Tuesday, April 4, 2017

மறக்கவொண்ணா குடந்தை

சில ஊர்களின் பெயர்களை உச்சரித்த மாத்திரத்தில்,  அந்த ஊர்களுக்கான ஒரு பிரத்யேகமான உலகம் சிருஷ்டிக்கப்பட்டுவிடும். எந்த வர்ணனையுமே தேவையில்லை.   நினைந்தவுடன் ஊரும் தாய்ப்பால் போல,  சில ஊரின் நினைவுகளே காலங்கடந்த உலகிற்கு இட்டுச் செல்லும்.

முதன் முதலில் ராமேஸ்வரம் சென்றபொழுதும் இதே உணர்வுகள்தான். அந்த பிரம்மாண் டமான பாலத்தை, ரயில்  தடக்-தடக் என விழுங்கிச் செல்லும் கணத்தில், மனது சடாரென யுகங்கள் தாண்டி பின்னோக்கிச் சென்றுவிட்டது.
காற்று முழுவதும் ராமரும் சீதையும் கலந்திருந்தார்கள்.  கண்ணில் கண்ட மாந்தர்கள் அனைவரும் ராம சேனையாகவே தோன்றினர். ஏதோ, மந்திரித்து விடப்பட்டவன் போல, ராமகாவியத்தினூடே நானும் ஒரு ஏதோ ஒரு கதாபாத்திரமாக மாறி உலவக் கிளம்பிவிடுவேன். எங்கு பார்த்தாலும், ராமாயண கதா பாத்திரங்கள் பேரில் ஒரு தீர்த்தம் இருக்கும். விதவிதமான சாதுக்களும், யாத்ரீகர்களும், அக்னி தீர்த்தமும் நம்மை சரித்திரகாலத்திற்கு, டைம் மிஷின் இல்லாமலேயே அழைத்துச் செல்லும்.

அதே போன்ற ஒரு பெயர்தான் கும்பகோணம். 

இன்று எங்களது குலதெய்வம் அமைந்திருக்கும் கன்னியாக்குறிச்சி வடிவழகியம்மன் (என்ன ஒரு அழகான தமிழ்ப்பெயர்?) கோவிலுக்குச் சென்றுவிட்டு வரும் வழியில் மன்னார்குடி யையும், கும்பகோணத்தையும் தொட்டுவிட்டு சென்றேன்.

மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோயிலைப்பற்றி புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது? பழமையும், அழகும் கொட்டிக்கிடக்கும் பிரும்மாண்டமான கோயில். சென்ற சமயம் சந்தான ராஜ கோபலனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதுவரை காணக் கிடைக்காத தரிசனம். அழகு கொஞ்சும் தாயார். திருப்தியான தரிசனம். (சந்தான கோபாலனை, ஒரு தாம்பாளத்தில் அமர்த்தி அபிஷேகிக்க வேண்டாமா? அப்படியே சிமன்ட் திண்ணையொன்றின் கிடத்தி அபிஷேபிப்பது கொஞ்சம் நெருடலாக இருந்தது. என்ன தாத்பர்யமோ தெரியவில்லை) ஆனால் அங்கே, வெகுகாலமாக ஜாடைகாட்டிப் பேசும் பட்டாச்சார்யார் ஒருவர்தான் சந்தான கோபாலனுக்கு அபிஷேகம் நடக்கப் போகிறது; போய்ப்பாருங்கள் என அனுப்பிவைத்தார். பங்குனி உத்திரம் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
கோயிலின் வெளியே மாஃபியாக்களின் போஸ்டர். உள்ளே அவர்கள் அளித்த ஓவியங்கள் சில, பிரதான இடத்தில்.

கோயிலைவிட்டு வெளியே வரும்பொழுது, எனது அபிமான உபன்யாசகர் ‘ஜடாயு’ அவர்களின் உரை இன்று இரவு ஏழு மணிக்கு எனப் போட்டிருந்தது.  அடாடா... முன்பேயே தெரிந்திருந்தால், வேறு மாதிரி திட்டமிட்டு, அவரது சொற்பொழிவைக் கேட்டிருக்கலாமே என்று தோன்றியது. YouTubeல் அப்லோட் செய்தால் பார்க்கலாம்.

அடுத்தது  அபிமான குடந்தை!

துளிர் வெற்றிலையா, அகலமான வாழை இலையா, ‘கடுக்கென’ இருக்கும் மாவடுவா, தொட்டால் இரண்டு நாட்களுக்கு மணந்துகொண்டிருக்கும் பெருங்காயமா, ரசத்திற்கு சுவையூட்டும் ஈயச் சொம்பா, பஞ்சகச்சத்திற்கேற்ற பத்தாறு வேஷ்டியா, ஜீவனுடன் உருவாக்கப்படும் தெய்வங்களின் வெண்கலச் சிலைகளா, பரவசமூட்டும் குத்துவிளக்குகளா, எத்தனை தடவை வந்தாலும் பார்ப்பதற்கு இன்னமும் விடுபட்டிருக்கும் முடிவில்லாத கோயில்களின் பட்டியலா, மகாமகக் குளமா, பொற்றாமரைக் குளமா, கண்ணுக் கெட்டிய தூரத்திற்கு மலைகளே இல்லாத சூழலில் வரைந்து வைத்தாற்போல இருக்கும் ராமர்கோயில் சிற்பங்களா, மலைப்பூட்டும் சாரங்கபாணியா, வைத்தகண் வாங்காமல் பார்க்கவைக்கும் தாராசுரமா? யுகங்களைத் தாண்டி நிற்பதாக புராணங்கள் சொல்லும்  கும்பேஸ்வரரா, மணக்கும் மங்களவிலாஸ் காபியா, இன்னமும் காலை ஒன்பது மணிக்கே   சாப்பாடு   தயாராகும் வெங்கட்ரமணா ஹோட்டலா  .... எதுதான் நம்மை காலம் தாண்டி இழுத்துச் செல்லும் வல்லமையை கும்பகோணத்திற்கு தருகிறது? தெரியவில்லை.  இன்னும் சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு முடிவில்லாத பெருமைகளைக் கொண்டதல்லவா கும்பகோணம்!  குடந்தை உருவாக்கிய தலைவர்கள், வித்தகர்கள் எத்தனைபேர்? சில்வர் ட்ங் ஸ்ரீனிவாச சாஸ்திரிகளையும், கனிதமேதை ராமானுஜரையும் மறக்கமுடியுமா?

குடந்தையைக் கடக்கும் பொழுது, இந்த ஊரைப்பற்றி மேலே சொன்ன நினைவுகள் யாவும் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் துவங்கியது. எனது நன்பர் BT Arasu குடந்தை முராரி ஸ்வீட்ஸின் டிரை (Dry Jamoon) பற்றிச் சொல்லியிருந்தார். ராமர் கோயிலுக்கு வரும் வழியில் ஒரு முராரி ஸ்வீட்ஸைப்பார்த்து வண்டியை நிறுத்தி விசாரித்தால் அது ‘அண்ணா முராரி’யாம். விலகிச் சென்று கொஞ்ச தூரம் பயணித்து ராமர் கோயிலுக்கு முன்பாக ஒரு பெரிய முராரியைக் கண்டு, டிரைஜாமூனை வாங்கிக் கொண்டு, விசாரித்தால் அதுவும் தலைமையக முராரியில்லையாம்.  அது பெரிய கடைத்தெருவில் இருக்காம். இது ‘பெரியவர்’ முராரியாம். அட போங்கடா... இன்னும் எத்தனை ஸ்ரீ முணியாண்டிவிலாஸ் இருக்கிறதோ தெரியவில்லை.
அதனால் என்ன?என் காதலி குடந்தைக்கு விஜயம் செய்வதை விட்டு விடப்போகிறேனா என்ன?






மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி கோயில் 


Saturday, April 1, 2017

“ரெட்” பஸ்.

தாராளமயமாக்கல் உலகில், பொதுத் துறை நிறுவனங்கள் என்றாலே, ஒரு அசூயையுடன் பார்க்கும் காலம் இது. அவர்கள் வேலை செய்ய மாட்டார்கள்; சதா சம்பள உயர்வுகேட்டு போராடுவார்கள்; தரமான சேவை இருக்காது... போன்ற இத்யாதி அபிப்ராயம்தான் பொ.து நிறுவனங்கள் மீது.

இதில் ஏதும் உண்மையில்லை என வாதிடலாகாது.  பெரும்பாலும் சேவைக்குறைபாடுகள் நிறைந்ததுதான். ஆனால் தனியார் நிறுவனங்கள்  யாவும் உத்தம புத்திரர்கள் அல்ல.

ஆனால், இப்போது சொல்லவிருப்பது BSNL ஐப்பற்றி அல்ல. தனியார் ஆம்னி பஸ் நிறுவனங்களைப் பற்றியது.
நேற்று, கடலூரிலிருந்து, ஹொசூருக்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தது. ட்ரெயின் வசதி இல்லை. கடலூரிலிருந்தும், பாண்டியிலிருந்தும் 25 பஸ்களாவது தினந்தோறும் பெங்களூருக்குப் புறப்பட்டுச் செல்கின்றன. ஆனால் சேலம்-ஹொசூர் வழியாக பெங்களூருக்குச் செல்லும் ட்ரெயின் வாரத்திற்கு ஒன்றே ஒன்றுதான். கடலூர்-விருத்தாஜலம்-சேலம் அகல ரயில்பாதை வெட்டியாக இருக்கிறது. அண்டர் யுடிலைஸ்ட் ட்ரேக் என்றால் த.நாவில் இதுதானாகத்தான் இருக்கும். கூடுதல் ரயில் விட்டால் என்ன?

அது ஒருபுறமிருக்க, நான் ‘ரெட் பஸ்’ மூலமாக ஹொசூருக்கு ஒரு டிக்கட் புக் செய்தேன். எனக்கு வாய்த்த பஸ் ‘எஸ்.ஆர்.எம்’ பஸ் சர்வீஸ். ஏஸி-ஸ்லீப்பர்.  போர்டிங் பாயின்ட் என்று சொல்லி, ‘சிட்டி டிராவல்ஸ்’ என்று ஒரு இடத்தைக் குறிப்பிட்டு, வேல் முருகன் தியேட்டர் அருகில் என லேண்ட் மார்க் குறிப்பிடப்பட்டிருந்தது; சிட்டி டிராவல்ஸ்ன் தொலைபேசி எண்ணும் குறிப்பிடப் பட்டிருந்தது. இருந்தாலும் இடத்தை உறுதி செய்து கொள்ள, ரெட்பஸ் கொடுத்த, சிட்டிபஸ் காண்டாக்ட் எண்ணைத் தொடர்புகொள்ள, அது எப்பொழுதும்  ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. ரெட் பஸ்ஸைத் தொடர்பு கொண்டால், அவர்கள் சென்னை எண்கள் சிலவற்றைக் கொடுக்க, அவர்கள் அணைவரும் ‘ரிப்வேன் விங்கிள்’ போலத் தூங்கப் போய்விட்டார்கள் போல; ஒருவரும் தொலைபேசியை எடுக்கவில்லை.

இது என்ன சோதனை என் நொந்துகொண்டு, இரவு ஒன்பதைரைக்கே (ஷெட்யுல்ட்  டிபார்சர் 10.15 pm)  சென்று பார்த்தால், சிட்டி டிராவல்ஸில், ஷட்டர் இறக்கப்பட்டு ஒரு பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. கடையில் ஒருவரும் இல்லை. இருட்டு.  ஒரு பெரும் போராட்டத்திற்குப் பின் ஒரு புண்ணியவான் லைனில் வந்தார். ‘யோவ்... பஸ்வருமா வராதா? எங்கேதான் போர்டிங் பாயின்ட்? நீ சொன்ன ஆபீஸில் பூட்டுல்லப்பா தொங்குது?” என கடுப்படிக்க, அவர் கூலாக, சார் அவுங்க (ரெட் பஸ்), ஏதாவது ஒரு நெம்பரைக் கொடுத்துடுவாங்க.. எனக்கும் (சிட்டி டிராவல்ஸ்) ரெட் பஸ்ஸுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஏதோ வயசானவங்க அப்படீங்கறதால சொல்றேன்; கேட்டுக்கங்க. பெரியார் டிப்போவுக்கு முன்னாலேயே நின்னுகிட்டிருங்க... ஒரு பத்தேமுக்காலுக்கு வரும். வந்தா கையைக் காட்டி ஏறிக்குங்க..” வைத்துவிட்டார் கடவுள்.

கையைக் காட்டி ஏறிக் கொள்வதா? இரவு நேரத்தில், காட்டராக்ட் கண்ணை வைத்துக்கொண்டு, அதிபயங்கர வேகத்தில், கண்ணைக்கூசும் ஹெட்லைடோடு வரும் பஸ்ஸைஅடையாளம் கண்டுகொண்டு கைகாட்டுவது எங்கனம்? யாரைக் கேட்க? அருள் வாக்கு சொல்வதோடு விலகிவிட்டாரே சிட்டி டிராவல்ஸ்.

மூத்திர நாற்றம், கொசுக் கூட்டத்தின் படையெடுப்பு ஆகியவற்றைப் பொறுத்துக் கொண்டு ஒரு மணி நேரம் ரோடில் தவம்.

ஒரு வழியாக 10.50க்கு வந்தது எஸ்.ஆர்.எம் பஸ். பாய்ந்து சென்று கைகாட்டி, ‘அப்பாடா... “ என ஏறிக் கொண்டேன்.
அதன் பிறகுதான் வந்தது வினை.

திண்டிவனம் தாண்டி, திருவண்ணாமலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது பஸ். திடீரென பஸ் முழுவதும். ஏதொ எரியும் வாசனை. புகை.

பஸ்ஸில் உதவிக்கு இருக்கும் ஒரு ஆள், அலறிப் புடைத்துக் கொண்டு, எல்லோரும் பஸ்ஸைவிட்டு இறங்குங்க... ஓடுங்க... அவசரம் என அலறினார்.

பயனிகள் யாவரும் பதறிப்போய் ஓடினர்.  பஸ்ஸின் ‘டைனமோ’ எரிந்து விட்டிருந்தது.  அதனால் பஸ்ஸினுள் புகை. நாற்றம். நல்லவேளை. டிரைவர் சமயோசிதமாக வண்டியை நிறுத்தி விட்டு, எல்லோரையும் இறக்கிவிட்டார். இல்லாவிடில், தீ பரவிவிட்டிருந்தால், தூக்கத்திலேயே,அனைவரும் அடையாளம் தெரியாத அளவிற்கு கருகியே செத்திருக்க வேண்டும்.  பெங்களூர்-ஹைதராபாத் ஆம்னி பஸ் ஒன்று இப்படிதானே முப்பது பேரை பலி கொண்டது?

இந்த க்ரைஸிஸை பஸ்ஸின் நிர்வாகம் எதிர்கொண்ட விதம் வினோதாம இருந்தது.  ரோடில் பெண்களும் குழந்தைகளும், சில பெரியவர்களும், நடு இரவில்-ஒரு அத்வானத்தில் அம்போவென நிற்கிறார்கள். உங்களது ஹெட் ஆபீஸைத் தொடர்புகொண்டு, ஒரு வேனையாவது (VAN) ஏற்பாடு செய்யுங்கள். எங்களை அருகில் இருக்கும் பெரிய ஊரிலோ, ஹொசூரிலோ இறக்கிவிடுங்கள். அங்கு வேறு பஸ் பிடிசுக்கிரோம்; இந்த சாலையில் ஆம்னிபஸ்கள் வராது; போக்கு பஸ்களில் ஏற்ற/ஏற முடியாது; கூட்டமாக இருக்கும் என்ற என் கோரிக்கை எவன் காதிலும் விழவில்லை. ரெட்பஸ் காரர்கள் டெம்ளேட் பதில்களைக் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர, நடு இரவில், நிர்க்கதியாய் நிற்கும் பயணிகளைப் பற்றி யாதொரு கவலையும் இல்லை. வேறு ஏதாவது பஸ் வந்தால் அதில் ஏற்றிவிடுவார் டிரைவர் என்பதுதான் திரும்பத் திரும்ப சொல்லப் பட்டது.  

வேறு பஸ்ஸோ-வேனோ ஏற்பாடு செய்தால், காசு செலவாகுமே? தனியாருக்கு லாபம் மட்டும்தானே குறி?  இரவு மூன்று மணிவரை அவர்களோடு போராடிவிட்டு, வேறு வழியின்றி  ஒரு போக்கு பஸ்ஸில் ஏறி, நான் கடலூருக்கே திரும்பி வந்துவிட்டேன்.

ஒரு க்ரைஸிஸ் என்றால் இப்படியா, நிர்வாகம் நடந்து கொள்ளும்? நல்ல வேளை பெரும் அளவி தீ பரவவில்லை. பரவியிருந்தால் என்னாவது? அப்பொழுதும்  ரெட் பஸ்காரர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்களா?
இதே,  அரசு நிறுவனமாக இருந்தால், வேறு ஒரு பஸ் வந்திருக்கும். சட்டையைப் பிடித்துக்கேட்க, ஒரு டிவிஷனல் மேனஜர், கிளை மேனேஜர் இருப்பார். இங்கே, தொலைபேசியை ஆன்ஸர் செய்யக் கூட ஆளில்லை.
இதுதான் ஆம்னி பஸ்களின் சேவை. ஒரு டோக்கன் ப்ரொடெஸ்டாக ரீஃபண்ட் கேட்டிருக்கிறேன். தரமாட்டார்கள். அவ்வளவு தான் அவர்களது தர்மம்..நியாயம்.




Wednesday, March 29, 2017

மனுஷ்யபுத்திரனுக்கு வீடில்லை...

இன்று ‘தமிழ் ஹிந்து’ பத்திரிகையில், மனுஷ்யபுத்திரனுக்கு வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை என்பது குறித்து, ஒரு முழுப்பக்கக்  கட்டுரை வெளிவந்துள்ளது. கட்டுரையின் சாரம் என்னவென்றால்,  அவர் குடியிருந்த வீட்டினை உரிமையாளர் விற்றுவிட்டதால், வீட்டைக் காலி செய்ய வேண்டிய கட்டாயம், அவருக்கு ஏற்பட்டுள்ளது. வேறு வீடு தேடிக் கொண்டிருக்கிறார்.  ஒட்டு மொத்த சென்னையும் இந்துத்துவாவிற்குப் பின்னால் சென்றுவிட்டதால்,  ஷாகுல் ஹமீது என்னும் மனுஷ்யபுத்திரனுக்கு, அவர் இஸ்லாமியர் என்ற காரணத்தாலேயே வாடகைக்கு வீடு மறுக்கப்படுகிறது என குற்றம் சாட்டுகிறார்.இஸ்லாமியர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லையா எனக் கேட்டுள்ளார்.

கால ஓட்டத்தில், ஒரு காலத்தில் ‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு’ என்றும் தற்போது ‘மவுண்ட் ரோடு மாவோயிஸ்டு’ என்றும் வர்ணிக்கப்பட்டு நக்கல் செய்யப்படும் இந்தப் பத்திரிகை, இக் கட்டுரையை, இவ்வளவு பெரிய அளவில் வெளியிட்டுள்ளதன் நோக்கம் தெளிவானது.

அப்பத்திரிகை நினைத்திருந்தால், ஒரு இந்துவிற்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு அமர்த்திக் கொடுத்திருக்காதா?மேம்போக்காகப் பார்ப்பதற்கு, மதச் சார்பற்றவர்களை வெகுண்டெழ வைக்கும் கட்டுரைபோலத் தோன்றினாலும், உண்மையில் இந்து-இஸ்லாமிய பாகுபாட்டை தீவீரமாக்கும் உள் நோக்கம் கொண்ட கட்டுரை. சமுதாயத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும் அடிப்படைவாத சக்திகளின் வேறு ஒரு முகம்தான் இக்கட்டுரை. வலது எக்ஸ்ட்ரீமுகு  நேர் எதிர் முகாம். ஏதோ,  மொத்த இந்தியாவும் முஸ்லீம்களுக்கு எதிராக திரும்பிவிட்டது என்ற  மாயத்தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; அதன் மூலம் தனது ‘அரசியலுக்கு’ ஏதாவது இரை கிடைக்காதா என்று ஏங்கும் நரித்தனம்தான் அந்தச் செய்தியின் பின்னனி என சந்தேகிக்கிறேன்.

அவர் குடியிருந்த வீடு, ஒரு இந்துவுக்குச் சொந்தமானதுதான் என்பதை எங்கும் சொல்லவில்லை, திரு. ஹமீது.

உண்மையில் வீடு வாடகைக்கு விடுபவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, இஸ்லாமியர்களுக்கு வீடு கொடுப்பதில்லை எனத் தீர்மாணித்துவிட்டார்களா என்ன? அப்படியெல்லாம் இல்லை. 

வாடகைக்கு விடுபவர்களின் நோக்கம் மூன்று தான்.
ஒன்று ‘அடிதடியில் ஈடுபடும் நபர்கள்’, ‘ரௌடிக்கூட்டம்’, ‘சமுதாய விரோத/பண்பாட்டு விரோத ஆசாமிகள்’ யாரும் வாடகைக்கு வந்து விடக் கூடாது. இரண்டு ‘வாடகை தவறாது கொடுக்கும் நபராக இருக்க வேண்டும். மூன்று, வீட்டினை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இதுதவிர அசைவ உணவு சமைப்பவர்கள் வேண்டாம் என்ற ஒரு சிறு பிரிவு இருக்கும். இதில் இஸ்லாமியர்கள் எங்கே வந்தார்கள்?

1973-ல், நான் வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தேன். ஒரு ஒண்டுக் குடித்தனம் கிடைத்தது. ஆனால் ஓனர், ‘ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குத்தான்’ கொடுக்க இயலும் என்றார். அவர் மறைமுகமாக குறிப்பிடும் சமுதாயத்தைச் சார்ந்தவந்தான் நான் என்று சொல்லி, வாடகைக்கு வர எனக்கு விருப்பமில்லை. ‘சரி.. பரவாயில்லை, வேறு வீடு பார்த்துக் கொள்கிறேன்..’ எனக் கிளம்பும்போது, அவரே,  ‘நீங்க அசைவமா..?’ என்றார். ‘இல்லை..’ என்றேன். சரி மூன்று மாதம் மாத்திரம் இருந்து கொள்ளுங்கள்; பிறகு காலி செய்யவேண்டும் என்று சொல்லி, மூன்று மாத வாடகையை முன்னதாகவே வாங்கிக் கொண்டார். எனக்கு அப்போது அவசியம் வீடு தேவைப் பட்டதால், அதற்கு உடன் பட்டேன்.  

இதில் ஒரு விசித்திரம் இருக்கிறது. வீட்டின் ஓனர், அவர் குடியமர்த்த விரும்பிய சமுதாயத்தைச் சார்ந்தவரில்லை. குடிவந்தபின் பிரிதொரு நாள், அவரிடம் கேட்டேன். “நீங்கள், அந்தச் சமுதாயத்தைச் சார்ந்தவரும் இல்லை.. ஆனால் அந்த சமுதாயத்தவருக்குத்தான் வீடு வாடகைக்கு விடுவேன் என்றீர்களே, எதற்காக? “ என்றேன். அவர் படு கேஷூவலாக, அதெல்லாம் ஒன்றுமில்லைசார்.. அவர்கள் ஒண்ணாந்தேதியானா சரியா வாடகை கொடுத்து விடுவார்கள். வாடகை ஏத்தினா மறுப்பேதும் சொல்ல மாட்டார்கள். சண்டை சச்சரவுக்குப் போக மாட்டாங்க. நம்ம கண்டிஷனுக்கு பெரும்பாலும் ஒத்துகிட்டு, தலையை ஆட்டிகிட்டு போயிடுவாங்க.. அதான்” என்றார்.

இது தான் வீட்டு உரிமையாளர்களின் சைக்காலஜி. ரகளை, வம்பு - தும்பு இல்லாத ஆட்கள் வேண்டும். அவ்வளவே! 

இஸ்லாமியர்கள் மட்டுமல்ல; காவல் துறையைச் சார்ந்தவர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள், ரௌடி எலிமென்ட்ஸ், பல இடங்களில் பேச்சுலர்கள்.. என பலருக்கும் வீடு கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. இதைப்பற்றி இப்பத்திரிகை என்றாவது தமாஷாகக் கூட எழுதியிருக்கிறதா?

இஸ்லாமியர்கள் என்றாலே, வன்முறையாளர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது யார்? இந்த மீடியாக்கள் தானே? மீடியாக்களுக்கு பரபரப்பு வேண்டும், சர்குலேஷன் ஏறனும். தனது முதலாளியின் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்றாற்போல, கருத்துருவாக்கம் செய்யும் வகையில், செய்திகளை ‘பிரசன்ட்’ செய்யனும். அவ்வளவுதான்.

இன்று பத்திரிகையில் அவரது செய்தி வந்துவிட்டது. இனி, எவரேனும் இஸ்லாமியர் அல்லாத ஒருவர், வலிந்து தனது வீட்டினை மனுஷ்யபுத்திரனுக்கு வாடகைக்குத் தரக்கூடும். அதை ‘ஹிண்டு’ வெளியிடாமலும் போகும்.

நாடு பிரிவினை அடைந்தபோது, தனது அக்கம்பக்கத்தி லிருக்கும் இஸ்லாமியர்களை தங்கள் வீட்டிற்குள் ஒளித்துவைத்து, மதக் கலவரங்களிலிருந்து காப்பாற்றிய இந்துக்கள் இங்கே ஏராளம். அதுதான் இந்த நாட்டின் பாரம்பர்யம். அதைக் காப்பாற்றும் வகையில், முன்னெடுத்துச் செல்லும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும்.
பொறுப்பற்றவகையில் செய்திகளை வெளியிடுவது எந்தவகையான பத்திரிகை தர்மமென்று தெரியவில்லை.

Monday, March 27, 2017

தூக்கம்.

தூக்க மாத்திரைக்கு அடிமையாகி இருபத்தைந்து வருஷங்களாகிவிட்டன. எந்தக் கணத்தில், எந்த தினத்தில் இந்த மாத்திரை என்னை ஆட்கொண்டது என சரியாக நினைவுக்கு வரவில்லை. 

என் தகுதிக்கு மீறி நானாக அலுவலகத்தில் ஏற்றுக் கொண்ட பொறுப்பின் சுமை தந்த அழுத்தமா அல்லது மனைவியின் பெரும் குறட்டை ஒலி ஏற்படுத்திய இடைஞ்சல் காரணமா தெரியவில்லை. தொலைந்த தூக்கத்தைப் பற்றி, ஒரு நாள் எனது நன்பர் ஒருவரிடம் புலம்பிக் கொண்டிருந்த பொழுது, ‘அதிகாலை நடைப்பயிற்சி’ ஆரோக்கியத்திற்கு நல்லது என சிபாரிசு செய்தார்.  இதுதான் தூக்க மாத்திரை குழியில் சிக்க வைத்துவிட்டது என நினைக்கிறேன்.

வீட்டிலிருந்து ஐந்து கி.மீ தள்ளியிருக்கும் ஸ்டேடியம் ஒன்றிற்கு  நடைப் பயிற்சி (வாக்கிங் என்பது எப்படி நடைப் ‘பயிற்சி’ ஆகும்?)  செல்ல வேண்டும். நன்பரது வீடு ஸ்டேடியத்திற்கு அருகில்தான். ஆனால் நான், அதிகாலை நாலு மணிக்கே எழுந்தால்தான் அவரோடு இணைந்து ‘பயிற்சி’ செய்ய சாத்தியமாகும். இரவு பன்னிரண்டு அல்லது ஒரு மணிக்கு தூங்கி அதிகாலை நாலுமணிக்கு எழுவது சிக்கலை மேலும் சிடுக்காக்கியது.  இந்த வாக்கிங் ஷெட்யூல் எனக்கு ஒத்து வரவில்லை என புகார் செய்தபொழுது,  அவர் அந்த மாத்திரையை அறிமுகப் படுத்திவைத்தார். கடுகத்தனை மஞ்சள் மாத்திரை, எட்டு மணிக்குள்ளாக தூங்கவைத்து, அதிகாலையில் எழுவதை எளிதாக்கியது. போதிய தூக்கமும் கிடைத்ததாக சந்தோஷமாக உணர்ந்தேன்.  ஆனால் அது மெல்ல, மெல்ல என்னை விழுங்கிவருவதை, நான் முழுமையாக விழுங்கப்பட்டபின் தான் உணரமுடிந்தது.

முதலை என்னை விழுங்கிவிட்டதை உணர்ந்து வெளியே வர எத்தனித்த பொழுது, வேறு ஒரு அழுத்தம் வாழ்க்கையில் ஏற்பட்டது.  என் மனைவி நோய்வாய்ப்பட்டார்.  

என்றைக்குமே நான் ஒரு ஆரோக்கியனாக இருந்ததில்லை. அறுபது – அறுபத்தைந்தை நிறைவு செய்தாலே போதும், அதுவே பெரிய விஷயம்  என நினைத்துக் கொண்டிருந்த பொழுது, மிக ஆரோக்கியமான பெண்மணியான மனைவிக்கு வந்த நோய் என்னைப் பைத்தியம் பிடிக்க வைத்து விட்டது. நோய் கண்டுபிடிக்கப் பட்ட நாள்முதல், அவர் மறையும் வரையிலான இரண்டு ஆண்டுகள் பற்றி, இன்று எனக்கு எதுவுமே நினைவில் இல்லை. பித்து பிடித்தாற் போல, புலம்பியிருக்கிறேன். அழுது புரண்டிருக்கிறேன். வீட்டின் சகல அதிகாரங்களும், பொறுப்புகளும் அவரிடமே இருந்தது. 

இரவுகளில் அவர் பக்கம் அமர்ந்து ஒரு மொகலாய மன்னன் பிரார்த்திக் கொண்ட்துபோல என் உயிரை எடுத்துக் கொண்டு, மனைவியின் உயிரை விட்டுவிடுமாறு கடவுளிடம் இரைந்திருக்கிறேன். எவ்வளவு நாள்தான் தூங்காமலிருக்க முடியும்? மாத்திரையின் அளவை இரட்டிப்பாக்க வேண்டியிருந்தது.

இடி விழுந்தாற்போல அவர் மறைந்து போனபின், தூக்கம் என்பதேது? துக்கம், தனிமை, இயலாமை, சுய இரக்கம், உறவுகளின் உதாசீனம் எல்லாம் சேர்ந்து மாத்திரையின் துணையைத் தவிர்க்க இயலாததாக்கிவிட்டன.

சம்பிரதாயமான அறிவுரைகள் எதுவும் உதவவில்லை. குறித்த நேரத்தில் படு-தியானம் செய்-மனப்பயிற்சி, 4-5-6 மூச்சுப்பயிற்சி போன்ற இத்தியாதிகள் எல்லாவற்றிற்கும் பெப்பேதான்.

ஆயுர்வேதம், சித்தா, ஆங்கிலமருத்துவம் எதுவும் உதவவில்லை.  ஒரு ஆயுர்வேத மருத்துவர்  மட்டும் அணுசரனையாகச் சொன்னார். மனிதன் தூங்கியாக வேண்டுமே? ஏற்கனவே முதுமை அடைந்துவிட்ட நிலையில், சரியாகத் தூங்காமலிருப்பது, தூக்க மருந்து உண்பதால் ஏற்படும் விளைவுகளைவிட அபாயகரமானதாகும். எனவே, மருந்தின் அளவைக் கூட்டாமல், அப்படியே தொடருங்கள் என்றார். எனக்கும் அதுவே சரியெனத் தோன்றுகிறது.

அது சரி.... அந்தக் கதையை இங்கே ஏன் சொல்கிறேன்?

வியாதிக்கு மருந்து எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், அன்றாடம் நடைபெற்றாக வேண்டிய உடல் ரொட்டீன்களுக்கு மருந்தின் துணை நாடாதீர்கள்.
காலைக் கடன்களைக் கழிக்க மருந்து, பசி எடுக்க மருந்து, உண்டது ஜீரணமாக மருந்து, செக்ஸுக்கு மருந்து, தூக்கத்திற்கு மருந்து,  சத்துக்கு மருந்து என அவஸ்தைப் படுபவர்களை அறிவேன்.  இவையாவும் புதை குழி. மீளமுடியா ட்ராப்.

While any drug use often begin as voluntary behaviors, addiction prompts chemical alterations in the brain that affect memory, behavior and the perception of pleasure and pain. Conscious decisions turn into compulsive actions, and major health, financial and social consequences.

ஆரம்பத்திலேயே எச்சரிக்கையாய் இருந்துவிடுங்கள். 

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட சம்பிரதாயமான 

குறிப்புகள் (நெட்டில் ஏகமாய் காணக் கிடைக்கும்) ஆரம்ப 

காலங்களில் நிச்சயம் உதவும்.



Saturday, March 11, 2017

‘விருஞ்சிபுரம் – மார்க்க பந்தீஸ்வரர்’

ஒரு குடும்ப விழாவிற்கான அழைப்பிதழ் வந்தது. அனுப்பியவர் பெங்களூரில் வசிக்கிறார். விழா நடைபெறும் இடமாக அவர் குறிப்பிட்டிருந்தது ‘விருஞ்சிபுரம்’. சொந்த ஊரிலும் இல்லாமல், வாழும் இடத்திலும் இல்லாமல், இதென்ன ‘விருஞ்சிபுரம்?’

விழா நடைபெறும் விருஞ்சிபுரத்திற்குச் சென்றபொழுதுதான், அந்த தலத்தில், 'மார்க்கபந்தீஸ்வரர் -  மரகதவல்லி  திருக்கோயில் இருப்பதே தெரிந்த்து.  

தமிழ்நாட்டில் தான் எவ்வளவு கலைநயம் மிளிரும் கோயில்கள்? எந்தப் பெருமைமிகு பெரிய கோயில்களுக்கும் சளைத்ததல்ல, இத்தலம். கோயில் கோபுரமும், மூலவர் மார்க்க பந்தீஸ்வரரும், பரிவாரங்களும், மரகதவல்லியம்மனும் எவ்வளவு அழகு? இவ்வளவு நாட்களாக தரிசிக்காமல் இருந்துவிட்டாயே என என்னை நானே திட்டிக்கொள்ளும் அளவிற்கு பேரழில்.

இது  ஒரு வைப்புத் தலம்.  வேலூரிலிருந்து பெங்களூர் செல்லும் சாலையில், 13வது கிலோ மீட்டரில் இருக்கிறது. பாலாற்றிலிருந்து சற்று தூரத்தில் அமைந்திருக்கிறது.  இவ்வாற்றை க்ஷீரநதி என்கிறார் கோயிலில் இருந்த ஒரு பெரியவர். (வடமொழியில் க்ஷீரம் என்றால் பால்) இறைப்பணிக்காக பாலாகவே ஓடிய நதி இது என்றார் அவர்.  பாலை விடுங்கள், தண்ணீரே இல்லை. அட...  தண்ணீர் கூட வேண்டாம். மணல் கூட இல்லை. கட்டாந்தரையாக புதர்கள் மண்டிக்கிடக்கிறது நதி.

சிவபெருமானின் தலைமுடியினைக் கண்டதாகப் பொய்யுரைத்த பிரம்மன் தண்டனை பெற்றதனால் , இவ்வூரில் சிவநாதன்-நயினா நந்தினி தம்பதிக்கு மகனாகப் பிறந்து இறைவனைப் பூஜித்தாராம். இவனுக்கு பிரம்மோபதேசம் செய்விப்பதற்கு முன்னரே தந்தை இறந்துவிட, சிவபெருமானே முதியவர் தோற்றத்தில் வந்து, தீட்சையும் உபதேசமும் செய்வித்தாராம்.பிரம்மனுக்கு விரிஞ்சன் என்ற பெயருண்டு. எனவே விரிஞ்சிபுரம்.  எனவேதான் , விழா நடத்த இத்தலத்தைத் தேர்ந்தெடுத்தத்தின் இரகசியம் புரிந்தது. 

தலவிருட்சம் ‘பெண் பனைமரம்’. ஆச்சர்யமாக இருந்தது. கோயிலின் உள்ளேயே  பிரகாரத்தில் உள்ளது இப்பனைமரம். மூலவர் சுயம்பு மூர்த்தி. பிரம்மனுக்கு (அந்த சிறுவனுக்கு) பூஜை செய்ய ஏதுவாக தலை சாய்த்து இருக்கிறாராம். பங்குனி மாதத்தில் மூலவர் மீது, சூரிய கிரணங்கள் விழும். 800 முதல் ஆயிரம் ஆண்டுகள் வரையான பழமையான கோயில்.

குழந்தைப்பேறு வேண்டியும், திருமண தடை நீக்கக்கோரியும் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.

கோயில் உள்ளே, மூலவர் சன்னதிக்கு (வெளிப் பிரகாரத்தில்) நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. தூண்கள் யாவற்றிலும் கலை நயம். கும்பகோனம் ராமஸ்வாமி கோயில் தூண் சிற்பங்களை நினைவுபடுத்துகிறது. மாக்கல் போன்ற மென்மையான கற்கள் அல்ல; கடினக் கற்கள்! இதில் எப்படித்தான் இவ்வளவு நுட்பமான, நேர்த்தியான சிற்பங்களை வடித்தார்களோ? 

உண்மையில் விரிஞ்சிபுர மார்க்கபந்தீஸ்வர்ர் (வழித்துணை) கோயில் எதிர்பாரா ஆச்சர்யத்தைத் தந்த திருத்தலம். அருகில் ‘பள்ளி கொண்டா’ என்ற ஊரிலும், இரத்தினகிரி மலையிலும் புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன.

வேலூர் பக்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள். இக்கோயிலின் மதிலழகு.


 
முன் வாயில் - ராஜ கோபுரம்.

துவஜஸ்தம்பம் 




கற்பக்கிரஹத்தின் பின்புறம், கெஜப்ருஷ்ட வடிவில் 


தல விருட்சம் 

எத்தனை பேரின் பிரார்த்தனைகளோ 

சிம்ம தீர்த்த நுழைவாயில் 

மதிலழகு 

Wednesday, February 8, 2017

ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டாணம்.

ஒரு முறை திருவெண்காடு (ஸ்வேதாரண்யம்) சென்றபொழுது,பரமசிவேந்திரர்  அதிஷ்டாணத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.   அங்கே நிலவிய சக்தி நிலையினைக் கண்டு மெய்மறந்து நிற்கும் பொழுது, அங்கே இருக்கும் காரியஸ்தர், கரூர் அருகே இருக்கும் சதாசிவபிரமேந்திரரின் ஜீவசமாதிக்கு சென்றிருக்கிறீர்களா என்றார் (அதிஷ்டாணம்) . இல்லை என்று சொல்ல, புன்னகைத்துவிட்டு, ‘சென்றுபாருங்கள்’ என்று மட்டும் சொன்னார்.

அதுமுதற்கொண்டு கரூர் அருகே உள்ள நெரூரில் அமைந்திருக்கும் அந்த அதிஷ்டாணத்தை தரிசிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். அத்திட்டம் ஏனோ தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.  அவர் நம்மை கூப்பிடவில்லை என்று ஏமாற்றவிரும்பவில்லை. அங்கு சென்றுவர அவ்வளவு முயற்சி எடுக்கவில்லை என்பதே உண்மை.

நேற்று, சட்டென அங்கே சென்றுவரத் தீர்மாணித்து அதிகாலையில் புறப்பட்டேன். கரூரிலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது நெரூர் என்னும் சிற்றூர்.  பெரம்பலூர்-முசிறி வழியாக்ச் சென்றதால், கரூர் நகரத்தின் உள்ளே செல்லவில்லை.

இங்கே ஜீவ சமாதி கொண்டிருக்கும் சதாசிவ பிரமேந்திரர், பல பாடல்களை இயற்றியவர். அவர் இயற்றியவற்றுள் சிலவே கிடைக்கப்பெற்றன எனச் சொல்லப்படுகிறது. ‘மானஸ ஸஞ்சர்ரே..’, ‘ பஜரே ரகுவீரம்..’ போன்ற கீர்த்தனைகள் இவர் இயற்றியதுதான்.

துறவி. பிரம்ம ஞாணி. சுமார் 400 வருடங்களுக்குமுன் வாழ்ந்தவர். ஆடை துறந்தவர். அத்வைத ஞானி. இவரது ஜீவ சமாதி அளப்பறிய சக்தி வாய்ந்தது.  நம்பிக்கை உள்ளோர் உணரலாம். இவரது இயற்பெயர் சிவராம கிருஷ்ணன். காஞ்சி மடத்தின் 57வது பீடாதிபதி,  ஸ்ரீ பரசிவேந்திர சுவாமிகள், இவரது ஞானத்தைக் கண்டு, பிரம்மேந்திரர் என்று பெயர் சூட்டினார். 

இவருக்கு காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்க அழைக்கப் பட்டதாகவும், அதை இவர் மறுத்து விட்டதாகவும் சொல்கிறார்கள். இவர் மதுரையைச் சார்ந்தவர்.

பிரமாதமான வாதத்திறமை கொண்டவர். இதனாலேயே, மைசூர் மகாராஜா ஆஸ்தான வித்வானாக்கிக் கொண்டாராம். ஒரு முறை பரசிவேந்திரர்  இவரைப் பார்த்து, ‘ஏன் இவ்வளவு பேசுகிறாய்..உனக்கு நாவடக்கம் தேவை எனக் கூற, அது முதற்கொண்டு யாரிடமும் வாதம்புரிவதை நிறுத்திக் கொண்டார். மௌனகுரு.

அமைதியை விரும்பிய இந்த மகான், இறுதியில் வந்தடைந்த இடம் நெரூர். அருகிலேயே காவிரி. வறண்டு கிடக்கிறது. தென்னை பணை மரங்கள் உட்பட பல மரங்கள் பட்டுப்போய் நிற்கின்றன.

நேற்று (07/01/2017), இந்த மகான் அதிஷ்டாணம் அமைந்த, விஸ்வனாதர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஏழாவது வருடமாம். அபிஷேக ஆராதானைகள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தன. தற்செயலாக இந்த நாள் அமைந்தது அதிருஷ்டம்தான்.

இவரைப்பற்றி பல செய்திகளைக் கூறுகிறார்கள். அவர் வாழ்ந்த சமயத்தில், ஆற்றில் கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைக் கூப்பிட்டு, மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவை தன் மகிமையால் காண்பிப்பாராம். யாரோ ஒரு மன்னன், இவரது ஆடையற்ற நிலையினைக் கண்டு, இவரது கையை வெட்டிவிட, அதுபற்றி யாதொரு உணர்வுமின்றி அவர் போய்க் கொண்டிருந்தாராம். ஒருமுறை ஆற்று வெள்ளத்தின்போது, தவறுதலாக மௌன நிலையில் அமர்ந்திருந்த இவரையும் மணல் மூட்டைகளைக் கொண்டு மூடிவிட்டனராம். பின் சில நாட்களுக்குப் பிறகு தவறுணர்ந்து, மீண்டும் தோண்டிப் பார்க்க, எந்த நிலையில் இருந்தாரோ, அதே நிலையில் காணப்பட்டாராம். இப்படி பல கதைகளைச் சொல்கிறார்கள்.  

எது எப்படியோ, அவரது அதிஷ்டாணத்தருகே செல்லும் பொழுதே ஒருவித சக்தி பரவுவதை உணரமுடிகிறது. நானே ஏற்படுத்திக் கொண்ட பிரமையோ, உண்மையோ தெரியாது. பரவச நிலை உணர்ந்தேன் என்பது உண்மை. தஞ்சை சரபோஜி மன்னருக்காக, இவர்  ஏற்படுத்திய கோயில்தான் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். புதுக்கோட்டை மன்னருக்காக மணலில் மந்திரம் எழுதிக் கொடுத்தாராம்.
இந்த மகான் அதிஷ்டாணத்திற்கு முன்பாகவே (அந்த வளாகத்திலேயே) விஸ்வனாதர் ஆலயம் உள்ளது. அழகான ஆலயம்.

நெரூரில் சமாதியான பொழுது, அரூபமாக ஏக காலத்தில் கராச்சியிலும் (பாகிஸ்தான்), மானாமதுரையிலும் (ஆனந்த வல்லியம்மன் கோயில்) சமாதியானதாகச் சொல்கிறார்கள்.

நம்பிக்கை உள்ளவர்கள் செல்லவேண்டிய தலம்.


செல்லும் வழி: கரூர் சென்று, அங்கிருந்து ஆட்டோ,லோக்கல் பஸ் மூலம் இந்த சிற்றூரை அடையலாம்.