பள்ளிக்கூட ஆசிரியர்களில் PT master-கள் எப்போதும் pet. English teacher எப்போதுமே அச்சம் தருவார்.
நம்மை அறியாமல், சினிமா நடிகர்களிடமும் அத்தகைய விருப்பு வெறுப்பு ஒட்டிக்கொள்ளும். காரணம் தெரியாது.
சௌகார் ஜானகி head mistress போல... கொஞ்சம் தள்ளி நின்றே ரசிப்போம்.
அழுமூஞ்சி கேரக்டர்களுக்கென்றே அவரை நேர்ந்து விட்டிருந்தார்கள். அவர் கவர்ச்சி வேடம் போட்டாலும், 'போனால் போகட்டும்; ரசிச்சுக்கிட்டு போ' என்ற அலட்சியம் அவருக்கு இருக்கும்.
அவரிடம் தன்னிச்சையாக ஒரு கம்பீரம் உண்டு. சற்று திமிர், கர்வம் கொண்ட உடல்மொழியும் தோற்றமும் இருக்கும்.
பல படங்களில் இது வெளிப்பட்டிருக்கும். K. பாலச்சந்தர் இதைச் சரியாகப் பயன்படுத்தியிருப்பார்.
'இரு கோடுகள்' நல்ல உதாரணம். 'புதிய பறவை', 'உயர்ந்த மனிதன்' போன்ற படங்களில் சிவாஜியின் பெரிய மனுஷ over acting-க்கு இணையான நடிப்பு.
'எதிர் நீச்சல்', 'தில்லு முல்லு', 'பாமா விஜயம்' ஆகிய படங்களில் வித்தியாசமான சௌகாரைப் பார்க்க முடிந்தது. நகைச்சுவைகூட இயல்பாக வரும். வசனங்கள் யாவும் "சரோஜ் நாராயணன்" ஸ்டைல்.
அந்த ஆளுமைத் தோற்றத்திற்கு, மரத்தைச் சுற்றி வந்து அசட்டு டூயட் பாடி ஆடும் ரோல் எடுபடாமல் போனது சரியே.
புடவை அவருக்கு விருப்பமான தேர்வாக இருந்திருக்கும்.
மரியாதையான கனவுக்கன்னியாகவும் இருப்பார்; பட்டு மாமியாகவும் இருப்பார்; கலெக்டராக வந்து அசத்துவார்.
வெள்ளைப்புடவை அணிந்த விதவையாகவோ, ஏங்கவைக்கும் சிங்கப்பூர் சிங்காரியாகவோ அசற மாட்டார்.
இரண்டு கணேசன்கள், எம்.ஜி.ஆர், கமல், ரஜினி என எல்லோருக்கும் ஈடு கொடுத்தவர்.
சென்ற தலைமுறையின் legend-களான பானுமதி, சாவித்திரி, அஞ்சலிதேவி, தேவிகா வரிசையில் மற்றுமொரு நட்சத்திரம் மறைந்தது.
94 வயது வரை, நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவருக்கு அஞ்சலி.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!