சில நிஜ சம்பவங்கள், கதை களைக்கட்டிலும் படு சுவாரஸ்யமானவை! திரில்லானவை.
2023 டிசம்பர் மாதம். சோமாலியக் கடற்கொள்ளையர்கள் கிட்டத்தட்ட மறைந்துவிட்டார்கள் என்று உலகம் நினைத்துக் கொண்டிருந்த நேரம் அது.
செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் ஹூதி தாக்குதல்கள் காரணமாக சர்வதேசக் கடற்படைகளின் கவனம் பல திசைகளில் பிரிந்திருந்தது. அந்தக் குழப்பமான சூழலைப் பயன்படுத்தி சோமாலியக் கடற்கொள்ளையர்களும் மீண்டும் கடலுக்கு வரத் தொடங்கினர்.
அப்படித்தான் MV ரூயன் (MV Ruen) என்ற சரக்குக் கப்பல் அவர்கள் கையில் சிக்கியது.
MV ரூயன் பல்கேரிய நிறுவனமான நேவிகேஷன் மரிடைம் பால்கரியா (Navibulgar) நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்ட, ஒரு பெரிய சரக்குக் கப்பல். தென் கொரியாவின் கவாங்யாங் துறைமுகத்திலிருந்து உலோகப் பொருட்களை ஏற்றிக்கொண்டு துருக்கியின் கெம்லிக் துறைமுகத்தை நோக்கி அது சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பலில் 18 மாலுமிகள் இருந்தனர். அவர்கள் பல்கேரியா, அங்கோலா மற்றும் மியான்மரைச் சேர்ந்தவர்கள்.
2023 டிசம்பர் 14 அன்று, சோகோத்ரா தீவுக்கு அருகிலுள்ள அரபிக்கடல் பகுதியில் ரூயன் சென்று கொண்டிருந்தபோது சுமார் ஆறு சோமாலியக் கடற்கொள்ளையர் கப்பலில் ஏறினர். 18 மாலுமிகளையும் சிறைபிடித்து, ரூயனை சோமாலியக் கடற்கரையை நோக்கி கொண்டு சென்றார்கள். டிசம்பர் இறுதியில் அது சோமாலியக் கடற்கரையிலிருந்து சில கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டிருந்தது.
இங்கேதான் இந்தக் கடத்தல் வழக்கமான சோமாலியக் கடற்கொள்ளை சம்பவத்திலிருந்து வேறுபடத் தொடங்கியது.
கடற்கொள்ளையர்கள் ரூயனை வெறும் பிணைத்தொகை பெறுவதற்கான கப்பலாக மட்டும் பயன்படுத்தவில்லை. அதை ஒரு “Pirate மதர் ஷிப்” ஆக மாற்றத் தொடங்கினர்.
கடற்கொள்ளையர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை உண்டு. அவர்களுடைய சிறிய படகுகளால் சோமாலியக் கடற்கரையிலிருந்து நூற்றுக்கணக்கான கடல் மைல்கள் தொலைவுக்குச் சென்று பெரிய சரக்குக் கப்பல்களைத் தாக்குவது கடினம். எரிபொருள், உணவு, ஆயுதங்கள், மனிதர்கள் அனைத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
ஆனால் ஒரு பெரிய சரக்குக் கப்பலையே கைப்பற்றிவிட்டால்?
அந்தக் கப்பலையே மிதக்கும் கடற்கொள்ளையர் தளமாகப் பயன்படுத்தலாம்.
ரூயன் அதற்குப் பயன்பட்டது. இந்திய அரசின் பின்னர் வெளியான அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, 35 ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்கள் வரை அந்தக் கப்பலில் தங்கி, மற்ற வணிகக் கப்பல்களைத் தாக்குவதற்கான மதர் வெஸல் ஆக அதை பயன்படுத்திக் கொண்டிருந்தனர். ‘அடிமைப் பெண்’ திரைப்படத்தில் வருவது போல் பிடிபட்ட 18 மாலுமிகளும் பிணைக் கைதிகளாக மாறி, கடற்கொள்ளையர் கும்பல் சொல்லும் இடங்களுக்கு ரூயன் கப்பலை ஓட்டிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
உலக நாடுகள் அனைத்தும் ரூயனைத் தேடி வந்தன. அது கடற்கொள்ளையர் கப்பலாக மாறியதால் அதை ஏவுகணைகளை வீசி அழிக்கவும் சர்வதேச சட்டத்தில் இடம் இருந்தது. ஆனால் அதில் பிணைக் கைதிகள் இருப்பதால் என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை.
இந்தியக் கடற்படை அப்பகுதியில் நடக்கும் கப்பல் போக்குவரத்தை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தது. அந்தத் தகவல்களை ஆய்வு செய்தபோது சாட்டிலைட் மூலம் ரூயன் மீண்டும் நகர்வது தெரியவந்தது.
இந்த முறை இந்தியக் கடற்படை அதை விடத் தயாராக இல்லை.
அரபிக்கடலில் ஏற்கெனவே பணியில் இருந்த இந்தியாவின் ஐஎன்எஸ் கொல்கத்தாவுக்கு (INS Kolkata) ரூயனை இடைமறிக்க உத்தரவு வழங்கப்பட்டது.
2024 மார்ச் 15 காலை ஐஎன்எஸ் கொல்கத்தா, ரூயனை இடைமறித்தது.
முதலில் நிலைமையை உறுதிப்படுத்துவதற்காக ஐஎன்எஸ் கொல்கத்தா தனது ட்ரோன் ஒன்றை ரூயன் அருகே அனுப்பியது.
அப்போது கடற்கொள்ளையர்கள் அந்த ட்ரோன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அதைச் சுட்டு வீழ்த்தினர்.
அதோடு நிற்கவில்லை.
ஐஎன்எஸ் கொல்கத்தா மீதும் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதன் மூலம் நிலைமை முற்றிலும் மாறியது.
இப்போது அது சந்தேகத்திற்குரிய ஒரு வணிகக் கப்பல் மட்டும் அல்ல; இந்தியப் போர்க்கப்பல் மீது நேரடியாக ஆயுதத் தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையர்களின் கப்பல்.
ஆனால் ஐஎன்எஸ் கொல்கத்தாவுக்கு இன்னும் ஒரு மிகப்பெரிய சிக்கல் இருந்தது.
ரூயனுக்குள் பணயக் கைதிகள் இருந்தார்கள்.
எனவே கப்பலை ஏவுகணையால் தாக்கி அழிப்பது எளிதான ராணுவத் தீர்வாக இருந்தாலும், அது நடைமுறையில் சாத்தியமில்லை. கடற்கொள்ளையர்களைக் கொல்ல முயன்றால் பணயக் கைதிகளும் உயிரிழக்கலாம்.
நிலைமை கைமீறுவதை உணர்ந்த கொள்ளையர்கள், கப்பலை சோமாலியாவை நோக்கி ஓட்டிச் செல்லப் பணித்தனர். இன்னும் 100 கி.மீ கடந்தால் சோமாலியக் கடல் எல்லைக்குள் நுழைந்துவிடலாம். அதன்பின் அதனுள் நுழைந்து இந்தியாவால் தாக்குதல் நடத்த முடியாது.
அதனால் முதலில் இந்திய கடற்படை வீரர்கள் ரூயனின் ரேடார் மற்றும் ஜிபிஎஸ் அமைப்பை ஸ்னைப்பர் தாக்குதல் மூலம் செயலிழக்கச் செய்தார்கள். ரூயன் இப்போது திசை தெரியாத கப்பலாக மாறியது.
ஆனாலும் கடற்கொள்ளையர்கள் விடவில்லை. "ஆப்பிரிக்கா இருக்கும் திசை மேற்கேதான், சூரியனைப் பார்த்து திசையைக் கண்டுபிடித்துச் செல்" என்றார்கள். ரூயனும் அப்படியே மெதுவாகச் செல்ல முயன்றது.
அதன்பின் ஐஎன்எஸ் கொல்கத்தா கப்பலின் சுக்கானை தாக்கி அதை முற்றிலும் முடக்கியது. கப்பல் இப்போது நடுக்கடலில் நின்றது.
அடுத்து சென்டிமென்ட் அட்டாக் தொடங்கியது. பல்கேரிய கேப்டனும் மாலுமிகளும் ரேடியோவில் வந்தார்கள். "கப்பல் மேல் சுடாதீர்கள். நீங்கள் சுடும் ஒவ்வொரு குண்டுக்கும் எங்களில் ஒருவரைக் கொல்வோம் என்கிறார்கள்" என்றார்.
அவர் சொல்வது உண்மை என தெரிந்தாலும் ஐஎன்எஸ் கொல்கத்தா அடுத்த சதுரங்க நகர்வை நகர்த்தியது.
"இது சர்வதேச சட்டப்படி பைரேட் கப்பல். இதில் உள்ள நீங்கள் பிணைக் கைதி என சொல்லிக்கொள்ளலாம். ஆனால் நீங்களும், மீதமுள்ள மாலுமிகளும் சர்வதேசக் கடற்கொள்ளையருக்கு உதவும் நபர்கள். கப்பலில் உள்ள அனைவரையும் நாங்கள் கடற்கொள்ளையராக தான் கருதுவோம்" என்றது.
அதன்பின் கொள்ளையர்கள் அடுத்த காயை நகர்த்தினார்கள். பல்கேரிய கேப்டன் பல்கேரிய கப்பல் கம்பெனியைத் தொடர்பு கொண்டு அழுதார். அவர்கள் ஐஎன்எஸ் கொல்கத்தாவை தொடர்புகொண்டு "ஆறு கோடி டாலர் கொடுத்தால் பிணைக் கைதிகளை விட்டுவிடுகிறோம் என்கிறார்கள். நாங்கள் கொடுக்கத் தயார். நீங்கள் தயவுசெய்து கப்பல் மேல் தாக்குதல் நடத்தாமல் விட்டுவிடுங்கள். எங்களுக்கு அவர்கள் உயிர்தான் முக்கியம். நாங்கள் வேண்டுமானால் பல்கேரிய அரசிடம் பேசி டெல்லியில் லாபி செய்யவும் தயார்" என வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் ஐஎன்எஸ் கொல்கத்தாவுக்கு பிறப்பிக்கபட்டிருந்த உத்தரவு உறுதியானது: "நம் நோக்கம் கடற்கொள்ளையை ஒழித்து, இந்தியப் பெருங்கடலில் வணிகத்தைப் பாதுகாப்பதுதான். கொள்ளையரைத் தப்ப விட வேண்டாம்" என்று.
ஆனால் அதே சமயம் மாலுமிகள் கொல்லப்பட்டால் சர்வதேச அளவில் பிரச்சினையாகிவிடும். அதையும் இந்தியா விரும்பவில்லை. உடனடியாக கப்பலை கமாண்டோ ஆபரேஷன் மூலம் கைப்பற்ற முடிவு செய்தார்கள்.
கப்பலில் இறங்கி தாக்க, மும்பையில் இருந்து சி 17 (C-17) விமானம் மூலம் அதிரடிப்படை கமாண்டோ படை ஒன்று விரைந்து வந்துகொண்டிருந்தது.
இப்போது பல்கேரிய கேப்டனிடமிருந்து தகவல் வந்தது. கடற்கொள்ளையர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்துவிட்டார்கள். ஒரு பிரிவு, "நாம் கப்பலில் உள்ள படகுகளை எடுத்துக்கொண்டு சோமாலியா போய்விடலாம்" என்கிறார்கள். இன்னொரு பிரிவு, "ஆறு கோடி வந்தால் தான் போவோம்" என்கிறார்கள் எனத் தெரியவந்தது.
ஆறு கோடி கேட்கும் பிரிவின் தலைவன் இருக்கும் இடம் ட்ரோன், பைனாகுலர்களால் கண்டறியபட்டு, அவன் நின்ற இடத்துக்கு கீழே கப்பலின் பக்கவாட்டில் வெடிமருந்து இல்லாத ஷெல்லால் அடித்தார்கள். அவனும், இன்னொருவனும் அடிபட்டு கீழே விழுந்தார்கள். அவன் கொல்லபட்டிருந்தால் கடற்கொள்ளையர் கோபத்தில் அனைவரையும் கொன்றிருக்கலாம். ஆனால் கொல்லாமல் சும்மா கீழே விழுந்து அடிபடும்படி ஷெல்லால் அடித்து தாக்கியதும் அந்த இரண்டாம் பிரிவிடையே பீதியை உண்டாக்கியது.
கமாண்டோக்கள் வரும் தகவலும் சொல்லபட்டது. அவர்கள் வந்தால் அதன்பின் பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது. நேராக சுட்டுக்கொண்டுதான் கப்பலில் இறங்குவார்கள். அதன்பின் ஐஎன்எஸ் கொல்கத்தாவே நினைத்தாலும் அவர்களை தடுக்க முடியாது.
அதன்பின் நிலைமை முற்றிலும் மாறியது.
ஒட்டுமொத்தக் கடற்கொள்ளையரும் சரணடைய முன்வந்தார்கள்.
அப்போது C-17 விமானம் மூலம் இந்தியாவிலிருந்து பறந்துவந்த கமாண்டோக்கள் கடலில் குதித்து, போர்க்கப்பல்களின் உதவியுடன் கப்பலில் ஏறினார்கள். 35 கடற்கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
அப்போது ரூயனில் சுமார் 37,800 டன் சரக்கும் இருந்தது.
35 கொள்ளையரையும் சோமாலியாவுக்கு அனுப்பாமல் நேராக மும்பைக்குக் கொண்டுவந்து இந்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சர்வதேசக் கடற்கொள்ளையர் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
18 மாலுமிகளும் பாதுகாப்பாக பல்கேரியாவுக்குக் கப்பலுடன் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
ஐஎன்எஸ் கொல்கத்தாவின் கேப்டன் சரத் சின்சுன்வால் (Captain Sharad Sinsunwal) அரசியல் அழுத்தம், பேரம், ராணுவ நடவடிக்கை, சைக்கலாஜிக்கல் அட்டாக், சென்டிமென்டல் பிளாக்மெயில், கமாண்டோ ஆபரேஷன் என அனைத்தையும் திறமையாகக் கையாண்டு ஒரு மாலுமியும் மரணமடையாமல் அனைவரையும் 40 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்டிருந்தார். அவருக்கு ஷௌர்யா சக்ரா (Shaurya Chakra) எனும் இந்தியாவின் மிக உயரிய அமைதிக்கால வீரதீர விருது வழங்கப்பட்டது.
~ நன்றி திரு நியாண்டர் செல்வன் ஜி