Saturday, August 29, 2015

கண்கள் எங்கே.. நெஞ்சமும் எங்கே

ஏதோதோ பண்டிகைகள் வந்து போகின்றன.  ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு தினுசான நைவேத்தியங்கள் இறைவனுக்குச் செய்கிறார்கள். சிலவற்றிற்கு கொழுக்கட்டை, சிலவற்றிற்கு போளி, சிலவற்றிற்கு பக்ஷனங்கள்.... இப்படி. இதன் காரணகாரியம் புரியாவிடினும், பண்டிகைகள் தரும் உற்சாகம், சந்தோஷம் அலாதி.

என் மனைவிக்கு, பண்டிகைக்கு ஏற்றவாறு நைவேத்தியங்கள் செய்வதில் அலாதி ப்ரியம். எடுபிடி வேலைகளுக்கு தோதாக நான் இருந்ததால் , சில இம்சைகள் இருந்தாலும், அவருக்கு சௌகரியமாகவே இருந்தது.  சொப்பு செய்வது, மாவு பிசைவது, பிழிவது இப்படி.

அவருக்கு இத்தகைய விசேட தினங்களில் ‘வைத்துக் கொடுப்பது’ மிகவும் விருப்பமான செயல். ‘வைத்துக் கொடுப்பது’ என்றால் நன்பர்கள், உறவினர் களுக்கு சேலை, ரவிக்கைத் துணி கொடுப்பது. 

இவை, அனேகமாக எல்லா பெண்களும் செய்யக் கூடியது தான்.  ஆனால் என் மனைவிக்கு, வேறு ஒன்றில் மிக விருப்பம்.  தனக்கு ஆட்டோ ஓட்டுபவருக்கு பெண்ட்-சட்டை, ஆபீஸில் தரை துடைப்பவர்களுக்கு புடவை, ஏதாவது சிறு பெண்களுக்கு பாவாடை-சுடிதார், வீட்டில் வேலை செய்பவர்களுக்கு புடவைகள், என வழங்க வேண்டும். அதுவும் யாருக்கும் தெரியாமல், சத்தமின்றி. வெளியூர் சென்றால் கூட அவரது சினேகிதிகளுக்கு வாங்கி விட்டுத்தான், பிறகு தான் வீட்டிற்கு..

அந்த உத்தமி மறைந்து, இதோ இருபது மாதங்களாகிவிட்டன. எந்த பண்டிகை வருகிறது, போகிறது என்ற பிரக்ஞை இல்லாமல் இருக்கிறேன். இன்று அவிட்டமாம். நேற்று வரலக்ஷ்மி விரதமாம். ஆரவாரமாக அவர் கொண்டாடும் விசேடம். வெகுனாள் முன்பாகவே, புடவைகளும்-ரவிக்கைத் துணிகளுமாய வாங்கி அடுக்கிக் கொள்வார். ‘வைத்துக் கொடுக்க’. 

அவர் செய்யும் அம்மனின் அலங்காரம் கொள்ளை கொள்ளும். அன்பானவர்கள் எது செய்தாலும் அழகு மிளிர்வது இயல்புதானே? அவரின் நினைவு நேற்று மேலிடவே,  இரவு தூக்கம் பிடிக்கவே இல்லை. யூடியூபில், அவருக்கு பிடித்தமான பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ‘கர்ணன்’ திரைப் படத்தில் ‘கண்கள் எங்கே.. நெஞ்சமும் எங்கே’ என்று ஒரு பாடல். சொக்க வைக்கும் இசை. அப்படிப்பட்ட பாடல்கள் இனி கிடைக்குமா என ஏங்க வைக்கும். அப்பாடலை என் துணைவியார் இனிமையாகப் பாடுவார். தூக்கம் கொள்வதற்கு முன்னால், ஒரு அரை மணி நேரம் அவருக்கு இசை நேரம். இப்பாடல் ‘மத்யமாவதியா’ வேறு ஒரு ஒன்றா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.  

அதை விசாரித்துக் கொள்வது இப்பொழுது பெரியவிஷயமில்லை. ஆனால், அந்த சந்தேகம் நிவர்த்திக்கப் படாமலேயே இருக்கட்டும்.

இன்னும் எத்தனையோ விசேட தினங்கள் வரத்தான் போகிறது. இருக்கும் வரை எனக்கு எல்லா நாட்களும் ஒரே நாளே.

அவரை எப்படியும் காப்பாற்றிவிடலாம் என்ற அசையாத நம்பிக்கை கொண்டிருந்தேன். இவ்வளவு விரைவில் முடிவு வந்துவிடும் என நினைக்கக் கூட இல்லை. இறுதி தினங்களில் என்னால் ஆன அனைத்து உபசரணையும் செய்தேன்; அவர் முகத்தில் ஒரு கணமெனும் மகிழ்ச்சி இருக்காதா என ஏங்கினேன். யாரிடம் பேசினால், அவர் மகிழ்ச்சி கொள்கிறார் என அலைந்தேன். அவர் நாலு வாய் சாதம் உண்டாலே பரம சந்தோஷம் ஆகும். என்ன செய்து என்ன? பல்வேறு காரணங்களால், அவர் இறுதி தருணங்களில் மகிழ்ச்சியாக இல்லை. அவர் எதிர்பார்த்தது அன்பான, கனிவான வார்த்தைகளை, ஆறுதலை, நேசத்தை.  அது எவரிடமிருந்தும் கிடைக்காமல், ஏமாற்றத்தோடே போய்விட்டார். ‘நானிருக்கிறேனே..’, உனக்கு வேண்டியதைச் செய்கிறேனே என்று சொல்வேன். புன்னகையோடு தலையாட்டுவார்.

இது கழிவிரக்கமோ, சுயபுராணமோ அல்ல. தெளிவாகத்தான் இருக்கிறேன்.

இதை ஏன்  இங்கே பகிர வேண்டும் என்ற என் கேள்விக்கு என்னிடமே பதில் இல்லை.. ஒருவேளை, என் விஜியைப் பற்றி யாரிடமாவது பேச விழைகிறேனோ என்னவோ? அந்த மகோன்னதமான ஜீவனை, அவரது பெருமைகளை சொல்ல வேண்டும் எனத் தவிக்கிறேன். கேட்பார் எவரும் இல்லாத இந்த சூழலில், தனியனாக என்னிடமே நான் சொல்லிக் கொள்ளும் முறையோ என்னவோ?



Thursday, August 27, 2015

GSLV

உள்நாட்டுத் தொழில் நுட்பம்.

வெளி நாடுகள், தொழில் நுட்பத்தை தர மறுத்த நிலையில், ருஷ்யாவின் க்ரையோஜனிக் இயந்திரம் தொடர் தோல்விகளைத் தந்த பின், நமது விஞ்ஞானிகள் உருவாக்கிய ராக்கெட். இரண்டு டன்களுக்கு மேல் பளு. PSLV ன் தொடர் வெற்றிகளுக்குப் பின், நாம் க்ரையோஜனிக்கிலும் ஜெயிக்க முடியும் என உலகுக்கு நிரூபித்தாக வேண்டிய நிர்பந்தம்.

நமது S பேண்ட் தேவைகள் மிக அதிகம். கம்யூனிகேஷன் சேடிலைட் இன்றி அமைவதில்லை.

நமது முயற்சி வெற்றி கான விழைவோம்..


Monday, August 24, 2015

வெங்காயம்..

இந்தியாவில் 'வெங்காய அரசியல்' அரசுகளை வீழ்த்தும் வல்லமை வாய்ந்தது என்பது தெரிந்தது தானே? இந்த வருடம், விளைச்சல் எவ்வளவு இருக்கும், தேவைக்கு போதுமா, டிமான்ட் எவ்வளவு என்பது போன்ற தகவல்களைக்கூட முன்கூட்டியே திரட்ட இயலாத, திராணியற்றவர்களா நாம்?  மந்திரிமார்கள் எல்லாம் பின் என்னதான் செய்கிறார்கள்? செக்ரடரி நீட்டும் ஃபைல்களில்  கையெழுத்து போடுவதோடு சரியா?

கண்ட குப்பைகளையெல்லாம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யத் தெரிகிறது, வெங்காயப் பற்றாக்குறை வருமென யூகித்து, முன்னாலேயே டெண்டர் விடத் தெரியவில்லையா?  உள்ளுர் கொள்ளைக்காரர்கள் எல்லாம் பதுக்கிவைத்து லாபம் ஈட்ட வழி வகுக்கிறார்களா?

காங்கிரஸ் இருந்தபோது, வெங்காய மாலை போட்டுக் கொண்டு, தில்லியில் நர்த்தனமாடிய பா.ஜ.க,  இப்போது என்ன செய்கிறது?    ஏன் முன் கூட்டியே திட்டமிடவில்லை? வெங்காய தட்டுப்பாட்டை எதிர்பார்த்தார்களா இல்லையா?

வடக்கே வெங்காயம் இல்லையென்றால், சமையலே இல்லை என்பதும், சாதாரண மக்களின் இந்த  குறைந்த பட்ச தேவையைக் கூட நிறைவேற்ற முடியவில்லையெனில், மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டிவரும் என்ற 'வோட்டு அரசியல்' கூடவா மறந்து போயிற்று?

அரசு இயந்திரத்தை முடுக்கத் தெரியாமல், என்ன Governance நடக்கிறதோ புரியவில்லை?

உத்தமமான காரியங்கள் சில

 அ. சிலவற்றை மறந்துவிடுதல்


  •       நன்றியற்றவர்கள் செய்யும் செயல்கள்.
  •      சீர் செய்ய முடியாத துக்கங்கள்.
  •       வேறு மாதிரியாக செய்திருந்தால் இன்னமும்  
         
    நன்றாக  இருந்திருக்குமே  என்ற சிந்தனைகள். 
  •      என்றோ ஏறுக்குமாறாக செய்துவிட்ட Embarrassing  ஆன செயல்கள்.
  •        பிறருக்கு செய்த உதவிகள்.    

   ஆ. சிலவற்றை மன்னித்துவிடுதல்:

            1.       செய்யத் தவறிய கடமைகளுக்காக வருந்துதல்..
            2.       திரும்பப் பெறமுடியாத அழகிய தருணங்களைப்  பற்றிய நினவு 
      3.       உறவுளின் தூஷனைகளை..
            4.       நட்புக்களின் பாரா முகத்தை..
            5.       பெரியோர்களின் தவறுகளை..
            6.       திரும்ப வாழமுடியாத காலங்களை எண்ணுவதை..

   இ. சிலவற்றை தவிர்த்துவிடுதல்

           1.       கூடா நட்பை...
           2.       தரமற்றவர்களிடம் ரகசியங்களை பகிர்ந்து கொள்வதை...
           3.       சபலப்பட்டுவிடுவோம் என உணர்ந்தால், அம்மாதிரியான 
               சந்தர்ப்பங்களை..
           4.       தகுதிக்கும் திறமைக்கும் அப்பாற்பட்டவற்றை பந்தாவிற்காக ஏற்றுக் 
               கொள்வதை..
           5.       வாக்குவாதம் வரும் என்று தெரிந்தால், அவற்றை..
           6.       உணர்ச்சிமயகாக இருக்கும் போது, முடிவெடுப்பதை..

   ஈ. சிலவற்றை விரும்பி நாடிச் செல்லுதல்..

          1.       உத்தமமானவர்களின் சேர்க்கை. சத் சங்கம்.
          2.       நல்ல புத்தகங்கள்.
          3.       ஏதேனும் ஒரு நல்ல பழக்கத்தை..
          4.       மனதுக்குப் பிடித்த அமைதி தரும் இசை..
          5.       மலைகள், கடல்கள், ஆறுகள்..அருவிகள்.. வழிபாட்டுத் தலங்கள்.

 உ. சிலவற்றை கண்டும் காணாமற் போய்விடுதல்.

1. குழந்தைகளின் சிறு சிறு பொய்கள்.
2. வேலையாட்களின் / கீழ்-உடன் பணைபுரிவரின் சிறு தவறுகள்.
3. வாழ்க்கைத் துணையின் பலவீனங்களை..
4. உயரதிகாரிகளின் அற்ப அபத்தங்களை...
5, சமூக வலைத்தளங்களில் யாராவது, சானி வாரி அடித்தால்..  
  ஹி..ஹி..

  ஊ.  சிலவற்றை தவிர்க்கக் கூடாது..

             1.       தன் நலமே பாராது, ஆபத்துக் காலங்களில் எல்லோருக்கும் உதவி...
            2.       உறவுகளின் / நட்புக்களின் சுப /அசுப காரியங்களில் பங்கேற்பது..
            3.       தன்னையும்,தன் வீட்டையுமாவது சுத்தமாக வைத்திருத்தல்...
            4.       யோகாசனங்கள், தியானம்...
            5.       பசியோடிருப்போருக்கு உணவிடுவதை..

  எ.  சிக்கலில் மாட்டிகொள்ளும்  சூழல்கள்.

           1.       பொறாமை, கர்வம், அகங்காரம் கொள்ளுதல்..
           2.       திட்டமிடாமல் துவங்கும் எந்த செயலும்..
           3.       மல்லாந்து படுத்து எச்சில் உமிழ்ந்துகொள்ளௌம் சூழல்கள்..
          4.       யோசிக்காமல் பேசிவிடும் வார்த்தை..
          5.       பழி வாங்க நினைத்தல்..


Monday, August 3, 2015

இது நல்ல தருணம்.

புருஷன் ஓங்கி அறைஞ்சாலும் அறைஞ்சான், கண்ணுல இருக்கும் பீளை போச்சு என ஒரு வழக்கு மொழி சொல்வார்கள். அரசியல் காரணங்களுக் காகவோ அல்லது சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்காகவோ, தமிழ் நாட்டில் பூரண மது விலக்கு என்னும் கோஷம் தீவீரமாகியுள்ளது. எதுவானாலும் கண்ணில் இருக்கும் பீளை போகவேண்டும்.

பலர், மாநிலம் பெரும் பாய்ச்சலுக்கும் புரட்சிக்கும் தயாராகிவிட்டது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்த முயன்றாலும் உண்மை நிலவரம் அப்படி இல்லை. எப்படியும் மதுவிலக்கு வந்துவிடாது என குடிமக்கள் நம்புகிறார்கள். அரசியல்வாதிகள் மேல் அவ்வளவு நம்பிக்கை.

ஆனாலும் நிலைமை படு மோசமாகிவிட்டது எனப் பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.  சாலையோரங்களிலும், பஸ் நிலையத்திலும் ஆங்காங்கே சிலர் ஆடை விலகியிருப்பது கூடத்தெரியாமல், நினைவிழந்த நிலையில் வீழ்ந்து கிடப்பதை, சலனிமின்றிப் பார்க்கும் அளவிற்கு மிதமிஞ்சிய குடி தினசரி நிகழ்வாகிவிட்டது.

பார்த்தவர்களுக்குத் தெரியும். சாலையோர புளியமரத்தடியோ, சிதைந்து போன கோயிலோ, கட்டிடமோ, பாலத்தடியோ எதுவானாலும் அங்கே காலிபாட்டில்கள் இறைந்து கிடக்கும்.  சுற்றுலாத்தலம் ஒன்று பாக்கி யில்லை; எங்கும் பாட்டில்கள்.

சமுதாயத்தில் குறைந்த பொருளாதர வசதியுள்ள ஆட்களே கடுமையாகப் பாதிக்கப் படுகிறார்கள்.

ஆண்களில் பலர் உழைக்கத் தயாராக இல்லை. அன்றைய குடிக்கு சம்பாதித்து விட்டால், அதற்கு மேல் உழைக்கத் தேவை இல்லை என்கிறார்கள். வேலைக்கு ஆள் இல்லை என்பதே இங்கு நிலை. வட இந்திய மாநிலங்களிலிருந்து கடினமாக வேலைகளுக்கு ஆட்கள் இறக்குமதியாவதன் ரகசியம் இதுவே.

காலை ஐந்து மணிக்கெல்லாம் கூட, சாரயக்கடை வாசல்களில் ஒரு நூறு வாகனங்களையாவது பார்க்க முடிவதே, நாடு எந்த அளவு சீர்கெட்டுப் போயுள்ளது என்பதை விளக்கப் போதுமானது.

சாவோ, கல்யாணமோ, திருவிழாவோ, அரசியல்கட்சிகளின் ஊர்வலமோ அல்லது பொதுக் கூட்டமோ எந்தக் கொண்டாட்டம் ஆனாலும் சாராயம்தான் மையப்புள்ளி. அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டம் என்றால், டாஸ்மாக் வருமானம் எகிறும். படையாகக் குடித்துவிட்டு கண்ணில் தென்படுவதை யெல்லாம் உடை. சட்டமாவது-ஒழுங்காவது?

உளரீதியாக, சாராயம் குடிப்பது என்பது ஒரு விஷயமே அல்ல என்பது போன்ற ஒரு நிலை தமிழ்னாட்டில் உருவாகிவிட்டது. முன்பெல்லாம் குடித்துவிட்டு எங்கோ கிடக்கும் புருஷனையோ, மகனையோ இழுத்துவரும் நிலைமை மாறி எங்கு நோக்கினும் மட்டையாகிக் கிடப்பது சர்வசாதரணமாகிவிட்டது.

அடிமட்ட மக்களின் வருமாணம் அட்டை போல டாஸ்மாக்கால்  உரிஞ்சப் படுகிறது. உரிஞ்சப் பட்ட அவர்களின் பணம்தான் ‘விலையில்லா பொருளாக’ எச்சமிடப்படுகிறது என்பது புரியாத கூட்டம்.  புரிந்தாலும் மீண்டுவர இயலாத/முடியாத மக்கள்.

‘அட போப்பா...’ மதுவிலக்கெல்லாம் வராது என்பதே,  நவீன இளைஞர்கள் மற்றும் அடித்தள மக்களின் நிலை.

எதுவாயினும், மதுவிலக்கு ஒரு கோஷம் என்றளவிலாவது அங்காங்கே புகைவது நல்லதே.

பள்ளிச் சிறுவர்கள் கூட குடிக்கும் அளவிற்கு நிலைமை படுமோசமா கியுள்ளது. கட்டுப்படுத்தியே ஆகவேண்டும் என அரசியல் கட்சிகள் சொல்வதைப் பயன்படுத்திக் கொண்டு, மது விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர இதுவே சந்தர்ப்பம்.  இதைச் செய்தால் கூடவே கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதும் அதிகரிக்கும்.

இந்த விஷச் சாராய ஊறல்களைச் செய்வோர் உள்ளூர் தாதாவாகவோ அல்லது அரசியல் ஈடுபாடு உள்ளோர்களாகவோ இருப்பர்.  உறுதியான அரசியல் நிலைபாடும் நேர்மையான காவல்துறையும் இருந்தால் மதுக்கட்டுப்பாடும்-விலக்கும் சாத்தியமானதே!

பக்கத்து மாநிலம் கேரளா அரசின் நிலைபாடு, யதார்த்தமானது. அங்கே பார்கள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளன.  ஊருக்கு ஒரு சில கடைகள் மட்டுமே. அவர்களது அனுபவம் நமக்கு உதவக்கூடும். கூடவே மதுவிற்கு எதிரான வலுவான பிரச்சாரம்.


இது சரியாண தருணம்.. செய்வார்களா?