நன்பர் ஒருவரை, என்ன செய்கிறீர்கள் என வினவ, ஒரு திரைப்படத்தின் பெயரைச் சொல்லி, "மூசிக் செம்மையாக அடிச்சிருக்கான்.. கேட்குக்கிணே, இட்லி சுட்டு தின்னேன்" என்றார்.
இசையை அடிப்பதும் , இட்லியை சுடுவதும் எங்கனம் என வினவ நினைத்தாலும், கேட்க அஞ்சி வாளவிருந்தேன்.
தமிழில் பிரத்தியேகமான வார்த்தைகள் இருக்கின்றன.
தமிழில் சமையல் செய்முறைகளுக்கே தனித்தனி வினைச்சொற்கள் இருந்தன. அவை வெறும் “cook” என்ற பொதுவார்த்தை அல்ல; உணவின் தன்மை, சூடு கொடுக்கும் முறை, நீர்/எண்ணெய் பயன்பாடு, பதம் ஆகியவற்றைக் கொண்டு வினைகள் மாறும்.
இட்லி — அவித்தல்
தோசை — வார்த்தல்
அடை — தட்டுதல் வார்த்தல்
வடை — பொரித்தல்
அப்பளம் — சுடுதல்
காய்கள் - வதக்குதல்
சோறு வேகவைத்தல்
அல்லது சோறு வடித்தல்.
கஞ்சி — காய்ச்சுதல்
பாகு — காய்ச்சுதல் / பதப்படுத்துதல்
தாளித்தல்,
கிளறுதல் — கேசரி,உப்புமா போன்றவற்றை கிளறுதல்,
மசித்தல் — கிழங்கு போன்றவற்றை மசித்தல்
அரைத்தல்,
பிசைத்தல்,
உருட்டுதல்,
நொதித்தல் — மாவு புளித்தல்
பொங்குதல் — பால்/சோறு பொங்குதல்
உலர்த்துதல் — வத்தல், வடகம் உலர்த்துதல்
புகையிடுதல் — சில பாரம்பரிய உணவுகளில் புகை காட்டுதல்
சுண்டுதல் — கடலை சுண்டல் செய்தல், சுண்டுமளவு கொதிக்கவிடல்,கிண்டுதல் — களி, கூழ் போன்றவற்றை தொடர்ந்து கிளறிக் கெட்டியாக்குதல்,
துழாவுதல் — சோற்றை துழாவுதல்
தமிழில் ஒரு செயலைப் பார்க்கும் பார்வை மிகத் துல்லியமாக இருக்கும்
“சுடுதல்” என்பது பொதுவாக நெருப்பு/சூடு கொடுப்பதை மட்டுமே குறிக்கும். ஆனால் இப்போது எல்லாவற்றையும் “சுட்டேன்” என்று சொல்லிவிடுவது அந்த நுணுக்கங்களை மங்கச் செய்கிறது.
சரியான சொல்லைப் பயன்படுத்தும் பொழுது, மொழியின் சுவையும் செய்முறையின் நுணுக்கமும் காக்கப்படும்.தமிழில் சமையல் மொழி என்பது ஒரு பெரிய பண்பாட்டு களஞ்சியம் தான்.. அதேபோலத்தான் இசைக்கும்.
கலைகளுக்கும் கருவிகளுக்கும் தனித்தனி வினைச்சொற்கள் இருந்தன.
வீணையை மீட்டல்
யாழை இசைத்தல்
(“யாழ் மீட்டல்” என்றும் வரும்; ஆனால் “யாழ் இசைத்தல்”தமிழ் நயம் உடையத
மிருதங்கம் வாசித்தல் வழக்கில் வந்தது.
குரலால் பாடுதல்
ஒத்து ஊதுதல்
புல்லாங்குழல் ஊதுதல்
நாதஸ்வரம் வாசித்தல் / ஊதுதல்
மணி அடித்தல்
பறை அறைத்தல்
தவில் கொட்டுதல்
சங்கு ஊதுதல்
கம்பி இழுத்தல் (சில நாட்டுப்புற இசை வழக்குகள்)
சிலம்பம் சுழற்றுதல்
கரகம் ஆடுதல்
கூத்து ஆடுதல்/கட்டுதல்.
இப்போது “music play பண்ணு”, “டிரம் அடிச்சேன்”, “song போட்டேன்” போன்ற பொதுவழக்குகள் அதிகமாகிவிட்டன. அதனால் செயலின் தன்மையும், கருவியின் அடையாளமும், மொழியின் நயமும் மங்குகிறது.
தமிழின் சிறப்பு என்னவென்றால்: ஒரு செயலை மட்டும் சொல்லாது —அது எப்படி செய்யப்படுகிறது என்பதையும் சொல்லும்.
இது தமிழின் தொழிலறிவு சார்ந்த செறிவு.
விவசாயம், சமையல், இசை, கைவினை — எல்லாவற்றிலும் இப்படிப் பட்ட துல்லிய வினைச்சொற்கள் இருந்தன.
மொழி என்பது வெறும் தொடர்பு கருவி மட்டும் அல்ல;ஒரு சமூகத்தின் அனுபவ அறிவு சேமிப்பகமும் கூட.
No comments:
Post a Comment