Friday, February 28, 2014

அந்தமானைப் பாருங்கள் அழகு (1)

நான் ஒரு ஊர் சுற்றி!, தேசாந்திரம் செல்வதில் விருப்பமும், நாட்டமும் சுரந்து கொண்டே யிருக்கும். பர்ஸும்-நேரமும் இசைந்து வந்தால் எந்த நேரமும் சுற்றுலா நேரம்தான். இவ் விஷயத்தில் மனைவிக்கும் எனக்கும் ஒத்த ரசனையிருந்ததால் பல இடங்களைப் பார்த்திருக்கிறோம். இனி பார்த்தேயாக வேண்டும் என்ற லிஸ்டில் முதலில் இருந்தது ‘அந்தமான் தீவுகள்’.  

காலன், மனைவிக்கு வேறு பயணத்திட்டம் வைத்திருப்பதை அறியாத நாங்கள், அந்தமான் பயனத்தை ஒத்திவைத்திருந்தோம். இரண்டு வருடங்களாக, மனைவிக்கு பணிவிடை செய்வதே எனது முதல் இலக்காக இருந்ததால், அந்தமான், மாயமானாகவே இருந்தது. மனைவி மறைந்துவிட்டாலும், அவர் விரும்பிய தலங்களை நாமே ஏன் சென்று பார்க்கக் கூடாது? எனது கண்களின் மூலம் அவர் விரும்பிய இடங்களைக்
கண்டுறக் கூடாதா எனத் தோன்றவே, குடும்ப நண்பர் குடும்பத்துடன் பிப்ரவரி 22, 2014 அன்று, காலை ஐந்து மணிக்கு, ஏர் இந்தியா விமானத்தில் போர்ட்பிளேர் பயணம்.

அந்தமான் –நிக்கோபர் தீவுகள் என்பது 572 தீவுக்கூட்டங்கள்/தீவுத்திடல் களை உள்ளடக்கியது. என்பது விழுக்காடுக்கு மேற்பட்ட பரப்பளவு காடுகளே! மக்கள் நிரந்தரமாகக் குடியிருக்கும் தீவுகள் 38 இருக்கும். மற்றவை மனித நடமாட்டம் இல்லாதவையே! இத்தீவுகள் நீளவாக்கில் 800 கி.மீ-க்கு மேல் விரவிக்கிடக்கின்றன.

பெரும்பகுதி பரப்பு, மனிதனால் பாழாக்கப்படாமல், மாசு படுத்தப்படாமல் இன்னமும் ‘கன்னியாகவே’ நீடிக்கும் ‘பேரழகி’ அந்தமான். திகட்ட-திகட்ட பார்க்கலாம்! அனுபவிக்கலாம். சொக்க வைக்கும் ரம்மியம். எங்கும் அழகு! அழகு! அழகு! அமைதி! அமைதி! அமைதி!

ஹனுமன் என்பது ஹண்டுமன் ஆகி பின் அந்தமானாக மருவியது என்றும், அந்தமான் என்றால் அதிர்ஷ்டம் என்றும் பல்வேறுவிதமாக பெயர்க்காரணம் சொல்கிறார்கள். எதுவானால் என்ன? A Rose is a Rose..is a Rose... is a Rose.....

இங்கு வருடம் முழுவதுமே சுற்றுலா சீசன்தான். வறுத்தெடுக்கும் வெயிலோ, ஸ்வெட்டர் தேட வைக்கும் குளிரோ எப்போதும் இல்லை! 28 டிகிரி முதல் 35 டிகிரி வரைக்கும்தான் மெர்குரி செல்லும். சில சமயம் பருவ காலங்களிலும், புயல் காலங்களிலும் கடல் சீற்றத்துடன் காணப்படும். இடைஞ்சல் என்றல் இது மட்டுமே!

தமிழ் மக்கள் கனிசமாக இருக்கிறார்கள். நிறைய பேருக்கு தமிழ் புரிகிறது. (கழகங்களின் புன்னியத்தில் ஹிந்தி தெரியாதது பெரும் சிரமமாய் இருக்கிறது. ஒவ்வொருமுறை சென்ட்ரலைத் தாண்டும் பொழுதும் இதை உணருகிறேன்.) பல கடைகள் தமிழரால் நடத்தப்படுகின்றன. தமிழை மட்டுமே வைத்துக் கொண்டு ஊர் சுற்றலாம். ‘கட்டபொம்மு’ என்று ஒரு
தமிழரால்  நடத்தப்படும் சிறிய உணவகம் பிரசித்தம். சுவையான உணவு சகாய விலையில் டைக்கிறது.  நம் ஊர் சுற்றுலாத்த லங்கள் போலவே 
லாட்ஜ்கள் இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை வாடகை சொல்கிறார்கள். கொஞ்சம் அலைந்தால் ரூ.ஆயிரத்திற்கும் கிடைக்கும்.

முக்கியமான இடங்களை தவறாமல் பார்க்க வேண்டுமெனில் ஒருவாரமாவது தங்கவேண்டும்.  இயலவில்லை எனில் நான்கு நாட்களாவது! ஒரு நல்ல ‘காமிரா’, சுமாரான தொலை நோக்கி இருந்தால்  நல்லது. பின்னாளில் அசைபோட உதவும்.

தோராயமாக அந்தமானின் வரலாறு, சுற்றுலா தலங்களைப் பற்றிய தகவல்கள் ஆகியவற்றோடு சென்றால் வெகுவாக ரசிக்கலாம்.
நான் சென்றது நான்கு நாட்கள். பார்த்த-ரசித்த இடங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள அவா! இப்பயணக்கட்டுரையினை, பகுதி பகுதிகளாக எழுதிட உத்தேசம். இது முதல்.


இனி நான் பார்த்த இடங்கள் ஒவ்வொன்றாக உங்கள் பார்வைக்கு!

சத்தம் மரம் அறுக்கும் ஆலை!



இது ஒரு குட்டித்தீவில் அமைந்துள்ளது. ஒரு பாலத்தினால் ‘போர்ட் ப்ளெயருன்’ இனைத்திருக்கிறார்கள். இந்த ஆலை இது ஆசியாவிலேயே மிகவும் தொன்மையான ஆலை. மிகப்பெரிய மரங்களை (குறுக்களவு நான்கு அடிமுதல் இருக்கின்றன), கடல் நீரில் மிதக்க வைத்து - ஊரவைத்து பின் ரகவாரியாக, சைஸ் வாரியாக, டிசைன் வாரியாக-சட்டங்களாக, பலகைகளாக அறுக்கிறார்கள். இப்பணிக்கென ஏகப்பட்ட
இயந்திரங்களை நிறுவியிருக்கின்றனர். பல இயந்திரங்கள் ‘MADE IN U.S.A – NEWYORK’ என்று பொறிக்கப் பட்டுள்ளன.  யாவும் 1930 களில் அமைக்கப் பட்டுள்ளன. பெரும்பகுதியான மரங்கள் ‘படாக்’ வகை மரங்கள். படாக் மரமே அரசு மரமாக அறிவிக்கப் பட்டுள்ளது . நமது ஊர் மரவாடிகளில் இது மலேசியாவிலிருந்து இறக்குசெய்யப் பட்ட ‘படாக்’ மரங்கள் என்று சொல்லி நமது தலையில் கட்டும் செந்நிற மரங்களே இவை. மிக உயரமாக, பெரிய சுற்றளவோடு வளர்ந்த மரங்கள் வீழ்த்தப்பட்டு, சில நிமிடங்களில் பலகைகளாகவும்-சட்டங்களாகவும் துண்டாடப்பட்டு உருமாற்றம் ஆகிவிடுகின்றன. மரத்துண்டுகள் யாவும் மிகப்பெரிய குடோனில் சேமிக்கப்பட்டு, ‘சத்தம் ஜெட்டி’ மூலம் கப்பல்களில் ஏற்றப்பட்டு மெயின் லேண்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

மகா கம்பீரமாக ‘அரசன்’ போல வீற்றிருக்கும் மரங்கள் யாவும், கண நேரத்தில் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன - ‘நிதமும்’!

மரங்கள் அறுபடுவது ‘இயற்கை ஆர்வலர்களுக்கு’ பார்ப்பதற்கு சிரமமாயிருக்கும். என்ன செய்வது? மனிதனின் ஓயாத தேவைகளை நிறைவேற்றியாக வேண்டுமே?

அங்கேயே ஒரு மியூஸியம் இருக்கிறது. புராதன, பூர்வீக மரவேலைப்பாடுகளை வைத்திருக்கிறார்கள். பிரமாதம் என்று வகைப்படுத்த முடியாவிட்டாலும் ரசிக்கலாம் கேட்டகிரி.

இரண்டாம் உலகப் போரின் பொழுது ‘ஜப்பான்’ போட்ட குண்டு ஒன்றினால் ஏற்பட்ட ஒரு பெரிய பள்ளத்தை பராமரிக்கிறார்கள். ஒரு சிறிய நடைத் தொங்கு பாலம் மூலம் இதைக் கடந்து செல்ல வேண்டும்.

இதன் அடுத்த பகுதி இரண்டு நாட்கள் கழித்து.


கொசுறு:

போர்ட்பிளேயரில் ரூம் வாடகை ரூ. நான்காயிரம் என பயமுறுத்தவே, ஒரு ஐ.க்யூ ஒன்றில் தஞ்சமடைய முடிவெடுத்தோம். ஏ.ஸி, ஃபேன், Attached Bath room, டேபிள், சேர், நல்ல படுக்கை வசதி என ஆசை காட்டினார்கள்.

ஆஹா.. என்னே நமது அதிர்ஷ்டம் என வியந்து, ரூமினுள் நுழைந்து, உட்பக்கம் தாள் போட்டு,ஏ.ஸியினை ஆன் செய்தேன். அது இயங்குவதற்கான் அறிகுறி ஏதும் தென்படாததால், கிட்டே சென்று ஆராய்ந்தால்,ஏ.ஸியினுள் ஒரு நான்கு கிலோ குப்பை. ஒரு நாற்பது எட்டுக்கால் பூச்சி! 

அது போனால் போகட்டும். பிறக்கும் பொழுதே ஏ.ஸியுடனா பிறந்தோம் என சமாதானப்படுத்திக் கொண்டு, ஃபேனைப் போட்டால் அது ரிவர்சில் சுழல ஆரம்பித்தது. மீண்டும் ஃபேனை ஆன் செய்து, ஆஃப் செய்து.... ம்ம்ம்ம...ஒன்றும் வேலைக்காக வில்லை. அது விடாப்பிடியாக ஆன்டி கிளாக்வைஸில் தான் சுழலுகிறது. ஒரு சொட்டு, ஒரு துளி காற்று வரவில்லை.

சரி போகட்டும்... என, இயற்கைக் காற்றை சுவாசிக்க விழைந்து, ஜன்னல் கதவை திறக்க விழை ந்தேன். ஜன்னல் கதவுகள், முதல் நாள் பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைபோல சண்டி செய்தது. பீமன் ஒரு அசுரனுடன் யுத்தம் செய்தானாமே, அது போல ஜன்னல் கதவுடன் வெகு நேரம் போராடியபின் ஒரு அரை அடி திறந்து கொண்டது. அவ்வளவுதான். வெளியே காத்துக் கொண்டிருந்த ஒரு லட்சம் கொசுக்கள் ஆக்ரோஷத்துடன் உள் நுழைந்தன. பதறிப்போய், மீண்டும் ஒரு ‘பீமப் போராட்டத்தால்’ ஜன்னல்களை மூடினேன். இந்த பிரயத்தனத்தில் உடல் முழுவதும், வியார்வையால் தொப்பலாய்  நனைந்து விட்டது. சரி குளிக்கலாம் என பாத்ரூமிற்குள் நுழைந்தால் லைட் எரியவில்லை. என்ன எரியவில்லை? பல்பே இல்லை!  தட்டுத்தடுமாறி பைப்பினை தேடிப் பிடித்துத் திறந்தேன். அவ்வளவுதான், நமது மேடைப் பேச்சாளர்கள் போல என்ன செய்தாலும், எப்படி திருகினாலும் நிற்க மாட்டேன் என்கிறது. தண்ணீர் வந்து கொண்டே இருந்தால் என்ன செய்வது? வடிகாலும் சரியில்லாததால், பாத் ரூம் நிரம்பி அறைக்குள் வந்து விடும் போல இருந்தது. விதியை நொந்து கொண்டு வெறும் கையால் வடிகாலை சுத்தம் செய்தபின் வெள்ளம் வடிந்தது.

எல்லா லாட்ஜ்களைப் போல இங்கும் குளிப்பதற்கும், மற்றொரு காரியத்திற்கும் ஒரே பிளாஸ்டிக் மக்! இதை மாற்ற வேண்டும் என எவருக்கும் தோன்றவே தோன்றாதா? ஒரு வழியாக படுக்கையில் படுத்ததுதான் தாமதம். எகிறிக் குதித்து, வெருண்டோடி வெளியில் வந்து விழுந்தேன். பெட்டில் எவரோ வாந்தி எடுத்த நாற்றம்!

என்ன தவம் செய்தனை?

             (இனி அடுத்த பகுதியில் சந்திப்போம்... கொசுறு உட்பட..)





Thursday, February 20, 2014

ராங் நெம்பர் – ரைட் நெம்பர்

ராங் நெம்பர் – ரைட் நெம்பர்



சென்னையின் புறநகர்ப் பகுதி ஒன்று. பங்களாக்களும், வில்லாக்களும் நிறைந்த சமுதாயத்தின் உயர்தட்டு மக்கள் வசிக்கும் ஏரியா. 

இரவு பதினொரு மணிக்கு மேல் இருக்கும். தெருவில் எவரும் இல்லை. தெருவோர மின்கம்பங்களின் நியான் விளக்குகள், அனாவசியத்திற்கு ‘வாட்’ களை விழுங்கிக் கொண்டு ஒளித் தூறல் செய்து கொண்டிருந்தன. நாய்கள் கூட உறங்கி விட்டனவா என்ன? அச்ச மூட்டும் நிசப்தம். அந்தத் தெருவில், எல்லா வீடுகளையும் போல,  கிருஷண குமாரின் 33-ஆம் எண் வீடும் இருளில் பதுங்கிக் கொண்டிருந்தது. அறைகளின் விளக்குகள் அணைக்கப் பட்டிருந்தன. அந்த வீட்டின் படுக்கையறைகள் அனைத்தும் மாடியில்தான் இருக்கிறது.

என்ன, மெல்ல, நாம் மேலே போய்ப் பார்ப்போமா?

அடுத்தவர் படுக்கையறையை எட்டிப்பார்ப்பது அநாகரீகம்தான். ஆனால் அங்குதானே நமக்கு ஒரு கதை கிடைக்கப் போகிறது? பரவாயில்லை வாருங்கள்.
சினிமாவில் பார்த்திருப்பீர்களே, வீடிற்குள்ளே, ஹாலின் நடுவே ஒரு படிக்கட்டு, பாம்பு போல வளைந்து மேலே சென்று, இரண்டாகப் பிரிந்து இடப்பக்கமாக ஒன்றும், வலப்பக்கமாக  ஒன்றும் செல்லுமே,  அதே போலத்தான் இதுவும் இருக்கிறது. மாடியில், இடது பக்கம், கிருஷ்ணகுமாரின் புத்திரி ஷைலஜாவின் ரூம். கல்யாணமாகதவளின் தனியறையை எட்டிப் பார்ப்பது மிகவும் தப்பு. எனவே நாம் வலது பக்கமாச் செல்வோம். ஷ்...  கொஞ்சம் சப்தம் போடாமல் வருகிறீகளா? ஓரக்கண்ணால் ஷைலஜா அறையை பார்க்கக் கூடாது. அவள் தரிசனம் எல்லாம் கிடைகாது. அவள் தூங்கி அரைமணி நேரமாகி விட்டது.

வலதுபக்கம் தான் கிருஷ்ணகுமாரின் அறை. ஆஹா நல்ல விசாலமாய் இருக்கிறதே. நமது ஹால் கூட இத்தனை பெரிசு இருக்காது என்கிறீகளா? இப்ப நாம வந்தது சர்வேயர் வேலைக்கல்ல. பேசாமல் வாருங்கள். சுவரில் பிகாசோக்களும், ரவி வர்மாக்களும். மேலும் பல பழங்கால ஓவியங்கள். 

ஜன்னல்கள் ரசனையான திரைச்சீலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. ஓரத்தில் ஒரு பூஞ்சாடி.  நவீனமான டிசைனில் தேக்கு மரக் கட்டில்கள் போடப்பட்டிருகின்றன. ஓரத்தில், ஒரு ஸ்டடி டேபிள். ஆனால், விந்தையாக, இரண்டு கட்டில்களும் தனித்தனியாகப்
போடப்பட்டிருக்கின்றன. கட்டிலில், ஸ்பிரிங் மெத்தைகள். வேகமாக உட்கார்ந்தால் பத்து நிமிஷம் மேலும் கீழும் போய்வந்து கொண்டிருக்கலாம். போர்வைகளிலும், படுக்கை விரிப்புகளிலும் செல்வம் தாண்டவமாடுகிறது. இரண்டு கட்டில்களுக்கும் நடுவே ஒரு சைட் டேபிள். அதில் சில புத்தகங்கள் ஒழுங்கில்லாமல் இறைந்து கிடக்கின்றன. நடுவே ஒரு Favreleuoba  டைம்பீஸ். ஏ.ஸியின் சன்னமான  ரீங்காரம். மெல்லிய நீல நிற ஒளி, எங்கிருந்தோ கசிந்து கொண்டிருக்கிறது. அது எங்கிருந்து வருகிறது என்பதை அப்புறம் பார்க்கலாம்.

வலதுபுறத்துக் கட்டிலில், கணவன் கிருஷ்ணகுமாருக்கு முதுகைக் காட்டிக் கொண்டு ஒருக்களித்து படுத்துக் கொண்டிருக்கிறார், அவரது மனைவி கௌரி. கழுத்துவரை போர்த்திக்கொண்டிருக்கிறார். கொஞ்சம் நெருங்கிப் பார்க்கலாமா? அட..... இளமையில் இவள் மிக அழகாக, கவர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். அழகின் மிச்ச தேசல்கள் இன்னமும் தென்படுகின்றன. லிப்ஸ்டிக்கை கலைக்காமல் தூங்கிவிட்டாள் போலிருக்கிறது. எச்சில் பட்டு கலைந்துகிடக்கிறது. கண் மை பளிச்சென்று முக அழகை மெருகேற்றிக் கொண்டிருக்கிறது. சற்றே வெளிப்பட்டுக் கொண்டிருந்த அவகளது கைவிரல்களும், கால்களும் அவளது பளீர் வெண்மையை ஃப்ளாஷ் போட்டது. நைட்கவுன் அனிந்திருக்கிறார். ஏனோ, தூக்கத்தில் கூட முகத்தை “கடுகடு” வென வைத்துக் கொண்டிருக்கிறார். மிகச் சன்னமான குறட்டை. சீரான மூச்சிற்கேற்போல நெஞ்சு ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. பார்த்தவுடன்  நாற்பத்தைந்து வயதுதான் எனத் தயங்காமல் சொல்லலாம். அவளும் கூட அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாள். நிஜ வயது 55.

இப்படி வாருங்கள். இந்த கட்டிலில் கிருஷ்ணகுமார் நெஞ்சு வரை போர்த்திக் கொண்டு தூங்குகிறார். நெஞ்சில் Candace_Bushnell –ன் Sex and City புத்தகம், பிரிக்கப்பட்ட நிலையில், நமக்கு முதுகைக் காட்டிக்கொண்டு கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்தது. கம்பீரமான, சதுர வடிவ முகம். டை அடித்து ஒருவாரம் ஆகியிருக்க வேண்டும். காதோரங்களில் முடிகள் வெண்மை பாடின. மீசையில்லாத மழு மழு முகம். சற்றெ வெளிப்பட்ட புஜங்களில், அதன் தசைகளின் வன்மையில், அவரது அத்லெட் உடம்பு தென்பட்டது. சற்று வலுவாக குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்.

டைப்பீஸ் இப்பொழுது 11.30 என்றது.

ரூமில், யாவும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்க, நடுவில் வீற்றிருந்த டெலிஃபோன், சட்டென உயிர் வெற்று ரிங்கியது.

கௌரி லேசாகக் கண்களைத்திறந்தாள். திரும்பி படுத்து டெலிபோனை எடுக்க சோம்பேரித்தனமாக இருந்தது போலும். ஒரக்கண்ணால்மாக பார்த்தாள். கிருஷ்ணகுமார் எடுக்க வேண்டும் என எதிர்பார்கிறாள். . அவர் எழுவதாகத் தெரியவில்லை. டெலிஃபோனும் ஓய்வதாகத் தெரியவில்லை.

இப்பொழுது அவர் கண்களைத்திறக்காமலேயே, தடவித் தடவி, டெலிஃபோனை எடுத்தார். ஸ்லோமோஷனில் காதிற்குச் சென்றார்.

‘ஹலோ....’
‘’
“ஹலோ.....”
..
இவரும் மௌனம்..
..
..
டெலிஃபோனை வைத்துவிட்டு, கைகளை போர்வைக்குள்  நுழைத்துக் கொண்டார்.
மீண்டும் குறட்டை.

‘டெலிஃபோனில் யார்..?” கௌரி.

‘’  .. ‘

“உங்களைத்தான் கேட்கிறேன்.. டெலிஃபோனில் யார்?”

“யாருமில்லை”

"யாருமில்லைன்னா.. எதுக்கு ஃபோன்?

‘அட... ஃபோனில் எந்த ஸ்பீச்சும் இல்லை... வைச்சுட்டேன்.”

“அதான் கேக்கறேன்..? அது யார் இந்த நேரத்தில்..?”

“இதென்ன தொல்லை? அவன் யாரோ தெயரியாது?”

“அவன் கூட பேசினீங்களா?”

“எவன் கூட?”

“அதான் ஃபோனில்..!”

“இல்லையே..”

“பின் எப்படி ‘அவன்’ என்று சொன்னீர்கள்?”

“ஐயோ .. அது சும்மா பொதுவா சொல்றது.. அவன் என்றால் அவன் இல்லை... யாரோ!  ஒரு ராங் நெம்பர்..!”

“இந்த ராங்காலுக்கு நம்ம வீட்டு நெம்பர் தானா கிடச்சது?”

“ஐயையோ இது என்ன ரோதனை? ராங் நெம்பருக்கென்று தனி லிஸ்ட் எல்லாம் கிடையாது. எதோ நெம்பருக்கு பதிலாக, நமது நெம்பரை தப்பா கூப்பிட்டுடான்.. சாரி.. யாரோ கூப்பிட்டுட்டாங்க.. வைச்சுட்டாங்க.. ஆளை விடு... தொல்லை பண்ணாதே..எனக்குத் துக்கம் வருது !”

அவன் திரும்பிப் படுத்துக் கொள்கிறான்.

அவள் “இது ஒரு சிக்னலா..?”

“என்ன சிக்னல்..?”

“ஏதோ ஜாடை... உங்களுக்கு அழைப்பு .. இல்லாவிடில் நினைவூட்டல்...”

“இந்த நேரத்தில் என்ன எழவு சிக்னல்? யாருக்கு சிக்னல்..? ஒரு ராங் நெம்பர் .. இதுக்குப் போய், இந்த நேரத்தல்  ஏன் களேபரம் பண்ணுகிறாய்..?”

“நீங்கள் திரும்ப திரும்ப யாரோ..யாரோ என்று சொல்லும் பொழுது, இப்பொழுது கூப்பிட்டது தேவிகா தான்னு எனக்கு தோனுது!”

“தேவிகாவா.. யாரது?”

“உங்க கேர்ல் ஃப்ரண்ட்..”

“அட சீ... சைத்தானே! உங்கூட பெருந்தொல்லையாப் போச்சு...ராத்திரி சண்டைக்கு ஆரம்பிச்சுட்டியா? எனக்கு தேவிகாவையும் தெரியாது... மோனிகாவையும் தெரியாது..”

“அதை நான்  நம்பனுமா?”

“சனியனே.. நல்ல தூக்கத்தில் எழுப்பிவிட்டு, ஏன் இப்படி ஆட்டம் போடுகிறாய்.. நாளைக்கு போர்டு மீட்டிங்.. பாம்பே போகனும்... இந்த மாதிரி உயிர வாங்கரியே?”

எழுந்து போய், லைட்டைப் போட்டுவிட்டு, ஏ.ஸியை ஆஃப் செய்துவிட்டு சன்னல் கதவைத் திறந்து வைத்துவிட்டு இயற்கைக் காற்றை வாங்கி கொண்டார்..

“இத பார் கௌரி... இன்னிக்கு  நீ, ‘டிப்ரஷனுக்கு’ மாத்திரை போட்டுக் கொண்டாயா? இல்லியா? ஏன் இப்படி ரெஸ்ட்லெஸ் ஆகிறாய்..”

“எனக்கு என்னவோ, நீங்க இப்ப லைட்டைப் போட்டது, ஜன்னல் கதவைத் திறந்து வைத்தது எல்லாமே, ஒரு சிக்னலாக, ஏற்பாடாக இருக்குமோன்னு சந்தேகமாயிருக்கு..”

“எதற்கு சிக்னல்..?”

“தேவிகாவுக்குத்தான்.. நான் கிளம்பிவர்ரேன் என்று சமிக்ஞை:

“வர்ர் ஆத்திரதிற்கு உன்னை ஓங்கி செவிட்டில் அறையலாம் போல இருக்கு.  டிப்ரஷன் பேஷண்டை அடிப்பது கூடாது.. மோர் ஓவர் ஐ லைக் யூ.. ... த பார் கௌரி.. ஐ லவ் யூ.. ஐ லவ் யு மோர் தேன் எனி திங் இன் திஸ்  வோர்ல்ட். மனசை அலைபாய விடாதே.. கொஞ்சம் அமைதியா தூங்கு... உனக்காக, நீ சரியாக வேண்டும் என்பதற்காகத்தானே இவ்வளவு பாடு படுகிறேன். இன்னும் ஒரு ஆறு மாசம். மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடு. எல்லாம் சரியாயிடும். இப்படி வீணாக கற்பனையை வளர்த்துக் கொண்டே போனால், உன்னோட பிரச்சினை முற்றுமே தவிர, குணமாகாது.  பேசாம சமத்தா தூங்கு... சமத்தா தூங்கு...” 

அவளுக்கு நன்றாக போர்த்திவிட்டு, நெற்றியில் முத்தமிட்டு, ‘ஐ ல்வ் யு ஹணி...’ சொல்லிவிட்டு, தனது கட்டிலுக்கு சென்று படுத்துக் கொண்டார்.

“ஐ சம் சாரி.. வெரி சாரி.. எனக்கு என்னமோ எதுக்கெடுத்தாலும் சந்தேகம் வருது” என்றாள்.

“அதனால் என்ன கௌரி.. பரவாயில்லை... இதுக்கெல்லாம் சாரி சொல்லாதே! நீ வேணுமின்னேவா செய்யறே? ஏதோ டிப்ரஷன்.. அப்படியெல்லாம் தோணுது! அடுத்த தடவை இப்படி தோனும்போது, ஒரு செகண்ட், ஒரே ஒரு செகண்ட் யோசனை செய்.. இது சரியா.. தப்பா.. இப்படி செல்லலாமா என. பின் உனக்கே தெரியும், உன் கற்பனைகளெல்லாம் எவ்வளவு அபத்தம் என”

“அகய்ன் சாரிங்க.. குட்   நைட்..”

மீண்டும் அந்த அறையில் மௌனம் ஆக்கிரமித்தது.

பத்து நிமிடம் சென்றிருக்கும்.  கௌரியிடமிருந்து சன்னமான குறட்டை ஆரம்பித்தது.. அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணகுமார், கௌரியிடமிருந்து குறட்டை சப்தம் வந்ததும், சப்தமிடாமல் பூனை போல எழுந்து, சட சடவென டிரஸ் மாற்றிக் கொண்டார். தலைவாரிக் கொண்டார். பிரத்யேக பாடிஸ்ப்ரேயை உடம்போடு அழுத்திப் போட்டுக் கொண்டார். ஷூக்களை கையில் எடுத்துக் கொண்டார். மெல்ல, இருட்டில், அடியடிமேல் அடியெடுத்து கதவினருகே சென்று, தாழை விலக்கினார்.

சட்டென்று, அறை பளீரென ஒளி கொண்டது. கௌரி ஏதோ ஒன்றை கையில் மறைத்து வைத்து கொண்டு, உட்கார்ந்துகொண்டிருந்தாள்.

“உங்க நடிப்பும், வேஷமும் எனக்குத் தெரியாதா? திருட்டுப் பயலே.. இத்தனை நாள் பொறுத்தேன்.. இனி சகிக்கமுடியாது. அந்த தேவிகா வீட்டுக்கு போகும்பொழுது இதையும் வாங்கிட்டுப்போ..”  கையில் மறைத்து வைத்திருந்த பொருள் வெளிப்பட்டது...

அடுத்த நாள் காலை செய்தித்தாளில் “பிரபல தொழிலதிபர் கிருஷ்ண குமார் துப்பாக்கி குண்டுபட்டு மரணம்.. கொலையா? தற்கொலையா” போலீஸ் விசாரணை!!
                                        -0-


(ஒரு ஆங்கில காமெடியின் தாக்கம் இது)

Saturday, February 8, 2014

"கொஞ்சம் நடங்கண்ணே"

மனைவி மறைந்தபின், ஆரோக்கியம் குறித்த அச்சம் ஏற்பட்டுவிட்டது. இந்த விழிப்புணர்வு ஒருபக்கம் என்றாலும், ஏதேனும் உடல் நிலை கெட்டுவிட்டால், உதவிகோர, முறையிட எவருமில்லை என்ற கவலை பிரதானமாயிருந்தது. உடல்  நலன் காக்க சிறந்த வழி விளையாட்டுதான் என்பதில் சந்தேகமில்லை. 

எந்தவகையான விளையாட்டை தேர்ந்தெடுப்பது?

கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில், கிழவர்களை எவரும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். மேலும் இவ்விளையாட்டுகள் 'போட்டி' என்ற மோஸ்தரில் ஆடப்படுகின்றன. வாழ் நாள் முழுவது போட்டியின் அழுத்தம் ஏதுமின்றி விளையாட்டாய் விளையாட ஏதுவான பயிற்சி எது? 

யுள்  முழுவதும் செய்யக்கூடிய எளிதான ஆபத்தில்லா ஆரோக்கிய பயிற்சி நடைதான். இறுதிவரை நடப்பதற்கான வகையில் நமது  உடல் உறுப்புகள், இயக்கங்கள் அமைந்துள்ளன. எனவே  நடப்பதற்கு தடையே இல்லை. இயன்றவரை நடக்கலாம். 

எனவே, நடுவில் இரண்டு வருடகாலமாக விட்டுப்போயிருந்த "நடைப் பயிற்சி" யினை தொடர விழைந்தேன்.  மேலும் மாலையில் ஒரு மணி நேரம், நேரத்தைக் கொல்லுவதற்கு இது நல்ல வழியாகத் தெரிந்தது. எனவே இந்தவயதில், இந்த அளவு நடைப்பயிற்சி என்ற உடற்பயிற்சியே போதுமானது, சாத்தியமானது என்பதால், இதனைத் தொடர உத்தேசம்.

நல்லவேளை! கடலூரில் "ககன்சிங் பேடி" (கலெக்டர்) யின் புண்ணியத்தில், விளையாட்டு மைதானத்தினுள்ளே ஒரு நல்ல "நடை பாதை"  இருக்கிறது. இல்லாவிடில், தெரு நாய்களின் உறுமல்களுக்கிடையேயும், டூவீலர்களின் பயமுறுத்தல்களுக்கிடையேயும், சந்திரமண்டலத்தின் நிலப்பரப்புபோல இருக்கும் கடலூர் நகர சாலைளில்தான் பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருந்திருக்கும்.

ஒரு சுபயோக சுபதினத்தில்  "நடை" பழக துவங்கினேன்.

நடைப்பயிற்சியின் போது, கண்களை மேயவிட்டதில் பல சுவாரஸ்மான மனிதர்களை கவணிக்க நேர்ந்தது.

சிலர், யாரோ தங்களைத் துரத்திவருவதுபோல 'தபதப' என நடைப்பர். இவர்கள் புதிதாக பயிற்சி மேற்கொள்ளும்  'ஆர்வக்கோளாறு' மிக்கவர்கள். இப்பேர்வழிகளுக்கு யாரையாவது முந்திச்சென்றாக வேண்டும். இன்னும் சிலர், கவச குண்டலம் போல புத்தம் புதிய "வாக்கிங் ஷூ" மற்றும் 'டிராக் ஷூட்' சகிதம் வருவர். இவர்களின் ஆர்வம் சில நாட்கள் அல்லது வாரங்கள் வரைக்குமே என்பது உத்திரவாதம்.

மாலை நேர வாக்கிங் வரும் சில பெரியவர்கள் கோஷ்டி சேர்ந்து கொள்வர். மகன், மகள், மருமகள்(ன்) பற்றி புலம்பித் தீர்க்க இது சரியான நேரமாகக் கொள்கின்றனர். ஒருவர் புலம்பித் தீர்த்ததும் சக புலம்பர் ஒருவர் தயாராக ஒரு கதை வைத்திருப்பார்.

சில மல்டிடாஸ்க் மானேஜர்கள் இருக்கிறார்கள். நடந்து கொண்டிருக்கும் பொழுதே "ஸ்பாண்டிலைடிஸ்க்கான" பயிற்சியையும் சேர்ந்து செய்துகொண்டே செல்வர். இன்னும் கொஞ்சம் மேலேபோய் மூச்சும்பயிற்சியையும் சேர்த்து செய்பவர்களும் உண்டு.

சில நடுவயதுக்காரர்கள், கொஞ்சம் பார்க்கிறமாதிரி
பெண்களைப் பார்த்துவிட்டதும், வேகம் குறைந்து அவர்கள் பின்னாலேயே கண்களால் வாக்கிங் செல்வர்.

மகளிர் கோஷ்டியாக சென்றால் அவர்களுக்கு பின்னால் வருபவர்களைப் பற்றி கவலையேதும் இல்லை. உலகத்தை மறந்து 'ஹை டெசிபலில்' பேசிக்கொண்டு (வம்படித்துக் கொண்டு என்றால் சரியான பதமாக இருக்குமோ?), முழு டிராக்கிற்கும் சொந்தம் கொண்டாடி, எவருக்கும் வழிவிட மாட்டார்கள். பின்னால் வருபவர்கள் உருண்டு பிரண்டு, சைடில் விழுந்து வாரி, ஓவர்டேக் செய்தால்தான் உண்டு.

தனியாக நடைபழகும் சில பெண்மணிகள் பக்கத்தில் யாரையாவது பார்த்துவிட்டால், தங்களை எதோ செய்யப்போகிறார்களோ என்ற அச்ச உணர்வோடு விழுந்தடித்துக் கொண்டு ஓடுவர்.


சில கனபாடிகள் சரீரத்தின்  முன்/பின்  துவாரங்களின்  வழியாக 'காற்றை' சப்தமாக 
வெளியேற்றிக் கொண்டு, அது பற்றிய பிரக்ஞை மற்றும்  சங்கோஜம் ஏதுமின்றி சென்றவண்ணம் இருப்பர். நாம் கொஞ்சம் மூக்கினைப் பொத்திக் கொண்டு சென்றாக வேண்டும். இவர்கள் கடைசி ரவுண்டில் 'வேர்க்கடலை சுண்டல்' இரண்டு சுருள் வாங்கிவிடுவர். சுண்டல்காரர்கள் 'சைக்காலஜி' படித்தவர்கள் போலும்; எவர் வாங்குவர்-எவ்வளவு வாங்குவர் என்பதை சரியாக கணித்துவிடுகின்றனர்.

சில விபரீதகரணிகள் இருக்கின்றனர். இவர்களுக்கு எதிர்பக்கத்தில் வாக்கிங் வந்தால்தான் ஜென்ம சாபல்யம். எல்லோரும் பிரதட்சணம் என்றால் இவர்களுக்கு 'அப்பிரதட்சணம்' . 

நெடுநாளைய நடையாளிகளை பார்த்தவுடனே தெரிந்துவிடும். ஏதேனும் ஒரு பக்கமாக, சீராண வேகத்துடன், நடையில்மட்டும் கவணத்தில் கொண்டு செல்வர். தேவையற்ற பேச்சு இராது. 

ஆனாலும் நடைப்பயிற்சி கொஞ்சம் மோசம்தான்.  ஏனெனில் தினமும் நாலு கிலோமீட்டர் நடைமேற்கொண்டதால் பாதங்களில் காயமேற்பட்டுவிட்டதாக பாண்டேஜ் போட்டு 'பிலிம் காட்டலாம்' என்றால், ஏமாந்து போக வேண்டும்; கால்கள் வலுவாகித்தான் வருகின்றன.

அலுப்பும் களைப்பும் ஏற்பட்டுவிட்டதாக பாவித்துக் கொண்டு, மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கொள்ளலாம் என்றால் அதற்கும் வழியில்லை; நன்றாக தெம்பாக, உற்சாகமாகத்தான் இருக்கிறது. 

எனக்கு வயிறு சரியில்லை; பசிக்கவில்லை என எதாவது சொல்லி அனுதாபம் பெறலாம் என்றால் அதுவும் இயலவில்லை. நன்றாக பசிக்கிறது. ஜீரணம் ஆகிவிடுகிறது.

வீட்டில் ஏதேனும் பெரியவேலை வரும் பொழுது, எனக்கு வயதாகிவிட்டது, முடியவில்லை என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லி தப்பித்துக் கொள்ள இயலவில்லை; உடல் உற்சாகமும், தெம்பும், நல்ல இரத்த ஓட்டமும் முகத்திலேயே தெரிந்துவிடுகிறது. 

இரவில் தூக்கம் வரவில்லை என புலம்பலாம் என்றால் அந்த வழியும் அடைபட்டுப் போகிறது.

எனக்கு எதிலும் பிரியமில்லை.. போரடிக்கிறது என 'டபாய்க்கலாம்' என்றால்,  உடலில் சுறுசுறுப்பும்-சந்தோஷமும் தானாகவே வருகிறது!

என்ன, நான் சொல்வது சரிதானே? நடைப்பயிற்சி கொஞ்சம் மோசம்தானே?

Saturday, February 1, 2014

கர்ம விணை

                                                      கர்ம விணை



கர்ம விணை என்பதன் பொருள், பெரும் பாலும், பலரால் தெளிவில்லாமலேயே, புரிந்து கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நமது வாழ்வில் எது நடந்தாலும், அது நல்லதோ அல்லது அல்லதோ எல்லாம் கர்ம வினை என்றே சொல்கிறோம் அல்லது அவ்வாறு சொல்லி சமாதானப் படுத்திக் கொள்கிறோம். அதாவது பூர்வ ஜென்மத்தில் நல்லது செய்திருந்தால் இப்பிறவியில் நல்லதும், கெடுதல் செய்திருந்தால் இப்போது தீமைகளை அனுபவிப்பதாகவும் பொருள் கொள்கிறோம்.

இச் சொற்றொடரை  நமக்கு ஏற்றாற்போல, சந்தர்ப்பவசமாக மாற்றிப் பேசுவோம்! எப்படி? நமக்கு நல்லது நடந்தால் அது நம்முடைய புத்திசாலித்தனத்தால் நடந்தது எனவும், கெட்டது நடக்கும் பொழுது ‘நமது விதி’ எனவும் சொல்வோம். ஆனால் பிறருக்கு நல்லது நடக்கும் பொழுது ‘அவனுக்கு அதிருஷ்டம்’ எனவும்; கெடுதல் நடக்கும் பொழுது ‘அவன் புத்திசாலித்தனமாக செயல்படவில்லை’ எனவும் சொல்வோம்.

அது மாத்திரமல்ல, பதவி உயர்வு கிடைக்காமல் போவதற்கோ, உடல் நலம் சரியில்லாமல் போவதோ அல்லது வறுமையில் சிக்கிக் கொள்வதோ எதுவாயினும் அதற்கு கடவுளை நொந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம்.

நமது கருத்துப்படி கடவுள் என்பவர், ஒன்றிற்கும் மேற்பட்ட தலைகளையும், பற்பல கைகளையும், அவற்றில் ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு, ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டு நம்மை ஆசீர்வதிக்கவோ அல்லது தண்டிக்கவோ செய்கிறார் என நாமாகவே நினைத்துக் கொண்டு பல்வேறு கோவில்களுக்கு ‘டெம்போ டிராவலர்களில்’  படையெடுப்பதால் ஒன்றும் நடவாது.

உண்மை என்னவெனில், கடவுள் தனியாக யாரையும் ஆசீவதிப்பதோ அல்லது தண்டிப்பதோ கிடையாது.

அது கிடக்கட்டும். 

உண்மையில் கர்மவினைகள் என்றால் என்ன? நல்ல செயல்கள் – தீய செயல்கள் என வரையறுத்து வைக்கப்பட்டது யாரால்?

பெரும்பாலான ‘நல்வினை’ அல்லது ‘தீவினை’ என்பவற்றை அடையாளம் கண்டுபிடிக்கும் இலக்கணம் நம்மாலேதான் வரையறுக்கப்பட்டது. அதற்கான சட்ட திட்டங்களும் உருவாக்கப் பட்டதும்  நம்மாலேதான்.

எதற்காக? சில சமூக ஒழுங்கு முறைகளுக்காகத்தான். இந்த விதிமுறைகள் நாட்டிற்கு நாடு, மதங்களுக்கு மதம் மாறக்கூடும். எல்லைக்கு இந்தப்புறம் சரியென் கொள்ளப்படுவது, எல்லைக்கு அப்பால் தண்டனைக் குரிய குற்றமாகக் கருதப்படும்.

பிற உயிரினங்கள் உண்ணுவதெல்லாம், பிற மிருககங்களைக் கொன்றோ அல்லது அவற்றிடமிருந்து பிடுங்கியோதான். இது அந்தந்த மிருகங்களின் இயல்புப்படி சரிதான். ஆண் சிங்கங்கள் அடுத்த ஆண்கிங்கத்தை அடித்துவிட்டு, அதன் குட்டிகளையும் கொன்றுவிட்டு பெண்சிங்கத்தை கவர்ந்து கொள்ளுகின்றன. அவற்றின் இயல்பே இதுதான்.
மனித இனம் இம்மாதிரி ‘காட்டு இயல்புப்படி’ வாழ்ந்து விடக்கூடாது (பல்வேறு காரணங்களை உத்தேசித்து) என்பதற்காக பல விதிமுறைகளை உருவாக்கினார்கள். இந்த சட்ட திட்டங்கள் மதங்களினாலும், அரசாங்கங்களினாலும் அமுல்படுத்தப் படுகின்றன. சமூக ஒழுங்கு என்ற அளவில் இவை சரியே. இதோடு விஷயம் முடிந்தது.
கர்மவினைகளுக்கும் இந்த வரைமுறைகளுக்கும் சம்பந்தமில்லை. 

நல்லது கெட்டது என்ற பாகுபாட்டின்படி பார்த்தால்  ‘கசாப்புக் கடைக்காரணுக்கும்’, ‘ போர் புரிபவனுக்கும்’ ஒருபோதும் முக்தி கிடைக்க வாய்ப்பே இல்லை எனக் கொள்ளலாமா? ஏனெனில் கொல்வதுதானே அவர்கள்து தொழில்?

அப்படி அல்ல!

பொதுவாக, அகம் நோக்கி கவணத்தைச் செலுத்தி, ஆன்மாவை உணர யத்தனிக்காமல், புற வாழ்க்கையை வெகுதீவீரத்தோடும், மிகுந்த ஆசையோடும் எதிர்கொள்ளுகிறோம். புலன்களால் உணரப்படுவதை மட்டுமே உண்மை என கருதிக் கொள்கிறோம்.

விளைவு? எவற்றையெல்லாம் மிகத்தீவீரமாக எண்ணுகிறோமோ அவற்றை நிறைவேறிக்கொள்ளத்தான் அடுத்தடுத்த பிறவிகள் வாய்க்கின்றன.

வெறும் செயல்கள் மட்டுமல்ல. எண்ணங்களே பிரதானமானவை. 
பிறவிகள் தொடர்வது, நாம் விடாப்பிடியாக வைத்திருக்கும் எண்ணங்காலும் -ஆசைகாலும்தான். இம்மாதிரியான பற்றுமிக்க எண்ணங்கள் தொடரும் வரை பிறவிகள் ஓயாது.

நாம் மனதளவில் ஒரு பத்துபேரையாவது கொலைசெய்திருக்க மாட்டோம்?  எத்துணை பெண்களை / ஆண்களை மனதிற்குள் என்னவெல்லாம் செய்திருப்போம்?

இவ்வெண்ணத் தொடர்ச்கிகள் எங்கும் போகா!  இவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே அடுத்த பிறவி வரும். முடியாவிட்டால் அதற்கும் அடுத்த பிறவி எனத் தொடரும்.

நிறைவேறா ஆசைகளே-எண்ணங்களே, அவற்றின் பலன்களே பிறவிகள். செயல்கள் அல்ல!

இரு முனிவர்கள் வானில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். பருந்து ஒன்று பாய்ந்துவந்து பாம்பினை கொத்திச் சென்றது. இதைப் பார்த்த ஒரு முனிவர், தம் தவவலிமையினைக் கொண்டு பாம்பைக் காப்பாற்றினார். பாம்பை காப்பாற்றியதற்காக பெருமிதமும் கொண்டார். அவருக்கும் அடுத்த பிறவி வாய்த்தது. பாம்பைக் காப்பாற்றியதன் பலனாக ‘செல்வந்தராகப்’ பிறந்தார். கழுகை பட்டினி போட்டதற்காக பிறவியின் இறுதியில் செல்வமனைத்தும் இழந்து வாடினார். நடந்த எவற்றினாலும் பாதிக்கப் படாத, தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு முனிவர் பிறவி நீங்கி, பேராண்மாவோடு ஐக்கியமானார்.

அப்படியானால் உலகில் எது நடந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் போதுமா? 

அப்படியில்லை. நமக்கு விதிக்கப்பட்ட கடைமைகளை முழுமையாக நிறைவேற்றித்தான் தீர வேண்டும். வித்தியாசம் எங்கே? அத்தகைய கடமைகளின் ‘பலன்களை’ தன் மீது ஏற்றிக் கொள்ளாத வரை செயல்களினால் பாதகமில்லை.

அர்ஜூனன் ‘குருட்சேத்திரப் போரில்’ ‘நான் யாரையும் கொல்லமாட்டேன். பிற உயிர்களைக் கொன்று நாட்டைப் பெறுவதில் விருப்பமில்லை’ எனச் சொல்லியிருந்தால் ‘கீதைக்கே தேவையில்லை. அர்ஜூனன் அதற்கு முன்னாலும், பின்னாலும் பலபேரை கொன்றவன்தான். கொலை செய்வதில் அவனுக்கு தயக்கமேதும் இருந்ததில்லை. ஆனால், தனது பாட்டனாரை, குருவை, சுற்றங்களைக் கொல்வதில் தயங்கியதால்தான், கண்ணன் ‘கீதையை’ அருளினார்.

கண்ணன் சொல்லும் முறைதான் ‘நீங்கி நின்று செயலாற்றுவது’ என்பது!

இந்த நீங்கி நின்று செயலாற்றும் நிலையில் வினைப் பயன்கள் தொடர்வதில்லை!

ராஜாவாக இருந்துகொண்டும் ரிஷியாக வாழலாம் – ஜனக மன்னர் போல.
பராரியாக இருந்துகொண்டும் முனிவராக இருக்கலாம் -  நாம்தேவரைப் போல

பிறவிகள் தொடர்ச்சியாக, முடிவின்றி அமைவதும் பிறவி அற்றுப் போவதும்தான் வினைகளை பேரவா கொண்டு செய்வதுதான்.

இன்னல்களும், இன்பங்களும் தொடர்வதும் கூட இதன் காரணமாகத்தான்.
நாம் செய்யும் ஒரு நல்ல செயல், நமது தீய செயல்களுக்கான பிராயச்சித்தம் அல்ல. 

நல்லவற்றிற்கான பலன் களையும், அல்லனவற்றிற்கான பலன்களையும்  நாம் தனித்தனியாக அனுபவித்தே தீரவேண்டும்.

கர்ம வினைகள் தீர்ந்தால் மட்டுமே ‘வீடுபேறு’ (முக்தி) சாத்தியப்படும்.
கர்மவினைப்பயன்கள்  யாவும் தண்டனைகளோ அல்லது அவார்டுகளோ அல்ல! மாறாக வினைத் தொடர்ச்சிகள் மட்டுமே!

இந்த வினைப்பயன்களை விளைவிப்பது யார்? கடவுளா? இல்லை!
நமது விடாப்படியான எண்ணங்களும் ஆசைகளும் தான்.

நாம் யார் என்பதை உணர மறந்தது-மறுப்பதும் தான். ஐம்புலன்களும், அவற்றின் மூலம் துய்க்கும் - இன்பங்களும் சாசுவதமானவை என உழன்றுகிடப்பதுதான்.