Friday, August 3, 2018

ஹீலர்கள்!!

த.நாவில் 'ஹீலர்கள்' எனத் தங்களுக்குத் தாங்களாக  பட்டம் வைத்துக் கொண்டு, விஞ்ஞானத்திற்கு  புறம்பான கருத்துக்களைப் பரப்பிக் கொண்டு, பலர் திரிகிறார்கள்.

பத்தாவதோ, +2 வோ படித்துவிட்டு, நவீன மருத்துவர்களுக்கு  சவால் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எங்கேயாவது 'சடாரென' தீர்வு கிடைக்காதா எனப் பரிதவிக்கும், நோயாளி மக்களின் சைக்காலஜி தான், இந்த டுபாக்கூர்களின்  மூலதனம்.

டயபடீஸ் என்று ஒரு நோயே இல்லை;

டெங்கு வந்தால் ட்ரீட்மெண்ட் எடுக்காதே;

BP க்கு மாத்திரை வேண்டாம்;

டேண்ட்ரஃப் (பொடுகு) என்பது கபால எலும்பு உடைந்து மேலே வருவது;

பிரசவத்திற்கு மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது.....

தடுப்பூசிகள்  தேவையில்லை...

இவையெல்லாம் ஹீலர்களின்  அபத்தங்களுக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்.

பிரசவ மரணங்கள் அக்காலத்தில் எவ்வளவு சதவிகிதம்,  இன்று எவ்வளவு என்ற ஸ்டேடிஸ்டிக்ஸ் ஒன்றே போதும்; இம்மாதிரியான பேத்தல்களை  முறியடிக்க! அக்காலத்தில் பத்து பெற்றால் நாலு போய்விடுமே? இன்று துணிந்து ஒன்றோடு நிறுத்திக் கொள்கிறோமே, அந்த நங்பிக்கையையும், துணிவை யும் தந்தது யார்? நவீன மருத்துவம் தானே?

இந்த ஹீலர்  கிறுக்கர்களின்  முன்னோடி ஒருவன் உள்ளான்.

இவன் பேச்சைக் கேட்டு, வீட்டிலேயே இயற்கைப் பிரசவம்  என ஆரம்பித்த ஒருவனின் மனைவி சில நாள் முன்பு இறந்தே போனார். எவ்வளவு பெரிய விஷயம்?

மாற்று மருத்துவம் என்பது வேறு; ஏமாற்றுக்  கோஷ்டிகள் என்பது வேறு; லாட்ஜ் 'டாக்டர்கள்' எல்லாம் மாற்று மருத்துர்கள் அல்ல;

ஹீலர் ஃபிராடுகள்  போல, 'வாலிப வயோதிக அன்பர்களே' கோஷ்டிகள் தனிரகம்.  ஆண்களின் அறியாமையும், வெட்கமும்தான்  இவர்களின் கேபிடல்.

நானும் alternative medical system களில் ஓரளவு நம்பிக்கை உள்ளவனே!
மாற்று மருத்துவம் என்பது அங்கீகரிக்கப்பட்ட வேறு பல மருத்துவ முறைகள்! ஆயுர்வேதம்,சித்தா, யுணாணி போன்றவை!  ஹீலர்களின்  DVD உரைகள் அல்ல!

மாற்று மருத்துவத்திலும், எந்தெந்த முறை,  எது வரை, எந்தெந்த வியாதிக்கு என்பதில் தெளிவான பார்வை வேண்டும்!  உதாரணமாக மூட்டுவலிகளுக்கு  ஆயுர்வேதம் நல்லது! ஓரளவுவரை..ஆனால் மூட்டையே மாற்ற வேண்டுமெனில் அல்லோபதிதான்.

திருப்பூர் பெண் போல, ஹீலர்களின் பேச்சைக்கேட்டு  இன்னும் எத்தனை பேர் உயிரழக்கப் போகிறார்களோ?

நம்மவர்கள், தற்போது பெருவாரியாக உள்ள சில நோய்களுக்கு,  எங்கேயாவது  சுலபமாக, சகாயமாக தீர்வு கிடைக்காதா எனத் தேடுகன்றனர்.  சர்க்கரை நோய்க்கு, BP க்கு மருந்தற்ற தீர்வு இருக்காதா எனஅலைகின்றனர்.

ஒன்று தெரிந்து கொள்வோம்..அப்படி டயபடீஸுக்கு  எளிய  'மந்திர' சிகிச்சை அல்லது மருந்து இருந்தால், அதைக் கண்டுபிடித்தவன் தான் இன்று மிகப்பெரிய பணக்காரனாக  இருப்பான்.

நிரூபிக்கப்பட்ட முறையாக வேறு எதுவும் இல்லாததால்தான் 'மெட்ஃபார்மின்'  வியாபாரம் அத்தனை கோடிகளில்!

தற்போது ஒரு ஹீலரைப்பிடித்து உள்ளே
போட்டுவிட்டனர்  போலீஸார்.

இது போதாது! இவ்வித  போலி மருத்துவர்கள் அனைவரையும் உள்ளே  தள்ளினால்தான், நாட்டிற்கு நல்லது!

அல்லோபதி மட்டுமே, அப்படியே உன்னதம்  என்று கூறவில்லை!நோகாமல்  காசுபிடுங்க அவர்களும் ஏராளமான வழிமுறைகள் வைத்திருக்கின்றனர்.

விஞ்ஞானம் என்பது வேறு; அதை வைத்து காசு பார்ப்பது என்பது வேறு!


ஹீலர்களிடம் விஞ்ஞானம் சற்றும் கிடையாது!  காசு மட்டுமே குறி!

இந்த கோஷ்டிகளில் பலரையும் ஒரு ரவுண்டு வந்தவன் என்ற வகையில் 'எச்சரிக்கும்' உரிமையும்-கடமையும் உள்ளதாக நினைக்கிறேன்.

Life style காரணமாக, நாமே உருவாக்கிக் கொள்ளும் சில ஆரோக்கியச்  சிடுக்குகளுக்கு, நம்முடைய 'நடைமுறைகளை' மாற்றிக் கொண்டாலே போதுமானது என்பது வரைதான் அவர்கள் சொல்வதை எடுத்துக் கொள்ளவேண்டும்.

உதாரணமாக,பசித்துப்  புசி  என ஒளவையும, நோயென வேண்டா வென  ஐயன் வள்ளவரும்  சொன்னதுதானே?

பசித்துப்  புசிப்பதும், அகால உணவும், ஃபாஸ்ட் ஃபுட், சோடா வகையறாக்களை  புறந்தள்ளுவதும் நல்ல பழக்கம்.  ஆங்கில மருத்துவம் இவற்றைத் தின்றால்  நல்லது எனச் சொல்லவில்லைதானே?

அதற்காக, BP, uncontrolled diabetes, cancer யாவற்றிற்கும்  மருத்துவம் வேண்டாம் என்பது சமுதாயத்திற்கு தவறான  வழிகாட்டல்.

வீட்டிலேயே பிரசவம் என்பது விஷமம். ஸ்டேடிஸ்டிக்ஸ் ஏராளமாக உள்ளது.

Human evolution ல், நான்கு கால்களிலிருந்து  இரண்டுகால்   ஜீவன்களாக நாம் மாறியதனால் ஏராளமான நன்மைகள். சில சிக்கல்களும் உண்டு. பிரசவ அவசரங்கள், முதுகுவலி, ஹெர்ணியா  போன்றவை!

வீட்டில் பிரசவம், தடுப்பூசிகள்  வேண்டாம் ,
மருந்துகளே  தவறு என்பது கண்டிக்கப்  படவேண்டியவை!

10% உண்மையும், மீதி கைச்சரக்கும் இருந்தால் ஒரு ஹீலர்  தயாரென்பது   சமூக அபாயம்.