Sunday, March 4, 2012

பிரதமர் வாய் திறந்து விட்டார்!


தனது "வழக்கமான மௌனகுரு"இயல்புக்கு மாறாக, நமது பிரதமர், கூடங்குளம் அணுமின் திட்டத்தினை நிறுத்தக் கோரி போராட்டம் நடத்தி 
வரும் தன்னார்வ நிறுவனங்களுக்கு பின்னால் , "சில வெளி நாட்டு
நிறுவனங்கள் இருக்கின்றன" என்று சொல்லியிருக்கிறார்.



இதற்கு ஆதாரமாக, அவர் "எதையும் கொடுக்கவில்லை" என்றாலும், தனது வார்த்தைகளில் ‘உண்மையிருக்கிறது என்று உறுதிப் பட்டாலொழிய அம்மாதிரியான வார்த்தைப் பிரயோகங்களை அவர் எப்போதும் செய்வதில்லை.

1970-80 களில்,  நமது அரசியல் வாதிகள், தங்களது தீர்க்கவியலாத உள் நாட்டு பிரச்சினைகளுக்கெல்லாம் ‘அன்னிய சக்திகளை காரணமாகக் காட்டும் வியாதியைக் கொண்டிருந்தனர். ஆனால் இம்முறை, பிரதமரின் 
குற்றச்சாட்டை அவ்விதம் எடுத்துக் கொள்ள முடியாது.

ஏனெனில், நமது பிரதமரின் "வெளிநாட்டு சார்பு" என்னவென்று அனைவருக்கும் தெரியும். அவர் மேலை நாட்டு பொருளாதாரத்தையும் அரசியலையும் நம்பும் ஆசாமி. அலுவாலியாவை அருகில் வைத்திருப்பவர். பல, 'பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கு' பணியாற்றியவர்.

இதனால்தான், இடது சாரிகளால்,  பிரதமர், "மேல் நாட்டு அடிவருடி" என்றும், 'தாராளமய,உலகமய கொள்கைகளுக்கு' உடன்படுபவர் என்று சாடப்படுகிறார்.  அத்தகைய மனிதரே தைரியமாக, கூ.அ.மி. திட்ட எதிரிப்பாளர்களுக்கு, 'வெளி நாடு உதவி இருக்கிறது' எனச் சொல்கிறார் என்றால், இது வெற்று அரசியல் கூச்சலாக இருக்க முடியாது. உறுதியான சான்றுகள் இருக்கும்.

14000 கோடிகளைக் கொட்டி, 99 சதமான வேலைகள் முடிந்து, மின் உற்பத்தி துவங்கும் நேரத்தில் இந்த கூ.அ.மி. திட்ட எதிர்ப்பு போராட்டம், இத்தனை தீவீரமாக ஆரம்பித்துள்ளது, எவரையும் சந்தேகிக்க வைக்கிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், பலனடையப் போவது, தேசம் தான், காங்கிரஸ் அல்ல! எனவேதான் ‘வெளி நாட்டு சதி உண்மையாக இருக்கும் என நம்புவதற்கு காரணங்கள் உள்ளன.

ஏனெனில் பிரதமர், கூ.அ.மி. திட்ட எதிர்ப்பாளர்களின் கோரிக்கையான, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். இன்னும் சொல்லப் போனால், கூடங்குளம் பாதுகாப்பானதா என்பதை கண்டுபிடிக்க, நேர்மையாக,  பல கமிட்டிகள் போட்டு, உறுதி செய்து கொண்டுள்ளார். நாட்டு மக்கள் பெரிதும் மதிக்கும், முன்னாள் ஜனாதிபதி 'திரு கலாம்' அவர்களைக் கூட விட்டு, ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறார். இவர்கள் எவரும் சாதாரணர்கள் அல்ல. விஞ்ஞானிகள். நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் அக்கறை  கொண்டவர்கள். அவர்கள் எவரும் கூ.அ.மி. திட்டம் பாதுகாப்பற்றது என்று சொல்ல வில்லை! மாறாக 'உலகிலேயே பாதுகாப்பான அணு உலைகளில் ஒன்று' என்றுதான் சான்றுரைத்துள்ளனர்.

இதனால்தான், நிபுணர்கள், மற்றும் தேசத்தின் மீது அக்கறை கொண்டோர்  சொல்வது எதையும் கேட்க மாட்டேன் அடம் பிடிக்கும் எதிர்ப்புக் கும்பல் மீது சந்தேகம் வருகிறது. 


எதிர்ப்பு கும்பல், திரு.கலாமையே சந்தேகிக்கின்றனர் என்றால் பின் யாரைத்தான் நம்புவார்கள்? கூ.அ.மி. திட்ட எதிர்ப்பாளர்களின் ஒரே நோக்கம், திட்டத்தை மூடிவிட வேண்டும் என்பது தானே தவிர, 'உலை பாதுகாப்பானதா' என்பதை உறுதி செய்வதிலோ, மக்களின் அச்சத்தை போக்குவதிலோ இல்லை. மாறாக இந்த கும்பல், ‘அணுமின்சாரத்தை, ‘அணுகுண்டோடு’, வேண்டுமென்றே இணைத்துப் பேசி, மக்களைக் கலவரப்படுத்துகின்றனர்.

சரி, இந்த வெளிநாட்டு சக்திகளோடு ‘கை கோர்த்துக் கொண்டு இந்தியாவின் எதிர்காலத்திற்கு வேட்டு வைக்கும் இந்த அணு உலை எதிர்ப்பாளர்கள், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவிற்கு இன்னும் அதிகமாகத் தேவைப்படும், 4,00,000 – 6,00,000 மெகாவாட் மின்சாரத்தை, எவ்விதம் உற்பத்தி செய்ய முடியும் என்பதை விளக்குவார்களா? அணல் மின் நிலையங்களைக் கூட எதிர்ப்பவர்கள் இருக்கிறார்களே? அது சுற்றுச் சூழலைப் பாதிக்கிறது என்கிறார்களே? இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது இந்த கும்பல்?

‘மேதா பட்கர் போன்ற மேதாவிகள்(!), புணல் மின்சாரத்தைக் கூட வேண்டாம் என்கின்றனர். ஆக, அணல் மின்சாரமும் கூடாது! புணல் மின்சாரமும் கூடாது! அணு மின்சாரமும் கூடாது! பின், நமது நாட்டின் மின் தேவைக்கு என்னதான் வழி?

உண்மை என்னவென்றால், இந்த ‘கும்பலால் தூண்டிவிடப்படும் எதிர்ப்பாளர்களுக்கு, விஞ்ஞானமும்-உண்மையும் தெரியவில்லை (அ) தெரியாதது போல நடிக்கிறார்கள் என்பது தான்.

'காற்று, கடலலை, பயோகேஸ், சூரிய சக்தி' போன்றவற்றிலிருந்து மின் உற்பத்தி செய்யலாம் என ஆலோசனை கூறும் இக்கும்பல், 'இவை யாவும் நிலையான, நிச்சயமான மின் உற்பத்தியை தரவல்லவை அல்ல' என்ற அடிப்படை “ஞானம்கூட அற்றவர்கள் என நம்புவதற்கில்லை! ஒரு ‘சப்போர்ட்டுக்கு வைத்துக் கொள்ளலாமே தவிர, முழுவதும் நம்பிக்கைக்கு உரியவை அல்ல! நிலக்கரி, வற்றாத ஜீவ நதி போல கிடைத்துக் கொண்டேயிருக்காது. புணல் வழி ஆதாரங்கள், கிட்டத்தட்ட முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு விட்டன.அணுசக்தி மட்டுமே, உறுதியாக,  நீண்ட காலத்திற்கு, சகாய விலையில்,  எரிபொருள்.

எதிர்ப்பு கும்பல் உதாரணம் காட்டும் ‘ஜெர்மனி , மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடு. அவர்கள் இனி அணு உலைகள் கட்ட மாட்டோம் என்று சொல்வதில் அர்த்தம் உண்டு. மேலும் அவர்களிடம்  அணு எரிபொருள் இல்லை. இதனால்தான் சீ..சீ இந்த பழம் புளிக்கும் என்கின்றனர்.

இவர்களது ஆசான் அமெரிக்கா, பல அணு மின் உலைகளை கட்டிக் கொண்டுதான் உள்ளது. பிரான்ஸின் மின் தேவையில் 70% அணுமின் சக்தி தான். இந்தியாவைப் போல பன் மடங்கு, மின் பசி கொண்ட சீனா 'என்ன செய்து கொண்டிருக்கிறது' என்று இந்த கும்பல் பதில் சொல்லுமா? உலகில் மிக அதிகமான அணுமின் உலைகளை கட்டிக் கொண்டிருப்பவர்கள் சீனர்கள்தான் என்ற உண்மையினை ஏன் இந்த கும்பல் மறைக்கிறது?(ஏராளமான, புணல்/அணல் மின் நிலையங்களை கையில் வைத்துக் கொண்டும்!) 

எனவே கூ.அ.மி. திட்டத்தை எதிர்க்கும் கும்பலுக்கு தீர்மாணமான பதில் தரவேண்டிய தருணம் வந்து விட்டது. விந்தை என்னவெனில், அதீத மின்வெட்டால், படாத பாடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழகத்தில், அதன் முதல்வர், இந்த கும்பலின் பின்னால் இருக்கும், 'எதிர்மறை அரசியலை' தோலுரித்துக் காட்டுவதில், மிகுந்த தயக்கம் காட்டுகிறார்.

மின் வெட்டால், தொழில் துறை நாசமாகிக் கொண்டிருக்கிறது என்பது முதல்வருக்குத் தெரியாதா? அல்லது கூ.அ.மி.திட்ட எதிர்ப்பாளர்களுக்கு 'உதவிக் கொண்டிருக்கிறாரா' என்பதும் புரியவில்லை! இப்பிரச்சினையில் மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக ‘குடைச்சலை கொடுக்கலாம் என திட்டமிடுகிறாரோ என்னவோ? 

இத்திட்டத்தினை ஆதரிக்கும் பி.ஜே.பி மற்றும் கம்யூனிஸ்ட்கள், பிரதமரிடம், இந்த கும்பலுக்குப் பின்னால் இருக்கும் அன்னிய சக்திகளுக்கான ‘ஆதாரத்தை வற்புறுத்தி, கேட்டுப் பெறுவதில் என்ன தயக்கம் எனப் புரியவில்லை! இவர்கள் யாவருக்கும் நாடு முக்கியமாகப் படவில்லை. மாறாக அன்றாட ‘அரசியல் விளையாட்டுகள்தான் முக்கியமாகப் படுகிறது.

அரசியல வாதிகள், இந்த  நாட்டில் ‘அரசாங்கம் நடத்துவதை, தங்களது 
சுயநலப் போக்கினால் ‘சிரமமாக்கிக் கொள்கின்றனர்! ஒவ்வொரு எதிர்ப்புக் கும்பலும் ‘அனாயசமாக ஆயிரமாயிரம் பேர்களைத் திரட்ட முடிகிறது. பணம் அவர்களுக்கு ஒரு பிரச்சினையாகவே இருப்ப தில்லை! மக்களின் அறியாமை முற்றிலுமாகப் பயன் படுத்திக் கொள்ளப் படுகிறது. பத்திரிகைகளுக்கு, எதேனும் ‘பரபரப்புச் செய்திகள் தான் முக்கியமாகப் படுகிறதே தவிர, நாடு முக்கியமில்லை. எதற்காக மத்திய அரசும், மாநில அரசும் இன்னமும் வேடிக்கை பார்த்துக் கோண்டிருக்கின்றனர் என்பது மர்மமாகவே உள்ளது! 

கூ.அ.மி. உலை எதிர்ப்பாளர்களுக்கு பணம் வெளி நாட்டிலிருந்து வருகிறது எனக் குற்றம் சாட்டும் பிரதமர், தனக்கு இருக்கும் அதிகாரங்களை மறந்துவிட்டாரா அல்லது யவருக்கேனும் பயப்படுகிறாரா .. புரியவில்லை!  இவர் இயங்கவில்லை என்றால், பின் பாகிஸ்தான் நாட்டு பிரதமரா வந்து, இந்த வெட்டி எதிர்ப்பாளர்களை அடக்குவார்கள்?

சகதிவாரித்தூற்றிக் கொள்ளும் ‘அரசியலை விட்டு விட்டு இந்த ஒரு விஷயத்திற்காகவாவது கேடுகெட்ட அரசியல் வாதிகள் ஒன்றினைவார்களா? கூடங்குளம் இயங்குமா? மின் வெட்டு ஒரு இரண்டு மணி நேரமாவது குறையுமா?

Tuesday, February 28, 2012

மெரினா – திரை விமரிசனம்


'மெரினா கடற்கரையின்' சிறப்பு, அனைத்து தரப்பு மக்களயும் தன்பால் இழுக்கும் அதன் வல்லமையும், கவர்ச்சியும் தான். சமுதாயத்தின் சகலதரப்பு மக்களும் அதனுடன் தொடர்பு கொண்டிருப்பதால், அது கதைகளின் ஊற்றுக் கண்ணாகவும் இருக்கிறது. எனவே மெரினாவோடு உறவுகொண்ட அனைவருமே, ஒரு சுவாரஸ்யமான கதை வைத்திருப் பார்கள். 

ஊரை விட்டு ஓடிவந்த சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும், சென்னை அளிக்கும் புகலிடங்களில், முக்கியமானது மெரினா.
‘மெரினா திரைப்படம், அவ்விதம் ஊரை விட்டு ஓடிவந்து, கடற்கரையில் வாழும் அனாதைச் சிறுவர்களைப் பற்றிச் சொல்கிறது! சென்னையைப் பற்றிச் சொல்கிறது! அதன் பன்முக கலாச்சாரத்தைச் சொல்கிறது! கடற்கரையின் மணல்களைப் போல எண்ணிலடங்கா, கதைமாந்தர்களுக்கு, மௌன சாட்சியாக இருக்கும் மெரினா,  தனது மடியில் நிகழ்ந்த மற்றுமொரு சோகத்தை, சுண்டல், தண்ணீர் பாக்கட் விற்கும் ‘பக்கோடா பாண்டியன் வழியாகச் சொல்கிறது! படம் வந்து, நாட்கள் பலவாகி விட்டதால் கதை அனைவருக்கும் தெரிந்தே இருக்கும். போஸ்ட்மேனாக வரும் மோகன், பெரியவராக வரும் சுந்தர்ராஜனும் பரவாயில்லை. குறிப்பாக ‘டான்ஸ் ஆடும் அந்த சிறுமி பிரமாதம்.

ஒரே படத்திலேயே, எல்லா விஷயங்களையும் சொல்லிவிட வேண்டும் என்ற, டைரக்டரின் ஆர்வம் (போலீஸ்-சிறுவன் கதை,காதல் ஜோடிக் கதை, மருமகளால் விரட்டப்படும் பெரியவரின் கதை) தேவையற்றது. ஏனெனில், இந்த அருமையான கதையின் முடிச்சு, ‘ஸ்லம் டாம் மில்லேனியரை விட சிறப்பானது. உலகத்தரத்தில் எடுக்கப் பட்டிருந்தால், பல அவார்டுகள் தேடி வந்திருக்கும். இக் கதையின் ‘ட்ரீட்மெண்ட் பன் மடங்கு பட்டை தீட்டப்பட்டிருக்க வேண்டும்.  அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட்து போல உள்ளது. எடுக்க வேண்டிய விதத்தில் எடுக்கப் பட்டிருந்தால், எல்லா அவார்டுகளுக்கும் ஒரு நல்ல ‘போட்டியாளராக இப்படம் இருந்திருக்கும். ஆயினும் எடுத்தவரை பரவாயில்லைதான். பார்க்கலாம்.




இயக்கம்: பாண்டியராஜன்

Friday, February 24, 2012

சென்னை உபச்சாரம்!

அறுபதுகளின் பள்ளிவிடுமுறை  தினங்களுக்கு, மனம் விரும்பிச் செல்கிறது. அப்பொழுது பள்ளிகளுக்கு, ‘கால் பரீட்சை, ‘அரைப் பரீட்சை, ‘முழுப் பரீட்சை முடிந்ததும் கிடைக்கும் லீவில், உறவினர்களின் வீடுகள் யாவும், உறவுகளால் நிறையும். ‘காலுக்கு நாம் அங்கே சென்றால் ‘அரைக்கு அவர்கள் இங்கே! வீடுகளில் சிறுவ-சிறுமிகளின் கும்மாளமும், குதூகலமும், சந்தோஷமும் வீட்டின் அனைத்து கதவுகளின் வழியாகவும் வழிந்தோடும்.

உறவுகளுக்க்காகவென்று சிறப்பான விருந்துஎதுவும் இருக்காது; தினசரிச்  சமையல் ‘மெனுவே அப்போழுதும் தொடரும். ஆயினும் என்ன? மாலை முழுதும் விளையாடித் தீர்த்துவிட்டு, இரவில், வீட்டின் முற்றத்தில், குழந்தைகள் அனைவரும் முக்கால் வட்டமாக அமர்ந்து கொள்ள, நடுவில் அம்மாவோ, பாட்டியோ இருந்து  கொண்டு,  ஒரு பெரிய பாத்திரத்தில் சோறு பிசைந்து வைத்துக் கொண்டு, ரம்மியமான நிலவொளியில், ஆளுக்கொரு உருண்டையாக பரிமாறினால், இரண்டுபடி அரிசி போட்டு சாதம் செய்திருந்தாலும் நிமிஷத்தில் காலியாகிவிடாதா?  அந்த இரவின் மங்கிய வெளிச்சத்தில், குழந்தைகளின் கூச்சலும், இரைச்சலும், குதியாட்டமுமாக, அவர்கள் உண்ட ருசி, நிலாச் சோற்றினாலா, பாட்டியின் அன்பினாலா அல்லது எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்ட, சந்தோஷ  தருணத்தாலா என்பது விளங்காத ஒன்று!

 அப்போதெல்லாம், ஆறுகளில் கொஞ்சமேனும், மெல்லிய பட்டையாக  தண்ணீர் ஒடிக் கொண்டிருக்கும், பரந்த மார்பினில் யக்ஞோபவீதம் போல.  காலையில் எழுந்து பழைய சாதமோ, கேப்பங்கூழோ குடித்துவிட்டு, பத்து மணிக்கு “குளிப்பதற்காகஆற்றிற்கோ, குளத்திற்கோ சென்றால், உங்களை யெல்லாம் அம்மா சாப்பிடக் கூப்பி டறாங்க என்று ஆள் வந்து சேதி சொல்லும்வரை, தண்ணிரில்  வாண்டுகளின் கும்மாளம் தொடரும். நடுவில், பக்கத்து வயல்களில், மாங்காய், நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை திருடித் தின்பதும்  நடக்கும். மாட்டிக் கொள்வோமென்ற பயமெல்லாம் இருக்காது.

மதிய உணவு முடிந்ததும், தாயக்கட்டையோ அல்லது பரமபதமோ ஆடுவார்கள். சிறுமிகளுக்கு பல்லாங்குழி, ஐந்தாம் கல், ஏழாம்கல் விளையாட்டு உண்டு. இவ்விளையாட்டுகளில், வீட்டின் பெரிய வர்களும், குழந்தைகளாகக் கலந்து கொள்வார்கள். ஐந்தாம் கல்-ஏழாம் கல் விளையாட்டிற்கெல்லாம், ‘ரெட்டைக்கு சிட்டு – ரெவணத்து முட்டை,-கோழிக்குஞ்சு சப்பட்டை “ என வினோத பாட்டெல்லாம் உண்டு

சூரியனின் உக்கிரம் குறைந்ததுமே, சுவற்றில் சாக்கட்டி அல்லது கரிக்கட்டி ‘ஸ்டம்ப் நட்டு கிரிக்கெட், அடிபட்டால் உயிர் போகும் படியாக வலிக்கும் ‘எறிபந்து, ‘ரிங்பால்’, ‘டென்னிஸ்எல்லாம் உண்டு. சிறுமிகளுக்கு பாண்டி. விளையாடி, விளையாடி மாளாத நாட்கள் அவை.




வீட்டில் பொருளாதார நிலை கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் கூட இத்தகைய உறவுகளின் வருகைக்கு யாரும் சலித்துக் கொள்ள மாட்டார்கள். சொல்லப் போனால் வரவில்லையென்றால் தான்  கோபித்துக் கொள்வார்கள். பிள்ளைகளும், வந்த இடத்தில் ‘டிமாண்ட் எல்லாம் வைப்பதில்லை! மூன்றுவேளை, ஏதேனும் ஒரு உணவு இருந்தால் போதுமானது! நடுவில் ஒரு நாள் ‘டெண்ட் கொட்டகையில் சினிமா உண்டு! ‘டெண்ட் கொட்டகை என்பது, கூரை வேய்ந்த திரையரங்கம். அத்தகைய திரையரங்கிற்கு ஒரு வருஷம் லைசென்ஸ் உண்டு.  திரையரங்கில் மொத்தம் மூன்று ‘கிளாஸ் இருக்கும். தரை டிக்கட் (13 பைசா) என்பது, திரையின் அருகே, ஆற்று மணல் பரப்பி இருக்கும். உட்கார்ந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ சினிமா பார்க்கலாம். அதன் பின் இருக்கும் “பெஞ்ச்கிளாஸ் (30 பைசா) கொஞ்சம் நாசூக்கு ஆசாமிகளுக்கு! முதல் வகுப்பு (75 பைசா) என்பது “ஃபோல்டிங் சேர்”.  சினிமா சப்தத்தோடு புரொஜெக்டர் போடும் ‘கொட..கொட சப்தத்தையும், பின்னாலிருந்து கேட்கலாம். பெஞ்சுகளும்-சேர்களும் சாதாரணர்களுக்கானதல்ல.

'லீவு' முடிந்து அழைத்துச் செல்ல வரும் பெற்றோரிடம், ‘நீங்க அடுத்த லீவுக்கு அங்கே வாங்க என்பதோ அல்லது “அடுத்த லீவுக்கும் மறக்காம பிள்ளைகளை இங்கே அனுப்பி வையுங்க என்ற உபசரிப்போ தவறாது நடக்கும்!

அந்த பழங்கதையை, இப்போது எதற்குச் சொல்ல வேண்டும் என்கிறீர்களா? காரணம் உள்ளது!

“செல்விருந்தோம்பி, வருவிருந்து காத்திருப்பதெல்லம்" அந்த காலம். தற்போதெல்லாம் ‘விருந்தினர் என்றாலே திகிலோடு எதிர்பார்ப்பது தான் 'நடைமுறை' என்றாகிவிட்டது.

பக்கத்து வீட்டுக்கு போவதென்றாலும் கூட ‘அப்பாயின்மென்ட் (தகவல் சொல்லிவிட்டு செல்வது) இல்லாமல் போவது, “நாகரீகமற்ற செயல் என்னும் மோஸ்தர்,  சிறு நகரங்களில் கூட சாதாரணமாகி விட்டது. பின் சென்னைக்கு கேட்பானேன்! 

மாலை, அலுவலகத்திலிருந்து  வீட்டிற்கு வந்ததும் ‘சட்டென கதவைத்திறந்து, உள் நுழைந்து, பின் ‘பட்டென சாத்திக் கொள்கின்றனர். பின் அடுத்த நாள் காலை அலுவலகம் செல்லும் போதுதான் கதவு திறக்கப்படும்.

கண்ணுக்கு முன்னால் ‘இரத்தமும் சதையுமாக இருக்கும் உறவுகளையும் நட்புக்களையும் புறக்கணித்து ‘ஃபேஸ்புக்கின் மாய நண்பர்களோடு ‘சேட்டிப்பதும், ‘லைக்கிப்ப தும் ’, புதிராகத்தான் உள்ளது.

சில நாட்களுக்கு முன்னால், எனது நண்பர் ஒருவர், சென்னையில் உள்ள ஒரு உறவுக்காரர், ‘விரும்பிக் கேட்டுக் கொண்டதால் சென்றுவிட்டு வந்தார்.  அதன் பின்விளைவாக, "சென்னை உபச்சாரம்" (விருந்தோம்புதல்) குறித்து, சில ஆலோசனைகளைத் தந்துள்ளார். அவை உங்களது பரிசீலனைக்கு:  


அ. “அடுத்த முறை அவசியம் வீட்டிற்கு வாங்க” என்று 'சென்னை உறவுகள்' சொல்வதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொண்டு, அவர்கள் வீட்டிற்குப்போய் நிற்கக் கூடாது. அந்த உபசாரங்கள் யாவும் ‘சும்மா, ஒரு பேச்சுக்காகக்’ கூட இருக்கலாம்.


ஆ. இந்தெந்த வேளை, வீட்டிற்கு சாப்பிட வருவேன் அல்லது வரமாட்டேன் என்று தெளிவாகச் சொல்லிவிடுவது நல்லது.  அது அவர்கள் திட்டமிட(!) ஏதுவாக இருக்கும். எனினும் சாப்பிட வரமாட்டேன் என்ற பதிலே, அவர்களால் பெரிதும் விரும்பப் படும்.

இ. காஃபி அல்லது டீ வேண்டுமெனில், சப்தம் காட்டாமல் தெருமுனையில் உள்ள காபிக்கடைக்குச் செல்வதுதான் உத்தமம

. எப்போது கிளம்பப் போகிறீர்கள் என்பதை, அவர்களது  ‘ஐயம் தீர’ சொல்லி விடுவது நல்லது.  சொன்னபடி நடப்பது அதனினும் நல்லது. கூடுமானவரை இரவுத்தங்கலை தவிர்ப்பது நலம்.     

. அப்படியே, மீறித் தங்கவேண்டி வந்துவிட்டால், மாலை ஆறு முதல் இரவு ஒன்பது மணிவரை ‘வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும்'. ஏனெனில் அந்த நேரம், டி.வி யில் ‘பீக்’ அவர்.  அவர்கள் உங்களுக்காக தொலைக்காட்சித் தொடரைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை.

. தவறிப்போய் கூட, முகம் துடைக்க துண்டு, சோப்பு போன்ற வற்றை கேட்காதீர்கள். அவை ‘கண்ணியமற்ற-ஊரான்கள்’ செய்யும் வேலை. 

. வீட்டின் எந்த பொருளையும் ‘நன்றாக உள்ளது (அ) நன்றாக இல்லை’ போன்ற விழையா விமரிசனங்களைத் தவிர்க்கவும்.

ஏ. அவர்கள் வீட்டுக் குழந்தை, உங்கள் மீது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து, உங்கள் ‘செல்போனைக்’ கவர்ந்து சென்று "நான்-ஸ்டாப்பாக" கேம்ஸ் விளையாடினாலோ அல்லது 'தொம்மென்று' கீழே போட்டுவிட்டாலோ, ஒரு அசட்டுச் சிரிப்புடன், பதற்றத்தை மறைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் செல்போன் உடைந்ததைப்ப்றி கண்டுகொள்ளாமல், "எங்க குழந்தை எப்போதுமே ரொம்ப 
சூட்டிகை, அவனுக்கு எல்லாம் அத்துப்படி" என்ற அவர்களது புகழ்ச்சிக்கு சிரித்து வைப்பது நல்லது. 

. ‘யாருப்பா இந்த அங்கிள்? ஊரிலிருந்து ஒரு உபத்திரவம் வரப்போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தாயே, அது தானா இது” என்ற ஏவுகணைத் தாக்குதல்களை எந்த நேரமும் எதிர்பாருங்கள்.   

. “உங்க வீட்டு ஜனங்களுக்கு மேனர்ஸே கிடையாது! வந்தோமா, பார்த்தோமா, கிளம்பினோமா என்றில்லாமல், நாள் பூராவுமா தங்கியிருப்பார்கள்?” என வீட்டுத் தலைவனோ (அ) தலைவியோ உங்கள் காதுபட கமெண்ட் பாஸ் பண்ணும் வரை புறப்படக்  காத்திருக்காதீர்கள். 

. மேற்சொன்ன ஆலோசனைகள் யாவும், நீங்கள் அவர் வீட்டிற்கு சென்ற உடனேயே, அவர்களுக்காக நீங்கள் வாங்கி வந்திருக்கும் பழ,பலகார வகைகள் (வகைக்கு அரை கிலோவாவது முக்கியம்; இல்லாவிடில் 'கஞ்சுஸ்' பட்டம் வரும்)  மற்றும் ஊரிலிருந்து ‘ஸ்பெஷலாக’   ஏதேனும் வாங்கி வந்திருந்தால் அவற்றையும் கொடுத்துவிட்டால், 
அனுசரிக்க வேண்டிய விதி முறைகள்தான் இவை!

. வெறுங்கையை வீசிக்கொண்டு அவர்கள் வீட்டிற்குப் போய் விட்டால், “சென்னை உபசரணை” பன்மடங்காக இருக்கும். அதன்பின் உங்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்! 



நண்பர், எடாகூடமாக ஒருத்தர் வீட்டில் அனுபவப்பட்டு விட்டார் போலிருக்கிறது! அதன் விளைவாகத்தான் இந்த 'ஆலோசனை' களைத் தந்திருக்கிறார் போலும்!   இது "நண்பரின் தனிப்பட்ட அனுபவமா" இல்லை "சென்னைக்கே உரித்தான இயல்பா" என விளங்கவில்லை! ஏனெனில் சென்னையில் உறவுகளின் வீடுகளில் நான் தங்குவதில்லை.

Friday, February 17, 2012

இப்படியாகக் காதல் செய்வீர்...(ஒருபக்க சிறு கதை)

சோடியம் ஒளியில், கேட்டில் இருக்கும் “வி. சொக்கலிங்கம் – டெபுடி செக்ரடரிஎன்ற பித்தளை பெயர்ப்பலகை மின்னுகிறது. மணி எட்டாகிறது. அவர் இன்னும் வீட்டிற்கு..,  சாரி பங்களாவிற்கு  வரவில்லை. வீட்டினுள் அவரது மனைவி ஸ்வர்ணம் மாலையிலிருந்து  யார் யாருடனோ, மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.  அப்படி என்னதான்  விஷயம் இருக்கும், இவ்வளவு நேரம் பேச?  கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்ப்போமே? எப்படியும் சொக்கலிங்கம் சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்துவிடுவார். அவரிடம், இவ்வளவு நேரம் தொலைபேசியதின் சாராம்சத்தை சொல்லாமல் தூங்கமாட்டார். எனவே பொறுத்திருக்கலாம்.

ஸ்வர்ணத்திற்கு இருப்புக் கொள்ளவில்லை! கணவனுக்கு ஃபோன் போட்டார். “என்னங்க, வீட்டிற்கு வருவதற்கு எவ்வளவு நேரமாகும்?


"இப்பத்தான் செக்ரடேரியட்டிலிருந்து புறப்பட்டேன். பயண நேரம் தான். அரை மணியில் வந்துவிடுவேன். ஏதாவது முக்கியமான விஷயமா? 


“தலைபோகிற விஷயமொன்றுமில்லை! நேரா வாங்க. பேசிக்கலாம்.

சொக்கலிங்கத்திற்கு ஐம்பத்தைந்து வயதாகிறது. மாநில அரசின், தொழில் துறையில் டெபுடி செக்ரடரியாக இருக்கிறார். கன்ஃப்ர்டு. பீர் தொந்தியும், வாங்கி, வாங்கி, வீங்கிய பையுமாக, சஃபாரி உடையில் இருக்கும் அவரை சுமந்துகொண்டு அவரது “இனோவா  உள்ளே  நுழைகிறது. டிரைவர் போட்ட “சலாமைதலையாட்டி ஏற்றுக் கொண்டு, “நாளை பார்ப்போம்  என கூறிவிட்டு, பங்களாவின் உள் நுழைகிறார்.

அவர் உடைமாற்றிக் கொண்டுவரவும், ஸ்வர்ணம் அவருக்கு உணவு பரிமார தயாராக இருந்தார்.  சாப்பிட்டுக் கொண்டே, “என்ன விஷயம் சொல்லுஎன்றார்.

“நம்ம பையன் ‘குமரனுக்கு வரும் ஏப்ரலில், 25 வயது  பூர்த்தியாகிறது. அவன் வேலைக்குப் போய், இந்த மாசத்தோட மூணு வருஷமாயிடுச்சு..

“அதுக்கென்ன இப்ப?

“யாராவது ஒரு குட்டியை புடிச்சுக்கிட்டு வந்து, இவளைத்தான் கட்டிக்குவேன்னு ஏதும் சொல்றதுக்குள்ள, நாமளே அவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து முடிச்சுடனும்"

“ஆமாம்.. ஆமாம்,  நானும் கூட யோசிச்சுக்கிட்டுதான் இருக்கேன். சீக்கிரமா ஒரு இடத்தை அவனுக்கு செட்டில் பண்ணணும்.

இவர்கள் கவலைப்படும் “குமரன்“ அவர்களது மகன். மூத்தவன்.  இளையவளுக்கு சென்ற வருடம் திருமணம் செய்வித்துவிட்டார்கள். குமரன், பி.டெக் முடித்துவிட்டு பெங்களூருவில் ‘ஆரக்கிளில் வேலை பார்க்கிறான். புத்திசாலிப் பையனாதலால், விரைந்து நிர்வாகப்படிகளில், ஏறிவருகிறான்.

“நம்ம ஜாதியில, நமக்கேத்தமாதிரி, தெரிஞ்ச பொண்ணுங்க யாராவது இருக்காங்களா? “ என்றார் சொக்கலிங்கம்.

“இருக்காங்க.  சாயங்காலம் முழுசும் அதுபற்றித்தான் விசாரிச்சுக்கிட்டிருந்தேன்.  உங்க தங்கச்சி புருஷனோட, சொந்தக்காரப் பொண்ணு ஒருத்தி இருக்கிறாள். சகுந்தலான்னு பேர். பி.இ படிச்சிருக்காளாம். அவளும் பெங்களூருவில்தான் வேலை பார்க்கிராளாம்.நாம கூட, ரொம்ப நாளைக்கு முன்னால, அவளைப் பார்த்திருக்கோம்.  நல்லாத்தான் இருப்பா. ஆனா சட்டுனு முகம்  நினைவுக்கு வரமாட்டேங்குது.

‘அப்படியா? எனக்கும் அந்தப் பெண் நினைவில்லை. பொண்ணோட அம்மா-அப்பா, அப்படி-இப்படின்னு ஒன்னும் கிராஸ் இல்லையே?

‘என்ன ஒன்னும் தெரியாதமாதிரி கேக்குறீங்க? அவங்க எல்லாம், நம்ம ஜனங்கதான்.  நீங்க மறந்துட்டீங்க போல. அதையெல்லாம் விசாரிக்காமலா இருப்பேன்? எல்லாம் சுத்தம் தான்.

‘நீ விசாரிச்சு வச்சிருப்பேன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் கன்ஃப்ர்ம் பண்ணிக்கறதுல என்ன தப்பு? கல்யாணத்திற்கப்புறம் தெரியவந்திச்சுன்னா கஷ்டம் தானே? அதுனால கேட்டேன்.

“அதுபத்தி  கவலைப்பட வேண்டாம்.   நமக்கு வேண்டியவங்களைவிட்டு விசாரிச்சுட்டேன்.

“அப்ப சரி.. ஸ்டேட்டஸ் எப்படியாம்?

“பொண்ணோட அப்பா, பெங்களூரில் ரியல் எஸ்டேட் செய்யராராம். பொண்ணு பேர்ல ஒரு ஃப்ளாட் இருக்கு. அந்த வீடே, பெரிய ரூவா ஒன்னு தேறுமாம்!

“அவ எங்க வேல பாக்குறா?

“இண்டெல் கார்பொரேஷன்ல..

“எவ்வளவு சம்பளம் வருமாம்?

“எழுவதாயிரம்னு சொன்னாங்க..

“பரவாயில்லியே. நல்ல இடமாத்தான் இருக்கு.

“நான் உங்க தங்கச்சி கிட்ட பேசிட்டேன். அவுங்க சொல்றதைப் பாத்தா, பொண்ணு வீட்டில,  நம்ம பையனுக்கு கொடுக்க இஷ்டப்படுவாங்க போலத்தான் தெரியுது!  நீங்க உங்க தங்க்ச்சி வீட்டுக்காரர் கிட்ட பேசுங்க.

“சரி, அவுங்களுக்கு ஃபோனைப் போடு

"கொஞ்சம் இருங்க பேசலாம்; அதுக்கு முன்னால, உங்க பையன் கிட்ட பேசிடுங்க. பேச்சு வார்த்தை ஆரம்பித்தப்பின், குமரன் எதனாச்சும் குழப்பிட்டான்னா, கௌரவக் குறைவாகப் போய்விடும்

“நல்லாத்தான் ஐடியா கொடுக்குற! இப்ப பேசலாமா, இல்ல தூங்கியிருப்பானா?


“அவனாவது, இன்னேரத்தில தூங்கறதாவது? பேசுங்க!


பையனை போனில் அழைத்தார். 

“குமரா, அப்பா பேசறேண்டா.  நல்லா இருக்கியா? என்ன ஒரு மாசமா சென்னைக்கு வரல? ஆஃபீஸில பிசியா?

“என்னப்பா, அங்கே வந்து 20 நாள்தானே ஆவுது? அதுவுமில்லாம டெய்லி, அம்மாகிட்ட பேசிக்கிட்டுதானே இருக்கேன்? இப்ப நீ எதுக்கு கூப்பிட்டேன்னு நேரா விஷயத்துக்கு வா. நான் பார்ட்டிக்கு போகனும்.

“பெங்களூர்ல, இண்டெலில், சகுந்தலான்னு 'நம்ம' பொண்ணு ஒண்ணு வேலை செய்யுதாம். நம்ம சொந்தக்காரப் பொண்ணு!

“அப்பா, இன்டெலில் நூற்றுக் கணக்கில் பொண்ணுங்க இருக்காங்க. அதுக்கென்ன?

“முழுசும் கேளுடா!  பொண்ணு நம்ம ஆளுகதானாம். ரொம்ப நல்லா இருக்குமாம். அம்மா விசாரிச்சுட்டா. உன்னை ஒரு வார்த்தை கேட்டுகிட்டு, அவளோட அம்மா-அப்பா கிட்ட, உனக்கு பெண் கேட்டு பேசலாம்னுதான் ஃபோன் போட்டேன்.

“எனக்கு அப்படி யாரையும் தெரியாதுப்பா..

“நீ ஒருதடவை நேரா போய் அந்த பொன்ணைப் பாத்து, விசாரிச்சுட்டு வாயேண்டா.. உனக்கு புடித்திருந்தால் மேலே பாக்கலாம்

“தமாஷெல்லாம் பண்ணாதேப்பா.. அந்த பொண்ணுகிட்ட போய் என்னன்னு  கேட்பது? என்னை மேரேஜ் பண்ணிக்கிறியான்னா?

“இதையெல்லாம் இந்த காலப் பசங்களுக்கு, அதுவும் உனக்கு, சொல்லித்தரணுமா? அவளை நேரா போய்ப் பாத்துட்டு வந்து உங்க அம்மாகிட்ட சொல்லிடு, புரிஞ்சுதா?“

“பாக்கலாம்...


போனை வைத்துவிட்டார். 

“குமரன் பேசறதப் பாத்தா, பையனுக்கு கல்யாணத்தில் இஷ்டம் போலத்தான் தெரியுது. நாம, பொண்ணோட அப்பாவிடமே  பேசிடலாம். அவுங்களுக்கு ஃபோனைப் போடு. முதல்ல  நீயே பேசு, நான் அப்புறமா பேசிக்கிறேன்..

பெண்ணின் அப்பா, தர்மலிங்கம் தான் போனை எடுத்தார். 

“யாரு சொக்கலிங்கத்தோட வீட்லயா பேசறீங்க? நல்லாயிருக்கிங்களா? என்ன.. என்ன ....என்னங்க இப்படிக்கேட்டுட்டீங்க?   உங்களைத் தெரியாதவங்க இருக்க முடியுமா? நல்லாத்தெரியும். சொல்லுங்க என்ன விஷயமா கூப்பிட்டீங்க?

‘ஒண்ணுமில்ல.. உங்களுக்குத்தான் தெரியுமே? எங்க பையன் குமரன் பெங்களூரில ‘ஆரக்கிளில் வேலை பாக்குறான். அவனுக்கு நம்ம ஜனத்தில நல்ல பொண்ணு கிடச்சா முடிச்சுடலாம்னு பாக்குறோம். எங்க சொத்துபத்து நிலவரம் தான் உங்களுக்குத் தெரியுமே? உங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைச்சா, தோதான இடம் அமையும்போது சொல்லுவீங்கன்னு தான் கூப்பிட்டேன்”.    மற்ற விஷயங்களைப பேசிவிட்டு,  குமரனைப்பற்றிய குறிப்புகளையும் சொன்னாள் ஸ்வர்ணம்.

“அதுக்கென்ன? அவசியம் பாக்கறேன். அடுத்தவாரமே உங்களுக்கு தகவல் சொல்றேன்.  உங்க வீட்டுக்காரர் இன்னும் செக்ரடேரியட்லிருந்து வர்லியா?

“இன்னும் வர்லீங்க.. டெபுடி செகரட்டரி ஆனதுக்கப்புறம் எப்ப போவார், எப்ப வருவார்னு சொல்ல முடியலீங்க!

“இருக்கட்டும் பரவாயில்லை..  நானே அப்புறம் கூப்பிட்டு பேசறேன்.
                                ---

தர்மலிங்கம், தனது மனைவி புஷ்பாவை அழைத்தார். உனக்கு சொக்கலிங்கத்தைத் தெரியுமா? சென்னையில், கவர்மெண்ட்ல இருக்கிறாரே?

“தெரியுமே.. சாயங்காலம், அவுங்க வீட்டுக்காரம்மா பேசினாங்க. அவுங்க பேசுறதப் பாத்தா, அவுங்க பையனுக்கு, நம்ம பொண்ணு சகுந்தலாவைக் கேக்குறாங்க போலத்தெரியுது

“அமாம். அதை மனசுல வச்சுகிட்டுத்தான், ஏதாவது பொண்ணு இருந்தா சொல்லுங்கன்னு சொல்றாங்க!

“நல்ல இடம்தான். தாராளமா சகுந்தலாவை குடுக்கலாம். கிராமத்துல, நில புலன்கள் எல்லாம் இருக்கு. கவர்மெண்ட்ல பவர்ஃபுல் போஸ்ட் வேற. எப்படியும் 10 கோடி சொத்து தேறும்.

"சகுந்தலாவிடம் கேட்டுப்பார்".

அவள், மாடியில் தனது அறையில் இருந்தாள்.

“ஏண்டி சகுந்தலா, உனக்கு ஆரக்கிளில் வேலை செய்யும் குமரனைத் தெரியுமாடி?” 

“உளறாதே மம்மி! திருப்பதியிலே மொட்டை அடிச்சவனைப் பாத்தியான்னு கேக்குறமாதிரி இருக்கு நீ விசாரிக்கறது. அதுவுமில்லாம எங்க கம்பெனிக்கு, அவுங்ககூட காண்டிராக்ட் இப்ப ஏதுவுமில்லை. ஆகையினால, அவுங்க கூட  கான்டாக்ட் கிடையாது! எதுக்கு கேக்குற?

விவரமாகச் சொன்னாள்

“அவனுக்கு என்ன சம்பளமாம் ம்ம்மி?

“ஒரு லட்சமாம்

“ஓ! டுவல் லாக்ஸ் பர் ஆனமா? வீடு, கார் எல்லாம் இருக்காமா? என்ன கார் வச்சுருக்கான்??

“என்ன கார் வச்சுருக்கானெல்லாம் தெரியாது. அவன் அப்பன் கோடீஸ்வரன். கிம்பள ராஜா! பையனுக்கு நல்லதாத்தான், வாங்கித் தந்திருப்பான்.

“எனக்கு ஒரே ஒரு கண்டிஷன்தாம்மா. எனக்கு அடுத்த வருஷம், ஒரு ஃப்ராஜக்டுக்காக ஸ்டேஸ் போகும் சான்ஸ் வரும். அவனும் அதே மாதிரி இருந்தாத்தான் ஒத்து வரும்.  கிரீன் கார்டு தான் என் லட்சியம். அதுக்கு ஒத்து வராத மாதிரி இடமாயிருந்தா வேண்டாம்.

‘நீ அவனைப் பார்த்து பேச முடியுமா?

“டிரை பண்றேன்...
                                     ----

அடுத்த வாரம் குமரன் தனது பி.ஸிக்கு முன் இருக்கும் போது, ஒரு மெஸேஜ் வந்தது.  ‘ஒன் மிஸ் சகுந்தலா ஃப்ரம் இண்டெல் ஈஸ் வெய்டிங்க ஃபார் யுமீட் ஹர் அட் லவுன்ச்

வெளியே வந்தான்.  எழுந்து நின்றாள் சகுந்தலா. "ஆள் பரவாயில்லை தான்" என்று கணக்குப் போட்டாள்.  

‘யூ மஸ்ட் பீ குமரன்!

“யா. மே ஐ நோ ஹூ யு ஆர், இஃப் யு டோண்ட் மைன்ட்..?

“ஐ ஆம் சகுந்தலா, ஃபரம் இண்டெல்.உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்.  ஒரு வருஷத்துக்கு முன்னாடி, என் ஃப்ரண்ட் தேவகின்னு ஒருத்தி இங்கே, ஆரக்கிளில் வேலை செய்தாள். அப்புறம் கான்டாக்டே இல்லாம போச்சு. ஒரு விஷயமா அவளைப் பாக்கணும். இப்ப எங்க இருக்கான்னு தெரியல. என்னோட அம்மா தான்  சொன்னாங்க.. இங்கே குமரன்னு ஒருத்தர் இருக்கார். நம்ம சொந்தக்காரர்தான்.  அவரிடம் போய் விசாரின்னு. அதான் நேரே வந்தேன்.

‘அது ஒன்னும் பெரிய பிராப்ளம் இல்ல.  ஸ்டாஃப் ரோல் எங்கிட்ட தான் இருக்கு. வெரிஃபை பண்ணி சொல்றேன். முடிஞ்சா, இப்ப எங்க இருக்காங்கன்னும் கேட்டு, உங்களுக்கு ஃபோன் பண்றேன். 

“ஓ.. தேங்க் யூ..

நெம்பர்களை பரிமாறிக்கொண்டனர்.

‘ஹொவ் அபவுட் எ காஃபி?

“வொய் நாட்?

அடுத்த நாள் குமரன், சகுந்தலாவுக்கு ஃபோன் செய்தான். யூஷூவல் “எப்படி இருக்கீங்க..” க்கு அப்புறம் சொன்னான், “இஃப் யூ டோன்ட் மைன்ட் ... ஷெல் ஐ ஸே ஒன் திங் அபவுட் யு?"

'நோ ப்ராப்ளம்.. கோ அஹெட்"


"குந்தலா, யு லுக் ஸோ பிரட்டி

“நானும் அதையே சொல்லனும்னு எதிர்பாக்காதீங்க..

சிரித்தார்கள். முதல் நாள் தேடிக்கொண்டு வந்த ‘தேவகியைப்பற்றி, அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை.

ஒரு மாததில், அவர்கள் இருவரும் ‘டிஸ்கோத்தே களுக்கு போகும் வரை முன்னேறினார்கள்.

அவர்கள் லேசான "ரெட் வைன் அருந்திவிட்டு, அவளது இடையினைப் பற்றிக் கொண்டு, அவன் நடனமாடிக் கொண்டிருக்கும் பொழுது, அவளைக் கேட்டான்.

“சகுந்தலா.. வில் யூ மேரி மீ.?

அதற்கான பதிலை முத்தமாகத்தந்தாள் சகுந்தலா
                               ------
சகுந்தலா தனது ‘மம்மியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.


‘மம்மி ஹி இஸ் குட்.  நான் எதிர் பார்த்தமாதிரியே அவனுக்கும் அடுத்த வருஷம் ஸ்டேட்ஸ்ல  ஃப்ராஜக்ட் வருதாம். எப்படியும், கொஞ்ச வருஷத்தில கிரீன் கார்ட் வாங்கிவிடுவோம். ஸோ, யு கேன் புரொஸீட் வித் திஸ் அலயன்ஸ்


"அப்புறம் நீ ஏதும் எங்களை குறை சொல்லக் கூடாது!


"அதெல்லாம் ஒண்ணுமில்லை! "


"அப்ப, நாங்களே  நேரே போய் சொல்லிட்டு வரலாமா?"


"அதெல்லாம் வேண்டாம்.  அவனே, அவங்க அப்பாகிட்ட சொல்லுவான். அவுங்களே நம்ம வீட்டிற்குவருவாங்க!"


'அது வரைக்கும் கூடவா பேசிக்கிட்டீங்க? 


"ஆமாம்.."



"சரியான ஆளுதாண்டி நீ!"

ஸ்வர்ணம் தனது மகனிடம் கேட்டாள். என்னடா அவளைப் பாத்தியா? பேசினியா? உனக்கு இஷ்டமா?

எனக்கு ஓ.கே தான், அம்மா! குட் சாய்ஸ். மேலே நீங்களே, நேரா போயி பேசி முடிச்சுடுங்க..
                               ------

சொக்கலிங்கம், ஸ்வர்ணத்திடம் கேட்டார். யாரு முதல்ல பேச ஆரம்பிக்கனும்? பொண்ணு வீட்டுக்காரங்களா? பையன் வீட்டுக் காரங்களா? நாமளே முதல்ல கேட்டுப் போய் கௌரவத்தைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது பாரு?” 


"அதை நீங்க, உங்க அப்பா கிட்ட கேட்டுக்குங்க.. இங்க யாருகிட்டயும் கேக்காதீங்க..


இவரது அப்பா, ‘வெங்கடேசன் கிராமத்திலிருக்கிறார். அவரிடம் விசாரித்ததில், ‘நாமதாண்டா, நம்ம வழக்கப்படி பொண்ணு கேட்டு  போகணும்”.  அதுமட்டுமில்லாமல்,  போகும்போது இன்னின்ன வாங்கிக் கொண்டு போகவேண்டுமென லிஸ்ட் வேறு சொன்னார்.


"சரி.. சரி. வச்சுடு.. போய்ட்டு வந்து விவரம் சொல்றோம்."
-------

பெங்களூரில், தர்மலிங்கத்தின் வீட்டில், தடபுடலான உபச்சாரத்துடன் வீற்றிருந்தார் சொக்கலிங்கம்.

“நம்ம காலத்தில, எந்த ‘லவ்வைக் கண்டோம். ‘கிவ்வைக் கண்டோம்! ஏதோ அப்பா காட்டின களுதைய, கட்டிக்கிட்டோம்.  நம்ம பசங்க அப்படியில்லியே? ஏதோ சின்னப் பசங்க, ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க. அவுங்க ஆசைக்கு நாம ஏன் தடை போடனும்? அவுங்க விருப்பப்பட்ட மாதிரியே செஞ்சுடலாம்னுதான், நானே நேரே கிளம்பி, பொண்ணு கேட்டு வந்துட்டேன்.என்றார் சொக்கலிங்கம்

‘சரியா சொன்னீங்க போங்க!  நமக்கு நம்ம பசங்க சந்தோஷம் தானே முக்கியம்? உண்மைய சொல்லப்போனா, உங்க கூட சம்பந்தம் வச்சுக்க நாங்கதான் கொடுத்து வச்சுருக்கணும்

திருமணம் நல்லபடியாக, தடபுடலாக, ஆர்பாட்டமாக நடந்து முடிந்தது. 
-------
இப்படியாக ‘குமரனும், ‘ சகுந்த லாவும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.