டல் முறையும் ஒரு காரணம்.
இந்த அடிப்படை அறிவுகூட இல்லாத மனிதர்களை வைத்துக்கொண்டு 2029-இல் ஜெயிக்க முடியுமா?
ஏற்கனவே ஜிஎஸ்டி (GST) !!இதில் இனி புதிய கட்டணபம்.
பள்ளிக் கட்டணம், காப்பீடு — அதிலும் மருத்துவக் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி என்றெல்லாம் கும்மி அடித்தது போதாதா? இதுவுமா?
"லாபம் மட்டுமே எங்கள் நோக்கம்" என்று சொல்லிவிடுங்கள்; மக்கள் நலன் என நாடகமாடாதீர்கள்.
100 கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில், அவர்களைப் பிடுங்கித்தின்று விளையாடுவது என்ன விதமான மனநிலை? இது பகல் கொள்ளை இல்லையா?
மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்குவீர்கள் என்றால் யுபிஐ-யை இழுத்து மூடவேண்டியதுதான்.
அமெரிக்க அண்ணன் சொல்வதற்குத் தலையாட்ட மோடி எதற்கு?