Showing posts with label Interesting Experiences. Show all posts
Showing posts with label Interesting Experiences. Show all posts

Friday, October 4, 2019

நினைவுகள் பேசினால்...


எனது இல்லத்தில் தொலைக்காட்சி இணைப்பைத் துண்டித்து இரு வருடங்களாகின்றன. காரணம் சற்று விந்தையானது. கொலை. தமிழ்க்கொலை. ஒரு அறிவிப்பாளருக்கும் ண-ன, ள-ல சரியாக உச்சரிக்க வராது. ழ-வரவே வராது. வாக்கி யங்களை தன்மையில் ஆரம்பித்து படர்க்கையில் முடிப்பார்கள். ‘தளைவர் அவர்கல்... , மளை பெய்யும் ..இன்ன பிற.

சற்றே ஒதுங்கி பாடல்களை ஒளிபரப்பும் அலைவரிசைக்கு மாறினால், தீர்ந்தது கதை. அவர்கள் பாடுவது தமிழில்தானா அல்லது வேறு ஏதாவது மொழியா என ஆராய வேண்டியி ருக்கும். ‘நம்ம புல்லீங்க, எள்ளாம் பயங்கறோம்..’

கண்ணதாசன், வாலி போன்றோரின் கொஞ்சு தமிழைக்கேட்டு பழகியபின், இவற்றை எங்கே கேட்பது? விஜய் தொலைக் காட்சி மாதிரியான பொழுதுபோக்கு சானல் ஸ்டேஜ் ஷோக்களில், அறிவிப்பாளர்கள் அடிக்கும் கொட்டம் தாங்காது. தமிழை ரணகளப் படுத்திவிடுவர்.

பள்ளிப்பருவத்தில் எனது தமிழாசிரியர், தவறுதலாக ‘எளுமிச்சை’ என நான் உச்சரித்ததற்காக, ஒரு பீரியட் பூராவும் வெயிலில் நிற்கவைத்தார்.  அவர் நமது தொலைக்காட்சி அறிவிப்பாளர்களைக் கண்டால் என்ன செய்வாரோ? டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கூட, அரிதாகவே பிழையற்ற தமிழைக் காண முடிகிறது.

விந்தையாக, தமிழ்-தமிழ் என அக்காலத்தைவிட, தற்போது தான் அதிகமாக கூவப்படுகிறது;  தமிழின்பேச்சுத்தரம்-எழுத்துத்தரமும் இப்போதுதான் அதளபாதாளத்தில். வேறெந்த மானிலத்திலாவது, அவரவர்கள் தாய்மொழியினை இவ்வளவு சிதைக்கிறார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டியுள்ளது.

பெரும்பகுதியான நகர்ப்புர பள்ளிச் சிறுவர்-சிறுமியர்களுக்கு சரளமாக தமிழ் வருவதில்லை. ஆங்கிலம்தான். ஆங்கிலமோ அல்லது ஹிந்தியோ, அதிகப்படியான மொழிகளைக் கற்றுக்கொள்வதில் தவறேயில்லை. ஒவ்வொரு மொழியும் இன்னும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துபார்க்கும் சந்தர்ப்பத்தை அளிக்கிறது; ஆனால் நிச்சயமாக தாய்மொழியினைப் புறக்கணித்து அல்ல. தற்போது நிலவும் இருமொழி-மும்மொழிப் போராட்டங்கள் யாவும் ‘தமிழ்’ என்ற பதாகை தாங்கி நிற்கின்றனவே தவிர, ஆங்கிலத்திற்கு வால்பிடிக்கும் இயக்கங்களாகவே நடமுறையில் மாறியுள்ளன. நமது பிள்ளைகள் தமிழின்மீது இயல்பாகக் கொண்டிருக்கவேண்டிய உறவு, மெல்ல-மெல்ல மறைந்துகொண்டிருக்கிறதோ என அஞ்ச வேண்டியுள்ளது. சிறார்களது வார்த்தை வீச்சு (வெகாப்லரி),  நூறைத்தாண்டுமா என்பதே சந்தேகம்.

தமிழ் ஆசிரியர்கள் தங்களது தமிழ் ஞானம், உச்சரிப்பு குறித்து அவர்களே சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும். மானவர்களது தமிழ் ஆர்வம் தமிழாசிரியர்கள் மூலமாகவே அடுத்த தலைமுறைக்கு செலுத்தப் படவேண்டும். ஏனெனில் பெற்றோர்கள் தொலைக்காட்சித் தமிழில் மூழ்கிக் கிடக்கின் றனர்.  சேக்கிழார், திருமூலர், சங்க இலக்கியகர்த்தாக்கள், காளமேகம் போன்றோர்களது பெயர்களையாவது பெற்றோர் அறிந்திருப்பார்களா எனச் சந்தேகம். 

என்காலத்தில், பெரியவர்கள் வீட்டிற்கு வந்தால், ‘எங்கே, இரண்டு தேவாரம் சொல்லு, செய்யுள் சொல்லு  என குழந்தைகளைப் பாடச்சொல்லிக்கேட்பர். தவறிருந்தால் திருத்துவர். அந்த அளவிற்கு ‘இயல்பாகவே  தமிழ் நம்மிடையே கலந்திருந்த்து.

தற்போது, தங்களது குழந்தைகள் பெயரைக் கூட, தமிழில் வைக்க மறுக்கும் காலம். காளையன் என்றால் மட்டம்- ரிஷப் என்றால் ஆஹா! கருத்தம்மா என்றால் தூ... ஷியாமளா என்றால் பிரமாதம்; வெள்ளையம்மா என்றால் அபத்தம்- ஸ்வேதா என்றால் ஃபேஷன்.

பள்ளி, பட்டப் படிப்பு, வேலை, திருமணம், குழந்தைகள் என்ற அதிவேகச் சுழலில் தாய்மொழி-கலாச்சாரம் போன்றவை தள்ளிப்போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வாழ்வின் வேகம் குறைந்து,  நமது மொழி எங்கே எனத் தேடத் துவங்கும் போது,   பின்னாலிருந்து காலம் கடந்துவிட்டது...போஎன்று சொல்லி தமிழ் நகைக்கும்.

உண்மையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்வரை தமிழ் மட்டுமே எனக்குத் தெரிந்த மொழியாக இருந்தது.  எனக்கு மட்டுமல்ல, பல மானிலத்தவர்க்கும் அவரவர்கள் தாய்மொழி மட்டுமே அறிந்தவர்களாக இருந்தனர்.  பின்னாட்களில்தான் பல மொழிகள் வாழ்வில் இடம் பிடித்தன. 

இன்று பல மத்தியதர, உயர்மத்திய தர குடும்பங்களில் ஆங்கிலம் குடும்ப பேச்சு மொழியாக மாறிவருகிறது. அவர்களது நித்தியப்படி வாழ்க்கையிலிருந்து சிறிது சிறிதாக தமிழ் வெளியேறுகிறது.

தாங்கள் ஆங்கிலத்திற்குப் பழகிவிட்டது குறித்து பலரும் பலரும் பெருமிதம் கொள்கின்றனர். ஆனால் நம்முடைய தாய்மொழியோடு எந்தவிதமான உறவு இருக்கிறது என்பதைப் பற்றியும், அந்த உறவு முறியும்போது அது எந்தவிதமான சமுதாய தாக்கங்களையும், வலிகளையும் ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி பலரும் கவலைகொள்வதில்லை.   நவீன, தாராளமய யுகத்தில் நமது வாரிசுகள் முகமிழந்த மனைதர் களாக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். நமது அடையாளங்களான மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கம், உணவுமுறை ஆகியவற்றைத் தொலைத்து,   உலக மயமாகி விடும் அபாயம் சடுதியில் வாய்க்கும்.  நமது மண்ணோடு நம்மை அடையாளப்படுத்தும் முக்கியமான அம்சம் நமது தாய்மொழி. திரும்பவும் நமது மொழியோடு நம்மை இணைத்துக்கொள்ள இயலாத சூழலுக்கு ஆட்படுகிறோமோ என அச்சமாகவே உள்ளது.
வேலை, படிப்பு முக்கியம்தான்! கூடவே  நம்முடைய வேர்களிலும்  கவனத்தைச் செலுத்துங்கள் என்கிறேன்.  
நான் ஹிந்திக்கோ-ஆங்கிலத்திற்கோ எதிரானவன் அல்லன். ஆனால் நம்மீது ஆதிக்கம் செலுத்தும்  மொழியைக் கற்பதில்தான்  பிரச்சனை இருக்கிறது.  புதிய மொழி நமது தாய்மொழியை விரட்டிவிட யத்தினிக்கும்போதுதான் பதைப்பு உண்ணாகிறது.  பல மொழிகள் ‘கோஎக்ஸிஸ்ட்’ செய்ய முடியாது  என்று சொல்லவில்லை. ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள் என்கிறேன். கொஞ்சம் நேர்மையாக சிந்தித்தால், ஆங்கிலம் எவ்வாறேல்லாம் நமது வீட்டின் உள்ளிலும்-புறத்திலும் ஆதிக்கம் செலுத்தி, நமது வாழ்க்கை முறையை மாற்றியிருக்கிறது எனப் புரியும். 
புறக்கணிக்கப்படும் தாய்மொழி போட்டியிடுவதற்கு வழியே இல்லாமல் மெல்ல மெல்ல நம்மிடமிருந்து நம்மையும் அறியாமல் அப்புறப்படுத்தப்படுகிறது. எனக்கு நேரடியாகவும் சற்று சுற்றிவளைத்தும் 20க்கும் மேற்பட்ட பேரன்கள்-பேத்திகள். பெரும்பாலோருக்கு தமிழ் படிக்கத் தெரியாது!   
அமெரிக்கா போன்ற பிற நாடுகளில் பெற்றோரின் குடியேற்றத்திற்குப் பின், தாய்மொழியினை, அது தமிழோ-ஃப்ரஞ்சோ-போர்ச்சுக்கீஸோ, எதுவானாலும் தாய்மொழியினை நன்கறிந்த குழந்தைகளின் சதமானம் குறைந்து கொண்டேவருகிறதாம். விதிவிலக்குகள் இருக்கலாம்.
தாய்மொழியினை மறக்கும்பொழுது,  தங்களது வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும்  தேய்வுறுகிறது. மொழிக்கு நினைவுகளையும், வாசனைகளையும் மீட்டெடுக்கும்  சக்தி உண்டு.  மொழி, நம்முடைய அனுபவங்களோடு பின்னிப்  பிணைந்திருக்கும்.  தாய்மொழியினைப் பேசும்பொழுது, அது நம்மை நமது பழைய நினைவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் இட்டுச்செல்லும்.  ‘....மோர் என்று பேர்படைத்தாய், மும்பேரும் பெற்றாயே.....’ என்ற காளமேகப் புலவரின் சிலேடையை அசைபோடும் பொழுது, ஆனையாம் பட்டியையும், ஆத்தூரையும், அங்கே மோர் விற்ற கவுண்ட மூதாட்டியும் நினைவில் வந்து போகிறாரே? ‘பாபா ப்ளாக்ஷிப்’ பாடினால் அல்லது ‘ரெயின் ரெயின் கோ அவே’ பாடும்பொழுதோ எது நினைவிற்கு வரும்?
இளவயது துள்ளல்களையும், அல்லல்களையும் நினைவிற்கு கொண்டுவருவது மொழிதானே?  மொழி அனைவரது சிறுவயது நினைவுகளோடு பின்னிப் பிணைந்திருக் குமல்லவா?பின்னர் பிற மொழிகளில் புலமை அடைந்தாலும், தாய் மொழியின் சிறப்பு தனிதான். நினைவுகள் பேசினால், அது  தாய்மொழியி மூலமே பேசும்.

ஜூலி ஷெடிவி சொல்கிறார்: (அவரது வார்த்தைகளிலேயே-தமிழாக்கம்: திரு கிருஷ்ணன் சுப்ரமணியன்) “இயற்கையான மொழியிலிருந்து விலகும்போது உங்களை உருவாக்கிய ஒட்டுமொத்தக் கலாச்சாரத்திலிருந்து நீங்கள் விலக நேரிடுகிறது. நீங்கள் உள்வாங்கிய அறங்களையும், விதிகளையும் வெளிக்காட்டிய புத்தகங்கள், திரைப்படங்கள், கதைகள், பாடல்கள் ஆகியவற்றை நீங்கள் நெருங்க இயலாமல் போகிறது. உங்கள் குடும்பத்தை தங்களோடு அரவணைத்துக்கொள்ளும் ஒரு சமூகத்தை அல்லது ஒரு தேசத்தை நீங்கள் இழக்க நேரிடுகிறது. உங்கள் அடையாளத்தை நீங்கள் இழக்கிறீர்கள். இந்தத் துண்டிப்பு கடுமையானது. 2007ல் பிரிட்டிஷ் கொலம்பியாவின் குடிகளினிடையே டார்சி ஹாலட் என்ற ஆய்வாளர் நடத்திய ஆய்வு ஒன்றில், தங்களது மொழியைப் பேச இயலாதவர்களில் (பாதிக்கு மேற்பட்டவர்கள்) இளவயதில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை தங்களது மொழியைப் பேசும் சமூகங்களில் இருந்ததை விட ஆறு மடங்கு அதிகமாக இருந்தது என்று கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் தெரசா லாஃப்ரம்பாய்ஸ் என்ற மனவியலாளர், அமெரிக்க-இந்திய பதின்ம வயதினரிடையே தங்களது மொழியைப் பேசுபவர்களும் மரபைப் பின்பற்றுபவர்களும் அப்படிச் செய்யாதவர்களை விட  பள்ளியில் நல்ல முறையில் செயலாற்றினர் என்று கூறினார். இது போன்ற நிகழ்வுகள் கண்டங்களைக் கடந்து நடந்துகொண்டிருக்கின்றன. 2011ல் ஆஸ்திரேலியா புள்ளிவிவரக் கணக்கு ஒன்று அந்நாட்டுப் பழங்குடியினரிடையே தங்கள் தாய்மொழியைப் பேசியவர்கள் குடிக்கும் போதைக்கும் அடிமையாகும் வாய்ப்புக் குறைவு என்று தெரிவிக்கிறது.”
“தற்கொலைகளைப் பற்றி ஆய்வு செய்த மைக்கேல் சாண்ட்லர், கலாச்சாரத் தொடர்ச்சி ஒருவரை வலுப்படுத்தி தங்களுடைய அடையாளத்தை நிலைநிறுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது என்று குறிப்பிடுகிறதார். இந்தத் தொடர்ச்சி இல்லாவிடில், பழங்குடிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது என்றும் அவர்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுகிறது என்றும் எச்சரிக்கிறார். கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றை இணைக்கும் சங்கிலியை அவர்கள் இழக்கும் அபாயத்திற்கு உள்ளாகிறார்கள் என்கிறார் அவர்.”
‘அம்மா-அப்பா’, மம்மி, டாடி யாக மாறி, பிற்பாடு மாம், டாட் என்று மாறி அந்த ‘அம்மா’ வின் உணர்ச்சிகளையெல்லம் அடியோடு அழித்துவிட்டன.
மரபு சார்ந்த விஷயங்களை, மதசம்பந்தமான நெறிகளை குடும்ப உறவுகளை,  கர்னாடக இசையை, நாட்டுப் புறப்பாடல்களை,  பெரியவர்களுக்குச் செலுத்தும் மரியாதை முறைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த முகமிழந்த மனிதர்களால் முடியாது.  நம்புங்கள். மொழியின் நினைவுகள் நமது ஜீன்களில் பொதிந்துள்ளன். மீட்டெடுக்க சந்தர்ப்பம் மட்டும் தாருங்கள்.  
ஆழ்மனதோடு உரையாட, வார்த்தைகளின் ஜீவனை உணர தாய்மொழியால் மட்டுமே இயலும்.

Tuesday, October 1, 2019

வெட்டுக்கிளிகள்

1970 ஆம் ஆண்டு. வியட்னாம் வீடு என்ற சிவாஜிகணேசனின் திரைப்படத்தைப் பார்க்கப்போயிருந்தேன். திரையரங்கின் (செங்கற்பட்டு) வாயிலில் சிலர் குழுவாக நின்று கோஷமிட்டுவிட்டுச் சென்றனர்.
வினவியதில் ‘வியட்நாம் வீடு’ என்ற திரைப்படத்தின் தலைப்பை எதிர்த்து கோஷமிடுவதாகத் தெரிந்தது. படம் என்னவோ வழக்கமான சிவாஜி ஸ்டைல் சென்டிமெண்ட் படம்தான். ஒரு சாதாரண குடும்பச்சண்டைப் படத்தை, உயிரைப் பயணம் வைத்து, நாட்டிற்காக போராடும் யுத்தத்தோடு ஒப்பிடுவதா என்பது  இடது சாரிகளின் ஆதங்கம்.
பின்னர் சில தத்துவத்தேடல்களுடன் ,  விபரம் தேடிப் பிடித்ததில், அமெரிக்காவின் போர் வெறியும், இருபது ஆண்டுகள் வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகள் போரில் சந்தித்த கடுமையான உயிர்-பொருட்சேதங்களும்  தெரியவந்தன .
சென்ற 20/09/19 அன்று வியட்நாம் (சுற்றுலாவாகத்தான்) செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன்.  சைகோன் நகரின் வெளிப்புறத்தில் (தற்போதைய ஹோசிமின் சிட்டி) இன்றும் அரசு பாதுகாத்துவரும் ஒரு போர் நடந்த வெளியைக்கண்டேன்.
அதற்குமுன் மிகச்சுருக்கமாக:  தற்போது வியட்னாம் ஒரே நாடு. 1975க்கு முன், தெற்குவியட்னாம்- வடக்குவியட்னாம் என இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தன. அன்றைய சோவியத் யூனியன்,சீனா ஆகியவை வடக்கு வியட்னாமை ஆதரிக்க, தெற்கு வியட்னாமை அமெரிக்கா ப்ராக்ஸி அரசின்பேரில் ஆண்டது.
அமெரிக்காவை எதிர்த்து வியட்னாமியர்கள் போராடினார்கள். போராட்டம் என்றால் சாதாரண் போராட்டம் அல்ல. லட்சக்கணக்கில் உயிர்ப்பலி. சர்வ வல்லமை கொண்ட அமெரிக்காவை வெறும் மூங்கில் குச்சிகளோடும், இரும்புக் கம்பிகளோடும், சாதாரண துப்பாக்கிகளோடும் சந்தித்தது வியட்நாம்.  வியட்னாமியர்கள் கைக்கொண்ட போர்முறைதான் ‘கொரில்லா போர்த் தந்திர முறை’.
இன்றைக்கு உலகில் உள்ள  பல வன்முறையாளர்கள் கும்பல் தேர்ந்தெடுக்கும் தாக்குதல் முறை இதுவே. 
வியட்னாம் யுத்தத்தின் தலைமைப் போராளி, ஆலோசகர், வியூகம் வகுத்தவர்,  நுட்பமான அரசியல்வாதி ‘ஹோசிமின்’.
இவர் தலைமியில்தான் போர் நடந்தது. ஆகப்பெரிய ஜாம்பவான் அமரிக்கா தனது பல்லாயிரம் வீர்ர்களை இழந்து, தாக்குப்பிடிக்க இயலாமல் வியட்னாமைவிட்டு வெளியேறியது. வியட்னாமும் ஒன்றுபட்டது.
தற்போதைய, மற்றும் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்காக ஒரே ஒரு ‘வார் ஃபீல்டை’ மட்டும் பராமரித்து வைத்துள்ளனர். சும்மா வந்திடாதல்லவா சுதந்திரம், எந்த நாட்டிற்கும்?
அன்றைய தினங்களில், ஹோசிமின் எனக்கு அதிசயப்பிறவி. அவரது போர்த் தந்திரங்கள் எதிரியை நிலைகுலைய வைத்தவை. தேர்ந்த அறிவாளி. டிப்ளமாட். எந்த நிலையிலும் நிலை குலையாதவர்.  சலனமற்றவர்.  சமரசமற்ற போராளி. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரையும் ஒன்றினைத்து போராடினார்.
வெற்றியைத் தீர்மானிப்பது ஆயுதங்களல்ல.. வெகு மக்களேஎன்ற உண்மையை உலகுக்குப் பறைசாற்றியவர்.   விமானங்களையும், பீரங்கிகளையும் எதிர்க்க மூங்கில் குச்சிகளைத் தவிர நம்மிடம் ஒன்றும் கிடையாது. ஆனால் தத்துவ வழிகாட்டுதலில் நிகழ்காலத்தை மட்டுமல்ல... எதிர்காலத்தையும் பார்க்க முடிகிறது’’. “இன்று வெட்டுக்கிளிகள் யானையுடன் சண்டை போடுகிறது. ஆனால் நாளை யானையின் குடல் பிடுங்கி யெறியப்படும்’’ என்று சொன்னது உற்சாகப்படுத்த மட்டுமல்ல... உண்மையில் நடந்தேறியது.
ஹோசிமின் அவர்களை ஹோமாமாஎன வியட்நாம் மக்கள் அன்புடன் அழைத்ததிலிருந்தே அம்மக்கள் அவர் மீது வைத்திருந்த அளப்பரிய அன்பையும் மதிப்பையும் உணரலாம்.
உலகத்தின் அசைக்க முடியாத வல்லரசு எனக் கருதப்பட்ட அமெரிக்கா வியட்நாம் மக்களிடம் படுதோல்வியைச் சந்தித்தது. 30 லட்சம் மக்களின் உயிர்த் தியாகத்தில் வியட்நாம் வெற்றியை ஈட்டியது. அமெரிக்காவின் படையில் 58000 பேர் கொல்லப் பட்டனர்.
ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைக் கைப்பற்றும் பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையிலான போட்டியில் வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்ஸ் தேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டன. எனினும் வியட்நாம் மக்கள் ஆக்கிரமிப்புக்கெதிரான போரைத் தீரமுடன் நடத்தினர். விடுதலைக்கான சுதந்திரப் போரை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்து போராட்டத்தை வீச்சாகக் கொண்டு சென்றனர். அதன் விளைவாக பிரான்ஸ் வெளியேறியது. வியட்நாம் தெற்கு நோக்கி முன்னேறியது. ஐ.நா.சபை தலையிட்டு வெகுமக்களின் வாக்கெடுப்பின் மூலம் வியட்நாம் ஒன்றிணைக்கப்பட்டது. ஹனோயைத் தலைநகராகக் கொண்ட வியட்நாமும் சைக்கோனைத் தலைநகராகக் கொண்டு தென் வியட்நாமும் உருவாகின.
ஐ.நா.சபை வெகுமக்களின் வாக்கெடுப்பை நடத்தாத நிலையில் தென் வியட்நாம் மீது வட வியட்நாம் தாக்குதலைத் தொடங்கியது. 1955ல் மீண்டும் போர் ஆரம்பமானது. அமெரிக்கா, தென்வியட்நாம் அரசுக்கு ஆதரவாக 1964ல் வட வியட்நாம் மீது விமான குண்டுத் தாக்குதல் நடத்தியது, அமெரிக்க - வியட்நாம் போராகப் பரிணமித்தது.
நச்சு ரசாயன நாபாம் குண்டுகளை ஏவி வீடு, வயல், நிலங்களை அழித்தது அமெரிக்கா. எத்தகைய தாக்குதலுக்கும் அஞ்சாமல் வியட்நாம் மக்கள் போராடி 1975ல் அமெரிக்காவை விரட்டி அடித்தனர்.  .
அமெரிக்கா ஏவிய நச்சுப்பொருட்கள் மற்றும் நாபாம் குண்டுகளால் வியட்நாம் மக்கள் மிகப்பெரிய பாதிப்பை அடைந்தனர்.  நாபாம் குண்டுகளை வியட்நாம் மீது வீசி வியட்நாமிய மக்களை அடிபணிய முயற்சி செய்த ஆணவத்திற்கும், அடங்காப்பிடாரி தனத்திற்கும் மொத்தமாக ஆப்பு வைத்து, வெறும் முங்கில் கழிகளையும், குச்சிகளையும் வைத்தே கொரில்லா யுத்தத்தின் மூலம் பீரங்கிகளையும், விமானங்களையும், நவீன குண்டுகளையும் கொண்ட அமெரிக்காவைப் புறமுதுகிட்டு ஒட வைத்தனர் வீர வியட்நாம் மக்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 1975 வரை நடத்திய கொரில்லா யுத்தத்தின் வீர நினைவுகளை இன்றும் பாதுகாத்து வைத்து வருகின்றனர். குச்சி என்ற பகுதியில் ஆண்களும், பெண்களும் 4, 6, 10 மீட்டர் ஆழத்தில் பூமியில் குழிகளையும், பட்டறைகளையும் உருவாக்கி அதில் பதுங்கி இருந்து போரை நடத்தினார்கள். கையில் வெறும் கட்டைத் துப்பாக்கியும், மூங்கில் குச்சி களையும் வைத்துக்கொண்டு நவீன விமானங்களையும், பீரங்கிகளையும் வைத்து ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திய அமெரிக்காவை மண்ணைக் கவ்வ வைத்தது.
எனது இந்தப் பயணத்தின்போது, வியட்னாமியர்களின் பதுங்கு குழிகளையும், பட்டரைகளையும் காணும்போது, அவற்றின்மீது கால்வைக்கவே தயங்கினேன்.  ஒவ்வொரு பதுங்குக் குழிகளிலும் எத்துனை ஆயிரம்பேர் நாட்டிற்காக உயிரிழந்திருப்பர்? உண்மையில் மெய்சிலிர்த்தது. பகிர்ந்துகொள்ளத்தான் அருகில் எவருமில்லை. வழிகாட்டியாக வந்தவர் ‘ஹோசிமின்’ பாடலைப் பாடிக்காட்டியபோது, நெக்குருகிப்போனார். இத்தனைக்கும் அவர் போரினை நேரில் கண்டதில்லை.
எண்ணற்ற புத்தர்கோயில்களும், மெக்காங் டெல்டா படகுச் சவாரிகளும், நாட்ரடாம் சர்ச்சுகளும், மார்க்கெட்டுகளும் மனதைக் கொள்ளைகொண்டாலும், ஒரு சரித்திரப் புகழ்மிக்க ஒரு நாட்டைக் கண்டுற்றேன் என்பதே மகிழ்ச்சியளிக்கிறது.
ஃபிஸிகலாக அமெரிக்காவை வியட்னாமியர் வெளியேற்றிவிட்டனர்தான். ஆனால் அந்த நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் தற்போது மிளிரும் ‘கென்டகி ஃப்ரைடு சிக்கன்’ (கேஃப்சி)கடைகளும், ஃபோர்டு கார்களும். பெப்ஸி-கோலாக்களும் உலகின்மீது அமெரிக்கா கொண்டிருக்கும் பிடி இருகித்தான் இருக்கிறதே தவிர தளரவில்லை என்பதை நுண்ணரசியல் மதிகளால் எளிதில் விளங்கிக்கொள்ள முடிகிறதே!
இனி சில புகைப் படங்கள்: 













பழைய சர்ச்  

Add caption

உலகப் புகழ் பெற்ற புகைப்படம் 


 

Saturday, June 24, 2017

கார்டு வாங்கலையோ.. கார்டு!!

மனுஷனுக்கு எந்தெந்த விதங்களிலெல்லாம் இம்சை வந்து சேரும் என்பது யூகிக்கமுடியாத சமாச்சாரம்.  அதிமுகவிற்கு வரும் இம்சைகளைக்கூட மோடி புன்னியத்தில் சமாளித்து விடலாம். ஆனால் மோடி நமக்குக் கொடுக்கும் குடைச்சல் இருக்கே!  சரியான நமுட்டு விஷமம் புடிச்ச ஆள்.

இது நாள் வரை, நான் பசுமாடு போல, அரசாங்கம் சொல்லும் வரியைக்கட்டிவிட்டு, தலையை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். குடைச்சல் வந்து சேர்ந்தது ‘பான் கார்டு’ மூலம்.ஆதார் கார்டுடன், பான் கார்டையும் இணை. அதுவும் ஜூன் 30க்குள்ளாக என்று ஒரு ஆணை.  

இந்த வங்கிக்காரர்கள், செக்குமாடு போல, உடணடியாக அருகில் இருக்கும் வங்கிக்கிளைக்கு வந்து, ஆதார் எண்ணை சமர்ப்பிக்குமாறு சகட்டுமேனிக்கு, நாளொன்றுக்கு பத்து எஸ்.எம்.எஸ் அனுப்புவார்கள்.  மெஸேஜ் அனுப்பும் ப்ரோக்ராமில், ‘யாரெல்லாம் ஆதார் எண் சமர்ப்பிக்கவில்லையோ, அவர்களுக்கு மட்டும்’ என்று ஒரு கண்டிஷன் போடமாட்டார்களா?  வேகாத வெயிலில் வங்கிக்குச் சென்றால், ‘ நீங்க, முன்னாலயே ஆதாரை கொடுத்து விட்டீர்களே?’ என அழகு காண்பிப்பார்கள்.  இந்த பிடுங்கலாவது உள்ளூரோடு முடியும்.   ஆனால், ஆதார்-பான் கார்டு இணைப்பு இருக்கே, அது கங்கையையும் காவிரியையும் கூட இணைத்துவிடுவது சுலபம் என்று தோன்ற வைக்கும்.

இன்னும் என்னென்ன கார்டை, எந்தெந்த கார்டோடு இணைக்கச் சொல்லி உத்தரவு வரப்போகிறதோ என பீதியாயக் இருக்கு!  டிபார்ட்மெண்ட் ஐ.டி கார்டு,  க்ரெடிட் கார்டு, டிரைவிங்க் லைஸென்ஸ் கார்டு, மெடிகல் கார்டு, உள்ளூர் லைப்ரரிகார்டு என கைவசம் ஒரு கத்தை கார்டு வைத்திருக்கிறேன். என் வீட்டுப் பால்காரர், பேப்பர் போடுபவர் என பலரும் ஆளுக்கொரு ஒரு அட்டையை திணித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். தேவுடா....‘மன் கி பாத்’ நமக்கு இல்லையே!

ஆதார்கார்டை, பான்கார்டுடன் இணைக்க, ஒரு தளத்தின் இணைப்பை வழங்கியிருந்தார்கள். உள்ளே சென்று இணைப்பைச் சொடுக்கினால்,  பெயர் பொருத்தமில்லை என ரிஜெக்ட் ஆகியது.  இதென்ன கல்யாணப் பொருத்தமா.. அதெப்படி பொருந்தாமல் போகும் என சிண்டைப் பிய்த்துக்கொண்டு (வழுக்கை விழுந்துவிட்டாலும்) ஆராய்ந்து சொல்லச் சொன்னால்,  இரண்டு கார்டிலும் பெயர் வேறுவிதமாக இருக்கிறது  எனப் பதில் வந்தது.

தமிழ் நாட்டிற்கு, வேறு எந்த மானிலத்திற்கும் இல்லாத ஒரு இம்சை இருக்கிறது.  இங்கே பெயர் என்றால் பெயர்தான். அதற்கு சஃப்க்ஸ்-ப்ரிஃபிக்ஸ் எல்லாம் கிடையாது. பெயருடன் பெரும்பான்மையாக ஒரு இனிஷியல் இருக்கும். அது அனேகமாக அப்பா பெயர். அவ்வளவே! பலராமன் என்றால் பலராமன் தான். அட்டாச்மென்ட்கள் இல்லை. 

ஆனால் வடக்கே  கிவன் நேம், ஃபர்ஸ்ட் நேம், சர் நேம், மிடில் நேம், பெட் நேம் என பல தினுசுகள் இருக்கும் போல. இந்தப் பெயர்களுக்கு என்னதான் விளக்கம் எனத் தெரிந்துகொள்ள முப்பது வருடமாக முயன்று தோற்றுவிட்டேன். 

R. பலராமன் என்றால் என் பெயர் ராமச்சந்திரன் பலராமன். பலராமன். R  என்றால் என் பெயர் பலராமன் ராமச்சந்திரன்.

பான் கார்டு அப்ளை செய்யும் போது, ஏஜண்ட் பெயரைக் கேட்டார். சொன்னேன். அப்பா பெயர் என்னவென்றார். ‘ராமச்சந்திரன்’ என்றேன். அந்த புன்னியவான் எந்தப்பெயரை எங்கு எழுதினாரோ தெரியவில்லை. கார்டில் பலராமன் ராமச்சந்திரன் என வந்திருந்தது. அட, இது அப்பாவின் பெயர்தானே.. இருந்துட்டுப் போகட்டும் என விட்டுவிட்டேன். இது நடந்தது 15 வருடங்கள் இருக்கும். இப்ப வந்தது வினை.

ஆதாரில் என்பெயர் பலராமன். ஆனால் பான் கார்டில் என்பெயர் பலராமன் ராமச்சந்திரன்.  எனவே இணைக்க முடியாதாம். இதென்ன இம்சை. இரண்டு கார்டிலும் அப்பா பெயர் ராமச்சந்திரன் தானே? ஏற்றுக் கொள்ளக் கூடாதா என்றால், முடியாது என்றது சிஸ்டம். இந்தியாவில் மனிதர்கள் கூடவே பேசுவது சாத்தியமாகத நிலையில், மிஷினுடன் என்னத்தைப் பேச?

சரியென ஆன்லைனில், பெயரை மாற்றும் ஆப்ஷனுக்குச் சென்றேன்.

அடாடா.. எப்படித்தான் மைனஸ் -12 சைஸில் எப்படித்தான்  ஃபாண்ட் வைக்கிறார்களோ? மஞ்சள் நிறக்கட்டங்களில்,  உமிக்கொசு சைசில் எழுதியிருப்பதைப் படித்தாக வேண்டும். அதைப் புரிந்து கொள்ளவேண்டும். பின் ஃபில்லப் செய்யணும். சை.. பெயரை மாற்ற காசு வேறு கேட்டார்கள். ஆன்லைனில் கட்டியாகிவிட்டது.

ஒரு வழியாக என்பெயர் பலராமன்.என் அப்பா பெயர் ராமச்சந்திரன் தான் என டைப் செய்தவுடன்,  பெயர் மாற்றம் செய்யணும் என்றால், எந்தெந்த சர்டிபிகேட் தேவை அவர்கள் சிஸ்டம் என ஒரு லிஸ்ட் படித்தது.  எல்லாம் மலையைக் கிள்ளி எலியைப் பிடிக்கிற வேலை. 

நான் பலராமன் தான் என நிரூபிக்க ஆதார் கார்டு, பென்ஷன் ஆர்டர், பென்ஷன் புக், வங்கிக் கணக்கு முதல் பக்கம் எல்லாம் கொடுத்தேன்.

பதினைந்து நாள்  கழித்து மெயில் வந்தது. “பெயரை உறுதிப் படுத்த பென்ஷன் ஆர்டரோ, ஆதார் கார்டோ, வோட்டர் ஐ.டியோ ஏற்றுக் கொள்ளக் கூடிய தஸ்தாவேஜூகள் இல்லை. போய் பள்ளிக்கூட சர்டிபிகேட்டை தேடி எடுத்துவா..”

அடப்பாவிகளா.. நான் பள்ளியைமுடித்தது 1969ல். அந்த சர்டிபிகேட்டை எங்கே தேட? நான் படித்த படிப்புகளின் அடிப்படையில் தானே  வேலை கிடைத்தது? அப்பாயின்மெண்ட் ஆர்டரில் பலராமன் என்று தானே இருக்கு? நாப்பது வருடம் குப்பைகொட்டிவிட்டு ரிடயர்மெண்ட் (சூப்பரானுவேஷனில் தான்) ஆர்டரும் அதன் அடிப்படையில்தானே?   அதில் பலராமன் என்றுதானே இருக்கிறது? அதை எப்படி சான்றாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்-என வினவினால், “ஆத்தா வையும்.. சந்தைக்குப் போகனும்.. காசு கொடு...” என சொன்னதையே சொல்லும் கமல் போல, ஸ்கூல் சர்டிபிகேட் கொடு என சண்டித்தனம் செய்த்து இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட்.

வீட்டை தலைகீழாகப் புரட்டிப்போட்டாகிவிட்டது. 1971-ல் சேலம் பேலஸ் தியேட்டர் சைக்கிள் ஸ்டேண்டில் கொடுத்த ‘டோக்கன் கூட’ கிடைத்தது.. எஸ்.எஸ்.எல்.ஸி சர்டிபிகேட் காணவில்லை.

இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் என்ன பெண்டாட்டியா என்ன, கோவிச்சுக்க முடியுமா? முறையிடுவதைத் தவிர வேறு வழி?

ஐயா.. ஆதார் கார்டும், வோட்டர் ஐடியும், பென்ஷன் புக்கும் ‘பலராமன்’ என்றுதானே இருக்கு? அதன் அடிப்படையில் பான் கார்டில் பெயர் மாற்றக் கூடாதா? அரசாங்கத்தின் பெட் திட்டமான ஆதாரையே நம்ப மாட்டீர்களா என அழுது புரண்டாலும், ஸ்கூட்ல் சர்டிபிகேட்... சந்தைக்கு போகனும்னு அடம்.

வேறு வழியின்றி, பிரதம மந்திரியின் ‘குறைகேட்கும்’ அலுவலகத்திற்கு முறையீடு செய்தேன். ஐயா... சத்தியமா நான் பலராமன் தான். ஆதார், ரிடயர்மெண்ட் ஆர்டர்..இத்தியாதிகளை நம்புங்கள். இது நாள் வரை சம்பளத்தில் வருமான வரி பிடித்தமெல்லாம் ‘பலராமன்’ என்ற பெயரில் அதே பான் கார்டு எண்ணில், கட்டும்போது ஏற்றுக் கொண்ட வருமான வரித்துரை, இப்போது ஏற்றுக் கொள்ள மறுப்பது அக்கிரமம், வரிகளை ஏற்றுக்கொள்ளும்போது இது முரணாகத் தெரியவில்லையா.. எனப்  புலம்பியிருந்தேன்.

நமது அதிகார வர்க்கத்திற்கு மூளை எப்போதும் நேரே போகாது போல. “தவளையின் நான்கு கால்களையும் வெட்டிவிட்டால், தவளைக்கு காது கேட்காது.. அதனால்தான்  தாவ முடியவில்லை” என தீர்மாணிக்கும் அதிபுத்திசாலி அல்லவா?  

இந்த முறையீட்டை, அவர்கள் யாருக்கு அனுப்பியிருக்கனும்? பான் கார்டு பெயரை மாற்றும் அலுவலகத்திற்குத்தானே? அவ்வளவு எளிதாக முடிவெடுத்துவிட்டால், அதிகார வர்கத்தின் மூளை என்னவாவது? எனது புகாரினை, ஆதார் அலுவலகத்திற்கு அனுப்புவிட்டனர்.

ஐயகோ... ஆதார் அட்டையில் பழுதொன்றுமில்லை. பிரச்சினை பான் கார்டில் தான் என புலம்பினால், ‘Further comments not allowed.. some problems noticed” என பதில் வருகிறது.

படுபாவிகள்.. ஆதார் கார்டில் பெயரை மாற்றித் தொலைக்கப் போகிறார்களோ என அச்சமாக இருக்கிறது.

திட்டம் என்னவோ நல்ல திட்டம்தான். அதை அமுல் படுத்தும் பொழுது, மேலே இருக்கும் ஒன்றரை கிலோ சமாசாரத்தை கொஞ்சமாவது பயன்படுத்த வேண்டாம்?  செக்கு மாடுபோல அங்கேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

சிக்கலைத் தீர்க்கப் போகிறார்களா? இல்லை புதுசாக ஏதாவது சிக்கலை தோற்ற்விக்கலாமா என யோசிப்பார்களா தெரியவில்லை.


அரசாங்கத்தோடு பேசி புரியவைக்க இயலாது. என் பெயர் பலராமன் தான் என ஏற்றுக் கொண்டால், ரூ 101/- உண்டியலில் போடுவதாக வடிவழகியம்மனுக்கு வேண்டிக் கொண்டுள்ளேன். அது மட்டுமே இங்கு சாத்தியம்.

Friday, December 30, 2016

ஹெர்ணியா

சில காலம் முன்பு, இடது அடி வயிற்றின் கோடியில் ஒரு ப்ரீதி இட்லி சைசில் ஒரு வீக்கம்.  பரம சாதுவான வீக்கம்.  வலிக்காது. எழுந்து நின்றால் வரும். படுத்துக் கொண்டால் காணாமற் போய்விடும். கொஞ்ச நாளிலேயே அத்யந்த நன்பனாகி விட்டது  அவ்வீக்கம். அதனுடன் பேசலாம். எதிர்த்தெல்லாம் பேசாது. அதை செல்லமாய், மெதுவாய், லேசாக அழுத்திவிட்டால், சமர்த்தாக உள்ளே போய்விடும். கொஞ்ச நேரம் பொறுத்து மீண்டும் தலைகாட்டும். சரி போ... அது பாட்டுக்கு ஓரமா இருந்துக்கட்டும். அதென்ன வாடகையா தரப்போகிறது? தொந்தரவில்லாமல் இருந்து விட்டுப் போகட்டும் என விட்டுவிட்டேன்.

சில நாட்களில், ப்ரீதி இட்லி சைசில் இருந்த வீக்கம், கும்பகோணம் துணி இட்லி சைசுக்கு பெரிசானது. வலி இல்லாவிடினும், ‘நான் ஒருத்தன் இருக்கேன் பார்’ என நினைவுறுத்தும் படியாக அசௌகரியம்.

இரண்யனை வதம் செய்ய, நரசிம்மன் கைவிரல்களால் அவனது குடலைக் கிழித்து வெளியே போட்டானாம். எனக்கு, ஹிரண்யன் என்னும் குடல், நரசிம்மன் தயவில்லாமலேயே வெளியே வந்து கொண்டிருந்த்து.  

தன்னை பத்திரமாக மூடிப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் மூன்று லேயர்களில் பலவீன ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதன் வழியே, சற்று காற்றாட வெளியே வந்துவிடும் எனது குடல் பகுதி.  இதனால்தான் இந்த குடலிறக்கத்திற்கு ஹிரண்யா என்று பெயர் வைத்தார்களோ என்னவோ! இப்படி தனது இருப்பிடத்தைத் விட்டு, எல்லை தாண்டிய பயங்கரவாதியாக மாறி, அவ்வப்போது வெளியே வந்து இம்சைகொடுக்க ஆரம்பித்தான் ஹிரண்ய கசிபு.

வந்து விட்டால், ஹெரண்யா தானாக குணமாகாது; சர்ஜரி ரிப்பேர் மட்டுமே சரியாக்கும் என கூகுளாண்டவர் அருள் பாலித்தாலும், எனது இஷ்ட தெய்வமான ‘யோகாவை’ வேண்டினேன்.  அவர் ஏகபாத – சர்வாங்க ஆசனங்களைப் பரிந்துரைத்தார். மோடிக்கு கருப்புப் பண முதலைகள் காட்டியது போல சற்றே ‘பாவலா’ காட்டிவிட்டு ஹிரண்யா தனது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை காட்டிக் கொண்டிருந்தது. எனவே இவ்விஷயத்தில் அனுபவம் பெற்ற ஒருவரைத் தொடர்புகொண்டேன்.  அவர் இடது, வலது, நடு (கட்சியெல்லாம் இல்லை – சும்மா திசைகள் தான்) என மூன்று ஹெர்ணியா அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்.  அவர் ‘ஆபரேஷனெல்லாம் செய்து கொள்ளாதே, எனக்கு நிறைய இம்சை கொடுத்துக் கொண்டிருக்கிறது; நீ இதற்காக விற்கும் ‘ஹெர்ணியா பெல்டை’ பயன்படுத்து... சரியாகிவிடும் என நல்வாக்கு சொல்ல, அமேசானுக்கு அடித்தது யோகம்.  ஒரு சுபயோக சுப தினத்தில் ஹெர்ணியா பெல்ட் வந்து சேர்ந்தது.  அந்த பெல்ட், ‘சூப்பர் மேன்’ பேண்டுக்கு மேல் போடும் ஜட்டி போல ஒருவிதமாக இருந்தது.  அதனால் என்ன? கத்தியின்றி ரத்தமின்றி ஹிரண்யனை விரட்டியடிக்கும் மந்திர பெல்ட்டை எதற்காக உதாசீனப் படுத்தனும் என மூன்று மாதம் அணிந்து திரிந்தேன்.

அப்பாவிடம் அடங்கி ஒடுங்கித் திரிந்து, அம்மாவைக் கணட்தும் அழுது ஆர்பாட்டம் செய்யும் சிறுவன் போல, பெல்ட்டை எடுத்ததும் ஹிரண்யணின் அட்டூழியம் அதிகமாகிவிடும். இந்த பெல்ட், தசைகளை பலவீனமாக்குவதையும் உணர முடிந்தது.

சரி... வேறு வழியில்லை. ‘சஸ்திர சிகிச்சையே பலனளிக்கும் போல’ எனத் தீர்மாணித்து நான் மிகவும் விரும்பும், சர்ஜன் டாக்டர் சசிதர் அவர்களை நாடினேன்.  நம்பற்கரிய நேர்மையாளர். தொழிலில் நேர்த்தி. திறமை சாலி. அவர் பார்த்த உடனேயே, ‘ இது சர்ஜரி’ தான் எனத் தீர்மாணித்து, சில பல டெஸ்ட்களைப் பரிந்துரைத்தார்.

ஆபரேஷன் செய்து கொள்வதில் பயமொன்றுமில்லை என்றாலும், தனியனாக வாழ்வதால், சமாளிக்க முடியுமா, சமையல் செய்துகொள்ள இயலுமா,  மாடியில் குடியிருப்பதால், படியேற முடியுமா, எனது அடிப்படையான தேவைகளை பிறர் உதவியின்றி செய்து கொள்ள இயலுமா, எனது நெடு நாளைய நண்பன் ‘மயக்கம்’ வந்து விட்டால் என்ன செய்வது, ஒரு வாரத்திற் காவது பிறரின் உதவி தேவைப்படுமே என்ற சந்தேகம், பயம் இருந்தது. பிறவி சங்கோஜியான எனக்கு இது பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனது ஆகட்டும். 64 வயதிலேயே இவ்வளவு தயங்கினால், இன்னும் வயதாகும் போது மேலும் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். இப்போது இரத்தக் கொதிப்பு, சர்க்கரை இல்லை. இனி வரும் காலங்களில் எப்படியோ தெரியாது. எனவே துணிந்திடு மனமே என உறுதி கொண்டு, டெஸ்ட்களை எடுக்கச் சென்றேன்.

கதைகளில் ‘அஷ்ட திக்கு பாலகர்கள்’ என்று சொல்வார்கள். ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு தெய்வங்கள். எனது சர்ஜன் எடுக்க்ச் சொன்ன  டெஸ்ட் லேபரட்டரிகள் யாவும், அஷ்ட திக்கு பாலகர்களுக்கு சொந்தம் போல. திசைக்கு ஒன்றாக இருந்தது. தெற்கே ஸ்கேன். வடக்கே கார்டியாலஜிஸ்ட் ஒபினியன். கிழக்கே இரத்த சோதனை. மேற்கே ஈஸிஜி.
அனைத்து டெஸ்களையும் அஸ்வமேதயாகம் போல முடித்துக் கொண்டேன். 

இந்த டெஸ்ட்களில்,  மோடி உபத்திரவம் தருவார் எனக் கருதவேயில்லை. ஒவ்வொரு டெஸ்ட்டும்     ரூ 900, ரூ 700 பிடித்தது. அவர்கள் எவரிடத்திலும் ஸ்வைபிங் மெஷின் இல்லை.  ஒவ்வொரு லேபிற்கும் அவ்வளவு நூறு ரூபாய் நோட்டுகளை எங்கிருந்து சேகரிப்பது?  நூறு ரூபாய் நோட்டிக்களைச் சேகரிப்பதற்குள் விழி பிதுங்கிற்று.  பல மருந்துக் கடைகளிலும் பி.ஓ.எஸ் இல்லை. அப்படியானால், இவர்கள் யாவரும் வியாபாரத்தை எந்தக் கணக்கிலும் காட்டுவதில்லை போலும்.

மருத்துவ செலவிற்காக சிட்டியூனியன் பேங்கில் போய், அவசரத்தை விளக்கி, எனது அக்கவுண்டிலிருந்து முப்பதாயிரம் பணம் கேட்டால் மறுத்தார்கள்.  அதிகபட்சமே 24000 தான் தரமுடியும் என்றார்கள்.  நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கம்பெளயின்ட் செய்து கொள்ளுங்கள். எங்களுக்கு அவ்வளவுதான் அதிகாரம் என்கிறார்கள்.  காரணத்தை விளக்கியும், ஆதாரத்தைக் காண்பித்தும் பணம் கொடுக்க மறுக்கும் இந்த வங்கிக்காரர்கள் ரெட்டிகளுக்கு மாத்திரம் எப்படி கோடிக்கணக்கில் பணம் வழங்கினார்களோ தெரியவில்லை.

ஈஸிஜியில் பிரச்சினை என்றாலும் (ஆட்ரியல் ஃப்ளட்டர்) சர்ஜரி செய்ய ஒப்புதல்  வழங்கினார்கள். இந்த சடங்குகளைப் பூர்த்தி செய்வதற்குள்ளாகவே சர்ஜரி முடிந்த்து போல ஆயாசமாகிவிட்டது.

சற்றே நீண்ட தையல் போடுமளவு சர்ஜரி இருந்தது. ஒருவழியாக மூண்றாம் நாள் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பிவிட்டார்கள்.

எனது நண்பர்களுக்கு நான் பகிரங்கமாக நன்றி சொல்ல வேண்டிய தருணம் இது. குறிப்பாக திருவாளர்கள் சக்திவேல், பி.டி அரசு, விஜயராகவன், செந்தில், தியாகு ஆகியோருக்கு எனது  நெஞ்சார்ந்த நன்றிகள்.

சர்ஜரிக்குப் பின் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பல. முதல் விரோதி இருமல் – தும்மல். ஒவ்வொரு தும்மலுக்கும்  பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளையோ அல்லது கைலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானையோ எளிதாக தரிசிக்கலாம். தும்மி முடித்ததும் கண்கள் இருள.. தலை சுற்ற.. தையல் போட்ட இடத்தில் 22000 V ஷாக் அடிக்க.. என்னே இன்பம்....

மட்டையடியாக பளு தூக்காதே, ஸ்ட்ரெயின் செய்யாதே என உபதேசிப்பது வேஸ்ட்.  தனியர்களுக்கு இவையெல்லாம் செய்யாமலிருக்க இயலாது.


ஆனால், சில யுக்திகளைக் கைக் கொண்டால் சமாளிக்கலாம்.  உதாரணமாக தும்மல் வரும்போல இருந்தால், அழுத்தமாக, வலிக்கும்படி மூக்கைக் கிள்ளிக் கொள்ள வேண்டும்.  தும்மல் அடங்குகிறது. சமையலின் போது தாளிப்பதை அறவே தவிர்க்க.  படி ஏறும்போது, ஒவ்வொருபடியாக... எந்தப் பக்கம் சர்ஜரி நடக்கவில்லையோ அந்தப் பக்க காலை எடுத்து வைத்து... இப்படி பல யுக்திகளைப் பழகிக் கொண்டுள்ளேன்.

ரெகவரி பீரியடைக் கடந்துவிட முடியும் என்றே கருதுகிறேன். நன்பர்களுக்கு மீண்டும் நன்றிகள்.

Thursday, June 9, 2016

சொன்னா கேட்டிருக்கணும்...

“சுளை’’ ஒன்று ஐந்து ரூபாய் என அடாவடியாய் விற்றால்தான் என்ன குடிமுழுகிப் போச்சு? ஐந்து சுளை.. அட, பத்து சுளை சாப்பிட முடியுமா? ஆர்பாட்டமில்லாமல், கேட்ட விலையைக் கொடுத்து, பிளாஸ்டிக் கவரில், பலாச்சுளைகளை வாங்கிவந்து தின்றுவிட்டால் கதை முடிந்திருக்கும் தானே? என்ன....? தெருப்புழுதி கொஞ்சம், புகை கொஞ்சம் படிந்திருக்கும். நன்கு, கழுவிச் சாப்பிட்டால் ஆயிற்று.  தெருவில் சுளை வாங்கிச் சாப்பிடுபவர்கள் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறார்கள்? ரொம்பவும் மூளையை உபயோகப்படுத்துவதாக நினைத்து, ஒரு சுமாரான சைசில் முழுப் பலாப்பழத்தை யார் வாங்கிவரச் சொன்னது?

வாங்கிவந்த பழத்தை(காயை), ‘மோப்ப நாய்’ முகர்ந்து பார்ப்பது போல மணிக்கொருதரம் மோந்து பார்த்தால் பழுத்துவிடுமா என்ன? “வெயிலில் வைத்தால் பழுக்கும்” என்று கேள்விப்பட்டது  நினைவுக்கு வர, மாடிக்கு எடுத்துப்போய், பேப்பர்களை கனமாகப் பரப்பி, பாலாவின் மேலேயும் பேப்பர்களால் மூடி வைத்துவிட்டு, அடுத்த நாள் காலைவரை, ஞாபகமாக  மறந்துவிட்டாயிற்று.

அடாடா.. நேற்று வச்ச மீன் குழம்பு வேண்டுமானால் நன்றாக இருக்கும்..  நேற்று வச்ச பலாப்பழம் எப்படி இருக்குமோ என்ற கவலையுடன், இரண்டிரண்டு படிகாளாகத்  தாவி, மாடிக்குப் போய்ப்  பார்த்தால், நல்ல வேளையாக, பெருச்சாளியோ பூனையோ பிராண்டி வைக்காமல், வைத்த மேனிக்கு பழுதில்லாமல் உட்கார்ந்து கொண்டிருந்தது பலா.  ஹனுமன், பாக்ஜலசந்தியை ஒரே தாவலாகத்தாண்டி, ‘கண்டேன் சீதையை’ என்பது போல, நானும் 'கண்டேன் பலாப்பழத்தை'. மகிழ்ச்சியில், சென்ட்ரல் ஸ்டேஷன் போர்ட்டர் போல, பாவித்து பலாவைத் தலையில் தூக்கிக் கொண்டு, ‘விரு விரு’ வென கீழே வந்தாயிற்று.

மீண்டும் மோப்ப நாய் வேலையைத் துவங்கினால், லேசாக பாலாச்சுளை வாசம் வந்தது. இதென்ன வாழைப்பழமா, சடாலென தோலை உரித்து, விழுங்கி வைக்க? பிறகுதான் நினைவுக்கு வந்தது பலாப்பழத்தை உரிக்க, ‘ஆயுதங்கள்’ வேண்டும் என்பது. தெருவில் சுளை விற்கும் ஆயாவி னுடையதைப் போன்ற உபகரணங்கள் என்னிடம் ஏதுமில்லை. இருப்பது ஒரு தேங்காய் உரிக்கும் அரிவாள் மற்றும் சில காய்கறி வெட்டும் கத்திகள் மட்டுமே!

பலாப்பழத்தை நிற்கவைத்து, அரிவாளால் ஒரே போடாக போட்டு, இரண்டாகப் பிளக்க முடியுமா? ம்ம்ம்ம். நினைக்கவே கொடூரமாகத் தோன்றவே, தாஜா செய்தே பிளப்பது எனத் தீர்மாணித்தேன்.

அரிவாட்கள் எல்லாம் ஒரே அரிவாட்கள் அல்ல... ஒவ்வொரு  வேலைக்கும் அதன் தன்மைக்கு  ஏற்றாற்போல தனித்தனி அரிவாட்கள் உள்ளன. என்னிடம் இருக்கும் அரிவாள் எந்தக் கணக்கிலும் சேராத ஒரு கருவி. அதிக பட்சமாக தேங்காயின் நாரை மட்டுமே உரிக்கும். சிலசமயம் சினம் கொண்டு இடதுகை கட்டைவிரலையும் உரிக்கும்.

சாக்பீஸால் பாலாவின் நடுவே கோடுபோட்டு, அதன் மேலாக அரிவாளால் கீறினால், ம்ம்ம்ம் ஒரு மில்லி மீட்டர் கூட உள்ளே நுழையவில்லை. அரிவாள் மொக்கையோ மொக்கை.

திருப்புளி, சுத்தியல், காய்கறி வெட்டும் சுத்தி, டெஸ்டர், கட்டிங் ப்ளையர் என வீட்டில் இருக்கும் அத்தனை ‘ஹைடெக்  உபகரணங்களைக்' கொண்டு, பழத்தின் உள்ளே நுழைந்தாயிற்று. அதற்குள் கீழே பரப்பியிருந்த அத்துனை பேப்பர்களும் சுருட்டிக் கொண்டுவிட்டன.  போகட்டும் போ.. இந்த மாசம் பழைய பேப்பர்காரனுக்குப்  போட்டு காசு வாங்கமுடியாது.. அவ்வளவுதானே?

உள்ளே நுழைந்தால் போதுமா? அதை இரண்டாகப் பிளக்க வேண்டுமே  'நரசிம்மன்' வெறும் கை விரல் நகங்களால் , ஹிரண்யகசிபுவின் குடலை உருவிப்போட்டாராமே?  அதுபற்றிய ரெஃப்ரன்ஸ் அல்லது மேனுவல் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

உட்கார்ந்து, படுத்து, தம்கட்டி இரண்டாகப் பிளக்க முயன்று, கஜினியே வெட்கப்படுவது போல, மீண்டும்  
மீண்டும் தோல்வியே கிட்டிற்று. வீட்டில் வேறு யாராவது இருந்திருந்தால், நீ கையைப்பிடி, நான் காலைப் பிடிக்கிறேன் என, பீமனைப்போல இரண்டாகக் கிழித்துப் போட்டிருக்கலாம். தனியன். யாரைக் கூப்பிடுவது. சரி.. கால்களால் ஒருபக்கம் பிடித்துக்கொண்டு, கைகளால் இழுத்தால் என்ன? சே...சே.. தின்னும் பண்டத்தில் காலை வைப்பதாவது? ஆனாலும் வேறு வழியில்லை. அதை அப்படியே வைத்துவிட்டு, இடுப்பு வரை நன்றாகக் குளித்துவிட்டு, மீண்டும் இரண்டாகப் பிளக்கும் முயற்சி... ம்ம்ம்ம்.. ஸ்டாலின் எவ்வளவுதான் முயன்றாலும் ஆட்சியைப் பிடிக்க முடியாதது போலத்தான் என் முயற்சியும்.

நேற்றைக்கு, மோடி அமெரிக்க பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போது ‘ஸ்டேன்டிங் ஒவேஷன்’ பெற்றது நினைவுக்கு வர, எழுந்து நின்று கால்களால் பழத்தின் ஒருபகுதியை இறுகப் பற்றிக் கொண்டு கைளால் ஒரே இழுப்பு.. அப்பாடா, ஒரே அடியில் மூன்று துண்டு.. பலாப்பழம் இரண்டாகப் பிளந்து மூலைக்கொன்றாகவும்,  நான் ஒருபக்கமாகவும் விழுந்துவைத்தேன்.

‘என்ன சார் சப்தம்?..’ என்றார் டெனன்ட்.

‘ஒண்ணுமில்லையப்பா.. ஒட்டடை அடிக்கிறேன்’

உஃப்.... ஒருவழியாக ஜெயித்தாயிற்று.. இனி என்ன? அமைச்சரவை அமைக்க வேண்டியது தானே?

விஷயம் அவ்வளவு சுலுவில்லை என்பது விளங்கிற்று. சுளைகள் யாவும் பதுங்கிக் கொண்டிருந்தன. வீட்டில் இருக்கும் கத்திகள் யாவும், ஆபரேஷன் தியேட்டருக்கு வந்துவிட்டன.  எதை அறுக்க எந்த கத்தி என்பது தீர்மாணமாகவில்லை. எல்லாம் மொன்னை.

ஒரு டபரா நிறைய  நல்லெண்ணை எடுத்துக் கொண்டு, அடங்காத சண்டிப் பிள்ளையை வழிக்குக் கொண்டு வருவது போல, ஒவ்வொரு சுளையாக நோண்டி எடுத்து, கார்கில் யுத்தம் போல ஒருவழியாக முடிவுற்றது. அதற்குள் வேட்டி ஒருபக்கம். துண்டு ஒருபக்கம். கிட்சன் முழுவதும் ரணகளம். 

ஒரு சுளை சாப்பிட்டுப் பார்க்கலாமா? 

பொறு..பக்கி...பொறு.. வீட்டுக்காரம்மாவின் படத்திற்கு முன்னால் வைத்து எடுக்காமல், அப்படி என்ன அவசரம்?

செலவு? நாலு கிலோ தினசரி பேப்பர். 200 மில்லி எண்ணெய். ஆறு கத்திகள். ஒரு அரிவாள். ஏழெட்டு தட்டுகள் மற்றும் இரண்டு முறம் நிறைய தாள் மற்றும் தோல்.

இவ்வளவு பிரயத்தனத்திற்கு 50 சுளைதான் என்பது அற்பமாகப் பட்டது.

சமையலறையைப் பார்ப்பதற்கு எனக்கே அச்சமாக இருந்ததால், ஃபோன் செய்து, வேலைக்கார அம்மாவை வரவழைத்து, கத்தி கபடாக்களை க்ளீன் செய்து, சமையலறையை சுத்தம் செய்யச் சொன்னால், இந்த வேலைக்கு தனியாக 100 ரூபாய் கொடு என்றாள். இதில் நமக்கு ஆப்ஷன் என்ன இருக்கிறது? சரி.. தருகிறேன். சுத்தமாகச்  செய்.

மீண்டும் குளித்துவிட்டு,  மனைவி படத்திற்கு நைவேத்தியம் வைத்துவிட்டு,  ஒரு சுளையை எடுத்து வாயில் போட்டால்...  என்ன இது, ஒரு சுவையையும் காணோம்? வைக்கோலைத் தின்பது போலிருந்தது.  கலர் என்னவோ மஞ்சளாக இருக்கே! அடுத்தது... அடுத்தது... ம்ஹூம் எல்லாச் சுளைகளுமே சுவையற்று இருந்தன.  இதற்கு பேசாமல்  கீழே பரப்பிய ‘தமிழ் ஹிந்து’ நாளிதழையே மென்று தின்றிருக்கலாம். இரண்டிலயம் ஒரு சாரமும் இல்லை.  தேன் தொட்டுக் கொண்டு சாப்பிடலாமா? வேண்டாம். ‘சுகர்’ லெவல் ஏறிவிட்டால் இன்னும் சிக்கல்.

சே.. இதென்ன இப்படி ஆன்டிக்ளைமேக்ஸ் ஆகிவிட்டதே? இப்ப என்ன செய்வது? எல்லாப் பிரயத்தனமும் வேஸ்டாகி விட்டதே?

எல்லாச் சுளைகளையும் கீறி, கொட்டைகளை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு, மீதி ‘எல்லாவற்றையும்’ ஒரே கட்டாக அரிசிச் சாக்கில் கட்டி,  குப்பைத் தொட்டியில் வீச வேண்டியது தான்.

‘எங்கே சார் வெளியே கிளம்பிட்டீங்க...?’ என்றார், டெனன்ட்.

“ஹி..ஹி.. ஒட்டடை அடித்தேனா? கொஞ்சம்  அதிகமா குப்பை சேந்துட்டுது.. கொண்டுபோய் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வரலாம் என கிளம்புகிறேன்”

எங்கள் நகரில் குப்பை கொட்ட இடம் இல்லை. குப்பை வண்டி வரும்போதோ அல்லது நாமாகவோதான் டிஸ்போஸ் செய்யனும்.

‘ஏன் சார்.. குப்பை வண்டிவருமே?’

“உள்ளே டெலிபோன் பெல் அடிக்கறாப்ல இல்லை...?”

“அப்படியா.. என் காதுல விழலியே....  தோ போய்ப் பாக்கறேன்.”


ஒருகிலோ மீட்டர் தள்ளிப் போய், முனிசிபல் குப்பைத் தொட்டியில், சாக்கைப் போட்டு விட்டு, திரும்பி வரும்பொழுது, மறக்காமல் இருபது ரூபாய்க்கு பலாச்சுளை வாங்கிவந்துவிட்டேன்.