Thursday, October 26, 2017

பாலித் தீவுக்கு ஒரு பயணம்.

என்னவோ, பார்க்க நினைத்திருந்த இடங்களனைத்தையும்,  உடலில் சற்றே தெம்பிருக்கும் பொழுதே, பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றுவிட்டதால்,  பார்க்க விழையும் இடங்களின் “கால நிலையும், என் பர்ஸும்”, ஒத்துவரும் பட்சத்தில் கிளம்பிவிடுகிறேன். வாழ்வது ஒருமுறை; வாழ்ந்துதான் பார்த்துவிடுவது ! இனி மீதி இருப்பது நாட்களோ மாதங்களோ... இறைவனே அறிவான். எனவே இலங்கை, துபை வரிசையில் அடுத்து பார்க்க விழைந்த இடம் ‘பாலி தீவுகள்’.

காலை, சென்னையிலிருந்து புறப்பட்டு, கோலாலம்பூர் சென்று, அங்கிருந்து பாலி. இடையில் ஒரு மணி நேரம் ப்ரேக். பாலியை அடைந்த பொழுது இரவு ஆகிவிட்டது. பாலி நேரம் இந்திய நேரத்திற்கு இரண்டரை  மணி முன்னால்.

இந்தோனேஷியாவின் 33 மாகாணங்களில் ஒன்று பாலி.  இஸ்லாமிய தேசமானாலும் இந்தத்தீவில் மட்டும்  இந்துக்களே அதிகம். பாலித்தீவுகள் முழுவதும் ஏதோ ஒரு வகையில் ராமாயணத்துடனோ, மகாபாரதத்துடனோ சம்பந்தப் பட்டுள்ளது போலத் தோன்றும். வாயு (பாயு), அக்னி, சீதா, பீமா, ராவணா,வாலி, ஹனுமன் போன்ற பெயர்கள் சர்வ சாதாரணம்.  ராமாயணா மால், கிருஷ்ணா மால், க்ரஹா அபார்ட்மென்ட்ஸ், சீதா தேவி ஷாப் போன்ற பெயர்களைப் பல இடங்களில் பார்க்கலாம்.  பல உள்ளூர் சொற்களின் மூலம் சமஸ்க்ருதமாக இருக்கிறது. கருடாஅவர்களின் ஏர்லைன்ஸ் பெயர். சுற்றுலா பேருந்துகள் பெயர் ‘பரிவசிஷ்டா’. பீமனுக்கும் அவரது புதல்வன் கடோத்கஜனுக்கும் கூட, பெரிய அளவில் சிலைகள் இருக்கின்றன.  பாலியின் தலை நகர் ‘தென்பஸார்’. பாலித்தீவு என்பது ‘வாலித் தீவு என்பதன்’ மரூ என்றார் ஒருவர். அவர்களுக்கு ‘வா’ வராது; ‘பா’ தான். வாலி-பாலி, வாயு-பாயு. நகரின் நடுவே ராமருக்கு ஒரு பிரமாண்டமான சிலை வைத்திருக்கிறார்கள்; கொள்ளை அழகு.

ஊர் முழுவதும் கோயில்கள். சிவா-விஷ்ணு-ப்ரம்மா கோயில்கள் பிரசித்தம்.  ஆனால் சுற்றுலாப் பயணிகளை ஒரு எல்லை வரைக்கும்தான் அனுமதிக்கிறார்கள்.  சன்னிதானத்திற்குள் வழிபாடு செய்பவர்கள்தான் செல்ல முடிகிறது. உள்ளூர் மக்கள் பாரம்பரிய வெள்ளுடை அணிந்து, மலர்களைக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள்.  அவர்கள் தங்களது கலாச்சாரத்திற்கு அவ்வளவு மதிப்பளிக்கிறார்கள். வீடோ, கடையோ, அபார்ட்மெண்ட்களோ எதுவாயினும் முன்னால் ஒரு மூன்றடுக்கு துளசி மாடம் போல ஒன்று அமைத்திருக்கிறார்கள்.  மேலே நாற்காலி போல ஒரு அமைப்பு. கல்லிலோ சிமெண்டிலோ அவரவர் வசதிக்கு ஏற்றாற் போல கட்டிக்கொள்கிறார்கள்.  இதில் விதி விலக்கே இல்லை. அதை ‘ப்ரைவேட் டெம்பிள்’ என்கின்றனர்.  தவறாமல் பூக்களையும் நீரையிம் கொண்டு பூஜை செய்கிறார்கள். 

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் 

மறந்தறியேன்

நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் 

னாவில் மறந்தறியேன்

உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு 

சூலை தவிர்த்தருளாய்

அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை 

அம்மானே ...என்ற தேவாரம் தான் நினைவிற்கு வந்தது.



பாலியின் பரோங் டான்ஸ் (இராமாயணா டான்ஸ்) 

பிரசித்தம்.

பாலித்தீவுகள் சுற்றுலா என்பது, டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பர்சேஸ் பண்ணுவது போல.  அவரவர்களுகு அவரவர்களின் விருப்பப்படி அனைத்தும் கிடைக்கும்.

வாட்டர் ஸ்போர்ட்ஸ் வேண்டுமா? அனைத்தும் உண்டு; ஸ்கூபா டைவ், ஸ்னார்கலிங், பாரா டைவிங், ஸ்கீயிங்க், விதவிதமான போட் சவாரிகள் என பல வகைகள்.  எனக்கு மிக விருப்பமான ஸ்கூபா டைவிங்கும், பாரா செய்லிங்கும் செய்தேன். ஸ்கூபா செல்லும் போது என் உண்மையான வயதைச் சொல்லாமல், 58 என சொல்லிவைத்தேன். உண்மையைச் சொன்னதால், அந்தமானில் ‘கிழவர்களுக்கு ஸ்கூபா கிடையாது’ என மறுத்து விட்டனர். கெஞ்சிக் கூத்தாடி செல்லும்படியாகி விட்டது.  இங்கே அப்படி நிகழக்கூடாது என்பதால் ஒரு சிறு பொய். ஒரு மணி நேரம் கடலுக்கடியில் வண்ணமிகு மீன்கள், தாவரங்கள் என கண்டுவிட்டு மேலே வந்த்தும், என் உண்மையான வயதைச் சொல்ல, ‘ நோ ப்ராப்ளம்.. யூ டன் வெல்.. என்ஜாய்’ என்றனர். இதற்குப் பரிசாக அரை மணி நேரம் இலவசமாக ‘ஸ்னார்கலிங்’ கிடைத்தது.

அடுத்து, கோயில்களா? பஞ்சமேயில்லை. ஏகப்பட்ட கோயில்கள். ‘ஜெகன்னாத் கோயில்’ உட்பட வெள்ளமென இருக்கின்றன. திருமூர்த்தி கோயில் ஒன்று இருக்கிறது... அங்கே ஓரிடத்தில் இயற்கை நீரூற்று வருகிறது. அதை குளம்போல சேகரித்து, ‘ஆவுடை’ அமைப்பில் ஆறு இடங்களில் விழுமாறு செய்திருக்கிறார்கள். அங்கே பக்திப் பரவசத்துடன் வரிசையில் நின்று ‘தீர்த்த  நீராடுகிறார்கள்’.  பெரும்பாலான கோயில்களுக்குச் செல்ல அவர்களது பாரம்பர்ய உடை அவசியம். கோயிலின் வெளியே இலவசமாக அவற்றை வழங்குகிறார்கள்.  (திரும்ப வரும்பொழுது கொடுத்து விடவேண்டும்) .  கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் கோயில்கள் அழகோ அழகு. அவற்றை மிதக்கும் கோயில்கள் என்கிறார்கள். ஹை டைட் வரும்பொழுது செல்ல இயலாது. லோ டைடின் பொழுது உள்ளே செல்லலாம்.

டனா ரோட் (மிதக்கும் கோயில்கள்), உலுவட்டு கோயில், பெரட்டான், தீர்த்த டெம்பிள்,குனுங்காவி கோயில், தாமன் அயுன் கோயில், புரா தமன் சரஸ்வதி கோயில், லெம்புயாங்க் டெம்பிள், பெஸாகி (வைஸாகி) கோயில் ஆகியன தவிர்க்கக் கூடாதவை. முக்கியமாக உலுவட்டு கோயிலை மாலையில் காணவேண்டும். மூன்று பக்கமும் கடல் சூழ அழகின் உச்சமாய் இருக்கிறது. சூரிய அஸ்தமனத்தைக் காண ஏகக் கூட்டம். கடலிலிருந்து, அதன் கரையிலேயே 200 அடி உயரத்தில் இருக்கிறது உலுவட்டு. இயற்கை வரைந்து வைத்த ஓவியம் இந்த இடம்.  இந்தத் தீவில் அழகைத் தேடி ஓட வேண்டியதே இல்லை; கண்களை மட்டும் திறந்தால் போதுக்; காணுமிடமெல்லாம் அழகு வழிந்தோடுகிறது.

‘பர்சேஸ் மேனியாக்களுக்கு’ என ஏகப்பட்ட கடைகள். கைவினைக் கடைகள் ஏராளம். எல்லா இடங்களிலும் மரவேலைச் சிற்பங்கள் கிடைக்கின்றன. ஹேண்ட் மேட் சோப்புகள், ஊதுபத்திகள், சிறு பைகள், வாசனைத் திரவியங்கள், உடைகள், மஸாஜ் ஆயில்கள் என பலதும். மரத்தில் ‘பாட்டில் ஓபனர்கள்’ செய்து வைத்திருக்கிறார்கள் பாருங்கள். எப்படித்தான் ‘அந்த டிசைனில்’ செய்ய வேண்டும் எனத் தோன்றியதோ?  

என்ன.... மால்களைத் தவிர மற்ற இடங்களில் அவர்கள் இஷ்டத்திற்கு விலை சொல்லுவார்கள். என்னைப் போன்ற கேட்டதைக்  கொடுத்துவிடும் பசுக்கள் வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தென்பஸாரில், ஒரு சிறு கைப்பை வாங்கினேன். ஒரு லட்சம் ரூபாய் சொன்னார்கள். (இந்திய ஒரு ரூபாய்க்கு 200 இந்தோனேஷிய ரூபாய் கிடைக்கும்). மிகவும் சாமர்த்தியமாகப் பேசுவதாக நினைத்து ‘ஐம்பதாயிரம் தருவியா?’ என்றேன். அந்தப் பெண்மணி உடனே தந்து விட்டாள். என் சாமர்த்தியத்தை நானே மெச்ச நினைத்த வேளையில், மற்றொரு பயணி வெறும் பத்தாயிரம் கொடுத்து வாங்கிச் சென்றார். அடப் போங்கப்பா... நீங்களும் உங்க பர்சேஸும் என நினைத்துக்கொண்டேன். அதே போல கருடன் மரச்சிலையை இந்திய மதிப்பில் ஐனூறு ரூபாய்க்கு பேரம் பேசி முடித்தபின், மற்றொருவர் அதே சிலையை நூறு ரூபாய்க்கு வாங்கிச் சென்றார். நல்லவேளையாக   நான் தனியன். இல்லாவிடில் என் சாமர்த்தியத்திற்கு முதுகில் நாலு அடி விழுந்திருக்கும். 

சிறு நீர் கழிக்க டாய்லெட் கட்டணம் மூவாயிரம் ரூபாய். மூன்று நாட்களானாலும் பரவாயில்லை; இந்தியாவிற்கே வந்துவிடலாம் எனத் தோன்றும்.

இயற்கைக் காட்சிப் பிரியர்களா? அவையும் திகட்ட திகட்ட கிடைக்கும். எரிமலைகள், ஏரிகள், மலைகள், நீர் வீழ்ச்சிகள், அழகிய கடற்கரைகள் என ஏகமாய்.  மலைச் சரிவுகளில் நெல் வயல்கள் அமைத்து பாசணம் செய்கிறார்கள். அவற்றை   Paddy Terrace என அழைகிறார்கள்.  நெல் வயல்களை வேடிக்கை பார்ப்பது நமக்கு புதிதாக இருந்தாலும், மேலை நாட்டவர்கள் கும்பல் கும்பலாய் வயல்களை பார்க்கின்றனர். அவர்களையெல்லாம், தஞ்சைக்கு அழைத்து வந்து காண்பிக்க வேண்டும் எனத் தோன்றியது.  அதே போல குரங்குக் காடுகள் என ஒரு இடம் வைத்து டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்றியிருக்கின்றனர்.  அது குரங்குகள் பார்க் என்றுதான் அழைக்க வேண்டும். கருங்குரங்குகள். வாலியின் வம்ஸாவளிகளென கூறுகின்றனர். 
ஒரு அழகிய மலைச் சரிவில், எரிமலையையும் அதனடியில் அமைந்திருக்கும் மிகப்பெரிய ஏரியையும், சம வெளியையும் கண்டுகளித்துக் கொண்டே உணவருந்துமாறு பல  இடங்கள் இருக்கின்றன.  இவற்றை மேலை நாட்டினர் அனுபவிக்கும் விதமே அலாதி. அவர்கள் அனுபவிப்பதை  நாம் காண்பதே சுற்றுலா போல இருந்தது . உணவு விடுதியின் ஓரத்தில், மலைச் சரிவைப் பார்த்த வண்ணமாய், கையில் ஒரு பீர் கேனுடன், சிற்றுடைகளில் காதலியையோ மனைவியையோ  அணைத்துக் கொண்டு, கையில் வைத்திருக்கும் டெலஸ்கோப்பில் எரிமலையை கண்டுகொண்டு,  தட்டு நிறைய உணவு வகைகளை நிரப்பிக் கொண்டு மணிக்கணக்கில் உட்கார்ந்து அனுபவிக்கின்றனர். தே பார்ன்  டு என்ஜாய்.

இதுதவிர, கேளிக்கைப் பிரியர்களா? அவற்றிற்கும் பஞ்சமில்லை. ‘அனைத்து’ வகையான கேளிக்கைகளும் உண்டு. இரவு விடுதிகள் அனைத்தும் வெகு நேரம் வரை  திறந்திருக்கின்றன. பியர்களும் அசைவ உணவுகளும் வழியும். கூடவே இசைக் கலைஞர்கள் பாடிக் கொண்டே இருக்கின்றனர்.  இசையும், நடனமும், முடிவேயில்லாத உணவுவகைகளும், மதுவும் வழிந்தோடும் இரவுகள்.  

சைவர்கள் எங்கேயாவது தந்தூரி ரொட்டியாவது கிடைக்கிறதா என அலைய வேண்டும்.  அசைவர்களுக்கு காணுமிடமெல்லாம் நாவில் நீரூறும். எங்கே பார்த்தாலும் மஸாஜ் சென்டர்கள். தாய் மஸாஜ், ஸ்டோன் மஸாஜ், லெக் மஸாஜ் என விதவிதமாய்.. சார்ஜைக் கேட்டால் தலை சுற்றும்.

இங்கே ஒரு காஃபி ப்ராஸஸிங் இடத்திற்குச் சென்றேன். எல்லாம் இந்தியாவிலேயே பார்த்ததுதான்.  ஆனால் இங்கே, ‘லுவாக் காஃபி’ என்று ஒன்று கொடுத்தார்கள். இதில் என்ன ஸ்பெஷாலிடி என வினவினால், காஃபி பழங்களை தேவாங்கு போல இருக்கும் ஒரு விலங்கு (ஏஷியன் பாம் சிவெட்) அப்படியே விழுங்குமாம். விழுங்கிவிட்டு காஃபிக் கொட்டைகளை மட்டும் அதன் மலத்தோடு புழுக்கை போடுமாம். அவற்றை சேகரித்து சுத்தம் செய்து, பின் வறுத்து காபிப் பொடி தயாரிப்பார்களாம். உவ்வேக்........ போங்கப்பா எனக்கு லியோ காஃபியே போதும்.


இங்கே விவரித்த்து கொஞ்சமே... இன்னும் காணவேண்டியது ஏராளம். நேரமும் காசும் உள்ளவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கேற்போன்ற சொர்க்கம் பாலி. சில படங்கள் மட்டும் கீழே!























Monday, October 16, 2017

துபாய்க்கு ஒரு பயணம்.

 தனது ஏழ்மையையும், மெச்சிக்கொள்ளும்படியில்லாத கலாச்சாரப்பிண்ணனியையும், கல்வியின்மையையும் ஆழக்குழி தோண்டிப் புதைத்துவிட்டு,  நாற்பதே ஆண்டுகளில் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த நாடு எதுவெனில், அது  UAE யின் அங்கமான துபை.

பனி மூடும் மலைமுகடுகள் இல்லை; நீர் வீழ்ச்சிகள் இல்லை; காடுகள் இல்லை; மக்கள் வளம் இல்லை; புராதணக் கட்டிடங்கள் இல்லை; தொழிற்சாலைகள் இல்லை. எனினும் உலக சுற்றுலாத் தலங்களில் தலையாய இடங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது இன் நாடு.

மக்கள் தொகையில் 80 சதமானவர்கள் வெளி நாட்டினர்.  யாருக்கும் வருமாண வரி இல்லை; அன் நாட்டு குடிகளுக்கு கல்வி இலவசம். மருத்துவ வசதி இலவசம்.  பெட்ரோலியம் உபயத்தில் துபை செழித்துக் கிடக்கிறது. ஒரு காலத்தில் எண்ணைய் வற்றிவிடக்கூடும் என்பதை உத்தேசித்து, சுற்றுலாவை முக்கியத் தொழிலாகமாற்றியுள்ளார் அந் நாட்டு மன்னர்.

இங்கே மக்களாட்சி இல்லை. சர்வ அதிகாரமும்ம ன்னரிடத்தும்,  அவர் குடும்பத்தினரிடமும் தான். ஆனால், உலகில் என்னென்ன சௌகரியங்கள் கிடைக்கிறதோ, அத்தனையும் தன் நாட்டு மக்கள் துய்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அவர். அவரது கணவுதான் துபை.

குற்றங்கள் மிகக் குறைவு. அரசு இயந்திரத்திடம் ஊழல் இல்லை;  நாட்டின் முன்னேற்றம், மக்களின் நலன் இவைகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறது அரசாங்கம்.  அரச குடும்பமாகவே இருந்தாலும், மக்களோடு மக்களாக, சாலை விதிகளையும் சிக்னல்களையும் மதித்து விதி மீறாமல் செல்கின்றனர். பல உயர் அரசாங்க அதிகாரிகள் கார்களையும், அரச குடும்பக் கார்களையும் சாலையில் பார்த்தேன். சைரன், பந்தோபஸ்து, கெடுபிடி ஏதும் காணோம். வரிசையில் காத்திருந்து சிக்னல் கிடைத்ததும் தான் கார் நகர்கிறது.

ஒழுங்கு என்றால் அப்படி ஒரு ஒழுங்கு! கிலோ மீட்டர் கணக்கில் வாகனங்கள்  காத்துக் கிடந்தாலும் ஒரு ஹாரண் சப்தம் இல்லை. லேன் மாறி புகுவோர் இல்லை. ஒரு வாகனத்திற்கும் மற்றொரு வாகனத்திற்கும் ஐந்து அடி இடைவெளி விட்டு நிற்கின்றனர். 

ஒரு படத்தில் வடிவேலு சொல்வாரே, அது போல, அப்படியே ரோட்டில் உணவைக் கொட்டி சாப்பிடும் அளவிற்கு, சாலைகள் யாவும் படு சுத்தம். ஒரு குப்பையைக் காணோம். அழுக்கான கார்களை வெளியில் எடுத்து வந்தால் அபராதம்;  அது யாராக இருந்தாலும்.

இப்படி ஒரு யோக்கியமான, நாட்டை மட்டுமே – அதன் மக்களை மட்டுமே கருதும் ஒரு யதேச்சியதிகாரி இந்தியாவிற்கு வாய்த்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை தடை செய்ய இயலவில்லை.

கடுமையான சட்ட திட்டங்கள். சட்டங்களை அவற்றை இயற்றியவர்களும், அவற்றை அமுல் படுத்துபவர்களும், பொது மக்களும் மீறுவதில்லை. சட்டத்தின் ஓட்டைகளைத் தேடுபவர்கள் இல்லை! விளைவு?  A disciplined  Nation. Growth is assured.  திறப்புவிழாவின் தேதியை நிர்ணயித்துவிட்டுத்தான், திட்டத்தையே  துவங்குகிறார்கள்.  துல்லியமாக நிறைவேற்று கிறார்கள். நிறைவேற்று பவர்களுக்கு எந்த விதமான் இடையூறுகளும் செய்வதில்லை.  இங்கே பண்ருட்டியில் ஒரு ரயில்வே மேம்பாலத்தைப் போடுகிறார்கள்..போடுகிறார்கள்... போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இன்னும் எத்தனை வருடங்களாகுமோ தெரியவில்லை. இத்தகைய நிர்வாகத்தைக் காண ஏக்கமாக இருக்கிறது.

சாலைகளில் மெர்ஸிடஸ்களும், லெம்போர்கினிகளும் உலா வருகின்றன. சர்வ சாதாரணமாக 12 லேன் கொண்ட சாலைகள். அத்தனையையும் மீறி துபையின்  நெருக்கடியான போக்கு வரத்து பிரசித்தம்.  பக்கத்து ஷார்ஜாவிற்குச் செல்லும் சாலையில் கண்ணிற்கெட்டிய தூரம் வரை கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாரத்தின் முதல் நாள் திங்கள் அல்ல.. ஞாயிறு. வியாழன் வெள்ளி விடுமுறை.  எனவே வியாழன் அன்று மாலையில் சாலைகள் மூச்சு முட்டுகின்றன. நம் ஊர் பல்ஸர்களை டெலிவரி பாய்கள் பயன்படுத்து கிறார்கள். டாட்டாவின் பஸ்கள் இருக்கின்றன. தொழிலாளர்களை பணியிடங்களுக்கு அழைத்துச் செல்ல.

மதியம் இரண்டு மணிக்கு துபை சர்வதேச விமான   நிலையத்தை அடைந்த பொழுது, சுள்ளென வெயில் வரவேற்றது. விமாண நிலையம் பெரிதெனப் கேள்விப்பட்டிருக்கிறேன். எவ்வளவு பெரிது என்பதை நேரில் பார்க்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது. Arrival இடத்திலிருந்து, இமிக்ரேஷன் கவுண்டர்களுக்குச் செல்ல மெட்ரோ ரயில் விட்டிருக்கிறார்கள்.  அதன் நீள அகல பரிமாணங்களை யூகித்துக் கொள்ளுங்கள்.

இமிக்ரேஷன் கவுண்டர்களில், திருப்பதி கூண்டுகளில் அம்முவது போலக் கூட்டம். ஆனாலும் சட் சட்டென தற்காலிக கவுண்டர்கள் திறக்கப்பட்டு பதினைந்து நிமிடங்களுக்குள் அத்துணை ஆயிரம்பேருக்கும் க்ளியரன்ஸ் கிடைத்துவிடுகிறது. ‘காமா சோமாவென’ செக்கிங் செய்வதில்லை;  முழுமையாக, என்ன கொண்டுவருகிறார்கள் என்பதில் உஷாராக இருக்கின்றனர். எல்லாம் எலக்ட்ரானிக் உபயம். போதை மருந்துகள் இருந்தால் கம்பி எண்ணுவது உத்திரவாதம். தடை செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன என்பதை கூகுள் செய்து, கவனமாகச் செல்வது உசிதம்.

உடைகள் விஷயத்தில் கவனம் அவசியம். ஷார்ட்ஸ் போடுவது அநாகரீகம். பிகினி சமாசாரங்களை உள்ளூரிலேயே விட்டுவிட்டு வரவேண்டும். கணவன் மணைவியாகவே இருந்தாலும், பொது இடங்களில் நாகரீகம் காப்பது அவசியம். கைகோர்ப்பது, அணைத்துக் கொளவது, நெருக்கமாக இருப்பது இவற்றிற்குத் தடா!  அதே போல பொது இடங்களில் புகை, மது போன்றவற்றிகும் தடை.  இடது கையால் பொருட்களை வாங்குவதோ-கொடுப்பதோ கௌரவமான செயல் அல்ல.

எனக்கு தூக்கம் வராது. ப்ரிஸ்கிரிப்ஷன் மருந்துகள் துணையோடுதான் உறக்கம். எனது துரதிர்ஷ்டம் xenox தடை செய்யப்பட்ட மருந்து. எனவே இங்கே புறப்படும் பொழுதே ப்ரிஸ்கிரிப்ஷனோடு மருந்து வாங்கிக் கொண்டு சென்றுவிட்டதால்  பிழைத்தேன்.

துபையிலும், அபுதாபியிலும் சில நாட்கள் கழிக்க உத்தேசித்திருந்தேன். அந்த நாட்கள் முழுவதும் பிரமிப்பு மயம். மனிதனின் கற்பனை எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ, அந்த அளவிற்கு ப்ரமாண்டமாய்,  சாத்தியப்பட்ட வடிவங்களில் எல்லாம், வாணுயர் கட்டிடங்கள்.  புகழ்பெற்ற துபை மால், உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கலிஃபா’ டவர், பணி உறையும் விளையாட்டு அரங்கம், மாலின் நடுவே பிரமாண்டமாய் ஒரு அக்கோரியம், கடலைத் தூர்த்து, ஈச்ச மரவடிவில் வடிக்கப்பட்ட செயற்கைத் தீவுகள்; துபையை இரண்டாகப் பிரிக்கும் க்ரீக் (அதில் கணிசமான தூரம் Man made),  இரவு நேரங்களில் க்ரீக் (Back water river) ஊடே மிதந்து செல்லும் வண்ணமிகு சிறுகப்பல்கள் என களிக்க ஏராளமான அம்சம். க்ரீக் படகுகளில் பயணம் செய்து கொண்டே, துபையின் இரவு நேர அழகையும்-சுவை மிகு உணவையும் ருசிக்கலாம். ஆர்கிடெக்டில் ஆர்வமுள்ளொருக்கு துபை ஒரு சொர்க்கம். புர்ஜ் கலிஃபாவின் 124 மாடிவரை சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கிறார்கள். 124 மாடிகளும் அறுபதே நொடிகளில் சென்றடைகிறது லிஃப்ட். அங்கிருந்து துபையைப் பார்ப்பது ஒரு visual delight.

துபை ஒரு Shopping Paradise. உலகில் என்னவெல்லாம் உற்பத்தி செய்யப்படுகிறதோ அவை யாவும் இங்கே கிடைக்கும். மத்தியமர் நெருங்கக்கூட இயலாத உயர்குடிகளுக்கான மால்கள், சாதாரணர்களுக்கான எதையெடுத்தாலும் 10 to 20 திராம்கள் போன்ற கடைகளும் இருக்கின்றன.  19 இந்திய ரூபாய் கொடுத்தால் ஒரு திராம் -  Arab Emirate Dirham -கிடைக்கும். பல இடங்களில் இந்திய ரூபாய்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.

துபையின் நகைக் கடைகள் உலகப் பிரச்சித்தமானவை.  நம் ஊர் கல்யாண், மலபார் நகைக் கடைகள் கூட இருக்கின்றன. கிராமிற்கு நாணூறு ரூபாயாவது விலை குறைவு.  நகைகளாக-சாதாரணமாக அணிந்துவரும் அளவிற்கு வாங்கி வரலாம். கிலோ கணக்கில் சூடிக்கொண்டு வந்தால், இமிக்ரேஷனில் மாட்டுவது உத்திரவாதம். எலக்ட்ரானிக் பொருட்கள் சகாயம்.  

ஐ-ஃபோன் 8, ரூபாய் 52,000 தான். உள்ளுர் சந்தையை சீனப் பொருட்கள் ஆக்கிரமிக்கின்றன.

உள்ளூர் மக்களுக்கு லைசென்ஸ் பேரில்தான் மது விற்கப்படும். ஆனால் ஹோட்டல்களில் ஏராளமான ‘பார்கள்’ இருக்கின்றன. அந்தந்த நாட்டு கலாச்சாரதிற்கு ஏற்ற கேளிக்கைகள் இருக்கின்றன. ஆபாசம் இல்லை.  பெண்கள் காரோட்டுகிறார்கள். சமயத்தின் பேரால் சட்டத்தில்  பாகுபாடு இல்லை.

சுற்றுலாப் பயணிகளில் கணிசமானோர் இந்தியர்களாக இருப்பதால், சைவ உணவுகள் கிடைக்கின்றன. அபுதாபியில் ‘சரவண பவன்’ கிளை கூட இருக்கிறது.  

நமது ஆங்கில அறிவு பல சமயங்களில் கைகொடுக்க மறுக்கிறது. காரணம் அவர்களது  உச்சரிப்பு. பணியாளர்களில் பலர் சீனர்கள் போலவோ, கொரியர்கள் போலவோ இருக்கின்றனர்.  நான் வாங்கிய போர்டிங் பாஸில், கேட் நெம்பர் இல்லை. கேட் நெம்பருக்கான இடத்தில் ஒரு * தான் இருந்தது.  போர்டிங் கேட்கள் எங்கே ஒளித்து வைக்கப்பட்டுள்ளன என வினவினால், ப்ராம்டாக பதில் சொல்கின்றனர். நமக்குத்தான் உச்சரிப்பு காரணமாக விளங்கவில்லை. ஒரு இளம் மங்கையிடம் விசாரித்ததில்           ‘நவ் கேத்? நவ் ப்தாப்ள..கேத் மெத்ராவ்!’  என பதில் சொன்னார். பேய் முழி விழிக்க வேண்டியிருந்தது.  நல்ல வேளையாக அருகே ஒரு பஞ்சாபி இருந்ததால், ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொன்னார். அதாவது, ‘No Gate number? No problem! Catch a metro!’ அவர்களுக்கு ‘ட்’ வராது! எல்லாம் ‘த’ தான்.

கீழ்மட்ட தொழிலாளர்களில் பெரும்பாலோர் இந்தியர்,பாகிஸ்தானியர், பாங்ளா, இலங்கை தேசத்தவர். கொளுத்தும் வெயிலில் வானுயர் கட்டிடங்களில் கயிற்றில் தொங்கிக் கொண்டும், கண்ணாடிகளைத் துடைப்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. வாட்டியடுக்கும் கடுமையான சீதோஷ்ண நிலையில்  தோட்ட வேலை, கட்டிட வேலை போன்றவற்றைச் செய்பவர்கள் பலரும் மேலே சொன்ன நாட்டினர்களே!  நன்கு படித்திருந்து நல்ல வேலையில் அமர்ந்தால் துபை சொர்க்கம் தான். கீழ் மட்ட வேலைகள் என்றால் சந்தேகமன்றி நரகமே!

இங்கே மழை என்பது அரிதானது. ஆண்டிற்கு 10 செ.மீ பெய்தாலே அதிகம். வறட்சி;உஷ்ணம். ஆனால் கடல் நீரைச் சுத்தம் செய்து (desalinisation) நகரெங்கும் வினியோகிக்கிறார்கள். அனைத்துக் கழுவு நீரும் முழுமையாகச் சுத்திகரிக்கப்பட்டு, அதன் மூலம் நகரின் சோலைகளும் மரங்களும், சொட்டு நீர்ப் பாசன முறையில் பராமரிக்கப் படுகின்றன.  மரங்களும் செடிகளும் வளர்வதற்கு ஏற மண் இல்லையாதலால்,  அவைகள் கூட இறக்குமதி செய்யப் படுகின்றன. எப்படி இருந்த நாடு, எவ்விதம் வளர்ச்சியடைந்துள்ளது என்பதை, அங்கே இருக்கும் துபை மியூசியத்தைக் கண்டாலே விளங்கும்.

எனக்கு வாய்த்த டூர் கெய்டு ஒரு தஞ்சாவூர்க்காரர்.  தமிழர். மாலிக் என்று பெயர். ப்ரொஃபெஷனல். எதைச் சொல்லவேண்டும். எப்படிச் சொல்ல வேண்டும்.. எதைச் சொல்லக் கூடாது என்பதில் வித்தகர்.

பெரிதாக மேலும் ஒரு விமாண நிலையம், ப்ரமாண்டமான கட்டிடங்கள், ஜெயண்ட் வீல், துறைமுகப் பணிகள் என இன்னமும் பல ப்ராஜக்டுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் துபை செல்லும் பொழுது பல மாற்றங்களைக் கொண்டிருக்கும், விந்தை நாடு. 

திட்டமிடலில் துபையில் நேர்ந்த இடையூறுகளைக் கவணத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு இன்னும் பெரிதாக, இன்னும் ஐம்பது வருட வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது அபுதாபி. அபுதாபியில் மிகப்பெரிய மசூதி இருக்கிறது. அனைவரும் செல்லலாம். சில உடைக் கட்டுப்பாடுகளோடு. பளிங்கினால் இழைத்து வைத்திருக்கிறார்கள்.

இப்படியும் ஒரு திட்டமிடல் இருக்க முடியுமா என்பதற்காகவும், ஷாப்பிங் அனுபவத்திற்காகவும்,  மனித முயற்சியினால் ஒரு பாலையை சோலையாக மாற்றவது எங்கனம் சாத்தியமாயிற்று என்பதற்காகவும், இந்த நாட்டைப் பார்த்து வரலாம்.

                        Click here for Some Photos


குறிப்பு:

1.    ஓரளவு ஆங்கில ஞானமும், அந்த நாட்டைப் பற்றிய அடிப்படைப் புரிதலும் இருந்தால், பேக்கேஜ் டூராக இல்லாமல், தனியாகச் செல்வது நல்லது.
2.    வெளி நாட்டு நாட்டு  நாணயமாற்றலை விமாண நிலையத்தில் செய்ய வேண்டாம். கூடுதல் செலவு.
3.    பட்ஜட் ஹோட்டல்கள் நிறைய இருக்கின்றன. கூகுளில் தேடிப் பார்த்தால் கிடைக்கும்.
4.    விமாணப் பயணத்தைத் திட்டமிடும் பொழுது, காலைப் பொழுதில் சென்றடையும் வண்ணம் திட்டமிடுதல் நல்லது.  புறப்படும் பொழுது இரவில் புறப்படல் நலம்.
5.    ஏதேனும் வாங்க மறந்துவிட்டால், ட்யூட்டி ஃப்ரீ ஷாப்கள் துபை விமான நிலையத்தில் வரிசை கட்டி நிற்கின்றன. அங்கே வாங்கிக் கொள்ளலாம்.





Sunday, September 17, 2017

இலைங்கைக்கு ஒரு சுற்றுப் பயணம்



சில வாரங்களுக்குகுன் எனது  நண்பர் ஒருவரைக் காணச் சென்றிருந்தேன். உரையாடல் நடுவே, பாஸ்போர்ட் குறித்து பேச்சு வந்தது.  என்னிடம் பாஸ்போர்டே இல்லை என்றேன். ஏதோ ஜந்துவைப் பார்ப்பது போலப் பார்த்தார் அவர். ....ஏன்?

“எனக்கு இந்த அரசாங்க ஃபாரம்கள், அவர்களது நடைமுறைகள், கையூட்டுகள், போலீஸ் வெரிஃபிகேஷன்கள் எல்லாமே அலர்ஜி. ஏதாவது ஆன்லைனில் இருந்தால் பார்க்கலாம்”  என்றேன்.

“அதெல்லாம் அந்தக் காலம். இப்ப ஆன்லைனில் எல்லாமே முடிந்துவிடும்” என்றார்அவர். வீட்டிற்குவந்து, பாஸ்போர்ட் வலைமனைக்குச் சென்று, அவர்கள் கேட்ட தகவல்களையும், கட்டணத்தையும் செலுத்தினால்,அடுத்த மூன்றாவது நாளில் (நாமே தேர்வு செய்யும் நாள்தான்) சென்னை-தாம்பரத்திற்கு வரச் சொன்னார்கள்.  ஏற்கனவே ஃப்ர்ஸ்ட் நேம், சர்நேம், லாஸ்ட் நேம் குறித்த குழப்பத்திலும், பான் கார்டோடும், ஆதார் கார்டோடும், அவற்றை வருமானவரித் துறையினரோடு இணைக்கவும்   நீண்ட காலமாக மன்றாடிக் கொண்டிருந்தேன்.  இந்த லட்சணத்தில் அரசாங்கம் என்னும் ‘செக்கு மாட்டு மந்த பூதத்தொடு’ போராடி நான் ‘பலராமன்’ தான் என்பதை விளங்க வைத்து, பாஸ்போர்ட் பெறுவது நடக்காத காரியம் என்ற அவ நம்பிக்கையோடு, அலுவலகம் சென்றால், ஆச்சர்யம் காத்துக் கொண்டிருந்தது.  நான் அள்ளிச்சென்ற பள்ளி சர்டிபிகேட், பான், டிபார்ட்மென்ட் ஐ.டி, வோட்டர் ஐ.டி,ரேஷன் கார்டு எல்லாவற்றையும் அள்ளி என் கையிலேயே திணித்துவிட்டு, ஆதாரை மட்டும் எடுத்துக் கொண்டனர். பதினைந்து நிமிடத்தில் வேலை முடிந்தது.  ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியன் என்பதால், பாஸ்போர்ட்டைக் கொடுத்துவிட்டு, பின்னர் காவல்துறை வெரிஃபிகேஷன் போதும் என்றனர்.  பாஸ்போர்ட் அலுவலகம் டி.ஸி.எஸ் ஊழியர்களால் இயக்கப்படுகிறது. மின்னல் வேகம். அன்போடும், கர்டஸியோடும் நடந்து கொள்கின்றனர்.

பாஸ்போர்ட் தயாரிக்கப் படுகிறது, பிரிண்ட் செய்ய அனுப்பப் படுகிறது, பிரிண்ட் செய்யப்பட்டுவிட்டது, தபாலில் அனுப்பப் பட்டுவிட்டது என வரிசையாக குறுஞ்செய்தி. ‘இது இந்தியா தானா?’ என வியந்து கொண்டேன். போலீஸ் வெரிஃபிகேஷன் முடிய  நாள் எடுத்துக் கொண்டது வேறு விஷயம். சட்ட ரீதியாகவே 21 நாட்கள் ஆகலாம்.

ஒரு சந்தேகம் வந்துவிட்டது.  பாஸ்போர்ட் வந்துவிட்டது தான். அதைப் பயன்படுத்திப் பார்த்தால் தானே, அது செல்லுபடியாகுமா ஆகாதா எனக் கண்டுபிடிக்க ஏதுவாகும்!

குறிஞ்சிப்பாடிக்கோ, குள்ளஞ்சாவடிக்கோ செல்ல பாஸ்போர்ட் தேவைப்படாது. சரி.., கட்டுப்படியாகும் கட்டணத்தில் எந்த நாட்டிற்குச் செல்லலாம் என கூகுளாண்டவரை நோண்டிக் கொண்டிருந்த பொழுது,  ‘மதுரை திருமுருகன் சுற்றுலா நிறுவனம்’ கண்ணில் தென்பட்டது. ஏற்கனவே,  இந்த நிறுவனம் பற்றி நல்ல முறையில் கேள்விப்பட்டிருந்ததால், அவர்கள் மூலம் இலங்கை சென்றுவரத் தீர்மாணித்தேன். நல்லவேளை, சந்தேகப்பட்டபடி இல்லாமல், செல்லுபடியாகும் பாஸ்போர்ட்தான். Srilankan ETA வந்துவிட்டது.

விமான நிலைய, ‘இமிக்ரேஷன் ப்ரொஸிஜர்’ என்பது சலிக்க வைக்கும், தவிர்க்க முடியாத இம்சை. ஷூமுதல், பெல்ட் வரை கழற்று. பெல்டை எடுத்துவிட்டால், ஜீன்ஸ் இடுப்பில் நிற்காது என்பெதெல்லாம் அவர்கள் கவலையா என்ன? ஏன் வந்தாய்? எத்தனை நாள் இருப்பாய்? உன்னை அழைத்தது யார்? வந்த இடத்தில் உன் விலாசம் என்ன? உஃப்....    “இதற்கே இப்படி சலிச்சுக்கறீங்களே? அமெரிக்கா போய்ப்பாருங்க. இமிக்ரேஷன் அங்கே ஒரு கெஜப்பிரசவம்” என்றார் ஒருவர். ஒரு வழியாக வெளியே வந்தால், திருமுருகன் டூர் மேனேஜர் காத்திருந்தார்.

வழிகாட்டியாக, ‘திரு ஞானப்பிரகாசம்’ என்பவர் வந்திருந்தார்.  வழிகாட்டி உத்தியோகத்திற்கு மிகப் பொருத்தமான நபர். தமிழர். பன்மொழி பேசுபவர்.  சதா புன்னகை செய்ய பழகிக் கொண்டிருந்தார். ஃப்ரொஃப்ஷனல், தன்மையானவர், எதைச் சொல்ல வேணும்,  எந்தக் கேள்விகளைத் தவிர்க்க வேண்டும், நெருடலான விஷயங்களை எப்படி கண்டுகொள்ளாமல் கடந்து செல்லவேணும்,  எவற்றைக் காண்பிக்க வேண்டும் என்பவற்றையெல்லாம் இயல்பாகச் செய்து கொண்டிருந்தார். ‘கண்டிப்பதைக்’ கண்டுபிடிக்க இயலாதவாறு செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு இடத்திற்குச் செல்லும் பொழுதும், எவற்றைக் காண வேணும், எதைச் செய்யக் கூடாது, அந்த இடத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை ‘ஓர் எல்லைக் குட்பட்டு’ தெளிவாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

எங்கெங்கு, என்னென்ன பார்த்தேன் என்பவற்றை  விஸ்தாரமாக விவரிக்க வேண்டிய அவசியமில்லை என்ன நினைக்கிறேன்.  ஏனெனில் அவை யாவரும் அறிந்திருக்கும் விஷயங்களே!  கீழே கொடுக்கப் பட்டிருக்கும் புகைப்படத் தொகுப்பும் (சுட்டி), புகைப்படத்தினோடே, ஆங்காங்கே அடியில் கொடுக்கப் பட்டிருக்கும் விவரணமும் போதுமானதென்று கருதுகிறேன். கண்டி, கண்டி-கதிர்காமம், கதிர்காமம் – முருகன் கோயில்,நுவரிலியா (நுவர இலியா), கொழும்பு ஆகியவை பார்த்த நகரங்கள்.  
நுவரலியா நம் ஊட்டியைப் போல இருக்கிறது. நம் ஊர் அளவு நசுக்கித் தள்ளும் கும்பல் இல்லை. மரங்களும் சோலைகளும் நன்கு பராமரிக்கப் படுகின்றன. இதமான குளிர்.  கட்டுக்குள் இருக்கும் கடைகள்; மக்கள் தொகை. அனுபவிக்க இனிமையான கோடைவாசத்தலம்.

கண்டி-கதிர்காம்மும், கதிர்காமும் வெவ்வேறு இடங்கள். கண்டி-கதிர்காமம் கோயில், கண்டி நகரத்தில் உள்ளது. இலங்கையில் மத்திய பூமி. எம்ஜிஆர் பிறந்த விட்டு இங்கேதான் இருக்கிறது. 

கதிர்காமம்  இலங்கையின் தென் கடைக்கோடி. இங்கே இஸ்லாமியர்கள், புத்தர்கள், இந்துக்கள் என பலரும் வருகின்றனர். நான் சென்ற பொழுது மாலைப் பூஜை நடைபெற்றது. முருகனின் பூஜைக்கான சோடசோபாரங்கள் இஸ்லாமியர்களால் கொண்டுவரப்படுகின்றன. முருகனின் திரைக்கு முன்னால், இஸ்லாமியர்கள் கைகூப்பி வணங்குவதும், முருகன் சன்னிதானத்திற்குப் பின்னாலேயே இருக்கும் ஒரு புத்த விஹாமும், அருகிலேயே இருக்கும் ஒரு மசூதியும்... இதெல்லாம் கதிர்காமத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு காட்சி. அந்த ஏரியா முழுவதற்கும் (இந்து,புத்த,இஸ்லாமிய இடங்கள்) அனைத்திற்கும் ஒரே Deed. ஆச்சர்யமாக இல்லை?

கண்டியில் எம்.ஜி.ஆர் படித்த பள்ளி, புத்தரின் புனிதப்பல் பாதுகாக்கப்பட்டிருக்கும் கோயில், மெய் சிலிர்க்க வைக்கும் கதிர்காமம் முருகன் கோயில், ராவணன் நீர்வீழ்ச்சி (தற்போது குறைந்த அளவே நீர் விழுகின்றது),  ரம்போடா நீர்வீழ்ச்சி, சீதை சிறைவைக்கப்பட்ட அசோகவனம்,  ஹனுமன் சீதையைக் கண்ட இடம், அவர் எரித்த அசோகவனம், ஹனுமன் கோயில் ஆகியவை நினைவில் நிற்பவை.

இலங்கையின் கடற்கரைகள் ரம்மியமானவை.  அழகு சொட்டுபவை. வர்ணஜாலம் காட்டும் மணற்பாங்குகள். போர்ட்ப்ளேயரின் கடற்கரையை நினைவுபடுத்துபவை.  சுனாமி பேரழிவின் சுவடுகள் இன்னமும் இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் காணக் கிடைக்கின்றன. பல இடங்களில் கடற்கரையின் வடிவம் சுனாமிக்குப் பிறகு மாறிப் போயிருக்கிறது.

கொழும்பு நகரம், வளர்ந்துவரும் பெரிய நகரம். எங்கு பார்த்தாலும் வானுயர் கட்டிடங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஐந்து வருடம் கழித்துப்பாருங்கள். எங்கள் கொழுப்புவை நீங்களெல்லாம் அண்ணாந்துதான் பார்க்கவேண்டும் என்றார் ஞானப்பிரகாசம்.
நம்மையெல்லாம் 80களில் கட்டிப்போட்டிருந்த ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின்’  சிறியகட்டிட்த்தையும் பார்த்தேன். மறக்கக் கூடிய தினங்களா அவை? ராஜாவும், மயில்வாகனமும், அப்துல் ஹமீதும் அனைத்துத் தமிழர்கள் மனதில் குடிகொண்டிருந்த தினங்களல்லவா அவை? ‘இரவின் மடியில்..’ கேட்காமல் உறங்கமாட்டோமல்லவா?
ஆங்கிலேயர்களும், டச்சுக்காரர்களும் கட்டிய கட்டிடங்கள் இன்னமும் பிரமாண்டமாய் ஜொலிக்கின்றன.  ‘சார்க்’ (South_Asian_Association_for_Regional_Cooperation) மாநாடு சார்க் கல்ச்சுரல் சென்டர் என்ற மிக அழகான கட்டிடத்தில் நடைபெற்றிருக்கிறது.
பல இடங்களிலும் காணப்படும் தமிழ் அறிவிப்புப் பலகைகளும், வழிகாட்டியின் ஆங்கிலம் கலக்காத தமிழும், வெளிநாட்டில் இருப்பதாக உணரவைக்கவில்லை. தமிழ் நாட்டின் மற்றொரு மாவட்டத்திற்கு வந்த்தொரு உணர்வையே தந்தது.

இனி குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சில விஷயங்கள்:

சாலைகளில் எவரும் குப்பை போடுவதில்லை. எச்சில் துப்புவதில்லை. சாலைகள் கூடுமானவரை நேர்த்தியாக இருக்கின்றன. சாலை விதிகள் யாவும் சரியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றன. பாதசாரிகள் சாலைகளைக் கடக்க மார்க் செய்யப்பட்டுள்ள இடங்களில் எவரேனும் வந்தால், வாகனங்கள் யாவும் நின்றுவிடுகின்றன.  காவல்துறை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தக் கட்டுப்பாடு இருக்கிறது. ‘ஹைவேயாக’ இருந்தாலும் கூட சாலையோரத்தில் எவரும் மலஜலம் கழிப்பதில்லை. எந்த மரத்தினடியிலும் ‘பாட்டில்களைக்’ காணமுடியவில்லை.  பொது இடங்களில் புகை பிடிப்பதில்லை. போக்குவரத்துக் காவல்துறையினர் விதிகளைக் கடைப்பிடிக்கின்றனர்.  ‘விதி’ களை வேறு எதற்கும் பயன்படுத்துவதில்லை.  இரவு ஏழு மணிக்கெல்லாம் ஊர் பொதுவாக அடங்கிவிடுகிறது.
இந்திய 43 பைசாவிற்கு இலங்கையின் ஒரு ரூபாய் கிடைக்கும்.  நாட்டின் பொருளாதாரம் வெளிநாட்டு உதவிகளையும், சுற்றுலாவையும், டீ ஏற்றுமதியையும் நம்பியிருக்கிறது.
இன்றைய தேதியில் எவரும் போரை விரும்பவில்லை.  நாற்பது வருட போர், அவர்களை சிந்திக்க வைத்திருக்கிறது.

தற்போதைய பிரதமர், ரணில் விக்ரம சிங்கே ஆட்சியை ‘பரவாயில்லை’ என்கின்றனர் தமிழர்கள்.  ஒவ்வொரு சிங்களக் குழந்தையும் தமிழ் படித்தாக வேண்டும்.  ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் சிங்களம் கற்றாக வேண்டும்.  தமிழ்க் குழந்தைகளும்-சிங்களக் குழந்தைகளும் தமிழ் பேசுவது ‘எவ்வளவு நன்றாக இருக்கிறது தெரியுமா?’ என்றார் கைட்.
ஆனால்,  ரொட்டியின் எல்லாப் பக்கமும் ‘வெள்ளையாக’ இல்லை. ‘கருத்த’ பக்கமும் இருக்கிறது. இன்னமும் பல தமிழர்கள் ‘சிறைகளில்’ வைக்கப் பட்டிருக்கின்றனர்.  தமிழர்களின் பல இடங்களிலிருந்து ராணுவம் திரும்பப்பெறப் படவில்லை.  தமிழர்களுக்கான வீடுகள் கட்டித்தரப்படவில்லை. பலர் இன்னமும் முகாம்களில்தான் இருக்கிறார்களாம்.
புலிகள் மீது பல புகார்கள் கூறப்படலாம். ஆனால் அவர்கள் இல்லையென்றிருந்தால், தமிழர்கள் நிலைமை இன்னமும் கீழாக இருந்திருக்கக் கூடும். அந்த அளவிற்குத் தமிழர்கள் சொல்லொனா துயரங்களை அனுபவித்திருக்கிறார்கள்.

அனைவரும் புலிகள் ஆதரவாளர்கள் அல்ல. மலையகத்தோட்டத்  தமிழர்கள்- யாழ்ப்பானத் தமிழர்கள்-மற்றதமிழர்கள் என பலரும் பல்வேறுவகை எண்ண ஓட்டங்களைக் கொண்டிருக்கின்றனர். இந்தியா உட்பட, சர்வதேச அரசாங்கங்கள் செய்யக் கூடிய காரியம் என்னவென்றால், தமிழர்கள் முழுமையான சரிசம உரிமையோடு இலங்கையில் வாழ்வதற்கு ஏற்பாட்டையும், அதற்குண்டான உத்தரவாதத்தைச் செய்யச் சொல்லி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது தான். முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுவித்து புணர்வாழ்வு வாழ ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தமிழ்ப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தப்படுவது (பேப்பரில் அல்ல-உண்மையாகவே) அவசியம்.




Sunday, August 27, 2017

சீரடி


நீண்ட நாட்களாகவே, சீரடி சென்றுவர வேண்டும் என்று ஒரு எண்ணம் அவ்வப்போது தோன்றி மறையும். அவர் அழைக்கவில்லை; அவர் அழைத்தால்தான் அவரைக் காணும் பாக்கியம் கிட்டும் என பலர் சொல்வார்கள்.  திருப்பதிக்கும் இதே வசனங்களைச் சொல்வார்கள்.  ‘போகாமலிருப்பதற்கும் அடிக்கடி போய்வருவதற்கும்’ இந்த வாசகங்களைச் சொல்லிக்கொள்வது வசதியானதுதான் என்றாலும், அதில் எனக்கு உடன்பாடில்லை; தீர்மாணம், உந்துதல், முயற்சி, சந்தர்ப்ப சூழ்னிலை ஆகியவையே யாத்திரைக்கு உகந்த காரணிகளாக எனக்குத் தோன்றும்.

நாம் இருவரும்  சீரடிக்குப் போய்வரவேண்டும் என எனது நன்பர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.  அவர் பல பணிகளில் அகப்பட்டுக் கொண்டமையால்,  நான் மட்டுமாவது சென்றுவர வேண்டும் எனத் தோன்றியது.

உண்மையில், எனக்கு சீரடி எந்த உந்துதலையும், போயே ஆகவேண்டும் என்ற தவிப்பையும் உண்டு பண்ணியதே இல்லை. ‘இண்டிகோ’ ஆஃபர் ஒன்று வந்தமையால் பயன்படுத்திக் கொண்டு பயணத்திட்டத்தை இறுதி செய்தேன்.

காலை பத்தரைக்கு விமானம் புனே நகரின் தரையைத்தொட்டபொழுது, பளீரென்ற வானிலை. புனேயிலிருந்து சீரடி செல்லும் நெருக்கடியான சாலை. நான்கு வழிச் சாலைதான். எனினும் சீரடி செல்ல ஆறு மணி நேரம் பிடித்தது.

சீரடியை அடையும் பொழுது மாலை மணி ஐந்து. சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சீரடி கோயிலை அடையும் பொழுது மணி ஆறு. தரிசனத்திற்காக காத்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து  மிரண்டு போகவேண்டியிருந்த்தது. என்ன ஒரு கூட்டம்? திருப்பதி போல எங்கு திரும்பினாலும் மனிதத் தலைகளே! நிறைய பேர்கள் ஆந்திராவிலிருந்து வருகிறார்கள். இருநூறு ரூபாய் டிக்கட் வாங்கிக் கொண்டு சற்றே முன்னால் சென்றேன்.

இதற்கு முன்னால் சீரடி சென்று வந்தோர்களது அனுபவத்தைக் கேட்டுக் கொண்டு இங்கு வருவது நல்லது.  ஏனெனில், இந்த இடத்தில், பாபா சமாதி கோயில், பாபா சம்ஸ்தான், சாவடி, த்வார்காமி,ஆஞ்சனேயர் கோயில், ம்யூசியம், கண்டோபா கோயில், லட்சுமிபாய் மந்திர், அவருடன் வாழ்ந்த பல மகான்களின் சமாதிகள் என பார்க்க/தரிசிக்க பல  இடங்கள் இருக்கின்றன.  இந்த இடங்களைப்பற்றிய அறிவிப்புப் பலகைகள், வழிகாட்டிகள் இல்லை. ஸ்பெஷல் தரிசன டிக்கட் (200 ரூபாய்) வாங்க எங்கே செல்லவேண்டும் எனவும் அறிவிப்புகள் இல்லை. தர்ம தரிசன நுழைவாயில், ஸ்பெஷல் தரிசன நுழைவாயில் போன்றவை எங்கே இருக்கின்றன என்பவை தெளிவாக இல்லை.  ஒருவேளை இந்தியில் எங்கேயாவது எழுதிவைத்திருக்கிறார்களோ என்னவோ? சமாதிகோயிலுக்குள் நுழைய மூன்று முக்கிய கேட்கள் இருக்கின்றன. விசாரித்துக் கொள்ள வேண்டும்.

பாபாவிற்கு பல்வேறுவகையான ஆரத்திகள், காலை  நான்குமுதல் (காக்கட ஆரத்தி) இரவு பத்துமணிவரை (ஷேஜ் ஆரத்தி) நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆரத்தியும் இருபது நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். ஆரத்தியின் பொழுது, சர்வ பக்தர்களும் ஆரத்திப் பாடலை உடன் பாடிக்கொண்டு, பரவசமாய் இருக்கிறார்கள்.  அதீதமான நம்பிக்கையும் பக்தியும் இல்லாமல் இந்த நிலை சாத்தியமாகவே ஆகாது.
எல்லாக் கோயில்களைப் போலவும் வழியெங்கும் நெருக்கியடித்துக் கொண்டு கடைகள். பூச்செண்டு வாங்கச் சொல்லி வற்புறுத்தும் சிறு வியாபாரிகள்.  இவைகள் அனைத்தையும் தாண்டி கோயிலினுள் நுழையும் பொழுது, மகத்தான அமைதியும், நிம்மதியும், திருப்தியும் வழிந்தோடும்.

பாபாவைத் தரிசிக்க மூன்று வரிசைகளில் அனுமதிக்கிறார்கள். இடது புறம், வலது புறம், நேரே என மூன்று பாதைகள். மூன்று பாதைகளிலும் பாத தரிசனம் கிடைக்கும். இது தவிர த்வார்காமி, முக தரிசனம் ஆகிய இடங்களில் பெரிய திரைகள் அமைத்து நேரடி ஒளிபரப்பும் செய்கிறார்கள். சீரடி போனேன்; சரியாக தரிசனம் கிடைக்கவில்லை என்ற புகாருக்கே வாய்ப்பில்லை.

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு நுழைவாயில். இது தவிர ‘முக தரிசனம்’ செய்ய ஒரு இடம் இருக்கிறது. அருகே சென்று  தரிசிக்க இயலாது; ஆனால் இந்த இடத்திலிருந்து  தெளிவாக பார்க்க இயலும். நல்ல ஏற்பாடு.

மாலை தரிசனம் முடித்துவிட்டு, மீண்டும் காலை தரிசனம் செய்துவிட்டு, அருகே இருக்கும் மேலே குறிப்பிட்ட, பார்க்க வேண்டிய இடங்கள் அனைத்தையும் தரிசனம் செய்தாயிற்று. திருப்பும் வழியில்  பூட்டுகளற்ற ‘சனி சிங்க்னாப்பூர்’, ரேணுகாதேவி கோயில் ஆகியவற்றைக் கண்டு ஊர் திரும்பினேன்.  நினைவில்  நிற்கும்  பயணம் . 
                    To View Some Photos, Kindly Click here